
நீங்கள் யாரை மிகப் பெரிய வெற்றியாளர் என்று நினைக்கிறீர்கள்? யாருடைய வெற்றியும் அதிர்ஷ்டமும் உங்களை பெரிதும் ஊக்குவிக்கிறது? இது போல் ஆக முடிந்தால் அது தான் அதிர்ஷ்டம் என்று யாரைப் பார்த்து முடிவெடுக்கிறீர்கள்? அவர் யாராக இருந்தாலும் அவர் வாழ்க்கையில் அடைந்த சிகரங்களைப் பார்த்தே நீங்கள் அப்படி முடிவெடுத்திருப்பீர்கள் என்ற சந்தேகமே இல்லை. அது ஒரு சினிமா நடிகராக இருக்கலாம், ஒரு பெரிய பணக்காரராக இருக்கலாம், ஏதாவது துறையில் பிரமிக்கத் தக்க சாதனைகள் புரிந்தவராக இருக்கலாம். அவர்கள் படைத்துள்ள வெற்றி உங்களை அப்படி நினைக்க வைத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
ஆனால் வாழ்க்கையில் சிகரங்களை எட்டுதல் தினசரி அனுபவமல்ல. பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வருவதும், பாராட்டு விழாக்களில் நாயகனாக இருந்து பெருமைகளை ஏற்றுக் கொள்வதும் அன்றாட சம்பவம் அல்ல.
2008 ஒலிம்பிக்ஸில் எட்டு தங்கப் பதக்கங்கள் பெற்ற ஒரே நபர் என்ற பெருமை படைத்த மைக்கேல் ·ப்ரெட் பெல்ப்ஸை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஒலிம்பிக் பந்தயம் ஒரு சிகரம். சில நாட்கள் அவர் சந்தித்த வெற்றிகள் அவை. ஆனால் கடந்த பல வருடங்களாக அதற்கான தீவிர பயிற்சி என்ற சமவெளியில் சஞ்சரித்து பிறகு அடைந்த சிகரமே ஒலிம்பிக் வெற்றி. அந்த வருடங்களில் ஒவ்வொரு நாளும் பயிற்சி தொடர்ந்து செய்வது சுலபமான ஒன்றல்ல. பயிற்சியின் போது அவரைப் படம்பிடித்து பத்திரிக்கைகளில் போடவோ, டெலிவிஷனில் காட்டவோ நிருபர் கூட்டம் காத்திருக்கவில்லை. தனிமையில் போரடிக்கிறது, சோம்பலாக இருக்கிறது என்றெல்லாம் சும்மா இருந்து விட்டு நேரடியாக ஒலிம்பிக்கிற்கு வந்து பதக்கம் பெற்று விடவில்லை. நாம் காண்பது சிகரங்களைத் தான் என்றாலும் அவர்கள் சிகரங்களை நோக்கிச் செல்லும் வாழ்க்கையில் அதிகம் பயணிப்பது சமவெளிகளிலேயே என்பதை மறந்து விடக் கூடாது.
இனியும் 2012ல் அவர் சிகரங்களை எட்ட வேண்டுமானால் இனி வரும் நான்கு வருடங்கள் பயிற்சி என்ற சமவெளிகளில் சோர்வில்லாமல் பயணம் செய்தே ஆக வேண்டும். இது எல்லா சாதனையாளர்களும் சந்தித்தாக வேண்டிய வாழ்க்கை முறை தான். பரிசு, வெற்றி என்ற பகட்டான அம்சங்கள் மட்டுமே நிறைந்த வாழ்க்கை என்றென்றைக்கும் யாருக்கும் அமைந்து விட முடியாது. கதைகளிலும் அல்லது சினிமாக்களிலும் கடைசியாக சொல்வது போல அதற்கு மேல் கதாநாயகனும், கதாநாயகியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர் என்பது அழகான கற்பனை. நிஜ வாழ்க்கை அப்படியல்ல. சிகரத்திற்கு மேல் சிகரமாகவே போய்க் கொண்டிருப்பது கற்பனையில் மட்டுமே நிகழ முடியும்.
எனவே சிகரங்களை ஆராதித்து சமவெளிகளை வெறுத்து விடாதீர்கள். சமவெளிகள் இல்லாமல் சிகரங்களை மட்டுமே சந்திக்க ஆசைப்படாதீர்கள். இன்றோடு சமவெளி வாழ்க்கை முடிந்து விட்டது. நாளையில் இருந்து சிகரங்கள் மட்டுமே என்று பகற்கனவு காணாதீர்கள். இரு சிகரங்களுக்கு மத்தியில் அதிகமாக நாம் இருப்பது சமவெளிகளிலேயே என்பதை நினைவு வைத்திருங்கள். சமவெளிகளை வெறுப்பவன் சிகரங்களை அடைய முடியாது.
எனவே வாழ்க்கையில் நிறைவையும், மகிழ்வையும் வேண்டுபவர் யாராயினும் தினசரி வாழ்க்கை என்ற சமவெளிகளையும் ரசிக்கப் பழகுவது முக்கியம். ஏனென்றால் அவையே ஒருவர் வாழ்வில் அதிகம். அப்படியே வெற்றி என்னும் சிகரங்களை அடைய விரும்புபவரும் பயிற்சி என்ற சமவெளிகளை அலட்சியப்படுத்தி விடக் கூடாது. ஏனென்றால் சமவெளிகளைத் தாண்டினால் மட்டுமே ஒருவரால் சிகரங்களை அடைய முடியும். அதை மறந்து விட்டு சுலபமாக சிகரங்களில் இருந்து சிகரங்களுக்குத் தாவி சஞ்சரித்துக் கொண்டே இருக்க ஒருவர் ஆசைப்பட்டால் அது நிஜ வாழ்க்கையில் ஏமாற்றத்தையே அளிக்கும்.
- என்.கணேசன்
பொதுவாக தோல்வி, வெற்றி வைத்தே கட்டுரைகள் பார்த்திருக்கிறேன். ஆனால் நீங்கள் தினசரி வாழ்வையும், முயற்சிகளையும் சமவெளிக்கு ஒப்பிட்டு தந்திருப்பது வித்தியாசமாக, நன்றாக இருந்தது.
ReplyDeleteA very good post sir
ReplyDeleteஇப்போதெல்லாம் தலைப்பை பார்த்தாலே இது கணேசன் சாருடையது என்ற கண்டுபிடிப்பும் ஆர்வமும் சேர வருகிறது .
ReplyDeleteநல்ல சிந்தனை .