என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, September 22, 2025

யோகி 121


ஷ்ரவன் எதிர்பார்த்தது போலவே, அவன் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் தோட்ட வேலையைச் செய்து கொண்டிருக்கும் போது, கல்பனானந்தா அவனிடம் வந்தாள். அவன் அவளைப் பார்த்துப் புன்னகைத்த போது அவளும் பதிலுக்குப் புன்னகைத்தாள். அவன் அவளிடம் சொன்னான். “ரொம்ப நன்றி சுவாமினி

 எதற்கு?”

 ஷ்ரவன் எச்சரிக்கையுடன் சொன்னான். “இங்கே நான் இன்னொரு யோகியைப் பார்த்திருக்கிறீர்களா என்று உங்களிடம் கேட்டது தவறு தான். யோகிஜி இருக்கும் இடத்தில் இன்னொரு யோகியை நான் கேட்டிருக்கக்கூடாது. அது உங்களை வருத்தமடையச் செய்து விட்டது என்பது நீங்கள் பதில் எதுவும் சொல்லாமல் போனவுடன் தான் எனக்குப் புரிந்தது. அதைப் பெரிதுபடுத்தாமல் மன்னித்து நீங்கள் மறுபடியும் இயல்பாக என்னிடம் பழகுவதற்கு தான் நான் நன்றி சொன்னேன்.”

 நீங்கள் கேட்டதில் தவறில்லை. கேட்டதில் எனக்கு வருத்தமுமில்லை. அதனால் மன்னிக்க எதுவுமில்லை.” என்று கல்பனானந்தா அமைதியாகச் சொன்னாள்.

 சற்று நம்பிக்கை வர, ஷ்ரவன் தாழ்ந்த குரலில் சொன்னான். “நான் கேட்ட கேள்வியை நீங்கள் அவர்களிடம் சொல்லி விடாததற்கும் சேர்த்து தான் நன்றி சொன்னேன் சுவாமினி.”

 கல்பனானந்தா திகைப்புடன் அவனையே கூர்ந்து பார்த்தாள். அவன் இப்போது சொன்னதும் முன்பு போலவே அவளைப் பாதித்தது போல் தோன்றியது. அவள் மெல்ல சொன்னாள். “நீங்கள் அந்தக் கேள்வியைச் சும்மா கேட்டீர்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை ஷ்ரவனானந்தா. ஏதோ ஒரு காரணத்தோடு தான் கேட்டீர்கள் என்று இப்போதும் நான் நினைக்கிறேன்...”

 ஷ்ரவன் அவளிடம் கேட்டான். “இப்போது நான் எதாவது சொன்னாலும், அதையும் நீங்கள் வேறு யாருக்கும் சொல்ல மாட்டீர்கள் என்று நான் நம்பலாமா?”

 கண்டிப்பாக நம்பலாம். சொல்லுங்கள்.”

 ஷ்ரவன் தோட்ட வேலையைத் தொடர்ந்து செய்தபடியே தலையை உயர்த்தாமல் சொன்னான். “எனக்கு அடிக்கடி ஆவிகள் மூலமாகவும் ஏதாவது செய்திகள் வருவதுண்டு சுவாமினி. அப்படி ஒரு நாள், இங்கிருந்த ஒரு பெண் துறவியின் ஆவி என்னிடம் பேசியது...”

 கல்பனானந்தா திகைத்து அவளையுமறியாமல் இரண்டடி பின்வாங்கினாள். படபடப்புடன் அவள் கேட்டாள். “எந்தப் பெண் துறவியின் ஆவி?”

 ஷ்ரவன் சைத்ராவின் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. “தெரியவில்லை சுவாமினி. அது யோகாலயத்தில் வாழ்ந்த துறவியின் ஆவியாக என்னிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டது. அந்த ஆவி இங்கே வாழும் காலத்தில் ஒரு யோகியைச் சந்தித்ததாகவும், தன் தாத்தாவும் அந்த யோகியைச் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் சொன்னது. நான் யோகி பிரம்மானந்தாவைச் சொல்கிறதா என்று சந்தேகப்பட்டுக் கேட்டேன். அதற்கு அதுஅவரைச் சொல்லவில்லை, நிஜ யோகியைச் சொல்கிறேன்”  என்று சொல்லிவிட்டுப் போய் விட்டது. எனக்கு எதுவுமே புரியவில்லை...”

 கல்பனானந்தா அவனைத் திகைப்புடன் பார்த்தாள். அவளுடைய  அதிர்ச்சி கூடியதை ஷ்ரவன் கவனித்தான். “எனக்குத் தெரிந்த ஒரே யோகி, யோகிஜி பிரம்மானந்தா தான். அதனால் அந்த இன்னொரு நிஜ யோகி யாரென்று தெரிந்து கொள்ளத் தான், நீங்களும் பார்த்திருக்கிறீர்களா என்று உங்களைக் கேட்டேன்.”

 கல்பனானந்தா பதில் எதுவும் சொல்லாமல் சிலை போல் நின்றாள். அவனை எந்த அளவு நம்புவது, அவனிடம் என்ன சொல்வது என்று அவளால் தீர்மானிக்க முடியவில்லை என்பது அவளைப் பார்க்கையில் ஷ்ரவனுக்குப் புரிந்தது.

 அந்த சமயத்தில்  தூரத்தில் இருந்த கண்காணிப்பாளன் மெல்ல அவர்களை நோக்கி நடந்து வர ஆரம்பித்தான். கல்பனானந்தா அவனை ஓரக்கண்ணால் கவனித்து விட்டு அவசரமாகசாயங்காலம் பேசுவோம்என்று செடிகளைக் காட்டியபடி ஷ்ரவனிடம் சொன்னாள்.

 தூரத்தில் அதைக் கவனிக்கும் கண்காணிப்பாளனுக்கு அவள் அந்தச் செடிகள் பற்றி என்னவோ சொல்கிறாள் என்று தான் எண்ணத் தோன்றும். அவளுடைய புத்திசாலித்தனம் அவனுக்குப் பிடித்திருந்தது. அவள் நிதானமாக அங்கிருந்து நகர்ந்தாள்.

 வெளிப்பார்வைக்கு அவள் நிதானமாகவே நடந்தாலும் அவளுக்குள் பல்வேறு உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருந்தன. ஆரம்பத்திலிருந்தே அவளுக்கு ஏனோ ஷ்ரவன் மேல் சந்தேகம் இருந்து கொண்டேயிருந்தது. அவனுக்குத் தெரியும் காட்சிகள் கூட நடிப்போ என்று கூடத் தோன்றியிருந்தது. ஆனால் பிரம்மானந்தாவும், பாண்டியனும் அவனை நம்பினார்கள் என்பது புரிந்த போது சற்று குழப்பமாகவும் இருந்தது. பிரம்மானந்தா அவசியம் வந்தால் ஒழிய யாரையும் அதிகம் கவனிப்பவர் அல்ல. அவரையும், அவருக்கு ஆக வேண்டிய காரியங்களையும் தவிர வேறு யார் மீதும், வேறெதிலும், அவருக்கு இப்போதெல்லாம் அக்கறை கிடையாது. அதனால் அவர் ஷ்ரவனுக்கு அதிக முக்கியத்துவம் தந்து கவனித்திருக்காமல் போகலாம். ஆனால் பாண்டியன் தன்னைச் சுற்றி நடக்கும் எதிலும் கவனக்குறைவாக இருப்பவர் அல்ல. சோதித்துப் பார்க்காமல் யாரையும் நம்பும் ரகமும் அவரல்ல. அப்படிப்பட்டவர் ஷ்ரவனை முழுமையாக நம்பியது முன்பே அவர் அவனைச் சோதித்துப் பார்த்திருப்பார் என்பதையே காட்டியது. அதனால் ஷ்ரவனை நம்பாமலும் அவளுக்கு இருக்க முடியவில்லை.

 ஷ்ரவன் அவளிடம் சொன்னதை எல்லாம் பிரம்மானந்தா, பாண்டியன் இருவருக்கும் அவள் தெரிவித்தாலும் கூட தனிப்பட்ட முறையில் அவன் மீது எந்த உறுதியான அபிப்பிராயமும் சற்று முன்பு வரை அவளுக்கு இல்லாமலிருந்தது. ஆனால் நேற்று அவன் சுவாமினி, நீங்கள் யோகிஜி தவிர வேறு எந்த நிஜ யோகியையாவது சந்தித்திருக்கிறீர்களா?” என்று கேட்டதும், இன்று, இறந்து போன ஒரு பெண் துறவி நிஜமான யோகியைப் பார்த்து இருக்கிறாள் என்றும் அவளுடைய தாத்தா அந்த யோகியை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்றும் அவள் ஆவி விரும்புகிறது என்று அவன் சொன்னதும், அவனிடம் உள்ளதாகச் சொல்லி இருந்த சக்திகள் பொய்யல்ல என்பதை நிரூபித்து விட்டது. அவன் அந்தத் துறவியின் பெயரைச் சொல்லா விட்டாலும் அவன் யாரைச் சொல்கிறான் என்பதையும் அவள் அறிவாள். சைத்ரா அந்த யோகியைச் சந்தித்தது கல்பனானந்தாவைத் தவிர வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பேயில்லை. ஏனென்றால் சைத்ரா உயிரோடு இருக்கையில் யாரிடமும் அதைத் தெரிவிக்கவில்லை என்பது அவளுக்கு நிச்சயமாகத் தெரியும். அப்படி இருக்கையில் ஷ்ரவன் அதைச் சொல்ல முடிந்தது சைத்ராவின் ஆவி மூலமாகக் கேள்விப்பட்ட தகவலாகவே தான் இருக்க வேண்டும். கல்பனானந்தாவின் மனம் பழைய நினைவுகளால் நிம்மதி இழந்தது

 எத்தனை தான் ஆன்மீகத்தில் ஆழமாகப் போயிருந்தாலும், எத்தனை தான் தத்துவங்களைப் புரிந்து வைத்திருந்தாலும், பிரச்சினையான சூழ்நிலைகள் வரும் போது மனம் ஞானத்திலிருந்து வழுக்கி அஞ்ஞானத்தில் அமிழ்ந்து விடுகிறது. ஆத்ம சொரூபம் மறந்து போய், சூழ்நிலைகளை மனம் எடுத்துக் கொள்ளும் விதமே நிஜமாகி விடுகிறது. எதையும் கடந்து போக மனம் அனுமதிப்பதில்லை. பயனில்லாத விஷயங்களையும், கற்பனையான புரிதல்களையுமே பிடித்து வைத்துக் கொண்டு மனம் கஷ்டப்படுகின்றது. விலகி நின்று பார்க்கும் போது புரிகின்ற எதுவும், ஒன்றில் கலந்து நின்று அனுபவிக்கும் போது புரிவதில்லை. அதனாலேயே அவள் விலகி நிற்கும் துறவறத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறாள். ஆனாலும் மனம் விலகி நிற்கும் கலையை சுலபத்தில் கற்றுக் கொள்வதில்லை. திரும்பத் திரும்ப நினைவலைகளில் சிக்கிக் கஷ்டப்படும் முட்டாள்தனத்திலிருந்து மனம் தப்பிக்க முடிவதில்லை...

 இதை மணிக்கணக்கில் அவளால் பேச முடியும். இதை பக்கம் பக்கமாய் அவளால் எழுதவும் முடியும். பல சமயங்களில் அந்தப் புரிதலோடு அவள் வாழ்க்கையை அமைதியாக வாழ்ந்திருக்கிறாள். ஆனால் எல்லாச் சமயங்களிலும் அந்த ஞானமும், மாறாத அமைதியும் அவளுக்குச் சாத்தியப்பட்டதில்லை. தற்சமயமும் அது போன்றது தான்...

 ஆனால் அந்த நிஜ யோகியால் வாழ்க்கையின் எந்தச் சூழலையும், எல்லாச் சமயங்களிலும் ஞானத்தெளிவுடனும், மாறாத அமைதியுடனும் சந்திக்க முடியும். ஒரு நாடகத்தில் நடிக்க வேண்டியிருப்பதைப் போல் அவரால் வாழ முடியும். அவள் அதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறாள். அவளைப் போல் அவர் நீண்ட சொற்பொழிவுகள் ஆற்றியதில்லை. யாருக்கும் எந்த உபதேசமும் அவர் செய்ததும் இல்லை. அவர் வாழ்க்கையே உபதேசமாக இருந்திருக்கிறது. அதுவே வழிகாட்டியாக அமைந்திருக்கிறது. சில காலமாக பிரச்சினையான சூழ்நிலைகளைச் சந்திக்க நேரும் போது, அவள் அவரை நினைத்து தான் அமைதியை மீட்டு எடுக்கிறாள். உடைந்து போகாமல் சூழ்நிலைகளைச் சந்திக்கிறாள். தத்துவங்களை விட, ஆன்மீகத்தை விட அது தான் அதிகமாக அவளுக்கு உதவுகிறது

 ஆனால் இன்று மட்டும் ஏனோ அவர் நினைவும் அவளுக்கு அமைதி தரவில்லை. காரணம், ஷ்ரவன் அவர் நினைவை மட்டுமல்லாமல் அவள் மனதில் புதைந்திருந்த கடந்த கால நினைவுகளையும் சேர்த்துக் கிளறி விட்டிருந்தான்...

(தொடரும்)

என்.கணேசன்






Thursday, September 18, 2025

சாணக்கியன் 179

 

ர்வதராஜன் சந்திரகுப்தனைக் கொல்லச் சொன்னதற்கு ராக்ஷசர் உடனடியாக மறுமொழி எதுவும் சொல்லவில்லை. பர்வதராஜன் தன் இலாபத்திற்காகத் தான்  இதைச் சொல்கிறான் என்று தெரிந்திருந்த ராக்ஷசர் தன் திட்டமும் அதுவாகத் தானிருந்தது என்பதை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அவன் சொல்லித் தான் அவர் யோசிப்பதாகக் காட்டிக் கொண்டு சிறிது யோசித்து விட்டுச் சொன்னார். “ஹிமவாதகூட அரசரே. சந்திரகுப்தன் இறந்தால் அதிக இலாபமடையப் போவது நீங்கள் தான். வென்றதைப் பிரித்துக் கொள்ள வேண்டிய அவசியமும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும். எங்களுக்கு என்ன இலாபம்

 

பர்வதராஜன் சொன்னான். “முதல் இலாபம் எதிரியைத் தண்டித்த மனநிறைவு ராக்ஷசரே. நீங்கள் இளவரசி துர்தராவை என் மகன் மலைகேதுவுக்குத் திருமணம் செய்து தரச் சம்மதித்தால் நான் வென்றதில் பாதியைத் திருப்பித் தரத் தயாராக இருக்கிறேன். அது உங்களுக்கு அடுத்த பெரிய இலாபமாக இருக்கும். நான் என்றுமே பேராசைக்காரனல்ல ராக்ஷசரே. சாணக்கியர் முழுவதுமாக அனைத்தையும் தானே அடைய ஆசைப்படுவது போல நான் ஆசைப்படவில்லை. அவருக்கு நான் தர ஒப்புக்கொண்டிருக்கும் பாதியை உங்களுக்குத் திருப்பித் தருவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.”

 

பர்வதராஜனின் சாமர்த்தியத்தை ராக்ஷசர் உள்ளூர ரசித்தார். தனநந்தரின் மருமகனாக மலைகேது ஆனால், அடுத்த பட்டத்து வாரிசாகவும் ஆகி விடுவான். இப்போது பாதியும், தனநந்தனுக்குப் பின் பாதியும் கிடைத்தால் முழுவதுமே அவனுடையதாகி விடும். இப்போது சந்திரகுப்தனுடன் பிரித்துக் கொண்டால் பாதி மட்டுமே கிடைக்கும். அதுவும் சாணக்கியர் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினால் மட்டுமே அதுவும் கிடைக்கும்.  

 

ராக்ஷசர் தன் மனக்கணக்கை உரக்கச் சொல்லவில்லை. பர்வதராஜனுக்கு உடனடியாக நம்பிக்கையூட்ட விரும்பாதவராகச் சொன்னார். “சாணக்கியரின் நேரடி மேற்பார்வையில் இருக்கும்  சந்திரகுப்தனைக் கொல்வது யாருக்கும் சுலபமல்ல ஹிமவாதகூட அரசரே

 

பர்வதராஜன் சொன்னான். “மொத்தமாக இழந்ததில் பாதியைத் திரும்பப் பெறுவதும் எளிதாக நடக்க முடிந்த காரியமல்லை ராக்ஷசரே. ஆனால் தங்களைப் போன்ற கூர்மதி படைத்த மனிதருக்கு எதுவும் முடியாத காரியமல்ல என்பதையும் நான் அறிவேன். இந்த விஷயத்தில் மறைமுகமாக உங்களுக்கு எந்த உதவி செய்ய முடிந்தாலும் அதைச் செய்ய நான் தயார். என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் சொன்னால் போதும்...”

 

ராக்ஷசர் சொன்னார். “தேவைப்பட்டால் சொல்லியனுப்புகிறேன் அரசே.”  

 

பர்வதராஜன் ஏமாற்றமடைந்தான். உதவி என்ன என்று சொன்னால் அவர் திட்டம் என்ன என்று தெரிந்து விடும் என அவன் எதிர்பார்த்தான். ராக்ஷசரும் சாணக்கியரைப் போலத் தன் திட்டத்தை வெளிப்படையாகச் சொல்லும் பழக்கம் இல்லாதவர் போலிருக்கிறது... பர்வதராஜன் தன் ஏமாற்றத்தை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. “தங்கள் விருப்பம் போலச் செய்யுங்கள். ஆனால் எவ்வளவு சீக்கிரம் காரியத்தை முடிக்கிறீர்களோ அந்த அளவு நல்லது என்று நான் நினைக்கிறேன்.” என்று சொன்னான்.

 

காரியம் கச்சிதமாக முடிய வேண்டும் என்று விரும்புபவர்கள் அவசரப்படக்கூடாது. அவசரப்படும் போது தவறுகளுக்கு அதிக வாய்ப்பிருக்கிறது” 

 

உண்மை. ஆனால் காலம் தாழ்ந்து செய்து முடிக்கப்படும் செயல்களால் நம் நோக்கம் நிறைவேறுவதில்லை என்பதையும் மறந்து விடக்கூடாது.”

 

ராக்ஷசர் தலையசைத்தார். “அதிக பட்சம் ஒரு வாரம் தான். அதற்குள் முடிக்கப் பார்க்கிறேன்

 

நல்லது. காரியம் முடிந்த பின் சந்திப்போம்.” என்று சொல்லி பர்வதராஜன் கைகூப்பினான்.

 

ராக்ஷசரும் கைகூப்பி விட்டு எழுந்தார். அங்கிருந்து நகர்ந்தவர் அடுத்த கணம் இருளில் மறைந்தார். பர்வதராஜனும் எழுந்து வெளியே வந்தான். சுசித்தார்த்தக் அவரைப் பார்த்தவுடன் பரபரப்புடன் கேட்டான். “சொன்னபடி பிரதம அமைச்சர் வந்தாரா அரசே?”

 

வந்தார். பேசினோம். ஒன்று சேர்ந்திருக்கிறோம். என்ன ஆகிறதென்று பார்ப்போம்என்று சொல்லி பர்வதராஜன் கூடுதல் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

 

ராக்ஷசர் கும்மிருட்டில் சுவரோரமாக நின்றபடி கேட்டார்.  “பர்வதராஜன் சென்று விட்டாரா?”

 

சென்று விட்டார் பிரபு.” என்று இருட்டிலிருந்தே ஜீவசித்தியின் குரல் கேட்டது.

 

நல்லது. இனி விளக்கேற்றி விடலாம்என்றார் ராக்ஷசர்.

 

சிறிது நேரத்தில் அந்த வீட்டுக்குள் விளக்குகள் ஏற்றப்பட்டன. ஜீவசித்தியிடம் ராக்ஷசர் சொன்னார். “எங்களுக்குத் தனிமை தேவை ஜீவசித்தி. சிறிது நேரம் கழித்து விட்டு வா

 

ஜீவசித்திஉத்தரவு பிரபுஎன்று சொல்லி விட்டு அங்கிருந்து வெளியேறினான். அவன் சென்ற பிறகு ராக்ஷசர் சொன்னார். “இனி நீ வரலாம் விஷாகா

 

பக்கத்து அறையிலிருந்து தேவகன்னிகை போல் பேரழகாக இருந்த  இளம்பெண் வந்தாள். ”எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அழகு இவளுடையதுஎன்று தனநந்தன் முன்பொரு முறை அவரிடம் சிலாகித்துச் சொல்லி இருந்தான். அது நூறு சதவீத உண்மை என்று ராக்ஷசர் நினைத்தார். அவளிடம் இருக்கும் ஆபத்தை மிகச் சிலரே அறிவார்கள். அவளை அறிந்தவர்கள் அவளை நெருங்க ஆசைப்பட்டதில்லை. காரணம் அவள் ஒரு விஷ கன்னிகை. பூப்படைவதற்கு சற்று முந்தைய காலத்திலிருந்தே சிறிது சிறிதாய் விஷம் உட்கொண்டு தற்போது உடலெல்லாம் விஷமாக இருக்கும் அபூர்வ அழகி அவள். அவளுடைய ஒரு முத்தம் போதும் ஒருவனைப் பரலோகம் அனுப்புவதற்கு. நடனத்திலும் வீணை வாசிப்பிலும் ஈடிணையில்லாத விஷாகா தனநந்தனின் பூரண நம்பிக்கைக்குப் பாத்திரமானவள். தனநந்தன் மனமுவந்து மிகத் தாராளமாக பரிசுகள் வழங்கும் மிகச்சிலரில் அவளும் ஒருத்தி.  அதனாலேயே அவள் அவனிடம் இப்போதும் விசுவாசமாக இருக்கிறாள்.

 

ராக்ஷசர் அவளிடம் கேட்டார். “ஹிமவாதகூட அரசன் சொன்னதைக் கேட்டாய் அல்லவா?”

 

விஷாகா சொன்னாள். “கேட்டேன் பிரபு. இளவரசி கட்டாயத் திருமணத்திற்கு வற்புறுத்தப்பட்டிருப்பது வருத்தத்தைத் தருகிறது.” அவள் குரலில் கோபம் தொனித்தது.  

 

நீ மனம் வைத்தால் இளவரசியைக் காப்பாற்றி விடலாம் விஷாகாஎன்று ராக்ஷசர் மெல்லச் சொன்னார்.

 

விஷாகா சொன்னாள். “சாணக்கியருக்கு என்னைப் பற்றித் தெரியாத வரை நான் முயற்சி செய்ய முடியும். ஆனால் இப்போது நான் எதிரிகளை நெருங்கவும் முடியாத நிலைமை இருக்கிறதே பிரபு. என்ன செய்வது? ஆடல் பாடல்கள் அரண்மனையில் தற்போது நடைபெறுவதே இல்லை. சாணக்கியர், சந்திரகுப்தன் இருவருக்கும் அவற்றில் ஆர்வமில்லை போல் தெரிகிறது.”

 

அந்தச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாம் பர்வதராஜனின் உதவியை நாடலாம்.”

 

விஷாகா தலையசைத்தாள். “அப்படியானால் நான் முயற்சி செய்கிறேன். ஆனால் சந்திரகுப்தனின் மரணத்திற்குப் பிறகு நான் ஒரு கணமும் இங்கிருக்க முடியாது. என் வேலை முடிந்தபின் உடனடியாக நான் தப்பித்துச் செல்வதற்கு ஏற்பாடுகளை உங்களால் செய்ய முடியுமா?”

 

அதை நான் கண்டிப்பாகச் செய்கிறேன் விஷாகா. நீ இதில் வெற்றி பெற்றால் ஒருநாள் அரசர் தனநந்தர் இங்கே திரும்பவும் வரலாம். இளவரசி விருப்பமில்லாத இந்தத் திருமணத்திலிருந்து தப்பிக்கலாம். பழைய பொற்காலத்தைச் சிறிதாவது மீட்கலாம். நீ எடுக்கும் இந்த முயற்சி ஆபத்தானது என்பதை நான் மறுக்க மாட்டேன் விஷாகா. ஆனால் மகத வரலாற்றில் உன் சேவை பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும்...”

 

விஷாகா சொன்னாள். “இறப்பிற்குப் பின் கிடைக்கும் புகழில் எனக்கு ஆர்வம் இல்லை பிரபு. நான் இந்த ஆபத்தான வேலையில் ஈடுபட சம்மதித்தது எதிர்கால இலாபத்திற்காகவும் அல்ல. நானும் ஒரு பெண். நல்லதொரு திருமண வாழ்க்கை அமையும் பாக்கியத்தை என்றோ இழந்து விட்ட ஒரு விஷகன்னிகை.  ஆனால் நான் இன்னொரு பெண்ணின் திருமண வாழ்க்கை பாழாவதையாவது தடுக்க விரும்புகிறேன். அதைச் சாதித்துக் கிடைக்கும் ஆத்ம திருப்தி எனக்குப் போதும். மீதியுள்ள காலத்தில் என் வாழ்க்கை குறித்த விரக்தி என்னை ஆட்கொள்ளும் போது, நான் என் வாழ்வில் அர்த்தமில்லை என்று உணரும் தருணங்களில், இளவரசி துர்தராவின் வாழ்க்கை பாழாவதைத் தடுத்திருக்கிறேன் என்ற ஆத்ம திருப்தியுடன் என் வாழ்க்கையின் கசப்பைக் குறைத்துக் கொள்வேன். அது போதும் எனக்கு

 

ராக்ஷசர் அவள் வார்த்தைகளில் நெகிழ்ந்து போனார். கஷ்ட காலங்களில் தான் சுயநலமான மனிதர்களை நாம் அறிந்து கொள்கிறோம் என்பது பாதி தான் உண்மை. மிக நல்ல மனிதர்களையும் அப்போது தான் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது

 

(தொடரும்)

என்.கணேசன்




Monday, September 15, 2025

யோகி 120


 முக்தானந்தா தொடர்ந்து சொன்னார். “... அவளுடைய தந்தையின் செயலால் எல்லாமே வெறுத்துப் போய் நிம்மதிக்காக ஞான மார்க்கத்தில் நுழைந்தவள் அவள். பின் எங்கள் எல்லோரையும் விட ஆன்மீகத்தில் மிக ஆழமாய்ப் போனவள். அவள் எங்கள் எல்லோரையும் விட அதிகமாக, யோகாலயத்தின் எதிர்காலக் கனவுகளை வளர்த்துக் கொண்டவள். வயதில் மிக இளையவளானாலும் பிரம்மானந்தா உட்பட நாங்கள் எல்லோரும் அவளை மதித்தோம். இங்கே விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தவுடன் அவள் எப்போதோ இங்கிருந்து போய் விடுவாள் என்று நான் எதிர்பார்த்தேன். எங்கே போனாலும் அவளுடைய அறிவுக்கும், ஞானத்திற்கும் சிறப்பான இடம் கிடைத்திருக்கும். ஆனால் அவள் ஏன் போகவில்லை என்பது தெரியவில்லை. பிரம்மானந்தா மாறியது போல் அவளாலும் மாற முடியும் என்று என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் அவள் மாறாமல் இதையெல்லாம் எப்படி சகித்துக் கொண்டிருக்க முடியும் என்றும், பிரம்மானந்தாவுடன் நெருக்கமாக இருக்க முடியும் என்றும் எனக்கு இன்னமும் புரியவில்லை.”

 முக்தானந்தா சொல்வதை எல்லாம் கேட்கையில் அவனுக்கும் கல்பனானந்தா ஒரு புதிராகவே தோன்றினாள்.

 முக்தானந்தா தொடர்ந்து சொன்னார். “எனக்குத் தெரிந்த கல்பனானந்தா ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளதைப் போலவே பெண் உரிமைக்காகவும் தைரியமாய் குரல் கொடுப்பவள். அவள் பட்ட கஷ்டங்கள் அவளுக்காக மட்டுமல்லாமல் மற்ற பெண்களுக்காகவும் போராடத் தூண்டியிருந்தன. அதனால் தான் நான் அன்றைக்கு, சைத்ராவை கல்பனானந்தா காட்டிக் கொடுத்திருக்கவோ, அவளுடைய மரணத்திற்குக் காரணமாய் இருந்திருக்கவோ, வாய்ப்பில்லை என்று உறுதியாக சொன்னேன்....”

 அப்படிப்பட்ட கல்பனானந்தா எந்த விதமான நிர்ப்பந்தங்களால் சிக்கி இங்கேயே இருக்கிறாள் என்பது ஷ்ரவனுக்கும் தெரியவில்லை. ஆனால் சைத்ரா பற்றிய உண்மைகளை அறிந்தவளும், சைத்ரா சொன்ன யோகியை அறிந்தவளுமான ஒருத்தி இங்கே இருக்கிறாள் என்பதும், அவள் முழுவதுமாக எதிரிகள் கோஷ்டியில் சேர்ந்தவளுமல்ல என்பதும் அறிந்து கொள்ள முடிந்தது அவனுக்குத் திருப்தியளித்தது.

 மறுநாள் காலை அவன் வழக்கம் போல் மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருந்த போது மறுபடியும் அந்த ஓநாய் அவனுக்குத் தென்பட்டது. அவன் மகிழ்ச்சியாகஹாய் நண்பாஎன்று மனதிற்குள் அழைத்தான். ஓநாய் அவனை நெருங்கி வந்து அவனைத் தொட்டது. இப்போது அவனுக்கு உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. ஆனால் அது தாங்க முடிந்ததாக இருந்தது. கூடவே உடல் இலகுவாவது போல் ஒரு உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. நன்றியுடன் அந்த ஓநாயை அவன் பார்த்தான். ஓநாய் தீ உமிழும் கண்களால் அவனைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுத் திரும்பியது. அது பின் வேகமாக நகர்ந்தது.

 அது போகுமிடமெல்லாம் அவனால், ஆச்சரியகரமாக, பார்க்க முடிவதை ஷ்ரவன் பிரமிப்புடன் பார்த்தான். ஓநாய் யோகாலயத்தின் அலுவலக அறைக்குள் நுழைந்தது. அது நுழையும் வரை, மூடியிருந்த அலுவலக வாசல் கதவு தான் ஷ்ரவனுக்குத் தெரிந்து கொண்டிருந்தது. ஆனால் அது கதவை ஊடுருவி உள்ளே நுழைந்தவுடன்அலுவலகத்தின் உட்பக்கம் தெரிய ஆரம்பித்தது. அவன் இந்தப் புதிய முன்னேற்றத்தில் திகைத்தான். இது போன்ற வேறு இடக் காட்சிகள் அவனுக்கு இதுவரை தெரிந்ததில்லை.

 ஓநாய் நேராக உள்ளே உள்ள ஹாலுக்குப் போனது. உள்ளே கம்ப்யூட்டர்கள் மட்டுமே இருந்தன. ஆட்கள் இருக்கவில்லை.  ஓநாய் ஒரு கம்ப்யூட்டருக்கு முன்னால் உள்ள நாற்காலியில் தாவி அமர்ந்தது. ஓநாய் தாவி அமர்ந்ததும், தானாக அந்தக் குறிப்பிட்ட கம்ப்யூட்டர் மட்டும் இயங்க ஆரம்பித்தது. ஷ்ரவன் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். கம்ப்யூட்டர் திரையில் தெரிந்தவை எதுவும் புரியவில்லை. ஷ்ரவன் உற்றுப் பார்த்தான். ஏதோ வரவு செலவுக் கணக்கு போல் இருந்தது.  ஓநாய் அவனைத் திரும்பிப் பார்த்தது.

 அவன் மானசீகமாக அதனிடம் கேட்டான். “என்ன சொல்கிறாய்?”

 அது அவனுக்குக் கூடுதலாக எதையும் காட்டாமல் மறைந்து போனது. ஷ்ரவன் தொடர்ந்து அந்த மந்திரத்தை ஜபித்து 1008 கணக்கை முடித்த பின், ஓநாய் சொல்ல வந்தது என்னவாக இருக்குமென்று யோசித்தான்அவன் கம்ப்யூட்டரில் பார்த்தது வரவு செலவுக்கணக்காகத் தான் இருக்குமென்றால் சைத்ராவின் மரணத்திற்கும், அதற்கும் என்ன சம்பந்தமிருக்கும்? அவள் யோகாலயத்தில் எப்போதும் உள்ளே அலுவலகத்தில் வரவுசெலவுக் கணக்கு வேலை பார்த்தவள் அல்ல. அதனால் அவள் அதில் ஏதாவது குளறுபடியைக் கண்டுபிடித்து, அதில் எந்தப் பிரச்சினையும் வந்திருக்க வாய்ப்பில்லை.

 அப்படியிருக்கையில் ஓநாய் ஏன் அதைக் காட்டுகிறது. ஆடிட்டிங் வேலைக்கும் இந்தக் கொலைக்கும் என்ன தொடர்பிருக்க முடியும்? ஆடிட்டிங் என்ற வார்த்தை அவன் எண்ணத்தில் வந்து போனவுடனேயே, அவன் மூளையில் ஒரு பொறி தட்டியது. ஆடிட்டர்!    

 அவன் கண்களைத் திறந்த போது முக்தானந்தா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாலும், அவனைக் கேள்வி கேட்டு தொந்தரவு செய்ய அவர் விரும்பவில்லை.  எல்லாவற்றையும் அவரிடம் சொல்லிக் கொண்டிருப்பது அவனுக்கு சாத்தியமும் இல்லை. அவர் அதைக் கேட்டு எதுவும் செய்யப் போவதுமில்லை. அவன் நம்பும் மந்திர சக்தி அவனுக்கு வழிகாட்டி உதவட்டும் என்று அவரும் பிரார்த்தித்து மௌனமாக இருந்தார்.

 

 ன்று காலை ஷ்ரவன் தோட்ட வேலைக்குப் போன போது கல்பனானந்தா மற்ற துறவிகளுக்கு தோட்ட வேலைகளை ஒதுக்கி, என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அவர்கள் அங்கிருந்து செல்லும் வரை ஷ்ரவன் அமைதியாகக் காத்திருந்தான். அவர்கள் பேசினால் கேட்கும் இருபதடி தொலைவில் தான் பாண்டியனின் ஆள் ஒருவன் நின்றிருந்தான். அதனால் கல்பனானந்தா ஷ்ரவனிடம் மண்புழு உரம் போட வேண்டிய இடங்களைச் சொன்னதோடு நிறுத்திக் கொண்டாள்.

 வரிசையாக வைத்திருந்த மண்புழு உரப் பைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு கிளம்பிய ஷ்ரவனுக்கு இன்று அவள் கண்டிப்பாக அவனிடம் வந்து பேசுவாள் என்று உள்ளுணர்வு சொன்னது. இன்று அவன் போகும் இடங்கள் சில, மற்றவர்களும் வேலை செய்து கொண்டிருந்த இடங்களாக இருந்தன. ஆனால் இரண்டு இடங்கள் ஒதுக்குப் புறமான இடங்களாக இருந்தன. அந்த இரண்டு இடங்களில் அவன் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவள் கண்டிப்பாக வருவாள் என்று எதிர்பார்த்தான்.

 இன்று அவன் குமரேசனிடமும் ஒரு முக்கியத் தகவல் சொல்ல வேண்டி இருந்தது. குமரேசன் எங்கே வேலை செய்கிறான் என்று ஷ்ரவன் பார்வையால் தேடினான். நல்ல வேளையாக அவன் போய் மண்புழு உரம் போட வேண்டிய இடம் ஒன்றுக்கு அருகில் தான் குமரேசன் இருந்தான். அங்கே ஒரு மூத்த துறவி ஒருவரைத் தவிர வேறு யாரும் இல்லை.

 ஷ்ரவன் அந்த இடம் நோக்கி நிதானமாக நடக்க ஆரம்பித்தான். தோள் பட்டையில் ஏதோ பிடித்துக் கொண்டதைச் சரி செய்யும் பாவனையில் ஷ்ரவன் தோள்பட்டையைப் பிடித்துக் கொண்டு முழங்கையை மேலே  உயர்த்தினான். இந்த சமிக்ஞைக்குப் பொருள்: “நான் உன்னிடம் பேச வேண்டியிருக்கிறது

 குமரேசன் அதைப் பார்த்தான். ஆனால் எந்த விதமான எதிர்வினையும் காட்டாமல் அவன் செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான். ஷ்ரவன் அவன் வேலை செய்து கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள செடிகளுக்கு மண்புழு உரம் போட்டுக் கொண்டிருந்த போது, குமரேசன் ஒரு மண்வெட்டியை எடுத்துக் கொண்டு அவனருகில் வேறெதோ வேலை செய்வது போல் வந்தான்.

 ஷ்ரவன் சுற்றுப்புறத்தைப் பார்த்தான். மூத்த துறவி ஐம்பதடிகள் தொலைவில் எதோ வேலை செய்து கொண்டிருந்தார். கண்காணிப்பாளன் அவருக்கும் ஐம்பதடிகள் அந்தப்பக்கம் தள்ளி நின்று கொண்டிருந்தான். ஆக கண்காணிப்பாளனுக்கும் ஷ்ரவனுக்கு இடையே நூறடி இடைவெளி இருக்கிறது. முகம் அந்தக் கண்காணிப்பாளனுக்குத் தெரியாதபடி வைத்துக் கொண்டு, குமரேசனுடன் மிகத் தாழ்ந்த குரலில் பேசினால் கண்காணிப்பாளனுக்குத் தெரியவோகேட்கவோ வழியில்லை.

 ஷ்ரவன் மண்புழு உரத்தைப் பரப்பிக் கொண்டே குமரேசனிடம் தாழ்ந்த குரலில் சொன்னான். “பிரச்சினை வரவு செலவுக் கணக்கு சம்பந்தப்பட்டதாய் இருக்கலாம்னு நினைக்கிறேன். இங்கே அக்கவுண்ட்ஸ் இருக்கற ஆபிஸ் கம்ப்யூட்டர்கள் பக்கம் போகவே வழியில்லை. அதனால் ஆடிட்டர் திவாகரன் ஆபிசில் அந்த முயற்சியை எடுப்பது நல்லது.”

 குமரேசன் தலையசைக்கும் தவறையும் செய்யாமல், சட்டியில் மண்ணை அள்ளிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

(தொடரும்)

என்.கணேசன்