சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 21, 2024

சாணக்கியன் 101

 

துர்வேதி என்ற பண்டிதர் தனநந்தனிடம் வந்து சாணக்கியரின் வெற்றியைப் பெருமையாகச் சொன்ன போது ஜீவசித்தி அரசவையில் தான் இருந்தான். அந்தச் சமயத்தில் அவன் உணர்ந்தது வெறும் ஆனந்தம் அல்ல, பரமானந்தம்.  என்ன தான் சாணக்கியர் தங்களது புரட்சிப் படையைப் பற்றி அவனிடம் தெரிவித்தது அவனுக்கு ஓரளவு நம்பிக்கையைத் தந்திருந்த போதும் அவர் உருவாக்கிய படை யவனர்களை வென்று வாஹிக் பிரதேசத்தில் சரித்திரம் படைத்ததை அறிந்த பின் அசைக்க முடியாத நம்பிக்கையை அவர் மீதும் அவர் ஆட்களின் மீதும் ஏற்படுத்தியது. அவரிடம் உள்ள பேரறிவு அனைவரையும் சரியானபடி இயக்கி வெற்றியடைய வைக்க முடிந்தது என்பது நிரூபணமாகி விட்டதால் மகதத்திலும் அந்த அற்புதம் தொடரும் என்பதை அவன் உறுதியாக நம்பினான்.

 

சதுர்வேதி அந்தத் தகவலைச் சொன்னதும் தனநந்தன் முகம் கருத்ததையும், அவரை அனுப்பி விட்டு உடனே அமைச்சர்கள், சேனாதிபுதியுடன் அவசர ஆலோசனை நடத்தியதையும் பார்த்த போது அது சாணக்கியரின் முக்கியத்துவத்தை தனநந்தனும் அறிந்து கொண்ட முதல் தருணமாக ஜீவசித்திக்குத் தோன்றியது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்று அவனுக்குத் தெரியவில்லை. தெரியாவிட்டாலும் கூட அதைத்தொடர்ந்த நாட்களில் ராக்ஷசர் எடுத்த நடவடிக்கைகள் அவரது எச்சரிக்கை உணர்வைத் தெரியப்படுத்தியது.

 

அவர் சாணக்கியர் அடுத்த கட்ட நடவடிக்கையாக இங்கு இரகசியமாகவாவது வரக்கூடும் என்று எதிர்பார்த்து ஒற்றர்களை எச்சரித்திருந்தார். ஒற்றர்கள் எத்தனையோ பேரை சந்தேகித்து சாணக்கியரா என்று சோதித்ததை ஜீவசித்தியும் பார்த்திருக்கிறான். நல்ல வேளையாக சாணக்கியர் அதற்கு முன்பே பாடலிபுத்திரம் வந்து ஜீவசித்தியைப் பார்த்துப் பேசிவிட்டுப் போய் விட்டார்! சாணக்கியர் ராக்ஷசரை முந்திக் கொண்டு சிந்தித்து செயல்படுவதை எண்ணி ஜீவசித்தி வியந்தான்.

 

ராக்ஷசர் அடிக்கடி முக்கிய இடங்களுக்குச் சென்று சோதனை இட்டார். சாணக்கியர் ஏதாவது வேலையாகத் தன் ஆட்களையாவது அனுப்பி வைக்கக்கூடும் என்று அவர் எதிர்பார்த்தார். நகரக் காவல் தலைவனையும், விடுதிக் காப்பாளரையும் வரவழைத்து புதியவர்களைப் பிரத்தியேகமாக எச்சரிக்கையுடன் கவனித்து சந்தேகப்படும்படியானவர்களைப் பற்றி உடனடியாகத் தனக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.

 

ஆனாலும் பயப்படக் காரணம் ஏதுமிருக்கவில்லை. ஏனென்றால் சாணக்கியர் மிகவும் கச்சிதமாக முன்கூட்டியே தன் ஆட்களின் போக்குவரத்தையும், நடவடிக்கைகளையும் அமைத்திருந்தார். அவர் அனுப்பிய ஆட்கள் வணிகர்களாக வந்து பாடலிபுத்திரலும், பாடலிபுத்திரத்தின் அருகில் உள்ள பகுதிகளிலும் சில நாட்கள் தங்கிச் செல்வது இயல்பாக நடந்தது.

 

சாணக்கியரின் வணிகர்கள் கங்கைக் கரையில் தங்கள் குதிரைகளையும், பயணவண்டிகளையும் கழுவி அங்கேயே சற்று இளைப்பாறுவது அடிக்கடி நடக்க ஆரம்பித்தது. அவர்கள் ஒற்றர்களால் அவ்வப்போது கண்காணிக்கப்பட்டாலும் ஒற்றர்கள் அவர்களிடம் தவறு காணும்படியான எந்தச் சம்பவமும் அங்கே நடக்கவில்லை. புதையல் ரகசியத்தை ஒற்றர்களும் அறியாததால் கங்கைக் கரையில் கூடுதல் கவனத்திற்கும், கூடுதல் எச்சரிக்கைக்கும் காரணம் எதுவும் இருக்கவில்லை. சில காலம் கழித்து கங்கைக் கரையில் தங்கி இளைப்பாறும் அந்த வணிகர்களை ஒற்றர்கள் அதிகம் கண்காணிப்பது நின்று போனது. இதையெல்லாம் கவனித்துக் கொண்டு வந்த ஜீவசித்தி திருப்தி அடைந்தான். வழக்கம் போல பல சிறியதும், பெரியதுமான தகவல்களை அவன் சாணக்கியருக்கு அனுப்பிக் கொண்டிருந்தான்.    

 

ஒரு நாள் ராக்ஷசர் அவனை அழைக்கிறார் என்ற தகவல் வந்தது. அவன் துணுக்குற்றாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் உடனடியாகக் கிளம்பினான். அவன் ராக்ஷசரின் அலுவலகத்தை அடைந்த போது காவலன் வெளியறையில் அவனைக் காத்திருக்கச் சொன்னான். உள்ளே ராக்ஷசர் தாழ்ந்த குரலிலேயே பேசிக் கொண்டிருந்தாலும் அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது காது கூர்மையுள்ள ஜீவசித்திக்குத் தெளிவாகக் கேட்டது.

 

ராக்ஷசர் பேசிக் கொண்டிருந்தது ஒற்றர் தலைவனிடம். அவர் சொல்லிக் கொண்டிருந்தார். “.... நான் சமீப காலமாக யாரெல்லாம் நம் தலைநகருக்கு அதிகம் வருகிறார்கள் என்று நம் நகரக் காவலதிகாரியிடம் கேட்டிருந்தேன். அவர் வணிகர்களும் யாத்திரீகர்களும் முன்பை விட அதிகம் வந்து போகிறார்கள் என்று சொல்கிறார். இப்படி ஆட்கள் அதிகம் வந்து போவது மகதத்தின் பொருளாதாரத்திற்கு மிக நல்லது, வளர்ச்சிக்கான அறிகுறி என்றாலும் கூட வந்து போகிறவர்கள் சரியான ஆட்கள் தானா, இல்லை அவர்கள் பெயரில் நம் எதிரிகளின் ஆட்களும் இருக்கக்கூடுமா என்ற சந்தேகம் வருகிறது.”

 

ஒற்றர் தலைவன் சொன்னான். “தாங்கள் கேள்விப்பட்டது போல் வணிகர்களும் யாத்திரீகர்களும் அதிகம் வர ஆரம்பித்திருக்கிறது உண்மையே பிரபு. தாங்கள் முன்பே எச்சரித்ததிலிருந்து நாங்கள் கூடுதலாகப் புதியவர்களைக் கண்காணிக்க ஆரம்பித்திருக்கிறோம். இங்கிருக்கும் போது மட்டுமல்லாமல் இங்கிருந்து அவர்கள் எங்கு போகிறார்கள், போன இடங்களில் என்ன செய்கிறார்கள் என்று கூடக் கண்காணிக்கிறோம்.   வணிகர்கள் இங்கே உண்மையிலேயே பொருட்களை விற்கவும், வாங்கவும் செய்வதையும், தவறான செய்கைகள் எதிலும் ஈடுபடாததையும் எங்களால் பார்க்க முடிந்தது. அது மட்டுமல்ல மகதத்திலிருந்து கலிங்கம், அவந்தி போன்ற அருகிலிருந்த மற்ற தேசங்களுக்கும் சென்று அதே போல வாணிபம் செய்து விட்டுச் செல்கிறார்கள் என்பதையும் பார்த்தோம். அதே போல் யாத்திரீகர்கள் அதிகமாக அருகிலிருக்கும் ஆன்மீகத் தலங்களுக்குச் சென்று வழிபட்டுச் செல்வதையும் பார்க்கிறோம்.”

 

ராக்ஷசர் கேட்டார். “அவர்கள் இங்கு வாணிபத்தோடு சேர்ந்து வேறெதுவும் செய்து விடவில்லையே? மக்களுடன் அதிகம் அளவளாவுவது, அல்லது வீரர்களுடன் தொடர்பில் இருப்பது போன்ற சம்பவங்கள் எதுவும் நடப்பது இல்லையல்லவா?”

 

வீரர்களுடன் அவர்கள் யாரும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை. மக்கள், மற்றும் அதிகாரிகளுடன் கூட அவர்கள் அவசியத்திற்கு அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வதில்லை பிரபு

 

நல்லது. எந்தக் காரணத்தைக் கொண்டும் எச்சரிக்கையை தளர்த்திக் கொள்ள வேண்டாம். இங்கு வருபவர்களில் வாஹிக் பிரதேசப் பகுதிகளிலிருந்து வரும் ஆட்களைக் கூடுதல் எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும். எல்லா ஒற்றர்களிடமும்  சொல்லி வையுங்கள்

 

உத்தரவு பிரபுஎன்ற ஒற்றர் தலைவன் விடைபெற்றான். வரவேற்பறைக்கு வந்து செல்லும் போது ஜீவசித்தியைப் பார்த்து அவன் புன்னகைத்துச் சென்றான். ஜீவசித்தியும் அவனிடம் நட்பாகப் புன்னகைத்து விட்டு ராக்ஷசரைச் சந்திக்கச் சென்றான்.

 

வணக்கம் பிரபுஎன்று தலைவணங்கி நின்ற ஜீவசித்தியை யோசனையுடன் ராக்ஷசர் பார்த்தார். அவருக்கு ஏனோ ஒற்றர் தலைவன் அவ்வளவு உறுதியாகச் சொல்லியும் மனதில் நீங்காமல் இருந்த நெருடலை வகைப்படுத்த முடியவில்லை. ஜீவசித்தியை அவர்கள் கண்கள் பார்த்தனவே தவிர மனம்  ஒற்றர் தலைவன் சொன்ன தகவல்களையே அசை போட்டுக் கொண்டிருந்தது.

 

மனதை திரும்பவும் நிகழ்காலத்துக்கு கொண்டு வந்த அவர் ஜீவசித்தியிடம் சொன்னார். “காவலர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்ல வேண்டும் ஜீவசித்தி. அவர்கள் வேலை வெறும் காவல் வேலையாக மட்டும் இருந்து விடக்கூடாது. கூடுதலாக, காவல் காக்கும் இடங்களில் வித்தியாசமாக எதாவது நடக்கிறதா என்பதையும், அவர்கள் கவனிக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமாக எதாவது நடந்தால் உடனே தெரிவிக்க வேண்டும் என்று அவர்களிடம் சொல்லி வை. ஒற்றர்கள் எல்லாவற்றையும் கவனித்துச் சொல்வதில் வல்லவர்கள் என்றாலும் கூட, எல்லா இடங்களிலும் அவர்களே இருக்க வழியில்லை. சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய இடங்களில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்த முடியுமே தவிர மற்ற இடங்களில் நாம் எல்லோரும் தான் விழிப்பாக இருக்க வேண்டும். மகதத்திற்கு வெளியே இருக்கும் சூழல் திருப்திகரமாக இல்லை. மகதத்தை எதிர்க்கும் வலிமை நம் எல்லைகளைத் தாண்டியுள்ள யாரிடமும் இல்லை என்றாலும் கூட அலட்சியம் நமக்கு என்றும் நல்லதல்ல…”   

 

ஜீவசித்தி பணிவோடு சொன்னான். “புரிகிறது பிரபு

 

மன்னரிடமும், இளவரசர்களிடமும் அனுப்பும் காவலர்கள் அலட்சியமாக இல்லாதிருப்பது மிக முக்கியம். அதே போல் தான் அந்தப்புரத்திற்கும், அரண்மனைக்கும் காவல் பணிக்கு அனுப்பும் காவலர்களையும் பார்த்துத் தான் அனுப்ப வேண்டும். மகாராணிகள், இளவரசி, அரசகுடும்பத்தவர்கள் ஆகியோருக்குப் பல்லக்குத் தூக்கும் காவலர்களும் அப்படியே நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கும்படி பார்த்துக் கொள். எந்தக் காரணத்தைக் கொண்டும் புதியவர்களை இந்தப் பணிக்கு அனுப்ப வேண்டாம்

 

உத்தரவு பிரபு

 

சில காலத்திற்கு முன்பு நம் அரசவைக்கு வந்து மன்னருக்கு எதிராகச் சபதமிட்டுப் போன விஷ்ணுகுப்தர் என்ற அந்தணரைப் பார்த்த  நினைவிருக்கிறதா?”

 

ஜீவசித்திக்கு இயல்பாக இருப்பது பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது. இருந்த போதிலும் யோசிப்பது போலக் காட்டிக் கொண்டு பின் நினைவுபடுத்திக் கொண்டது போலச் சமாளித்துத் தலையாட்டினான். வார்த்தை எதுவும் வாயிலிருந்து எழவில்லை.

 

அந்த மனிதர் தனியாகவோ, மற்றவர்களுடன் சேர்ந்தோ மாறுவேடத்தில் வரும் வாய்ப்பிருக்கிறது. சந்தேகம் வருமானால் சோதித்து அவரைக் கண்டுபிடிப்பது எளிது. அவர் குடுமியை முடிந்திருக்க மாட்டார். இதை ஒற்றர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்றாலும் மற்ற முக்கிய அதிகாரிகளும் கூட நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. நாம் எல்லோரும் மகதத்தின் கண்களாகிக் கண்காணித்துக் கொள்ள வேண்டும்

 

ஜீவசித்தி தலையசைத்தான். அவர் போக அனுமதித்தவுடன் வணங்கி விட்டுக் கிளம்பினான். அவன் வெளியே வந்த பின் நிம்மதியாக மூச்சு விட்டான்.

 

(தொடரும்)

என்.கணேசன்




1 comment:

  1. சாணக்கியர் முக்கால்வாசி வேலைகளை முடித்து விட்டார்... ஆனால், ராக்ஷசர் தற்போது தான் கண்காணிப்பு வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளார்.... புருஷோத்தமன் அலெக்சாண்டரிடம் காட்டிய அலட்சியம் போல உள்ளது...

    ReplyDelete