சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 5, 2013

பரம(ன்) ரகசியம் – 74



பாபுஜிக்கு கணபதி கிண்டல் செய்வது போல் தோன்றியது. ஜான்சன் முகத்தில் ஈயாடவில்லை. அவருக்கு கணபதி சொன்னது பெரிதாய் பாதிக்கவில்லை. அந்த பைரோமீட்டர் உலோகங்கள் உருகும் போது அந்த வெப்பத்தைக் கணக்கிடக் கூடியது. ஒளியிலும் பல ஆயிரம் வாட்ஸ் வரைக்கும் துல்லியமாக அது அளக்கும் என்று தயாரித்த நிறுவனம் சொல்லி இருந்தது. அப்படிப்பட்ட உயர் அளவுகளை அளக்க முடிந்த மெஷின் தன் உச்ச அளவு வரை அளந்து விட்டு செயல் இழந்து போனது ஜான்சனுக்கு ஏமாற்றமாய் இருந்தது. தென்னரசுவும் மகேஷும் கலவரத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

கணபதி சத்தமாய் சொன்னதைக் கேட்ட பிறகு நால்வரின் தியானம் கலைந்ததால் அவர்கள் ஆல்ஃபா அலைகளில் இருந்து பீட்டா அலைகளுக்கு வந்தனர். குருஜியின் பார்வை பைரோ மீட்டரில் தங்கிப் பின் கணபதியிடம் சென்றது. தன்னருகே கணபதியை அவர் அழைத்தார்.

கணபதி அருகே வந்த பிறகு கனிவாகச் சொன்னார். “கணபதி. இங்கே ஆராய்ச்சி நடக்கறப்ப சத்தமா பேசவே கூடாது. அப்படிப் பேசினா ஆராய்ச்சிக்குத் தடங்கல் ஆயிடும். அப்புறம் உன்னோட சிவனை சரியா ஆராய்ச்சி செய்ய முடியாது. அந்த மெஷின் ரிப்பேரானா என்ன மத்த மெஷின்கள் இருக்கல்லவா? ஆராய்ச்சிக்கு அது போதும் சரியா?

தன்னால் ஆராய்ச்சிக்குத் தடங்கல் வந்து விட்டது கணபதிக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது. இனி பேச மாட்டேன் என்கிற மாதிரி கைகட்டி வாய் மேல் விரலை வைத்தான்.

புன்னகைத்த குருஜி அவனைப் போகுமாறு சைகை செய்து விட்டு ஜான்சனை அருகே அழைத்தார். ஜான்சன் அருகே வந்த போது மெல்ல சொன்னார். “அந்த பைரோ மீட்டர் வேலை செஞ்சிருந்தா தான் அது ஆச்சர்யம். அதனால கூட அளக்க முடியாத அளவு சக்தி இந்த சிவலிங்கத்துக்கு இருக்குன்னு நிரூபணம் ஆயிருக்கில்லையா, அது போதும். பழையபடி ஆரம்பிப்போம்.....

ஜான்சனுக்கு மனோ தைரியம் திரும்பியது. அவர் மற்ற மூன்று பேரையும் பார்த்து தொடரச் சொல்லி சைகை செய்தார். மறுபடி ஆரம்பித்தார்கள்.

நால்வரும் மறுபடி ஆல்ஃபா அலைகளுக்கு வந்தார்கள். மகேஷிற்கு இன்னொரு முறை சிவலிங்கம் ஒளிர்ந்து வேறெதாவது கோளாறை ஏற்படுத்தி விடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அவன் பயந்தபடி சிவலிங்கம் ஒளிரவில்லை.

கணபதி கம்ப்யூட்டர் திரையில் நெளி நெளியாய் கோடுகள் போவதையும், நெளிவுகள் குறைந்து கொண்டே வருவதையும்  வேடிக்கை பார்த்தான். நெளிவுகள் அதிகமாக இருப்பது நல்லதா, குறைவாக இருப்பது நல்லதா என்று அவனுக்குப் புரியவில்லை. சிவனை நோக்கி அமர்ந்தவர்கள் சிவனின் சக்தியை அளக்கும் குறியீடா அந்த நெளிவுகள் என்றும் தெரியவில்லை. சிவனை நேரடியாக அளக்கும் மெஷின் ரிப்பேரான மாதிரி இந்த மெஷின்களும் ரிப்பேராயிடக் கூடாது’  என்கிற பயத்தில் அவனும் இருந்தான்.

குருஜி விரைவிலேயே ஆல்ஃபா அலைகளின் கடைசியும், தீட்டா அலைகளின் ஆரம்பத்திலுமாய் (7, 8 சிபிஎஸ் அலைகளில்) சஞ்சரிக்க ஆரம்பித்தார். சரியாக 7 எண்ணில் சிவலிங்கத்தின் அலைகளுடன் ஓரளவு இசைவு ஏற்பட ஆரம்பித்தது.

அடுத்ததாக கியோமி ஆல்ஃபா அலைகளின் கடைசியில் அதாவது எட்டிலும், பிறகு ஹரிராம் தீட்டா அலைகளின் ஆரம்பத்தில் அதாவது ஏழிலும், அலெக்ஸி ஆல்ஃபா அலைகளின் ஒன்பதிலும் ஓரளவு இணைய ஆரம்பித்தார்கள். அவர்கள் அனைவராலும் அதற்கும் ஆழத்தில் கூட பயணிக்க முடிந்தாலும் தங்களை இழக்காமல் முழுக் கட்டுப்பாட்டுடன் அவர்கள் சௌகரியமாக இருக்க முடிந்த நிலைகள் அதுவாகத் தான் இருந்தது.  அவர்கள் வலது கை சுட்டுவிரலை மேலே உயர்த்த மகேஷ் வேகமாக அவரவர் இருந்த அலைகளைக் குறித்து வைத்துக் கொண்டான்.

நான்கு பேரும் ஒவ்வொருவராக ரோஜாவை நினைக்க ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் ஒரு அற்புதம் நிகழ ஆரம்பித்தது. ரோஜாவின் மணம் அங்கு பரவ ஆரம்பித்தது. ஜான்சன் பிரமிப்புடன் தென்னரசுவைப் பார்த்தார். தென்னரசுக்கு மயிர் கூச்செறிந்தது. பாபுஜிக்கு வெற்றி வெற்றி என்று கத்த வேண்டும் போல் இருந்தது. மகேஷ் பரபரப்புடன் இந்த மணம் கற்பனை அல்லவே என்று பல தடவை சரிபார்த்துக் கொண்டான்.

தியானநிலையில் இருந்த நால்வரும் இயல்பு நிலைக்குத் திரும்பினார்கள். அவர்கள் முகத்திலும் பிரமிப்பு தெரிந்தது. அவர்கள் மன அலைகளில் சிவலிங்கத்தின் சக்தியோடு லயிக்க முடிந்த நிலையில் தங்கள் கட்டுப்பாட்டை உறுதி செய்து கொள்ள முன்பே நிச்சயித்த ஒரு பெயரை நினைத்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார்களே ஒழிய, அந்தப் பெயரை நினைத்தவுடன் அந்தப் பொருளின் சாரத்தை அந்த இடத்தில் உணர முடியும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.....

கணபதிக்கு மட்டும் ரோஜா மணம் வந்ததன் காரணம் விளங்கவில்லை. ‘இவங்கள்ல யார் செண்ட் அடிச்சிருக்காங்க?என்று ஒவ்வொருவரையும் பார்க்க ஆரம்பித்தான்.

குருஜி பெருமையுடன் விசேஷ மானஸ லிங்கத்தைப் பார்த்தார். விசேஷ மானஸ லிங்கம் அவர்கள் வசமாக ஆரம்பித்து விட்டது.

ணவன் பிறந்து வளர்ந்த அந்த வீட்டில் முதல் முதலாகக் காலடி எடுத்து வைத்த போது கனகதுர்கா நிறையவே உணர்ச்சி வசப்பட்டாள். அவளுடன் வந்து விட்ட பிறகு அவளுடைய கணவன் அந்த வீட்டில் திரும்பவும் காலடி எடுத்து வைக்கவில்லை. அதை நினைக்கையில் மனம் கனத்தது. கண்கள் கசிந்தன. உடலும் பலவீனமானது போல் உணர்ந்த கனகதுர்கா மகன் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.

ஈஸ்வர் தாயின் பிடி இறுக்கத்திலேயே அவள் மனநிலையை உணர்ந்தான். அவள் முக மாற்றத்தைப் பார்த்த போது மற்றவர்களும் உணர்ந்தார்கள். ஆனந்தவல்லி உடனடியாகச் சொன்னாள். “துர்கா நீ ரூமுக்குப் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோம்மா. அப்புறம் பேசலாம்....

கனகதுர்கா மெள்ள தலையசைத்தாள். ஈஸ்வர் தாயைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றான். அவள் தளர்ச்சியுடன் போவதைப் பார்த்த பரமேஸ்வரனுக்கு மனதை என்னவோ செய்தது. என்ன தான் இப்போது அவர் மனம் மாறினாலும், முந்தைய செயல்களின் விளைவுகளை அவர் சந்தித்துத் தானாக வேண்டி உள்ளது.

‘வீடு வெறும் வசிக்கும் இடம் மாத்திரம் அல்ல. வசித்தவர்கள், வசிக்கிறவர்கள் நினைவுகளையும் அது தன்னிடம் தக்க வைத்துக் கொள்வதால் அது நினைவுகளின் கூடாரமும் கூட.’  கணவரின் அறைக்குள் நுழைந்தவுடன், அங்கிருந்த புகைப்படங்கள், அவர் வாங்கிக் குவித்திருந்த கோப்பைகள், பதக்கங்களைப் பார்த்தவுடன், அணை திறந்த வெள்ளம் போல் கனகதுர்காவின் துக்கம் வெளிப்பட்டது. மகனைக் கட்டிக் கொண்டு அவள் அழுதாள். ஈஸ்வரும் கண்கலங்கினான்.

அவள் அழும் சத்தம் வெளியே கேட்ட போது பரமேஸ்வரனும் தளர்ந்து போனார். ஹாலில் இருந்த நாற்காலியில் சரிந்து உட்கார்ந்து கொண்ட அவர் கண் கலங்க மீனாட்சியிடம் கேட்டார். “உன் அண்ணன் என்னை மன்னிப்பான்னு தோணுதா மீனாட்சி

மீனாட்சி கண்கலங்க தந்தையிடம் சொன்னாள். “அப்படி எல்லாம் சொல்லாதீங்கப்பா. அண்ணன் ஆத்மா எந்த உலகத்துல இருந்தாலும் இப்போ தான் சாந்தி அடைஞ்சிருக்கும்ப்பா...

இது போன்ற சந்தர்ப்பங்களில் உணர்ச்சிப் பிரவாகங்கள் சர்வசகஜம் என்று நினைத்தவளாய் ஆனந்தவல்லி தனது அறைக்கு இளைப்பாறச் சென்றாள். காலையில் சீக்கிரம் எழுந்திருந்ததால் அவளுக்குக் களைப்பாக இருந்தது. இளைப்பாறி விட்டு கனகதுர்காவிடம் பேச அவளுக்கு நிறைய இருந்தது.

சங்கரின் அறையில் கனகதுர்கா அழுகையினூடே மகனிடம் சொன்னாள். “உங்கப்பா எல்லாமே விட்டுட்டு என் கூட வந்தாலும் இந்த வீடு, அவரோட அப்பா, தங்கச்சி இவங்களை விட்டுட்டு மனசளவுல அவரால வர முடிஞ்சதில்லை ஈஸ்வர். இந்த வீட்டுக்கு என்னைக் கூட்டிகிட்டு வர முடியலைங்கற மனத்தாங்கல் அவருக்கு எப்பவுமே இருந்துச்சுடா. இன்னைக்கு இங்கே நான் வந்திருக்கேன். அவர் இல்லையேடா ...

ஈஸ்வர் சொன்னான். “அம்மா, அப்பா இப்ப நம்ம கூட தான் இருக்கார்ம்மா. நான் இந்த ரூம்ல ஃபீல் செய்திருக்கேன்.... அப்பா ஃபோட்டோவைப் பாரு. அவர் உன்னையே பார்த்துட்டு இருக்கார்....

கனகதுர்கா அவன் காட்டிய புகைப்படத்தைப் பாத்தாள். அது சங்கரின் இளமைக்காலப் புகைப்படம். அவரை முதல் முதலில் அவள் சந்திக்கும் போது அப்படி தான் இருந்தார்.... அவன் சொன்ன படியே அவர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தது போலத் தான் இருந்தது. கண்கள் பனிக்க சிறிது நேரம் அதையே பார்த்துக் கொண்டு மனதில் அவருடன் நிறைய பேசினாள். அவருடைய வீட்டில் அவருடைய அறையில் அவள் அவருடன் பேசிக் கொண்டிருக்க ஈஸ்வர் தாயையே பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தான்.

இந்த அளவு நேசிக்கும் மனைவியைப் பெற அப்பா நிறையவே கொடுத்து வைத்தவர் என்று தோன்றியது. அனாவசியமாக நெருஞ்சி முள்ளாய் விஷாலி நினைவு இடையில் வந்தது. எல்லோருக்கும் எல்லா கொடுப்பினைகளும் இருப்பதில்லை என்று நினைத்தவனாய் விஷாலி முள்ளைத் தன் மனதில் இருந்து எடுத்து எறியப் பார்த்தான். ஆழமாய் செருகி இருந்த அந்த முள்ளை அவ்வளவு சுலபமாய் அகற்ற அவனால் முடியவில்லை.

கனகதுர்கா இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு அவளும் ஈஸ்வரும் நிறைய நேரம் சங்கரைப் பற்றிப் பேசினார்கள். பேச்சின் இடையில் அடிக்கடி சங்கரின் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டார்கள். சில சமயங்களில் சங்கர் அங்கு இருப்பது போலவே இருவரும் உணர்ந்தார்கள். முடிவில் மனம் லேசாகி மௌனமாகவே சிறிது நேரம் அமர்ந்திருந்தார்கள்.....

ன் உயரதிகாரி தந்திருந்த தகவல்களை அலசி ஆராய்ந்து தன் பங்குக்கு பார்த்தசாரதியும் அந்த ஒன்பது வெளிநாட்டவர்கள் பற்றி மேலும் நிறைய தகவல்களை சேகரித்து வைத்திருந்தார். எட்டு வெளிநாட்டவர்கள் சில மணி நேரங்களுக்கு மேல் அந்த நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தவர்கள், ஒரு வெளிநாட்டவர் ஒரு மணி நேரம் அங்கு வந்து போனவர்.
அந்த எட்டு பேரும் அவரவர் நாடுகளில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள் என்றாலும் பார்த்தசாரதியை அவர்களை விட அதிகம் யோசிக்க வைத்தவர் ஜான்சன் என்ற உலகப் புகழ்பெற்ற மனோதத்துவம் மற்றும் ஆழ்மனசக்தி ஆராய்ச்சியாளர் தான்.  

அமெரிக்காவில் இருந்து மும்பை வந்த ஜான்சன் ஏன் அந்த நட்சத்திர ஓட்டலுக்குப் போனார், அங்கு இருந்த ஒரு மணி நேரத்தில் என்ன செய்தார்  என்பதை அவரால் ஊகிக்க முடியவில்லை. மும்பையில் இருந்து இங்கு ஏன் வந்தார் என்பதும் புரியாத புதிராக இருந்தது. ஜான்சன் கலந்து கொள்ளக்கூடிய விழாக்கள் ஏதாவது இருக்கின்றனவா என்று நகரத்தில் உள்ள பெரிய மனோதத்துவ அறிஞர்களை விசாரித்துப் பார்த்தார். அப்படி நிகழ்ச்சிகள்  எதுவும் இருக்கவில்லை.

ஜான்சனுடைய பாஸ்போர்ட் தகவலை வைத்து ஆராய்ந்ததில் அவர் இந்தியாவுக்குப் பல முறை வந்து போயிருக்கிறார் என்பது தெரிந்தது. அதனால் அவர் சுற்றுலாவுக்கு வந்தவர் போலத் தோன்றவில்லை. அவர் தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலைக் கண்டுபிடித்து அங்கும் சென்று பார்த்தசாரதி விசாரித்துப் பார்த்தார். இரண்டு நாள் முன்பு போன ஜான்சன் பின் திரும்ப வரவே இல்லை என்று தெரிந்தது. அவர் அறையைக் காலி செய்யவும் இல்லை....

ஜான்சன் ரிசப்ஷனில் சாவியைக் கொடுத்து விட்டுப் போயிருந்தார். பார்த்தசாரதி ரகசியமாக அவர் அறையைச் சோதித்துப் பார்த்தார். இரண்டு சூட்கேஸ்களில் அவருடைய உடைகள் மட்டும் இருந்தன. சந்தேகத்திற்கிடமாக எதுவும் கிடைக்கவில்லை.  அந்த நட்சத்திர ஓட்டலில் அந்த அறையைக் கண்காணிக்க பார்த்தசாரதி ஏற்பாடுகள் செய்து விட்டு வந்தார். ஈஸ்வர் வரும் வரை பல கோணங்களில் யோசித்த அவருக்கு ஜான்சன் மீது சந்தேகம் நிலைத்தது.

ஈஸ்வர் வந்தவுடன் அவனிடம் எல்லாத் தகவல்களையும் சொல்லி விட்டு அவன் அபிப்பிராயத்தைக் கேட்டார். அவனுக்கு என்ன நினைப்பது என்றே சிறிது நேரம் விளங்கவில்லை.

ஜான்சன் மேல உங்களுக்கு என்ன சந்தேகம் சார்?ஈஸ்வர் கேட்டான்.

“அந்த ஆள் ஏன் இங்கே வந்திருக்கார்னு தெரியலை. இப்ப எங்கே இருக்கார்னும் தெரியலை. அதே மாதிரி சிவலிங்கம் எங்கேன்னும் தெரியலை, குருஜி எங்கேன்னும் தெரியலை.

அவர் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதாக ஈஸ்வருக்குத் தோன்றியது. “அதனால என்ன?

பார்த்தசாரதி சொன்னார்.  காணாமல் போன சிவலிங்கம் அபூர்வ சக்தி வாய்ந்ததுன்னு சொல்றாங்க. ஜான்சன் உங்களை மாதிரியே அபூர்வமான சக்திகளை ஆராய்ச்சி செய்யறவரு. ஒரே நேரத்தில் சிவலிங்கமும் அவரும் காணோம்னா, எங்கேன்னு தெரியாட்டியும் ஒரே இடத்துல இருக்கலாம்னு தோணுது.... ஈஸ்வர் இப்படி யோசிச்சுப் பாருங்க. அந்த சிவலிங்கத்தோட சக்திகள் பத்தி கேள்விப்பட்டு யாரோ திருடிகிட்டுப் போயிட்டாங்க. ஆனால் அந்த சக்திகளை எப்படிப் பயன்படுத்தறதுன்னு அவங்களுக்குத் தெரியலை.  அப்படி இருக்கறப்ப அவங்க என்ன செய்வாங்க. அந்த சக்திகளை உபயோகப்படுத்தறது எப்படின்னு சம்பந்தப்பட்ட எக்ஸ்பர்ட் கிட்ட தானே கேட்டுத் தெரிஞ்சுக்குவாங்க? ஜான்சன் அதற்கேத்த ஆள் தானே?

ஈஸ்வர் சொன்னான். “சார். அவர் கிட்டத்தட்ட என்னை மாதிரியான ஆராய்ச்சியாளர் தான். என்னை விட அறிவும், அனுபவமும் அதிகமாய் இருக்கிற ஆள்னே சொல்லலாம். நாங்க ரெண்டு பேரும் மனிதனின் ஆழ்மனசக்தியை ஆராய்ச்சி செய்யறவங்க. பொருள்களை ஆராய்ச்சி செய்யறவங்க இல்லை. மனிதனோட ஆழ்மன சக்தியால ஜடப்பொருள்களை எப்படி எல்லாம் இயக்க முடியும்னு எல்லாம் ஆராய்ச்சி நடந்திருக்கு.  உதாரணத்துக்கு சொல்லணும்னா நிலாகுலாகினாங்கற ரஷ்யாக்காரம்மாவும் யூரி கெல்லர்ங்கற இஸ்ரேல்காரரும் மனோசக்தியாலயே பொருள்களை நகர்த்தினதையும், வளைச்சதையும் ஆராய்ச்சி செய்திருக்காங்க. ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்து பேராசிரியர் ராபர்ட் ஜான்ங்கறவர் எலக்ட்ரானிக் கருவிகளைக் கூட மனோசக்தியால நினைக்கிற மாதிரி இயக்க வைக்கலாம்னு கூட ஆராய்ச்சி மூலமா கண்டு பிடிச்சிருக்கார். இப்படி எல்லா ஆராய்ச்சியுமே மனிதனோட மனோசக்தி பத்தி தான் நடந்திருக்கே ஒழிய கடவுள் சிலைகளோட சக்தி பத்தியோ, வேற ஜடப் பொருள்களோட சக்தி பத்தியோ நடக்கலை. அப்படி இருக்கிறப்ப சிவலிங்க சக்தி பத்தி தெரிஞ்சுக்க அவங்க ஜான்சனைக் கேட்கறதுல அர்த்தமே இல்லையே

பார்த்தசாரதிக்கு அவன் சொல்வதும் சரியாகத் தான் பட்டது என்றாலும் ஜான்சன் இந்த சமயத்தில் சரியாகத் தெரிந்த காரணம் இல்லாமல் இங்கு வந்ததும், அப்படி வந்தவர் ஏறத்தாழ சிவலிங்கத்தோடு குருஜி காணாமல் போன சமயத்திலேயே தலைமறைவானதும் தற்செயலானதாக நினைக்க அவர் மனம் மறுத்தது.

அதை அவர் அவனிடம் சொன்ன போது அவனும் யோசித்தான்.  அவனுக்குக் குழப்பமாகவே இருந்தது.

திடீரென்று அவன் கண்கள் முன்னால் இருந்த பார்த்தசாரதி மறைந்து வேறு காட்சி தெரிந்தது. அந்தரத்தில் சிவலிங்கம் மிதந்து கொண்டிருந்தது. வேதபாடசாலையில் தெரிந்ததற்குப் பிறகு அவன் காட்சியில் சிவலிங்கம் வருவது நின்று போயிருந்தது. ஆனால் இப்போது மறுபடியும் தத்ரூபமாகத் தெரிந்த சிவலிங்கம் திடீரென்று கீழே இறங்க ஆரம்பித்தது.... இல்லை இல்லை விழுந்து கொண்டிருக்கிறது... அதனுடன் சேர்ந்து கணபதியும் கீழே விழுந்து கொண்டிருக்கிறான்..... அதள பாதாளத்தில் விழுந்து கொண்டிருக்கும் அவர்கள் சிறுத்துக் கொண்டே போய் அவன் பார்வையில் இருந்து முழுவதுமாக மறைந்து போனார்கள்.

ஈஸ்வர் அதிர்ந்து போனான். உடல் நடுங்க, முகம் வெளுக்க எழுந்து நின்ற அவன் ஒருசில வினாடிகளில் அந்தக் காட்சி மறைந்து முடிந்த போது அவன் வியர்வையில் தொப்பலாக நனைந்திருந்தான்.

பார்த்தசாரதி திகைத்துப் போனார். “ஈஸ்வர் உங்களுக்கு என்னாச்சு?

(தொடரும்)


என்.கணேசன் 

21 comments:

  1. கணபதிக்கு ஏதேனும் ஆபத்து நிகழ்ந்திருக்குமோ....??!

    ReplyDelete
    Replies
    1. I think the scene gives a warning to Eshwar that the Linga & Ganeshan have just started to fall(?) for the opposite party...which of course impossible..but a strong warning to take immediate steps...(sorry, cldnt write in tamil)

      Delete
    2. yuuup..itz Ganapathy...

      Delete
  2. மிக மிக விறுவிறுப்பாக செல்கிறது.
    அடுத்த பகுதிக்காக இப்பொழுதே
    மனம் ஆவலாக உள்ளது.

    ReplyDelete
  3. அந்த மூன்றாம் நம்பர் பார்த்தசாரதியாக இருப்பாறோ??

    ReplyDelete
    Replies
    1. மூன்றாவது நபர் குருஜியாக இருப்பார் என்று நினைக்கிறேன்.

      Delete
    2. உதயன் என்று நான் நினைக்கிறேன்..........

      Delete
  4. “ வீடு நினைவுகளின் கூடாரம்”

    “ சிவலிங்கமும் கணபதியும்” கிழே விழுந்து கொண்டிருக்கிறார்கள்”

    extraordinary awesome… sir…

    கணேசன் சார் நீங்க “ஆல்ஃபா” அலைகளையும் தாண்டி .. ஆல்ப்ஸ் மலையில் சஞ்சரிக்கும் சித்தர்களின் அலைகளில் இனைகிறீர்கள் போலும்..

    அருமை தொடருங்கள் வாழ்த்துக்கள்...,

    ReplyDelete
    Replies
    1. உண்மை. கண் முன்னே நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்து எழுதுவது போல் கணேசன் சார் எழுதுகிறார். பக்கத்தில் இருந்து பார்ப்பது போல் நாமும் உணர்கிறோம். அறிவுபூர்வ ஆராய்ச்சிகளிலும், உணர்ச்சிபூர்வ குடும்ப நிகழ்வுகளிலும் ஒரே போல் தேர்ச்சியாக எழுத முடிவது சுலபமல்ல. ஆனால் பரமன் ரகசியத்தில் எல்லாமும் கச்சிதம். வாழ்த்துக்கள்.

      Delete
    2. You are a Absolutely right Vishnu sir..

      நம் எல்லோரையும் அவருடைய எந்த படைப்புக்களாக இருந்தாலும் ஒரு வரிபடித்தவுடன் கண்முன் நிகழ்ச்சிகள் “ஒட ஆரம்பித்து விடுகின்றன”

      Ganeshan sir.. எந்த அலைகளில் “tune” ஆகி தனது எழுத்துக்களை எழுதுகிறார் என்பது தான் “பர(ம)ன் ரகசியத்தை விட பரப்பிரம்ம ரகசியமாக உள்ளது “...,

      ஆன்மீக புத்தகம் ஒன்றில் படித்த ஒரு விஷியம் இது “ காகுத்த மஹரிஷி சனீஸ்வர லோகத்து மாமுனிவர் ., இவர் எத்தகைய உலக நிகழ்வுகளையும் பிரபஞ்ச்ச் சம்பவங்களையும் தான் இருக்கும் இடத்தில் இருந்தே மனக்கண்ணால் காண வல்லவர் .,

      இம்மாமுனிவர் வரைந்த ஒவியங்கள் அழியாச் செல்வமாய் மாளிகைத் திடல் தலத்தில் அக்காலத்தே திகழ்ந்தன , உதாரணமாய் ., காகுத்தர் மயில் வடிவை வரைந்திட்டால் , அது குறித்த ஜீவ சக்தி நேரத்தில் எழுந்து , பறந்து போகும் . பூச்செடி வரைந்தால் ,அதுவும் குறித்த பட்ச ஹோரை நேரத்தில் வளர்ந்து பூக்கத் தொடங்குமாம் “

      இதை படிக்கும் போது கணேசன் சாரை தவிர்த்து யாரைத்தான் நினைப்பது....

      Delete
  5. பொன்னியின் செல்வன் கல்கியில் ஆரம்பத்தில் வந்த போது பரபரப்புடன் படித்த தலைமுறை என்னுடையது. அடுத்ததாக நான் அதே பரபரப்பில் படிக்கும் நாவல் பரம(ன்) இரகசியம். பாராட்டுகள். -ஞானசேகரன

    ReplyDelete
  6. Expecting next Thursday

    ReplyDelete
  7. Very interesting, waiting for next episode... keep rocking Ganeshan sir !!!!!!!!!

    ReplyDelete
  8. விறுவிறுப்பாகச் செல்கிறது...

    ReplyDelete
  9. Very interesting story sir... Keep it up with same tempo..............

    ReplyDelete
  10. அருமை,
    கணேசன் ஜி

    ReplyDelete
  11. Dear Mr. Ganesan,
    so for i am thrilled to read what type of research they will do, now i understood. you are taking this story in a very excellent way. Congrats sir !!!

    ReplyDelete
  12. The first experiment is simple but Brilliant. I guess it explains the purpose of "Manasa lingam". If it is with good people, it can be used for good purpose.

    Sir, very good thinking and a very brilliant thought.
    Hats off to you sir.

    ReplyDelete
  13. very very superb story .

    ReplyDelete