என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, April 6, 2026

யோகி 150

 

பாண்டியன் இறுகிய முகத்தோடு கல் போல் அமர்ந்திருந்தாலும், உள்ளுக்குள் அவருக்குக் குழப்பமாக இருந்தது. அவன் சொன்னது எதுவும் பொய் அல்ல. அவன் அறையில் ஓநாய் தாக்கி அவன் மயங்கிக் கிடந்த போது அவனுக்கே என்ன நடந்தது என்ற தெரியாத நிலை இருக்கையிலும் காமிரா மூலம் அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தது அவர் ஆட்கள் தான். அவனுக்கே தெரியாத அந்தப் பதிவை பின் அவரும் பார்த்திருக்கிறார். அவன் சொன்னது போல அவனாக அந்தச் சக்திகளை விளம்பரம் செய்யவோ, அவர்களிடம் சொல்லி பலன் தேடவோ முயன்றதில்லை...

 

சிறிது நேரத்துக்கு முன் தேவானந்தகிரியின் ஆள் சொன்ன போது ஷ்ரவன் மீது வந்திருந்த சந்தேகம் இப்போது அவ்வளவு வலுவாக இல்லை. ஆனால் அவர் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

 

ஷ்ரவன் சொன்னான். “ஜீ அதெல்லாம் போகட்டும். நான் உங்களை ஏமாற்றி என்ன லாபம் அடைந்தேன் என்பதை மட்டுமாவது தயவு செய்து எனக்குச் சொல்லுங்கள். எதையாவது உங்களிடமிருந்து அபகரித்து விட்டேனா? என் மீது இருக்கும் குற்றச்சாட்டு தான் என்ன?”

 

பாண்டியன் சொன்னார். “நீ சொன்ன அந்த எதிரி இளைஞன் நீயே என்பது தான் எங்கள் சந்தேகம்

 

ஷ்ரவன் பூமி முக்கோண வடிவமானது என்று அவர் சொன்னது போல அவரை ஒரு மாதிரி பார்த்தான்.

 

ஜீ நான் இருந்தது ஹைத்ராபாத்தில். நீங்கள் இருப்பது சென்னையில். நான் இங்கே வரும் வரை உங்களைப் பார்த்தது கிடையாது. நான் தியான வகுப்புகளுக்கு வந்த போது கூட உங்களைப் பார்த்தது கிடையாது. உங்களை மட்டுமல்ல யோகிஜியையும் பார்த்தது கிடையாது. அப்படி இருக்கையில் எனக்கு உங்கள் மீது என்ன பகை இருக்க முடியும்? தயவு செய்து நீங்கள் விளக்கிச் சொன்னால் நன்றாக இருக்கும்.”

 

பாண்டியன் சொன்னார். “அதை நீ தான் எங்களுக்குச் சொல்ல வேண்டும். நீ எங்களிடமிருந்து நிறைய மறைக்கிறாய்.”

 

நான் உங்களிடமிருந்து மறைத்த ஒரே விஷயம் அந்த ஹைத்ராபாத் கேஸ் விஷயம் மட்டும் தான். பொய்யான அந்த கேஸ் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது என்று நினைத்து தான் அதையும் உங்களிடம் சொல்லவில்லை. மற்ற எதையும் நான் உங்களிடம் மறைக்கவில்லை. உங்கள் எதிரியாக நீங்கள் என்னைச் சொல்வதைக் கேட்டால் எனக்கு வேடிக்கையாகவும் இருக்கிறது. உங்கள் எதிரி என்று நீங்கள் சொல்வது, உங்களை மட்டுமா, இல்லை யோகிஜியையா, இல்லை இரண்டு பேரையும் சேர்த்தா, இல்லை யோகாலயத்தின் எதிரி என்று மொத்தமாகச் சொல்கிறீர்களா?”

 

அவன் பேசுவதை எல்லாம் கேட்கையில் இப்போது அவன் மீது சந்தேகம் கொள்வதற்கு முகாந்திரம் இல்லை என்ற எண்ணம் அவர் மனதில் மெல்லத் தலையெடுத்தது. சைத்ராவைப் பற்றிச் சொல்லாமல், அவள் ஆவி தெரிந்ததைச் சொல்லாமல் இவனிடம் எதையும் அவர் விளக்க முடியாது என்பதால் பாண்டியன் மௌனமாகவே இருந்தார். ஒருவேளை அதுபற்றி எதுவும் தெரியாதவனாக அவன் இருந்தால் அதை இவர் விவரித்துச் சொல்வது முட்டாள்தனம்.

 

பாண்டியன் எதாவது சொல்வார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த ஷ்ரவன் அழாத குறையாகச் சொன்னான். “சரி என் மீது சந்தேகம் வரக் காரணம் என்ன என்றாவது சொல்லுங்கள் ஜீ. இப்படி எந்த ஆதாரமும் இல்லாமல், எந்தக் காரணமும் சொல்லாமல் என்னைக் குற்றம் சாட்டுவது நியாயமா?”

 

நாங்கள் ஒருவரிடம் ஆலோசனை கேட்டுத் தான் உன்னிடம் அந்த முகூர்த்த காலங்களைச் சொன்னோம் என்று சொன்னேனில்லையா, அவர் உன்னை எங்கள் எதிரி என்று கண்டுபிடித்துச் சொல்லி இருக்கிறார். அவர் இதுவரை சொன்னது எதுவும் எங்களுக்குப் பொய்க்கவில்லை.”

 

அப்படியானால் இது அவருடைய முதலில் பொய்க்கும் கண்டுபிடிப்பாக இருக்கும். அவர் கணிப்பில் எதோ தவறு செய்து விட்டார். தயவு செய்து அவரை இங்கே உடனே வரவழையுங்கள். இல்லா விட்டால் என்னை அவரிடம் அழைத்துப் போங்கள். நானே அவரிடம் கேட்கிறேன்.”

 

பாண்டியன் சொன்னார். “அவர் நேற்றே வருவதாக இருந்தது. அவர் காலில் அடிபட்டு விட்டதால் அவரால் வர முடியவில்லை.  அவர் வர முடியாமல் இருப்பதற்கும் அவர் உன்னையே சந்தேகப்படுகிறார்.”

 

ஷ்ரவன் வாய்விட்டுச் சிரித்தான்.  விட்டால் தமிழ்நாட்டில் நடக்கும் அத்தனை குற்றங்களுக்கும், விபத்துகளுக்கும், அடிதடிகளுக்கும் என்னையே காரணம் சொல்வீர்கள் போல் இருக்கிறதே ஜீ. யார் என்ன சொன்னாலும் சிந்திக்காமல் நீங்கள் அப்படியே நம்பி விடுவீர்களா? கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீர்களா?”

 

பாண்டியனுக்கு அவன் சொல்வதில் குறை காண முடியவில்லை. ஆனால் அவனை நம்பி திருப்பியனுப்பவும் அவருக்கு மனம் இல்லை. அவர் அமைதியாய் இருந்தார்.

 

ஷ்ரவன் அவரிடம் இருந்து எந்த பதிலும் வராதது பார்த்து விரக்தி அடைவது போல் காட்டிக் கொண்டு சொன்னான். “சரி உங்கள் முடிவு தான் என்ன? என்னைக் குற்றவாளி என்று சொல்லி இங்கிருந்து அனுப்பி விடப் போகிறீர்களா?”

 

எங்கள் எதிரி நீ இல்லை என்றால், எங்களுடைய எதிரி எங்களுக்குக் கிடைக்க வேண்டும். அது வரை உன்னை எங்கேயும் அனுப்புவதாய் இல்லை.” அவர் தீர்மானமாகச் சொன்னார்.

 

இப்படியும் ஒரு அநியாயம் உண்டா என்பது போல் ஷ்ரவன் பார்த்து விட்டு மெல்லச் சொன்னான். “இப்போது எனக்கு எல்லாம் புரிந்து விட்டது ஜி

 

பாண்டியன் கேட்டார். “என்ன புரிந்து விட்டது?”

 

அந்த துஷ்ட சக்தி ஓநாய் தான் இதையெல்லாம் உங்களைச் செய்ய வைக்கிறது. அதன் நடவடிக்கைகள் பற்றி, நேற்று உங்கள் பீரோவுக்குள் அது போனது உட்பட, நான் உங்களிடம் தெரிவித்துக் கொண்டே வருவது அதற்குப் பிடிக்கவில்லை. அப்படி நான் தெரிவிப்பது தொடரக்கூடாது என்று அது நினைக்கிறது. அதை நிறுத்த ஒரே வழி உங்களிடமிருந்து என்னைப் பிரிப்பது தான். அதை அது வெற்றிகரமாகச் செய்து விட்டது. எல்லாம் என் தவறு. நான் அதன் வழியில் குறுக்கிடாமல் இருந்திருக்க வேண்டும். நான் உங்களுக்காக அதன் வழியில் குறுக்கிட்டது என் முட்டாள்த்தனம். மிகவும் தாமதமாக இந்த ஞானோதயம் எனக்கு வந்திருக்கிறது. இது முன்பே வந்திருந்தால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை என்று ஒரே வாக்கியத்தில் முடித்திருப்பேன். என்னிடம் விசேஷ சக்திகள் இல்லை என்று நினைத்திருப்பீர்களே ஒழிய என்னை எதிரி என்று சந்தேகப்படுவதாவது நடந்திருக்காது. சரிஜி முடிவாக என்ன நினைத்திருக்கிறீர்களோ அதைச் செய்யுங்கள். ஆனால் இப்போதும் உங்கள் மீது இருக்கும் அக்கறையாலும், யோகிஜி மேல் இருக்கும் பக்தியாலும் நான் சொல்கிறேன். நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள். அந்த துஷ்ட ஓநாய் இதுவரையில் வெளியில் தான் உலாவிக் கொண்டிருந்தது. இப்போது உங்கள் உள் அறைக்கும் வந்து பீரோவுக்குள்ளும் புகுந்திருக்கிறது. அதன் ஆதிக்கம் அதிகமாகி விட்டது. என் தலையெழுத்து என்னை இப்படிக் கஷ்டப்படுத்துகிறது. பாவி போகும் இடம் பாதாளம். என்ன செய்வது? உங்களையாவது காப்பாற்றிக் கொள்ளுங்கள்.”

 

பாண்டியனுக்குத் தலைசுற்றுவது போலிருந்தது. ஷ்ரவன் சொல்வதையும் அவரால் அலட்சியப்படுத்த முடியவில்லை. அந்த ஏவல் சக்தி ஓநாயின் நடமாட்டத்தையும், செய்கைகளையும் அவர்களுக்குச் சொல்லிக் கொண்டு இருந்தவன் ஷ்ரவன் ஒருவன் தான்.   அவன் வாயையும் அடைத்து விட்டால் அந்த ஏவல் சக்தியின் நடமாட்டம் குறித்து எதுவும் தெரியாமல் போய்விடும்.      

 

ஷ்ரவன் விதிவிட்ட வழி என்று விரக்தியடைந்தவன் போல் காட்டிக் கொண்டு மௌனமாக நின்றான். அவன் முகத்தில் சிறிதும் பயம் தெரியாததையும், அவன் பேச்சு குழப்பாமல் தெளிவாக இருந்ததையும் அவர் கவனித்தார். ஆனால் தேவானந்தகிரி சொல்வது ஒருவேளை அவன் எதிரியாகவே இருந்து, வெளியில் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஆட்களும், அவனுடையதாகவே இருந்தால் இவன் பேராபத்தானவன் தான்...

 

அவர் மனம் மாறி மாறி யோசித்தது. முடிவில் சொன்னார். “நீ சொன்னபடி நல்லவனாகவே இருந்தால் நீ பயப்பட வேண்டியதில்லை. உன்னை  நாங்கள் விட்டு விடுவோம். ஆனால் நீ எங்களுடைய தந்திரக்கார எதிரியாக இருந்தால் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவாய். உண்மை எங்களுக்குத் தெளிவாய்த் தெரிகிற வரை நீ எங்கள் கைதியாகத் தானிருக்க வேண்டும்.”

 

ஷ்ரவன் அதிர்ச்சியைக் காட்டினான். “ஜீ இது அநியாயம். செய்யாத குற்றத்துக்கு என்னைத் தண்டிக்கிறீர்களே?”

 

பாண்டியன் சொன்னார். “நீ ஹைத்ராபாத் கேஸ் பற்றிச் சொன்னாயே. அதில் கைதாகி சிறையில் இருப்பதாய் நினைத்துக் கொள்.”

 

பாண்டியன் அவன் பின்பக்கத்தைப் பார்த்துத் தலையசைக்க திடீரென்று அறைக்குள் நுழைந்த இரண்டு தடியர்கள் ஷ்ரவனை இறுக்கப் பிடித்துக் கொண்டார்கள். கண்ணன் ஷ்ரவனின் கண்களைக் கருப்புத் துணியால் இறுக்கமாகக் கட்டினார். 


(தொடரும்)

என்.கணேசன்




Thursday, April 2, 2026

சதுரங்கம் 12

 

ர்ஜுன் கீதாவுக்காகக் காத்திருக்கையில் என்றுமில்லாத படபடப்பை தனக்குள் உணர்ந்தான். கீதாவிடம் இன்று காலை அலைபேசியில் தொடர்பு கொண்டு வரச் சொன்ன போது அவள் உடனடியாகக் கேட்டாள். “என்ன விஷயம் அர்ஜுன்?”

 

ஏனென்றால் இதுவரை அவன் அவளை காரணமில்லாமல் சும்மா பேச வரச் சொன்னதில்லை. அப்படிப் பேசுவதும் பெரும்பாலும் அவர்களுடைய தொழில் சம்பந்தமாகத் தான் இருக்கும். முதல் முறையாக அவன் அவளிடம் தங்கள் காதலைப் பற்றிப் பேச அழைத்திருப்பதை அலைபேசியில் எப்படிச் சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. “நீ வா நேரில் சொல்கிறேன்என்று மொட்டையாகச் சொல்லி இருக்கிறான்.

 

வழக்கமாக அவர்கள் அமர்ந்து கதைக்கும் அந்த ஓட்டலில் அன்று அதிகக் கூட்டமில்லை. அவள் வருவதாகச் சொன்ன நேரம் கடந்து ஐந்து நிமிடங்கள் தான் கழிந்திருக்கின்றன என்றாலும் ஒரு யுகமே காத்திருப்பது போல் அவனுக்குத் தோன்றியது.  முன்பும் சில நாட்களில் அவள் வரத் தாமதமாகி இருக்கிறது. அப்போதெல்லாம் அலைபேசியில் ஏதாவது பார்க்க ஆரம்பித்தான் என்றால் அவள் வந்து சேர்ந்து அவனை அழைக்கும் வரை காலத்தின் பிரக்ஞையே அவனுக்கு இருக்காது. ஆனால் இன்றோ அது முடியவில்லை. அவளிடம் எப்படிச் சொல்ல ஆரம்பிப்பது என்று ஐந்தாறு விதங்களில் மனதில் சொல்லி ஒத்திகை பார்த்து விட்டான். எதுவும் அவனுக்குத் திருப்தியளிக்கவில்லை.

 

பெரிய பெரிய ஆட்களிடம் பேட்டி எடுக்கும் போதும், பேசும் போதும் அலட்டிக் கொள்ளாமல் அவன் அமைதியாய் இருந்திருக்கிறான். கீதாவிடமே அவன் எத்தனையோ முறை எதை எதையோ பேசியிருக்கிறான். அப்போதெல்லாம், இப்படிப் பேச வேண்டும், அப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் அதிகமாய் அவன் எப்போதுமே யோசித்து வைத்துப் பேசியதில்லை. தானாய் வார்த்தைகள் வரும். ஆனால் இன்று காதலை முதல் முறையாகத் தெரிவித்துப் பேச வேண்டுமென்கிற போது அது சரியாக இருக்க வேண்டும் என்று மனம் கவலைப்படுகிறது...

 

கீதா உள்ளே நுழைந்தாள். அவளைப் பார்த்தவுடன் அவன் மனதின் படபடப்பு அதிகரித்தது. நிஜமாகவே காதல் சக்தி வாய்ந்தது தான். அது எப்படிப்பட்டவர் மனநிலையையும் சமநிலையில் இருந்து தள்ளி விடுகிறது. சில சமயங்களில் சம்பந்தப்பட்டவரை அரைக்கிறுக்காக்கி விடுகிறது. முன்பிருந்தே அவளிடம் காதல் இருந்திருந்தாலும், அவனே அதை அங்கீகரிக்க மறுத்து ஆழ்மனதில் புதைத்து வைத்திருந்த போது அவளுடன் பேசுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இன்றோ முழு உணர்வுடன் பேச முற்படுகையில் பதின்ம வயதுப் பையன் போல மனம் படபடப்பை உணர்வது அவன் அறிவுக்கு வேடிக்கையாக இருந்தது. ஆனால் அறிவுக்கு இங்கே வேலை இல்லை என்பதால் இதயத்தின் பிரச்சினைகள் அறிவுக்குப் புரியாது...

 

சாரி அர்ஜுன், லேட்டாயிடுச்சு. வழியில ட்ராஃபிக் ஜாம்.” என்று சொல்லியபடி அவன் எதிரில் அமர்ந்தவள் உடனடியாகக் கேட்டாள். “என்ன ரொம்ப கவனமா ட்ரஸ் பண்ணிகிட்டு வந்திருக்கே. யாரையாவது காதலிக்க ஆரம்பிச்சிட்டியா என்ன?”

 

அர்ஜுன் திகைத்தான். இந்த பெண்களின் பார்வை தான் எத்தனை கூர்மையானது! நித்யாவும் சரி, இவளும் சரி எப்படி இவ்வளவு வேகமாக சூட்சும விஷயங்களையும் கவனித்து விடுகிறார்கள்? ஒரு விதத்தில் அவளாக அப்படிக் கேட்டது நல்லதாயிற்று. அவன் இதயம் படபடக்க சொன்னான். “ஆமா. உன்னை தான்.”

 

ஒரு கணம் அவள் மனம் பூரித்தாலும் அவன் விளையாட்டாய் பேசுகிறான் என்று கீதா நினைத்தாள். “என்னை தான் மூனு வருஷமாய் பார்க்கறியே. ஆனா இப்படியெல்லாம் ட்ரஸ் பண்ணிட்டு வந்ததில்லையே. விளையாடாம சொல்லு. யாரந்த பொண்ணு?”

 

அவள் கண்களைக் கூர்ந்து பார்த்து அழுத்தந்திருத்தமாக அர்ஜுன் சொன்னான். “அதான் சொன்னேனே நீ தான்

 

இது வரை அவன் அவளை அப்படிப் பார்த்ததில்லை. அவளுக்கு இது கனவா இல்லை நிஜம் தானா என்று ஒரு கணம் சந்தேகம் வந்தது. கண்களை ஒரு முறை நன்றாக மூடித் திறந்தாள். அவன் இன்னும் எதிரில் தான் அமர்ந்து இருக்கிறான். அவளையே இன்னும் அப்படியே தான் பார்த்துக் கொண்டும் இருக்கிறான்.

 

சர்வர் அவர்களுடைய மேஜைக்கு வந்து நின்றான். அர்ஜுன்ரெண்டு காஃபிஎன்று சொன்னான்.   

 

நடப்பது எதுவும் கனவல்ல. காலையில் அவன் அலைபேசியில் அழைத்த போது இதையெல்லாம் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. சொல்லப் போனால் இப்படி ஒரு நிகழ்வு தன் வாழ்வில் எப்போதாவது நடக்கும் என்ற நம்பிக்கையைக் கூட அவள் என்றைக்கோ தொலைத்து விட்டிருந்தாள். ஏனென்றால் இப்படியெல்லாம் நடக்கக்கூடிய சாத்தியக்கூறு அவளுக்குத் தென்பட்டிருக்கவில்லை. இத்தனை காலம் ஆகாதது இனிமேலா ஆகப்போகிறது என்று விரக்திக்கே அவள் வந்திருந்தாள். ஆனாலும் இந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. சந்தோஷத்தில் அழ வேண்டும் போல் இருந்தது.

 

அத்தனையையும் உள்ளே புதைத்துக் கொண்டு அவள் மெல்லக் கேட்டாள். “இது எப்போதிருந்து?”

 

ரெண்டு, ரெண்டரை வருஷமாவே தான்.”

 

ஆனா இதுவரைக்கும் என் கிட்ட நீ சொல்லவேயில்லையே?”

 

நீயும் என் கிட்ட சொல்லலையே

 

சரி இப்ப மட்டும் ஏன் சொல்லறே?”

 

நீ என்னைக் காதலிக்கறேன்னு தெரிஞ்சுது

 

நான் அப்படிச் சொல்லவேயில்லையே.”. அவளுக்கு அவனைச் சீண்டிப் பார்க்கத் தோன்றியது.

 

நீ சொல்லி தான் தெரியணுமா கீதா? அது என் ஆழ்மனசுக்கு ஆரம்பத்துல இருந்தே தெரியும். அதை எப்படி எதிர்கொள்றதுன்னு தெரியாத ஒருவித ஆழ்மனச் சிக்கல்ல நான் இருந்தேன்.... நேத்து நித்யா நீ என்னைக் காதலிக்கறதைக் கண்டுபிடிச்சு சொன்னா. அப்ப கூட நான் அதை நம்பற மனநிலைல இருக்கல. ஆனா அவ உறுதியா சொன்னா. நான் ஆழமாய் யோசிச்சுப் பாத்தேன். அப்போ தான் ஆழ்மனசுல நான் அதை எப்பவோ உணர்ந்திருக்கேன்னு புரிஞ்சுது. நான் சொன்ன மாதிரி, வெளிப்படையா அதை புரிஞ்சுக்கவோ, அதைப் பத்தி பேசவோ முடியாத மனச்சிக்கல் என்கிட்ட இருந்துச்சு.”

 

இப்பவும் அந்தச் சிக்கல் முழுசா போயிடல போல.”

 

ஏன் அப்படிச் சொல்றே?”

 

இப்பவும், நீ தான், உன்னைத் தான்னு சொல்றியே ஒழியநான் உன்னைக் காதலிக்கிறேன்னு ஒத்தை வாக்கியத்தை மொத்தமா சேர்ந்து சொல்ல மாட்டேன்கிறே

 

அர்ஜுன் அப்போது தான் அந்தத் தவறை உணர்ந்தான். மேஜை மேல் வைத்திருந்த அவள் கையை இறுக்கப்பிடித்துக் கொண்டு சொன்னான். “நான் உன்னைக் காதலிக்கிறேன் கீதா

 

அவளுக்கு சந்தோஷ மிகுதியில் அழ வேண்டும் போல் தோன்றியது. அவள் கட்டுப்பாட்டையும் மீறி கண்கள் ஈரமாயின.

 

சர்வர் காபியுடன் வர அர்ஜுன் அவள் கையை அவசரமாக விடுவித்தான். சர்வர் போன பிறகு கீதா அவனிடம் குரலடைக்கச் சொன்னாள். “இந்த ஒரு நாள் வரும்னு நான் எதிர்பார்க்கவேயில்லை, தெரியுமா?”

 

அவள் கண்கலங்கியதிலும், அப்படிச் சொன்னதிலும் அவனும் மனமுருகினான். “எனக்குத் தான் சில மனச்சிக்கல் இருந்துச்சு. நீயாவது சொல்லி இருக்கலாமே கீதா?”

 

அவள் சொன்னாள். “நீ எந்த அறிகுறியுமே காட்டலை. அதனால நான் காதலைச் சொல்லி, நமக்கிடையே இருக்கிற நட்பையும் இழந்துட விரும்பல அர்ஜுன்.”

 

நித்யா அதையும் துல்லியமாய் கணித்திருந்ததை நினைத்து அர்ஜுன் ஆச்சரியப்பட்டான். ஒரு பெண்ணின் மனதை இன்னொரு பெண்ணால் புரிந்து கொள்ள முடிகிறது என்று இதை எடுத்துக் கொள்வதா, இல்லை நித்யாவின் கூர்நோக்குத் திறன் என்று எடுத்துக் கொள்வதா என்று அவனுக்குத் தெரியவில்லை.

 

கீதா கேட்டாள். “உனக்கு சில மனச்சிக்கல்னு சொன்னாயே. என்ன மனச்சிக்கல் அர்ஜுன்?”

 

அர்ஜுன் தன் தாயையும், தாயிற்கும் அவனுக்கும் இருக்கும் இடைவெளியையும் பற்றிச் சொல்லாமல் கீதாவிடம் அவனுடைய மனச்சிக்கலை விளக்க முடியாது. ஆனால் அவளிடம் இப்போது அதை வெளிப்படையாகச் சொல்ல முடிந்த மனநிலையில் அவன் இருக்கவில்லை. அந்தச் சிக்கலை அவன் நேற்று தான் உணரவும், அலசவும் ஆரம்பித்து இருக்கிறான். அதை அவன் ஜீரணித்து அதிலிருந்து விடுபட ஒரு வழி கண்டுபிடித்துத் தெளிவடையாமல் அரைகுறையாக அவளிடம் அதுபற்றிப் பேச அவன் விரும்பவில்லை.

 

நமக்குள்ளே இனி எந்த ஒளிவு மறைவுக்கும் அவசியமில்லை தான். ஆனால் இப்பவும் அந்தச் சிக்கல் பற்றி முழுத்தெளிவு எனக்கில்லை கீதா. ஒரு தெளிவு வந்தவுடன கண்டிப்பா ஒரு நாள் உன் கிட்டே சொல்றேன்.”

 

அவன் சொல்லச் சொல்ல அவனுக்கு அவன் ஆபிசிலிருந்து குறுந்தகவல் குறுந்தகவல் வந்தது. ”நியூஸ் சேனல் பார்க்கவும்

 

அவள் கேட்டாள். “என்ன?”

 

அவன் சொன்னான். “ஏதோ ப்ரேக்கிங் ந்யூஸ் வந்துகிட்டிருக்கு.”


(தொடரும்)

என்.கணேசன்



Monday, March 30, 2026

யோகி 149


ஷ்ரவன் தோட்ட வேலை செய்து கொண்டிருக்கையில் கண்ணன் வந்து அவனை பாண்டியன் வரச் சொன்னதாகத் தெரிவித்தார். அவர் அதைச் சொன்ன போது அவருடைய முகம் இறுகியிருந்தது. வழக்கமான நட்பு முகத்தில் தெரியவில்லை. பிடிபட்டு விட்டோம் என்பதை அந்தக் கணமே ஷ்ரவன் உணர்ந்தான். ஆபத்தில் மாட்டிக் கொள்வது அவனுக்குப் புதிதல்ல. அவனுடைய இதயத்துடிப்பு வேகம் எடுத்தது. ஆழமாக மூச்சு விட்டு அமைதிப்படுத்திக் கொண்டு அவன் புன்னகையுடன் அவருடன் கிளம்பினான். இப்போது அவனுக்கு வேண்டியதெல்லாம் யோசித்துச் செயல்பட முடிந்த அமைதி தான்...

 

செல்லும் போது கல்பனானந்தா எங்கே இருக்கிறாள் என்பதை ஷ்ரவன் பார்த்தான். அவள் தொலைவில் அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் அவளால் அவன் பிடிபட்டதை யூகிக்க முடியாது என்பதை அவன் புரிந்து வைத்திருந்தான். கண்ணனும், பாண்டியனின் ஆட்களும் அவனை அழைத்துக் கொண்டு போவது புதியதல்ல என்பதால் வழக்கம் போல் எதையோ கேட்கத் தான் அவனை அழைத்துக் கொண்டு போகிறார்கள் என்று அவள் நினைக்கத் தான் சாத்தியம் அதிகம்.

 

ஷ்ரவன் கண்ணனிடம் சொன்னான். “சுவாமிஜி. சுவாமினியிடம் சொல்லி விட்டு வரட்டுமா?”

 

கண்ணன் உணர்ச்சியே இல்லாத குரலில் சொன்னார். “தேவையில்லை. நான் சொல்லிக் கொள்கிறேன்.”

 

ஷ்ரவன் தலையசைத்து விட்டு நடந்தான். எதாவது சைகை காட்டி அவளிடம் அறிவிக்கலாம் என்றாலும் அது கண்ணனின் கூரிய பார்வைக்குத் தப்பாமல் போவது சாத்தியமில்லை. அது அவளையும் சேர்ந்து ஆபத்தில் மாட்டி விடுவது போலாகி விடும் என்பதால் அவன் அதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் அமைதியாக கண்ணனுடன் சென்றான்.   

 

பாண்டியன் ஷ்ரவன் அமைதியாக வருவதை ஜன்னல் வழியாகப் பார்த்தார். அவனைப் பார்க்கப் பார்க்க அவருக்குள் எரிமலை வெடித்தது. எவ்வளவு சுலபமாக எங்களை ஏமாற்றியிருக்கிறான் அவன்...

 

ஷ்ரவன் உள்ளே வந்து பழைய நட்புடன் கைகூப்பிவணக்கம் ஜிஎன்று சொல்ல பாண்டியன் பதில் வணக்கம் சொல்லாமல், புன்னகை கூடச் செய்யாமல் அவனைக் கூர்ந்து பார்த்தார்.

 

ஷ்ரவன் ஆச்சரியத்துடன் கேட்டான். “என்ன ஆச்சு ஜீ?”

 

பாண்டியன் ஏளனமாகச் சொன்னார். “நல்ல வேளை ஒன்றும் ஆகவில்லை. ஆவதற்குள்ளே எல்லாம் தெரிந்து விட்டது.”

 

ஷ்ரவன் திகைப்புடன் சொன்னான். “என்ன சொல்கிறீர்கள் ஜீ?”

 

பாண்டியன் சொன்னார். “உன் சாயம் வெளுத்து விட்டது.”

 

அவர் ஒருமையில் பேச ஆரம்பித்து விட்டதை ஷ்ரவன் கவனித்தான். அவன் அதிர்ச்சியைக் காட்டியபடி கேட்டான். “என்னைத் தேடி போலீஸ் வந்ததா?”

 

இப்போது அதிர்ந்தது பாண்டியனும், கண்ணனும் தான். பாண்டியன் கேட்டார். “போலீஸ் எதற்கு உன்னைத் தேடி வர வேண்டும்?”

 

அது என் எதிரிகள் திட்டமிட்டு என்னைச் சிக்க வைத்த சதிஜி. போலீஸ் சொல்வது எதுவும் உண்மையில்லை. தயவுசெய்து என்னை நம்புங்கள்.”

 

இது என்ன புதுக்கதை என்று பாண்டியனும் கண்ணனும் ஷ்ரவனைப் பார்த்தார்கள்.

 

இதில் போலீஸ் எங்கே வந்தது?”

 

நீங்கள் தானே சொன்னீர்கள் உன் சாயம் வெளுத்து விட்டது என்று. போலீஸ் சொல்லாமல் உங்களுக்கு எப்படித் தெரியும்?”

 

என்ன உளறுகிறாய்?’

 

நீங்கள் அந்த ஹைத்ராபாத் கேஸ் பற்றித் தானே பேசுகிறீர்கள் ஜீ?”

 

அந்தக் கேஸ் என்ன?”

 

அது போலீஸ் ஜோடித்த பொய் வழக்கு ஜீ. உண்மைக் குற்றவாளியைப் பிடிக்க முடியாமல் போன போது என்னைப் போல் ஒரு பாவப்பட்டவனை சிக்க வைப்பது அவர்களுக்குச் சுலபமாகப் போய் விட்டது.”

 

பாண்டியனுக்குத் தலை சுற்றுவது போலிருந்தது. நாம் எதையோ கேட்டால், இவன் எதையோ சொல்கிறான். என்ன தான் சொல்கிறான் என்று கேட்டுத் தெரிந்து கொள்ள அவர் நினைத்தாலும் அவனை அதுபற்றிப் பேச விட வேண்டாம் என்று பாண்டியனின் உள்ளுணர்வு அவரை எச்சரித்தது. அவன் குழப்பமான புதுக்கதை எதாவது சொல்லி அவரைத் திசை திருப்பி விடப் பார்ப்பதாக அவருக்குத் தோன்றியது.

 

பார். நான் சொன்னது அந்தக் கேஸ் பற்றி அல்ல.  நீ எங்களை ஏமாற்றிய கதையைச் சொன்னேன்.”

 

ஷ்ரவன் அநியாயமாய் குற்றம் சாட்டப்பட்ட கோபத்தோடு கேட்டான். “அபாண்டமாய் பழி சுமத்தாதீர்கள் ஜீ. நான் உங்களை ஏமாற்றினேனா? எப்போது? எப்படி?”

 

அவன் இதுவரை அப்படிக் கோபமாய் பேசியதில்லை. எப்போதும் பணிவும், மரியாதையும் மட்டுமே காட்டிவந்த அவன் நியாயவான் போல் கோபத்துடன் கேட்டது அவரை ஆச்சரியப்படுத்தியது.

 

நீ இங்கே துறவியாய் வந்தது, உன்னிடம் விசேஷ சக்திகள் இருப்பதாகக் கதைகள் சொன்னது இதையெல்லாம் தான் சொன்னேன்.”

 

ஷ்ரவன் கோபத்துடனேயே கேட்டான். “அதில் எனக்கென்ன லாபம்?”

 

அதை நீ தான் சொல்ல வேண்டும்

 

ஷ்ரவன் கோபம் குறையாமல் சொன்னான். “லாபம் இருந்தால் தானே நான் சொல்ல முடியும். புகார் சொல்லும் நீங்களே சொல்லுங்கள் எனக்கு என்ன லாபம்?”

 

குற்றம் செய்து மாட்டிக் கொண்டவர்களிடம் பயம், அதிர்ச்சி, உளறல், அழுகை, தப்பிக்க முயற்சி செய்தல் ஆகியவற்றைத் தான் பாண்டியன் இதுவரை பார்த்திருக்கிறார். கோபமும், எதிர்க்கேள்விகளும் அவர் இதுவரை பார்த்திராதது.

 

ஷ்ரவன் சொன்னான். “நான் துறவியாக வந்தேன். எல்லாப் பிரச்சினைகளில் இருந்தும் தப்பித்து யோகிஜி இருக்குமிடத்தில் மீதி வாழ்க்கையை அமைதியாகக் கழிக்கலாம் என்று வந்தேன்.  ஆனால் என்னிடம் இருக்கும் விசேஷ சக்திகளைப் பற்றி நானாக உங்களிடம் சொன்னது கிடையாது ஜீ. நன்றாக யோசித்துப் பாருங்கள். சுவாமி கண்ணனிடமும், சுவாமினி கல்பனானந்தாவிடமும் நான் என்னிடம் இருந்த விசேஷ சக்திகளைப் பற்றிச் சொன்னது கூட அவர்களாக என்னிடம் அதுபற்றிக் கேட்ட பிறகு தான். சுவாமிஜி கண்ணன் இங்கேயே இருக்கிறார். அவரிடம் கேளுங்கள். வேண்டுமானால் சுவாமினி கல்பனானந்தாவையும் அழைத்துக் கேட்டுப் பாருங்கள். என் அப்பா என்னை எச்சரித்து இருந்ததால் எனக்கு ஆரம்பத்திலிருந்தே அந்தச் சக்திகள் பிரச்சினையானவை என்ற சந்தேகம் எப்போதும் இருந்தது. அதனாலேயே பல காலம் நான் அதிலிருந்து விலகி இருந்தேன். ஆனால் ஒரு நண்பன் என்னை அதில் மறுபடியும் இழுத்து விட்டான். அதுவும் போலீஸ் கேஸ் ஆனதில் தான் முடிந்தது. வாழ்க்கையே வெறுத்துப் போய் யோகா, தியானம், துறவு என்று வாழ முடிவு செய்து தான் நான் இங்கே வந்தேன். இங்கேயும் யோகா வகுப்பு முதல் நிலை வகுப்புகளில் எனக்குப் பிரச்சினை இருக்கவில்லை. இரண்டாவது நிலை வகுப்புகளுக்கு வந்த போது தான் பிரச்சினை ஆரம்பமானது.  யோகாலயத்தில் உலாவிக் கொண்டிருக்கும் துஷ்ட சக்தி ஓநாய் ரூபத்தில் வந்து ஒரு காலை நேரத்தில் என்னைத் தாக்கியது. உடனே என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. உடம்பெல்லாம் மின்சாரம் தாக்கியது போல் இருந்தது. அப்போதே எச்சரிக்கை ஆகி நான் இங்கிருந்து போயிருக்க வேண்டும். சில நாட்கள் முன்பு பார்த்த ஓமன் படம் காரணமாக அந்த அனுபவம் வந்திருக்கிறது என்று நானே என்னைச் சமாதானம் செய்து கொண்டு விட்டது தான் என் தவறு.…”    

 

பாண்டியனும் கண்ணனும் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். இருவரும் ஒன்றும் பேசவில்லை. ஷ்ரவன் தொடர்ந்து சொன்னான். “எனக்கு சிறுவயதில் இருந்தே இந்த துஷ்டசக்திகள் கண்ணுக்குத் தெரிந்தாலும் ஓநாய் என் காட்சிக்கு வந்தது கிடையாது. பாம்பு, வவ்வால், ஆந்தை, கருப்புப் பூனை எல்லாம் தெரிந்திருக்கிறது. ஆனால் ஓநாய் இங்கு வரும் வரை தெரிந்தது கிடையாது. அதுவும் கண்களில் தீ கக்கும் ஓநாயை நான் கனவிலும் பார்த்தது கிடையாது. துஷ்டசக்திகளில் ஏதோ ஆபத்து இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு நான் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் துறவு வாழ்க்கை வாழ வந்த போது என்னை அழைத்து அதில் கவனம் வைக்கவும், அதைப் பார்க்கும் சக்திகளை வளர்த்துக் கொள்ளவும் சொன்னது நீங்கள் தான் ஜீ. அதாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா, இல்லை அதுவும் உங்களுக்கு மறந்து விட்டதா? அப்போதும் கூட எனக்கு அதை வளர்த்துக் கொள்ள மனம் இருக்கவில்லை. கடைசியில் யோகிஜி அவர்களே சொன்ன பிறகு தான் நான் அதற்குச் சம்மதித்தேன். அப்படி நீங்களே என்னை அந்த துஷ்டசக்திகளின் பக்கம் தள்ளி விட்டு இப்போது அபாண்டமாய் பழி சுமத்துகிறீர்களே, என்ன நியாயம் ஜி? தயவு செய்து சொல்லுங்கள்.”


(தொடரும்)

என்.கணேசன்