சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 11, 2013

பரம(ன்) ரகசியம் - 39



கேஷ் விஷாலி வீட்டுக்குப் போய் சேர்ந்த போது மணி எட்டு. இத்தனை சீக்கிரமாய் மகேஷ் வருவது அபூர்வம் என்பதால் விஷாலி ஆச்சரியப்பட்டாள்.

ஏய் மகேஷ், என்ன இந்த நேரத்துல?

மகேஷ் உடனடியாக பதில் சொல்லவில்லை. “அப்பா இல்லையா?என்று கேட்டான்.

“அவர் வெளியே போயிருக்கார். ஏன், அவர் கிட்ட அவசரமா பேச வேண்டி இருக்கா?

“இல்லை.... என்றவன் சோபாவில் அமர்ந்து இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டான்.

அவள் பயந்து விட்டாள். அவன் அருகில் அமர்ந்தபடி கேட்டாள்.“ஏய் மகேஷ் என்ன ஆச்சு? ஏன் என்னவோ மாதிரி இருக்கே?

“ராத்திரி எல்லாம் தூங்கல விஷாலி... தூங்க முடியல

“ஏன்?


அவன் பதில் சொல்லவில்லை.

“வீட்டுல யாருக்காவது உடம்பு சரியில்லையா?அவள் கவலையுடன் கேட்டாள்.

“எல்லாரும் நல்லா தான் இருக்காங்கஎன்றான்.

“அப்படின்னா வேறென்ன?

அவன் எதுவும் சொல்லாமல் அவளை சோகமாகப் பார்த்தான். பின் சொன்னான். “எனக்கு இதை உன் கிட்ட சொல்லலாமா கூடாதான்னு தெரியல விஷாலி. சொன்னா அவனுக்கு செய்யற துரோகம்னு தோணுது. சொல்லாட்டி உனக்கு செய்யற துரோகம்னு தோணுது. நான் என்ன செய்வேன் விஷாலிஅவன் குரல் கரகரக்க சொன்னான்.

விஷாலிக்கு அவன் பேசுவது ஒன்றும் புரியவில்லை. “ஏய் நீ என்ன துரோகம்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்றே? ..எதைச் சொல்லலாமா கூடாதான்னு சொல்றே? அவன்னு நீ யாரைப் பத்தி சொல்றே?” 

எச்சிலை விழுங்கிக் கொண்டு மகேஷ் சொன்னான். “ஈஸ்வர்... அவன் என் கிட்ட சொன்னதைத் தான்.....

“ஈஸ்வர் என்ன சொன்னார்?

மகேஷ் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையில் இருப்பது போல நடித்தான். அவன் நடிப்பு வினாடிக்கு வினாடி அவளுடைய டென்ஷனை அதிகப்படுத்தியது. ஈஸ்வர் சொன்னதாகச் சொல்லி இருந்ததால் அது என்ன என்பதைத் தெரிந்து கொள்ளா விட்டால் தலை வெடித்து விடும் போல அவளுக்கு இருந்தது.

“சொல்லு மகேஷ்?அவள் பொறுமை போய் குரலில் எரிச்சல் தொனித்தது.

தயக்கத்தை மீண்டும் காட்டி விட்டு அவன் மெல்ல சொன்னான். நான் சொன்னேன்கிறதை அவன் கிட்ட நீ எந்தக் காரணத்துக்காகவும் சொல்லிடக் கூடாது.... சரியா

“சரி சொல்லு

“ப்ராமிஸ்?

“ப்ராமிஸ்

“அவன் பேசறப்ப முழுசா சுயநினைவோட இருந்தான்னு சொல்லிட முடியாது. குடி போதைல தான் பேசினான். ஆனாலும் போதைல கூட அவன் அப்படி பேசி இருக்கக் கூடாது தான்....

அவள் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. “குடி போதைலயா?... என்ன சொன்னார்?

மகேஷ் திடீர் என்று மனம் மாறியவனைப் போல் நடித்தான். காலங்கார்த்தால உன் கிட்ட சொல்ற விஷயமில்லை விஷாலி. நான் இந்தப் பேச்சையே எடுத்திருக்கக் கூடாது... நான் ஒரு லூசு.. விடு விஷாலி. நான் இப்ப இங்கே வரலை.... எதுவும் சொல்லலை.... அப்படியே எடுத்துக்கோ.. சரியா... நான் கிளம்பறேன்

எழுந்து நின்றவனைக் கோபத்துடன் விஷாலி இழுத்து உட்கார வைத்தாள். நீ முதல்ல இருந்து சொல்லு.... என்ன நடந்தது?

வேறு வழில்லாமல் சொல்வது போல தயக்கத்துடன் சொல்ல ஆரம்பித்தான். “நேத்து ராத்திரி எல்லாரும் தூங்கின பிறகு ஈஸ்வர் என்னை அவன் ரூமுக்கு கூப்பிட்டான்... போனேன்... குடிக்க கம்பெனி தர்றியான்னு கேட்டான்.... நான் எனக்கு குடிக்கற பழக்கம் இல்லைன்னு சொன்னேன். (மகேஷ் நண்பர்களுடன் போட்டி போட்டுக் குடிப்பதில் முதலிடம் பெற்றவன் என்பது விஷாலிக்குத் தெரியாது). அவன் என்னை பட்டிக்காடுன்னு தமாஷ் செஞ்சான்... பிறகு பழக்கத்தை இன்னைக்கே ஆரம்பிச்சுகிட்டா போச்சுன்னு சொன்னான்... நான் சாரி வேண்டாம்னு சொன்னேன்.... பிறகு என் கிட்ட பேசிகிட்டே அவன் மட்டும் குடிக்க ஆரம்பிச்சான்... அது வரைக்கும் டீசண்டா பேசிகிட்டு இருந்தவன் பிறகு ஒருமாதிரியா பேச ஆரம்பிச்சான். அமெரிக்கால அவன் செஞ்ச சாதனைகளை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சவன் எத்தனை புது தியரிகளை எல்லாம் பப்ளிஷ் இருக்கான்கிறதை எல்லாம் சொல்லிகிட்டே வந்து கடைசில பப்ளிஷ் செய்யாத ஒரு விஷயத்துலயும் அவன் கில்லாடின்னு சொன்னான்.... அது பொண்ணுங்க சைக்காலஜிலயும் அவன் எக்ஸ்பர்ட்டாம்....அவன் கிட்ட மயங்காத பொண்ணுங்களே இல்லையாம்....

விஷாலிக்கு அவன் சொல்வதை நம்ப முடியவில்லை. அவள் அதிர்ச்சியில் உறைந்தவளாய் அவனைப் பார்த்தாள்.

மகேஷ் பெரும் வேதனையுடன் சொல்வது போல கஷ்டப்பட்டு சொன்னான். “சில பொண்ணுங்க அழகுக்கு மயங்குவாங்களாம்... சில பொண்ணுங்க அறிவுக்கு மயங்குவாங்களாம்... சிலர் பணவசதிக்கும், சிலர் புகழுக்கும் மயங்குவாங்களாம்.. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பலவீனம் இருக்குமாம்... அதைப் புரிஞ்சுக்கிட்டா யாரையும் வலையில் வீழ்த்திடலாமாம். இவன் கிட்ட பொண்ணுங்க எதிர்பார்க்கறது எல்லாமே இருக்கறதால இவன் கிட்ட மயங்காதவங்களே கிடையாதாம். அதை ஒரு பெரிய சாதனையாய் சொல்றான்... அப்ப தான் உன் பேச்சு வந்துச்சு.....

பெரிய மலையுச்சியில் தள்ளப்படக் காத்திருக்கும் துர்ப்பாக்கியவதி போல விஷாலி அடுத்து வருவதற்குக் காத்திருந்தாள்.... அவளுக்கு இப்போதும் அவன் சொல்வதை நம்ப முடியவில்லை.... அதே நேரம் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை....

ஆனால் மகேஷ் சொல்ல வந்ததை உடனடியாகச் சொல்லி விடவில்லை....
“விஷாலி இதுக்கு மேல அவன் சொன்னதை உன் கிட்ட சொல்ற தெம்பு எனக்கில்லை விஷாலி...

விஷாலி முகம் வெளிறிப் போய் இருந்தது. ஆனால் உறுதியான குரலில் சொன்னாள். “என்னவா இருந்தாலும் பரவாயில்லை மகேஷ். சொல்லு...

சிறிது தயங்குவதாக நடித்து விட்டு மகேஷ் தொடர்ந்தான். உன்னை எல்லாம் சாதாரண பொண்ணுங்க லிஸ்டுல சேர்க்க முடியாதாம்... நீ எல்லாம் ரசனைக்கும், பண்பாட்டுக்கும் மதிப்பு தர்றவளாம்... அதனால உன்னை அந்த மாதிரி தான் மடக்கணுமாம்.... அவனுக்கு பெயிண்டிங்க்ஸ்ல கொஞ்சம் கூட இண்ட்ரஸ்ட் இல்லையாம். உனக்காக இண்ட்ரஸ்ட் இருக்கற மாதிரி நடிச்சானாம்... நீ அதுலயும் அவன் அழகுலயும் ஃப்ளாட் ஆயிட்டியாம்.... அனாதை ஆசிரமத்துக்கு உன்னைக் கூட்டிகிட்டுப் போனதும் உன்னை இம்ப்ரஸ் செய்யத்தானாம்....

மலையுச்சியில் இருந்து அவள் விழ ஆரம்பித்தாள்.... அவன் வார்த்தைகள் அவள் இதயத்தை ஈட்டிகளாக துளைக்க விஷாலி திக்பிரமையுடன் மகேஷைப் பார்த்து மிகப் பலவீனமான குரலில் சொன்னாள். “எனக்கு நம்பவே முடியலையே மகேஷ்

எனக்கும் கூட நம்ப முடியலை விஷாலி.... அவன் மத்த நேரங்கள்ல பேசறப்ப அவனை விட டீசண்டான, தங்கமான ஆள் இருக்க முடியுமான்னு எனக்கே கூட தோணி இருக்கு. ஆனா குடிச்சுட்டு அவன் அப்படி பேசினப்ப எனக்கே என் காதுகளை நம்ப முடியலை.... பேசினது அவனல்ல அவனுக்குள்ளே போன விஸ்கி தான்னு சமாதானப் படுத்திக்கத் தான் பார்த்தேன்... ஆனா அப்படியும் அதுக்கு அடுத்ததா அவன் சொன்னதை மட்டும் என்னால சகிச்சுக்கவே முடியலை....

என்ன... சொன்னார்?அவள் வார்த்தைகள் சத்தமில்லாமல் காற்றாய் வந்தன.

”...அவன் கர்வத்தோட என்கிட்ட சிரிச்சுகிட்டே சொல்றான்... அவன் நினைச்சா உன்னை படுக்கை வரைக்கும் கூட கூட்டிகிட்டு வர முடியும்கிறான்... அதைத் தான் என்னால தாங்க முடியல....

சேற்றை வாரித் தன் மீது இறைத்தது போல் விஷாலி உணர்ந்தாள். மகேஷ் அவள் மீதிருந்த பார்வையை வேறிடத்திற்குத் திருப்பிக் கொண்டான். நான் தாங்க முடியாமல் அவன் கிட்ட சொன்னேன். ‘மத்தவங்க மாதிரி விஷாலிய நினைச்சுக்காதே ஈஸ்வர்னு. அவன் சிரிச்சுகிட்டே என் கிட்ட சொன்னான். நீ இப்பவே அவன் வலையில விழுந்தாச்சாம். அனேகமா அவனை காதலிக்கவும் ஆரம்பிச்சிருப்பியாம். அடுத்த லெவலுக்கு உன்னை இழுக்கிறது அவனுக்கு ரொம்பவே சுலபமாம்... அதுக்கு மேல என்னால அங்கே நிக்க முடியல. தலை வலிக்குதுன்னு சொல்லி என் ரூமுக்கு வந்துட்டேன். அங்கேயே இருந்திருந்தா கண்டிப்பா அவனை ஓங்கி அறைஞ்சிருப்பேன். எங்க தகராறுல வீட்டுல எல்லாரும் முழிச்சிருப்பாங்க...

அவள் அவமானத்தால் கூனிக் குறுகிப் போனாள். ஈஸ்வர் அவளை என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று கோபத்துடன் எண்ணினாள். நேற்றைய அழகான நினைவுகள் இன்று அர்த்தம் மாறியதால் அவமான நினைவுகளாக மாறின. எல்லாம் நடிப்பா? எல்லாம் வேஷமா? இப்போதும் அவள் மனதில் ஒரு பகுதி மகேஷ் சொன்னதை நம்ப மறுத்தது. ஆனால் பெரும்பகுதி மகேஷ் ஏன் பொய் சொல்லப் போகிறான் என்று வாதிட்டது. மகேஷ் அவள் சினேகிதன். நல்ல சினேகிதன்... விளையாட்டுப் பருவத்திலே இருந்து அவளுடன் இருந்தவன்... அதுவும் இந்த மாதிரி விஷயத்தில் எல்லாம் யாராவது பொய் சொல்வார்களா?....

மகேஷ் தொடர்ந்தான். “அவன் என் தாத்தா கிட்ட திமிர்த்தனமா நடந்துகிட்டது எனக்கு சுத்தமா பிடிக்கலைன்னாலும் அவனுக்கு தாத்தா மேல் இருக்கிற கோபம் நியாயமானதுன்னு நீ சொன்னதால அவன் கிட்ட எனக்கு நிஜமாவே ஒரு சாஃப்ட் கார்னர் இருந்துச்சு. ஆனா உன்னை இந்த அளவுக்கு அவன் மட்டமா நினைக்கிறதுக்கு என்ன காரணம் இருக்க முடியும் சொல்லு விஷாலி? அதான் சின்ன வயசுல இருந்தே உன்னோட நல்ல நண்பனா இருந்த எனக்குத் தாங்க முடியல....

நேற்று தந்தையின் நினைவு நாள் என்று சோகமாகச் சொன்னவனுக்கு ஆறுதல் தரும் விதமாக ஈஸ்வரைத் தொட்ட்தாலும், காரில் வருகையில் அந்தப் பாடல் வரிகளிலும் இசையிலும் மனம் பறி கொடுத்தவன் போல் அவன் அவள் கை விரல்களைத் தொட்ட போது அவள் ஒன்றும் மறுப்பு தெரிவிக்கவில்லை என்பதாலும் அவளைப் பற்றி இந்த அளவு மட்டமாக அவன் நினைத்து விட்டானோ என்ற சந்தேகம் அவளுக்கு வந்தது. மகேஷ் கேட்டதற்கு அவளுக்குக் கிடைத்த காரணம் இது ஒன்று தான். அவளுக்கு உடம்பெல்லாம் கூசியது.. எரிந்தது...


அவன் எனக்கு கசினா இருக்கலாம்.. அவன் அந்தரங்கமா என் கிட்ட குடி போதைல சொன்னதை உன் கிட்ட சொல்றது அவனுக்கு செய்யற துரோகமா கூட இருக்கலாம். ஆனா உன்  கிட்ட சொல்லாமல் இருக்கிறது அதை விடப் பெரிய துரோகம்னு மனசுல தோண ஆரம்பிச்சுது... நான் ராத்திரி எல்லாம் தூங்கல விஷாலி....

அவன் முகத்தைப் பார்த்த போது அவன் இரவெல்லாம் தூங்கவில்லை என்பது உண்மையே என்று தெரிந்தது.

“அவனை சொல்லி தப்பில்ல விஷாலி. அவன் பிறந்து வளர்ந்த நாடு அந்த மாதிரி. அங்கே ஒழுக்கம் எல்லாம் பெரிய விஷயமில்லை. அவன் அழகும், அறிவும் பல பொண்ணுகளை அவன் பின்னால வர வச்சிருக்கும். அவங்களோட அவன் ஜாலியா கண்டிப்பா இருந்திருப்பான்கிறது அவன் பேச்சுல இருந்தே தெரியுது. ஆனா உன்னைப் போய் அவன்.... சே.....மகேஷின் குரல் உடைந்தது.

இந்த இரண்டு நாட்களில் அவளுக்கு இருந்த மிக அழகான உணர்வுகள் எல்லாம் அவன் வார்த்தைகளால் வேரோடு பிடுங்கப்பட்டதால் அவள் உயிர் இருக்கும் போதே செத்துப் போனாள்.

அவளைப் புரிந்து கொள்ள முடிந்த நண்பனாய் மகேஷ் கரகரத்த குரலில் சொன்னான். “வருத்தப்படாதே விஷாலி.. இந்தியால இருக்கற கொஞ்ச நாளுக்கு உன்னை பயன்படுத்திக்கலாம்னு அவன் நினைச்சிருக்கான்.. அவனுக்கு அறிவு இருக்கிற அளவு பண்பாடு இல்லை... மனசைப் படிக்க முடிஞ்ச அளவு மதிக்கத் தெரியலை... (இதெல்லாம் அவன் நேற்று இரவில் இருந்து பல முறை ரிகர்சல் செய்த வரிகள்)... அவன் மனசுல இருக்கறது என்னன்னு நமக்கு தெரிய வந்ததே உன்னோட நல்ல மனசுக்காக கடவுளா பார்த்து ஏற்படுத்திக் கொடுத்த சந்தர்ப்பம்னு எடுத்துக்கோ... அவன் வர்றப்ப மட்டும் ஜாக்கிரதையா இருந்துக்கோ.... அவன் ஹிப்னாடிசமும் தெரிஞ்சவன்... அழகாவும் இருக்கான்....

விஷாலி அவனை அனல் பார்வை பார்த்தாள்.

மகேஷ் கண்களைத் தாழ்த்திக் கொண்டு சொன்னான். “தப்பா நினைச்சுக்காதே விஷாலி. அவன் நேத்து ராத்திரி அவ்வளவு உறுதியா சொன்னதால் தான் நான் பயப்படறேன்... அவன் பொண்ணுங்க மனசைப் புரிஞ்சுகிட்டு அதுக்குத் தகுந்த மாதிரி திறமையா நடிக்கத் தெரிஞ்சவன்... நீ சூதுவாது தெரியாதவள்... அதான் எச்சரிக்கை செஞ்சேன்.... அவன் கண்டிப்பா தினம் வந்தாலும் வருவான்...

விஷாலியின் மனதின் உள்ளே எரிமலை குமுறிக் கொண்டிருந்தது. “அவனை இங்கே வர வேண்டாம்னு சொல்லு...

ஈஸ்வரை அவன் என்று அவள் அழைத்த்தையும், வர வேண்டாம் என்று சொல்லச் சொன்னதையும் கேட்கவே மகேஷிற்கு சுகமாக இருந்தது. தயக்கத்துடன் சொன்னான். நான் எப்படி சொல்றது விஷாலி. நான் சொன்னா, நேத்து அவன் சொன்னதையெல்லாம் நான் உன் கிட்ட சொல்லிட்டேன்கிறதை அவன் தெரிஞ்சுப்பான்...

விஷாலிக்கு மகேஷ் சொன்னது போல ஈஸ்வர் கண்டிப்பாக தினம் வந்தாலும் வருவான் என்பது இப்போது சகிக்க முடியதாததாக இருந்தது. எத்தனை அழகாக அவன் இருந்தாலும், எத்தனை அறிவுஜீவியாக இருந்தாலும், எத்தனை நல்லவனாக அவன் நடித்தாலும் படுக்கைக்கு செல்ல இசையும் அளவு  அவள் ஒன்றும் தரம் கெட்ட பெண் அல்ல. அப்படிப் பட்ட கீழ்த்தர நோக்கத்தோடு யாரும் அவள் வீட்டு வாசற்படியை மிதிக்க வேண்டியது இல்லை.... அவள் அவனைப் பார்க்கக் கூட விரும்பவில்லை.

“அவன் செல் நம்பரைக் குடு. நானே சொல்றேன்...”. இரண்டு நாட்கள் ஏமாந்தது போதும் என்று அவள் நினைத்தாள். இனி ஒரு வினாடி கூட ஏமாற அவள் தயாரில்லை. ஒரேயடியாக ஈஸ்வரின் தொடர்பைத் துண்டித்து தலைமுழுகும் வரை அசுத்தமாகவே இருப்பது போல ஒரு உணர்வு அவளிடம் இனி இருந்து கொண்டே இருக்கும்...

இன்று காலை வரை எரிந்து கொண்டிருந்த அவன் மனதில் இப்போது ஐஸ் மழை பெய்ய ஆரம்பித்தது. தயங்குவது போல நடித்துக் கொண்டே ஈஸ்வரின் செல் நம்பரைத் தந்தான்.

ஏதோ ஒரு ஜூரவேகத்தில் இருப்பது போல விஷாலி செல் போன் எண்களை அழுத்தினாள். ஈஸ்வர் குரல் கேட்டது. ஹலோ

அவன் குரல் கேட்டதும் இப்போதும் மனது அவளை அறியாமல் லேசாகியது... அவளுக்குத் தன் மேலேயே கோபம் வந்தது. மகேஷ் சொன்னது சரி தான். ஈஸ்வர் ஒரு வசியக்காரன் தான்... அவள் மனதைத் திடப்படுத்திக் கொண்டு சொன்னாள். “நான் விஷாலி பேசறேன்... உங்களைப் பார்க்கவோ, உங்க கிட்ட பேசவோ நான் விரும்பலை... அதனால தயவு செஞ்சு இனிமேல் என் வாழ்க்கைல இருந்து விலகியே இருங்க ப்ளீஸ்...

சொல்லச் சொல்ல அவள் அழுதே விட்டாள். செல் போனை வைத்தபின் அவள் அழுகை அதிகமாகியது.

அதை ஒரு கணம் தாக்குப்பிடித்துக் கொண்டு மகேஷிடம் சொன்னாள். “மகேஷ் எனக்கு மனசு சரியில்லை.... தனியா இருக்க விடறியா?

“சாரி விஷாலி... நான் இதை உன் கிட்ட சொல்லாமலேயே இருந்திருக்கலாம் போல இருக்கு

“இல்லை மகேஷ், நீ நல்லது தான் செஞ்சிருக்கே. கசப்பானாலும் உண்மை உண்மை தான்.....

அவளைப் பரிதாபப் பார்வை பார்த்து விட்டு மகேஷ் எழுந்தான். “நான் கிளம்பட்டுமா விஷாலி

அவள் தலையாட்டினாள். அவன் போன பின் கதவை சாத்திக் கொண்டு விஷாலி பேரழுகை அழ ஆரம்பித்தாள்.

ஸ்வருக்கு சிறிது நேரம் எதுவும் புரியவில்லை. அவளுடைய வார்த்தைகள் முழுவதும் பதிவாவதற்கு முன்னால் அவள் கடைசியில் அழுதது உணர்வில் பதிவாகியது. மனம் பதைத்தது. பின்பு தான் வார்த்தைகள் பதிவாகின. அவன் முகம் இறுகியது.

அவனிடம் இப்படி யாரும் சொன்னதில்லை. அவன் அடிக்கடி சீண்டும் பரமேஸ்வரன் கூட இது போல அவனைப் பார்க்கவோ பேசவோ பிடிக்கவில்லை என்றும் அவர் வாழ்க்கையில் இருந்து விலகி இருக்கும் படியோ சொன்னதில்லை. அவர் அப்படிச் சொல்லி இருந்தால் கூட அவனால் புரிந்து கொள்ள முடிந்திருக்கும். ஆனால் எந்தக் காரணமும் இல்லாமல் திடீரென்று விஷாலி அப்படிச் சொன்னது அவன் ஈகோவை பலமாகத் தாக்கியது.


மனதை ஒரு அமைதி நிலைக்குக் கொண்டு வருவது அவனுக்குப் பெரும்பாடாக இருந்தது. வெளிப்பார்வைக்காவது அப்படி கொண்டு வர சாத்தியமாகும் வரை அவன் அறையிலேயே அமர்ந்திருந்தான். பின் எழுந்தவன் அப்பாவின் புகைப்படம் அருகே வந்து நின்றான்.

எத்தனை பெரிய சைக்காலஜிஸ்டா இருந்தாலும் ஒரு பொண்ணோட மனசைப் புரிஞ்சுக்கறதுல நான் ஏமாந்துட்ட மாதிரி தான் தோணுதுப்பா. நேத்து சொன்னேன் இல்லையா ஒரு பொண்ணைக் காதலிக்க ஆரம்பிச்ச மாதிரி தோணுதுன்னு அது என் பக்க கற்பனை மாதிரி தான் தோணுது. ஆனைக்கும் அடி சறுக்கும்னு சொல்வாங்க இல்லையாப்பா. நானும் சறுக்கிட்டேன் போல இருக்கு...

அவன் சொல்லி விட்டு சிரிக்க முயன்று தோற்றுப் போனான்.....    

இந்த இரண்டு நாட்கள் அவன் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவள், மிக அழகான உணர்வுகளை அவனுக்குள் முதல் முதலாக  ஏற்படுத்தியவள் ஏதோ தூசியைப் போல அவனைத் தட்டி விட்டதை யோசிக்கையில் அவனுக்குள் கோபம் அதிகமாக ஆரம்பித்தது. குறைந்த பட்சம் காரணத்தையாவது அவள் சொல்லி இருக்கலாம்.... அதைக் கூட சொல்லத் தேவை இல்லை என்று அவள் நினைத்ததை அவனால் சகிக்க முடியவில்லை.

காரணம் இல்லாமல், காரணம் சொல்லாமல் இப்படி நடந்து கொள்ளக் கூடிய ஒரு பெண் கண்டிப்பாக மனநிலை பாதிக்கப்பட்டவளாகத் தான் இருக்க வேண்டும்... அவள் சிகிச்சை பெற வேண்டியவள் ...

ஆனால் அதைப் பற்றி அவன் கவலைப்படப் போவதில்லை. அவள் இனி அவனுக்கு சம்பந்தம் இல்லாதவள்.... ஈஸ்வர் மனதில் உறுதியாக முடிவெடுத்து விட்டான்.


(தொடரும்)

-என்.கணேசன்

12 comments:

  1. விசாலியின் மனநிலை ஆச்சரியமளிக்கிறது ...

    ReplyDelete
  2. இந்த வாரத்திற்க்கான அழுத்தமான புகைப்படம்......the pain of love never stops.

    படித்தவுடன் மனம் ஏனோ மிகவும் கடினமாகிற்று.........

    ReplyDelete
  3. mmhh...first time seeing a villain in you..so good you have narrated a villain's planned thoughts!
    A break in love will only increase the love!!!

    ReplyDelete
  4. sir semaya poguthu intha series. but innum adutha vaaram varaikkum wait panratha nenacha thaan romba tensionaaguthu

    better paathilaye niruthittu book publish pannidunga..........

    ReplyDelete
  5. sir mudiyala suspense mela suspense vachikitte poringa...

    intha kathaya ippadiye stop pannitu seekiram booka potrunga...

    thursday eppo varumnu wait panna vendiyatha irukku :-( .........

    ReplyDelete
  6. அர்ஜுன்April 11, 2013 at 9:34 PM

    விசாலி அழுத போதும் சரி, ஈஸ்வர் அப்பா போட்டோ முன் ”எத்தனை பெரிய சைக்காலஜிஸ்டா இருந்தாலும் ஒரு பொண்ணோட மனசைப் புரிஞ்சுக்கறதுல நான் ஏமாந்துட்ட மாதிரி தான் தோணுதுப்பா. நேத்து சொன்னேன் இல்லையா ஒரு பொண்ணைக் காதலிக்க ஆரம்பிச்ச மாதிரி தோணுதுன்னு அது என் பக்க கற்பனை மாதிரி தான் தோணுது. ஆனைக்கும் அடி சறுக்கும்னு சொல்வாங்க இல்லையாப்பா. நானும் சறுக்கிட்டேன் போல இருக்கு..” என்று சொல்லும் போதும் சரி இருவருக்காகவும் என் மனமும் வலித்தது. சஸ்பென்ஸ் கதையில் இந்த கதாபாத்திரங்களின் மனப்போக்கையும் மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள். சீக்கிரம் தொடருங்கள் சார்

    ReplyDelete
  7. Looks like that Eswar character is Ganesan sir...

    ReplyDelete
  8. பொறாமையின் சின்னம் மகேஷ்

    ReplyDelete
  9. அன்புள்ள கணேசன், நான் தொடர்ந்து எதிர்பார்த்துப் படிக்கும் தொடர் இது. பாத்திரங்களின் வடிவமைப்பும், வசனங்களூம், கதை போகும் விதமும் தொடர்ந்து படிக்கத்தூண்டுகிறது. நன்றியும், வாழ்த்துகளும்.. ஜெயக்குமார், இராக்கில் இருக்கும் இந்தியன்

    ReplyDelete
  10. கதையோட்டம் அருமை...

    இனிய தமிழ் வருடப் பிறப்பு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. நேற்றைய அழகான நினைவுகள் இன்று அர்த்தம் மாறியதால் அவமான நினைவுகளாக மாறின

    ReplyDelete