சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 28, 2023

யோகி 11

கிருஷ்ணமூர்த்தியின் தற்கொலை சேதுமாதவனுக்குத் தாங்க முடியாத பேரிடியாக இருந்தது. மகன் மரணத்தோடு அவரில் ஒரு பகுதியும் இறந்து விட்டதாகவே தோன்றியது. ஆனாலும் உறவினர்கள், நண்பர்கள், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் அனைவரையும் முடிந்த அளவு திடமனதுடனேயே அவர் சந்தித்தார். நண்பர்கள் இருவரைத் தவிர வேறு யாரிடமும் மகனின் தற்கொலைக்கான காரணத்தை அவர் சொல்லவில்லை. அன்றிரவு அவரைத் தனியாக விட்டுச் செல்ல அமீர் பாயும், மைக்கேலும் தயங்கினார்கள். அவர்கள் வாய்விட்டுச் சொல்லா விட்டாலும் காரணத்தைப் புரிந்து கொண்ட அவர் விரக்தி கலந்த புன்னகையுடன் சொன்னார். “பயப்படாதீங்க. நானும் தற்கொலை செய்துக்க மாட்டேன். கடவுளாய் எப்ப என்னைக் கூப்பிட்டுக்கறானோ அது வரைக்கும் நான் இருந்து என் கர்மாக்களை முடிச்சுகிட்டு தான் போவேன்.”

 

அவர்களிருவரும் கண்கலங்கினாலும் அவருடைய மனதிடத்தை மெச்சியபடி சற்று நிம்மதியுடன் போனார்கள். அன்றிரவு உறங்குவதற்கு முன் சேதுமாதவன் வழக்கமாய் படிக்கும் பகவத் கீதையைப் படிக்க எடுத்த போது அதனுள் அவர் மகன் எழுதிய இன்னொரு கடிதம் இருந்தது.

 

அன்பு அப்பாவுக்கு,

சைத்ரா இறந்த கணத்திலேயே நானும் உயிரை விட ஆசைப்பட்டாலும், உங்களை நினைத்து என்னால் முடிந்த வரை நான் தாக்குப் பிடித்தேன். உங்களுக்கு என்னை விட்டால் வேறு யாரும் இல்லை என்பதால், நீங்கள் இருக்கும் வரையாவது நானும் இருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை அப்பா. நான் இறந்து எனக்கு நீங்கள் கொள்ளி வைப்பது, உங்கள் வயதில் உங்களுக்குக் கொடுமையான விஷயம் என்பது நன்றாகவே புரிகிறது. ஆனால் என் மகள் இல்லாத உலகில் என்னால் வாழ முடியவில்லை அப்பா. மன்னிக்க முடியாத குற்றத்தை நான் செய்கிறேன் என்பதை நான் ஆத்மார்த்தமாகவே உணர்கிறேன். ஆனாலும் என் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்த நீங்கள், உங்கள் இயல்பான பெருந்தன்மையின் காரணமாக, இந்தக் கோழையை மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்களை விட்டுப் பிரிகிறேன்.

உங்கள்

கிருஷ்ணமூர்த்தி

பி.கு. முடிந்தால் என் கடைசி வேண்டுகோளை மட்டும் நிறைவேற்றுவீர்களா அப்பா?”

 

சேதுமாதவன் அந்தக் கடிதத்தைப் படித்து விட்டு, தேற்றக் கூட யாருமில்லாத தனிமையில் நிறைய அழுதார். பின் வெறுமையே மிஞ்சியது. 

 

தொடர்ந்த நாட்களில் இனி என்ன செய்யப் போறீங்க?” என்று பலரும் சேதுமாதவனிடம் கேட்டார்கள். அவர் யாருக்கும் எந்த பதிலும் சொல்லவில்லை. அவருக்கே இனி என்ன செய்வது என்று தெரியவில்லை. துக்கம் விசாரிக்க வந்த தூரத்து உறவினர்களும், நண்பர்களும் அவரை இரக்கத்துடன் பார்த்தார்கள். சைத்ரா இறந்த சமயத்தில் கொரோனா உச்சத்தில் இருந்ததால் அவர்கள் துக்கம் விசாரிக்க வரவில்லை. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு எல்லாம் திரும்புவதால் அவர்கள் ஒவ்வொருவராக தினமும் வந்து செல்கிறார்கள். அவர்களில் சிலர் உதவி ஏதாவது தேவைப்பட்டால் தயங்காமல் கேட்கச் சொன்னார்கள். அவர் யாரிடமும் எந்த உதவியும் கேட்கவில்லை. அவர்கள் செய்ய முடிந்த உதவி எதுவும் இருக்கவில்லை. அமீர் பாயும், மைக்கேலும் முடிந்த நேரங்களில் எல்லாம் வந்து உடனிருந்தது தான் அவருக்குச் சிறிதாவது ஆறுதலாக இருந்தது. ஆனால் அவர்களும் போன பின் வெறுமையே மிஞ்சியது.

 

ஒரு வாரம் கழித்து அவருடைய எழுபத்தைந்தாவது பிறந்த நாள் வந்தது. சென்ற வருடம் வரை அவருடைய பிறந்தநாட்களில் பேத்தி  சைத்ரா தான் முதல் ஆளாக வாழ்த்து தெரிவிப்பாள். அடுத்ததாக அவருடைய மகன் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்து சொல்வார். இந்தப் பிறந்த நாளில் வாழ்த்து சொல்ல அவர்களிருவரும் உயிருடன் இல்லை...

 

காலையிலிருந்தே பழைய நினைவுகளின் கனத்தோடு வெற்றிடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவர் அந்த நாளின் வெறுமை சகிக்க முடியாமல் போன போது, எழுந்து போய் தொலைக்காட்சியை இயக்கினார். அதில் விளையாட்டுச் செய்திகள் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அந்தச் செய்திகளில் அவர் மனம் தங்கவில்லை என்றாலும் அந்தச் சத்தம் நிசப்தத்தின் கொடுமையை ஓரளவு குறைத்தது... 

 

“.... மீண்டும் தலைப்புச் செய்திகள். அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த தமிழக முதலமைச்சர் மூன்று மாதங்கள் கழிந்து இன்று சென்னை வந்து சேர்ந்தார். அவருக்கு தமிழக கவர்னரும், அமைச்சர்களும், கட்சித் தொண்டர்களும் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.....”

 

சேதுமாதவன் நிமிர்ந்து உட்கார்ந்தார். விமானத்திலிருந்து தளர்ச்சியுடன் இறங்கும் முதலமைச்சரையும், வரவேற்ற கவர்னர் மற்றும் அமைச்சர்களையும் தொலைக்காட்சி சில வினாடிகள் காட்டியது. அவருக்கு அடுத்த செய்திகள் எதுவும் கவனத்தில் பதியவில்லை. சில நிமிடங்களுக்கு முன் தேவைப்பட்ட சத்தம் இப்போது இடைஞ்சலாகத் தோன்ற தொலைக்காட்சியை அணைத்தார்.

 

அருணாச்சலம் சென்னை வந்து சேர்ந்த செய்தி கிடைத்த இந்தக் கணம் வரை அவர் ஒரு ஜடம் போலவே இருந்தார். ஜடத்தன்மையிலிருந்து இப்போது அவரை எழுப்பி விட்டது, மகனின் கடைசி கோரிக்கை தான். இனி என்ன செய்யப் போறீங்க?”  என்று எல்லாரும் கேட்ட கேள்விக்கு ஒரு பதில் இப்போது அவருக்குக் கிடைத்திருக்கிறது. கிருஷ்ணமூர்த்தி சொன்னது போல மகனுக்காகவும், பேத்திக்காகவுமாவது அவர் அருணாச்சலத்தைச் சந்திக்க வேண்டும்.

 

கிருஷ்ணமூர்த்தியின் கடைசி வேண்டுகோளையும், பகவத்கீதையில் வைத்து விட்டுப் போயிருந்த கடிதத்தையும் பற்றி அவர் அமீர் பாய் மற்றும் மைக்கேல் இருவரிடம் தவிர வேறு யாரிடமும் சொல்லியிருக்கவில்லை.   முதலமைச்சரின் வருகையை அறிந்த அவர்களிருவரும் அன்று பரபரப்புடன் அவர் வீட்டுக்கு வந்தார்கள். மூவருமாகச் சேர்ந்து மீண்டும் முதலமைச்சர் குறித்த செய்திகளை மாறி மாறி ஒவ்வொரு சேனலிலும் பார்த்தார்கள். முதல்வருக்கு ஓய்வு மிக அவசியம் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியிருப்பதாகவும் அதனால் குறைந்த பட்சமாக ஓரிரு மாதமாவது அவருடைய நிர்வாகச் சுமைகளை அவருடைய அமைச்சர்களே தொடர்ந்து கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்றும் தான் எல்லா சேனல்களிலும் செய்திகள் சொல்லப்பட்டன. நாளையும், நாளை மறுநாளும், பிரதமரும், மூன்று மாநில முதலமைச்சர்களும் அவருடைய உடல்நலம் விசாரிக்க மரியாதை நிமித்தம் வரவிருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.

 

அன்றிரவு ஆளுங்கட்சித் தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு அறிக்கை வெளியானது. “முதல்வருக்கு ஓய்வு மிக அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதால் இரண்டு மாதங்கள் முடியும் வரை கட்சித் தலைவர்கள் உட்பட கட்சிக்காரர்கள் யாரும் அவரைச் சந்தித்து நலம் விசாரிக்க நேரில் வர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.”

 

மைக்கேலின் நெருங்கிய உறவினர் ஒருவர் செக்ரட்டரியேட்டில் ஒரு உயர்பதவியில் இருந்தார். அவர் மூலம் விசாரித்த போது முதல்வரின் மருத்துவரும், முதல்வருக்கு நெருங்கிய இரண்டு அமைச்சர்களும், தலைமைச் செயலரும் மட்டுமே அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது தெரிந்தது. இதையெல்லாம் கேட்டு அவர்களது நம்பிக்கையும், உற்சாகமும் தானாகக் குறைந்திருந்தன. முதல்வரின் இளம் காரியதரிசியின் தொலைபேசி எண் மட்டுமே அந்த உறவினர் மூலம் பெற முடிந்தது.

 

விதி இந்த விஷயத்திலும் தனக்கு அனுகூலமாக இல்லை என்று விரக்தியுடன் சேது மாதவன் எண்ணிக் கொண்டார். சாதாரண காலங்களிலேயே முதலமைச்சரைச் சந்திக்க அனுமதி கிடைப்பது சுலபமல்ல. அப்படி இருக்கையில், அவர் உடல்நலக்குறைவு காரணமாக ஓய்விலிருக்கும் போது அவரைச் சந்திக்க, ஐம்பது வருட காலம் தொடர்பில் இல்லாமல் இருந்த ஒரு பால்ய நண்பனுக்கு அனுமதி கிடைப்பது குதிரைக் கொம்பாகத் தான் இருக்கும் என்பது புரிந்தது. ஆனாலும் அவர் முயன்று தானாக வேண்டும்பிரதமரும், மூன்று மாநில முதலமைச்சர்களும் வந்து போகிற வரை காத்திருந்து விட்டு அடுத்த நாளே முயன்று பார்ப்பதாக சேதுமாதவன் சொன்ன போது, அமீர் பாயும், மைக்கேலும் வெறுமனே தலையசைத்தார்கள்.

 

அவர்களுக்கு முதல்வரை சேதுமாதவன் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கவில்லை. காரணம், சேதுமாதவனுடன் முதல்வருக்கு இருக்கும் நட்பு உண்மையானதாக இருக்குமானால், இத்தனை வருட காலத்தில் முதல்வர் தானாகவாவது அவரைச் சந்திக்க முயற்சி செய்திருக்கலாம். சேதுமாதவன் மத்திய அரசுப் பணியில் இருந்ததால் முதல்வருக்கு அவருடைய விலாசத்தைக் கண்டுபிடிப்பதோ, தொடர்பு கொள்வதோ சிரமமாக இருந்திருக்காது. அப்படியிருந்தும் அவர் முயற்சி செய்யாதது, அரசியலில் உயர ஆரம்பித்த பின் இந்த நல்ல மனிதருக்கு அவர் அந்த அளவு முக்கியத்துவம் தந்திருக்கவில்லை என்பதைக் காட்டுவதாகவே அவர்கள் நினைத்தார்கள். அப்படி இருக்கையில் உடல்நலக்குறைவால் ஓய்வு கட்டாயம் என்கிற நிலையில் முதல்வர் இருக்கையில், சேதுமாதவனுக்குச் சந்திக்க அனுமதி கிடைக்கும் என்று அவர்களுக்குத் தோன்றவில்லை. ஆனால் இதைச் சொல்லி அந்த நல்ல மனிதரை, இப்போது அவரிருக்கும் மனநிலையில் மேலும் புண்படுத்த அவர்கள் விரும்பவில்லை.


(தொடரும்)

என்.கணேசன்






7 comments:

  1. Hello Sir, I religiously read all your novels because I get positive energy out of it. However Yogi has been very depressing from the start. Hoping for some positivity very soon

    ReplyDelete
    Replies
    1. Exactly my thoughts. I was hoping for Chaitra coming back alive. Now Couldn't digest krishnamoorthi's tragic end

      Delete
    2. Exactly.. I wouldn't continue this novel series...

      Delete
  2. Krishnamoorthi oda letter rombave Kan kalangidichi.,

    ReplyDelete
  3. சரளாதேவி மாரிமுத்துAugust 28, 2023 at 8:13 PM

    உண்மையான வரிகள். நம்முடன் வாழ்ந்த உறவுகள் மறைந்த பின் வாழ்வின் ஒரு பகுதி முடிந்து விடுகிறது.

    ReplyDelete
  4. சரளாதேவி மாரிமுத்துAugust 28, 2023 at 8:34 PM

    குறுகிய காலத்தில் ஏற்பட்ட பேரிழப்புகள்..சேது மாதவனை சுற்றியே எண்ணம் வலம் வந்து கொண்டிருக்கிறது....

    கிருஷ்ண மூர்த்தி நிதானமாக இருந்த இருக்கலாம்...

    ReplyDelete
  5. ஐயாவின் நாவல்களில் இதுவரை நல்லவர்கள் கஷ்டத்திற்கு உள்ளாவார்கள்... இறுதியில் நல்ல நிலை அடைவார்கள்....

    ஆனால்... இதில் நல்லவரான சேதுமாதவனக்கு உச்சகட்ட துன்பமே நடந்துவிட்டது....
    நல்லதுக்கு காலமில்லை...என்பதுபோல தோன்றுகிறது....

    ReplyDelete