சாணக்கியர் சந்திரகுப்தனிடம் சென்று விஷயத்தைச் சொன்ன போது அவன் திகைப்படைந்தான். அவர் எந்த அளவு தனநந்தனை வெறுத்தார் என்பதை அவன் அறிவான். அவர் இதற்குச் சம்மதித்தது அவன் மனதில் துர்தரா இடம் பிடித்து விட்டாள் என்பதை அறிந்து தான் என்பதில் அவனுக்குச் சந்தேகமே இல்லை. அவனது ஒரு பார்வையையும், ஒரு சொல்லையும் வைத்து அவன் முழு மனதையும் புரிந்து கொள்ள முடிந்த அவரது அறிவுக்கூர்மைக்கு இது தெரியாமல் போக வாய்ப்பேயில்லை. அதனால் அவனுக்காக அவர் எதிரியின் மகளை அவன் மனைவியாக ஏற்கவும் தயாரானது அவனுக்கு மிகப்பெரிய தியாகமாகத் தோன்றியது.
அவன் குரல் தழுதழுக்கச் சொன்னான். “எனக்காக
நீங்கள் இதைச் செய்திருக்க வேண்டியதில்லை ஆச்சாரியரே. நான் அவளை
மறக்கக் கண்டிப்பாக முயற்சி செய்திருப்பேன்.”
சாணக்கியர் மென்மையாகச்
சொன்னார். “நீ கண்டிப்பாக முயற்சி செய்திருப்பாய்
சந்திரகுப்தா. ஆனால் உன்னால் அவளை மறக்க முடிந்திருக்காது. பின் காலமெல்லாம்
இதயத்தின் மூலையில் ஒரு வெறுமையை உணர்ந்த வண்ணம் வாழ்ந்திருப்பாய். உன் மகிழ்ச்சியை
விட என் வெறுப்பு எனக்கு முக்கியமல்ல சந்திரகுப்தா. மேலும்
நான் தனநந்தனிடம் சொன்னது வெறும் வார்த்தைகள் அல்ல. வெறுப்பு
தேவையில்லாத சுமை. தண்டித்த பிறகும் குற்றவாளியிடம் வன்மம் வைத்திருப்பது, இனி நடக்க
வேண்டிய காரியங்களில் இருந்து சிறிதாவது நம் கவனத்தைத் திருடிக் கொள்ளும். அது சரியல்ல. முட்டாள்தனமும்
கூட.”
சந்திரகுப்தன்
கண்களில் பெருகிய நீரைக் கட்டுப்படுத்த மிகவும் கஷ்டப்பட்டான். “எத்தனை
பிறவிகள் எடுத்து உங்கள் கடனை நான் தீர்க்க வேண்டியிருக்கும் என்று எனக்குத் தெரியவில்லையே
ஆச்சாரியரே” என்று சொன்னபடி அவர் காலில் விழுந்து அவன் வணங்கினான். அவன் கண்ணீர் அவர்
பாதங்களை நனைத்தது.
பர்வதராஜனின் கால்களை அமுக்கிக் கொண்டிருந்த சுசித்தார்த்தக்
அவனை அடிக்கடி இரக்கத்துடன் பார்த்தான். ஆரம்பத்தில் அவனுக்குப்
புத்தி பேதலித்து விட்டதா என்று சந்தேகப்பட்ட பர்வதராஜன் வாய்விட்டே கேட்டான். “உனக்கு
என்ன ஆயிற்று? நீ ஏன் என்னை அப்படிப் பார்க்கிறாய்?.”
“ஒன்றுமில்லை
அரசே.... ஒன்றுமில்லை....” என்று சொல்லி விட்டு
சுசித்தார்த்தக் பர்வதராஜனின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து அவன் கால்களை அமுக்க
ஆரம்பித்தான்.
பர்வதராஜன் அவன் கைகளை இறுக்கிப் பிடித்துக்
கொண்டு கடுமையான குரலில் சொன்னான்.
”என்ன விஷயம்? மறைக்காமல் உண்மையைச்
சொல்.”
எச்சிலை விழுங்கியபடி சுசித்தார்த்தக்
சொன்னான். “மன்னியுங்கள் அரசே. என் தந்தை
என்னை எப்போதுமே அதிகப்பிரசங்கி என்றும் தேவையில்லாமல் அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை
நுழைப்பவன் என்றும் திட்டுவார். பணியாள், பணியாளாகவே எல்லா
சமயங்களிலும் இருக்க வேண்டும் என்றும் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவது கடைசியில்
எனக்கே பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வார். அவர் சொல்வது
உண்மை தான். ஆனால் பிறவிக்குணம் என்று சொல்வார்களே அதை முழுவதுமாக மாற்ற
முடியாமல் நான் கஷ்டப்படுகிறேன் அரசே”
பர்வதராஜன் பொறுமையிழந்து கேட்டான். “அரசனிடம்
உண்மையை மறைப்பது ராஜத்துரோகம் என்று உன்னிடம் இதுவரை யாரும் சொல்லியிருக்கவில்லையா
சுசித்தார்த்தக்?”
தர்மசங்கடத்துடன் பர்வதராஜனைப் பார்த்த
சுசித்தார்த்தக் என்ன சொல்வதென்று தெரியாதவன் போல திருதிருவென்று விழித்து விட்டுச்
சொன்னான். “நான் சொல்லித் தான் உங்களுக்குத் தெரியப்போகிறது என்றில்லை. நீங்கள்
அதைப் பிறகு அறிந்து கொள்ளத்தான் போகிறீர்கள். ஆனாலும்
எனக்குத் தெரிய வந்த அந்த தகவலை முன்கூட்டியே உங்களிடம் சொல்லி எச்சரிப்பது என் கடமை
என்று எனக்குத் தோன்றியது.”
பர்வதராஜன் கோபத்துடன் கத்தினான். “சொல்லித்
தொலையேன் முட்டாளே?”
சுசித்தார்த்தக் மெல்லக் கேட்டான். “நீங்கள்
அந்தத் தகவலைக் கேள்விப்பட்டீர்களா அரசே”
பர்வதராஜன் பார்வையால் அவனைச் சுட்டெரித்தான். சுசித்தார்த்தக்
அவசரமாகச் சொன்னான். “சந்திரகுப்தன் மகத இளவரசியைத் திருமணம் செய்து கொள்ளப் போகும்
தகவலைத் தான் கேட்டேன் அரசே?”
பர்வதராஜன் திகைப்புடன் கேட்டான். “என்ன உளறுகிறாய்?”
“உளறவில்லை
அரசே. உண்மையைத் தான் சொன்னேன். சந்திரகுப்தனும்
மகத இளவரசி துர்தராவும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள். அதற்குப்
பிரதியுதவியாய் தனநந்தரிடம் வேண்டிய அளவு செல்வத்தை எடுத்துக் கொண்டு போக சாணக்கியர்
அனுமதி தந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.”
பர்வதராஜன் சுசித்தார்த்தக்கைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டான். “பகலிலேயே
மதுவருந்தியிருக்கிறாயா சுசித்தார்த்தக்?”
சுசித்தார்த்தக் அழாத குறையாகச் சொன்னான். “அப்படியெல்லாம்
இல்லை அரசே. நான் கேள்விப்பட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு தான் உங்களிடம்
சொல்கிறேன். கேட்டவுடன் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. நீங்கள்
வெற்றியில் சமபாதி பங்கு உங்களுக்கிருப்பதாய் அன்று சொல்லியிருந்தீர்கள். ஆனால் நீங்கள்
அறியாமலேயே இங்கு என்னென்னவோ நடந்து கொண்டு இருக்கிறது என்று தெரிவித்து எச்சரிக்க
விரும்பினேன். அவ்வளவு தான். சொன்னது தவறாக இருந்தால்
அடியவனைத் தயவுசெய்து மன்னித்து விடுங்கள் அரசே.”
பர்வதராஜன் இதற்கும் எதிர்க்கா விட்டால்
சரியாகாது என்று நினைத்து உடனே சாணக்கியரைச் சந்தித்து வெளிப்படையாகப் பேசிவிட வேண்டும்
என்று முடிவெடுத்த போது சாணக்கியரும், சந்திரகுப்தனும்
அங்கே வந்து சேர்ந்தார்கள்.
பர்வதராஜன்
பழைய நட்பு, பக்தியுடனேயே எழுந்து சாணக்கியர் காலைத் தொட்டு வணங்கி அவர்களை
அமர வைத்து உபசரித்தான். அவன் சற்று முன் சுசித்தார்த்தக் மூலம் கேள்விப்பட்ட தகவல்கள்
எதுவும் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளக்கூடாது என்று முடிவெடுத்திருந்தான். முதலில்
ஆச்சாரியரோ, சந்திரகுப்தனோ இதைப் பற்றிச் சொல்கிறார்களா என்று பார்ப்போம். அவர்கள்
சொல்லாமல் இருந்தால் அதைப் பற்றிக் கேட்டு அவர்கள் திருட்டுத்தனம் தெரிந்து விட்டது
என்று காட்டிக் கொள்வோம் என்று நினைத்தான்.
அவர்கள் வந்த பின் கூட அங்கிருந்து
போகாமல் ஒரு ஓரமாக நின்றிருந்த சுசித்தார்த்தக்கை சாணக்கியர்
கடுமையான பார்வை பார்க்க அவன் அவசரமாக அங்கிருந்து நகர்ந்தான்.
பர்வதராஜன் சொன்னான். “ஆச்சாரியரே
உங்கள் தரிசனம் கிடைப்பது மிக அரிதாக இருக்கின்றது என்று சற்று முன் தான் மலைகேதுவிடம்
சொன்னேன்.”
சாணக்கியர் சொன்னார். “பழைய நிர்வாகத்திலிருந்து
நம் நிர்வாகத்திற்கு மகதத்தைக் கொண்டு வருவது பெரிய வேலையாக இருக்கிறது பர்வதராஜனே. அதோடு முடிக்க
வேண்டிய வேறுபல வேலைகளும் நிறைய இருக்கின்றன”
பர்வதராஜன் சொன்னான். “அதனால்
தான் அந்தப் பணிச்சுமையை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று உங்களிடம் பல முறை சொன்னேன். நீங்கள்
தான் கேட்கவில்லை ஆச்சாரியரே”
சாணக்கியர் சொன்னார். “சில வேலைகளை
ஒருவரே கவனித்துக் கொள்வது அனாவசியக் குழப்பங்களைத் தவிர்க்கும் என்று தான் நான் அதைப்
பகிர்ந்து கொள்ளாமல் இருக்கின்றேன் பர்வதராஜனே. ராக்ஷசரும்
பிடிபட்டு, மகதப்படைகளும் பல பகுதிகளில் இருந்தும் திரும்பி வந்த பிறகு
நாம் இருவரும் சேர்ந்து செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. அப்போது
உனக்கும் ஓய்வு இருக்கப் போவதில்லை”
பேசும் அளவிலாவது ஆச்சாரியர் முந்தைய
ஒப்பந்தத்தை நினைவு வைத்திருப்பது பர்வதராஜனுக்குச் சிறிது ஆறுதல் தந்தது. அவன் மெல்லக்
கேட்டான். “நல்லது ஆச்சாரியரே. இங்குள்ள
பணிகள் எந்த அளவில் இருக்கின்றன?”
சாணக்கியர் மிக வருத்தப்படும் தொனியில்
சொன்னார். “சரிவர போய்க் கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கிடையில் நாம் சிறிதும் எதிர்பார்த்திருக்காத
ஒரு நிகழ்வு நடந்து விட்டது பர்வதராஜனே. அதற்கு என் நாக்கும், நல்லெண்ணமுமே
காரணமாகி விட்டது”
“என்ன ஆயிற்று
ஆச்சாரியரே?” என்று பர்வதராஜன் கேட்டான்.
“பர்வதராஜனே. தனநந்தன்
கொடுங்கோலனாக இருந்த போதும், மக்களிடம் சிறிதும் நற்பெயரைப் பெற்றிடாமல் இருந்த போதும்
அவன் நீண்ட காலம் மகதத்தை ஆண்டவன். அவனைத் தண்டிப்பதும்
சிறையிலடைப்பதும் நமக்குப் பெரிதல்ல என்ற போதிலும் மக்கள் எப்போதும் இது போன்ற விஷயங்களில்
இளகிய மனம் படைத்தவர்கள். பாதிக்கப்படும் அவன் மேல் பச்சாதாபமும், தண்டித்த
நம் மீது நல்லெண்ணக் குறைவும் ஏற்பட்டு விடுவதை நான் விரும்பவில்லை. அதனால்
தனநந்தனை வனப்பிரஸ்தம் போகச் சொல்லிக் கட்டளையிட்டேன். இன்று சூரியாஸ்தமனத்திற்குள்
மகத எல்லையை விட்டுச் சென்று விட வேண்டும் என்று உறுதியாகச் சொன்னேன். வேறு வழியில்லாமல்
அதை ஏற்றுக் கொண்ட அவன் தன் திருமணமாகாத மகள் குறித்து வருத்தப்பட்டான். நான் நல்லெண்ணம்
காரணமாக அவன் மகள் யாரையாவது விரும்பினால் அவனையே அவளுக்குத் திருமணம் செய்து வைப்பது
என் பொறுப்பு என்று வாக்களித்து விட்டேன். ஆனால் அவன்
மகளிடம் பேசி விட்டு வந்து அவன் மகள் சந்திரகுப்தனை விரும்புகிறாள் என்று சொல்லி விட்டான்...”
பர்வதராஜன் சொன்னான். “எத்தனை
சூழ்ச்சி பாருங்கள் ஆச்சாரியரே. அதற்கு நீங்கள் மறுத்து விட்டீர்கள் அல்லவா?”
(தொடரும்)
என்.கணேசன்