என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, June 8, 2026

யோகி 159

 

ஷ்ரவனின் தனிப்பட்ட வாழ்க்கை சந்தோஷமும், நிறைவும் கொண்டதாகவே இருந்தது. ஸ்ரேயா அவன் ஆபத்தில்லாமல் யோகாலயத்திலிருந்து தப்பி வந்ததில் நிம்மதியடைந்தாள். அவன் அவள் மீது நம்பிக்கை வைத்துக் கொடுத்த வேலையை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்க முடிந்ததில் அவளுக்குத் திருப்தி இருந்தது. அவள் அதைக் கண்டுபிடித்துக் கொடுத்ததை வைத்து தான், புதைக்கப்பட்டது சந்திரமோகனாகத் தானிருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிந்ததாய் அவன் அவளைப் பாராட்டிச் சொன்ன போது அவளுக்கு சர்வதேச விருது கிடைத்தது போலிருந்தது. அவளுடைய சந்தோஷத்தைப் பார்த்து அவனுக்குச் சந்தோஷமாய் இருந்தது. அவனுடைய பெற்றோர் அவளுடைய பெற்றோரிடம் பேச ஆரம்பித்து விட்டார்கள். திருமண நிச்சயம் செய்ய இரண்டு வாரம் கழித்து ஒரு நல்ல நாளும் குறித்து விட்டார்கள்.

 

ஷ்ரவன் சேதுமாதவனுடன் அலைபேசியில் பேசினான். அவரிடம் அவன் கண்டுபிடித்த உண்மைகளைச் சொன்னான். கிருஷ்ணசாமியையும், அவரையும் எதாவது செய்து விடுவோம் என்று பயமுறுத்தி தான் அவர்கள் நீதிமன்றத்தில் சைத்ராவைத் தங்களுக்கு ஆதரவாகப் பேச வைத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்ன போது சேதுமாதவன் கண்கலங்கினார். என்ன நடந்திருக்கிறது என்று தெரியாமல் இருந்ததே அவருக்கு ஒரு வகையில் சித்திரவதையாக இருந்தது. இப்போது ஷ்ரவனின் உதவியால் அது தெளிவாகி விட்டது. குற்றவாளிகளை எதுவும் செய்ய முடியாவிட்டாலும் அவன் பாதுகாப்பாகத் தப்பித்து வந்தது அவருக்குச் சந்தோஷமாக இருந்தது. அந்த நல்ல இளைஞனுக்கு அங்கு ஏதாவது ஆபத்து வந்திருந்தால் அவரால் தாங்கியிருக்க முடியாது. அவருக்கு அந்த யோகியைப் பற்றி அவன் சொன்னதெல்லாம் பிரமிப்பாக இருந்தது. அந்த யோகி சொன்ன வார்த்தைகள் அவரை மெய் சிலிர்க்க வைத்தன. அவர் சீக்கிரத்தில் ஒரு நாள் அந்த யோகியைப் போய்ச் சந்திப்பதாகச் சொன்னார்.

 

உண்மைக் குற்றவாளிகள் எந்த தண்டனையும் இல்லாமல் பாதுகாப்பாய் இருப்பது அவனுக்கு உறுத்திக் கொண்டு தான் இருக்கிறது என்பதை ஷ்ரவன் சொன்ன போது அவர் அமைதியாகச் சொன்னார். “தெய்வம் நின்று கொல்லும், ஷ்ரவன். யாரும் அவரவர் கர்மாவில் இருந்து தப்ப முடியாது. உன்னால முடிஞ்சதை எல்லாம் நீ செஞ்சிருக்காய். அந்த யோகி சொன்ன மாதிரி மீதி எல்லாம் கடவுள் தீர்மானம்.”

 

ஷ்ரவன் ஒரு நாள் பரசுராமனுடன் அலைபேசியில் பேசினான். அவன் வெற்றிகரமாக உண்மைகளைக் கண்டுபிடித்து யோகாலயத்திலிருந்து தப்பி வந்ததை அவரும் பாராட்டினார். அவருடைய மந்திரோபதேசத்தை அவன் முறையாகப் பயன்படுத்திக் கொண்ட விதம் அவரைக் கவர்ந்தது. உபதேசங்கள் சுலபம். ஆனால் விடாமல் தொடர்ந்து முயற்சி செய்வது சிலருக்கே சாத்தியப்படும்... உண்மைக் குற்றவாளிகள் பாதுகாப்பாக இருப்பதில் அவன் உணர்ந்த அதிருப்தியை ஷ்ரவன் அவரிடமும் சொன்ன போது அவரும் கர்மா தன் வேலையைச் செய்யும் என்றார்.

 

அவன் சொன்னான். “இருக்கலாம் சுவாமிஜி. ஆனால் குற்றவாளிகள் பாதுகாப்பாய் இருக்கறதைப் பார்க்கறப்ப எனக்கு என் வேலை  பாதி மட்டும் தான் முடிஞ்ச மாதிரி தோணுது.”

 

பரசுராமன் சொன்னார். “அப்படின்னா உன் திருப்திக்காக, நீ இது வரை பயன்படுத்தின மந்திர ஜபத்தை விடாமல் தொடர்ந்து செய். இத்தனை செஞ்ச அது மீதியையும் பார்த்துக்கும்….”

 

ஷ்ரவன் அவர் சொன்னபடியே தினமும் அந்த மந்திர ஜபத்தைத் தொடர்ந்து செய்தான். செய்த நாட்களில் முன்பு போலவே அவனால் அந்த மந்திரத்துடன் ஒன்றுபட முடிந்தது.  அதுவே அவனுக்கு ஒரு நல்ல அறிகுறியாகத் தோன்றியது. அந்த யோகி சொன்னதும் அவன் நினைவுக்கு வந்தது. எல்லாம் இறைவன் சித்தப்படி நடக்கிறது. எதை நம் மூலம் செய்ய வேண்டுமோ, அதை அவனே செய்ய வைத்துக் கொள்கிறான்.” யோகி சொன்னபடி இறைவன் பார்த்துக் கொள்வானோ, இல்லை சேதுமாதவனும், பரசுராமனும் நம்பும்படி கர்மா பார்த்துக் கொள்ளுமோ, முடிந்ததை எல்லாம் செய்து கொண்டிருப்பதோடு அவன் பொறுப்பு முடிகிறது. கடவுளோ, கர்மாவோ பலன் தரும் வரை அவன் காத்திருக்கத் தான் வேண்டும்அவன் மனம் சற்று அமைதி அடைந்தது. 

 

டாக்டர் சுகுமாரனின் மனைவியிடம் அவளுடைய நெருங்கிய தோழி அலைபேசியில் சொல்லிக் கொண்டிருந்தாள். ”நான் சொன்னப்போ நீ நம்பலை இப்ப என்னாச்சு பார்த்தாயா? அந்த பிரம்மானந்தாவுக்கு யோகாலயத்துக்கு உள்ளேயே அவரைச் சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியலை. இந்த லட்சணத்துல அவர் பேசறது மட்டும் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி. அவரே அப்படின்னா அவர் சிபாரிசு பண்ற மந்திரவாதி எப்படியிருப்பார்? யோசிச்சு பார். நாய்க்கு தாயத்து கட்டற ரகத்துல தான் இருப்பார். உன் கணவர் அந்த தாயத்தை இப்பவாவது கழட்டி விட்டாரா இல்லையா?”

 

நல்ல வேளையாக அந்த நேரத்தில் டாக்டர் சுகுமாரன் வீட்டில் இருக்கவில்லை. அவர் இருந்திருந்தால் உடனே அருகில் வந்து நின்று அவர்கள் பேச்சிற்கு காது கொடுப்பார். பிரளயமே அங்கு வந்திருக்கும். அதனாலேயே அவள் தன் தோழியிடம், அவர் ஆஸ்பத்திரி போயிருக்கும் நேரமாகப் பார்த்துப் பேசச் சொல்லியிருக்கிறாள்.  இப்போது அவளல் மனம் விட்டுப் பேச முடிந்தது.

 

அதையேன் கேட்கறே? இவரும் கழட்ட மாட்டேங்கறார். டாமியோட தாயத்தையும் கழட்ட மாட்டேங்கறார். கழட்டச் சொன்னா சாமி வந்தவர் மாதிரி ஆடறார்.”

 

அது அவராய் ஆடறதில்ல. அந்த தாயத்து அப்படி ஆட வைக்குதாம். அப்படித் தான் எங்க சுவாமிஜி சொல்றார். நாய்க்கும் தாயத்து கட்டியிருக்குன்னு சொன்னவுடனே அவர் விழுந்து விழுந்து சிரிக்கிறார்என்று சொல்லி தோழி தானும் சிரித்தாள்.

 

சுகுமாரன் மனைவிக்கு அவமானமாக இருந்தது. ”என்ன பண்றது. ஒரு காலத்துல நாத்திகனாய் இருந்த ஆளா இதுன்னு எனக்கு ஆச்சரியமாய் இருக்கு. இதுக்கெல்லாம் எப்ப விடிவுகாலம் வருமோ தெரியலை.”

 

இருண்ட காலமும், விடிவு காலமும் அவங்கவங்களாய் ஏற்படுத்திக்கறது தான்.  அவர் தூங்கிட்டு இருக்கறப்ப தாயத்தை வெட்டி விட்டுடு. அதே மாதிரி அந்த நாயோட தாயத்தையும் கழட்டி விட்டுடு. எல்லாம் சரியாயிடும். விடிவுகாலம் தானாய் பிறந்துடும்.”

 

இவர் இந்த வீட்டுல ஏதோ ஆவி உலாவிகிட்டு இருக்கு. தாயத்தை எடுத்தா அது தாக்க ஆரம்பிச்சுடும்னு சொல்றாரே?”

 

அப்படி ஆவி உலாவிகிட்டு இருந்தா அது ஏன் உன்னை எதுவும் செய்யாமல் இருக்கு. நீ என்ன அந்த ஆவிக்கு ஃப்ரண்டா? அப்படியும் ஏதாவது பிரச்சினை இருக்கற மாதிரியிருந்தால், மந்திரிச்ச தகடு ஒன்னை உன் வீட்டு வாசல்ல புதைச்சு வெச்சுட்டால் ஆவிகள் நெருங்கவே நெருங்காதுன்னு எங்க சுவாமிஜி சொல்றார். வேணும்னா அவரே மந்திரிச்ச தகட்டை புதைச்சுக் குடுப்பார்.”

 

இவர் பயப்படறாரே!”

 

பயம் போகணும்னா ஒன்னும் ஆகாதுங்கற நம்பிக்கை வேணும். அந்த நம்பிக்கை வரணும்னா தாயத்தைக் கழட்டணும். தாயத்தைக் கழட்டினாலும் ஒரு தொந்தரவும் இல்லைங்கறது உறுதியாயிட்டா, ‘அட தேவையில்லாமல் பயந்துட்டோம்கிறது அவருக்குப் புரியும். அது தான் ஒரே வழி

 

அந்த ஒரே வழியை அன்று சாதித்து விட வேண்டும் என்று சுகுமாரனின் மனைவி மனதில் உறுதியெடுத்துக் கொண்டாள்.

 

அன்றிரவு களைப்புடன் வந்த சுகுமாரன் சீக்கிரமே உறங்கி விட்டார். அவர் ஆழ்ந்த உறக்கத்துக்குப் போகும் வரை காத்திருந்த அவள், பின் மெல்ல அந்த தாயத்தை கத்திரியால் வெட்டி விட்டாள். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அவர் தொடர்ந்து உறங்குவதைப் பார்த்து அவள் மெல்ல முணுமுணுத்தாள். “இவ்வளவு தான் மனுஷா. சொன்னால் புரிஞ்சுக்கணும்.”

 

பின் மெல்ல வீட்டின் பின்புறம் போனாள். டாமி அவளைப் பார்த்து எழுந்து நின்று வாலாட்டியது. கட்டியிருந்த டாமியை அவிழ்த்து விட்டவள் அதன் கழுத்தில் இருந்த தாயத்தையும் மெல்ல வெட்டி விட்டாள்.  பின் அவள் சென்று உறங்கி விட்டாள்.

 

நள்ளிரவில் டாமி ஆக்ரோஷமாகக் குரைக்க ஆரம்பித்தது. அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் கண்விழிக்கவில்லை. சுகுமாரன் தான் கண்விழித்து எழுந்து போனார். டாமி தோட்டத்தில் எதையோ பார்த்து குரைப்பது தெரிந்தது. “என்னடா பழைய ஞாபகமா?” என்று புன்னகையுடன் கேட்டார். அவர் பார்வை டாமியின் கழுத்தில் நிலைத்தது. அதன் கழுத்தில் தாயத்து இல்லை. அவர் திகைப்புடன் அது பார்த்துக் குரைக்கும் இடத்தைப் பார்த்தார்.   ஒரு மண்டை ஓடு அந்தரத்தில் தெரிந்தது. பீதியுடன் அவர் தன் கையைத் தடவினார். அங்கேயும் தாயத்து இல்லை. இரண்டு தாயத்துகளையும் களைந்தவள் அவர் மனைவி தான் என்பது அவருக்குத் தெரிந்து விட்டது. அவர் கடுங்கோபத்துடன் வீட்டுக்குள் பாய்ந்து ஓடினார். அப்போது தான் டாமி குரைக்கும் சத்தம் கேட்டு அவர் மனைவி எழுந்திருந்தாள். “அடிப்பாவிஎன்று சத்தமிட்டபடி அவர் ஓடி வருவதைப் பார்த்தவுடன் அவளுக்கு ஆபத்து விளங்கி விட்டது. அவள் ஓடி குளியலறைக்குச் சென்று கதவைத் தாளிட்டு தன்னைக் காப்பாற்றிக் கொண்டாள்.

 

குளியலறைக் கதவைப் பலமாகத் தட்டியபடியே அவர் திரும்பிப் பார்த்தார். அவர் முகத்துக்கு எதிரே அந்த மண்டை ஓடு அந்தரத்தில் நின்றிருந்தது. வேகமாக அவர் வெளியே ஓடினார்  


(தொடரும்)

என்.கணேசன்





Thursday, June 4, 2026

சதுரங்கம் 21


 ர்ஜுன்  இருவர் முகமாற்றத்தையும் பார்த்து ஒரு கணம் திகைத்தான். அவன் சொன்னதில் இவர்கள் இருவரும் பாதிப்படைய என்ன காரணம் இருக்கக்கூடும் என்று அவன் மனம் ஆலோசித்தது.

 

இருவரில் வேகமாக பழைய மலர்ச்சிக்கு மாறியவர் ராஜாராம் தான். “ஏதாவது ஞாபகம் வந்துச்சாடா?”

 

ஒன்னும் வரலை சித்தப்பா. நினைவு தெரிஞ்ச பிறகு இங்கே வந்து விளையாடினது எல்லாம் ஞாபகம் இருக்கு. அதுக்கு முன்னாடி நடந்த எதுவும் ஞாபகம் வரலை.”

 

மூனு வயசுல நடந்தது எல்லாம் எப்படிடா ஞாபகம் வரும். யாருக்கும் அந்த வயசுல ரொம்ப பாதிக்கிற மாதிரி எதாவது நடந்திருந்தா தான் ஞாபகம் இருக்கும். இல்லாட்டி மனம் தானாக அதையெல்லாம் மறந்துடும்

 

நான் தாத்தா ஞாபகமாவது வருதான்னு யோசிச்சேன். அதுவும் வரலை

 

யசோதா குரல் கரகரக்கச் சொன்னாள். “அவர் எப்பவுமே உன்னைத் தூக்கி தூக்கி வெச்சுக்குவார். ராஜாராமைக் கூட அப்படி அவர் தூக்கிகிட்டதா எனக்கு ஞாபகம் இல்லை. கடைசியா ஆஸ்பத்திரிக்குப் போறதுக்கு முன்னாடி கூட உன்னைத் தூக்கி கொஞ்சம் நேரம் வெச்சிகிட்டு தான் போனார். அப்பவெல்லாம் அவருக்கு உடம்புக்கு ரொம்பவே முடியலை. ஆனாலும் உடனடியா கிளம்பாம உன்னை எடுத்து கொஞ்சிட்டு பிறகு தான் போனார்...”

 

ராஜாராமின் கண்களும் ஈரமாவதை அர்ஜுனால் கவனிக்க முடிந்தது. அந்த வீட்டில் வாசுதேவன் உயிரோடிருந்த கடைசி தருணங்களை அவர்கள் இருவரும் மனதில் திரும்பவும் ஒளிபரப்பிப் பார்க்கிறார்கள் என்று அர்ஜுனுக்குத் தோன்றியது.

 

அர்ஜுன் சொன்னான். “அம்மாவும் அதைச் சொன்னாங்க.”

 

இருவர் முகங்களும் உடனடியாக இறுகியதையும் அர்ஜுன் கவனித்தான். அம்மா பற்றிச் சொன்னவுடன் ஏன் இருவர் முகங்களும் இறுகுகின்றன?

 

இருவரில் ராஜாராம் தான் இப்போதும் முதலில் மீண்டார். பழையபடி அவர் முகம் மலர்ச்சிக்கு மாறியது. யசோதா ஹால் ஜன்னல் வழியே தெரிந்த மரத்தை வெறித்த பார்வை பார்த்தாள். மைதிலி கேட்டாள். “என்ன சாப்பிடறடா காபி, டீ,  ஜுஸ்

 

அதெதுவும் வேண்டாம் சித்தி. அதெல்லாம் சாப்பிட்டா நீங்க செஞ்சிருக்கற வெஜிடபிள் பிரியாணியைக் காலி செய்ய முடியாது.”

 

மைதிலி வாஞ்சையுடன் புன்னகைத்தாள். அவன் சாப்பிட வருகிறான் என்று சொன்னவுடனேயே அவனுக்குப் பிடித்த வெஜிடபிள் பிரியாணியைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாள். அவனுக்கு அவள் செய்யும் வெஜிடபுள் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். அவள் கண்டிப்பாக அதைச் செய்திருப்பாள் என்று யூகித்து அவன் நிச்சயமாய்ச் சொன்னது அவளுக்குப் பிடித்திருந்தது. அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லாததால் அர்ஜுனையும், நித்யாவையும் தான் அவள் பிள்ளைகளாக நினைக்கிறாள்.   அவர்களும் அவளைத் தாயாகத் தான் பார்க்கிறார்கள்...

 

ராஜாராம் சொன்னார். “உன்னோட கட்டுரை விடிவெள்ளில படிச்சேண்டா. ரொம்ப நல்லா எழுதியிருந்தாய்.”

 

அவர் தன்னுடைய பல வேலைகளுக்கு நடுவில் அவனுடைய கட்டுரையைப் படித்திருந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. “தேங்க்ஸ் சித்தப்பா

 

ராஜாராமின் செக்ரட்டரி தயக்கத்துடன் வந்து நின்றார். ராஜாராம் பார்வையாலேயே என்ன என்று கேட்க அவர் சொன்னார். “அமைச்சர் கதிரேசன் வந்திருக்கார்.”

 

அமைச்சர் கதிரேசன் மாநில நிதியமைச்சர். ராஜாராம் யோசனையுடன் சொன்னார். “நான் அப்பாயின்மெண்ட் எதுவும் தரலையே.”

 

இல்லை. அவர் கட்சி அலுவலகத்திற்கு வந்தாராம். வழியில் உங்களையும் பார்த்துட்டு போலாம்னு....”

 

நான் பிசியாய் இருக்கேன்னு சொல்லு. ரொம்ப முக்கியமான விஷயம்னா அப்புறமா ஃபோன்ல பேசச் சொல்லு.”

 

தலையசைத்த செகரட்டரி போய் அமைச்சர் கதிரேசனிடம் சொன்னார். “சார் பிசியாய் பேசிகிட்டு இருக்கார். ரொம்ப முக்கியமான விஷயம்னா அப்புறமா ஃபோன்ல பேசச் சொன்னார்.”

 

வரவேற்பறையில் அமர்ந்திருந்த கதிரேசன் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தாலும் அவர் ஒன்றும் சொல்லாமல் எழுந்தார். “சார் யார் கூட பேசிகிட்டிருக்கார்?”

 

அவங்க அண்ணா மகன் கூட பேசிகிட்டிருக்கார்.”

 

கதிரேசன் சிறிது நினைவுபடுத்திக் கொண்டு சொன்னார். “பத்திரிக்கை நிருபராய் இருக்காரே அந்தத் தம்பியா?”

 

ஆமாம். அவரே தான். தப்பாய் நினைக்க வேண்டாம். சார் அவரோட குடும்பத்தாரோட இருக்கறப்ப வேற யாரையும் சந்திக்க விரும்பறதில்லை..”

 

கதிரேசனுக்கு தமிழக அரசியல் களத்தின் மூத்த குடும்பமாகக் கருதப்படும்  வாசுதேவனின் குடும்பம் என்றும் புரியாத புதிராகவே இருந்திருக்கிறது. வாசுதேவனின் பிள்ளைகள் ஞானமூர்த்தியும், ராஜாராமும் அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் நேரில் சந்தித்துக் கொள்கையில் இருவரும் மிக ஒற்றுமையாய்த் தான் தோன்றுவார்கள். ராஜாராம் அண்ணனுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தாலும் பொதுவெளியில் அண்ணனுக்கு எதிராக ஒரு வார்த்தை பேசியதில்லை. அதே போல் ஞானமூர்த்தியும் தம்பிக்கு எதிராக எந்தக் கருத்தையும் சொன்னதில்லை. இப்போது இவரும் தம்பி பையனிடம் பேசுவதை ஐந்து நிமிடம் நிறுத்தி கதிரேசனைச் சந்திக்கத் தயாராக இல்லை..

 

விமல் அவனுடன் பேசிக் கொண்டிருந்த துறவி சிறிது நேரம் வாய்மூடக் காத்திருந்தான். அந்தத் துறவி தைத்திரீய உபநிடதம் பற்றி உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருந்தார்.  அவர் பேசியதில் சத்தியமாக அவனுக்கு எதுவும் புரியவில்லை. தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசியிருந்தாலே அவனுக்குப் புரிந்திருக்காது. அவரோ ஹிந்தியில் பேசினார். வாய்ப்பு கிடைத்தால் ஹிந்தி சினிமா அல்லது ஹிந்தி சீரியலிலும் நடிக்கும் ஆசை அவனுக்கு இருந்ததால் அவன் ஹிந்தியை நன்றாகப் பேசக் கற்றிருந்தான். அவனுக்கு ஹிந்தியில் சாதாரணப் பேச்சைப் பேசவும், பேசினால் புரிந்து கொள்ளவும் முடியவும். ஆனால் ஹிந்தியின் ஆன்மீகச் சொற்கள் அவனுக்குப் பழக்கமானவை அல்ல. மேலும் அவனுக்கும் ஆன்மீகத்திற்குமே இடைவெளி அதிகம். ஆன்மீகத்தில் இருப்பவர்களிலுமே கூட உபநிடதம் பற்றியெல்லாம் பேசும் ஆட்கள் மிகவும் குறைவு. பேசினால் கேட்பவர்களும் குறைவு என்பதால் தன்னிடம் பேசக் கிடைத்த விமலை அந்தத் துறவி லேசில் விடுவதாக இல்லை.

 

ஒரு சின்ன இடைவெளி கிடைத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ள விமல் ஆவலாக இருந்தான். அந்தத் துறவி புதுடெல்லிவாசி. இன்ஸ்பெக்டர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். அவர் பெயர் ராஜ்நாத். அவருடைய ஒரே மகன் குடும்பத்தோடு ஜெர்மனியில் இருக்கிறான். ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடுடைய அவர், மனைவி காலமான பிறகு துறவியாகி, விமல் இருக்கும் ஆசிரமத்திற்கு சென்ற வருடம் வந்து சேர்ந்தவர். அவரிடம் அவனுக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது.

 

அவர் களைப்பில் சிறிது நிறுத்தி மூச்சு விட்ட போது அவன் சொன்னான். “சுவாமி. நீங்கள் சொல்வதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை.”

 

அவன் எல்லாவற்றையும் உண்மை என்று சொல்லி விட்டதால் எதைச் சொல்கிறீர்கள் என்று அவர் கேட்கவில்லை. விமல் அவர் அடுத்ததாய் எதையாவது பேச ஆரம்பிப்பதற்கு முன் அவசரமாய்ச் சொன்னான்.  நான் ஒரு சிக்கலில் இருக்கிறேன் சுவாமி

 

சொல்லுங்கள் சுவாமி என்ன சிக்கல்என்று ராஜ்நாத் ஆர்வமாகக் கேட்டார்.

 

விமல் சொன்னான். “நான் குடும்ப வாழ்க்கையில் விரக்தி வந்து துறவியாகி இங்கே வந்திருக்கிறேன். வரும் போது என்னுடைய மொபைல் போனை உடைத்து சிம்மையும் உடைத்து எறிந்து விட்டு வந்தேன். இனி குடும்பத்தில் யாருடனும் பேசவும் எனக்கு விருப்பமில்லை. அந்தப் போனில் நான் பேசினால் அவர்களுக்கு நான் இருக்கும் இடம் தெரிந்து விடும் என்று பயப்பட்டு தான் அதைச் செய்தேன். இப்போது எனக்கு ஒரு சிக்கல்

 

என்ன சிக்கல்?”

 

நான் என் சொத்தையும் பணத்தையும் ஒரு டிரஸ்டுக்கு எழுதிக் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். அதை அவர்கள் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆலோசனையை அவ்வப்போது சொல்வதாகவும் தெரிவித்து விட்டு வந்திருக்கிறேன். இப்போது அவர்களிடம் பேச எனக்கு ஒரு போன் தேவைப்படுகிறது.”

 

அதனாலென்ன என் மொபைல் போனைத் தருகிறேன். நீங்கள் அதில் பேசிக் கொள்ளலாம்.”       

 

ஓரிரண்டு முறை பேசுவதானால் நான் உங்கள் மொபைல் போனில் பேசலாம். ஆனால் நான் தந்து விட்டு வந்திருப்பது சுமார் ஏழரை கோடி ரூபாய் என்பதால்  நான் தொடர்ந்து அவர்களுக்கு ஆலோசனைகள் சொல்ல வேண்டி வரும். அதனால் எனக்கு நிரந்தரமாகவே ஒரு மொபைல் போன் தேவைப்படுகிறது...”

 

ராஜ்நாத்தின் முகத்தில் பிரமிப்பு தெரிந்தது. ஏழரை கோடி சொத்தை தர்மம் செய்து விட்டு வந்திருக்கும் புண்ணியாத்மாவாக அவர் அவனைப் பார்த்தார்.

 

விமல் தொடர்ந்து சொன்னான். “... எனக்கு ஒரு மொபைல் போனும் எண்ணும் வேண்டும். மொபைல் போனையாவது எந்தக் கடையிலாவது வாங்கிக் கொள்ளலாம். ஆனால் புதிய எண்ணை வாங்குவது தான் எப்படி என்று தெரியவில்லை. என் பெயர் விலாசம் தந்தால் என் குடும்பத்தினர் எதிர்காலத்தில் எப்படியாவது அதைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. பெயர் விலாசம் தராமல் எப்படியாவது ஒரு மொபைல் சிம் பெற வழி இருக்கிறதா?”

 

(தொடரும்)

என்.கணேசன்




Monday, June 1, 2026

யோகி 158

 

பாண்டியன் பிரம்மானந்தாவின் எண்ணத்தைப் புரிந்து கொண்டவர் போல் சொன்னார். அந்தத் திருட்டு அயோக்கியனைக் கொன்னது சரிதான் யோகிஜி. அது மத்தவங்களுக்கு ஒரு பாடமாய் இருக்கும். அதைச் செய்யலைன்னா நம்ம பினாமிகள் எல்லாரும் அவங்கவங்க கைவரிசையைக் காண்பிக்கப் பார்க்கலாம். ஆசை யாரை விட்டுது யோகிஜி. இப்போ உயிருக்குப் பயந்த எவனும் நம்மள ஏமாத்த பயப்படுவான். நாம எப்பவுமே அந்தப் பயத்துல அவங்க எல்லாரையும் வெச்சிருக்கறது முக்கியம். அந்த அயோக்கியனைக் கொன்னு இங்கேயே புதைச்சது தான் தப்பாய் போச்சு.  வேறெங்கேயாவது அதை நான் செஞ்சிருக்கணும். இல்லாட்டி நான் வேறெதாவது வழியில கொன்னிருக்கணும். அது தான் தவறு. இப்ப நாம தோண்டறதுக்கு கோர்ட்ல தடையுத்தரவு  வாங்கறதுல இருந்து நிறைய செய்யலாம். தோண்டறத தள்ளிப் போடலாம். ஆனால் அதை நிரந்தரமாய் தடுத்துட முடியாது யோகிஜி. இதுல குறைந்த பட்ச சேதாரத்தோட நாம தப்பிக்கணும்னா ஒரு பலியாடு கண்டிப்பாய் தேவை. அதுக்கு ஆள் ரெடியாய் இருக்கான்.”

 

யாரது?” பிரம்மானந்தா ஆவலுடன் கேட்டார்.

 

நம்ம சுந்தரகுரு. அவன் பேர்ல தான் சந்திரமோகனோட சொத்தை நாம மாத்தியிருக்கோம். அதனால அவனைச் சொன்னால் அது நம்பற மாதிரி இருக்கும். அவன் இருக்கற ஃப்ளாட்டை அவனுக்கு வாங்கித் தர்றதாவும், அவன் ஜெயில்ல இருக்கறப்ப அவன் குடும்ப செலவை ஏற்றுக்கறதாவும் சொல்லியிருக்கேன். அவன் சரின்னுட்டான். அவனுக்கு உதவினதாய் நம்ம ஆள்கள் ரெண்டு பேரையும் தயார்ப்படுத்திட்டேன். அவங்களுக்கு பத்து லட்சம் ரொக்கமும், அவங்க ஜெயில்ல இருந்து திரும்பி வர்ற வரைக்கும் குடும்ப செலவைக் கவனிச்சிக்கறதாவும் சொல்லி அவங்களும் ஒத்துகிட்டாங்க. அதனால இனி நீங்கள் முதல்வர் உத்தரவுல கையெழுத்து போடற வரைக்கும் காத்திருக்க வேண்டாம். நீங்களே தோண்ட முடிவு பண்ணினதா அறிக்கை விடுங்க. நீங்களே போலீஸைக் கூப்பிட்டுத் தோண்டச் சொல்லுங்க. பிணம் கிடைச்சவுடனே நீங்க அதை நம்ப முடியாத மாதிரியும், உங்களுக்கு ஒன்னும் தெரியாத மாதிரியும் நடிங்க. நானும் அப்படியே நடிக்கறேன். அவங்களை ரொம்ப நம்பி மோசம் போனதாய் சொல்லுவோம். அவங்களும் நமக்குத் தெரியாமல் எல்லாம் பண்ணினதாய் போலீஸ் கிட்ட வாக்குமூலம் தருவாங்க. சட்டத்துக்கு வேண்டியது குற்றவாளிகள். நாமளே தயார் செஞ்சு குடுத்துடுவோம்.”  

 

பிரம்மானந்தாவுக்கு பாண்டியனை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. பிரச்சினைகள் எழுந்தவுடனேயே அதற்கான தீர்வுகளையும் கண்டுபிடித்து செயல்படுவது எல்லாருக்கும் எளிதல்ல. சுந்தரகுருவையும், மற்ற இருவரையும் குற்றத்தை ஏற்றுக் கொள்ள பேரம் பேசி சம்மதம் வாங்கி இருப்பதும் பாண்டியனின் தனித்திறமை தான்.

 

பணமிருந்தா இந்த உலகத்துல எத்தனையோ செய்யலாம். ஏன்னா பணம் தேவைப்படறவங்க எல்லாத் துறையிலயும் நிறைய இருக்காங்க. அவங்களுக்குத் தேவைகளும் நிறைய இருக்கு. அதைப் பயன்படுத்திட்டு ஜெயில்ல கூட அவங்களை வசதியாய் இருக்க வைக்கலாம். பணத்தால தண்டனைக்காலத்தை குறைச்சுக்கவும் முடியும். ஏதாவது தலைவர் பிறந்த நாள்ல நன்னடத்தை காரணம் சொல்லி அவங்களை விடுதலை செய்ய வைக்கவும் முடியும். எத்தனையோ வழிகள் இருக்கு யோகிஜி. அதெல்லாத்தையும் கூட ஒரு கை பார்த்துட வேண்டியது தான்…”

 

பாண்டியனின் ஆட்கள் அவரிடம் ஏன் அத்தனை விசுவாசமாய் இருக்கிறார்கள் என்பது பிரம்மானந்தாவுக்குப் புரிந்தது. பணத்தைத் தூக்கி எறிந்து விடுவதோடு அவர் நின்று விடுவதில்லை. அவர்கள் கூடுமான அளவு சௌகரியமாக இருக்கவும் பாண்டியன் யோசிக்கிறார். சற்று முன் வரை இருந்த மன பாரம் பிரம்மானந்தாவுக்குப் பாதியாகக் குறைந்தது. இப்போதும் அதிகப்பிரசங்கிகள் சிலர் அவரைக் கிண்டல் அடிப்பார்கள். எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்துக்கு, யோகாலயத்திற்குள் நடக்கும் கொலையே தெரியவில்லை என்று விமர்சனம் செய்வார்கள். அது கொஞ்சம் அவமானம் தான். ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும்

 

டுத்த நாள் காலையிலிருந்து நடந்த நிகழ்வுகள் செய்தியாளர்களையும், ஊடகங்களையும் மிகுந்த பரபரப்பில் இருக்க வைத்தன. யோகாலயமே முக்கிய பேசுபொருளாக அமைந்தது. அதிகாலையில் பிரம்மானந்தா போலீஸாருக்கு விடுத்த வேண்டுகோள் வெளியானது. எந்த உண்மையையும் மறைக்கும் எண்ணம் தனக்கு இல்லவே இல்லை என்றும், அதை நிரூபிக்கும் வண்ணம் போலீஸாரிடம் உடனடியாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒலிப்பதிவில் குறிப்பிடப்பட்ட இடத்தில் தோண்டிப் பார்த்து உண்மையை அறிய வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

அதைப் படித்தவுடனேயே ஷ்ரவன் ராகவனிடம் சொன்னான். “இனி இதைத் தவிர்க்க முடியாதுன்னு தெரிஞ்சவுடனேயே ஒரு பலியாடை தயார் செய்துட்டாங்க போலருக்கு.”  

 

பிரம்மானந்தாவின் அறிக்கையைப் பலரும் சிலாகித்துப் பேசும்படி யோகாலயம் பார்த்துக் கொண்டது. மதியம் யோகாலயத்திற்குள் போலீஸ் படை மோப்ப நாயுடன் உள்ளே புகுந்தது. மோப்ப நாய் சந்திரமோகன் புதைக்கப்பட்டு இருந்த இடத்தில் நின்று குரைக்க ஆரம்பிக்க அங்கே போலீஸார் தோண்ட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் சந்திரமோகனின் அழுகிப் போன பிணத்தை வெளியே எடுத்தனர்.

 

அதன் பின்சுந்தரகுரு ஒப்புதல் வாக்குமூலம்வெளியாகியது. அவனிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு நிலத்தை விற்பனை செய்வதாக உறுதியளித்திருந்த சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சந்திரமோகன், பின் மறுத்து விட்டதாகவும், பின் மிரட்டி தான் அந்தச் சொத்தைத் தன் பெயருக்கு மாற்ற முடிந்ததாகவும், மாற்றிய பின்பும் அவர் ஏமாற்றிய கோபம் தணியாததால்  சந்திரமோகனைக் கொன்று விட்டதாகவும், சுந்தரகுரு ஒப்புக் கொண்டிருந்தான். இதை அவனும், அவனது இரண்டு நண்பர்களும் யோகாலயத்தில் வேறு யாருக்கும் தெரியாமல் செய்ததாகவும் அவன் வாக்குமூலம் தந்தான்.  இந்தக் கொலை பற்றி வைரலாக வலம் வரும் ஒலிப்பதிவு சொல்லும் மற்ற தகவல்கள் பொய்யானவை என்றும் அவன் கூறினான். அதை பாண்டியனும் போலீஸாரிடம் சொல்லி, வேண்டுமானால் யோகாலயத்தில் உள்ள அத்தனை பெண் துறவிகளின் குரல்களையும் பதிவு செய்து அவர் சொல்வது உண்மை என்பதைக் கண்டுபிடிக்கலாம் என்றும் அவர் உறுதியாகச் சொன்னதும் வெளியானது.

 

வெறும் ஒரு கொலையை மட்டும் ஒத்துக் கொண்டு, யோகாலயம் புத்திசாலித்தனமாய் மற்ற கொலைகளில் இருந்து கழன்று கொண்டதை ஷ்ரவன் கவனித்தான்.  யோகாலயத்திற்கு அழுத்தம் தர அவன் உருவாக்கிய வைரல் ஒலிப்பதிவில் உள்ள பலவீனத்தை பாண்டியன் சாமர்த்தியமாய் தங்களுக்குச் சாதகமாய் பயன்படுத்திக் கொண்டதையும் ஷ்ரவன் கவனித்தான்.

 

தொடர்ந்துயோகி பிரம்மானந்தா பேரதிர்ச்சி!” என்ற தலைப்பில் செய்திகள் வெளியாயின. பல ஆண்டுகளாக அவரிடம் வேலை செய்து வந்த இந்த ஊழியர்களை அவர் முழுவதுமாக நம்பி இருந்ததாகவும், அதனால் தான் இந்தக் கொலை சம்பந்தமாக முதலில் வந்த செய்திகளை அவர் மறுத்துச் சொன்னதாகவும் யோகி பிரம்மானந்தா ஆழ்ந்த வருத்தத்துடன் சொன்னதை ஷ்ரவன் தொலைக்காட்சியில் பார்த்தான். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. சட்டம் தன் கடமையைச் செய்யட்டும். வெறும் வாயை மென்று கொண்டிருந்த எதிரிகளுக்கு அவலாய் இந்தச் செய்தி கிடைத்து விட்டது கசப்பாய் தான் இருக்கிறது என்றாலும், சத்திய வழியில் நடந்து கொண்ட நிறைவு எனக்கிருக்கிறது.” சொல்லச் சொல்ல அவர் குரல் உடைந்தது.

 

பெரிய ஜுவாலையாய் ஆரம்பித்த அக்னி சட்டென்று ஒன்றுமில்லாததாய் அணைந்தது. யோகாலயத்தின் வெளி கேட்டுக்கு முன்னிருந்த கூட்டம் கலைந்தது. யோகாலயத்தின் எதிரிகள் உண்மைக் கொலையாளிகள் தப்பித்து, பாவப்பட்ட ஊழியர்கள் தலையில் கொலைப்பழி விழுந்திருக்கிறது என்று விமர்சித்தாலும் அது பெரிதாக எடுபடவில்லை. சுந்தரகுரு பெயரில் சந்திரமோகனின் சொத்து மாறியிருந்த ஆவணங்கள் சுந்தரகுருவின் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு ஆதரவாய் இருந்தது. அதனால் எதிரிகள் சர்வசக்தி உள்ளவராய் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பிரம்மானந்தாவுக்கு, சொந்த இடத்தில் நடந்த கொலை கூடத் தெரியாமல் போனது எப்படி என்ற கிண்டலோடு திருப்தி அடைய வேண்டியதாயிற்று. 

 

குற்றவாளிகள் எந்தச் சேதாரமும் இல்லாமல் தப்பித்துக் கொண்டது ஷ்ரவனுக்கு அதிருப்தி அளித்தது. அவன் எடுத்துக் கொண்ட எந்த வழக்கிலும் இதுவரையில் குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டதில்லை. முதல் முறையாக இப்போது இந்தக் குற்றவாளிகளிடம் தோற்று புதிய வரலாறு படைக்க விரும்பவில்லை. 

 

(தொடரும்)

என்.கணேசன்