சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 1, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-23

வியாதிகளைக் குணப்படுத்தும் ஓல்கா வோரால்



1979 ஆம் ஆண்டு உயிர் இயற்பியல் (Biophysics) துறையில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பி.எச்டி பட்டம் பெற்ற பெவர்லி ரூபிக் (Beverly Rubik) என்ற ஆராய்ச்சியாளர் ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு மாறியது ஒரு சுவாரசியமான கதை. விளையாட்டுகளிலும், நடனத்திலும் கூட மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர் ஒரு சமயம் மூட்டு வலியால் மிகவும் அவதிப்பட்டார். அப்போது டாக்டர் ஓல்கா வோரால் (Dr. Olga Worrall) என்ற சிகிச்சையாளர் தன் கைகளால் தொட்டே நோய்களையும், வலிகளையும் போக்க முடிந்தவர் என்று கேள்விப்பட்டு உடனே அவரை அணுகினார்.

நவீன கல்வியிலும், சிந்தனைகளிலும் வளர்ந்திருந்த ரூபிக்கிற்கு இது போன்ற சிகிச்சை முறைகளில் பெரியதொரு நம்பிக்கை இருந்திருக்க வய்ப்பில்லை என்றாலும் பலர் சொல்லக் கேட்டிருப்பதை சரிபார்க்க இதுவே வாய்ப்பு என்று அவர் கருதினார். டாக்டர் ஓல்கா வோரால் அவருடைய முழங்கால் மூட்டில் கை வைத்த சில நிமிடங்களில் மூட்டு வலி மிகவும் குறைந்து போனது. இது விஞ்ஞானியான ரூபிக் அவர்களுக்கு மிக ஆச்சரியமான விஷயமாக இருந்தது. அவர் அறிந்திருந்த மருத்துவ முறைகளில் இது போன்ற அதிசயத்தை அவர் கேள்விப்பட்டிராத ஒன்றாக இருந்ததால் இது குறித்து விரிவாக ஆராய முற்பட்டார். தன் ஆராய்ச்சிகளுக்கு உதவ முடியுமா அன்று அவர் டாக்டர் ஓல்கா வோராலைக் கேட்க அவரும் ஒத்துக் கொண்டார்.

முன்பே பாக்டீரியாக்களை வைத்துப் பல ஆராய்ச்சிகள் செய்து பார்த்திருந்த பெவர்லி ரூபிக் ஆழ்மன சக்தி ஆராய்ச்சிகளைத் தனக்கு நன்கு தெரிந்திருந்த பாக்டீரியாக்களை வைத்தே செய்து பார்க்கத் தீர்மானித்தார். பல நவீன உபகரணங்களை வைத்து நீரில் நீந்தும் பாக்டீரியாக்களைப் பல புகைப்படங்கள் ரூபிக் எடுத்து வைத்திருந்தார். அவற்றைத் தொடர்ச்சியாக கவனிக்கையில் அவை நீந்துவது கரடுமுரடில்லாத அமைதியான வளைவுகளாய் தெரிந்தன. சில வேதிப்பொருள்களை அவற்றுடன் சேர்த்தபோது அவை செயலிழந்து ஸ்தம்பித்துப் போவதை அவர் கவனித்தார்.

அப்படி அந்த பாக்டீரியாக்களை செயலிழக்கச் செய்கிற வேதிப் பொருள்களைப் பெருமளவு அந்த நீரில் சேர்த்து அந்தக் கலவை உள்ள மைக்ராஸ்கோப் ஸ்லைடின் மீது டாக்டர் ஓல்கா வோராலின் கைகளைக் குவித்து வைக்கச் சொன்னார். பன்னிரண்டு நிமிடங்கள் கழிந்த பின் அந்த மைக்ராஸ்கோப் ஸ்லைடை சோதித்துப் பார்த்த போது அந்த பாக்டீரியாக்களில் ஐந்திலிருந்து பத்து சதவீதம் பாக்டீரியாக்கள் தங்கள் செயல்திறனை மீண்டும் பெற்றிருந்தன.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக அந்த பாக்டீரியாக்களை வைத்து ஆராய்ச்சி செய்திருந்த ரூபிக்கிற்கு இது போல் முன்பு பாக்டீரியாக்கள் மீண்டும் செயல்திறனை அப்படி மீட்க முடிந்த சம்பவங்களைக் காண முடிந்ததில்லை. ஒருவேளை மனிதக் கைகளின் இளஞ்சூட்டில் அந்த பாக்டீரியாக்கள் அந்த வேதிப்பொருள்களின் செயல்பாட்டையும் மீறி செயல் திறன் திரும்பப் பெறுகின்றனவா என்ற சந்தேகம் எழத் தன் கைகளையும், வேறுசிலர் கைகளையும் மைக்ராஸ்கோப் ஸ்லைடில் குவித்து ஆராய்ச்சிகள் செய்து பார்த்தார். ஆனால் டாக்டர் ஓல்கா வோராலின் கைகள் குவித்ததால் ஏற்பட்ட விளைவுகள் மற்றவர்கள் கைகளைக் குவித்த போது ஏற்படவில்லை.

அந்தப் பாக்டீரியாக்களை அழிக்கவல்ல, அல்லது அவற்றின் வளர்ச்சியைத் தடுக்க வல்ல (antibiotic) நுண்பொருள்களை அந்த பாக்டீரியாக்களுடன் சேர்த்து மீண்டும் அந்த ஆராய்ச்சிகளை ரூபிக் தொடர்ந்தார். மிக அதிகமான அளவு அந்த நுண்பொருள்களைச் சேர்த்த போது டாக்டர் வோராலின் தொடுதலால் எந்த வேறுபாடும் தெரியவில்லை. ஆனால் குறைந்த அளவு நுண்பொருள்களைச் சேர்த்த போது, அந்த பரிசோதனைக் குழாய்களை வோரால் சிறிது நேரம் தொட்ட போது அந்த பாக்டீரியாக்கள் மீண்டும் உயிர் பெறவும் வளர்ச்சியடையவும் தொடங்கின. டாக்டர் வோராலின் கைகளுக்கும் அந்த சோதனைக் குழாயிலிருந்த பாக்டீரியாக்களுக்கும் இடையே ஏதோ நிகழ்கிறது என்பது மட்டும் ரூபிக் அவர்களுக்குத் தெரிந்தது. ஃபாரடே கூண்டு போன்ற நவீன கருவிகள் கூட கண்டு பிடிக்க முடியாத உயிர்மின்காந்த நுண்ணலைகள் (bioelectromagnetic subtle waves) உருவாகி இந்த அற்புதங்களை நிகழ்த்துகின்றன என்ற கணிப்புக்கு வந்தார்.

(சிலர் நட்டால் செடிகளும், மரங்களும் நன்றாக செழித்து வளரும் என்று ஒருசிலர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அப்படி ஓரிருவர் நடும் தாவரங்கள் எல்லாம் மிகச் செழிப்பாக வளர்வதைப் பார்த்தும் இருக்கிறேன். ஆனால் அதைப் பற்றி பெரிதாக அப்போது நினைக்கத் தோன்றியதுமில்லை. ஆனால் ரூபிக் அவர்களின் பரிசோதனைகள் பற்றிப் படிக்கையில் அவையெல்லாம் கூட சிந்திக்க வேண்டியவையாகவே தோன்றுகிறது. அந்த நபர்கள் ஆழ்மன சக்தியாளர்களாக இல்லாதிருந்தாலும் அந்தத் தாவரங்கள் வளர உதவுகின்ற ஏதாவது சக்தியை அந்த விதைகளுக்கோ, நாற்றுகளுக்கோ தர வல்லவர்களாக இருந்திருக்கலாம்)


பெவர்லி ரூபிக் அறிவியல் ரீதியாக ஆழ்மன சக்திகளுக்கு விடை கண்டு பிடிக்க முயன்று கொண்டிருக்கையில் டாக்டர் ஓல்கா வோராலோ தன் சக்தியைப் பிரபஞ்ச சக்தியாகக் கூறினார். 1972ஆம் ஆண்டு இறந்த அவர் கணவர் அலெக்சாண்டர் அம்புரோஸ் வோராலும் அவர் போலவே சக்தி படைத்தவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓல்கா வோராலும் 1985ஆம் ஆண்டு இறக்கும் வரை மனிதர்களை மட்டுமல்லாமல் நோய்வாய்ப்பட்ட விலங்குகளையும், தாவரங்களையும் கூடத் தன் சக்தியால் குணப்படுத்தி வந்தார்.

1982ல் Science of Mind என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் குணப்படுத்தும் ஆழ்மன சக்தியை விவரிக்கும்படி பேட்டியாளர் கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னார். “ஒரு பொறியியல் வல்லுனரான என் கணவர் அதை நுண்ணிய மின்னலை என்றார். இந்தியர்கள் ப்ராணன் என்று சொல்கிறார்கள். உயிர்சக்தி என்று சிலரும், ஆழ்மன சக்தி என்று சிலரும் கூறுகிறார்கள். பெயர் எதுவாக இருந்தாலும் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பே என் கணவர் அந்த சக்தி எல்லா மனிதர்களையும் சூழ்ந்து இருப்பதாக உறுதியாகச் சொல்வார். அந்த சக்தியை முறையாகப் பயன்படுத்தினால் நோய்களைக் குணப்படுத்துவது சுலபம். அந்த சக்தியில் மின்னலைகள் இருப்பதாக என் கணவர் கடைசி வரை கூறி வந்தார். நாங்கள் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கையில் தங்கள் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் உணர்வதாகப் பல நோயாளிகள் சொன்னதைப் பார்க்கையில் அப்படி இருக்கலாம் என்று தோன்றுகிறது.”

“இறைவன் இந்த உலகத்தை குறைபாடில்லாமல் படைத்திருக்கிறார். மனிதன் சரியான விதத்தில் வாழாமல் பிறழும் போது நோய் உட்பட பல தீமைகளை வரவழைத்துக் கொள்கிறான். மனிதன் மீண்டும் தன் உயர்நிலையைத் திரும்பப் பெற இந்த இயல்பான சக்தியை உபயோகித்து மீளலாம். இதை நான் இறைசக்தி என்றே நினைக்கிறேன். ஒருவரைக் குணப்படுத்த நான் முயலும் போது இறைவனின் இந்த சக்தி என் மூலமாகச் சென்று பலனளிக்கிறது என்று கூறத் தோன்றுகிறது”
மேலும் பயணிப்போம்......

(தொடரும்)

என்.கணேசன்

நன்றி: விகடன்

3 comments:

  1. ஆச்ச‌ரிய‌ங்க‌ள் தொட‌ர‌ட்டும்.

    ReplyDelete
  2. கணேசன், உங்கள் செய்திகள் மிகவும் நன்றாக உள்ளது.

    நன்றி
    வாசு

    ReplyDelete
  3. I think this is one of the method of Pranic Healing

    ReplyDelete