சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, December 7, 2007

உங்கள் விதியை யார் தீர்மானிக்கிறார்கள்?

சுயமுன்னேற்றக் கட்டுரை

ரால்·ப் பார்லெட் (Ralph Parelette) என்பவர் பிரபல அமெரிக்கப் பேச்சாளர். ஒரு முறை அவர் 'விதி' பற்றிப் பேச ஒரு கண்ணாடி ஜாடியுடன் மேடைக்கு வந்தார்.

அந்த ஜாடியில் சிறிய பீன்ஸ் விதைகளும் பெரிய வாதுமைக் கொட்டைகளும் (Walmuts) இருந்தன. ஜாடியை ஒரு முறை நன்றாகக் குலுக்கி விட்டு அங்கிருந்தவர்களுக்கு அதைக் காண்பித்தார். அளவில் பெரிய வாதுமைக் கொட்டைகள் ஜாடியின் மேல்புறத்திலும், சிறிய பீன்ஸ் விதைகள் அடிப்பகுதியிலும் இருந்தன.

"நண்பர்களே!இந்தப் பீன்ஸ் விதைகளில் ஒன்று என்னிடம் உதவி கேட்கின்றது. அதற்கும் வாதுமைக் கொட்டைகளுக்கு இணையாக மேலே தங்க ஆசையாம், நான் அதற்கு உதவப் போகிறேன். உங்கள் முன்னிலையிலேயே அந்த சிறிய பீன்ஸை மேலே வைக்கிறேன் பாருங்கள். ஆஹா, இப்போது பீன்ஸ் விதைக்குத் தான் எத்தனை சந்தோஷம்"

அவர் மறுபடி ஜாடியை நன்றாகக் குலுக்கினார். "அடடா, குலுக்கலில் பீன்ஸ் விதை தன் பழைய இடத்திற்கே போய் விட்டதே! அந்த பீன்ஸ் விதைக்கு மிகவும் வருத்தம். சமத்துவம் என்பது இல்லையே என்று அங்கலாய்ப்பு. அது மறுபடி என்னிடம் வேண்டிக் கொள்கிறது. தான் மேலே போய்த் தங்கா விட்டாலும் பரவாயில்லை. வாதுமைக் கொட்டை தனக்குச் சமமாகக் கீழே தங்க வேண்டும் என்கிறது"

"சரி, அதையும் செய்வோமே. பாருங்கள். உங்கள் முன்னிலையில் வாதுமைக் கொட்டை ஒன்றை எடுத்து பீன்ஸ்களுக்கு அடியில் வைக்கிறேன். சரி தானே!"

அவர் மறுபடி ஜாடியை நன்றாகக் குலுக்கினார். முன்பு போலவே அந்த வாதுமைக் கொட்டை மேலே வந்து விட்டது. பீன்ஸ் அடியில் தங்கி விட்டது.

"நண்பர்களே இது இயற்கையின் நியதி. அளவில் சிறியவை கீழும், அளவில் பெரியவை மேலும் எப்போதும் தங்கும். பீன்ஸ் மேலே வர வேண்டுமானால் அதற்கு ஒரே வழி, அது அளவில் பெரிதாக வளர்வது தான். அதை விட்டு நாம் எத்தனை தான் உதவினாலும் காலத்தின் குலுக்கலில் எல்லாமே தங்களுக்கு உரிய இடத்திலேயே தங்க நேரிடும்."

"நண்பர்களே பீன்ஸ¤க்கும் வாதுமைக் கொட்டைக்கும் தங்களின் ஆசைப்படி தங்களை மாற்றிக் கொள்ள முடியாது. ஆனால் மனிதர்களைப் பொறுத்தவரை நாம் அப்படிக் கையாலாகாதவர்கள் அல்ல. கடவுள் நம்மை அப்படிப் படைக்கவில்லை. நாம் உயர வேண்டுமானால் வளர வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அப்படி முயற்சி எடுப்பதன் மூலமாகவோ, முயற்சி எடுக்க மறுப்பதன் மூலமாகவோ நாமே நம் விதியைத் தீர்மானித்துக் கொள்கிறோம்" என்று கூறி முடித்தார்.

இது ஒரு மிக அழகான உவமை. ரால்·ப் பார்லெட்டின் பீன்ஸைப் போல் தான் நம்மில் பலரும் இருக்கிறோம். யாராவது ஏதாவது செய்து எப்படியாவது நம்மை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு போய் விடக் காத்து இருக்கிறோம்.

அப்படி வெறுமனே காத்துக் கிடக்கிற காலத்தில் பாதியைச் சரியாக, புத்திசாலித்தனமாக, முழுமனதோடு பயன்படுத்தினால் போதும், அந்த நிலைக்குத் தேவையான சகல தகுதிகளையும் நம் முயற்சியால் நாமே உருவாக்கிக் கொள்ள முடியும். யார் தயவும் இன்றி நம் இலக்குகளை நாமே சென்றடைய முடியும். மாறாக நல்ல நேரத்திற்காகவோ, அடுத்தவர் உதவிக்காகவோ, அதிர்ஷ்டத்திற்காகவோ காத்துக் கிடப்பவர்கள் இருக்குமிடத்திலேயே இருக்க வேண்டி வரும். அது தான் விதி.

எனவே அறிவையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள். காலத்திற்கேற்ப திறமையாக, விரைவாகச் செயல்படுங்கள். உங்கள் அறிவும் திறமையும் அதிகப்பட அதிகப்பட உங்கள் இலக்கிற்கான வழிகள் தாமாகவே தெளிவாகப் புலப்படத் துவங்கும். சரியான சந்தர்ப்பங்கள் தானாக உங்களைத் தேடி வர ஆரம்பிக்கும். இதுவே இயற்கையின் நியதி.

-என்.கணேசன்

5 comments:

  1. உண்மை. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை ஒவ்வொருவரும் அவரவர் வாழ்வில் இருந்தே புரிந்து கொள்ளலாம். நாம் சிலவற்றை அடைய முயற்றி செய்து ஜெயித்திருப்போம். சிலவற்றில் முயற்சி செய்யாமலோ அல்லது பாதியில் விட்டு விட்டதாலோ தோற்றுப் போய் அதற்கு விதியையோ பிறரையோ குற்றம் சொல்லிக் கொண்டு திரிந்திருப்போம்.

    நல்ல பதிவு.

    எனது பதிவுகளை நேரம் கிடைத்தால் படிக்கவும் - http://mangaiival.blogspot.com/

    ReplyDelete
  2. மிக அருமையான பதிவு.

    ReplyDelete