சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 27, 2022

யாரோ ஒருவன்? 91


ரேந்திரன் தாமோதரை போனில் அழைத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரிவித்த போது தாமோதர் திகைத்தான். அவன் சொன்ன விஷயம் தாமோதருக்குப் புத்திசாலித்தனமாகத் தெரியவில்லை. பிரச்சினை தீர்வதற்குப் பதிலாக அதிகரிக்குமோ என்ற அச்சம் அவனுக்கு இருந்தது. ஆனால் நரேந்திரன் நாகராஜை நூறு சதவீதம் நம்பியதால் தாமோதர் வேறு வழியில்லாமல் உடனடியாகக் கிளம்பினான்.

அந்த ஃபேக்டரியை அவன் பைக்கில் நெருங்கும் போது சுமார் நூறு மீட்டர் தொலைவில் ஒருவன் பைக்கில் அமர்ந்தபடி அவனைப் பார்த்து லேசாகக் கைதூக்கினான்ஃபேக்டரி தாண்டியும் நூறு மீட்டர் தொலைவில் இன்னொரு ஆளும் பைக்குடன் நின்று கொண்டிருந்தான். அந்த இரண்டு ஆட்களும் ரா ஒற்றர்கள். சந்தேகத்திற்குரிய ஆட்கள் யாராவது அவர்களைக் கடந்து வந்தால் அவர்கள் வேலை தாமோதரை செல்போனில் எச்சரிப்பது. அப்படி செல்போன் அடித்தால் அவன் ஃபேக்டரி பூட்டைத் திறந்து கொண்டு உள்ளே போகக்கூடாது. மாறாக நேராக அப்படியே கடந்து போய் விட வேண்டும். உள்ளே சென்ற பிறகும் வெளியே சந்தேகத்திற்குரிய மனிதர்களின் நடமாட்டம் இருக்குமானால் அவர்கள் தாமோதரிடம் போன் செய்து தகவலைத் தெரிவிப்பார்கள். அவர்கள் அந்த ஆபத்து நீங்கி விட்டது, யாரும் இப்போது கண்காணிக்கவில்லை என்று தெரிவித்தால் மட்டுமே அவன் வெளியே வர வேண்டும்...
                        
ஃபேக்டரி முன்னால் பைக்கை ஓரமாக நிறுத்தி அவசர அவசரமாக பூட்டைத் திறந்து உள்ளே நுழைந்த தாமோதர் மறுபடி வேகமாக கதவைச் சாத்தித் தாளிட்டான். பின் உள்ளே நடக்க ஆரம்பித்தான். அவனுக்கு உள்ளே எந்த மாற்றமும் இருப்பது போல் தோன்றவில்லை. கட்டிடத்தின் பின் பகுதி அறைகளில் தான் மதன்லாலும், சஞ்சய் ஷர்மாவும் இருக்கின்றனர்...

தாமோதர் இரண்டு அறைகளையும் எட்டிப் பார்த்தான். சஞ்சய் ஷர்மாவும், மதன்லாலும் அவரவர் அறைகளில் சங்கிலியில் கட்டுண்ட நிலையிலேயே மயங்கி விழுந்திருந்தார்கள். தாமோதர் முதலில் மதன்லாலை நெருங்குவது ஆபத்து என்று நினைத்து சஞ்சய் ஷர்மாவை நெருங்கினான். சஞ்சய் ஷர்மாவிடம் எந்த அசைவுமில்லைஅருகில் சென்று நின்ற தாமோதர் காலால் அவனை அசைத்துப் பார்த்தான். எந்த விதமான பாதிப்புமில்லாமல் சஞ்சய் ஷர்மா பிணம் போல் கிடந்தான்தாமோதர் அவனை ஆராய்ந்தான். சஞ்சய் ஷர்மா கால்களில் பாம்புகள் தீண்டிய அடையாளம் தெரிந்தது. அவன் மூக்கின் அருகில் தாமோதர் விரல் வைத்துப் பார்த்தான். மூச்சு இருந்ததால் உயிர் போய் விடவில்லை என்பது தெரிந்ததுமெல்ல இரும்புச்சங்கிலியைக் கழற்றி எடுத்துக் கொண்ட தாமோதர் இரண்டு நிமிடங்கள் எச்சரிக்கையுடன் நின்று பார்த்தான். இப்போதும் சஞ்சய் ஷர்மாவிடம் எந்த அசைவும் தெரியவில்லை.

திருப்தி அடைந்த தாமோதர் பக்கத்து அறைக்குச் சென்று மதன்லாலை சற்று பலமாகவே உதைத்தான். ஆனாலும் மிக லேசான முனகல் சத்தம் மட்டுமே மதன்லாலிடமிருந்து வந்தது. பின் மெல்ல அவனைக் கட்டியிருந்த சங்கிலியையும் தாமோதர் கழற்றி எடுத்துக் கொண்டான். மதன்லாலிடம் மட்டும் தாமோதருக்கு இரண்டு மடங்கு எச்சரிக்கை இருந்தது. ஆனால் அவன் பயப்பட்டது போல மதன்லால் திடீரென்று எழுந்து அவன் மேல் பாயவில்லை. அவனும் சஞ்சய் ஷர்மா போலவே அசைவற்றுப் படுத்திருந்தான்அவன் கையிலும் பாம்புக் கடிகள் தெரிந்தன. தாமோதர் ஒரு நிமிடம் நின்று பார்த்து விட்டு வேகமாகக் கிளம்பினான்.

அங்கிருந்து நடக்க ஆரம்பித்த போது அவனுக்குப் பிரமிப்பும், திகைப்புமே மேலோங்கி இருந்தன. இனி என்ன நடக்கும் என்று தெரியவில்லை. நடப்பது நரேந்திரனுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் இருக்கக்கூடும் என்ற பயம் மட்டும் அவனுக்கு இன்னமும் இருந்தது.

வெளிக்கதவை நெருங்கிய போது ஒரு போன்கால் வந்தது. “நான் சொல்லும் வரை வெளியே வர வேண்டாம். ஒரு கார் மிக நிதானமாகப் போகிறது. அதில் இருக்கும் ஆட்கள் ஃபேக்டரியைப் பார்த்தபடியே போகிறார்கள்....”

ஓடும் காரிலிருந்து பார்க்கும் போது ஃபேக்டரியின் பெரிய கேட்டில் பூட்டு இல்லாமல் இருப்பதை யாரும் கவனிக்க வாய்ப்பில்லை.... ஆனாலும் தாமோதர் இதயம் படபடக்க அப்படியே நின்றான். இரண்டு நிமிடங்கள் கழித்து மறுபடி அந்த ஆள் அழைத்துச் சொன்னான். “இனி வரலாம்... பிரச்னை இல்லை....”

தாமோதர் அவசரமாக வெளியே வந்து பூட்டைப் பூட்டினான். அடுத்த இரண்டு நிமிடங்களின் முடிவில் மூவருமே அந்த நெடுஞ்சாலையில் இருக்கவில்லை. ஃபேக்டரி எப்போதும் போல வெளிப்புறத்துக்குக் காட்சியளித்தது.


ணியின் வீட்டை நோக்கி காரில் போய்க் கொண்டிருக்கையிலும் கல்யாண் மனதில் நாகராஜின் வீட்டுக்கு நரேந்திரன் வந்து சென்றதே நெருடலாகத் தங்கியிருந்தது. அந்த ரா அதிகாரி நாகராஜ் அழைத்து வந்திருப்பானா இல்லை அவனாகவே வந்திருப்பானா? எது விஷயமாக வந்திருப்பான்? என்ற யோசனைகளுடனே அவன் மணியின் வீட்டை அடைந்தான்.

கதவைத் திறந்த மணி வேறு புதிய ஆள் போல் தெரிந்தான். அத்தனை மாற்றம் அந்த முகத்தில் இருந்தது. அதிர்ச்சியும் பீதியும் சோர்வும் கலந்து தெரிந்தது.  ’வந்தது போலீஸ்  என்று நினைத்துக் கொண்டானா ஏன் இப்படிப் பயந்து போய்விட்டான்என்று நினைத்த கல்யாண்என்ன ஆச்சு?” என்று அக்கறை காட்டிக் கேட்டான்.

முதல்ல உள்ளே வாங்கஎன்று சொல்லி கல்யாண் உள்ளே நுழைந்தவுடன் கதவைத் தாளிட்டுக் கொண்ட மணி கல்யாணை அங்கிருந்த சோபாவில் உட்கார வைத்து விட்டு எதிரில் சோர்வுடன் அமர்ந்தான்.

எனக்கு ஒன்னுமே புரிய மாட்டேங்குது. எங்க யார் வாழ்க்கைலயும்  இதுவரைக்கும் இந்த மாதிரி ஆனதில்லை. உண்மைல உங்க பக்கத்து வீட்டுக்காரன் யாரு சார்?”

கல்யாண் இதயத் துடிப்பு எகிற ஆரம்பித்தது. என்ன பிரச்சினையில் இவர்கள் சிக்கிக் கொண்டார்கள்? அவன் மெல்லச் சொன்னான். “புதுசா குடி வந்திருக்கான். அவனைப் பத்தி எங்களுக்கும் அதிகம் தெரியாது. பார்த்தாகுட் மார்னிங், குட் ஈவ்னிங்சொல்லிக்குவோம். அதைத் தவிர அதிக பழக்கம் இல்லை. ஏன் கேட்கிறீங்க?”

மணி பெருமூச்சு விட்டு விட்டுச் சொல்ல ஆரம்பித்தான். “நேத்து ராத்திரி ரெண்டு மணி சுமாருக்கு அங்கே வந்துட்டோம். போலீஸ்காரனுக யாராவது வந்தா எங்களை எச்சரிக்க ரெண்டு பேரை வீதியில தூரத்துல ரெண்டு பக்கமும் நிறுத்திட்டோம். வீட்டுக்கு முன்னாடியும் ஒருத்தனைக் காவலுக்கு நிறுத்திட்டு உங்க பக்கத்து வீட்டுக் கேட்டை நெருங்கினது தான் தெரியும். பின்னே எதுவும் எங்களுக்கு ஞாபகம் இல்லை....”

கல்யாண் கலவரமடைந்து கேட்டான். “என்ன சொல்றீங்க? என்ன ஆச்சு?”

மணி சொன்னான். “அது தான் தெரியலை. எங்களுக்கு ஞாபகம் வந்தப்பவும் நாங்க அந்த வீட்டு கேட் முன்னாடியே நின்னுட்டிருந்தோம். மணி மூனே முக்கால் ஆகி இருந்துச்சு... எங்க யாருக்குமே என்ன நடந்துச்சுன்னு தெரியல. ஒரே நேரத்துல அத்தனை பேருக்கும் நினைவு போயிடுச்சு. ஒரே நேரத்துல அத்தனை பேருக்கும் நினைவு வந்துச்சு. இடைப்பட்ட ஒன்னே முக்கால் நேரமும் என்ன நடந்துச்சுன்னு யாருக்கும் தெரியல. எவ்வளவோ யோசிச்சும் நினைவுக்கு வரல.”

கல்யாண் ஏமாற்றத்தையும், இனம் புரியாத பயத்தையும் உணர்ந்தவனாகக் கேட்டான்.  ”ஒன்னே முக்கால் மணி நேரமும் அந்த கேட் முன்னாடியே நின்னுகிட்டா இருந்தீங்க?”

மணி சொன்னான். “அது தான் தெரியலை.... ஆனா நாங்க எங்க வேலையை ஆரம்பிச்சு முடிச்சிருந்தா எப்படி களைப்பை உணர்வோமோ அந்தக் களைப்பு எங்க எல்லாருக்குமே இருந்துச்சு. எங்க இதயத்துடிப்பு கூட கூடுதலா இருந்துச்சு....”

கல்யாண் பலவீனமான குரலில் கேட்டான். “என் பக்கத்து வீட்டுக்காரனை நீங்க பார்த்தீங்களா?”

யாரையுமே பார்க்கலை. வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் அமைதியா தான் இருந்துச்சு....”

நீங்க ரெண்டு பக்கமும் தள்ளி நிறுத்தியிருந்த ஆள்கள் எதாவது வித்தியாசமா பார்த்தாங்களா? இல்லை அவங்களுக்கும் நினைவு போயிடுச்சாஎன்று கல்யாண் சந்தேகத்துடன் கேட்டான்.

அவங்களுக்கு நினைவு போயிடல. அவங்க போலீஸ்காரனுகளோ, பிரச்சினைக்குரிய ஆள்களோ வர்றாங்களான்னு பார்த்துகிட்டு நின்னுட்டு இருந்தாங்க. அப்படி யாரும் வரலைன்னு சொல்றாங்க. எங்க பக்கத்துலயும் ஏதாவது வித்தியாசமா நடந்த மாதிரி தெரியலைன்னு சொல்றாங்க

கல்யாணுக்கு நாகராஜ் எதோ சித்து வித்தை செய்தி அவர்களை மதிமயங்கச் செய்திருப்பான் என்று தோன்றியது. அவன் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கையில் மணி அவன் கொடுத்த முன்தொகை மூன்று லட்ச ரூபாயைத் திருப்பிக் கொடுத்தான். “அந்த ஆளு லேசு பட்டவனா தெரியல சார். நீங்க ஐம்பது அறுபதாயிரம் ரூபாய் மதிப்பிருக்கிற ரத்தினங்க தொலைஞ்சதுக்காக கவலைப்படாதீங்க. இத்தனை செஞ்சவன் உங்க உயிரை விட்டு வெச்சிருக்கானேன்னு சந்தோஷப்படுங்க. வேற எதுவுமே புரியலைன்னாலும் நாங்க அப்படித்தான் சந்தோஷப்படறோம்....”

கல்யாண் அந்த வார்த்தைகளில் இருக்கிற உண்மை உறைக்க பேரதிர்ச்சி அடைந்தான்.


(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.



4 comments:

  1. மணியையும் பாம்பு கடிக்காமல் விட்டதே... அதுவரை மணியும் சந்தோஷ படலாம்....
    கடத்தினவங்க ரெண்டு பேருக்கும்...என்ன ஆச்சி... மணிக்கு என்ன ஆச்சி...ஒரே குழப்பமா இருக்கு....

    ReplyDelete
  2. நடப்பதை பார்த்தால்... நாகராஜ் தானாக மனம் வந்து தான் அந்த விசேச நாகரத்தினத்தை வழங்குவார்... அது தீபக்க்குக்கு வழங்க வாய்ப்புள்ளது...

    ReplyDelete
  3. Sema twist. very interesting.

    ReplyDelete
  4. மதன்லால் மற்றும் சஞ்சய் இருவரும் நினைவை இழந்திருப்பார்கள் ....என நினைக்கிறேன்... ஏனெனில் நாகராஜ் கொலை செய்யக்கூடிய ஆள் அல்ல...

    ReplyDelete