சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, October 10, 2016

ஏன் வாசிக்க வேண்டும்? எப்படி எழுத வேண்டும்?


ன் வாழ்க்கையில் நான் ஏதாவது கற்றிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் நூல்களே என்று தயங்காமல் கூறுவேன். ஒரு நல்ல நூல் சில சமயங்களில் நல்ல நண்பனாகத் துணை நிற்கிறது. சில சமயங்களில் நல்ல ஆசிரியனாகக் கற்றுத் தருகிறது. என் வாழ்வின் ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு கட்டத்திலும் இதை ஆத்மார்த்தமாக நான் உணர்ந்திருக்கிறேன். அந்த நூல்களை எழுதிய நல்ல உள்ளங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக இன்றளவும் நான் மானசீகமாக உணர்கிறேன். ‘எந்தரோ மகானுபாவலு அந்தரிகு வந்தனமுலு!

இன்று பாடப்புத்தகங்களைத் தவிர மற்ற புத்தகங்கள் படிப்பது வெகுவாகக் குறைந்து விட்டிருக்கிறது. ஒரு காலத்தில் புத்தகங்கள் பிடித்திருந்த இடத்தை இன்று தொலைக்காட்சியும் அலைபேசியும் பிடித்துக் கொண்டு விட்டது. ஆனால் புத்தகங்கள் தரும் நிறைவையும், பயனையும் அவை தருமா என்று நடுநிலையோடு யோசித்தால் இல்லை என்பதே முடிவான பதிலாக இருக்கும்.

சீரியஸான புத்தகங்களை மட்டும் நான் கூறவில்லை. நல்ல கதைகள், நல்ல நாவல்கள் கூட நல்ல அனுபவங்களையே நமக்குத் தரும். பொன்னியின் செல்வன் படிக்கையில் சோழ மண்ணிற்கே போனதாக ஒரு உணர்வு வரும். வந்தியத்தேவன், அருண்மொழிவர்மர், நந்தினி போன்ற பிரதான கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் பெரிய பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் போன்ற கதாபாத்திரங்களும் நம் மனக்கண் முன் உயிர்வடிவம் பெறுவார்கள். இங்கு கல்கியின் கற்பனையோடு நம் கற்பனையும் கைகோர்க்கும். அந்த கதாபாத்திரங்களோடு நாம் நீண்ட தூரம் பயணிப்போம். இப்படி மனக்கண்ணில் காட்சிகள் விரியும் போது, கற்பனா சக்திக்கும், ஆக்க சக்திக்கும் காரணமாக இருக்கும் வலது மூளையில் நல்ல அதிர்வலைகள் ஏற்படுவதாகவும், அந்தப் பகுதி சிறப்பாக இயங்க அது ஊக்கம் அளிக்கும் என்றும் மூளை விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இதையே நீங்கள் தொலைக்காட்சியிலோ, திரைப்படத்திலோ பார்க்கும் போது கற்பனைக்கு வேலையில்லை. மூளையின் வலது பாகத்திற்கும் வேலையில்லை. மேலும் புத்தகமாகப் படிக்கையில் மொழியறிவில் பாண்டித்தியம் தானாக நமக்கு ஏற்பட்டு விடுகிறது. இந்தப் பலன் தொலைக்காட்சியிலும், திரைப்படத்திலும் நமக்குக் கிடைப்பதில்லை. காட்சி ஊடகங்களில் ஒரு காட்சிக்கு அர்த்தம் ஒன்று தான். ஆனால் ஒரு உயர்ந்த நூலைப் படிக்கும் போதோ ஒவ்வொரு முறையும் ஒரு புது அர்த்தம் நமக்குக் கிடைக்கும். இப்படி எத்தனையோ சிறப்பு அம்சங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.   

அறிஞர்களின் நூல்களால் கிடைக்கும் பலன்களோ அளப்பரியது. நான் தளர்வுறும் போதெல்லாம், குழப்பமடையும் போதெல்லாம் அறிஞர்களின் நூல்களே என்னைத் தூக்கி நிறுத்தியிருக்கின்றன. தெளிவடையச் செய்திருக்கின்றன. ஒரு நல்ல நண்பனோ, ஆசானோ எல்லா நேரங்களிலும் நமக்கு அருகில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் மகத்தான நூல்கள் எந்த நேரத்திலும் நம்மிடம் இருக்க முடிந்தவை என்பதாலேயே அவற்றை நாம் வாங்கி நம்முடன் வைத்திருந்து நன்மைகள் பெற வேண்டும்.
  
ஒரு நூலகம் திறக்கப்படும் போது பத்து சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்று மகாத்மா காந்தி கூறியது மிகை வாக்கியம் அல்ல. இளமையில் மற்ற சூழல்கள் குறைபாடுடையதாக இருந்தாலும் நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இருந்தால் அந்தச் சூழல்களையும் மீறி ஒருவரை நல்நெறிப்படுத்தும். எனவே இளைஞர்களே மனதைக் குப்பையாக்காத  நல்ல புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மற்ற எது கைவிட்டாலும் நல்ல புத்தகங்கள் உங்களைக் கைவிடாது.

எனவே எல்லோரும் நூல்களைப் படியுங்கள். உங்கள் குழந்தைகளையும் படிக்கத் தூண்டுங்கள். பரிசுப்பொருள்களாக நல்ல நூல்களையே கொடுங்கள். இவ்வாறு ஒவ்வொரு வீட்டிலும் படிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவதே ஒரு மிக நல்ல சமூக மாற்றத்திற்கான அஸ்திவாரமாக இருக்கும்.

எழுத்தாளர்களுக்கும் மகத்தான பொறுப்புகள் உண்டு. எழுத்தாளர்களே, நல்லதை எழுதுங்கள். புரியும்படி எழுதுங்கள். சுவாரசியமாக எழுதுங்கள். உங்கள் எழுத்துக்களால் இளைஞர்களை வாசிப்புக்கு இழுத்து வாருங்கள். யதார்த்தம் என்ற பெயரில் கிளர்ச்சியாக எழுதுவதும், உண்மை என்ற பெயரில் மோசமான உணர்வுகளைத் தூண்டுவது போல் எழுதுவதும், அறிவுஜீவி என்ற பெயரில் எதுவும் எளிதில் விளங்காதபடி அலங்காரமாய் எழுதிக் குழப்புவதும் அந்தப் பெயர்களுக்கு நீங்கள் செய்யும் அவதூறே ஆகும்.
  
நூல்கள் கதைகளானாலும் சரி, கட்டுரைகளானாலும் சரி, கவிதைகளானாலும் சரி வாசித்து முடித்த பின் நல்ல உணர்வுகளை, படித்த வாசகனுக்கு ஏற்படுத்தித் தருகிறதா, நல்லுணர்வுகளை மனதில் தங்க வைக்கிறதா என்பது மட்டுமே நல்ல எழுத்தை நிர்ணயிக்கிறது. மீண்டும் ஒரு முறை படிக்கத் தூண்டும்படியும் அந்த நல்ல எழுத்து இருந்தால் அது தான் எழுத்தாளன் பெறும் சிறந்த அங்கீகாரம். ஒரு நூலைப் படித்து விட்டு இவர் வேறு என்னவெல்லாம் எழுதியிருக்கிறார் என்று தேடி அந்த வாசகன் மற்ற புத்தகங்களையும் படிக்கத் தூண்டினால் அதுவே அந்த எழுத்தாளனுக்குக் கிடைக்கும் மகத்தான விருது.

மற்ற பாராட்டுகளும், விருதுகளும், அபிப்பிராயங்களும் வெறும் ஆரவாரமே!

சரஸ்வதி பூஜை மற்றும் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!

என்.கணேசன்


7 comments:

  1. வாசிப்பதின் அருமையை நன்கு உணர்ந்து எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Happy Saraswathy Pooja to you and to your family members. Very nicely written about importance of nurturing reading habits, thanks for the nice article. You are one such personality we all learn from your writing. Thanks for your contribution. Keep writing...

    ReplyDelete
  3. சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் அண்ணா. அற்புதமான வரிகள் . அனுபவ உண்மை!

    ReplyDelete
  4. My Life very much influenced by Thirukkural and Readers' Digest (RD). You will never find Cigarette Advt. in RD. I learnt health risks of smoking and I developed total dislike for cigarettes. The unique feature of Thirukkural is the examples, which are independent of time, culture and technological advances. ..

    ReplyDelete