என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, May 15, 2025

சாணக்கியன் 161

 

ராக்ஷசரும் வெளியே கேட்ட சலசலப்புகளால் உறக்கம் கலைந்தார். அவர் தன் அறையை விட்டு வெளியே வந்த போது தான் அவரது காவலன் வீட்டுக் கதவைத் திறந்து கொண்டிருந்தான். கதவு திறக்கப்பட்ட போது வெளியே சேனாதிபதி பத்ரசால் நின்று கொண்டிருந்தான்.

 

பத்ரசால் அவரைப் பார்த்ததும் சற்று பதற்றத்துடன் சொன்னான். ”பிரபு. தலைநகருக்குள் எதிரியின் வீரர்கள் சிலர் எப்படியோ ஊடுருவியிருக்கிறார்கள். சிலரைச் சிறைப்படுத்தியிருக்கிறோம். சிலர் இன்னும் பிடிபடவில்லை. அதனால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. யார் வந்தாலும் கதவைத் திறந்து உள்ளே அனுமதிக்க வேண்டாம். நீங்களும் வெளியே வர வேண்டாம்.”

 

அவர் அவன் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு வேறு கேள்விகள் கேட்பதற்குள் பத்ரசால் அவரது காவலனிடம் சொன்னான். “சீக்கிரம் கதவை சாத்தி தாளிட்டுக் கொள். நானோ இளவரசர் சுதானுவோ வந்தால் ஒழிய கதவைத் திறக்க வேண்டாம்.”

 

காவலனும் கேள்விப்பட்ட தகவல்களால் அதிர்ச்சி அடைந்திருந்ததால் வேகமாகக் கதவைச் சாத்திக் கொள்ள ராக்ஷசரின் கேள்விகளும் அடைபட்டன.

 

   

லைகேது பர்வதராஜனிடம் கேட்டான். “தந்தையே இன்னமும் ஏன் ஆச்சாரியரும், சந்திரகுப்தனும் நம்மைச் சந்தித்துப் பேச வராமல் இருக்கிறார்கள்? அவர்கள் உத்தேசம் என்னவென்று நமக்குத் தெரியவில்லையே”

 

பர்வதராஜன் சொன்னான். “ஆச்சாரியரும், சந்திரகுப்தனும் நம்மை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை என்பது மட்டுமல்லாமல் அதை வெளிக்காட்டாமல் இருக்கும் சிரத்தையையும் எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள். சிறைப்பட்டிருப்பது பாடலிபுத்திரம் மட்டுமல்ல மகனே. நாமும் தான். நம்முடன் இருக்கும் நம் படையினரும் எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் போது நம்மால் அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.”

 

மலைகேது கவலையுடன் கேட்டான். “இனி என்ன செய்வது தந்தையே?”

 

பர்வதராஜன் சொன்னான். “அவர்கள் வராவிட்டால் என்ன, நாம் போய் அவர்களைச் சந்திப்போம். இதில் கௌரவம் பார்க்க ஒன்றுமில்லை மகனே. காரியமாக வேண்டியவர்கள் கௌரவம் பார்ப்பது சரியல்ல. இரவில் செல்வோம். பகலில் சென்று, உங்களால் எங்கள் ரகசியம் வெளிப்பட்டு விட்டது என்று அவர்கள் நம்மைக் குற்றம் சாட்ட வேண்டாம்.”

 

அவன் சொன்னது போலவே இரவானதும் அவர்கள் இருவரும் சாணக்கியர் தங்கியிருந்த சிறு கூடாரத்திற்குச் சென்றார்கள். சாணக்கியர் எதோ படித்துக் கொண்டிருந்தார். அவர்களைப் பார்த்தவுடன் புன்னகையுடன் வரவேற்றார். “உங்கள் தகுதிக்கேற்ப ஆசனங்கள் வைத்து வரவேற்கும் வசதியில்லாததால் தான் நான் வரச் சொல்லவில்லை. இந்தத் துணிவிரிப்பில் அமர்ந்து இந்த வசதிக்குறைவைப் பொறுக்க வேண்டும் பர்வதராஜனே”

 

பர்வதராஜன் அவர் காலைத் தொட்டு வணங்கி விட்டு “காரியமாக வேண்டி நீங்கள் இந்த வசதிக்குறைவான இடத்தில் தங்கியிருக்கும் போது அற்ப சமயம் இந்த வசதிக்குறைவில் நாங்கள் இருப்பது ஒரு விஷயமேயில்லை ஆச்சாரியரே,” என்று சொல்லியபடி கஷ்டப்பட்டு அந்தத் துணிவிரிப்பில் அமர்ந்தான். மலைகேது அங்கு அமர்வதை ஒரு தண்டனையாகவே நினைத்தாலும் தந்தையைப் பின்பற்றி தானும் அமர்ந்தான்.

 

“இங்கு நீங்கள் வந்து இரண்டு நாட்களாகின்றன. நாம் இன்னும் எந்தத் தாக்குதலையும் ஆரம்பிக்காமல் இருக்கின்றோம். இருவரும் வேடத்தையும் கலைக்காமல் இருக்கிறீர்கள். நாம் இன்னும் எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம் ஆச்சாரியரே?”

 

சாணக்கியர் சொன்னார். “நாம் இங்கே செயலற்று இருப்பது போல் தோன்றினாலும் நம் ஆட்கள் பாடலிபுத்திர நகருக்குள்ளே சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் பர்வதராஜனே. அவர்கள் வேலை முடிந்தவுடன் நமக்கு ரகசிய சமிக்ஞை தருவார்கள். பின் நாம் இயங்குவோம்”

 

பர்வதராஜன் இனி சுற்றி வளைத்துப் பேசுவதில் அர்த்தமில்லை என்று நினைத்தவனாகச் சொன்னான்.ஆச்சாரியரே. உங்களிடம் நான் பெருமதிப்பு வைத்திருக்கிறேன். ஆனால் தங்கள் ரகசிய திட்டங்கள் என்னைச் சலிப்பில் ஆழ்த்துகின்றன. நான் மதிக்கும் மனிதர்களிடம் எதையும் மறைத்துப் பேசும் பழக்கமற்றவன் என்பதனால் தான் உண்மையை மறைக்காமல் சொல்கிறேன்.”

 

”வெற்றியடைய விரும்பும் மனிதன் தன் காரியம் முடியும் வரை எதிலும் சலித்துப் போகக்கூடாது பர்வதராஜனே. உண்மையில் நாம் வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறோம். இந்தச் சமயத்தில் பொறுமையிழக்கக்கூடாது. எந்த நேரத்திலும் செயல்படத் தயாரான உற்சாக மனநிலையில் இருக்க வேண்டும்”   

 

“என்ன நடக்கிறதென்றே தெரியாமல் இருக்கையில், எந்த நம்பிக்கையில் செயல்படத் தயாரான உற்சாக மனநிலையில் இருப்பது ஆச்சாரியரே.”

 

“அஸ்தமித்திருக்கும் சூரியன் நாளை மறுபடி கிழக்கில் உதிக்கும் என்று எந்த நம்பிக்கையில் இருக்கிறாய் பர்வதராஜனே. சூரியன் போகின்ற வழி உனக்குத் தெரியுமா? சூரியனை இயக்கும் சக்தியின் போக்கு உனக்குத் தெரியுமா? எதுவுமே தெரியாமல் நாளை விடியும், சூரியன் கிழக்கில் உதிக்கும் என்று எந்த நம்பிக்கையுடன் உறங்குகிறாய்?”

 

பர்வதராஜன் பெருமூச்சு விட்டான். இன்னும் ஏதாவது சொல்லி அவரிடமிருந்து கூடுதல் தத்துவங்கள் கேட்கும் மனநிலையில் அவனில்லை…


சின்ஹரன் மிக ரகசியமாய் ஜீவசித்தியைச் சந்தித்தான். “எல்லாரும் தயாரல்லவா?”

 

ஜீவசித்தி சொன்னான். “தயாராகவே இருக்கிறார்கள். அங்கே என்ன நிலைமை?”

 

“தனநந்தனும் ராக்‌ஷசரும் நம் திட்டங்களுக்கு இடைஞ்சல் செய்ய முடியாதபடியான ஏற்பாடுகள் செய்து விட்டோம். இனி வேகமாக நாம் செயல்பட வேண்டும். நகரத்தின் பிரதான வாயிலில் நம் காவலர்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள்?”

 

மூன்று பேர் இருக்கிறார்கள். ஆனால் வெளியே முற்றுகை உள்ளதால் வாயிற்காவலை கூடுதல் காவல் வீரர்களை நிறுத்தி பலப்படுத்தி இருக்கிறார்கள் என்றாலும் அவர்களைச் சமாளிக்க, தயாராக மறைந்திருக்கும் நம் மற்ற வீரர்கள் போதும். வெளியிலிருந்து நம் படை உள்ளே நுழைவதைத் தடுக்க உறக்கத்திலிருக்கும் மகதப்படைகள் விரைந்து வந்துவிடக் கூடாது. அதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.”

 

“உறங்கிக் கொண்டிருக்கும் மகதப்படையினர் அவ்வளவு வேகமாக வந்து விட மாட்டார்கள். நம் படைகளும் உறங்கிக் கொண்டிருப்பதாக அவர்கள் எண்ணிக் கொண்டிருப்பதால் அவர்கள் நம் படை உள்ளே நுழையும் என்று சிறிதும் எதிர்பார்ப்பில் இல்லை. அறிந்து அவர்கள் கிளம்பி வருவதற்குள் எல்லாம் முடிந்து விடும்.”

 

“பத்ரசால்?”

 

“அவன் நம் படைகளை எதிர்த்துப் போராடுவதில் தீவிரமாகவே இருப்பான். அவன் என் உண்மை அடையாளத்தைத் தெரிந்து கொள்ளாத வரை அவனை நம் விருப்பத்திற்குத் திசை திருப்பலாம். ஆனால் உண்மையை அவன் தெரிந்து கொண்டால் அவனைச் சமாளிப்பது கஷ்டம் தான்...”

 

”அவனிடமும் சுதானுவிடமும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் நண்பரே. இருவரும் ஆபத்தானவர்கள்”

 

“ஆபத்தான வேலையில் ஈடுபடும் போது ஆபத்தானவர்களைத் தவிர்க்க நமக்கு வழியில்லை நண்பரே. ஆச்சாரியரும் சந்திரகுப்தனும் உள்ளே நுழைந்து விட்டால் பின் நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. அது வரை கவனமாகவே இருக்க வேண்டும். இருப்போம்”

 

 

(தொடரும்)

என்.கணேசன்  







Wednesday, May 14, 2025

முந்தைய சிந்தனைகள் 125

 என் நூல்களில் இருந்து சில சிந்தனை அட்டைகள்...












Monday, May 12, 2025

யோகி 102


சேதுமாதவன் வீட்டுக்கு ஒரு பெரிய காரில், சுமார் ஐம்பது வயது மதிக்கத் தக்க ஒரு நபர் வந்திறங்கினார். காரில்போலீஸ்என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. கம்பீரமான தோற்றமும், மிடுக்கான நடையும் கொண்ட அந்த நபர் சேதுமாதவனிடம் தன்னை குற்றவியல் சிறப்புப் பிரிவு டி.எஸ்.பி குணசேகரன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவருடைய அடையாள அட்டையையும் காட்டினார். சேதுமாதவன் வணக்கம் தெரிவித்து, அவரை அமரச் சொன்னார்.

 

நாற்காலியில் அமர்ந்த குணசேகரன் கேட்டார். “நீங்க தான் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியா?”

 

இல்லை. அது என் மகன். இப்ப அவன் உயிரோட இல்லை. சில மாசங்களுக்கு முன்னாடி தற்கொலை பண்ணிகிட்டான்.” என்று சேதுமாதவன் சொன்னார்.

 

குணசேகரன் முகத்தில் அதிர்ச்சியும், இரக்கமும் கலந்து தெரிந்தன. பின் மெல்லச் சொன்னார். “க்ரைம் ப்ராஞ்ச் ஸ்பெஷல் விங்ல ஒவ்வொரு வருஷமும், போலீஸ் ஸ்டேஷன்கள்ல கொடுக்கப்பட்ட கேஸஸ்ல சிலதை எடுத்து அதெல்லாம் சரியாய் விசாரிக்கப்பட்டிருக்கான்னு இன்ஸ்பெக்ஷன் பண்றது வழக்கம். அந்த வகைல டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தன் மகள் சைத்ரா உயிருக்கு ஆபத்துன்னு சந்தேகப்பட்டு கொடுத்த புகாரும் தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கு. அதனால அதை விசாரிக்க தான் நான் வந்திருக்கேன்.”

 

சேதுமாதவன் வறண்ட குரலில் சொன்னார். “கிருஷ்ணமூர்த்தியும் உயிரோட இல்லை. சைத்ராவும் உயிரோட இல்லை.”

 

குணசேகரன் ஒரு குறிப்பேடும் பேனாவும் எடுத்துக் கொண்டே கேட்டார். “என்ன ஆச்சு?”

 

சேதுமாதவன் சொன்னார். “கோர்ட்ல ஹேபியஸ் கார்பஸ் கேஸ் போட்டோம். சைத்ராவை அவங்க கோர்ட்டுக்கு கூட்டிகிட்டு வந்தாங்க. தனக்கு ஆபத்து எதுவும் இல்லைன்னு அவள் கோர்ட்டில் சொன்னாள். அதோட அந்தக் கேஸ் முடிஞ்சுடுச்சு. கொஞ்ச நாள் கழிச்சு கோவிட்ல அவள் இறந்துட்டாள். அந்த துக்கம் தாங்க முடியாமல் கிருஷ்ணமூர்த்தியும் இறந்துட்டான்.”

 

குணசேகரன் தன் குறிப்பேட்டில் எதையோ எழுதிக் கொண்டே கேட்டார். “உங்கள் பேத்தி மரணத்தில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கா?”

 

இல்லை

 

குணசேகரன் சொன்னார். “ஏதாவது கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் நீங்கள் என் கிட்ட தாராளமாய் சொல்லலாம். நாங்க மேல்மட்டத்துல ரகசியமாய் மறுவிசாரணை செய்ய முடியும். சந்தேகம் ஏதாவது வந்து தனிப்பட்ட முறையில உண்மையைக் கண்டுபிடிக்க நீங்கள் தனியார் யாரையாவது ஏற்பாடு செய்திருந்தாலும் அதை மறைக்காமல் சொல்லணும். அப்படி ஏதாவது இருந்து நீங்கள் சொல்லலைன்னா அது, போலீஸ் கிட்ட உண்மையை மறைக்கற மாதிரியாயிடும். சட்டப்படி அது குற்றம்.”

 

சேதுமாதவன் விரக்தியாகச் சொன்னார். “வழக்கு, விசாரணைக்கெல்லாம் ஏற்பாடு செய்ய எனக்கு மனசு, பணம், காலம் மூனுமே இல்லை. எனக்கும் சாவு வந்து அவங்க கூட நானும் போய்ச் சேர்ந்துக்கணும்கிற ஒரு ஆசை மட்டும் தான் இப்ப இருக்கு.”

 

குணசேசகரன் முகத்தில் இரக்கத்தைக் காட்டி விட்டுச் சொன்னார். “உங்களுக்குப் பதிலாய், உங்கள் சார்பாய், வேற யாராவது அது சம்பந்தமான முயற்சி எடுத்துகிட்டு இருக்காங்களா?”

 

என்னைத் தவிர வேற யாருமே இங்க இல்லையே

 

குணசேகரன் யோசனையுடன் சில வினாடிகள் மௌனமாய் இருந்துவிட்டுக் கேட்டார். ”உங்களுக்கு அந்த வழக்கு சம்பந்தமாய் ஏதாவது சந்தேகம் இருக்கா?”

 

இல்லை.”

 

குணசேகரன் சொன்னார். “அப்படின்னா, அந்த வழக்கு விசாரணை சம்பந்தமாய் உங்களுக்கு யார் மேலயும், புகாரோ, சந்தேகமோ இல்லைன்னும் மறு விசாரணைக்கு அவசியம் இல்லைன்னும் நான் எழுதிக்கலாமா?”

 

தாராளமாய் எழுதிக்கலாம்.”

 

குணசேகரன் வணக்கம் தெரிவித்து விட்டுக் கிளம்பினார். அவர் கார் ஏறிக் கிளம்புகையில் சேதுமாதவன் அந்தக் காரின் எண்ணை மனதில் குறித்துக் கொண்டார். பின் வீட்டுக்குள் வந்தமர்ந்து முதல் வேலையாக ஷ்ரவன் கொடுத்திருந்த அலைபேசி எண்ணுக்குப் போன் செய்தார்.

 

நான்கைந்து முறை அடித்த பிறகு போன் எடுக்கப்பட்டது. மறுபக்கத்திலிருந்து எந்தச் சத்தமும் இல்லை. மறுபக்கத்திலிருந்து பதில் எதுவும் வராது என்று ஷ்ரவன் முன்பே சொல்லி இருந்ததால் சேதுமாதவன் நேரடியாக விஷயத்தை விரிவாகச் சொல்லி, அந்தப் போலீஸ் வாகனத்தின் எண்ணையும் சொல்லி வைத்து விட்டார்.

 

வந்து விசாரித்த காரணம் தெரியா விட்டாலும், வந்து போன ஆள் போலி என்பதில் அவருக்குச் சந்தேகம் இல்லை.

 

பாண்டியனிடம் கண்ணன், தங்கள் ஆள் சேதுமாதவனிடம் போய்ப் பேசி விட்டு வந்த பேச்சின் ஒலிப்பதிவைத் தந்தார். அதை முழுவதுமாகக் கேட்டு விட்டு பாண்டியன் சொன்னார். “கிழவன் அழுத்தக்காரனாய் இருப்பான் போலருக்கு

 

அப்படி இல்லாட்டி மகன், பேத்தி இறந்ததுக்கப்பறமும் கிழவன் உயிரோட இருக்க முடியுமா?” கண்ணன் சொன்னார்.

 

ஆமென்று தலையசைத்த பாண்டியன் கேட்டார். “நம்ம யோகாலயத்தை வேவு பார்க்கறது யார்னு ஏதாவது துப்புக் கிடைச்சுதா?”

 

இல்லை. அவங்க போலீஸ், சிபிஐ, பெரிய துப்பறியும் நிறுவனம் இதில் ஏதாவது ஒன்றாய் இருக்கலாம். அவங்க வேவு பார்க்கும் விதத்துல அந்த அளவு புத்திசாலித்தனம் தெரியுது

 

அந்தத் தகவல் பாண்டியனை யோசிக்க வைத்தது. அவர் சொன்னார். “ஆனால் அந்தக் கிழவன் மேல நாம சந்தேகப்படறதுலயும் அர்த்தமில்லை. இந்த அளவு செல்வாக்கு உள்ள ஆளாய் அவன் இருந்திருந்தால் அவன் ஆரம்பத்துல பேத்தி, மகன் இருக்கறப்பவே பயன்படுத்தியிருக்கலாமே?”

 

கண்ணன் சொன்னார். “அது தான் குழப்பமாயிருக்கு.”

 

பாண்டியன் பற்களைக் கடித்துக் கொண்டு சொன்னார். “வேவு பார்க்கறதுல எவனாவது ஒருத்தன் நம்ம கைல கிடைச்சாலும் போதும். கண்டுபிடிச்சுடலாம்

 

கண்ணன் சொன்னார். “எல்லாருக்கும் தெரியற மாதிரி பிடிக்கறதா இருந்தா எப்படியாவது பிடிச்சிரலாம். ஆனால் இப்ப ரோட்டுல போறவன் வர்றவன் கைல எல்லாம் மொபைல் ஃபோன் இருக்கு. என்ன நடந்தாலும் வீடியோ எடுத்து சோஷியல் மீடியால போட்டு விட்டுடறான்க. அதனால தான் ரொம்ப யோசிக்க வேண்டியதாயிருக்கு. இதுவே யோகாலயத்துக்கு உள்ளேன்னு சொன்னால் நாம் யோசிக்கவே வேண்டியதில்லை.”

 

ன்று மாலை ஷ்ரவன் தோட்ட வேலை முடிந்து வந்த பின், மூவரும் சத்சங்கத்திற்குக் கிளம்பினார்கள். ஒரே சமயத்தில் செல்வதால், பக்கத்து அறைகளிலிருந்து வரும் துறவிகளும் சற்று முன்னும் பின்னும் அவர்களுடன் வந்தாலும் துறவிகளுக்கு இடையே புன்னகையைத் தவிரக் கூடுதலாக பேச்சுகள் இருக்கவில்லை. சித்தானந்தாவே கூட அறைக்குள்ளே அவனுடன் இயல்பாகப் பேசினாலும் அறைக்கு வெளியே அவனுடன் அதிகம் பேசுவதைத் தவிர்த்தார். பேசினால் அழைத்துக் கண்டிப்பார்களோ என்னவோ என்ற சந்தேகம் ஷ்ரவனுக்கு வந்தது.

 

அன்றைய சத்சங்கத்தில் துறவி யாரும் பேசுவதற்குப் பதிலாக பிரம்மானந்தா ஐ ஐ டி டில்லியில் பேசிய பேச்சு ஒன்றை ஒளிபரப்பினார்கள். தலைப்புயோகாவும், தியானமும் நவீன காலத்திற்கு எந்த அளவு உதவும்?”. அதுகுறித்து, யோக சூத்திரங்களிலும், மற்ற நூல்களிலும் சொல்லப்பட்டவற்றை அதில் அழகாகப் பேசியிருந்தார் பிரம்மானந்தா. ஆனால் வழக்கமாகவே தன் பராக்கிரமங்களையும், அசாதாரண சக்திகளையும் கூச்சமில்லாமல் பறைசாற்றும் பிரம்மானந்தா அந்தக் காணொலியில் தன் கற்பனையைப் பறக்க விட்டிருந்தார்.

 

நான் கோரக்கரால் அழைக்கப்பட்டு சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கத்தின் அருளால் நனைக்கப்பட்ட அந்த சம்பவத்திற்குப் பின், நான் தியானம் செய்யும் நாட்களில் எல்லாம் என்னைப் பார்த்தவர்களுடைய கண்கள் கூசும். அவர்கள் என்னை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் கண்களைத் தாழ்த்திக் கொள்வார்கள். அந்த அளவு என்னுடைய யோகசக்தி என்னை ஒளிமயமாக்கி இருந்தது. இது எனக்கே தர்மசங்கடத்தைத் தந்தது. அதனால் நான் என் இறைவன் சுந்தர மகாலிங்கத்தை வேண்டி என் யோகசக்தியின் வீச்சை குறைத்துக் கொண்டேன். என் முழு யோகசக்தியின் வீச்சு முன்பு போலவே இன்றும் தெரியுமானால் என் எதிரே நீங்கள் இத்தனை பேர் உட்கார்ந்திருக்க முடியாது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் யோகசக்தியின் வலிமை எல்லையில்லாதது. அந்த யோகசக்தியை மட்டும் நீங்கள் பெற்று விட்டால் எதிலும் உங்களுக்கு உங்கள் கற்பனை தான் எல்லையாக இருக்க முடியும்...” 

 

இந்தக் காணொளியை ஷ்ரவன் இதுவரை பார்த்திருக்கவில்லை. இது அவர் சில நாட்களுக்கு முன் பேசியதாக இருக்க வேண்டும். ஷ்ரவன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான். அதை உணர்ந்தவர் போல் அவனுக்கு இரண்டு வரிசை முன்பாக அமர்ந்திருந்த முக்தானந்தா திடீரென்று அவனைத் திரும்பிப் பார்த்தார்.  அவன் பிரம்மானந்தாவின் காணொளியில் மூழ்கியிருப்பது போல் காண்பித்துக் கொண்டான். அவர் மறுபடி திரும்பிக் கொண்டார்.

 

சாதாரணமாக எதையும் அதிகமாய் லட்சியம் செய்பவராகத் தோன்றாத அவர், பிரம்மானந்தரின் அந்தப் பேச்சை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்று பார்த்தது போல் தான் அவனுக்குத் தோன்றியது. புதிராய் மட்டுமல்லாமல், வில்லங்கமாகவும் இருக்கிறாரே என்று ஷ்ரவன் மனதில் எண்ணிக் கொண்டான்.

 

(தொடரும்)

என்.கணேசன்





Thursday, May 8, 2025

சாணக்கியன் 160

 


“ஏதோ ஒரு அசம்பாவிதம் ஏற்படும் போல் தோன்றுகிறது பிரபு. அதற்கான சூழலை என் உள்ளுணர்வால் உணர முடிகிறது. ஆனால் எது என்னவாக இருக்கும் என்று குறிப்பிட்டு என்னால் சொல்ல முடியவில்லை” என்று ஒற்றர் தலைவன் சொன்ன போது ராக்‌ஷசரால் அதை அலட்சியப்படுத்த முடியவில்லை. காரணம் அந்த ஒற்றர் தலைவன் மிக நீண்ட கால அனுபவம் கொண்டவன். அவனுடைய வேலையில் உள்ளுணர்வு மிக முக்கியமான அம்சம். அப்படிப்பட்ட அனுபவஸ்தனின் உள்ளுணர்வு ஒன்றைச் சொல்கிறது என்றால் அது பொய்யாக இருக்க வாய்ப்பேயில்லை.

 

“எதனால் அப்படித் தோன்றுகிறது? அப்படித் தோன்றும்படியாக இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?” என்று ராக்‌ஷசர் கேட்டார்.

 

“இளவரசர் சுதானு அரண்மனைக் காவல் வீரர்களில் பெரும்பானவர்களை மாற்றி விட்டார். புதிதாக வந்திருக்கும் எல்லாருமே அவருடைய ஆட்களாக இருக்கிறார்கள் பிரபு”

 

“புதிய பொறுப்பை எடுத்துக் கொண்டவன் தன்னுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆட்களை நியமிப்பது இயல்பேயல்லவா?”

 

“உண்மை பிரபு. ஆனால் ஏதோ ஒரு ரகசிய சதி நடக்கவிருப்பதற்கான சூழலை அந்தப் புதியவர்கள் கண்களிலும், செயல்களிலும் என்னால் காண முடிகிறது”

 

ராக்‌ஷசர் நாளை காலையே சென்று ஆராய்ந்து ஆவன செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். திடீரென்று இன்னொரு பாதுகாப்பு நிலவரமும் அறிந்து கொள்ள நினைத்து அவர் கேட்டார். “எதிரிகளின் முற்றுகையை நம் வீரர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள்.”

 

“இதுவரை திறமையாகவே சமாளித்து வருகிறார்கள் பிரபு. இருபக்கமும் சிறுசிறு தாக்குதல்கள் அவ்வப்போது நடக்கின்றன என்றாலும் எதிரிகள் கை இன்னும் ஓங்கவில்லை. அவர்கள் தீவிரமாகத் தாக்குதல் நடத்த எதற்கோ காத்துக் கொண்டிருக்கிறாற் போல் இருக்கின்றது. ஆனால் அப்படி அவர்கள் தாக்கினாலும் திருப்பித் தாக்க நம்மவர்கள் தயார்நிலையில் தான் இருக்கிறார்கள்.”

 

“சந்திரகுப்தனும், விஷ்ணுகுப்தரும் வெளிப்பட்டு விட்டார்களா?

 

“இல்லை பிரபு”

 

அது தான் ராக்‌ஷசருக்கு நெருடலாக இருந்தது. ஏன் இன்னும் மறைந்தே இருக்கிறார்கள்? தீவிரமாகத் தாக்குதல் ஆரம்பிக்கும் முன் வெளிப்படலாம் என்று காத்திருக்கிறார்களோ? இல்லை வேறெதாவது உத்தேசம் இருக்குமா?

 

இன்று காலை தான் ராக்‌ஷசர் கலிங்க மன்னனிடம் தூதனுப்பியிருக்கிறார். கலிங்கத்துடன் போர் புரியும் உத்தேசம் தங்களிடம் சிறிதும் இல்லையென்றும், எதிரிகள்  தவறான தகவலைக் கசிய விட்டதால் தற்காப்பு நடவடிக்கையாகத் தான் அங்குள்ள எல்லையில் படைகளை நிறுத்தியதாகவும், இப்போது உண்மையை அறிந்து கொண்டு விட்டதால் படைகளைத் திருப்பிக் கொள்வதாகவும், அவர்களும் அப்படியே செய்து இரு தேசங்களுக்கிடையே இருக்கும் நட்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லி அனுப்பியிருந்தார். கலிங்க மன்னன் அதை ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை அவருக்கிருக்கிறது. கலிங்க எல்லையிலிருந்து அவர்கள் படை திரும்பி வரும் வரை எதிரிகளின் முற்றுகையைத் தாக்குப்பிடிக்க வேண்டியிருக்கும். அது முடியும் என்றும், அதற்கு முன் எதிரிகள் தாக்கினாலும் கூட அவர்களைச் சமாளிக்க முடியும் என்றும் பத்ரசால் உறுதி கூறியிருந்தான்....

 

“மற்ற நம் எல்லைகளில் என்ன நிலவரம்?”

 

”அங்கு போர் துவங்கி விட்டது பிரபு. மேற்கில் காஷ்மீர மன்னனுடனான போரில் நம் கை ஓங்கியிருக்கிறது. வடக்கில் சிராவஸ்தி அருகிலான போரில் இரு பக்கங்களும் சரிசமமாக இருக்கின்றன.”

 

சுதானுவிடமும், பத்ரசாலிடமும் சின்ஹரன் சொல்லிக் கொண்டிருந்தான். “எந்தவொரு வெற்றியும், தகுந்த சமயத்தில் சரியாகச் செயல்படுவதிலேயே இருக்கிறது. செயல்படும் போதும் கண நேரங்களும் மிக முக்கியமானவை தான். சிறிது தாமதமானாலும் நம் முயற்சிகள் தோற்றுப் போய் விளைவுகள் நமக்கு எதிராக மாறிவிடும் வாய்ப்புகள் உண்டு. அதனால் நாம் நிச்சயித்த வேலையை நிச்சயித்த நேரத்தில் முடித்து விடுவது முக்கியம்.”

 

சுதானு சொன்னான். “அதை நான் வீரர்களிடம் பல முறை சொல்லி அவர்கள் மனதில் பதிய வைத்திருக்கிறேன் நண்பரே. தந்தையும், ராக்ஷசரும் எனக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதபடியான திட்ட ஏற்பாடுகளை நீங்கள் சொல்லி விட்டீர்கள். இப்போது என் கவலையெல்லாம் வெளியே முற்றுகை இட்டிருக்கும் எதிரிகளை எப்படிச் சமாளிப்பது என்பதில் தான் இருக்கிறது. இங்கே வெற்றி பெற்று அவர்களிடம் நான் தோற்று விட்டால் எல்லாமே பறிபோய் விடுமே.”

 

அதைப் பற்றிய கவலையை விடுங்கள் இளவரசே. இங்கு அரியணையில் அமரும் ஆள் மாறுவதால் வெளியே உள்ள எதிரிகளைச் சமாளிக்கும் விதத்தில் எந்த மாறுதலும் ஏற்பட்டு விடப் போவதில்லை. எதிரிகள் பெரும்படையுடன் வெளியே வந்திருந்தாலும் நம்மைத் தீவிரமாகத் தாக்காமல் காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அவர்கள் சந்திரகுப்தனின் வருகைக்காகக் காத்திருப்பது போல் தெரிகிறது. சந்திரகுப்தன் சிராவஸ்தியில் தான் இருக்கிறான் என்று தோன்றுகிறது. அவன் உங்கள் படைகளை அங்கு வென்று விட்டு இங்கே வரும் வரை எதிரிப்படை இங்கு மும்முரமாகத் தாக்குதல் நடத்தும்  வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன், அப்படி அவர்கள் தாக்க ஆரம்பித்தாலும் சிறிது காலம் சமாளிக்க இப்போதிருக்கும் உங்கள் படை தாராளமாகப் போதும். கலிங்க எல்லையிலிருந்தும் உங்கள் படை வந்ததும் நாமே கூட தீவிரத் தாக்குதலை ஆரம்பிக்கலாம். அதனால் இப்போதைக்கு அது பற்றிய கவலையை விடுங்கள். இப்போது நம் முழு கவனமும் நீங்கள் அரியணையில் அமர்வதற்கான இலக்கிலேயே இருப்பது தான் புத்திசாலித்தனம்..”

 

பத்ரசாலுக்கும், சுதானுவுக்கும் அவன் சொன்னது சரியாகவே பட்டது. எல்லாக் கோணங்களிலிருந்தும் தெளிவாகச் சிந்திக்கும் கார்த்திகேயனைப் போன்ற ஒருவன் இந்தச் சமயத்தில் தங்களுக்கு உறுதுணையாக இருப்பது தங்கள் பாக்கியம் என்றே அவர்கள் நினைத்தார்கள். அரண்மனையில் முன்கூட்டியே சில வீர்ர்களைத் தயார் நிலையில் நிறுத்தியாகி விட்டது. நடுநிசியில் தான் தங்கள் திட்டத்தை ஆரம்பிப்பது என்று அவர்கள் தீர்மானித்திருந்ததால் நடுநிசியாகும் வரை பொறுமையாகக் காத்திருந்தார்கள்.

 

சுகேஷின் அறைக்கதவு மெல்ல தட்டப்பட்ட போது அவன் மதுமயக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான். கனவில் எங்கோ கதவு தட்டப்படுவது போல் அவனுக்குக் கேட்டது. உட்கார்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்த அவனுடைய  தனிக்காவலன் மெல்ல எழுந்து யாரென்று பார்க்கச் சென்றான்.

 

அவன் கதவைத் திறந்து பார்த்த போது வெளியே சுகேஷின் காவலர்கள் இருக்கவில்லை. சுதானுவும் சின்ஹரனும் வேறு சில வீர்ர்களும் நின்று கொண்டிருந்தார்கள். சுதானு சைகையாலேயே அவனை வெளியே போகுமாறு கட்டளையிட்டான். ஏதோ முக்கியமாய் சகோதரர்கள் பேசப் போகிறார்கள் என்று நினைத்தபடியே அந்தக் காவலன் வெளியே சென்றான். சுதானுவும், சின்ஹரனும் இரண்டு வீரர்களுடன் சேர்ந்து உள்ளே சென்றார்கள்.

 

இரண்டு வீரர்களும் இருபக்கங்களிலும் சுகேஷின் கை கால்களை இறுக்கப் பிடித்துக் கொள்ள சுகேஷ் அரைமயக்கத்துடன் கண்விழித்துப் பார்த்தான். எதிரே சுதானு தெரிந்தான். அவன் என்னவென்று கேட்க வாயைத் திறக்க முற்பட்டான். அவன் தலைமாட்டில் இருந்த சின்ஹரன் அவன் வாயை இறுக்க மூடினான். அப்போது தான் சுகேஷ் ஆபத்தை உணர்ந்து கண்களை விரித்துப் பார்த்தான். சுதானு தன் இடுப்பில் இருந்த கூரிய குறுவாளை எடுத்து சுகேஷின் மார்பில் வேகமாகக் குத்த, சுகேஷின் இதயத்தில் அந்த வாள் ஊடுருவியது. அவனுடைய பலத்த திமிறல்களை அடக்க அந்த வீரர்களும், அவனுடைய கூக்குரலை அடக்க சின்ஹரனும் தங்கள் முழுபலத்தையும் பிரயோகிக்க வேண்டியிருந்ததுவேகமாக சுகேஷ் உயிரிழந்தான்.

 

னநந்தனின் உறக்கம் வெளியே ஏற்பட்டிருந்த சத்தங்களால் கலைந்தது. அவன் படுத்திருந்தபடியே காதுகளைக் கூர்மையாக்கினான். வெளியே வீரர்கள் அங்குமிங்கும் ஓடும் சத்தம் கேட்டது. நள்ளிரவு நேரத்தில் இப்படி வீரர்கள் ஓடுவது இயல்பானதாக இல்லாததால் அவன் துணுக்குற்றான். இனம் புரியாத பயம் ஒன்று அவன் மனதைக் கவ்வியது. என்ன நடக்கிறது?...

 

இதயம் படபடக்க அவன் சாமரம் வீசிக் கொண்டிருந்த பணிப்பெண்களிடம் சொன்னான். ”காவலர்களிடம் என்ன சத்தம் என்று பார்க்கச் சொல்

 

ஒரு பணிப்பெண் சென்று அவன் அறைக்கு வெளியே இருந்த காவலர்களிடம் மன்னரின் கட்டளையைச் சொன்னாள்அந்தக் காவலர்களில் ஒருவன் வெளிக்கதவைத் திறந்த போது வெளியே சுதானு நின்றிருந்தான். அவன் தாழ்ந்த குரலில் மாபெரும் ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ளும் பாவனையில் சொன்னான். ”எதிரியின் வீரர்கள் சிலர் அரண்மனைக்குள் ரகசியமாகப் புகுந்திருக்கிறார்கள். அவர்களைச் சிறைப்படுத்தும் வரை அரசரைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு. யார் கதவைத் தட்டினாலும் என் குரல் கேட்காமல் கதவைத் திறக்காதீர்கள். யாரையும் உள்ளே அனுமதிக்காதீர்கள். அரசரிடமும் எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் சொல்லும் வரை வெளியே  வரவேண்டாம் என்று சொல்லுங்கள்.”

 

காவலன் கலவரமடைந்து தலையசைத்து வேகமாகக் கதவைச் சாத்தி தாளிட்டான். அவன் சென்று தகவலைச் சொல்ல தனநந்தன் திகைத்தான். எதிரியின் ஆட்கள் அவன் அரண்மனைக்குள் வரை வந்து விட்டது அவனை அதிர வைத்தது. ஆனால் சுதானு அதைக் கண்டுபிடித்து எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் பொறுப்பில் சிறப்பாகச் செயல்படுவது அவனுக்குத் திருப்தி அளித்தது. “சுதானு கோபக்காரன் என்றாலும் சுறுசுறுப்பாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்படுகிறான்என்று மனதிற்குள் இளைய மகனை சிலாகித்தான்.

 

 

(தொடரும்)

என்.கணேசன்