சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 30, 2012

கர்மத்தில் இருந்து ஞானத்திற்கு!




கீதை காட்டும் பாதை 17
கர்மத்தில் இருந்து ஞானத்திற்கு!

செயலாற்ற வேண்டிய நேரத்தில் செயலற்றுப் போன அர்ஜுனனிற்கு செயல்பட வேண்டிய அவசியத்தையும், சிறப்பாக செயல்புரிய வேண்டிய முறையையும் விளக்குகையில் எது உண்மையான செயல் என்பதை கர்மம், விகர்மம், அகர்மம் என்ற மூன்றையும் விவரித்து விளக்கிய ஸ்ரீகிருஷ்ணர், கர்மத்தில் இருந்து ஞானத்தையும், மன சாந்தியையும் பெறும் வழியை விளக்க ஆரம்பிக்கிறார்.

கர்மபலனில் ஆசையைத் துறந்தவனும், எப்போதும் மனத்திருப்தியுடன் இருப்பவனும், எதையும் சார்ந்திராமல் சுதந்திரமாய் இருப்பவனும், கர்மத்திலேயே ஆழ்ந்திருந்தாலும் செயலினால் அவன் கட்டுப்படுவதில்லை.

ஆசையற்றவனாய், மனத்தை வேறு விஷயத்தில் செல்லாமல் தடுத்து தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல், சரீர யாத்திரைக்குத் தேவையான கர்மங்களை மட்டும் செய்து கொண்டிருப்பவன் தன் செயல்களினால் ஸம்ஸாரத்தை அடைய மாட்டான்.

தானாக வந்ததில் திருப்தி அடைந்தவனும், சுகம்-துக்கம், விருப்பு-வெறுப்பு, போன்ற இருநிலைகளைக் கடந்தவனும், பொறாமையை நீக்கி வெற்றி தோல்விகளை ஒரே விதமாக எடுத்துக் கொள்பவனும் செயல் புரிந்தாலும் பந்தத்திற்கு உள்ளாவதில்லை”.

செயல் புரிபவன் பொதுவாக விளைவு என்ற சங்கிலியால் பிணைக்கப்படுகிறான். மிகச் சிறப்பாகச் செயலும் புரிய வேண்டும், அதன் விளைவுகளிலும் மாட்டிக் கொள்ளக் கூடாது, அதே நேரத்தில் மன அமைதியையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அது  முரண்பாடுகள் கொண்டதாகவும், ஒருசேர சாத்தியப்படாத  காரியமாகவும் நமக்குத் தோன்றலாம். ஆனால் அது சாத்தியம் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

மனிதனுடைய மிக முக்கியப் பிரச்சினை அவனுடைய ஈகோ தான். எது உண்மையான நான் அல்லவோ அதை உண்மை என்று நம்பி அந்த தவறான, பொய்யான மையத்தில் இயங்குவது தான். அந்தப் பொய்யான, கற்பனை மையத்தைத் தான் இக்காலத்தில் ஈகோ என்கிறோம். அந்தப் பொய்யான மையத்திலிருந்து கொண்டு மனிதன் எதைச் செய்தாலும் அது குறைபாடானதாகவும், பிரச்சினைகளை அதிகப்படுத்துவதாகவுமே இருக்கும். அந்தப் பொய்யான மையத்தை உண்மையாக எண்ணி உணர்வது எதுவுமே அவனை அமைதியடைய விடாது.

வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வேகம், தோல்வி வந்து விடுமோ என்கிற பயம், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை, என்ன நேர்ந்தாலும் அதிருப்தி, அடுத்தவர்கள் நிலை பார்த்து பொறாமை முதலான தன்மைகள் ‘ஈகோவினால் உருவாக்கப்படுபவை. உண்மையான சாதனைகளை விடப் பொய்யான தோற்றங்களை உருவாக்கவும், தக்க வைத்துக் கொள்ளவும் தான் ‘ஈகோவிற்கு அதிக சிரத்தை இருக்கும். யாரையும் விடக் குறைந்து விடக் கூடாது, அடுத்தவர் பார்வையில் தாழ்ந்து விடக் கூடாது என்பது போன்ற எண்ணங்களே பிரதானமாக இருக்கும். யாராவது அதிகம் உயர்ந்து விட்டாலோ அதைப் பார்த்து பொறாமைப்படத் தோன்றும். எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பு நோக்கத் தோன்றும். செயல்படக் கிடைக்கும் இந்தக் கணத்தில் கடந்ததை எண்ணி துக்கமும், வரப்போவதை எண்ணி கவலையும் அடைந்து இந்தக் கணத்தை வீணாக்கி விடும். இத்தனையும் ஒருவருடைய செயல்திறனை மங்க வைக்கும் அம்சங்கள் மட்டுமல்ல, துக்கத்திற்கும் மூலகாரணிகள்.

ஒரு செயல் செய்யும் போது அதில் நூறு சதவீதம் மனம் லயிக்க வேண்டும். அந்த செயலாகவே மாறி விட வேண்டும். அப்போது தான் அந்த செயல் குறைபாடில்லாத மேன்மையான தரம் வாய்ந்ததாக இருக்கும். விளைவைப் பற்றிய எண்ணம் கூட அந்த செயலிற்கு இடைஞ்சல் தான். விளைவு எப்படி இருக்கும், அதை அடுத்தவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற வகையில் எண்ணங்கள் ஓடுமானால் செயலில் நூறு சதவீதம் இல்லை என்று  
பொருள். செயலிற்கு வேண்டிய நூறு சதவீதத்தில் இருந்து  எடுக்கப்பட்டு சில சதவீதங்கள் செயலிற்கு உதவாத எண்ணங்களில் வீணாகின்றன என்று அர்த்தம்.


ப்ரூஸ் லீ கூட கிட்டத்தட்ட இதே கருத்தை அடிக்கடி கூறுவதுண்டு. “செயல்பட வேண்டிய நேரத்தில் முழு விழிப்புணர்வோடு இரு. கருத்துக்களாலும், வழக்கங்களாலும் சிறைப்பட்டு விடாமல் சுதந்திரமாக இரு. எதையும் எதிர்பாராதே. விளைவைப் பற்றிய கவலை கொள்ளாதே. விருப்பு வெறுப்பு இல்லாமல் இரு. இயல்பாக, எளிமையாக, தெளிவாக, முழுமையாக இரு. அப்போது தான்  உள்ளது உள்ளபடி தெளிவாகப் புரியும். பின் செய்ய வேண்டியதை கச்சிதமாகச் செய்வது மிக சுலபமாகும். (இந்தக் கருத்தைச் சொன்னது ஒரு துறவியோ, தத்துவ ஞானியோ அல்ல. வாழ்ந்த குறுகிய காலத்தில் தற்காப்புக் கலைகளில் தன்னிகரில்லா நிபுணராக விளங்கிய ஒரு செயல்வீரனின் கருத்து இது என்பதை நினைவில் கொண்டால் ஸ்ரீகிருஷ்ணரின் போதனைகளின் நடைமுறைச் சிறப்பு விளங்கும்.)


அந்த முழுமையான நிலையில் செய்யப்படும் எதுவும் சோடை போகாது. எல்லா தனித்தன்மை வாய்ந்த, காலம் கடந்தும் சிறப்பு குறையாமல் இருக்கும் கலைப்படைப்புகளும் அப்படி உருவாக்கப்பட்டவையே. அங்கு ஈகோ இல்லை. முன்பு ஓரிடத்தில் குறிப்பிட்டது போல அஜந்தா ஓவியங்களையும், எல்லோரா சிற்பங்களையும்,  ஒப்புயர்வில்லா உபநிடதங்களையும்  உருவாக்கியவர்கள் தங்கள் பெயர்களைக் கூட அவற்றில் விட்டுச் செல்லவில்லை. வரலாற்றுப் பக்கங்களில் தங்கள் பெயர் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆசை கூட அவர்களிடமில்லை.

அப்படிப்பட்ட உன்னதமான உயர்வான உள்ளத்தோடு செய்யப்படும் செயல்கள் எதுவும் செய்பவர்களை பிணைப்பதில்லை. செய்பவன் அதன் விளைவுகளில் இருந்து விடுபட்டவனாகவே இருக்கிறான் என்று கூறும் ஸ்ரீகிருஷ்ணர் கடைசியாக ஞான யோகத்தை இப்படி சொல்லி முடிக்கிறார்.

அர்ஜுனா! நன்றாக வளர்ந்த நெருப்பானது எப்படி விறகுகளை எரித்து சாம்பலாக்கி விடுமோ, அப்படியே ஞானம் என்ற அக்னியானது எல்லா கர்மங்களையும் சாம்பலாக்கி விடும்.

ஞானத்தைப் பெறுவதனையே நோக்கமாகக் கொண்டு புலன்களை அடக்கி சிரத்தையுடன் முயற்சி செய்பவன் ஞானத்தை அடைகிறான். ஞானத்தை அடைந்த பிறகு விரைவிலேயே மகோன்னத சாந்தி பெறுகிறான்.

ஞானமும், நம்பிக்கையும் இல்லாத சந்தேகவாதி நாசம் அடைகிறான். சந்தேகக் காரனுக்கு இந்த உலகமும் இல்லை, மேலுலகமும் இல்லை, சுகமும் இல்லை.

இந்த யோகத்தால் கர்மங்களை விட்டொழித்தவனும், ஆத்ம ஞானத்தால் சந்தேகத்தை விட்டொழித்தவனும், தன் சுய நிலையில் நிலைத்திருப்பவனுமான ஒருவனை கர்மங்கள் கட்டுப்படுத்த முடியாது.

பரதபுத்திரனே! எனவே அறியாமையால் உதித்து உன் மனதில் குடிபுகுந்துள்ள உன் சந்தேகத்தை ஆத்மஞானம் என்ற கத்தியால் துண்டித்து விட்டு கர்மயோகத்தை கடைப்பிடிப்பாயாக. எழுந்திரு!

உண்மையான நான் என்பது அழிவில்லாத, தனிப்பட்ட அடையாளங்களுக்குள் அடங்கி விடாத ஆன்மா என்பதை அறிவதே ஞானம். அந்த ஞானம் அறிவுக்கு எட்டுவது பெரிய விஷயமல்ல. ஆழமாக ஒருவருக்குள் அந்த எண்ணம் வேரூன்றுவதே மிக முக்கியம். அது புலனடக்கம், சிரத்தையுடன் முயற்சி, ஞானத்தைத் தவிர வேறொரு நோக்கமும் இல்லாமை போன்ற உறுதியான அணுகுமுறைகளில் மட்டுமே சாத்தியப்படும். அந்த ஞானத்தை அடைந்த பின் கிடைக்கும் மன சாந்தி மிக மிக உயர்வானது. அந்த பரிபூரண மனசாந்தி வேறு விதங்களில் கிடைப்பது சாத்தியமல்ல. கட்டுப்படுத்தாத கர்மங்களும், களங்கமில்லாத மனநிம்மதியும் தர முடிந்த ஞானத்தை விட பெறத்தக்க மேன்மை வேறென்ன இருக்க முடியும்?

முழுமையான ஞானம் பெறுகிற வரை அடிக்கடி எழுந்து நம்மை அடி சறுக்க வைக்கும் விரோதியைப் பற்றி ஸ்ரீகிருஷ்ணர் கடுமையான வார்த்தைகளில் கடைசியில் எச்சரிக்கிறார். அது தான் சந்தேகம். எத்தனையோ அறிஞர்களுக்கே கூட வழுக்குப் பாறையாக இருக்கும் சந்தேகத்தால் நாசமே விளையும் என்கிறார். சந்தேகக்காரர்களுக்கு இந்த உலகமுமில்லை, மேலுலகமுமில்லை, சுகமுமில்லை என்று சொல்லும் அவர் சந்தேகத்தை அழிக்க ஆத்மஞானம் ஒன்று தான் வழி என்றும் சொல்கிறார்.

எதையும் ஆராயாமல் நம்புவது முட்டாள்தனம். ஆனால் ஆராய்ந்து தெளிந்த பின்னும் சந்தேகம் வருமானால் அதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று, தெளிந்த விதம் சரியில்லை. இன்னொன்று தெளிந்த மனிதன் சரியில்லை. குறை இந்த இரண்டில் ஒன்றில் தான் இருக்க முடியும். இரண்டுமே பிரச்சினை தான். திருவள்ளுவர் கூறியது போல

“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்

அறிவு இறைவன் மனிதனுக்குத் தந்த மிகப்பெரிய பொக்கிஷம். அதை முழுமையாகப் பயன்படுத்தி முன்னேறுவதும், பலனடைவதும் மிக முக்கியம். ஆனால் அறிவும் கூட ஒரு கட்டத்தில் நின்று விடுகிறது. அதற்கும் மீறிய ஒன்றின் துணையுடன் தான் மனிதன் பிறவிப் பெருங்கடலைத் தாண்ட முடியும். ஞானத்தை அடைந்தவன் தான் அந்த ஒன்றைப் பெற முடியும். அது தான் அசைக்க முடியாத நம்பிக்கை. ஆதாரங்களைத் தேடிப் பிடித்து அறிந்து பெறுவதல்ல அந்த நம்பிக்கை. அது ஆத்மார்த்தமாக மட்டுமே அவன் உணரக் கூடியது. அந்த நம்பிக்கை இல்லாத சந்தேகவாதிக்கு ஆயிரம் புனித நூல்கள், ஞானிகளின் விளக்கங்கள் கேட்டாலும் கூட தெளிவு பிறக்காது. படிப்பதிலும் கேட்டதிலும் உள்ள முரண்பாடுகள் எல்லாம் பெரிதாகத் தெரியும். மேலும் மேலும் குழப்பம் அதிகம் தான் ஆகும். ஆனால் அந்த நம்பிக்கை உள்ளவனுக்கு வெளியே இருந்து கிடைக்கும் ஒரு சொல் கூட அதிகம் தான்.

ஆத்மபூர்வமாக அறிந்தவனுக்கு அடுத்தவனிடமிருந்து ஆதாரம் எதற்கு?

இத்துடன் நான்காம் அத்தியாயமான ஞான யோகம் நிறைவு பெறுகிறது.

பாதை நீளும்.....

-          என்.கணேசன்
-          நன்றி:விகடன்

7 comments:

  1. thanking you sir,for your update very nice keep it up iam really very enjoy your post thanks once again.
    manohar

    ReplyDelete
  2. ஒரு செயல் செய்யும் போது அதில் நூறு சதவீதம் மனம் லயிக்க வேண்டும். அந்த செயலாகவே மாறி விட வேண்டும். அப்போது தான் அந்த செயல் குறைபாடில்லாத மேன்மையான தரம் வாய்ந்ததாக இருக்கும்.

    அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete
  3. அருமை ! சிந்தக்க வைத்த பதிவு !

    ReplyDelete
  4. நல்ல பதிவு.இந்த காலக்கட்டத்திற்க்கு தேவையானதும்,செயல்படுத்தவேண்டியதுமான விஷயம் உள்ள பதிவு.நன்றி.

    ReplyDelete
  5. தன்னை உணர/ஞானத்திற்கு சரியான வழி எது?தான் என்பது உயிர். இதை அறிய சரியான வழி எது?பல குரு மார்கள் பல வழி சொல்லுகிறார்கள். எது சரி என்று தெரிந்து கொள்வது? ஒரு பொருள் வாங்கும் போது எவ்வளவு ஆராய்ச்சி செய்கிறோம். ரிவ்யு படிக்கிறோம். தன்னை உணர அதை தானே செய்ய வேண்டும். எந்த வழி சரியான வழி, எப்படி செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வது?
    http://sagakalvi.blogspot.in/2012/11/blog-post.html

    ReplyDelete