என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, October 23, 2025

சாணக்கியன் 184

 

ர்வதராஜனின் மரணத்தை ஜீவசித்தி மூலம் கேள்விப்பட்ட போது ராக்ஷசரும் அதிர்ச்சியடைந்தார். விஷாகா மூலம் சந்திரகுப்தன் உடலில் விஷம் ஏற்றிக் கொல்வது என்ற அவர்கள் திட்டம் நிறைவேறுவதற்குப் பதிலாக பர்வதராஜன் விஷத்தால் இறந்தது எப்படி என்று குழம்பிய அவர் கேட்டார். ”இது எப்படி நடந்தது?”

 

தெரியவில்லை பிரபு. நடன நிகழ்ச்சிகள் இரவு வரை சிறப்பாக நடைபெற்றன. அந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின் சந்திரகுப்தனும் மற்றவர்களும் கிளம்பிச் சென்று விட்டனர். ஹிமவாதகூட அரசர் தன் பணியாளையும், காவலர்களையும் அனுப்பி விட்டார். பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை

 

மலைகேது?”

 

ஹிமவாதகூட இளவரசர் உடல்நலக்குறைவு காரணமாக நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை பிரபு

 

விஷாகா என்ன சொல்கிறாள்?”

 

விஷாகா தலைமறைவாகி விட்டாள் பிரபு. அவள் என்னவானாள் என்று தெரியவில்லை

 

விஷாகா சந்திரகுப்தனை விட்டு விட்டு பர்வதராஜனைக் கொன்றிருக்கக்கூடுமோ என்று ராக்ஷசருக்குச் சந்தேகம் எழுந்தது. ஆனால் அப்படி அவள் நடந்து கொள்ளக் காரணம் எதுவுமிருக்க வழியில்லையே என்றும் ராக்ஷசருக்குத் தோன்றியது. அவள் தனநந்தனைத் தீவிரமாக ஆதரிப்பவள். அப்படிப்பட்டவள் திட்டத்தை நிறைவேற்றாமல் போனதும், இப்படித் திடீரென்று தலைமறைவானதும் அவரைக் குழப்பியது.

 

ஜீவசித்தி மெல்லச் சொன்னான். “ஒருவேளை நம் திட்டம் எப்படியோ வெளிப்பட்டு சாணக்கியர் ஏதாவது செய்திருக்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது பிரபு.“

 

ராக்ஷசர் ஜீவசித்தியைக் கேள்விக்குறியுடன் பார்த்தார். ஜீவசித்தி மெல்லச் சொன்னான். “நடன நிகழ்ச்சியின் போது ஹிமவாதகூட அரசர் இரண்டு கோப்பை மதுவருந்தியிருக்கிறார். அந்த மதுவில் விஷம் கலக்கப் பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.”

 

யோசித்துப் பார்க்கையில் ராக்ஷசருக்கு அந்தக் கருத்து அர்த்தமில்லாததாகத் தெரியவில்லை. சாணக்கியர் அப்படிச் செய்திருக்கலாம் என்றே தோன்றியது. விஷாகா அதைக் கண்டு பயந்து தப்பியோடியிருக்கலாம்..... அல்லது அவள் சிறைப்பட்டிருக்கலாம். அவர் மெல்லக் கேட்டார். “இது குறித்து மலைகேதுவின் அபிப்பிராயம் என்ன?”

 

மலைகேதுவும் தலைமறைவாகி விட்டார் பிரபு. இன்று அதிகாலையில் மலைகேதுவும் அவரது காவலர்களும் அவசர அவசரமாக மாளிகையை விட்டு மாறு வேடத்தில் வெளியேறியதாகப் பணியாளர்கள் கூறுகிறார்கள். அவரும் தன் உயிருக்குப் பயந்து தப்பியோடியது போல் தெரிகிறது...”   

 

ராக்ஷசர் யோசித்தார். மலைகேதுவையும், மற்ற மன்னர்களையும் சாணக்கியருக்கு எதிராகத் திருப்பி விட இது நல்ல சந்தர்ப்பம் என்று அவருக்குத் தோன்றியது. இந்த சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள அவர் நினைத்தார். தற்போது ஜீவசித்தி மற்றும் அவர் நண்பர் சந்தன் தாஸ் மட்டுமே அவருடன் தொடர்பில் உள்ளார்கள். அவர்களால் மலைகேதுவைக் கண்டுபிடிப்பது முடியாத காரியம். அவருடைய ஒற்றர்களால் மட்டுமே அது முடியும். தற்போது அவருடைய பாதுகாப்பு கருதி ஒற்றர்கள் அவரை நெருங்காமல் இருக்கிறார்கள். ஜீவசித்தி மூலம் ஒரு ஒற்றனையாவது வரவழைத்து தப்பியோடிய மலைகேதுவை எப்படியாவது தொடர்பு கொள்ள முடிவு செய்தார்.

 

அதை அவர் தெரிவித்த போது ஜீவசித்தி சொன்னான். “சாணக்கியரின் ஒற்றர்கள் நடமாட்டமும் கண்காணிப்பும் எல்லா இடங்களிலும் அதிகமாய் இருக்கிறது பிரபு. அதனால் தங்கள் ஒற்றரை இங்கு அழைத்து வருவது இருவருக்குமே நல்லதல்ல. அதனால் தாங்கள் கடிதம் எதாவது எழுதித் தந்தால் அதை என்னால் தங்கள் ஒற்றனிடம் தந்து மலைகேதுவைக் கண்டுபிடித்து தரச் சொல்ல முடியும்.”

 

ஜீவசித்தி சொல்வதும் சரியாகத் தோன்றவே ராக்ஷசர் சம்மதித்தார். நாளையே கடிதம் எழுதித்தருவதாகச் சொன்னார். அவன் சென்ற பின் சிறிது நேரத்தில் வெளியே பறையறிவிக்கும் ஓசை கேட்டது. ராக்ஷசர் ஜன்னல் அருகே மறைவாக நின்று கொண்டு காதுகளைக் கூர்மையாக்கினார். “....ஹிமவாதகூட அரசர் பர்வதராஜர் நேற்று நள்ளிரவில் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. அவர் மரணத்திற்குக் காரணமானவர்கள் குறித்த தகவல்களைத் தருபவர்களுக்குத் தகுந்த சன்மானம் தரப்படும் என்றும் தகவல் தருபவர்கள் உடனடியாக பிரதம அமைச்சரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிக்கப் படுகிறது...”

 

பர்வதராஜனைக் கொன்றது தாங்கள் அல்ல என்பதால், பாடலிபுத்திரத்தில் பர்வதராஜனைக் கொல்ல முடிந்த ஆட்கள் சாணக்கியரையும், சந்திரகுப்தனையும் தவிர வேறு யாருமில்லை என்று ராக்ஷசர் உறுதியாக நம்பினார். கொன்றவர்களே பர்வதராஜனின் மரணத்திற்குக் காரணமானவர்கள் குறித்த தகவல்களைத் தருபவர்களுக்குத் தகுந்த சன்மானம் தரப்படும் என்று பறையறிவித்துச் சொல்வது ராக்ஷசருக்கு வேடிக்கையாக இருந்தது. சாணக்கியரைப் பற்றி அது நிறையவே புரியவும் வைத்தது

 

 

லைகேதுவுக்கு நடந்ததெல்லாம் கனவு போல இருந்ததுசுசித்தார்த்தக் இல்லாவிட்டால் பாடலிபுத்திரத்திலிருந்து அவன் தப்பி வந்திருக்க முடியாது என்பதில் அவனுக்கு சந்தேகமேயில்லை. குழப்பமான மனநிலையில் இருந்த அவன் சாணக்கியரின் சதியில் சிக்கி இன்னேரம் தந்தையைப் பின் தொடர்ந்து மேலுலகத்திற்கே போயிருந்தாலும் போயிருப்பான். நல்ல வேளையாக அவனை சுசித்தார்த்தக்கின் சமயோசிதம் காப்பாற்றியது. இப்போது ஒரு வனப் பகுதியில் அவர்கள் இருக்கிறார்கள். ஹிமவாதகூட இளவரசன் கௌரவமாக இருக்கக்கூடிய சூழல் அல்ல அது என்றாலும் உயிரோடிருப்பதே அதிர்ஷ்டம் தான். இனி என்ன செய்வதென்று அவன் ஆழமாக யோசிக்க ஆரம்பித்தான்.

 

உயிர் தப்பிக்க சுசித்தார்த்தக்கின் உதவியை அவன் நாடியிருந்தாலும் இனிமேல் என்ன செய்வதென்பதற்கும் சுசித்தார்த்தக்கின் உதவியை நாடுவது முட்டாள்தனம் என்று அவனுடைய அறிவு எச்சரித்தது. அதை அவனே தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அவன் நிலையில் அவன் தந்தை இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்று யோசித்தான். இது வரை அவன் தந்தை சொன்னதையும், செய்ததையும் அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அனுபவத்தை வைத்து ஒரு முடிவுக்கு வந்து  உடனே சாணக்கியருக்கு ஒரு மடல் எழுதினான்.

 

பெருமதிப்பிற்குரிய ஆச்சாரியர் அவர்களுக்கு,

வணக்கம். தாங்கள் என் தந்தையின் நம்பிக்கைக்குரியவராகவும், அவர் பூஜிக்கும் ஸ்தானத்திலும் இருந்தவர். அவர் தங்கள் ஒருவரை நம்பியே மகதத்தை தனநந்தனிடமிருந்து மீட்கும் பணியில் தங்களுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் என்பதும் தங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். ஆனால் அப்படிப்பட்டவர் உயிரை, மகதத்தை வென்றவுடன் அதன் நிர்வாகத்தைக் கையில் எடுத்துக் கொண்ட தாங்கள்காப்பாற்றாமல் விட்டதை மிகுந்த துர்ப்பாக்கியமாகவே நான் கருதுகிறேன். சர்வ வல்லமையுள்ளவராய் தாங்கள் இருக்கையில் தங்கள் ஆட்சியிலேயே என் தந்தை துர்மரணம் அடைந்தார் என்பது தாங்க முடியாத வேதனையாக இருக்கிறது. ஆனாலும் நடந்து முடிந்ததை மாற்றும் வல்லமை மனிதர்களுக்கு இல்லை என்பதால் நான் அதைக் கடந்து வரவே விரும்புகிறேன். அதே நேரத்தில் அவர் மரணத்திற்குக் காரணமானவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே என் அவா.

 

என் தந்தை இறந்து விட்டாலும் அவருக்கு வாக்குறுதி தந்த தாங்கள் இன்னும் இருக்கிறீர்கள் என்பது என்னுடைய ஆசுவாசமாக இருக்கின்றது. தாங்கள் கொடுத்த வாக்கை மீறாதவர் என்பதால் என் தந்தைக்குக் கொடுத்த வாக்கைக் கண்டிப்பாக நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறதுதாங்கள் அவருக்கு வாக்களித்தபடி மகத ராஜ்ஜியத்திலும், மகத நிதியிலும் சரி பாதியைப் பிரித்துத் தர வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். தற்போது மகதத்தில் ஆபத்தான சூழல் நிலவுவதால் நான் நேரடியாக அங்கு வந்து இது குறித்துப் பேச முடியாத நிலையில் இருக்கிறேன். அதனால் தான் வெளியேயிருந்து கொண்டு இந்த மடலைத் தங்களுக்கு அனுப்புகிறேன். நாம் செய்து கொண்ட ஒப்பந்தத்தைத் தாங்கள் நிறைவேற்றி என் பாதுகாப்புக்கும் உத்திரவாதம் அளித்தால் நான் மேற்கொண்டு பேச வேண்டியதை நேரில் வந்து பேசுவதற்குச் சித்தமாக இருக்கிறேன்.

 

தங்கள் விரைவான பதிலுக்கு நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

 

அன்புடன்

தங்கள் மலைகேது

 

எழுதி முடித்தபின் ஒரு காவலனிடம் மடலைத் தந்து சாணக்கியரிடன் சென்று அந்த ஓலையைத் தந்து பதில் பெற்று வரும்படி கட்டளையிட்டான். அந்தக் காவலன் குதிரையேறிச் சென்றவுடன் சுசித்தார்த்தக்கை அழைத்துச் சொன்னான். “சுசித்தார்த்தக். நான் எங்களுக்குச் சேர வேண்டிய சரிபாதியைக் கேட்டு சாணக்கியருக்கு மடல் அனுப்பியிருக்கிறேன். என்ன பதில் வருமென்று நீ நினைக்கிறாய்?”

 

சுசித்தார்த்தக் சொன்னான். “அவர் மனதையும் உத்தேசத்தையும் சாதாரண பணியாளான நானெப்படி அறிவேன் இளவரசே.”

 

மலைகேது புன்னகைத்தபடி சொன்னான். “என்னைப் பேராபத்திலிருந்து சாதாரண பணியாளான நீ தான் காப்பாற்றியிருக்கிறாய். அப்படி இருக்கையில் உன்னை சாதாரண பணியாளாக நான் எப்படி நினைக்க முடியும். கொடுத்த வாக்கை சாணக்கியர் காப்பாற்றுவாரேயானால் கிடைப்பதில் தாராளமாக உனக்குத் தந்து உன்னைக் கௌரவிப்பேன் சுசித்தார்த்தக்.”

 

சுசித்தார்த்தக் கைகூப்பியபடி உணர்ச்சிவசப்பட்டு சொன்னான். “தங்கள் அன்பை என் பாக்கியமாக நான் நினைக்கிறேன் இளவரசே…. அவர் பதில் வரும் வரை நாம் என்ன செய்வது?”

 

எங்கள் படைகள் பாடலிபுத்திரம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை வழியிலேயே சந்திக்கச் சென்று இணைந்து கொள்வது நல்லதென்று நினைக்கிறேன் சுசித்தார்த்தக். ஒருவேளை என் கோரிக்கைக்கு சாணக்கியர் மறுத்தால் நான்கு தேசப் படைகளுடன் அவரை நான் போர்க்களத்தில் சந்திக்க உத்தேசித்திருக்கிறேன். அதுவல்லவா ஒரு வீரனாக நான் செய்ய வேண்டிய செயல்?”

 

சுசித்தார்த்தக் ஆமோதித்தான். “ஆம் இளவரசே. அதுவே வீரம். அதுவே புத்திசாலித்தனம்

 

(தொடரும்)

என்.கணேசன்




Monday, October 20, 2025

யோகி 126

( தீபாவளி நல்வாழ்த்துக்கள்)

ஷ்ரவன் சீக்கிரமாக எதிர்காலத்தில் தன் மீது சந்தேகம் வராதபடி ஒரு கற்பனை எதிரியை உருவாக்க நினைத்தான். அவர்கள் தேடும் ஒரு இளைஞனை அவர்களுக்குச் சுட்டிக் காட்டினால் ஒழிய அவர்கள், யோகியைத் தேடும் ஒரு இளைஞனைத் தேடிக் கொண்டே இருப்பார்கள். அப்படித் தேடும் போது அவன் மீதும் சந்தேகம் வர வாய்ப்பிருக்கிறது. அவன் இன்னமும் கண்டுபிடிக்கப்படும் விளிம்பில் தான் இருக்கிறான்...

 

ஷ்ரவன் தயங்கியபடி சொன்னான். “யோகாலயத்தின் வாசலில் ஒரு இளைஞனை நான் அடிக்கடி என் மனக்காட்சியில் பார்க்கிறேன். ஓநாயை உள்ளே அனுப்பி விட்டு அவன் வெளியிலேயே நிற்கிறான். அவன் உள்ளே ஏன் நுழைவதில்லை என்று எனக்குத் தெரியவில்லை. உண்மையைச் சொன்னால் அந்த இளைஞன் தெரிவதே என் பிரமையா என்று கூட எனக்குத் தெரியவில்லை...”

 

பிரம்மானந்தாவும், பாண்டியனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பின் பாண்டியன் ஷ்ரவனிடம் சொன்னார். “எதையும் நீங்கள் பிரமை என்று நினைக்காதீர்கள் ஷ்ரவனானந்தா. உங்களுக்குத் தெரியும் காட்சியை நீங்கள் சொல்லுங்கள். அந்த இளைஞனின் தோற்றத்தை உங்களால் விவரிக்க முடியுமா?”

 

ஷ்ரவன் சொன்னான். “சற்றுப் பொறுங்கள். நான் பார்த்துச் சொல்கிறேன்

 

சொல்லி விட்டு அவன் கண்களை மூடிக் கொண்டான். என்ன சொல்வது என்று யோசித்தான். யோகாலயத்தைக் கண்காணிக்க அவன் ஏற்பாடு செய்திருந்தவர்களில் ஒருவன், ஷ்ரவன் யோகாலயத்தில் துறவியாக வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பு தான், டில்லியில் இருக்கும் அவன் தந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று போய் விட்டான். அவன் தந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதால் அவன் இனி சீக்கிரத்தில் வருவதற்கில்லை. அதனால் ஷ்ரவன் சொன்னதை வைத்து இவர்கள் அவனைப் பிடிக்கவும் வாய்ப்பில்லை...

 

ஷ்ரவன் அவனை விவரிக்க ஆரம்பித்தான். “ஒல்லியான சிவந்த தேகம். சுருள் தலைமுடி. அவன் வலது கண்ணிற்கு மேல் ஒரு சின்னத் தழும்பு தெரிகிறது. நீளமான கழுத்து.. அவன் ஓநாயை அனுப்பி விட்டு அதையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்....”

 

ஷ்ரவன் கண்களை மூடியவுடனேயே பாண்டியன் அவன் சொல்வதை கைபேசியில் ஒலிப்பதிவு செய்ய ஏற்பாடு செய்து விட்டிருந்தார்.

 

ஷ்ரவன் தொடர்ந்தான். “ம்ம்ம்.... அவன் மறைந்து விட்டான்.”

 

கண்களைத் திறந்த ஷ்ரவன் முகத்தில் திகைப்பு தெரிந்தது. “அதே இளைஞனைத் தான் நான் ஒவ்வொரு முறையும் நம் யோகாலய வாசலில் பார்க்கிறேன். உங்களுக்கு அவனை அடையாளம் தெரிகிறதா?”

 

பாண்டியன் சொன்னார். “எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் எங்கள் ஆட்கள் யாருக்காவது அவனைத் தெரிந்திருக்கலாம்...”

 

ஷ்ரவனிடம் பிரம்மானந்தா கேட்டார். “இனி உனக்குக் காட்சி எதுவும் தெரியாதா?”

 

இப்போதைக்குத் தெரியாது. ஆனால் மறுபடியும் கண்டிப்பாக எப்போதாவது திடீரென்று தெரிய ஆரம்பிக்கும். அப்போது உங்களுக்கு மீண்டும் சொல்கிறேன்.”

 

பிரம்மானந்தா ஷ்ரவனிடம் சொன்னார். “எப்போது தெரிந்தாலும் நீ பாண்டியனிடம் உடனடியாக வந்து சொல்லலாம் ஷ்ரவனானந்தா. அதற்கு நீ தயங்கவே வேண்டாம்.”

 

ஷ்ரவன் தலையசைத்தான். பின் அவரைத் தரிசிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு உணர்ச்சிவசப்பட்டு மெய்யுருகி நின்று நடித்து, இருவரையும் வணங்கி விட்டு அவன் அங்கிருந்து விடைபெற்றான்.

 

அவன் சென்றவுடன் பாண்டியன் கண்ணனை அழைத்து ஷ்ரவன் பேசிய ஒலிப்பதிவைப் போட்டுக் கேட்க வைத்தார்.

 

ஒல்லியான சிவந்த தேகம். சுருள் தலைமுடி. அவன் வலது கண்ணிற்கு மேல் ஒரு தழும்பு, நீளமான கழுத்து..’ என்ற வர்ணனைகளைக் கேட்ட கண்ணன் சொன்னார். “இந்த வர்ணனைக்குப் பொருந்துகிற ஆள் சில நாட்களுக்கு முன்பு வரைக்கும் நம் யோகாலயத்தை வேவு பார்த்துக் கொண்டு இருந்தான். நாலைந்து நாளாகத் தான் அவனைப் பார்க்க முடியவில்லை.”

 

பாண்டியனும் பிரம்மானந்தாவும் திகைத்தார்கள். பல ஆட்கள் சேர்ந்து கண்காணித்து, வெளியே பல அதிநுட்ப காமிராக்கள் மூலம் பார்த்து கண்ணனுக்குத் தெரிய வந்திருக்கும் ஒரு சத்தியத்தை, எந்த அதிக சிரமமும் இல்லாமல், காட்சியாகவே பார்த்துச் சொன்ன ஷ்ரவன் அவர்களைப் பிரமிக்க வைத்தான். அவனுக்குக் கிடைத்திருக்கும் அந்த அபூர்வ சக்தி அவர்களுக்கு அற்புதமாகத் தோன்றியது.

 

அப்படிப்பட்ட அபூர்வ சக்தி உள்ளவன் தன் பக்தனாக இருப்பது பிரம்மானந்தாவுக்குப் பெருமையாக இருந்தது. அதே நேரத்தில் அவர் மனதின் ஓரத்தில் கொஞ்சம் பொறாமையும் எழுந்தது. ஏதேதோ கற்பனைக் கதைகளைச் சொல்லி, இல்லாத அபூர்வ சக்திகள் பலதும் தன்னிடம் இருப்பதாக அடுத்தவர்களை நம்ப வைக்க அவர் பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கையில், ஷ்ரவனுக்கு எந்த முயற்சியும் இல்லாமல் இப்படி ஒரு அபூர்வ சக்தி இயல்பாகவே கிடைத்திருப்பது அவரைப் பொறாமைப்படவும் வைத்தது.  நல்ல வேளையாக அவனுடைய சக்தியின் பெருமை அவனுக்குத் தெரியாமல் அவனை விட அவரை உயர்வாகவும், யோகியாகவும் நினைத்து அவருடைய பக்தனாக மாறியிருப்பது அவருக்கு அற்ப திருப்தியையும் தந்தது.

 

ஆனால் இது போன்ற மனச்சிக்கல்கள் இல்லாத பாண்டியன், ஷ்ரவனின் இந்தச் சக்தியைப் பயன்படுத்திக் கொண்டு எதிரியைக் கண்டுபிடித்து அழிப்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தார். கண்ணன் அவர்களுடைய காமிராக்களிலும், அலைபேசிகளிலும் எடுத்து வைத்திருந்த புகைப்படங்களில், ஷ்ரவன் சொன்ன ஆளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வந்து பாண்டியனிடமும், பிரம்மானந்தாவிடமும் காட்டினார்.

 

தொலைவிலிருந்தும், ஓரளவு அருகிலிருந்தும் பல கோணங்களில் எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படங்களைப் பார்த்து இருவரும் ஆச்சரியப்பட்டார்கள். ‘ஷ்ரவன் எத்தனை துல்லியமாக அந்த ஆளை வர்ணித்திருக்கிறான்.’

 

பிரம்மானந்தா பாண்டியனிடம் சொன்னார். “யோசிச்சுப் பார்த்தா ஷ்ரவன் சொல்றது எல்லாமே பொருந்தி வருது பாண்டியன். எதிரியை ஷ்ரவன் கண்டுபிடிச்சு வர்ணிச்சது மட்டுமில்லாம, எதிரி யோகாலயத்துக்கு உள்ளே வராமல் வெளியவே நிக்கறான்னு சொன்னதும் சரியாயிருக்கு. தேவானந்தகிரி வந்து பூஜைகள் செஞ்சுட்டு போயிருக்கார். அதனால அந்த ஏவல் சக்திய உள்ளேயிருந்து வெளியே துரத்த முடியாட்டியும், வெளியே இருந்து உள்ளே வர அந்த இளைஞனை விடமாட்டேங்குது போல இருக்கு. கண்ணன் சொல்றத பார்த்தா, கிட்டத்தட்ட ஷ்ரவன் இங்கே வந்து சேர்றதுக்கு முன்னால வரைக்கும், அந்த எதிரி தானே நேர்ல இங்கே வந்து கண்காணிச்சுகிட்டு இருந்திருக்கான்னு தெரியுது. ஷ்ரவன் இங்கே வந்து சேர்ந்த பிறகு ஏதோ ஒரு காரணத்தினால அவன் தலைமறைவாயிருக்கான்...”

 

பாண்டியன் சொன்னார். “இதுல புரியாததும் நிறைய இருக்கு யோகிஜி. அந்த எதிரி நமக்கு முன்னே பின்னே தெரிஞ்சவனாகவும் இல்லை. அப்புறம் ஏன் அவன் நமக்கு எதிராய் செயல்படறான்? அவன் பின்னணியில யார் இருக்கா? சைத்ராவோட தாத்தாவா, இல்லை வேற யாராவதா? இந்த செய்வினையைச் செஞ்ச ஆள் யார்? இதையெல்லாம் நாம ஷ்ரவனை வெச்சே தெரிஞ்சுக்கலாம்னு நான் நினைக்கறேன். ஆனால் அவனுக்கும் அவன் கிட்ட இருக்கற சக்தியை முழுசாய் பயன்படுத்திக்கற வித்தை தெரியலைன்னு தோணுது. அதற்கு தேவானந்தகிரி கிட்டே பேசினா நமக்கு சரியான ஆலோசனை கிடைக்கும்னு தோனுது.”

 

சென்ற முறை தேவானந்தகிரிக்குப் போன் செய்த போது அவருடைய உதவியாளன் அவர் எதோ பூஜையிலிருப்பதாகச் சொல்லி, காத்திருக்கச் சொன்னது நினைவுக்கு வந்ததால் பிரம்மானந்தா போன் செய்து பேச, சிறிது தயக்கம் காட்டினார். அவருக்கு இது போன்ற அலட்சியங்கள் தாங்க முடியாதவை. ஆனால் வேலையாக வேண்டியிருந்தால் யார் காலையும் பிடிக்கவும் தயாராக இருந்த பாண்டியன், அவர் பேசக் காத்திருக்காமல் தானே தேவானந்தகிரிக்குப் போன் செய்தார். முன்பே அவருடன் சில முறை பேசி இருந்ததால் நட்புடன் பேசும் அளவுக்கு அவருடன் பாண்டியன் பழக்கமாகி இருந்தார்.

 

நல்ல வேளையாக தேவானந்தகிரியே கைபேசியை எடுத்தார். அவரிடம் எதிரி குறித்து ஷ்ரவன் சொன்ன தகவல்களை எல்லாம் விவரித்துச் சொன்ன பாண்டியன் தொடர்ந்து சொன்னார். “நீங்க பூஜை செய்துட்டு போனதால அந்த எதிரியால் மறைவாகவோ, ரகசியமாகவோ உள்ளே வர முடியலைன்னு நினைக்கிறோம். வர முடிஞ்சிருந்தால் மாறுவேஷத்திலேயாவது எப்படியாவது அவன் உள்ளே வந்திருப்பான்.”

 

உண்மையில் எதிரி உள்ளே வர முடியாதபடி தேவானந்தகிரி எந்த ரட்சையும் யோகாலயத்தில் செய்யவில்லை. அப்படிச் செய்வதானால் சில தகடுகளை மந்திரித்து வெளி கேட் அருகேயும், மற்ற மூன்று திசைகளிலும் புதைத்து வைத்திருக்க வேண்டும். அதனால் எதிரி உள்ளே வராமலிருந்ததில் அவர் பங்கு எதுவுமில்லை. ஆனால் அவர் செய்யாத வேலைக்கும் கிடைக்கும் பெருமையை தேவானந்தகிரியால் மறுத்து உண்மையைச் சொல்லவில்லை.

 

பாண்டியன் கேட்டார். “எதிரியைப் பற்றிக் கூடுதல் விவரங்களை ஷ்ரவன் மூலமாகவே நாங்கள் தெரிஞ்சுக்க முயற்சி செய்யலாம்னு இருக்கோம். அதற்கு நீங்க ஏதாவது ஆலோசனை சொல்ல முடியுமா?”

 

தேவானந்தகிரி ஆலோசனை சொன்னார்.


(தொடரும்)

என்.கணேசன்




Sunday, October 19, 2025

யோகி 125

 

ல்பனானந்தாபார்த்திருக்கிறேன்என்று சொன்னது ஷ்ரவனுக்குப் பரபரப்பை ஏற்படுத்தியது. அவன் செடிகளைப் பார்த்தபடியே கேட்டான். “ஆவி சொன்னது போல அந்தப் பெண் துறவியும் பார்த்திருப்பதும் உண்மையா?”

 

ஆமாம். ஆனால் நான் இதற்கு மேல் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லப் போவதில்லை ஷ்ரவன். நீங்கள் எந்த உத்தேசத்தில் இங்கே வந்திருக்கிறீர்கள், உங்கள் பின்னணி என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் மிக ஆபத்தான வேலையில் இறங்கியிருக்கிறீர்கள் என்று உங்கள் மீதுள்ள அக்கறையால் எச்சரிக்கிறேன். கவனமாக இருங்கள்.” என்று கல்பனானந்தா அந்தச் செடிகளைப் பிடித்துக் காட்டியபடியே அவனிடம் சொன்னாள்.

 

ஷ்ரவனானந்தா என்றழைக்காமல் ஷ்ரவன் என்று அவள் அழைத்தது அவனை ஆச்சரியப்படுத்தவில்லை. அவன் கேட்டான். “உங்கள் எச்சரிக்கைக்கு நன்றி சுவாமினி. அந்த நிஜ யோகியை எங்கே எப்படி சந்தித்தீர்கள் என்பதை மட்டும் சொல்லுங்கள் போதும். அதற்கு மேல் நான் உங்களை எந்தக் கேள்வியும் கேட்டுத் தொந்தரவு செய்ய மாட்டேன்.”

 

எதற்காகக் கேட்கிறீர்கள்?”

 

அந்த நிஜ யோகியைச் சந்தித்து பயன்பெற வேண்டும் என்ற பேராவல் எனக்கு இருக்கிறது சுவாமினி. அதனால் தான் கேட்கிறேன்.”

 

அந்த நிஜ யோகியைச் சந்திப்பவர்கள் எல்லாம், அந்த சந்திப்பால் பயன் பெற்றுவிடுவதில்லை ஷ்ரவன்.”

 

நீங்கள் உங்கள் யோகிஜியின் அனுபவத்தை வைத்துச் சொல்கிறீர்களா சுவாமினி?”

 

கல்பனானந்தா அதிர்ந்தாள். பிரம்மானந்தா நிஜ யோகியைச் சந்தித்தது யோகாலயம் ஆரம்பிப்பதற்கும் முன்னால். அந்தப் பழைய நிகழ்வு கூட  இவனுக்கு எப்படித் தெரிய வந்தது என்று அவனை சந்தேகத்துடன் அவள் பார்த்தாள். இவன் நிறைய தகவல்களைத் தெரிந்து கொண்டு வந்திருக்கிறான் என்பது புரிந்தது.  ஆனால் அவள் ஒன்றும் சொல்லவில்லை.

 

அவன் சொன்னான். “எதையும் எந்த நோக்கத்தோடு அணுகுகிறோம் என்பதை வைத்து தான், எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பது நிர்ணயமாகிறது சுவாமினி.”  

 

உண்மை என்று தலையசைத்த அவள் வறண்ட குரலில் சொன்னாள். “நாங்கள் அவரை எங்கே சந்தித்தோம் என்பது தெரிந்து கொள்வது உங்களுக்கு எந்த விதத்திலும் பயன்படப் போவதில்லை ஷ்ரவன். நாடோடி வாழ்க்கை வாழும் அவர் எங்கேயும் நீண்ட காலம் இருப்பவர் அல்ல. இனி தயவு செய்து எந்தக் கேள்வியும் என்னைக் கேட்காதீர்கள். அது எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் கூட ஆபத்தானது. ஏனென்றால் நாம் இருவரும் சேர்ந்து பேசுவது கூர்மையாகக் கண்காணிக்கப்படுகிறது என்பதை நீங்களே  கவனித்திருப்பீர்கள்.”

 

அவள் போய் விட்டாள். ’நாங்கள் அவரை எங்கே சந்தித்தோம்என்று பன்மையில் கல்பனானந்தா சொன்னதால், அந்த நிஜ யோகியை சைத்ராவும், அவளும் சேர்ந்தே சந்தித்திருப்பது ஷ்ரவனுக்கு உறுதியாகியது. சந்தித்த தகவல்களை  கல்பனானந்தா தெரிவித்தால் அவனுடைய வேலை சற்று எளிதாகலாம். ஆனால் அவள் இதுவரை சொன்னதையே அதிகபட்சமாக நினைக்கிறாள். அதற்கு மேல் சொல்வது ஆபத்து என்றும் நம்புகிறாள். எனவே அவளிடம் இனி எதுவும் அவன் கேட்பதும், அவளை ஆபத்திற்கு உள்ளாக்குவதும் சரியல்ல. இனி அவனுக்குத் தேவையானதை, அவனே கண்டுபிடிக்க வேண்டும்!

 

அன்று மாலையே சித்தானந்தாவை டாக்டர் அறைக்கு அனுப்பி விட்டார். காய்ச்சல் குணமாகி விட்டதால் ஓய்வெடுத்துக் கொண்டால் போதும் என்று சொல்லி விட்டார். சித்தானந்தா அறைக்கு வந்து விட்டதால் ஷ்ரவனும், முக்தானந்தாவும் மனம் விட்டுப் பேசிக் கொள்ள முடியவில்லை.

 

மாலை சத்சங்கம் செல்வதற்குப் பதிலாக யோகிஜியைச் சந்திக்கப் போவதாக ஷ்ரவன் சொன்ன போது சித்தானந்தா லாட்டரியில் கோடி ரூபாய் பரிசு கிடைத்திருக்கிறது என்று அவன் சொன்னதைப் போல அவனைப் பார்த்தார்.  முக்தானந்தா கவலையுடன் அவனைப் பார்த்தார்.

 

சத்சங்கத்திற்காக மணி அடித்த போது ஷ்ரவன் மந்திர ஜபம் செய்து பிரார்த்தித்து விட்டுக் கிளம்பினான். அவன் சென்ற போது பிரம்மானந்தாவுடன் பாண்டியனும் இருந்தார்.  ஷ்ரவன் அவரைப் பார்த்ததும் பெரும் பரவசம் அடைந்தவன் போல் காட்டிக் கொண்டு, பயபக்தியுடன் சாஷ்டாங்கமாக விழுந்து அவரை வணங்கினான். அவர் கையுயர்த்தி ஆசிர்வாதம் செய்தார்.

 

ஷ்ரவன் எழுந்து நாக்கு தழுதழுக்கச் சொன்னான். “உங்களை நேரில் சந்திக்க முடிந்ததன் மூலம், நான் ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டதாகவே நினைக்கிறேன் யோகிஜி. இனி இறந்தாலும் அது எனக்கு ஒரு பொருட்டே அல்ல.”

 

பிரம்மானந்தா புன்னகைத்தபடி அவருக்கு எதிரே இருந்த இருக்கையில் அமரும்படி சைகை செய்தார். ஷ்ரவன் பணிவுடன் கைகூப்பி பாண்டியனையும் வணங்கி விட்டு, கூப்பிய கைகளைப் பிரிக்காமல் அந்த இருக்கையின் விளிம்பில் உட்கார்ந்தான்.

 

ஷ்ரவனானந்தா, உனக்கு யோகாலயத்தில் தெரிந்த விசேஷக் காட்சிகளை  பாண்டியன் என்னிடம் சொன்னார்.” என்று உடனடியாக பிரம்மானந்தா விஷயத்துக்கு வந்தார். 

 

ஷ்ரவன் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டான். “இறைவனுடைய தரிசனமும், உங்களுடைய தரிசனமும் கிடைக்க தவமிருக்கும் எனக்கு இப்படி ஆவிகள், ஏவல் சக்திகள் எல்லாம் காட்சி தருவது வேதனையாக இருக்கிறது யோகிஜி. இதனால் நான் சபிக்கப்பட்டவனாகவே உணர்கிறேன்.” என்று வருத்தம் காட்டிச் சொன்னான்.

 

பிரம்மானந்தா சொன்னார்.  ஒரு போலீஸ்காரன் திருடர்களே என் கண்ணில் தென்படுகிறார்கள் என்று வருத்தப்படுவது போல் இருக்கிறது உன் பேச்சு. அப்படித் தெரிவது போலீஸ்காரனின் பாக்கியம். அப்படித் தெரிந்தால் தான் அவர்களைப் பிடிக்க முடியும் ஷ்ரவனானந்தா. எந்த ஒரு விசேஷ சக்தியும் யாருக்கும், கடவுளால் காரணமில்லாமல் தரப்படுவதில்லை. உனக்கும் காரணத்தோடு தான் அந்த விசேஷ சக்தி தரப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள். அதனால் நீ அதற்கு வருத்தப்படாமல் சந்தோஷப்பட வேண்டும்.”

 

ஷ்ரவன் பயபக்தியுடன் சொன்னான். “யோகாலயத்திலேயே அப்படிப் பார்க்க நேரிட்டவுடன் அது விசேஷசக்தியா, இல்லை பிரமையா என்று எனக்கு சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது யோகிஜி. நீங்கள் இருக்கும் இடத்தில் துஷ்ட சக்திகள் எப்படி உலாவ முடியும்?”

 

பிரம்மானந்தா கேட்டார். “நியாயமாகப் பார்த்தால் இறைவன் இருக்கும் இடத்தில் சைத்தானும், துஷ்டர்களும் இருக்க முடியாது. ஆனாலும் அப்படி இருப்பதை நாம் பார்க்கிறோமே ஷ்ரவனானந்தா. அது இறைவனின் சக்தியைக் குறைத்துக் காட்டுவதாகி விடாது. நல்லதும் கெட்டதும் கலந்தே பரவியிருக்கும்படி இறைவன் படைத்திருப்பதே அப்படி இருப்பதற்குக் காரணம். அதனால் நான் இருக்கும் இடத்தில் என் எதிரிகளும், துஷ்டர்களும் கூட இருக்கலாம். அந்த இயற்கை விதிக்கு முரணாக என் விஷயத்தில் அமைய வேண்டும் என்று நான் எப்போதுமே சுந்தரமகாலிங்கத்தை வேண்டிக் கொண்டு அவரைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியதில்லை.”

 

இது போன்ற விளக்கங்களை அவர் தந்தால், அவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களிடம் அவர் பிரமிப்பை எதிர்பார்ப்பது வழக்கம். அதனால் ஷ்ரவன் அதைத் தன் முகத்தில் உச்சத்தில் காட்டினான். பின் கண்களைப் பரவசத்துடன் மூடிக் கொண்டு அவன் தலைவணங்கினான்.   பிரம்மானந்தா திருப்தியடைந்தார். பாண்டியன் உணர்ச்சி எதுவும் காட்டாமல் அமர்ந்திருந்தார். அவருக்கு அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் சதி வலையைப் பற்றி அவன் எதாவது புதிய தகவலைத் தெரிவித்தால் தேவலை என்றிருந்தது.

 

பொதுவாக இது போன்ற சந்தர்ப்பங்களில் பிரம்மானந்தாவுக்குத் தன் புகழை மற்றவர் வாயால் கேட்டுக் கொண்டிருக்க மிகவும் பிடிக்கும். ஆனால் பாண்டியன் மனநிலையைப் படிக்க முடிந்ததால் அவர் தனக்குப் பிடித்ததைத் தியாகம் செய்து ஷ்ரவனிடம் சொன்னார். “அதனால் நீ உனக்குத் தெரியும் காட்சிகளை தவிர்க்க நினைக்க வேண்டாம். அந்த சக்தியை கௌரவப்படுத்தி நீ வரவேற்க ஆரம்பிக்க வேண்டும். யோகாலயத்தில் உனக்குத் தெரிவதை எந்த விதமானத் தயக்கமும் இல்லாமல் நீ எங்களிடம் சொல்ல வேண்டும். பாண்டியனிடம் சொல்வது நீ என்னிடம் நேரடியாகச் சொல்வது போலத் தான்...”

 

கடவுளே சொல்லும் கட்டளை போல் அவர் சொல்வதைப் பயபக்தி காட்டி, கேட்டுக் கொண்டு ஷ்ரவன் தலையசைத்தான்.

 

இனி எதாவது சொல்ல வேண்டுமா என்பது போல் பிரம்மானந்தா பாண்டியனைப் பார்த்தார். அதற்கு மேல் அவரைப் பேச விட்டால் இடையில் அவருடைய சுயபுராணம் ஆரம்பித்து விடும் ஆபத்து இருப்பதை உணர்ந்த பாண்டியன், தானே ஷ்ரவனிடம் நேரடியாகக் கேட்டார். “என்னுடைய வாசலில் ஓநாயைப் பார்த்ததற்குப் பிறகு உங்களுக்கு வேறு ஏதாவது காட்சி தெரிந்திருக்கிறதா?”

 

ஷ்ரவன் தயக்கத்துடன் அவரைப் பார்த்தான். பாண்டியன் சொன்னார். ”எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள்.”


 (தொடரும்)

என்.கணேசன்

(தீபாவளி நல்வாழ்த்துக்கள்)