என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, July 31, 2025

சாணக்கியன் 172

 

சாணக்கியர் சந்திரகுப்தனிடம் சென்று விஷயத்தைச் சொன்ன போது அவன் திகைப்படைந்தான். அவர் எந்த அளவு தனநந்தனை வெறுத்தார் என்பதை அவன் அறிவான். அவர் இதற்குச் சம்மதித்தது அவன் மனதில் துர்தரா இடம் பிடித்து விட்டாள் என்பதை அறிந்து தான் என்பதில் அவனுக்குச் சந்தேகமே இல்லை. அவனது ஒரு பார்வையையும், ஒரு சொல்லையும் வைத்து அவன் முழு மனதையும் புரிந்து கொள்ள முடிந்த  அவரது அறிவுக்கூர்மைக்கு இது தெரியாமல் போக வாய்ப்பேயில்லை. அதனால் அவனுக்காக அவர் எதிரியின் மகளை அவன் மனைவியாக ஏற்கவும் தயாரானது அவனுக்கு மிகப்பெரிய தியாகமாகத் தோன்றியது

 

அவன் குரல் தழுதழுக்கச் சொன்னான். “எனக்காக நீங்கள் இதைச் செய்திருக்க வேண்டியதில்லை ஆச்சாரியரே. நான் அவளை மறக்கக் கண்டிப்பாக முயற்சி செய்திருப்பேன்.”

 

சாணக்கியர் மென்மையாகச் சொன்னார். “நீ கண்டிப்பாக முயற்சி செய்திருப்பாய் சந்திரகுப்தா. ஆனால் உன்னால் அவளை மறக்க முடிந்திருக்காது. பின் காலமெல்லாம் இதயத்தின் மூலையில் ஒரு வெறுமையை உணர்ந்த வண்ணம் வாழ்ந்திருப்பாய். உன் மகிழ்ச்சியை விட என் வெறுப்பு எனக்கு முக்கியமல்ல சந்திரகுப்தா. மேலும் நான் தனநந்தனிடம் சொன்னது வெறும் வார்த்தைகள் அல்ல. வெறுப்பு தேவையில்லாத சுமை. தண்டித்த பிறகும் குற்றவாளியிடம் வன்மம் வைத்திருப்பது, இனி நடக்க வேண்டிய காரியங்களில் இருந்து சிறிதாவது நம் கவனத்தைத் திருடிக் கொள்ளும். அது சரியல்ல. முட்டாள்தனமும் கூட.”

 

சந்திரகுப்தன் கண்களில் பெருகிய நீரைக் கட்டுப்படுத்த மிகவும் கஷ்டப்பட்டான். “எத்தனை பிறவிகள் எடுத்து உங்கள் கடனை நான் தீர்க்க வேண்டியிருக்கும் என்று எனக்குத் தெரியவில்லையே ஆச்சாரியரே” என்று சொன்னபடி அவர் காலில் விழுந்து அவன் வணங்கினான். அவன் கண்ணீர் அவர் பாதங்களை நனைத்தது.

 

ர்வதராஜனின் கால்களை அமுக்கிக் கொண்டிருந்த சுசித்தார்த்தக் அவனை அடிக்கடி இரக்கத்துடன் பார்த்தான். ஆரம்பத்தில் அவனுக்குப் புத்தி பேதலித்து விட்டதா என்று சந்தேகப்பட்ட பர்வதராஜன் வாய்விட்டே கேட்டான். “உனக்கு என்ன ஆயிற்று? நீ ஏன் என்னை அப்படிப் பார்க்கிறாய்?.”

 

ஒன்றுமில்லை அரசே.... ஒன்றுமில்லை....” என்று சொல்லி விட்டு சுசித்தார்த்தக் பர்வதராஜனின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து அவன் கால்களை அமுக்க ஆரம்பித்தான்

 

பர்வதராஜன் அவன் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கடுமையான குரலில் சொன்னான்.  ”என்ன விஷயம்? மறைக்காமல் உண்மையைச் சொல்.”

 

எச்சிலை விழுங்கியபடி சுசித்தார்த்தக் சொன்னான். “மன்னியுங்கள் அரசே. என் தந்தை என்னை எப்போதுமே அதிகப்பிரசங்கி என்றும் தேவையில்லாமல் அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைப்பவன் என்றும் திட்டுவார். பணியாள், பணியாளாகவே எல்லா சமயங்களிலும் இருக்க வேண்டும் என்றும் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவது கடைசியில் எனக்கே பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வார். அவர் சொல்வது உண்மை தான். ஆனால் பிறவிக்குணம் என்று சொல்வார்களே அதை முழுவதுமாக மாற்ற முடியாமல் நான் கஷ்டப்படுகிறேன் அரசே

 

பர்வதராஜன் பொறுமையிழந்து கேட்டான். “அரசனிடம் உண்மையை மறைப்பது ராஜத்துரோகம் என்று உன்னிடம் இதுவரை யாரும் சொல்லியிருக்கவில்லையா சுசித்தார்த்தக்?”  

 

தர்மசங்கடத்துடன் பர்வதராஜனைப் பார்த்த சுசித்தார்த்தக் என்ன சொல்வதென்று தெரியாதவன் போல திருதிருவென்று விழித்து விட்டுச் சொன்னான். “நான் சொல்லித் தான் உங்களுக்குத் தெரியப்போகிறது என்றில்லை. நீங்கள் அதைப் பிறகு அறிந்து கொள்ளத்தான் போகிறீர்கள். ஆனாலும் எனக்குத் தெரிய வந்த அந்த தகவலை முன்கூட்டியே உங்களிடம் சொல்லி எச்சரிப்பது என் கடமை என்று எனக்குத் தோன்றியது.”

 

பர்வதராஜன் கோபத்துடன் கத்தினான். “சொல்லித் தொலையேன் முட்டாளே?”

 

சுசித்தார்த்தக்  மெல்லக் கேட்டான். “நீங்கள் அந்தத் தகவலைக் கேள்விப்பட்டீர்களா அரசே

 

பர்வதராஜன் பார்வையால் அவனைச் சுட்டெரித்தான். சுசித்தார்த்தக் அவசரமாகச் சொன்னான். “சந்திரகுப்தன் மகத இளவரசியைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் தகவலைத் தான் கேட்டேன் அரசே?”

 

பர்வதராஜன் திகைப்புடன் கேட்டான். “என்ன உளறுகிறாய்?”

 

உளறவில்லை அரசே. உண்மையைத் தான் சொன்னேன். சந்திரகுப்தனும் மகத இளவரசி துர்தராவும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள். அதற்குப் பிரதியுதவியாய் தனநந்தரிடம் வேண்டிய அளவு செல்வத்தை எடுத்துக் கொண்டு போக சாணக்கியர் அனுமதி தந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.”

 

பர்வதராஜன்  சுசித்தார்த்தக்கைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டான். “பகலிலேயே மதுவருந்தியிருக்கிறாயா சுசித்தார்த்தக்?”

 

சுசித்தார்த்தக் அழாத குறையாகச் சொன்னான். “அப்படியெல்லாம் இல்லை அரசே. நான் கேள்விப்பட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு தான் உங்களிடம் சொல்கிறேன். கேட்டவுடன் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. நீங்கள் வெற்றியில் சமபாதி பங்கு உங்களுக்கிருப்பதாய் அன்று சொல்லியிருந்தீர்கள். ஆனால் நீங்கள் அறியாமலேயே இங்கு என்னென்னவோ நடந்து கொண்டு இருக்கிறது என்று தெரிவித்து எச்சரிக்க விரும்பினேன். அவ்வளவு தான். சொன்னது தவறாக இருந்தால் அடியவனைத் தயவுசெய்து மன்னித்து விடுங்கள் அரசே.”

 

பர்வதராஜன் இதற்கும் எதிர்க்கா விட்டால் சரியாகாது என்று நினைத்து உடனே சாணக்கியரைச் சந்தித்து வெளிப்படையாகப் பேசிவிட வேண்டும் என்று முடிவெடுத்த போது சாணக்கியரும், சந்திரகுப்தனும் அங்கே வந்து சேர்ந்தார்கள்.

 

ர்வதராஜன் பழைய நட்பு, பக்தியுடனேயே எழுந்து சாணக்கியர் காலைத் தொட்டு வணங்கி அவர்களை அமர வைத்து உபசரித்தான். அவன் சற்று முன் சுசித்தார்த்தக் மூலம் கேள்விப்பட்ட தகவல்கள் எதுவும் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளக்கூடாது என்று முடிவெடுத்திருந்தான். முதலில் ஆச்சாரியரோ, சந்திரகுப்தனோ இதைப் பற்றிச் சொல்கிறார்களா என்று பார்ப்போம். அவர்கள் சொல்லாமல் இருந்தால் அதைப் பற்றிக் கேட்டு அவர்கள் திருட்டுத்தனம் தெரிந்து விட்டது என்று காட்டிக் கொள்வோம் என்று நினைத்தான்.

 

அவர்கள் வந்த பின் கூட அங்கிருந்து போகாமல் ஒரு ஓரமாக நின்றிருந்த சுசித்தார்த்தக்கை சாணக்கியர் கடுமையான பார்வை பார்க்க அவன் அவசரமாக அங்கிருந்து நகர்ந்தான்.

 

பர்வதராஜன் சொன்னான். “ஆச்சாரியரே உங்கள் தரிசனம் கிடைப்பது மிக அரிதாக இருக்கின்றது என்று சற்று முன் தான் மலைகேதுவிடம் சொன்னேன்.”

 

சாணக்கியர் சொன்னார். “பழைய நிர்வாகத்திலிருந்து நம் நிர்வாகத்திற்கு மகதத்தைக் கொண்டு வருவது பெரிய வேலையாக இருக்கிறது பர்வதராஜனே. அதோடு முடிக்க வேண்டிய வேறுபல வேலைகளும் நிறைய இருக்கின்றன

 

பர்வதராஜன் சொன்னான். “அதனால் தான் அந்தப் பணிச்சுமையை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று உங்களிடம் பல முறை சொன்னேன். நீங்கள் தான் கேட்கவில்லை ஆச்சாரியரே

 

சாணக்கியர் சொன்னார். “சில வேலைகளை ஒருவரே கவனித்துக் கொள்வது அனாவசியக் குழப்பங்களைத் தவிர்க்கும் என்று தான் நான் அதைப் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கின்றேன் பர்வதராஜனே. ராக்ஷசரும் பிடிபட்டு, மகதப்படைகளும் பல பகுதிகளில் இருந்தும் திரும்பி வந்த பிறகு நாம் இருவரும் சேர்ந்து செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. அப்போது உனக்கும் ஓய்வு இருக்கப் போவதில்லை

 

பேசும் அளவிலாவது ஆச்சாரியர் முந்தைய ஒப்பந்தத்தை நினைவு வைத்திருப்பது பர்வதராஜனுக்குச் சிறிது ஆறுதல் தந்தது. அவன் மெல்லக் கேட்டான். “நல்லது ஆச்சாரியரே. இங்குள்ள பணிகள் எந்த அளவில் இருக்கின்றன?”

 

சாணக்கியர் மிக வருத்தப்படும் தொனியில் சொன்னார். “சரிவர போய்க் கொண்டிருக்கின்றன.  ஆனால் அதற்கிடையில் நாம் சிறிதும் எதிர்பார்த்திருக்காத ஒரு நிகழ்வு நடந்து விட்டது பர்வதராஜனே. அதற்கு என்    நாக்கும், நல்லெண்ணமுமே காரணமாகி விட்டது

 

என்ன ஆயிற்று ஆச்சாரியரே?” என்று பர்வதராஜன் கேட்டான்.

 

பர்வதராஜனே. தனநந்தன் கொடுங்கோலனாக இருந்த போதும், மக்களிடம் சிறிதும் நற்பெயரைப் பெற்றிடாமல் இருந்த போதும் அவன் நீண்ட காலம் மகதத்தை ஆண்டவன். அவனைத் தண்டிப்பதும் சிறையிலடைப்பதும் நமக்குப் பெரிதல்ல என்ற போதிலும் மக்கள் எப்போதும் இது போன்ற விஷயங்களில் இளகிய மனம் படைத்தவர்கள். பாதிக்கப்படும் அவன் மேல் பச்சாதாபமும், தண்டித்த நம் மீது நல்லெண்ணக் குறைவும் ஏற்பட்டு விடுவதை நான் விரும்பவில்லை. அதனால் தனநந்தனை வனப்பிரஸ்தம் போகச் சொல்லிக் கட்டளையிட்டேன். இன்று சூரியாஸ்தமனத்திற்குள் மகத எல்லையை விட்டுச் சென்று விட வேண்டும் என்று உறுதியாகச் சொன்னேன். வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக் கொண்ட அவன் தன் திருமணமாகாத மகள் குறித்து வருத்தப்பட்டான். நான் நல்லெண்ணம் காரணமாக அவன் மகள் யாரையாவது விரும்பினால் அவனையே அவளுக்குத் திருமணம் செய்து வைப்பது என் பொறுப்பு என்று வாக்களித்து விட்டேன். ஆனால் அவன் மகளிடம் பேசி விட்டு வந்து அவன் மகள் சந்திரகுப்தனை விரும்புகிறாள் என்று சொல்லி விட்டான்...”

 

பர்வதராஜன் சொன்னான். “எத்தனை சூழ்ச்சி பாருங்கள் ஆச்சாரியரே. அதற்கு நீங்கள் மறுத்து விட்டீர்கள் அல்லவா?”

 

(தொடரும்)

என்.கணேசன்  



 

Monday, July 28, 2025

யோகி 113


ஷ்ரவன் சொன்னது போல் அந்த நிஜ யோகியை ஏதோ ஒரு தனிப்பட்ட காரணத்திற்காக பிரம்மானந்தா யோகாலயத்திற்கு வரவழைத்திருக்க  வாய்ப்பிருப்பதாகத் தோன்றினாலும், அந்தச் சந்திப்பின் போது சைத்ரா இருந்திருக்க வாய்ப்பு இல்லை என்றே முக்தானந்தாவுக்குத் தோன்றியது. அவர் சொன்னார். “இங்கே நடக்கும் முக்கிய சந்திப்புகளில் தன்னுடன் இருக்க பிரம்மானந்தா பாண்டியன் அல்லது கல்பனானந்தாவை அனுமதிப்பாரே ஒழிய சைத்ரா போன்ற சாதாரண இளம் துறவியை எல்லாம் தன்னுடன் இருக்க அனுமதித்திருக்க மாட்டார் ஷ்ரவன். அதனால் நீ சொல்வது போல் அவர் அந்த யோகியை இங்கே வரவழைத்திருந்தாலும் கூட, அவருடன் சேர்ந்து சைத்ராவும் அந்த யோகியை இங்கே சந்தித்திருக்க வாய்ப்பில்லை.”

 

அப்படியானால் பிரம்மானந்தாவுடன் இல்லாமல் வேறு விதமாக சைத்ரா அவரை இங்கே சந்தித்திருக்கலாம்.”

 

நீ சொல்லும் யோகி சாதாரண தோட்டக்காரரின் உடையில் இருப்பவர் என்றால் அவர் வெளிகேட்டிலிருந்தே உள்ளே நுழைந்திருக்க முடியாதே.”

 

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இடிக்கிறதே என்று எண்ணிய ஷ்ரவன் தன் அடுத்த சந்தேகத்தை அவரிடம் கேட்டான். “சரி சுவாமிஜி. அந்த யோகியை சைத்ரா ஏன், எப்படி, எங்கே சந்தித்தாள் என்பதை விட்டு விடுவோம். சைத்ராவை என்ன காரணத்திற்காக அவர்கள் கொன்றிருப்பார்கள் என்பதை உங்களால் யூகிக்க முடிகிறதா?”

 

முக்தானந்தா இல்லை என்று தலையசைத்து விட்டுச் சொன்னார். “இங்கே சட்ட விரோதமான வேலைகள் நடக்கின்றன என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை ஷ்ரவன். ஏனென்றால் இங்கே சில நாட்களில் இரவு நேரங்களில் ஆட்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கும். துறவிகளை இரவு பத்து மணிக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் வெளியே உலாவக் கூடாது என்று சொல்லும் இவர்கள் மட்டும் அந்த நேரத்திற்குப் பின் ஏன் நடமாடுகிறார்கள் என்று தெரியவில்லை. அப்படி நடமாடுபவர்களில் ஒருசிலர் சில சமயங்களில் புதிய ஆட்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை அழைத்துப் போகிறவர்களும், அழைத்து வருபவர்களும் பாண்டியனின் ஆட்களாய் இருக்கிறார்கள். சில சமயங்களில் துறவிகளையும் அழைத்துக் கொண்டு போகிறார்கள். அந்த அகால நேரத்தில் என்ன வேலையாய் அழைத்துக் கொண்டு போகிறார்கள் என்பது தெரிவதில்லை. இரண்டு தடவை யாரையோ தூக்கிக் கொண்டு போவதைக்கூட நான் பார்த்திருக்கிறேன். உயிருடன் தூக்கிக் கொண்டு போகிறார்களா, இல்லை பிணத்தைத் தூக்கிக் கொண்டு போகிறார்களா என்பதும் தெரிவதில்லை…”

 

ஷ்ரவன் அவர் சொன்னதையெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டு சிறிது யோசித்து விட்டுக் கேட்டான். “நீங்கள் பார்த்ததில் பெண்களும் இருந்திருக்கிறார்களா?”

 

ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு ஒரு முறை ஒரு பெண்ணையும் அழைத்துப் போவதை நான் பார்த்தேன். அதற்கு முன்பும், பின்பும் நான் பார்த்தவர்கள் எல்லாம் ஆண்கள் தான்.”

 

ஷ்ரவன் கேட்டான். “சைத்ராவுக்கு பாலியல் ரீதியாக எதாவது பிரச்சினைகள் வந்திருக்க வாய்ப்புண்டா சுவாமிஜி?”

 

இங்கே அதற்கு வாய்ப்பு அதிகம் இல்லை ஷ்ரவன். வேறெதாவது காரணம் தான் இருக்கும். ஏனென்றால் நான் பார்த்த வரையில் இங்கே அந்த வகைப் பிரச்சினைக்கான சூழல் இருந்ததேயில்லை.“

 

சதாசர்வ காலம் ஜன்னல் அருகே அமர்ந்து கவனித்துக் கொண்டே இருக்கும் முக்தானந்தாவுக்கு அங்குள்ள சூழல் பற்றி எப்போதும் அறிந்திருக்க வாய்ப்பு உள்ளதால் ஷ்ரவன் அவர் சொன்னதை நம்பினான். அவனுக்குத் திடீரென்று இன்னொரு சந்தேகம் வந்தது.

 

நீங்கள் அப்படி ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டிப்பதில்லையா சுவாமிஜி?”

 

ஆரம்ப காலங்களில் சில முறை என்னை முறைத்தும், திட்டியும் இருக்கிறார்கள். எனக்குத் தூக்கம் வருவதில்லை, நான் என்ன செய்யட்டும் என்று கேட்டேன். அதன் பின் என்னால் பிரச்சினை எதுவும் வராததைப் பார்த்து அவர்கள் என்னைக் கண்டு கொள்ளாமல் இருக்கப் பழகி விட்டார்கள்.”

 

ஷ்ரவன் சொன்னான். “சைத்ராவோடு 206ல் இருந்தவர்களுக்கு, கொலைக்கான காரணம் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவர்களைத் தொடர்பு கொள்ள வழியில்லை….”

 

முக்தானந்தா சொன்னார். “தொடர்பு கொள்ள முடிந்தாலும் கூட அவர்கள் வாய் திறந்து பேச வாய்ப்பில்லை.”

 

அவளுடன் இரண்டு அல்லது மூன்று பேர் அந்த அறையில் இருந்திருக்கலாம். அவர்களில் யாராவது ஒருத்தி சைத்ராவைக் காப்பாற்ற அவள் தந்தைக்கு மொட்டைக் கடிதம் எழுதி இருக்கலாம் அல்லவா?”

 

இருக்கலாம். ஆனால் இங்கே தபால் பெட்டி வெளிகேட்டுக்குப் பக்கத்தில் தான் இருக்கிறது. இங்கேயுள்ள உள் கேட்டைத் தாண்டி வெளியே போய் தான் அந்தப் பெட்டியில் தபாலைப் போட வேண்டும். ஆனால் இங்குள்ள துறவிகள் அனுமதியில்லாமல் உள்கேட்டைத் தாண்ட முடியாதே ஷ்ரவன். அப்படி இருக்கையில் அவள் எப்படி அந்தக் கடிதத்தை அந்தத் தபால் பெட்டியில் போட்டு இருப்பாள்?”

 

ஷ்ரவன் பெருமூச்சு விட்டான். எல்லா வழிகளிலும் அடைப்பு இருக்கிறதுபின் கேட்டான். “சைத்ராவுக்குக் கொடுக்கப்பட்ட தோட்ட வேலையிலும், நூலக வேலையிலும் அவளுக்கு மேற்பார்வையாளராக இருந்தது கல்பனானந்தா தான். அதனால் அவருக்கு சைத்ரா பற்றியும்,  இங்கு அவளுக்கு என்ன, ஏன் ஆனது என்பது பற்றியும் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு அல்லவா சுவாமிஜி?”

 

முக்தானந்தா தலையசைத்தார். “நிச்சயம் உண்டு. கல்பனானந்தா அதீத புத்திசாலி. அவள் இருக்கும் இடத்தில் நடப்பது எதுவும் அவள் கவனத்திலிருந்து தப்ப வழியேயில்லை.”

 

ஷ்ரவன் சொன்னான். “பிரம்மானந்தாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் அவர் இருப்பதால், அவர் பக்கத்திலிருந்தும் கல்பனானந்தாவுக்குத் தகவல்கள் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. இன்னொரு சாத்தியக்கூறும் இருக்கிறது சுவாமிஜி. பிரச்சினையே கல்பனானந்தா மூலமாகக்கூட ஏற்பட்டிருக்கலாம் அல்லவா? சைத்ரா இவர்களுடைய ரகசியம் எதையாவது கண்டுபிடித்து விட்டதை கல்பனானந்தா தெரிந்து கொண்டு பிரம்மானந்தாவிடமோ, பாண்டியனிடமோ சொல்லிக் கொடுத்திருக்கவும் வாய்ப்பு இருந்திருக்கிறது அல்லவா சுவாமிஜி.

 

முக்தானந்தா சொன்னார். ”காலப் போக்கில் எல்லாருமே சிறிதாவது மாறுகிறார்கள். அப்படி கல்பனானந்தாவும் ஓரளவு மாறியிருக்கலாம். அப்படி மாறியிருந்தால் ஒழிய அவளால் பிரம்மானந்தாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவளாக இப்போதும் இருந்திருக்க முடியாது. ஆனாலும் அவளால் இன்னொரு பெண்ணின் உயிர் போயிருக்க முடியாது என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் ஷ்ரவன். கல்பனானந்தாவுக்கு சைத்ராவின் கொலை பற்றிய உண்மைகள் தெரிந்திருக்கலாம் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அவளால் சைத்ராவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்க முடியாது.”

 

ஷ்ரவன்எதனால் அந்த அளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டான்.

 

முக்தானந்தா சொன்னார். “ஆன்மீகத்தில் என்னுடைய ஈடுபாட்டுக்குச் சிறிதும் குறைந்ததல்ல அவளுடைய ஈடுபாடு. இளம் வயதில் அவள் நிறையவே கஷ்டப்பட்டு இருக்கிறாள். அவளுடைய கஷ்டங்கள் வாய்விட்டுச் சொல்ல முடியாதவை. அக்காலத்திலேயே அவளுக்கு ஆன்மீகம் தான் பெரிய ஆசுவாசமாக இருந்திருக்கிறது. நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறாள். யாராவது ஒரு பிரபல ஆன்மீக அறிஞரைப் பற்றி நீ பேச ஆரம்பித்தால், அவருடைய வாழ்க்கை வரலாற்றையும்,  அவருடைய பிரதான போதனைகளையும் தெளிவாக அவளால் விவரிக்க முடியும். பிரம்மானந்தாவின் சில பேச்சுக்கள் மிக நன்றாய் இருக்கின்றன என்றால், காரணம் அவை அனைத்தும் அவள் குறிப்பெடுத்துக் கொடுத்தவை. அவள் குறிப்பெடுத்துக் கொடுத்ததை மட்டும் அவர் பேசியிருந்தால் எவ்வளவோ சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் அவர் சிறிது தன் சொந்தப் புகழையும், கற்பனைக் கதைகளையும் புகுத்தி தான், கேட்பவர்களை சோதித்து விடுகிறார்...”

 

ஷ்ரவன் கேட்டான். “கல்பனானந்தாவிடமிருந்து நான் சைத்ரா பற்றிய உண்மைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறதா சுவாமிஜி?”

 

முக்தானந்தா வறண்ட குரலில் சொன்னார். “அவள் உண்மைகளைச் சொல்வதாய் இருந்தால், தன் உயிரைப் பணயம் வைத்து தான் உன்னிடம் சொல்ல வேண்டியிருக்கும்.”

 

அப்படி யாரையாவது வற்புறுத்திக் கேட்க முடியுமா? அப்படிக் கேட்பது நியாயமாய் இருக்குமா?’ என்று ஷ்ரவன் திகைத்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்




Thursday, July 24, 2025

சாணக்கியன் 171

சாணக்கியர் என்ற பெயர் தனநந்தனை எரிச்சலடையச் செய்தது. என்றோ அவனை எதிர்த்து நின்ற சாணக் இப்போது மகன் மூலமாக வென்று விட்டது போலவும், சாணக்கின் பெயர் நிலைத்து நின்று விட்டது போலவும் தோன்றுவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. அவனே சாணக்கின் மகனே என்று அழைப்பதை நிறுத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். ஆனால் மனைவி சொன்ன தகவல் புதிராகத் தோன்றி மேலோங்கி இருந்ததால் அவன் ஆர்வத்துடன் கேட்டான். “யாரது?”

 

தாரிணி தயக்கத்துடன் சொன்னாள். “சந்திரகுப்தன்” 

 

அந்தப் பெயரைக் கேட்டதும் தனநந்தன் கண்களில் தீப்பந்தங்கள் எரிந்தன. முன்னொரு காலத்தில் இங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்தவன், இன்று எதிரியாகி அவனிடமிருந்து ராஜ்ஜியத்தைப் பறித்துக் கொண்டவன் - அவன் மகளை மணப்பதா? நாடு இழந்தாலும் என் கௌரவத்தை நான் இழந்து விடவில்லை என்று சொல்லக் கோபத்தோடு வாய் திறந்தவனை தாரிணி பேச விடாமல் தடுத்துச் சொன்னாள்.

 

எதைச் சொல்வதற்கு முன்பும் இப்போதைய நம் நிலைமையையும், துர்தராவின் எதிர்காலத்தையும் சிறிது யோசித்து விட்டுச் சொல்லுங்கள். ராஜ்ஜியத்தை இழந்து விட்டோம். பிள்ளைகளையும் இழந்து விட்டோம். ஆசைப்படவோ, எதிர்பார்க்கவோ நமக்கு ஒரு நல்ல எதிர்காலம் இல்லை. அவளுக்காவது ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டுமே

 

என்ன சொல்வதென்று தனநந்தன் திகைக்கையில் அமிதநிதா சொன்னாள். “சந்திரகுப்தனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஒருவேளை அவன் துர்தராவைத் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் தான் நாளை மகத அரியணையில் அமர்வார்கள். நீங்கள் இழந்ததை உங்கள் பேரப்பிள்ளைகள் எதிர்காலத்தில் அடைந்தால் அது உங்களுக்கும் ஒருவிதத்தில் வெற்றியே அல்லவா?”

 

தனநந்தன் இந்த வகையில் சிந்தித்துப் பார்த்திருக்கவில்லை. ஆனாலும் சந்திரகுப்தனை மருமகனாக ஏற்றுக் கொள்ள அவனுக்கு மனம் வரவில்லை. “அவன் ஒரு காலத்தில் இங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்தவன்...” என்றான்.

 

அமிதநிதா சொன்னாள். “அவன் பூர்விகத்தைப் பார்த்தால் நம் பூர்விகத்தையும் நாம் யோசித்துப் பார்ப்பது தானே நியாயம்.”

 

அவன் பூர்விகத்தை யாரும் நினைவுபடுத்துவது தனநந்தனுக்குப் பிடித்தமானதாக இருந்ததில்லை. சற்று முன் தான் சாணக்கின் மகனும் அதை நினைவுபடுத்தி அவமதித்தது நினைவுக்கு வந்தது. அவன் தன் மூத்த மனைவியை முறைத்தான். அவள் அதைப் பொருட்படுத்தாமல் சொன்னாள். “இப்போது அவன் வென்றவன். நீங்கள் தோற்றவர். யோசித்தால் அவன் தான் மறுக்க வேண்டும். சாணக்கியர் ஒத்துக் கொள்வாரா இல்லையா என்பது வேறு விஷயம்.”

 

துர்தரா அருகில் வந்து சொன்னாள். “இந்தப் பேச்சை நாம் இதோடு விட்டு விடுவது நல்லது. அவர் ஆச்சாரியர் பேச்சை மீறி எதையும் செய்ய மாட்டார் என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆச்சாரியர் இதற்கு ஒத்துக் கொள்வார் என்று தோன்றவில்லை....”

 

சொல்லும் போது மகள் முகத்தில் தெரிந்த சோகமும், அவள் குரல் உடைந்ததும் தனநந்தனை என்னவோ செய்ததுமகதத்தை வென்ற சந்திரகுப்தன், அவன் மகள் மனதையும் இவ்வளவு விரைவில் வென்றிருப்பது விதியின் விளையாட்டாகவே  தோன்றியது.

 

அவன் எதுவும் சொல்வதற்கு முன்பாக தாரிணி சொன்னாள். “ஆச்சாரியர் வாக்கு கொடுத்திருக்கிறார். வரன் யார் என்று தெரிந்து அவர் மறுத்தால் அவர் கொடுத்த வாக்கு தவறியவராகிறார். அது அவருக்குத் தான் கேவலம். அதனால் அவர் வாக்கு தவற மாட்டார் என்று நினைக்கிறேன்.”

 

அமிதநிதா சொன்னாள். “ஜோதிடர்கள் அவள் கிரக அமைப்பை வைத்து அவள் ஒரு சாம்ராஜ்ஜியத்தின் சிம்மாசனத்தில் அமர்பவளாகவே இருப்பாள் என்று சொன்னதும் பொருந்துவதால் சாணக்கியர் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவும் வாய்ப்பு இருக்கிறது.”

 

தனநந்தன் களைப்புடன் தன் மனைவிகளைப் பார்த்தான். இப்போது அவன் அபிப்பிராயத்தைப் பற்றி அவர்கள் யாருக்குமே கவலையில்லை. சாணக்கின் மகன் அபிப்பிராயம் பற்றித் தான் அவர்களுக்குக் கவலை. ஆனால் மகளின் எதிர்காலத்தைப் பற்றி யோசித்தால் அவர்கள் சொல்வதில் தவறில்லை தான். அவன் இழந்ததை அவன் மகள் பெற்றால் அதை இழப்பு என்று சொல்ல முடியுமா?

 

அவன் முன்பே யோசித்துக் கவலைப்பட்டது போல அவன் வாழ்ந்து முடித்தவன். அவன் மகள் இன்னும் வாழவே ஆரம்பிக்கவில்லை. அவளுடைய நலன் பற்றி தான் இனி அவன் யோசிக்க வேண்டும்ஆனால் அவன் சம்மதித்தாலும் சாணக்கின் மகன் சம்மதிப்பான் என்று தோன்றவில்லை. வாக்கு கொடுத்து விட்ட காரணத்தாலேயே சம்மதிக்கும் அளவுக்கு பெருந்தன்மை சாணக்கின் மகனுக்கு இருக்குமா? இதற்கும் தன் எதிரியின் சம்மதம் தேவைப்படும் நிலைமையில் இருப்பது அவமானமாகத் தோன்றினாலும் ஒரு தந்தையாக அவன் மனது அதைப் பொருட்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியது. அவன் மனம் மாறி மாறி யோசித்தது.  

   

 

றுநாள் சாணக்கியர் தனநந்தனைக் காண வந்த போது யோசனையாலும், கவலையாலும் பீடிக்கப்பட்டவனாக அவன் தோன்றினான்அவர் அவனுக்கு வணக்கம் தெரிவித்த போது அவனையறியாமல் அவனும் கைகூப்பினான்.

 

சாணக்கியர் அவனுக்கெதிரே இருந்த ஆசனத்தில் அமர்ந்தபடி கேட்டார். “கானகம் செல்லத் தயாராகி விட்டாயா தனநந்தா?”

 

தனநந்தன் தலையை மெல்ல அசைத்தான். சாணக்கியர் கேட்டார். “மகளிடம் பேசினாயா? அவளுக்குப் பிடித்தவன் யாராவது இருக்கிறார்களா?”

 

தனநந்தன் மெல்ல சொன்னான். “அவளுக்கு ஒருவனைப் பிடித்திருக்கிறது என்று தெரிகிறது. ஆனால் இந்தத் திருமணம் நடக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.”

 

சாணக்கியர் முகத்தில் குழப்பம் காட்டிக் கேட்டார். “ஏன்?”

 

தனநந்தன் சிறிது தயங்கி விட்டுச் சொன்னான். “அவள் பிடித்திருப்பதாகச் சொன்னது சந்திரகுப்தனை

 

சாணக்கியர் அதிர்ச்சியைக் காட்டி சிறிது நேரம் மௌனமாக இருந்தார். தனநந்தன் படபடக்கும் இதயத்தோடு அவர் என்ன சொல்வாரோ என்று காத்திருந்தான். அவர் ஒத்துக் கொள்வார் என்ற நம்பிக்கை அவனுக்குக் குறைவாகவே இருந்தது. அவன் மனைவியரும், மகளும் கூட அதில் அதிக நம்பிக்கை வைத்திருக்கவில்லை. அவர் ஒத்துக் கொண்டால் அது அவள் பிறந்த நேரத்தின் கிரகச் சேர்க்கையும், அதிர்ஷ்டமுமே காரணமாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

 

சாணக்கியர் ஒரு முடிவுக்கு வந்தவர் போலக் காட்டிக் கொண்டு இறுகிய முகத்துடன் சொன்னார். “கொடுத்த வாக்கை மீறுவதும் மானமிழந்து வாழ்வதும் ஒன்று என்று நினைப்பவன் நான். அதனால் அவர்கள் திருமணம் நடப்பது உறுதி.”

 

தனநந்தனுக்கு இது நிஜம் தானா இல்லை கனவா என்ற சந்தேகம் எழுந்தது. அவரைத் திகைப்புடன் பார்த்தான். அவன் மனதில் இன்னொரு சந்தேகம் எழுந்தது. “சந்திரகுப்தன் சம்மதிப்பானா?”

 

சாணக்கியர் உறுதியான குரலில் முக இறுக்கம் மாறாமல் சொன்னார். “நான் சொன்னால் அவன் மறுக்க மாட்டான். ஆனால் இன்னும் பதினைந்து நாட்களுக்கு திருமண முகூர்த்த நாட்கள் இல்லை. அதனால் அதன் பின்னரே இந்தத் திருமணம் நடக்கும். அது வரை நீ இங்கே தங்கியிருக்க உனக்கு அனுமதி இல்லை தனநந்தா. வேண்டுமானால் திருமணம் முடியும் வரை உன் மகளின் தாய் மட்டும் இங்கிருக்க அனுமதியளிக்கிறேன். அது முடிந்த பின் அவள் உங்களுடன் வந்து இணைந்து கொள்ளட்டும். நீயும் உன் இரண்டாம் மனைவியும் இன்று சூரியாஸ்தமனத்திற்குள் கானகத்திற்குக் கிளம்பி விட வேண்டும். நான்கு வீரர்கள், நான்கு பணியாட்கள் உங்களுடன் வர அனுமதிக்கிறேன். நீ சந்திரகுப்தனுக்கு மாமனார் ஆகப் போகிறவன் என்பதால் உன்னை வெறும் கையோடு கானகம் அனுப்புவது உறவுக்குத் தரும் மரியாதை ஆகாது. அதனால் நீ கானகம் போகும் போது உங்களுடன் உன் ரதத்தில் எத்தனை கொண்டு செல்ல முடியுமோ அத்தனை உடைமைகளையும், செல்வத்தையும் கொண்டு செல்ல அனுமதிக்கிறேன்.... ”

 

சாணக்கியர் சொன்னதைக் கேட்டு தனநந்தன் பேராச்சரியம் அடைந்தான். இந்த அளவு பெருந்தன்மையை அவன் நிச்சயமாக சாணக்கியரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அவனும் அவன் மனைவியும், அவர்களுடைய உடைகளும் சேர்ந்தாலே ரதம் நிறைந்து விடும் என்பதால் கூடுதல் செல்வம் ஓரளவுக்கு மேல் கொண்டு போக முடியாதென்றாலும் அந்த ஓரளவுமே இப்போதைக்கு அவனுக்குப் பெரிது தான்....

 

சாணக்கியர் எழுந்து நின்றார். “வெறுப்பு காலெமெல்லாம் சுமக்க முடிந்த சுமை அல்ல தனநந்தா. அது பக்குவமடைந்தவனுக்குத் தேவையில்லாத பாரமும் கூட. அதை ஏதாவது ஒரு கட்டத்தில் கடப்பது மீதமுள்ள வாழ்க்கையைச் சுதந்திரமாகவும், இலகுவான மனதுடனும் வாழ ஒருவனை அனுமதிக்கிறது. உன்னிடம் விடைபெற்றுக் கொள்கிறேன்.”

 

சொல்லி அவனைப் பார்த்துக் கைகூப்பிய அவர் பின் ஒரு கணமும் நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டார்.

 

(தொடரும்)

என்.கணேசன்