சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, September 9, 2011

மருத்துவர்கள் முன்னால் மனோசக்தி சாகசங்கள்


பிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-10

மருத்துவர்கள் முன்னால் மனோசக்தி சாகசங்கள்

அறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள் முன் தன் சக்திகளை வெளிக்காட்ட டெஹ்ரா பே சம்மதித்தவுடன் பால் ப்ரண்டன் சில மருத்துவர்களையும், சில அறிஞர்களையும் அழைத்துப் பேசி அவர்கள் கண்காணிப்பில் ஒரு பொது நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.

அந்த நிகழ்ச்சிக்கு டெஹ்ரா பே அரபு உடையில் இரண்டு உதவியாளர்களுடன் வந்தார். நிகழ்ச்சி நடக்கும் அறையில் ஒரு மேசையில் அவர் பயன்படுத்த இருக்கும் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்தன. கூர்மையான வாள்கள், கத்திகள், அரிவாள்கள், நீண்ட ஊசிகள், உடைந்த கண்ணாடித் துண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு மேசையில் நீண்ட கூர்மையான ஆணிகள், சுத்தியல், ஒரு பெரிய கனமான பாறைக்கல், எடை பார்க்கும் கருவி ஆகியவை இருந்தன. ஒரு கூடையில் ஒரு வெள்ளைக் கோழியும், சாம்பல் நிற முயலும் இருந்தன. பெரிய சவப்பட்டி, அதை விடப் பெரிய இன்னொரு பெட்டி ஆகியவையும் அங்கு வைக்கப்பட்டிருந்தன.

முதலில் மருத்துவர்களும், கண்காணிக்க வந்த மற்ற அறிஞர்களும் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே பரிசோதித்துப் பார்த்தனர். எல்லாம் உண்மையானவை தானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். பின் அவர்கள் முன்னிலையில் தன் சாகசங்களைச் செய்து காட்ட டெஹ்ரா பே ஆரம்பித்தார்.

முதலில் தன் கழுத்தின் பின்புறத்தில் மண்டையின் அடிப்பகுதியில் கை விரல்களால் அழுத்தினார். இன்னொரு கைவிரல்களால் தன் நெற்றிப் பொட்டுகளை அழுத்தியபடி நன்றாக மூச்சை உள்ளே இழுத்த அவர் சில நொடிகளில் ஒருவித மயக்க நிலைக்குப் போய் விட்டார். அவர் கண்கள் மூடின. ஒரு அமானுஷ்யமான சத்தம் அவருள்ளில் இருந்து எழுந்தது. உடல் மரக்கட்டை போல ஆகியது. அப்படியே சாய்ந்த அவரை அவருடைய உதவியாளர்கள் மட்டும் பிடித்திருக்கவில்லை என்றால் கீழே விழுந்திருப்பார்.

ஒரு உதவியாளர் நீண்ட வாள்கள் இரண்டை எடுத்து ஒரு நீளமேசையில் கூர்மையான பகுதிகள் மேலிருக்கும்படி பதித்து வைத்தார். பின் டெஹ்ரா பே அவர்களின் இடுப்பு வரை உள்ள உடைகளைக் களைந்து அப்படியே அந்த வாள்கள் மீது உதவியாளர்கள் இருவரும் மல்லாக்க படுக்க வைத்தனர். ஒரு வாள் அவருடைய தோள்பட்டைகளுக்கு அடியிலும், இன்னொரு வாள் அவருடைய முட்டிகளுக்கு அடியிலும் இருக்கும்படி படுக்க வைத்திருந்தனர். மருத்துவர்கள் அவருடைய நாடித்துடிப்பைப் பரிசோதித்தனர். நாடித்துடிப்பு அதிகமாய் (130) இருந்தது.

அங்கு வைத்திருந்த பாறையை எடுத்து அங்கிருந்த எடை பார்க்கும் கருவியில் எடை பார்த்தனர். 90 கிலோகிராம் எடை இருந்தது. அதை இருவரும் தூக்கி டெஹ்ரா பேயின் வயிற்றின் மீது வைத்தனர். அவருடைய உதவியாளர்களில் ஒருவன் பெரிய சுத்தியலை எடுத்து அந்தப் பாறையை ஓங்கி ஓங்கி அடிக்க ஆரம்பித்தான். டெஹ்ரா பேயின் உடலோ இரும்பாய் இறுகி இருந்தது. அவர் உடலில் எந்தப் பெரிய பாதிப்பும் தெரியவில்லை. சிறிது நேரத்தில் அந்தப் பாறை இரண்டாகப் பிளந்து தரையில் விழுந்தது.

டெஹ்ரா பே அவர்களை அவர்கள் எழுப்பி உட்கார வைத்தனர். மருத்துவர்கள் அவர் உடலைப் பரிசோதித்த போது அவர் வயிற்றில் பாறை இருந்து அழுத்திய அறிகுறிகள் தெரிந்தாலும் அவர் முதுகுத் தோலில் எங்குமே வாள் அழுத்திய காயம் தென்படவில்லை. எந்த வலியாலும் அவர் அவஸ்தைப்பட்டது போலவும் தெரியவில்லை. ஏதோ மலர்ப்படுக்கையில் படுத்து எழுந்தது போல் இருந்த டெஹ்ரா பேயை மருத்துவர்களும், அறிஞர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அந்தக் காட்சி பால் ப்ரண்டனுக்கு இந்தியாவில் காசியில் கண்ட சில பரதேசிகளை நினைவுறுத்தியது. கூர்மையான ஆணிகளில் அமர்ந்தும் படுத்தும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்த அந்த பரதேசிகளை யோகிகளாய் அவரால் நினைக்க முடியவில்லை என்றாலும் அவர்கள் அந்த சமயத்தில் அவரை ஆச்சரியப்படுத்தாமல் இருந்ததில்லை.

அடுத்ததாக ஒரு மரப்பலகை முழுவதும் ஆணிகளின் கூரிய முனைகள் மேற்பக்கம் நீட்டிக் கொண்டிருக்க அந்த ஆணிகள் மேல் டெஹ்ரா பேயைப் படுக்க வைத்தார்கள். உதவியாளர்களில் ஒருவன் தாவிக் குதித்து ஆணிகள் மீது படுத்திருந்த அவர் மீது நின்றான். ஒரு கால் அவர் நெஞ்சிலும், ஒரு கால் அவர் வயிற்றிலும் இருந்தன. பார்வையாளர்கள் ஒரு கணம் காணக் கூசி கண்களை மூடினார்கள். ஆனால் அந்த உதவியாளன் கீழே இறங்கிய பின் அவரைச் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் முதுகில் ஆணிகள் எந்தக் காயத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை வியப்புடன் கவனித்தனர்.

மயக்க நிலையிலிருந்து மீண்ட டெஹ்ரா பே சில நிமிட ஓய்வுக்குப் பின் தன் உடல், வலிக்கு அப்பாற்பட்டது என்பதை நிரூபிக்க வேறு சில சோதனைகளுக்கும் தன்னை உட்படுத்திக் கொண்டார். மருத்துவர்களைப் பெரிய ஊசிகள் எடுத்து தன் கன்னங்களில் குத்தச் சொன்னார். இரு கன்னங்களில் குத்திய ஊசிகள் வாய் வழியே வந்த போதும் அவர் சிறிது கூட முகம் மாறவில்லை. முகத்தில் சில இடங்கள் இது போன்ற ஊடுருவலில் காயம் அடைவதில்லை என்பதை உணர்ந்திருந்த மருத்துவர்களை டெஹ்ரா பே எங்கு வேண்டுமானாலும் குத்திக் கொள்ளலாம் என்று அனுமதித்தார்.

அவருடைய தாடையில் பெரிய ஊசிகளைக் குத்தினார்கள். முழு விழிப்பு நிலையில் இருந்த போதும் டெஹ்ரா பே எந்த வலியும் இல்லாமல் இருந்தார். மருத்துவர்களில் ஒருவர் ஒரு பெரிய கத்தியை அவர் கழுத்தின் முன் பகுதியில் ஒரு அங்குல தூரம் உள்ளே செலுத்திய போதும் அவர் சாதாரணமாக அமர்ந்திருந்தது அனைவரையும் திகைப்படைய வைத்தது. தொடர்ந்து முகத்திலும் மார்பிலும் உடைந்த கண்ணாடித் துண்டுகளால் கீறிய போதும் அவர் காயமடையாதது மட்டுமல்ல ஒரு துளி இரத்தம் கூட அவர் உடலில் இருந்து சிந்தவில்லை. அவர் ஏதாவது மருந்து உட்கொண்டிருந்தாரா என்ற சந்தேகத்தில் மருத்துவர்கள் செய்த பரிசோதனைகளிலும் அதற்கான அறிகுறி கிடைக்கவில்லை.

ஒரு மருத்துவர் இரத்தம் வருவதைக் காண வேண்டும் என்று சொன்னார். சம்மதித்த டெஹ்ரா பே அடுத்ததாக அவர் மார்பில் கத்தியால் குத்திய போது இரத்தம் வரவழைத்தார். இரத்தம் அவர் மார்பை நிறைத்த வரை பார்த்த அந்த மருத்துவர் போதும் என்று சொன்ன போது உடனடியாக இரத்தம் வெளி வருவதை தன் சக்தியால் டெஹ்ரா பே நிறுத்தினார். அடுத்த பத்தே நிமிடங்களில் அந்த மார்புக் காயம் இருந்த இடம் தெரியாமல் போகுமாறு குணப்படுத்தியும் காட்டிய போது அனைவரும் பிரமித்துப் போயினர். எரியும் கொள்ளியால் அவருடைய கால்களில் பாதம் முதல் தொடை வரை சூடுபோட்டனர். அதிலும் மனிதர் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. சுமார் 25 நிமிடங்கள் அப்படி தன் முழு கட்டுப்பாட்டில் உடலை வைத்திருந்த அவர் இயல்பு நிலைக்கு வந்த பின்னர் சொன்னார். “நான் முன்கூட்டியே தயார் நிலையில் இல்லாத நேரத்தில் எதிர்பாராதவிதமாய் என்னை கத்தியால் சிறிது கீறினாலும் வலி தாங்காமல் கத்தி விடுவேன்

அடுத்ததாக அவர் கோழி முயல் இரண்டையும் தனித்தனியாக முற்றிலும் நகர சக்தியற்றதாக்கிக் காட்டினார். உயிர் உள்ளது என்பதற்கு அறிகுறியாக அவற்றின் கண்கள் அசைந்தனவே தவிர மேசையின் மீது இருந்த அவற்றால் வேறெந்த விதத்திலும் நகர முடியவில்லை. பின் சிறிது நேரம் கழித்து அவர் லேசாகத் தட்டிக் கொடுத்த பின்னர் தான் அவை அங்குமிங்கும் ஆனந்தமாக ஓடின.

பின் டெஹ்ரா பே உயிருடன் சமாதி ஆகிக் காட்டும் பரிசோதனையில் தன்னை உட்படுத்திக் கொண்டார். சமாதியான பின் முன்கூட்டியே தெரிவித்த நேரத்தில் மீண்டும் உயிர்பெற்றுக் காட்டுவதாகச் சொன்னார். 28 நாட்கள் மண்ணில் புதைந்ததாக அவர் சொல்லி இருந்தாலும் நேரில் பார்த்தவர் பால் ப்ரண்டன் திரட்டிய குழுவில் யாரும் இல்லை என்பதால் அவர்கள் நேரில் காண ஆவலாக இருந்தனர். ஒன்றரை மணி நேரம் அந்த இடத்தில் சமாதியாகி விடுவதாகவும், பின் ஐந்து நிமிடத்தில் உயிருடன் திரும்புவதாகவும் அவர் உறுதியளித்தார்.

முன்பு மயக்க நிலைக்குச் சென்றது போல முதலில் தன் கழுத்தின் பின்புறத்தில் மண்டையின் அடிப்பகுதியில் கை விரல்களால் அழுத்தி, இன்னொரு கைவிரல்களால் தன் நெற்றிப் பொட்டுகளை அழுத்தி, பின் நன்றாக மூச்சை உள்ளே இழுத்த அவர் சில நொடிகளில் உயிரற்ற பிணம் போல சாய அவருடைய உதவியாளர்கள் அவரைப் பிடித்துக் கொண்டனர். அவர் மூச்சு நின்றது. இரத்த ஓட்டமும் நின்றது. இதை அங்கிருந்த மருத்துவர்கள் உறுதி செய்தனர். பின் அவர் மூக்கிலும், காதுகளிலும் பஞ்சை அடைத்து ஒரு சவப்பெட்டியில் கிடத்தினார்கள். சவப்பெட்டி உண்மையானது தானா இல்லை ஏதாவது ரகசியக் கதவு இருக்கிறதா என்பதையும் அவர்கள் முன்பே பார்த்து வைத்திருந்தனர். அவரை அதில் கிடத்திய பின் அந்த சவப்பெட்டியை சிவப்பு மணலால் நிரப்பி சவப்பெட்டியை ஆணி அடித்து மூடினார்கள். இன்னொரு பெரிய பெட்டியில் சவப்பெட்டியை வைத்து அதையும் மண்ணால் நிரப்பி மூடினார்கள். இது நடைபெற்ற இடம் கெய்ரோவில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் மாடியில் உள்ள ஒரு பெரிய வீட்டில் என்பதால் இரகசிய சுரங்கப்பாதை தரையில் இருக்க வழியில்லை என்றாலும் அதையும் ஒரு முறை பரிசோதித்து அங்குள்ள அறிஞர்கள் திருப்தி அடைந்தார்கள்.

ஒன்றரை மணி நேரம் அனைவர் பார்வையும் அந்த தற்காலிக சமாதிப் பெட்டியில் தான் இருந்தது. ஒன்றரை மணி நேரம் கழிந்த பின் அந்தப் பெட்டி திறக்கப்பட்டு மணல் எடுக்கப்பட்டது. உள்ளிருந்த சவப்பெட்டி எடுக்கப்பட்டு ஆணிகளைக் களைந்து அதையும் திறந்தனர். பின் அவரை எடுத்து ஒரு நாற்காலியில் உட்கார வைத்தனர். அவர் முன்பே கூறியபடி சில நிமிடங்களில் அவர் கண்கள் அசைந்தன, மூச்சு விடவும் ஆரம்பித்தார்.

தனது ஆழ்ந்த சமாதி உறக்கம் புத்துணர்ச்சி தரக்கூடியதாக இருந்தது என்றும், உடல் முன்பே தன்னால் குறிக்கப்பட்ட சரியான நேரத்தில் மறுபடி இயங்க ஆரம்பித்தது என்றும் கூறினார். பால் ப்ரண்டனும், அங்கு கூடியிருந்த மருத்துவர்கள் மற்றும் அறிஞர்களும், பார்வையாளர்களும் மனிதன் நினைத்தால் என்ன எல்லாம் செய்ய முடியும் என்பதற்கான ஓருசில உதாரணங்களிலேயே உணர்ந்த சிலிர்ப்பில் இருந்தனர்.

பின்னர் ஒரு நாள் அவரை பால் ப்ரண்டன் சந்தித்த போது மனித சக்தி எல்லையற்றது என்பதை இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பல காலமாக அறிந்திருந்ததுடன் அதில் கற்பனைக்கும் எட்டாத அளவு முன்னோர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்றும் கூறினார். இதையெல்லாம் வைத்துப் பணமாக்கும் எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டதில்லை என்றும் தான் விரும்பா விட்டாலும் இதை ஒரு வியாபாரம் போல செய்வதற்கு தான் வருத்தப்படுவதாகவும் டெஹ்ரா பே தெரிவித்தார். உண்மையில் இது ஒரு விஞ்ஞானம். இதில் நான் பெரிய விஞ்ஞானியாக ஆசைப்பட்டேன். ஆனால் உலகம் என்னை வியாபாரியாக்கி விட்டது.

ஆனாலும் பால் ப்ரண்டனுக்கு டெஹ்ரா பே அவர்கள் மீது ஒரு தனி மரியாதை ஏற்பட்டது. இது போன்ற சித்திகள் பெற்ற ஒருசிலர் தங்களை மிக உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்கையில் இது எல்லாம் மனிதனால் முடிந்தவையே, தகுந்த பயிற்சியாலும், மன உறுதியாலும் ஒருவர் பெற்று விட முடியும் என்று சொல்ல முடிந்த அடக்கம் எத்தனை பேருக்கு வரும் என்ற வியப்பு அவர் மனதில் ஏற்பட்டிருந்தது. பால் ப்ரண்டன் அவரைக் கேட்டார். “இந்த அற்புதங்களை எப்படி செய்கிறீர்கள் என்று விளக்க முடியுமா?

(தொடரும்)

- என்.கணேசன்

3 comments:

  1. தகுந்த பயிற்சியாலும், மன உறுதியாலும் ஒருவர் பெற்று விட முடியும் என்று சொல்ல முடிந்த அடக்கம் எத்தனை பேருக்கு வரும்

    ReplyDelete
  2. நல்ல கருத்துள்ள விசயங்கள் பதிவிட்டு உள்ளீர்கள்

    பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete