சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 19, 2013

பரம(ன்) ரகசியம் – 76



தென்னரசுக்கு சிவலிங்கத்தின் மேலே ஒரு வெட்ட வெளி தான் தெரிந்தது, அதன் பின்னால் இருந்த சுவர் உட்பட அறையே காணாமல் போய் அந்த வெட்ட வெளியில் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த நடனம் ஆடிக் கொண்டிருந்தார். இடப்பாக உமையவளின் அசைவுகளில் பெண்மையின் நளினம் இருந்தது என்றால் வலப்பாக சிவனின் அசைவுகளில் ஆண்மையின் கம்பீரம் தெரிந்தது. ஒவ்வொரு அசைவிலும் இயற்கையின் சக்திகள் பின்புறம் தாண்டவமாடின. ஒரு அசைவில் அக்னி ஜொலித்தது. நிஜமாகவே அந்த இடம் தீப்பிடித்துக் கொண்டது போன்ற பிரமை தென்னரசுக்கு ஏற்பட்டது. அந்த வெப்பத்தை அவர் நன்றாகவே உணர்ந்தார். சிவனின் அடுத்த அசைவில் அக்னி போய் பிரம்மாண்டமான சமுத்திரப் பேரலை தென்னரசுவை மூழ்கடிப்பது போல முன்னேறி வந்தது. தென்னரசு தன்னையறியாமல் பின்னுக்கு நகர்ந்தார். ஆனால் அது வெறும் தோற்றம் மட்டும் தான். ஆனாலும் தென்னரசு நனைந்து போயிருந்தார்.

தென்னரசுவிற்கு நெஞ்சு வெடித்து விடும் போல இருந்தது. ஆனால் சிவனின் அடுத்த முத்திரையில் சூறாவளிக் காற்று அடிக்க ஆரம்பித்தது. அந்தக் காற்றில் பறந்து விடுவோமோ என்று பயந்த தென்னரசு ஜன்னல் கம்பி ஒன்றைப் பலமாகப் பிடித்துக் கொண்டார். அந்தக் காற்றின் வேகம் அவரை ஜன்னலோடு ஒட்ட வைத்தது.  அந்தக் காற்றில் அவரும் அவரின் உடைகளும் உலர்ந்து போயின. தென்னரசுக்கு இந்த அனுபவம் மூளையைச் சிதறச் செய்வதாய் தோன்றியது. அத்தனையும் முடிந்தால் போதும் என்றிருந்தது.  

அப்போது தான் பசுபதி கண்களைப் பாதி மூடிய நிலையில் எதிரே இருந்த காட்சிகளைக் கண்டு அதில் லயித்துப் போயிருந்ததை தென்னரசு கவனித்தார். திடீரென்று சிவனின் தலையிலிருந்து பெரிய நீர்வீழ்ச்சியும், நெற்றிக் கண்ணில் இருந்து தீப்பிழம்பும், நாட்டிய அசைவிலிருந்து பெருங்காற்றும் ஏக காலத்தில் தோன்ற ஆரம்பித்தன. சிவனோடு சேர்ந்து அண்ட சராசரங்களும் ஓரு தாள லயத்துடன் நாட்டியம் ஆடுவது போன்ற ஒரு பிரமை தென்னரசுக்கு ஏற்பட்டது.

பசுபதி முழுவதுமாகக் கண்களை மூடிக் கொண்ட போது அத்தனையும் மறைந்து போய் எதிரே சிவலிங்கம் மட்டும் எதுவுமே நடந்திருக்கவில்லை என்பது போல இயல்பாகத் தெரிந்தது. தென்னரசு அடுத்த கணம் அங்கிருந்து ஓட்டம் எடுத்தார். அவர் நின்றது தெருக்கோடியில் தான். புத்தகங்களைக் கூட அவர் அந்தத் தோட்டத்திலேயே விட்டிருந்தார்.

அன்று காய்ச்சலில் படுத்தவர் அதில் இருந்து மீள ஒரு வாரம் தேவைப்பட்டது. அந்த ஒருவார காலத்தில் கனவில் எல்லாம் சிவ தாண்டவத்தை பல தடவை பார்த்தார். சங்கர் மறு நாளே அவரை வந்து பார்த்த போது ஏனோ தென்னரசுக்கு அதை நண்பனிடம் சொல்லத் தோன்றவில்லை. சொல்லாமல் இருந்ததற்கான காரணத்தை அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. தனக்கு மட்டுமே தெரிந்த அந்தக் காட்சி சங்கருக்கு அது வரை எப்போதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தது. தெரிந்திருந்தால் சங்கர் கண்டிப்பாக அவரிடம் சொல்லி இருப்பார். தனக்கு மட்டுமே தெரிந்த அந்த பிரம்மாண்டக் காட்சியை நண்பனிடம் கூடப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. நண்பனுக்கு அதிகம் தெரியாமல் இருப்பதே நல்லது என்று தென்னரசு நினைத்தார். பெரிய புதையலைக் கண்டுபிடித்தவன் அது பற்றித் தன் நெருங்கிய நண்பனிடம் கூடச் சொல்லத் தயங்கும் மனநிலையாக அது இருந்தது.

தற்செயலாகத் தனக்குத் தெரிந்த காட்சியில் ஏதோ பெரிய ரகசியத்தின் சூட்சுமம் மறைந்திருப்பதாக அவருக்குத் தோன்றியது. சங்கர் காதல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா போன பிறகு அவருக்கு அந்த சிவலிங்கத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருடைய இன்னொரு நண்பனான விஸ்வநாதனையே சங்கரின் தங்கை மீனாட்சி திருமணம் செய்து கொண்டதால் பரமேஸ்வரன் குடும்பத்தோடு இருந்த தொடர்பு விட்டுப் போகவில்லையே தவிர தோட்ட வீட்டுக்குப் போகும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

விஸ்வநாதன் மாமனாரின் கட்டாயத்திற்காகவும், மனைவியின் நச்சரிப்பிற்காகவும் எப்போதாவது நல்ல நாட்களில் தோட்ட வீட்டுக்குப் போய் பசுபதியையும் சிவலிங்கத்தையும் வணங்கி விட்டு வந்தாரே ஒழிய அவருக்கு மற்ற எந்த விதத்திலும் அங்கு போகத் தோன்றவில்லை. அதை அவர் வெளிப்படையாகவே தென்னரசுவிடம் சொல்லி இருக்கிறார்.

வருடங்கள் ஓடின. ஆனால் அந்த சிவலிங்கமும், அந்த சக்தி தாண்டவமும் தென்னரசால் மறக்கப்படவில்லை. அதைப் பற்றி யாரிடமும் அவர் பேசவுமில்லை. நீலகண்ட சாஸ்திரி எழுதிய ஆன்மிக பாரதம் புத்தகத்தை அவர் படிக்க நேரிட்ட போது விசேஷ மானஸ லிங்கம் பற்றித் தெரிந்தது. ஒளிரும் அந்த விசேஷ மானஸ லிங்கம் தான் தோட்ட வீட்டில் பசுபதி வணங்கிக் கொண்டிருக்கும் சிவலிங்கம் என்பதில் அவருக்குச் சந்தேகமே இல்லை.  ஆன்மிகத்திலும் அபூர்வ சக்திகளிலும் மிகத் தெளிவான ஞானம் இருந்த குருஜியிடம் போய் இதைச் சொல்லி விளக்கம் கேட்கத் தோன்றியது.

ஏழு முறை சென்று குருஜியைத் தரிசிக்க முடியாமல் திரும்பிய அவருக்கு எட்டாவது முறை தரிசனம் கிடைத்தது. குருஜியின் உதவியாளன் பத்து நிமிடத்திற்குள் பேசி முடித்து விட வேண்டும் என்று சொல்லித்தான் அவரை உள்ளே அனுப்பினான். அதனால் தென்னரசு நேரத்தை வீணாக்காமல் ஆன்மிக பாரதம் புத்தகத்தில் விசேஷ மானஸ லிங்கம் இருந்த பகுதியைச் சுட்டிக் காட்டி அந்த விசேஷ மானஸ லிங்கம் இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என்றும் அந்தப் புத்தகத்தில் இருக்கும் மற்ற தகவல்கள் எல்லாம் உண்மையா என்று அறிந்து கொள்ள ஆவலாக இருப்பதாகவும் சொன்னார்.

குருஜி அவரை உடனடியாக நம்பி விடவில்லை. அதனால் அந்த சிவலிங்கம் ஒளிர்வதைத் தான் பார்த்து இருப்பதாகவும் அந்த சிவலிங்கத்தை ஒரு சித்தர் தான் தன் நண்பன் வீட்டில் பல ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்து தந்தார் என்றும் தென்னரசு தெரிவித்தார். குருஜி கண்களில் ஒரு மின்னல் வந்து போனது.

தன் உதவியாளனை அழைத்து மீதமுள்ள பார்வையாளர்களை திருப்பி அனுப்பச் சொல்லி விட்டு தன் முழு கவனத்தையும் தென்னரசுவிடம் திருப்பினார். அன்று குருஜி அந்த சிவலிங்கத்தைப் பற்றியும், பசுபதியைப் பற்றியும் நிறைய கேள்விகளைத் தென்னரசுவிடம் கேட்டுத் தகவல்களைப் பெற்றுக் கொண்டார். குருஜியின் கூர்மையான அறிவிற்கு இன்னும் முக்கியமான தகவல் ஒன்றை தென்னரசு மறைப்பதாகத் தோன்றவே நேரடியாகக் கேட்டே விட்டார். ஏதோ ஒரு விஷயத்தை நீ இன்னும் மறைக்கிற மாதிரித் தெரியுதே   

தென்னரசு தயக்கத்துடன் சொன்னார். சொன்னால் நீங்க நம்புவீங்களோ இல்லையோ தெரியலை. அதான் சொல்லலை...

“பரவாயில்லை சொல்லு.

தென்னரசு தயக்கத்துடன் ஆரம்பித்தாலும் சொல்லும் போது அந்தக் காட்சியை மறுபடியும் காண்பது போல உணர்ந்தார். அவருடைய வார்த்தைகளில் இருந்த பயமும், பரவசமும், சொன்ன விஷயத்தின் தன்மையும் குருஜியை நம்ப வைத்தன. அந்தக் கணத்தில் ஒரு பலத்த கூட்டணி ஆரம்பமாகியது.

தென்னரசுவிடம் குருஜி தனக்கு முன்பே விசேஷ மானஸ லிங்கம் பற்றித் தெரியும் என்று காண்பித்துக் கொள்ளவில்லை. ஆனால் தென்னரசு சொன்னதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது அது தான் விசேஷ மானஸ லிங்கம் என்று நம்புவதில் தனக்குத் தயக்கம் இல்லை என்று சொன்னார்.

தென்னரசு தன் நெடுநாளைய சந்தேகத்தைக் கேட்டார். “குருஜி. நீங்க கடவுளுக்கு ஒரு குறிப்பிட்ட உருவம் கிடையாதுன்னு சொல்றதை நான் பல சொற்பொழிவுகள்ல கேட்டிருக்கேன். ஆனால் நான் பார்த்தது சிவனின் அர்த்தநாரீஸ்வரன் உருவத்தை. சிவனோட நாட்டிய அசைவுகள்லயே ரெண்டு பக்கமும் இருந்த நுணுக்கமான வித்தியாசங்களைக் கூட நான் கவனிச்சேன். அப்படின்னா அந்த உருவம் நிஜம் தான்னு ஆகுது தானே?

குருஜி தாமதிக்காமல் பதில் அளித்தார். “நீ பார்த்தது பசுபதியோட காட்சியை. அந்த மானஸ லிங்கம் யார் எந்தப் பார்வையில பார்க்கிறாங்களோ அந்தக் காட்சியைக் காட்டக் கூடிய சக்தி படைச்சது. ஒரு கிறிஸ்துவருக்கு அதுல லயிக்க முடிஞ்சுதுன்னா அவர் யேசு கிறிஸ்துவைப் பார்த்திருப்பார். ஒரு முஸ்லீம் அதுல லயிக்க முடிஞ்சிருந்ததுன்னா அல்லாவோட சக்திகளை அதில் பார்த்திருப்பார். ஸ்கிரீன் ஒன்னு தான் எந்தப்படம் போடறாங்களோ அந்தப் படம் ஸ்கிரீன்ல தெரியுது இல்லையா. அந்த மாதிரி தான் இதுவும். ஒரே வித்தியாசம் என்னன்னா அது வெறும் காட்சியா மட்டும் தான் இருக்கும். இதுல அது நிஜமாகவே நடக்கும்....

குருஜி தென்னரசுவை ஒரு வாரம் கழித்து வரச் சொன்னார். தென்னரசு இரண்டாவது முறை சென்ற போது ஜான்சனும் இருந்தார். விசேஷ மானஸ லிங்கத்தைத் தான் ஒரு முறை நேரில் பார்க்க வேண்டும் என்றும், பசுபதியுடன் பேச வேண்டும் ஜான்சன் விரும்பினார். பரமேஸ்வரன் குடும்பம் மூலமாகப் போக தென்னரசுவிற்குத் தயக்கம் இருந்தது. அப்படிப் போவதில் பல கேள்விகள் எழும்...

நேரடியாகவே போனால் என்ன என்று தோன்றி அவர் ஜான்சனை அழைத்துக் கொண்டு போனார். ஆனால் பசுபதி அவர்களைச் சந்திக்க மறுத்து விட்டார். ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்பினார்கள்.

குருஜி அந்த விசேஷ மானஸ லிங்கம் நினைத்ததை எல்லாம் ஏற்படுத்தித் தர முடிந்த பிரம்மாண்டமான சக்திகளைக் கொண்டது என்று தீர்க்கமாக நம்பினார். அந்த அளவு நம்பிக்கை ஜான்சனுக்கு இருக்கவில்லை.. சித்தர்கள் சக்தி மீது அவருக்கு நம்பிக்கை இருந்த போதிலும் சித்தர்கள் தங்கள் சக்திகளை அந்த விசேஷ மானஸ லிங்கத்தில் சேகரித்து வைத்திருக்க முடியும் என்றும் அதை வசப்படுத்திக் கொள்ள முடிந்தவர்கள் அந்த சக்திகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை நம்ப அவர் அறிவியல் அறிவு தடுத்தது. தென்னரசு கண்ட காட்சி கூட அவர் சந்தேகத்தைத் தீர்த்து விடவில்லை. தென்னரசுவிற்கே கூட அரைகுறையாய் தான் நம்பிக்கை வருகிற மாதிரி இருந்தது. ஆனால் குருஜியின் நம்பிக்கை மட்டும் உறுதியாக இருந்தது.

தென்னரசுக்கோ நம்பிக்கை வருவதும் போவதுமாக இருந்தது. அவருக்கு ஈஸ்வர் குருஜியிடம் எழுப்பிய சந்தேகம் போல் விசேஷ மானஸ லிங்கம் சித்தர்களின் சித்தப்படியே நடக்கும் ப்ரோகிராமாக இருக்குமோ என்ற பயம் இருந்தது. அப்படி இருந்து விட்டால், என்ன தான் அதைக் கடத்தி வைத்துக் கொண்டாலும் அது பலன் தராது என்று அவர் பயந்தார். அவருடைய ஒரே தைரியம் குருஜியாகத் தான் இருந்தார். அத்தனை கூர்மையான அறிவுக்குத் தெரியாத, புரியாத சக்திகள் இருக்க முடியாது என்று அடிக்கடி தனக்குள்ளே தென்னரசு சொல்லிக் கொண்டார். இந்த முதல் மாதிரி ஆராய்ச்சியில் கிடைத்த சிறிய வெற்றி பெரிய வெற்றிக்கு அஸ்திவாரமாய் இப்போது தான் நம்பிக்கை பிறந்திருந்தது....

விதி அவருக்கு இது நாள் வரையில் சாதகமாக இருந்தது இல்லை. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர் அப்படியே தன் நிலைமையை ஒத்தவர்களோடு மட்டும் பழகி இருந்திருந்தால் அது அவரை வெட்கப்பட வைத்திருக்காது. ஆனால் சங்கரைப் போன்ற பணக்கார நண்பனுடன் பழக ஆரம்பித்த போது தான் ஏழ்மையில் இழப்பது எத்தனை என்பது அவருக்குப் புரிந்தது. தமிழகத்தின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரின் மகன் என்ற கர்வம் சங்கருக்குச் சிறிதும் இருக்கவில்லை. சொல்லப்போனால் சங்கர் தன் பணக்கார அந்தஸ்து குறித்த பிரக்‌ஞையில் கூட இருக்கவில்லை. ஆனால் அந்த வீட்டில் மற்ற பெரியவர்களிடம் அது இருந்தது.

பரமேஸ்வரன் மகனின் நண்பன் என்ற ஒரே காரணத்தால் தென்னரசுவை மரியாதைக் குறைவாக நடத்தவில்லை என்ற போதும் தன் பணக்கார அந்தஸ்துக்கு தென்னரசு இணை அல்ல என்பதைப் பல முறை மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளதை தென்னரசு உணர்ந்திருக்கிறார். ஆனந்தவல்லியோ வெளிப்படையாகவே தீண்டத்தகாத நபரைப் பார்ப்பது போலத் தான் தென்னரசுவைப் பார்த்தாள். அப்போதெல்லாம் ‘எனக்கும் பணம் நிறைய இருந்திருந்தால்!....என்ற ஏக்கம் தென்னரசுக்கு ஏற்படும்.

படித்து முடித்து கல்லூரியில் ஆசிரியராக வேலை கிடைத்த பிறகு ஏழை, நடுத்தர வர்க்கமாக முடிந்ததே ஒழிய பணக்காரராக முடியவில்லை. சங்கரின் தங்கை மீனாட்சி அவரது இன்னொரு நண்பனைக் கல்யாணம் செய்து கொண்டு அந்த நண்பன் வீட்டோடு மாப்பிள்ளையாக செல்வந்தனாக மாறிய போது பொறாமையாக இருந்தது. சங்கரின் உயிர் நண்பனாக இருந்து சங்கருடனேயே எப்போதும் சுற்றிக் கொண்டிருந்தபடியால் மகனை நினைவுபடுத்திய தென்னரசுவை பரமேஸ்வரன் மருமகனாகத் தேர்ந்தெடுக்கவில்லை என்று தோன்றிய போது அதற்கும் அவர் விதியை நொந்து கொண்டார்.

விதி அவர் மனைவியையும் சீக்கிரமே பறித்துக் கொண்டது. தன் மகளையாவது பரமேஸ்வரன் தன் குழந்தைகளை வளர்த்தியது போல செல்வச் செழிப்பில் வளர்த்த ஆசைப்பட்டார். குழந்தைகள் நினைத்தவுடன் அதை வாங்கிக் கொடுக்க முடிந்த பரமேஸ்வரன் தான் அவருக்கு ஒரு உதாரணத் தந்தையாக இருந்தார். ஏனென்றால் அதை அவர் சங்கருடன் கூடவே இருந்து பல முறை பார்த்திருக்கிறார்.  ஆனால் அவருடைய நிலைமை, மகள் ஆசைப்படுவதில் ஒன்றிரண்டை வாங்கித் தருவதில் கூட சிரமத்தை ஏற்படுத்துவதாய் இருந்தது. இயல்பிலேயே நல்ல பெண்ணான விஷாலி நிலைமையை உணர்ந்து தந்தையிடம் கேட்பதையே தவிர்த்தாலும் அவருக்கு அதைப் புரிந்து கொள்ள முடிந்ததால் இதயத்தின் ஆழத்தில் வலித்தது.     

காலம் பல கழிந்து மகேஷ் விஷாலியைக் காதலிக்க ஆரம்பித்த போது மீண்டும் அவர் ஆசைகள் துளிர்த்தன. சங்கரும், சங்கரின் மகனும் என்றுமே இந்தியா வரப்போவதில்லை, சகல சொத்துக்கும் அதிபதியாக மாறப் போகிறவன் மகேஷ் தான் என்பதால் அவன் காதலை அவர் வரவேற்றார். விஷாலி அவனை நல்ல நண்பனாகத் தான் நினைத்தாள் என்றாலும் அவன் காதலைக் கண்டிப்பாக நிராகரிக்க மாட்டாள் என்று எடை போட்டிருந்தார். ஆனால் மகேஷ் பரமேஸ்வரனுக்குப் பயந்து தன் காதலை விஷாலியிடம் சொல்வதைக் கூடத் தள்ளிப் போட்ட போது மறுபடி ஏமாற்றமாக இருந்தது. ஆனந்தவல்லியே சாகவில்லை, அப்படி இருக்கையில் பரமேஸ்வரனும் பல காலம் வாழ்வார் என்றே தோன்றியது. அடுத்தவன் காசுக்காக இப்படிப் பிச்சைக்காரனாகக் காத்திருப்பதை விட நம்மிடமே பணம் வேண்டிய அளவு இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை அவர் மனதில் இருந்து கொண்டே இருந்தது.

விசேஷ மானஸ லிங்கம் ‘எல்லாம் தர முடிந்த கல்பதருஎன்று தெரிந்த போது முதல் முறையாக அவர் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளிக்கீற்று தெரிய ஆரம்பித்தது.

குறி சொல்லும் கிழவியின் வீட்டில் இருந்து திரும்பி வரும் போது பார்த்தசாரதி ஈஸ்வரிடம் சொன்னார். “அந்தக் கிழவி சொன்னதும் அந்த சித்தர் சொன்னதும் ஒத்துப் போகுது ஈஸ்வர். நீங்களே முயற்சி செய்து பாருங்க

ஈஸ்வர் தலையசைத்தான். முயற்சி செய்வதற்கு முன் தன்னை அமைதிப்படுத்திக் கொள்வதும் தன்னை சில விதங்களில் தயார்ப்படுத்திக் கொள்வதும் முக்கியம் என்பதை ஆராய்ச்சியாளனான அவன் உணர்ந்திருந்தான். அதற்கு அவனுக்கு சில மணி நேரங்கள் தேவைப்படும்...

“நான் நாளைக்குக் காலையில் ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன் சார்...

பார்த்தசாரதி சரியென்றார். “நானும் வரட்டுமா? இல்லை வேற யாரையாவது உங்கள் உதவிக்கு அனுப்பட்டுமா?

“உங்களுக்கு சிரமம் இல்லாட்டி நீங்களே வர்றது நல்லது சார்

“நானே வர்றேன். எனக்கு சிரமம் என்ன இருக்கு. இப்ப எனக்கு இந்த கேஸ்னாலன்னு இல்லை நிஜமாவே தனிப்பட்ட முறையிலயே சுவாரசியம் கிளம்பி இருக்கு....

அவன் நன்றியுடன் தலையசைத்தான். ஒரு நிமிடம் கழித்து அவராகவே சொன்னார். “நான் உறுதியா சொல்றேன் ஈஸ்வர். உங்களால கண்டிப்பா முடியும்... ஏன்னா நீங்க அந்தத் தோட்ட வீட்டுல ஒரு தடவை தியானத்துல உட்கார்ந்தீங்க ஞாபகம் இருக்கா, அப்ப எத்தனை சீக்கிரமாய் உங்களால தியானத்துக்குப் போக முடிஞ்சது... எனக்கு அப்ப அஜந்தா குகையில பார்த்த ஒரு புத்தர் ஞாபகம் வந்துச்சு. அந்த அளவு ஆழமா தியானத்துல நீங்க லயிச்சீங்க

ஈஸ்வருக்கு அந்த நேரத்தில் அந்த நம்பிக்கை வார்த்தைகள் நிறையவே தேவைப்பட்டன. மனதார சொன்னான். “தேங்க்ஸ் சார்

அன்றைய நாளை அவன் நினைத்துப் பார்த்தான். அன்று கிடைத்த தியான அனுபவம் அவனுக்கு அதற்கு முன் எப்போதும் கிடைத்திருக்கவில்லை. பின்பும் கிடைத்திருக்கவில்லை. அன்றைய அனுபவத்தின் முடிவிலும் கூட அவனுக்கு சிவலிங்கம் காட்சி அளித்திருந்தது. அந்த நேரத்தில் வேத கோஷம் கூடக் கேட்டுக் கொண்டிருந்தது....

திடீரென்று ஒரு உண்மை அவனுக்கு உறைத்தது. அன்றே சிவலிங்கம், தான் வேத பாடசாலையில் இருப்பதாகச் சொன்ன செய்தி தானோ அது, அதை அவன் தான் புரிந்து கொள்ளவில்லையோ?.... அவன் சம்பந்தப்பட்டவன் என்பதால் தான் விசேஷ மானஸ லிங்கம் அவனை நினைவுபடுத்திக் கொண்டே இருந்ததோ?

(தொடரும்)
என்.கணேசன்
  

23 comments:

  1. The concept of Arthanareeswarar dancing is VERY UNIQUE and RARE.. VERY THRILLING AS USUAL.

    ReplyDelete
  2. அந்த மானஸ லிங்கம் யார் எந்தப் பார்வையில பார்க்கிறாங்களோ அந்தக் காட்சியைக் காட்டக் கூடிய சக்தி படைச்சது. ஒரு கிறிஸ்துவருக்கு அதுல லயிக்க முடிஞ்சுதுன்னா அவர் யேசு கிறிஸ்துவைப் பார்த்திருப்பார். ஒரு முஸ்லீம் அதுல லயிக்க முடிஞ்சிருந்ததுன்னா அல்லாவோட சக்திகளை அதில் பார்த்திருப்பார். ஸ்கிரீன் ஒன்னு தான் எந்தப்படம் போடறாங்களோ அந்தப் படம் ஸ்கிரீன்ல தெரியுது இல்லையா. அந்த மாதிரி தான் இதுவும். ஒரே வித்தியாசம் என்னன்னா அது வெறும் காட்சியா மட்டும் தான் இருக்கும். இதுல அது நிஜமாகவே நடக்கும்..

    எத்தனை சக்திமிக்க மானச லிங்கம் ..! அருமையான தெளிவான விளக்கம் ..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  3. இப்படி ஒரு வாசிப்பு அனுபவத்தை தந்துக்கொண்டிருப்பதற்கு கோடானக்கோடி நன்றிகள்..........கணேசன் சார்.

    ReplyDelete
  4. ஆனந்த்குமார் அவர்கள் சொன்னது போல் இந்த நாவல் மிக அருமையான வாசிப்பு அனுபவம் தான். அர்த்தநாரீஸ்வரர் தாண்டவம் நேரில் பார்த்தது போல் மெய்சிலிர்ப்பு. வர்ணிக்க வார்த்தை இல்லை.

    ReplyDelete
  5. Ganesan sir, panam illatha ulagam vendum endru aasaiya iruku. Ethanaiyo kutrangaluku in tha panamae karanamagi vidukirathu. sankar pola panathai oru porutaga mathikatha panakkarargal romba kammi. endru marumo?

    ReplyDelete
  6. Guruji's character is beautifully shown as confident and knowledgeable. It is sad that he is in wrong side. Very excellent novel. Please continue

    ReplyDelete
  7. Nalla irukku ... but Flashback la idhellam solluvadhal Bore adikkiradhu ... sorry last few weeks stories la oru munnetramum illai

    ReplyDelete
    Replies
    1. I don' think so. It is not action novel. In this spiritual thriller each character is woven beautifully. In this chapter what made Thennarau to go in this way and how he and Guruji join hands. If it is not explained in this way we (readers) will not be convinced. Really this novel is a masterpiece I think.

      Delete
    2. சுவாமிநாதன்December 19, 2013 at 10:27 PM

      இந்த கதையின் நுணுக்கங்களை ஆழமாய் ரசித்து தொடரும் எனக்கு அப்படித் தோன்றவில்லை. நிகழ்வுகள் மட்டும் கதை அல்ல. அதன் பின்னணியும் கேரக்டர்களின் முடிவுகளுக்கு காரணங்களும் மிக முக்கியம். இந்த அத்தியாயம் இல்லா விட்டால் தென்னரசு கேரக்டர் வலுவில்லாமல் போய் இருக்கும். அது போலத் தான் முந்தைய அத்தியாயங்களும் ஒவ்வொரு விதத்தில் பல தெளிவுகளை ஏற்படுத்தி நன்றாகத் தான் போகிறது. மேலோட்டமாய் படிப்பவர்களுக்கு போரடிக்கலாம்.

      குருஜியின் விளக்கம் சூப்பர். இந்தக் கதையில் கணபதி போலவே குருஜியும் மனதில் நிற்கிறார்

      Delete
  8. Very interesting flashback...we could see why people were going into wrong path.. rather than being happy with whatever they blessed with :)... Keep rocking Ganeshan sir !!!

    ReplyDelete
  9. Missing Ganapathy, Anandavallai, Vishali in this episode:-) Good reasoning of why and how Thennarusu having relation with Guruji. Good going...

    ReplyDelete
  10. Hello sir,

    Very Interesting Novel... Great Job...

    ReplyDelete
  11. flash black makina turning point, character thennarsu and moving of the story...
    Very interesting to read and the way of writing ...

    ReplyDelete
  12. Very interesting Flashback.. Parama Ragasiam... Exploring story style eager to read..

    Enkay

    ReplyDelete
  13. திரு கணேஷ் அவர்களுக்கு வணக்கம்,
    ஆரம்பத்தில் சாதாரன ஒரு கதையாய்
    மட்டுமே படித்து ரசித்து வந்த நான்
    20 வது அத்தியாத்தில் இருந்து எனக்கு
    சில புரியாத மனநிலைமை உணர்ந்தேன்
    கடந்த 5 அத்தியாங்களில் பாதி படிக்கும் போதே
    மயக்க நிலை அல்லது தூக்கம் இதை எப்படி
    வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்!
    மீண்டும் தொடரவே முடியவில்லை இதை
    நான் முயற்ச்சித்து இரண்டு மூன்று நாட்கள்
    விடாமல் படித்து முடிக்க வேண்டியது
    ஆகிறது>
    இதை பதிவது எனக்கு மட்டுமே நிகழ்கிறதா
    அல்லது வேறு சிலருக்கும் நடக்கிறதா என்பதை
    அறியவே?

    ReplyDelete
    Replies
    1. எம் அனுபவம் எப்படி என்றால் அன்பரே .., சில விஷியங்களை படிக்கும்/கேட்கும்/பார்க்கும் போது உடல் சிலிர்க்கும் .., மிகச் சில விஷியங்களை படிக்கும்/கேட்கும்/பார்க்கும் போது மட்டும் உடல் சிலிர்ப்ப்போடு கண்களில் தாரைதாரையாக கண்ணிர் வரும் இந்த அத்தியாயம் முழுக்க முழுக்க அப்படியே சென்றது ........,

      Delete
  14. சரோஜினிDecember 21, 2013 at 11:14 PM

    வியாழன் எப்போது வரும் என்று காத்திருக்கும் அளவு கதையுடனும், கதாபாத்திரங்களுடனும் நான் ஒன்றி விட்டேன். இனியும் 15 அத்தியாயம் தான் உள்ளது என்றவுடன் வருத்தமாகி விட்டது. அவசரமாய் முடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  15. இப்பவும் முதல் அத்தியாத்தை வாசிக்க ஆரம்பித்தால் உடல் சிலிர்ப்ப்போடு கண்களில் தாரைதாரையாக கண்ணிர் வரும் ..., இது போன்ற “opening” அத்தியாயம் எங்கும் அமையாது என்று தான் சொல்ல வேண்டும் ..

    “முதல் அத்தியாய சம்பவம் மட்டும் கட்டாயமாக அச்சு பிசராமல் ஏற்கனவே எங்கோ நிகழ்ந்திருக்கும்” என்பது மட்டும் எம் அசைக்க முடியாத ஃfaith “

    ReplyDelete
  16. இந்த அத்தியாய imageயை பார்த்தால் மானச லிங்கப் பேரொளியை நோக்கி ஈஸ்வ்ர் ஆயத்தமாகி நடைபோடுவதாக அழகாக இருக்கிறது.., உடல் அமைப்பு கூட ஈஸ்வர் போலவே உள்ளது.... கணேசன் சார்

    ReplyDelete
  17. mahesh ku money problem ella then y he joined wrong side

    ReplyDelete