சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Tuesday, May 18, 2021

பொருட்களை வரவழைக்கும் மாயசக்தி!

 

ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள்! 26



ர்னல் ஓல்காட் 1880 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மூன்றாம் நாள் பதிவு செய்த ஒரு சுவாரசியமான நிகழ்வு ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் இருந்த அபூர்வ சக்திக்க இன்னொரு எடுத்துக்காட்டு. அந்த நிகழ்வைப் பார்ப்போம்.

 

அன்றைய தினம் கர்னல் ஓல்காட்டும் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் வேறு நான்கு நபர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார்கள். அவர்களுடன் சில பணியாளர்களும் சென்றிருந்தார்கள். அவர்களுக்குத் தேநீர் அருந்துவதற்குத்  தேவையான ஆறு கோப்பைகள் எடுத்துச் சென்றிருந்தார்கள். அந்தக் கோப்பைகள் வித்தியாசமான அழகிய வேலைப்பாடுடன் அமைந்திருந்தன. அவர்கள் மரங்கள் அடர்ந்த ஒரு இயற்கைச் செழிப்புள்ள இடத்தில் ஒரு புல்வெளிப்பிரதேசத்தில் கூடாரம் அமைத்துத் தங்கினார்கள். அப்போது வேறொரு கனவானும் அங்கே வந்து சேர்ந்து அவர்களுடன் கலந்து கொண்டார். அனைவரும் அங்கே தங்கி இயற்கை எழிலை ரசித்தபடி அபூர்வசக்திகளைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். தேநீர் அருந்தும் நேரம் வந்த போது ஒரு பணியாளர் அங்கே ஆறு கோப்பைகள் தான் கொண்டு வந்திருப்பதாகவும், புதிதாக வந்திருக்கும் கனவானுக்கும் சேர்த்து ஏழு கோப்பைகள் தேவைப்படுவதாகவும் தயக்கத்துடன் தெரிவித்தார்.

 

என்ன செய்வதென்று எல்லோரும் யோசித்த போது ஒருவர் விளையாட்டாகச் சொன்னார். “அதனாலென்ன? ப்ளாவட்ஸ்கீ அம்மையார் புதிய ஒரு கோப்பையை வரவழைத்துக் கொடுக்க மாட்டாராஎன்று கேட்டார்.

 

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அந்த எதிர்பாராத கோரிக்கையை நிறைவேற்ற உடனே தயாரானார். சிறிது நேரம் கண்களை மூடி யோசித்த அவர் பிறகு சற்று தூரத்தில்  இருந்த ஒரு மரத்தடி இடத்தைக் காட்டி அங்கே தோண்டிப் பார்க்கச் சொன்னார். அவர்களில் ஒருவர் ஆச்சரியத்துடன் பேனா கத்தியால் இடத்தைத் தோண்டிப் பார்த்த போது சுமார் ஓரடி ஆழத்திற்குப் பிறகு ஒரு கோப்பை இருந்தது. மற்ற ஆறு கோப்பைகளைப் போலவே அந்தப் புதிய கோப்பையும் இருந்தது தான் வியப்பிலும் வியப்பு.

 

அன்று மதியமே இன்னொரு ஆச்சரியமான சம்பவமும் அங்கே நடந்தேறியது. அவர்களைக் கண்டு பேச வந்த ஒருவர் தியோசபிகல் சொசைட்டி குறித்து மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டார். கடைசியில் அவரிடம் கர்னல் ஓல்காட் தியோசபிகல் சொசைட்டியின் உறுப்பினராகச் சேர்ந்து கொள்ள அவரிடம் கோரிக்கை விடுத்த போது அவர் சொன்னார். “எனக்கு உறுப்பினர் சான்றிதழை இப்போதே தரத் தயாரானால் நான் இப்போதே தியோசபிகல் சொசைட்டியில் இணையத் தயார்

 

உறுப்பினர் சான்றிதழ்கள் எல்லாம் அவர்களுடைய அலுவலகத்தில் இருந்தன. சுற்றுலாச் செல்லும் போது அதையெல்லாம் எடுத்துக் கொண்டு வராததால் கர்னல் ஓல்காட் அவருடைய கோரிக்கை நிறைவேற்ற முடியாத கோரிக்கை என்று நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தார். ஆனால் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அந்தப் புதிய நபரிடம்உங்களுடைய உறுப்பினர் சான்றிதழ் அங்கே இருக்கிறதுஎன்று சொல்லி சற்று தள்ளி இருந்த ஒரு புதரைக் காட்டினார்.

 

அந்தப் புதிய நபர் மட்டுமல்ல, ப்ளாவட்ஸ்கீ அம்மையாருடன் வந்திருந்த மற்றவர்களும் திகைத்துப் போனார்கள். அந்தப் புதிய நபர் திகைப்பு குறையாமல் அவசர அவசரமாக அந்தப் புதரை நோக்கி விரைந்தார். அந்தப் புதருக்குள் அந்தப் புதிய நபரின் உறுப்பினர் சான்றிதழ் இருந்தது. தியோசபிகல் சொசைட்டியின் உறுப்பினர் படிவத்தில் அந்தப் புதிய நபரின் பெயர் கர்னல் ஓல்காட்டின் கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. அந்தச் சான்றிதழில் தியோசபிகல் சொசைட்டியின் முத்திரையும் இடப்பட்டு அன்றைய தேதியும் எழுதப்பட்டிருந்தது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அந்தப் புதிய நபரைப் போலவே கர்னல் ஓல்காட்டும் எல்லையில்லாத  வியப்பில் ஆழ்ந்தார். அந்தச் சான்றிதழில் இருந்தது அவருடைய கையெழுத்து போலவே தான் தோன்றியது. அந்தச் சான்றிதழ்களோ தியோசபிகல் சொசைட்டியின் அலுவலகத்தில் வைத்திருந்தார்கள். அது எப்படி அங்கே வந்தது? அதில் அந்தப் புதிய நபரின் பெயரை எழுதியது யார்? தேதியையும் எழுதியது யார்? திடீரென்று அந்தப் புதிய நபர் அப்படி ஒரு விசித்திரமான வேண்டுகோளை விடுப்பார் என்று யாருக்குத் தெரியும்? தான் எழுதவில்லை என்ற போதும் அந்த சான்றிதழில் தன் கையெழுத்து தெளிவாக இருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த கர்னல் ஓல்காட்டுக்கு என்ன நடந்திருக்கும் என்பதைக் கடைசி வரை ஊகிக்க முடியவில்லை.   

 

இன்னொரு சமயத்தில் கர்னல் ஓல்காட்டும், ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், மற்ற சில நண்பர்களும் திரு ஹ்யூம் என்பவர் வீட்டுக்குச் சென்றிருந்தார்கள். திருமதி ஹ்யூம், திரு ஹ்யூம் உட்பட பதினோரு பேர் ஒரு நாள் இரவு அங்கே அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார்யாருக்காவது ஏதாவது வேண்டுமா?” என்று கேட்டார். உடனே திருமதி ஹ்யூம்எனக்கு வேண்டும்என்று சொன்னார்.

 

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கேட்டார். “உங்களுக்கு என்ன வேண்டும்?”

 

திருமதி ஹ்யூம் சொன்னார். “எங்கள் குடும்ப நகைகளில் ஒரு முத்துக்கள் பதித்த நகை சிறிது காலத்திற்கு முன் காணாமல் போய் விட்டது. காணாமல் போன நகையை நீங்கள் வரவழைத்துக் கொடுத்தால் அது பெரிய உபகாரமாக இருக்கும்

 

ப்ளாவட்ஸ்கீ அம்மையார்  கேட்டார். “அந்த முத்து நகை எப்படி இருக்கும் என்று உங்கள் மனதில் தெளிவான பிம்பம் இருக்கிறதா?.

 

திருமதி ஹ்யூம்இருக்கிறதுஎன்று சொன்னார்.

 

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அவரையே கூர்ந்து பார்த்தார். அவர் பார்த்து திருமதி ஹ்யூம் மனதில் இருக்கும் பிம்பத்தை யூகிக்க முயன்றது போல் கர்னல் ஓல்காட்டுக்குத் தோன்றியது.

 

பின் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சொன்னார். “அந்த நகையை இந்த வீட்டுக்குள் கொண்டு வருவது கஷ்டம். உங்கள் தோட்டத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யட்டுமா?”

 

திருமதி ஹ்யூம் ஒத்துக் கொண்டார்.

 

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு கேட்டார். “உங்கள் தோட்டத்தில் நட்சத்திர வடிவில் தரையில் பூ மேடைகள் இருக்கின்றனவா?”

 

திரு ஹ்யூம் சொன்னார். “நிறையவே இருக்கின்றன.” சின்னச் சின்ன பூக்களை தோட்டத்தில் கொத்தாக வளர விட்டு நட்சத்திர வடிவங்களில் ஆங்காங்கே பூ மேடைகள் அவர்கள் அமைத்திருந்தார்கள். ஆனால் திரு.ஹ்யூம் அவர்களின் அந்தத் தோட்ட வீட்டுக்கு ப்ளாவட்ஸ்கீ அம்மையார் வருவது அது தான் முதல் முறை. அவர் வெளியிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் அந்தப் பூ மேடைகள் இல்லை என்பதால் எப்படி அறிந்து கொண்டார் என்ற எண்ணமே திரு ஹ்யூம் அவர்களுக்கு மேலோங்கி இருந்தது.    

 

நான் சொல்வது இந்தத் திசையில்...” என்று ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஒரு திசையில் கையைக் காட்டிச் சொன்னார்.

 

வெளியே கடுங்குளிர் நிலவியதால் நகையை வேண்டுமென்று கேட்ட திருமதி ஹ்யூம் வெளியே சென்று பார்க்கத் தயங்கினார். ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் தோட்டத்திற்குச் செல்லவில்லை.  ஆனால் மற்றவர்கள் அனைவரும் சேர்ந்து லாந்தர் விளக்குகளை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு விரைந்தார்கள்.  யார் கையில் கிடைக்கும் என்ற ஆர்வம் அனைவருக்கும் இருந்தது. ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கைகாட்டிய இடத்தில் ஒரு பெரிய பூமேடைப் பரவல் இருந்தது. அனைவரும் அதனிடையே அந்த முத்து நகையைத் தேடினார்கள். ஒருவர் கையில் அந்த முத்து நகை கிடைக்க அவர் அதை எடுத்துக் கொண்டு திருமதி ஹ்யூமிடம் ஓடோடி வந்தார். “இது தான் நீங்கள் சொன்ன நகையா?” திருமதி ஹ்யூமிற்கோ தன் கண்களை நம்ப முடியவில்லை கைகளில். பிரமிப்புடன் அந்த நகையை வாங்கிப் பார்த்து ஆமென்று தலையை அசைத்தார்.

 

ஒரு முறை கூடத் தன் கண்ணால் பார்த்திராத ஒரு நகையை, சில காலத்திற்கு முன்பே காணாமல் போயிருந்த ஒரு நகையை, ப்ளாவட்ஸ்கீ அம்மையார் எப்படி சிறிது நேரத்தில் வரவழைத்தார் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது. ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஒரு மகாத்மா உதவியுடன் வரவழைத்ததாகச் சுருக்கமாகச் சொல்லி நிறுத்திக் கொண்டார்.  

 

(தொடரும்)

என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி

 


 

 

3 comments:

  1. நன்றி சார்... எனக்கும் வியப்பாக இருக்கிறது இது எப்படி சாத்தியமானது என்று... படிக்க படிக்க இவற்றை அறிய தெரிந்து கொள்ள மட்டுமே முடிகிறது... இது எப்படி சாத்தியமானது என்று புரியவில்லை

    ReplyDelete
  2. தங்களது கதைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

    இதுபோன்று "ஆழமான சக்தி அடையும் வழிகள்" என்ற

    கட்டுரையையும் தொடராக வெளியிட முயற்சி செய்யவும்.

    வாங்க இயலாதவர்கள் படித்து பயன்பெற முடியும். நன்றி.

    ReplyDelete
  3. மிகவும் ஆச்சரியமாக உள்ளது... படிக்க படிக்க சுவாரஸ்யமாக உள்ளது...நன்றி...

    ReplyDelete