என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, July 21, 2025

யோகி 112

 

ரு ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து, இந்த இளம் வயதிலேயே இத்தனை திறமைகளை வளர்த்துக் கொண்டும் ஷ்ரவன் அடக்கமாக இருந்தது, முக்தானந்தாவைப் பிரமிக்க வைத்தது. ஆனால் இங்குள்ள ஆபத்துகளை அவன் எவ்வளவு தூரம் அறிவான் என்று அவருக்குத் தெரியவில்லை. அவர் அக்கறையுடன் சொன்னார். “இங்கே ஆன்மீகத்தை விட ஆபத்துகள் அதிகம் ஷ்ரவன். நீ யார், எதற்காக வந்திருக்கிறாய் என்பது அவர்களுக்குத் தெரிந்தால் நீ உயிரோடு திரும்ப முடியாது.”

 

அது எனக்கு நன்றாகவே தெரியும் சுவாமிஜி. இது எனக்கு ஒதுக்கப்பட்ட வேலை என்பதால் மட்டும் நான் இங்கே வரவில்லை. இந்த மாதிரியான அக்கிரமங்களைத் தண்டிக்காமல் போனால், அவர்களுக்கு மேலும் நிறைய அக்கிரமங்களைச் செய்யும் தைரியம் வந்துவிடும். இனியும் நிறைய பேர் பாதிக்கப்படுவார்கள். அதைத் தடுக்க யாராவது எதாவது செய்து தானே ஆக வேண்டும். ஒரு நல்ல குடிமகனாகவும் இந்தப் பொறுப்பை உணர்கிறேன்.”  

 

முக்தானந்தா அவனைக் கனிவோடு பார்த்தார்.  அவனைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் என்று அவருக்குத் தோன்றியது. அவருக்கு எதற்கு வியப்பதென்று தெரியவில்லை. பரசுராமன், அவருடைய ஏவல் சக்திகள், இறந்த பெண்ணின் ஆவியிடம் இருந்து பெற்ற தகவல். ஷ்ரவனின் உபதேச மந்திரத்தின் சக்தி என எல்லாமே அவருக்கு அதிசயங்களாகத் தான் தோன்றின. சொன்னது ஷ்ரவனாக இருப்பதால் தான் இதையெல்லாம் அவருக்கு நம்ப முடிந்தது. வேறு யாராவது வாயிலிருந்து அவர் இதைக் கேட்டிருந்தால் கற்பனை கலந்திருப்பதாகத் தான் நினைத்திருப்பார். மேலும் பாண்டியன் தாயத்து கட்டிக் கொண்டிருப்பது இன்னொரு அசைக்க முடியாத நிரூபணம். சாதாரணமான யாரும் நிகழ்த்த முடிந்த அதிசயம் அல்ல அது... 

 

ஷ்ரவன் கேட்டான். ”சுவாமிஜி. நீங்கள் ஒருவார காலமாக ஒட்டுக் கேட்டபடி நின்றார்கள், கண்காணித்தார்கள் என்று சொன்னீர்கள். ஆனால் சைத்ரா மாதக் கணக்கில் சிறைப்பட்டிருக்க வேண்டுமே.”

 

இருக்கலாம் ஷ்ரவன். ஆனால் யோகாலயத்தில் குற்றவாளிகள் எப்போதும் தனியாக எங்காவது அடைக்கப்படுவார்கள் என்பதே என் அனுபவம். அடைக்கப்படும் கட்டிடமே வேறு கட்டிடமாக இருக்கும். யாரும் அண்ட முடியாதபடியும், சென்று பேச முடியாதபடியும் ஒரு தனிமைச்சிறையில் அவள் அடைக்கப்பட்டு இருக்கலாம். நீ சொன்ன 206 ஆம் அறையைக் கூட அவர்கள் கண்காணித்தது அவளையாக இருக்காது. அவள் அறையில் அவளுடன் தங்கியிருந்த மற்றவர்களையாக இருக்கும். அவர்கள் அவளைப் பற்றி எதாவது பேசுகிறார்களா என்றும், அவர்களுக்கு எத்தனை தெரியும் என்பதை அறியக்  கண்காணித்திருப்பார்கள். அப்படி அவர்கள் பேசுவதைக் கேட்டு, அவர்களாலும் பிரச்சினை வருமென்றால் அவர்களையும் அப்படி சிறைப்படுத்தி இருப்பார்கள்...”

 

ஷ்ரவனுக்கு அவர் சொல்வது சரியாக இருக்கலாம் என்று தோன்றியது.

 

முக்தானந்தா தொடர்ந்து சொன்னார். “யோகாலயத்தில் அலறல் சத்தம் கேட்பது மிக அபூர்வம். ஏதாவது பிரச்சினை என்றால் ஆள் நடமாட்டம் தான் அதிகமிருக்கும். அதுவும் பாண்டியன் இருக்குமிடத்திற்கு அருகில் தான் அதிகமிருக்கும். அதை வைத்துத் தான் ஏதோ பிரச்சினை ஆகியிருக்கிறது என்பது தெரியவரும். மற்றபடி அமைதியாகத் தான் இங்கே எல்லாம் நடக்கும்.”

 

ஷ்ரவன் கேட்டான். “சைத்ராவுடன் தங்கியிருந்த பெண் துறவிகள் யார் என்று கண்டுபிடித்து விட்டால், அவர்களைத் தொடர்பு கொண்டு விசாரிக்க ஏதாவது வழியிருக்கிறதா?”

 

முக்தானந்தா சொன்னார். “இல்லவே இல்லை. ஒருவேளை கொல்லப்பட்டது ஆண் துறவியாக இருந்தாலுமே கூட நீ அப்படி, கூட இருந்தவர்களைக் கண்டுபிடித்து விசாரிக்கும் வாய்ப்பு கிடையாது. நீ யாரையுமே சாதாரணமாய் சந்தித்து ஓரிரண்டு வார்த்தைகளுக்கு அதிகமாகப் பேச்சுக் கொடுக்கவே வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கையில், சந்திக்கவோ, ஓரிரண்டு வார்த்தைகள் பேசவோ கூட வாய்ப்பில்லாத பெண் துறவிகளிடம் விசாரிப்பதற்கு வாய்ப்பு சுத்தமாக இல்லை.”

 

யோகாலயத்தில் அவர்களுடைய எந்த ரகசியமும் வெளியே போகவே முடியாத சூழலை எந்த அளவு கச்சிதமாக அவர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை ஷ்ரவன் புரிந்து கொண்டான். மூன்று அறை தள்ளி இருக்கும் துறவிக்கு என்ன நடக்கிறது என்பதைக் கூட ஒருவர் அறிந்து கொள்வது மிகச் சிரமம் தான். அதனால் தான் இங்கிருந்து வெளியே போகிறவர்களுக்குக் கூட சொல்ல அதிகம் இருப்பதில்லை. சொல்லும்படியாக முக்கியமான எதையாவது தெரிந்து வைத்திருப்பவர்கள் இங்கிருந்து உயிரோடு வெளியேறுவதில்லை....

 

ஷ்ரவன் கேட்டான். “சுவாமிஜி, சைத்ரா இங்கே ஒரு யோகியை எப்படியோ பார்த்திருக்கிறாள். அது எப்படி நிகழ்ந்திருக்கும்?”

 

முக்தானந்தா சொன்னார். “இங்கே ஒரே ஒரு யோகிக்குத் தான் இடமிருக்கிறது ஷ்ரவன். அது பிரம்மானந்தா. வேறொரு யோகிக்கு யோகாலயத்தில் அனுமதியும், அங்கீகாரமும் இல்லவே இல்லை.”

 

உண்மையான யோகிக்கு அங்கீகாரம் அவசியமும் இல்லையே சுவாமிஜி. அதனால் அப்படி ஒரு யோகி எப்போதாவது இங்கே வந்து போயிருக்கலாமோ?”

 

முக்தானந்தா யோசித்து விட்டுச் சொன்னார். “அப்படி எதுவும் இங்கே நடந்ததாய் எனக்கு நினைவில்லை. அப்படி ஒரு அதிசயம் இங்கே நடந்திருந்தால் அந்த யோகியைச் சந்திக்கும் பாக்கியத்தை நான் தவற விட்டு விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.... பார்வைக்குப் படும்படியாக நிறைய யோகிகள் தற்காலத்தில் நடமாடிக் கொண்டிருக்க வாய்ப்பில்லை. அப்படி அபூர்வமாய் இருக்கும் ஓருசிலர் பற்றி நீ சொன்ன பரசுராமனுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டுமே ஷ்ரவன். அவரே ஒரு யோகியைப் போன்றவர் தானே?”

 

நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் பரசுராமனை யோகி என்றழைப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர் தன்னை யோகி என்று சொல்லிக் கொள்வதில்லை. ’எப்போதும், எதிலும் சமநோக்குடனும், மாறாத அமைதியுடனும் இருப்பவனே யோகிஎன்கிறார் அவர். அது தனக்கு சாத்தியப்படுவதில்லை என்பதையும் அவர் வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறார். அவர் தன் சக்தியால் அந்த யோகி எங்கிருக்கிறார் என்பதை அறிய முற்பட்ட போது ஒரு தோட்ட சூழ்நிலை தெரிவதாகச் சொன்னார். சைத்ரா இங்கே தோட்ட வேலையில் நிறைய நாட்கள் இருந்திருக்கிறாள்...”

 

ஷ்ரவன் சுட்டிக் காட்டியதையும் முக்தானந்தா யோசித்துப் பார்த்தார். ஆனாலும் அப்படி ஒரு நிகழ்வு நடந்த சூழல் அவருக்கு நினைவுக்கு வரவில்லை.

 

ஷ்ரவன் மெல்ல பேராசிரியர் சிவசங்கரனைப் பற்றிச் சொன்னான். அவர் பிரம்மானந்தா பற்றிச் சொன்னதையும், அவர் யோகி என்று சுட்டிக் காட்டியவரை பிரம்மானந்தா சென்று சந்தித்ததையும் சொன்னான். அதன் பின் பிரம்மானந்தா சிவசங்கரனைச் சென்று சந்திக்கவில்லை என்றும், பொது இடங்களில் பார்க்க நேர்ந்தாலும் கண்டு கொள்வதில்லை என்றும் அவன் சொன்ன போது முக்தானந்தா புன்னகைத்தார். 

 

அவர் சொன்னார். “அந்த யோகியைச் சந்தித்து தான், அந்த ஆள் சொல்லும் அளவுக்கு இல்லை என்று எங்களிடம் பிரம்மானந்தா சொன்னது போல் நினைவு இருக்கிறது. பிரம்மானந்தாவுக்கு சிவசங்கரனும், பரசுராமனும் சொல்லும் யோகி மீது மதிப்பு எதுவும் கிடையாது. எல்லா நேரங்களிலும் சமநோக்கும், மாறாத அமைதியும் அவரைக் கவரவில்லை. நீ யோகியின் சுயசரிதை படித்து இருக்கிறாய் அல்லவா? அந்தப் புத்தகத்தில் வருவது போல் சக்தி வாய்ந்த யோகிகள் மேல் தான் அவருக்கு ஆரம்பத்திலிருந்தே ஈர்ப்பு இருந்தது. அது போன்ற ஆட்களைத் தான் அவர் மதித்தார், விரும்பினார். தானும் அது போல் ஆகி எல்லோரையும் பிரமிக்க வைக்கத் தான் அவர் ஆசைப்பட்டார். அது நிஜத்தில் முடியாமல் போகவே கற்பனையாய் பல கதைகளையும் சொல்ல ஆரம்பித்தார். சதுரகிரியில் மெய்ஞானம், சுந்தரமகாலிங்கம், கோரக்கர், பதஞ்சலி கதைகள் எல்லாம் அப்படி ஆரம்பித்தவை தான். அதை நம்பி ஏமாற மக்கள் தயாராக இருக்கையில் அவரைச் சொல்லித் தப்பில்லை.”

 

ஷ்ரவன் சிரித்துக் கொண்டே சொன்னான். “அதையே தான் சிவசங்கரனும் சொன்னார். ஒருவனுடைய பேச்சை வைத்துப் பார்க்காமல், அவன் எப்படி வாழ்கிறான் என்பதை வைத்துப் பார்த்தால் யாரும் ஏமாற வேண்டியதில்லை என்று சொன்னார்….”   

 

முக்தானந்தா சொன்னார். “உண்மை தான். ஆனால் ஏமாற்றும் வாய்ப்புகள் இல்லாத போது எல்லாருமே ஒழுங்காகத் தான் வாழ்கிறார்கள் ஷ்ரவன். பணம், புகழ், அதிகாரம் எல்லாம் வந்த பின் தான் பெரும்பாலானவர்கள் மாற ஆரம்பிக்கிறார்கள். அதற்கு முன் அவர்கள் சொல்லும் வார்த்தைகளை வைத்துத் தான் நம்ப வேண்டியிருக்கிறது. அப்படி நம்பி ஏமாந்தவன் தான் நான். அப்படி ஏமாறாமல் இருந்திருந்தால் நான் இங்கேயே வாழும் துர்ப்பாக்கியத்தைத் தவிர்த்திருக்கலாம்...”

 

அவர் வருத்தத்துடன் சொன்னதைக் கேட்கையில் ஷ்ரவனுக்கும் வருத்தமாய் இருந்தது. சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு ஷ்ரவன் சொன்னான். “அந்த யோகியும் தோட்டக்காரராய் இருந்தவர். சைத்ரா சொல்லும் யோகியும் தோட்ட சூழலில் இருப்பதாக உணர்வதாக  பரசுராமன் சொன்னதால் இரண்டும் ஒரே நபர் என்று எனக்குத் தோன்றுகிறது சுவாமிஜி. அப்படி ஒரே நபர் என்றால் பிரம்மானந்தா ஏதாவது ஒரு காரணத்திற்காக ஒரு முறை அவரை இங்கே தருவித்திருக்கவும், சைத்ரா அந்த சந்தர்ப்பத்தில் அவரைச் சந்தித்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறதல்லவா?”


(தொடரும்)

என்.கணேசன்





Thursday, July 17, 2025

சாணக்கியன் 170


சாணக்கியரின் அமைதியான பதிலும், அதிலிருந்த உண்மையும் தனநந்தனை மேலும் ஆத்திரமூட்டின.. அவன் சொன்னான். “என் மகன்களைக் கொல்ல நீ செய்த சதியை வசதியாக மறந்து விட்டாய் சாணக்கின் மகனே

 

சாணக்கியர் அமைதியாகவே சொன்னார். “உன் மூத்த மகனைக் கொல்ல சதி செய்தது உன் இளைய மகன் தனநந்தா.”

 

ஆனால் அதற்கான சூழலை ஏற்படுத்தித் தந்தது நீ சாணக்கின் மகனே

 

எந்தச் சூழலும் ஒரு யோக்கியனை குற்றம் செய்ய வைக்க முடியாது தனநந்தா.”

 

அப்படியானால் என் இளைய மகனை உன் ஆள் கொன்றதை நீ எப்படிப் பார்க்கிறாய் சாணக்கின் மகனே

 

அண்ணனைக் கொன்றதற்கான தண்டனையாகப் பார்க்கிறேன் தனநந்தா

 

தனநந்தனுக்கு சாணக்கின் மகனிடம் பேசி ஜெயிக்க முடியும் என்று தோன்றவில்லை. ஆத்திரமூட்டும் முயற்சியும் பலிக்கவில்லை. இனி என்ன பேசியும் வேண்டியது எதுவும் ஆகப்போவதில்லை. எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது... சிறிது கனத்த மௌனத்திற்குப் பின் திடீரென்று நினைவு வந்தவனாக சாணக்கியரிடம் கேட்டான். “நான் ஒரு கேள்வி கேட்டால் நீ உண்மையைச் சொல்வாயா சாணக்கின் மகனே?”

 

“அது உன் கேள்வியைப் பொறுத்தது தனநந்தா”

 

“நான் கங்கைக் கரையில் புதைத்து வைத்திருந்த புதையலைப் பற்றி நீ எப்படி அறிந்தாய்?”

 

“நீ முதலில் புதைத்த நேரத்தில் நான் கங்கைக் கரையில் இருந்தேன் தனநந்தா. அந்த இரவில் நடந்த அனைத்தையும் பார்த்த பின்பு தான் இனி என் தந்தை திரும்ப வருவார் என்ற நம்பிக்கையை இழந்து பாடலிபுத்திரத்தை விட்டு ஓடிப் போனேன்.”

 

தனநந்தன் ஒன்றும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டான். விதி வலிது.

 

சாணக்கியர் சொன்னார். “யாருமே அவரவர் கர்மங்களில் இருந்து தப்ப முடியாது தனநந்தா. இன்றைய உன் நிலைக்காக நீ ஆத்திரமும், கோபமும், வெறுப்பும் கொள்வதென்றால் நீ அதற்கெல்லாம் மூலகாரணமான உன் மீதே கொள்வது தான் சரி.  இயற்கையின் விதி அரசன் முதல் ஆண்டி வரை ஒன்று தான். விதைத்ததை யாரும் அறுவடை செய்தே ஆக வேண்டும். அந்த விதி அரசனுக்காக எந்தச் சலுகையும் காண்பிப்பதில்லை. சில அறுவடைகள் தாமதமாகின்றன என்பதற்காக அதிலிருந்து தப்பித்து விட்டோம் என்று யாரும் எண்ணி விடக்கூடாது.”  

 

தனநந்தன் அதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. நிதி இழந்து, மகன்களை இழந்து, நாடிழந்து நிற்கும் அவன் அவர் சொன்னதை மறுப்பதற்கில்லை.  முடிவில் கோபம், ஆத்திரம், வெறுப்பு எல்லாம் கரைந்து விரக்தியுடன் தனநந்தன் கேட்டான்.  “என்னையும் என் குடும்பத்தையும் என்ன செய்வது என்று தீர்மானித்திருக்கிறாய் சாணக்கின் மகனே?”

 

சாணக்கியர் உடனடியாக ஒன்றும் சொல்லாமல் யோசனையில் ஆழ்ந்தவராக அவனையே பார்த்தார். தனநந்தன் ஒவ்வொரு கணமும் யுகமாக நகர்வதாய் உணர்ந்தான். தீர்ப்புகள் சொல்லியே பழக்கப்பட்டவனுக்கு தனக்கான தீர்ப்பை அடுத்தவரிடம் எதிர்பார்ப்பது கொடுமையாகத் தோன்றியது.

 

அவனை அதிகம் காக்க வைக்காமல் சாணக்கியர் சொன்னார். “நீ குடும்பத்தோடு வனப்பிரஸ்தம் போய்க் கொள் தனநந்தனே. நீ காட்டிலிருந்து கொண்டு எங்களுக்கு எதிரான வேலைகளில் ஈடுபடாத வரை நீ சுதந்திரமானவனே.”

 

னநந்தன் சிறிதும் இந்தக் கருணையை சாணக்கின் மகனிடமிருந்து எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் இதை விட மோசமான தீர்ப்புகளை எல்லாம் கற்பனை செய்து பயந்திருந்தான். கடைசியிலும் கடுமையாக சாணக்கின் மகனிடம் பேசியும் அவனைச் சிறையிலடைக்காமல், சித்திரவதை செய்யாமல் வனப்பிரஸ்தம் அனுப்பத் தீர்மானித்தது அவன் எதிர்பாராததே.

 

ஆனாலும் அந்தத் தீர்ப்பை மனம் அசைபோட்ட போது தனநந்தனால்  நிம்மதியடைய முடியவில்லை. காரணம் மகள் துர்தராவாக இருந்தாள்.  மகளுக்கு எத்தனையோ வரன்கள் வந்த போதெல்லாம் திருப்தியடையாமல் அவன் தட்டிக் கழித்தது சரியல்ல என்று இப்போது அவனுக்குத் தோன்றுகிறது. பெண் கேட்டு வந்த அரசர், இளவரசர்களில் ஒருவரையாவது அவன் தேர்ந்தெடுத்திருக்கலாம். மகளாவது தப்பித்திருப்பாள். தந்தையாக  மகள் நிலைமைக்கு அவன் துக்கப்பட்டான்.

 

சாணக்கியர் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்து விட்டுக் கேட்டார். என்ன யோசிக்கிறாய் தனநந்தா?”

 

ஒரு கணம் தன் கவலையை சாணக்கின் மகனிடம் சொல்வதா என்று தனநந்தனுக்குத் தோன்றினாலும் அதையும் மீறி அவன் மனம் விட்டுச்  சொன்னான். “நானும் என் மனைவிகளும் வனப்பிரஸ்தம் போகும் வயதினர்களே. ஆனால் என் மகள் மிக இளையவள். திருமணமும் ஆகாதவள். அவளை யோசிக்கையில் வருத்தமாக இருக்கிறது.”

 

சாணக்கியர் சொன்னார். “உன் மகளுக்கு யாரையாவது பிடித்திருந்தால் அவளுக்குப் பிடித்தவனுடன் திருமணம் செய்து வைப்பது என் பொறுப்பு தனநந்தா. அதனால் நீ நிம்மதியாகப் போகலாம்.”

 

தனநந்தன் திகைத்தான்அவனுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. சாணக்கியரைச் சந்தேகத்துடன் பார்த்தபடி சொன்னான். “உன்னுடைய இந்தத் திடீர்ப் பெருந்தன்மைக்குக் காரணம் எனக்கு விளங்கவில்லையே சாணக்கின் மகனே.”

 

தந்தையின் செயலினால் பிள்ளைகள் பாதிக்கப்படுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை தனநந்தா. அதற்கு சிறு வயதில் நான் பாதிக்கப்பட்டது காரணமாக இருக்கலாம்.” என்று சாணக்கியர் சொன்னார்.

 

தனநந்தன் பெருமூச்சு விட்டான். மன்னனாக அவன் இருக்கும் போதே அவன் மகள் தன் மனம் விரும்பியவனாக யாரையும் சொல்லியிருக்கவில்லை. இதுவரை அவளுக்கு அமையாத நல்ல வரன் நாடிழந்து காட்டுக்குப் போகும் இந்தச் சந்தர்ப்பத்திலா வாய்க்கப் போகிறது என்று யோசிக்கையில் களைப்பு ஏற்பட்டது. ஆனாலும் அவளிடம் கேட்டுப் பார்க்கலாம். அவள் அப்படி ஒருவனைச் சொன்னாலும் கூட சாணக்கின் மகன் தயவில் அவள் திருமணம் நடப்பதை அவன் மனம் ஏற்கவில்லை...

 

அவன் வாய் திறந்து அதைச் சொல்வதற்குள் சாணக்கியர் சொன்னார். “தனநந்தா! உன் மகளிடம் கேட்கவும், வனப்பிரஸ்தம் போக ஆயத்தமாகவும் உனக்கு ஒரு நாள் சமயம் தருகிறேன். நீ அந்தப்புரம் சென்று உன் மனைவிகளையும் கலந்தாலோசித்து விட்டு மகள் திருமணம் குறித்து ஒரு முடிவுக்கு வா. உங்களால் அப்படி ஒருவனைச் சொல்ல முடியாவிட்டால் நீ உன் மகளையும் உங்களுடன் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டியதாய் இருக்கும். அவளுடனோ அவள் இல்லாமலோ நாளை சூரிய அஸ்தமனத்துக்குள் நீ இங்கிருந்து கானகம் சென்று விட வேண்டும். அதற்கு மேல் நீ இங்கிருக்க உனக்கு அனுமதி இல்லை.” 

 

சாணக்கியர் எழுந்து சென்று விட்டார்.

 

னநந்தன் அந்தப்புரத்திற்குள் நுழைந்த போது அவன் இரு மனைவிகளும் நெருக்கமாக அமர்ந்து மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவனுக்கு இது நிஜம் தானா, இல்லை கனவா என்று ஒரு கணம் சந்தேகம் வந்து விட்டது. கண்களை மூடி மறுபடி திறந்து கூர்ந்து பார்த்தான். கனவில்லை, நிஜம் தான். சில காலம் முன்பு வரை அவர்கள் சண்டையினால் அவன் தொலைத்திருந்த அமைதி கொஞ்சநஞ்சமல்ல. எல்லாம் இழந்த பின் தான் அவர்களுக்கும் புத்தி வந்திருக்கிறது போல...

 

அவனைப் பார்த்ததும் அவன் மனைவிகளும், மகளும் அழுதார்கள். அவன் உயிரோடு பாதுகாப்பாக இருப்பது அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. அழுகை ஓய்ந்த பின் தனநந்தன் சாணக்கியர் சொன்னதைச் சொன்னான்அவன் சொன்னவுடன் துர்தரா மெல்ல அங்கிருந்து நகர்ந்தாள். அரசியர் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். யாருமே சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை.  அங்கே மயான அமைதி நிலவியது. ஆரம்பத்தில் வனப்பிரஸ்தம் பற்றிய பிரஸ்தாபம் தான் அவர்களை வாயடைத்திருக்கிறது என்று தனநந்தன் நினைத்தான்

 

ஆனால் அவன் மனைவிகள் இருவரும் பார்வையால் எதோ பேசிக் கொள்வதைப் பார்த்த போது வேறெதோ ஒன்று தான் அவர்களை வாயடைத்திருக்கிறது என்பது புரிந்தது.

 

மெல்ல அமிதநிதா சொன்னாள். ”நம் மகளின் மனதில் ஒருவன் இடம் பிடித்திருக்கிறான். அவன் யாரென்று சொன்னால் திருமணத்திற்கு நீங்களும் சம்மதிக்க மாட்டீர்கள். வாக்கு கொடுத்திருக்கும் சாணக்கியரும் சம்மதிக்க மாட்டார்.”

  

(தொடரும்)

என்.கணேசன்





Monday, July 14, 2025

யோகி 111

 

ஷ்ரவன் அவரிடம் ஆர்வத்துடன் கேட்டான். “என்ன நினைவுக்கு வருகிறது சுவாமிஜி.”

 

முக்தானந்தா சொன்னார். “சில மாதங்களுக்கு முன் நீ சொல்லும் அந்த அறை பாண்டியனின் ஆட்களால் கண்காணிக்கப்படும் அறையாக இருந்தது. அவர்கள் இரவு நேரத்திலும் அந்த அறை ஜன்னல் அருகே நின்று கொண்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன். அறையில் இருப்பவர்கள் என்ன பேசிக் கொள்கிறர்கள் என்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். சுமார் ஒருவாரம் இப்படி நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.”

 

ஷ்ரவன் கண்களை மூடி யோசித்தான், முக்தானந்தா அவனிடம் கேட்டார். “யார் அந்த சைத்ரானந்தா? அவளுக்கு என்ன ஆயிற்று? அவள் விஷயமாகத் தான் நீ இங்கே வந்திருக்கிறாயா? நீ யார்? உனக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்?”

 

ஷ்ரவன் சைத்ராவின் குடும்பப் பின்னணியைச் சொல்லி விட்டு, அவளுடைய தந்தைக்கு ஒரு நாள் வந்த மொட்டைக் கடிதத்திலிருந்து ஆரம்பித்து அவருடைய தற்கொலை வரைக்கும் நடந்ததை அவரிடம் விவரித்தான். சைத்ராவின் தாத்தாவின் நிலைமையைக் கண்டு வருத்தப்பட்ட ஒரு சமூக சேவகர் இந்த வழக்கு பற்றிய பல சந்தேகங்களை மத்திய புலனாய்வுத் துறைக்கு எழுதிப் போட்டதால் மத்தியப் புலனாய்வுத் துறை, .பி.எஸ் அதிகாரியான அவனிடம் ரகசிய விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது என்று சொன்னான். முதல்வர் பெயரையும், ராகவன் பெயரையும் இதில் இழுக்காமல் அதற்குப் பதிலாக மத்தியப் புலனாய்வுத் துறையைச் சொல்வது பொருத்தமாகவும், பிரச்சினை இல்லாததாகவும் இருப்பதாய் அவனுக்குத் தோன்றியது. 

 

இன்னொரு தகவலையும் ஷ்ரவன் மாற்றிச் சொன்னான். பரசுராமனை அவன் தந்தையின் நீண்ட கால நண்பர் என்றும், அவரிடம் சைத்ரா வழக்கைப் பற்றிச் சொன்ன போது அவர் சேதுமாதவன் குடும்பத்திற்கு ஏற்பட்ட அநீதிக்காகக் கொதித்து தன்னுடைய மாந்திரீக சக்தியைப் பயன்படுத்தி சில பயமுறுத்தல் வேலைகளைச் செய்ய முன்வந்தார் என்று ஆரம்பித்து அவர் டாக்டர் சுகுமாரன், பாண்டியன் இருவர் மீதும் ஏவல் சக்திகளை ஏவி விட்டுச் செய்ததை எல்லாம் விரிவாகச் சொன்னான். ஸ்ரேயாவைப் பற்றிச் சொல்வதை மட்டும் தவிர்த்த அவன், பின் நடந்தது எதையும் அவரிடமிருந்து மறைக்கவில்லை. பரசுராமன் சைத்ராவின் ஆவியை வரவழைத்து அந்த ஆவி சொன்னதையும் கூடத் தெரிவித்தான்.

 

முக்தானந்தா பிரமிப்புடன் அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தார்.

 

பாண்டியன் தன் மேஜையில் வைக்கப்பட்ட அன்றைய முக்கியத் தகவல்களைப் படித்துக் கொண்டிருந்தார். இன்று முக்கிய வேலை ஒன்று முடிந்து யோகாலயம் திரும்பிவர நேரம் அதிகமாகி விட்டது. அதனால் தற்போது இரவு பதினொரு மணிக்குத் தான் அந்தத் தகவல்களைப் பார்க்க முடிகிறது. அவர் எதை முக்கியம் என்று நினைக்கிறார், எதை முக்கியமல்ல என்று நினைக்கிறார் என்பதில் அவருடைய ஆட்களுக்குப் பல சமயங்களில் குழப்பம் இருந்ததால் வழக்கத்திற்கு மாறாக நடப்பதை எல்லாம் அவருக்குத் தெரிவிக்க ஆரம்பித்து இருந்தார்கள். அது அவருக்கு, இது போன்ற வேலைப்பளு உள்ள நாட்களில் சலிப்பாக இருந்தாலும், முக்கியத் தகவல்களைத் தவற விடுவதை விட இது நல்லது என்று அவர் நினைத்ததால் அதை அனுமதித்திருந்தார்.

 

இன்று சித்தானந்தாவுக்கு டைப்பாய்டு காய்ச்சல்ஆஸ்பத்திரியிலேயே தங்க மருத்துவர் சொன்னதால் அவர் ஆஸ்பத்திரியிலேயே இருக்கிறார்என்ற தகவலைப் படித்து விட்டு அடுத்த செய்திக்குப் போன பாண்டியன் பின் ஒரு கணம் கண்களை மூடி யோசித்தார். ‘புதிதாய் வந்திருக்கும் ஷ்ரவனும், சுவாமி முக்தானந்தாவும் தான் அறையில் தனியாக இருக்கிறார்கள். முக்தானந்தா அதிகம் பேசும் நபரல்ல என்றாலும் யோகாலயத்து விஷயங்களை அதிகம் அறிந்த நபர். புதியவன் ஷ்ரவன் பிரம்மானந்தா மேல் கண்மூடித்தனமான பக்தி கொண்டவன். பழையவரான முக்தானந்தாவிடம், புதியவனான ஷ்ரவன் பிரம்மானந்தா பற்றி தானாக எதையாவது சொல்லவோ, கேட்கவோ வாய்ப்பு இருக்கிறது..’

 

அந்த நிலைமையே ஒருவித நெருடலை பாண்டியனின் மனதில் ஏற்படுத்தியதால் அவர் உடனடியாக கண்ணனை அலைபேசியில் அழைத்தார்.

 

ண்ணன் பாண்டியன் அழைத்த போது தான் உறங்க ஆரம்பித்திருந்தார். பாண்டியனிடம் பேசி விட்டு உடனடியாக எந்தச் சங்கடமும் இல்லாமல் அவர் கிளம்பினார். அவருடைய வேலை எதற்கும் நேரம் காலம் கிடையாது. பத்து மணிக்குத் தான் யோகாலயத்தின் துறவிகளின் எல்லா அறைகளிலும் விளக்கு அணைந்திருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொண்டு அவர் தனதறைக்குச் சென்றிருந்தார். அப்போது அறை எண் 128லும் விளக்கு அணைந்து தான் இருந்தது. இப்போதும் அணைந்து தான் இருக்கிறது. ஆனாலும் பேசுவதற்கு விளக்கு எரிந்து கொண்டிருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை.

 

பொதுவாக இப்படி ஏதாவது சந்தேகம் எழுந்து, அதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கையில் அவர் வெளிப்பக்கமாகப் போய் ஜன்னல் வழியாகப் பார்ப்பது தான் வழக்கம். ஆனால் முக்தானந்தாவின் அறையில் அப்படிப் பார்க்க அவர் விரும்பவில்லை. ஏனென்றால் பெரும்பாலும் ஜன்னல் அருகிலேயே உட்கார்ந்திருக்கும் அந்தக் கிழவர் பார்க்கும் வெறித்த பார்வை கண்ணனுக்கு எப்போதும் எரிச்சலூட்டுவதாய் இருக்கும். அதனால் கதவருகே நின்று கவனிப்பது தான் நல்லது என்று நினைத்தவராய் கண்ணன் ஆண் துறவிகளின் கட்டிடத்தின் பிரதான கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார். அந்தக் கதவு லேசான கிறீச் சத்தமிட்டது.

     

 

பேசிக் கொண்டிருந்த ஷ்ரவன் உடனடியாகப் பேசுவதை நிறுத்தி முக்தானந்தாவுக்கு சமிக்ஞை செய்து விட்டு, தன் படுக்கையில் படுத்துக் கொண்டான். முக்தானந்தா திகைப்புடன் அவனைப் பார்த்தாலும் வாய் திறந்து பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தார்.

 

கண்ணன் அறை எண் 128 கதவருகே நின்று காதுகளைக் கூர்மையாக்கினார். உள்ளே ஃபேன் ஓடும் சத்தம் தவிர வேறெதுவும் சத்தமில்லை. கண்ணன் உடனடியாகத் திருப்தியடைந்து திரும்பிச் சென்று விடவில்லை. ஐந்து நிமிடம் அமைதியாக அங்கேயே நின்றார். முக்தானந்தாவின் குரல் திடீரென்று கேட்டது. “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே

 

பின் மறுபடியும் ஃபேன் ஓடும் சத்தம் மட்டுமே கேட்டது. முக்தானந்தா வேறு எதுவும் சொல்லவில்லை. முக்தானந்தா பற்றி சக துறவிகள் சொல்லும் ஒரே புகார் இது தான். ”இரவு நேரங்களில் திடீர் திடீர் என்று அவர் ஓரிரு வரிகளில் தத்துவம் பேசுகிறார். அதைக் கேட்டு ஒரு முறை விழிப்பாகி விட்டால் மறுபடி எங்களுக்குச் சீக்கிரமாக உறக்கம் வருவதில்லை.” அதற்காக அவரைக் கூப்பிட்டுக் கண்டிக்கும் வயதும் அவருக்கு இல்லை, கண்டிக்கும் அளவு அது பெரிய குற்றமுமில்லை என்பதால் அப்படியே விட்டிருந்தார்கள்...

 

கண்ணன் நின்ற ஐந்து நிமிடங்களில் வேறு எந்தச் சத்தமுமில்லை. அவர் மெல்ல அங்கிருந்து கிளம்பினார்.  அவர் வெளியே சென்ற போதும் அந்தப் பெரிய கதவு லேசாக கிறீச்சிட்டது.

 

இரண்டு நிமிடங்கள் பொறுத்துப் பார்த்து விட்டு ஷ்ரவன் எழுந்து உட்கார்ந்தான். முக்தானந்தா அவனை ஆச்சரியத்துடன் பார்த்து, தாழ்ந்த குரலில் கேட்டார். “நீ அந்தக் கதவுச் சத்தம் கேட்டு தான் எச்சரிக்கையானாயா?”

 

ஆமாம் சுவாமிஜி

 

நீ சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த சுவாரசியத்தில் எனக்கு அந்தச் சத்தம் கேட்கவேயில்லை. உனக்கு மட்டும் எப்படி?”

 

ஷ்ரவன் அடக்கத்துடன் சொன்னான். “பயிற்சி தான் சுவாமிஜி. நீங்கள் என்னைச் சுற்றி இருக்கும் அலைவரிசைகளைப் பார்த்து நான் துறவியல்ல என்பதை அனாயாசமாய்க் கண்டுபிடித்து விடவில்லையா? அந்த நுண்ணுணர்வு உங்களுக்குப் பயிற்சியால் தான் வந்திருக்கிறது. நீண்ட காலம் கவனித்து அதில் தேர்ச்சி பெற்று விட்டிருக்கிறீர்கள். அப்படித் தான் இதுவும்.”

 

முக்தானந்தாவுக்கு இப்போதும் வியப்பு குறையவில்லை. அது மிக லேசான கிறீச் சத்தம் தான். அதற்காகவே காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தால் அந்த இரவு நேரத்தில் கேட்டிருக்கும் தான். ஆனால் ஷ்ரவன் அவரிடம் சுவாரசியமாக பரசுராமனின் ஏவல் சக்திகள் பற்றியும், சைத்ராவின் ஆவியிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட செய்தி பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தான். அந்தப் பேச்சின் நடுவிலும் அந்த மெல்லிய சத்தத்தை அவன் கேட்டு உஷாரானது பெரிய விஷயம் என்றே தோன்றியது.

 

முக்தானந்தா கேட்டார். “பயிற்சி என்றால் எங்கே யாரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டாய்?”

 

ஒரு குங்ஃபூ மாஸ்டரிடம் சுவாமிஜிஎன்ற ஷரவன், பத்து நாட்கள் கண்களைத் துணியால் கட்டிக் கொண்டு காதால் மட்டும் சத்தத்தைக் கேட்டுக் கொண்டு,   அதற்கு ஏற்றபடி இயங்கி, கேட்கும் நுண்ணுணர்வை வளர்த்துக் கொண்டதைச் சொன்னான். பத்து நாட்கள் இரண்டு காதுகளையும் நன்றாக மூடி கண்களால் மட்டுமே பார்த்து அதற்கு ஏற்றபடி இயங்கி, பார்க்கும் நுண்ணுணர்வை வளர்த்துக் கொண்டதைச் சொன்னான். அதே போல பல சத்தங்களுக்கு நடுவே ஒரு சத்தத்தில் மட்டும் கவனம் வைக்க முடிந்த கஷ்டமான பயிற்சியைப் பற்றியும், பல இயக்கங்களுக்கு நடுவே ஒரு இயக்கத்தில் மட்டும் கவனத்தைக் குவிக்க முடிந்த பயிற்சியையும் பற்றி அவன் சொன்ன போது அவருக்குப் பிரமிப்பாக இருந்தது.


(தொடரும்)

என்.கணேசன்




என்.கணேசனின் நூல்களை வாங்க 94863 09351 எண்ணில் பதிப்பாளரைத் தொடர்பு கொள்ளுங்கள்.