என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, August 27, 2026

சதுரங்கம் 33


 

ர்ஜுன் தன்னை சித்தப்பா இவ்வளவு சீக்கிரம் பேச அழைப்பார் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. பத்திரிக்கைத் துறையில் அவன் இருப்பதால் அவர் எவ்வளவுபிசியானவர் என்பதை அறிவான். பல அரசியல் தலைவர்களும், அறிஞர்களும், மற்ற பிரபலங்களும் அவரைச் சந்தித்துப் பேச மாதக்கணக்கில் காத்திருக்கிறார்கள் என்பதை அடிக்கடி கேள்விப்படுகிறான். அதனால் தனக்கு இந்த அளவு சித்தப்பா முக்கியத்துவம் தந்து பேச அழைத்திருப்பது அவர் அவன் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்துவதாக அவனுக்குத் தோன்றியது. அவன் இதுவரை அவரை வீட்டில் மட்டுமே சந்தித்துப் பேசி இருக்கிறான். ஆனால் அவர் இம்முறை மகாபலிபுரத்திற்கு அருகில் உள்ள அவருடைய பங்களாவிற்கு அழைத்திருக்கிறார். பல முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகள் அந்தப் பங்களாவில் நடந்திருப்பதை அவன் கேள்விப்பட்டு இருக்கிறான். வரலாற்று திருப்புமுனைகளைத் தந்திருக்கும் அந்த இடத்தில் அவனுடன் பேச அவர் அழைத்திருப்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.  

 

அந்தப் பங்களாவிலும் பலத்த போலீஸ் காவல் இருந்தது. அவன் அவர் சொல்லியிருந்த நேரத்தில் அங்கு சென்று சேர்ந்த போது அவர் இன்னமும் வந்து சேர்ந்திருக்கவில்லை. மிகுந்த மரியாதையுடன் அங்கிருந்த அவனை வரவேற்று அமர வைத்த ஒரு போலீஸ் அதிகாரி, அவர் பத்து நிமிடங்களில் வந்து விடுவாரென்றும், அது வரை காத்திருக்கும்படியும் சொல்லி விட்டுப் போனார். அவன் அங்கு செல்வது முதல் முறை என்பதால், அவன் சும்மா அமர்ந்திருக்காமல், அந்தப் பங்களாவைச் சுற்றிப் பார்த்தான். பரப்பளவில் சிறியதாக இருந்தாலும், வீடு ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலைப் போல் மிக அழகாகவும் ஆடம்பரமாகவும்  இருந்தது. பகட்டான மின் விளக்குகளும், சோபாக்களும், அலங்காரப் பொருள்களும் கண்களைக் கவர்ந்தனஹாலில் இருந்த பெரிய திரையை விலக்கிய போது கண்ணாடிக் கதவுகளைத் தாண்டி சற்று தொலைவில் கடல் தெரிந்தது. நித்யாவை ஒரு முறை இங்கு அழைத்து வந்து காண்பிக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. சலிக்காமல் கடலைப் பார்த்து ரசிக்கும் ரசிகை அவள்….   

 

சித்தப்பாவின் குரல் கேட்டது. “எப்படிடா இருக்கு வீடு?”

 

அர்ஜுன் திரும்பி அவரைப் பார்த்து புன்னகைத்தான். “சூப்பர் சித்தப்பா. ரொம்ப அழகாயிருக்கு.”

 

ராஜாராம் புன்னகைத்தார். அவனுடைய பாராட்டு அவருக்குத் திருப்தியைத் தந்தது. “வாடா. உட்கார். எதாவது சாப்பிடறயாடா. ரெண்டு கிலோமீட்டர் தள்ளி ஒரு நல்ல ஓட்டல் இருக்கு. எதாவது வரவழைக்கட்டா?”

 

வேண்டாம் சித்தப்பா.” என்றபடி அவன் அவர் அருகில் வந்தமர்ந்தான்.

 

அப்பறம் என்னடா? எதாவது விசேஷம் உண்டா?”

 

ஒன்னுமில்லை சித்தப்பா

 

அவன் அத்திவாக்கம் போய் வந்ததைப் பற்றி, தனியாகச் சந்திக்கும் இந்த சந்தர்ப்பத்திலாவது சொல்வான் அல்லது மகுடபதி பற்றி ஏதாவது கேட்பான் என்று ராஜாராம் எதிர்பார்த்திருந்தார். இருவர் மட்டுமிருப்பதால் அவன் தயக்கமில்லாமல் கேட்கும் சூழ்நிலை தான் இருக்கின்றது. அல்லது அவனுடைய காதல் பற்றியும் திருமணம் பற்றியும் கூட எதாவது சொல்லக்கூடும் என்று எதிர்பார்த்திருந்தார். எனவே அவன் ஒன்றுமில்லை என்று சொன்னது அவரை ஏமாற்றமடையச் செய்தது. அழுத்தக்காரன் என்று நினைத்துக் கொண்டாலும் அவர் முகத்திலிருந்த புன்னகை குறையவில்லை.

 

அவன் அவரைக் கேள்விக்குறியோடு பார்த்தான். எதற்காக என்னை அழைத்தீர்களோ அதைச் சொல்லுங்கள் என்பது போலிருந்தது அவன் பார்வை. இது அவருடைய அண்ணாவின் குணாதிசயம். தேவையில்லாமல் சுற்றி வளைத்துப் பேசுவதை விரும்பாதவர் அவர். அவருடைய சில விசேஷ குணங்கள் அவனுக்கும் அப்படியே வந்திருக்கின்றன.

 

ராஜாராம் மனதில் ஒரு பாரத்தை உணர்ந்தார். பின் மெல்ல பேச ஆரம்பித்தார். “உனக்கு என் மேல கோபம் இருக்குங்கறது எனக்குத் தெரியும் அர்ஜுன். அரசியல்ல நான் என் அண்ணாவை ஆதரிக்காமல், ஆளும் கட்சியை ஆதரிக்கிறது தப்புன்னு நீ நினைக்கிறாய்னும் தெரியும். எதனால நான் அதைச் செய்யறேன்னு உனக்கு நான் சொல்லணும்னா காரணத்தை நான் உன் தாத்தா கிட்ட இருந்து தான் ஆரம்பிக்கணும்….”

 

அவன் ஆர்வத்துடன் கவனமானான். அவர் தொடர்ந்தார். “இந்த உலகத்தில் நான் ரொம்ப நேசிச்ச மனுஷன், அதிகமாய் மதிச்ச மனுஷன் யாருன்னா அது என் அப்பா தான் அர்ஜுன். ஆனால் அவர் பிழைக்கத் தெரியாதவராகவே கடைசி வரைக்கும் இருந்துட்டார். ஆட்சிக்கு வர்றதே சம்பாதிக்கறதுக்காகங்கறது இந்தக் காலத்துல சின்னப் பசங்களுக்குக் கூட புரிஞ்ச உண்மை. ஆனால் உன் தாத்தா ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடியும் சம்பாதிக்கலை. ஆட்சிக்கு வந்த பின்னாடியும் சம்பாதிக்கலை. ஆனாலும் கூட, எந்த மக்களுக்காக அவர் எல்லாத் தியாகங்களையும் செஞ்சு வாழ்ந்தாரோ, அந்த மக்களுக்கு அவர் வாழ்ந்த வரைக்கும் அவரோட அருமை முழுசா தெரியலை. அவருக்கு சாகற காலத்தில் தான் முதல்வராகவே முடிஞ்சுது. மூன்றரை வருஷங்கள் தான் ஆட்சி செஞ்சார்.”

 

அர்ஜுன் சொன்னான். “ஆனாலும் தாத்தா மக்கள் மனசுல நீங்காத இடத்தைப் பிடிச்சிருக்கார் இல்லையா சித்தப்பா. இன்னைக்கும் மக்கள் அவரைப் புகழ்றாங்க.”

 

இப்ப அவரை ஆஹா ஓஹோன்னு புகழ்கிற மக்கள் அவரைப் புகழ்ந்த வாயாலேயே அவருக்கு கொஞ்சமும் இணையில்லாத தலைவர்களையும் புகழறாங்க. அதையும் நீ பார்க்கணும் அர்ஜுன். அந்தத் தலைவர்கள் அவரை மாதிரியே செத்துப் போனவர்கள்ங்கறதைத் தவிர வேறெந்த விதத்திலும் சரிசமமானவங்க அல்ல. தரம் தாழ்ந்தவங்களுக்கு இணையாய் உயரத்தில் இருக்கிறவங்களையும் புகழறது, தாழ்த்தறதுக்கு சமமல்லவா?”

 

அவர் சொன்ன இதே விஷயத்தை அர்ஜுனும் பல முறை நினைத்திருக்கிறான். இப்போது ஆளும்கட்சி சுவரொட்டிகளிலும், அறிவிப்புகளிலும், வாசுதேவனும், தணிகாச்சலமும் கண்ட கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கும் மாபெரும் தலைவர் சரவணன் என்ற வாசகம் அடிக்கடி வருகின்றது. வாசுதேவன் கண்ட கனவு தமிழக மக்களின் முன்னேற்றமும் சுபிட்சமுமாக இருந்தது, ஆனால் தணிகாச்சலத்தோட கனவோ கூடுமான அளவு சம்பாதிப்பதாகத் தான் இருந்தது. இருவரின்  கனவும் ஒன்றே என்று சொல்வதே வாசுதேவனைக் கீழே இறக்குவது போலத் தான். ஆனால் அந்த ஆளுங்கட்சிக்குத் தான் இப்போது ராஜாராம் ஆதரவு தந்து வருகிறார். அவர் ஆதரவு தருவது ஒருவகையில் ஆளுங்கட்சி விளம்பரத்தை அங்கீகரிப்பது போலத் தான் என்று எண்ணிய அர்ஜுனின் முகத்தில் புன்னகை அரும்பியது.

 

அதைக் கவனித்த அவருக்கு அவனுடைய புன்னகைக்குப் பின்னாலிருந்த எண்ண ஓட்டமும் புரியாமலில்லை. அவர் லேசாகச் சிரித்தபடி சொன்னார். “என் நிலைப்பாட்டை நான் கடைசில சொல்றேன். முழுசாய் கேட்டு முடியற வரைக்கும் தீர்ப்பு எழுதாதே.”

 

அர்ஜுனின் புன்னகை விரிந்தது. அவனுடைய எண்ணத்தை எவ்வளவு சீக்கிரம் அவர் படித்து விட்டார்

 

ராஜாராம் தொடர்ந்தார். “எங்கப்பா செஞ்ச முட்டாள்தனத்தை இப்ப எங்கண்ணா ஆரம்பிச்சிருக்கான். எங்கப்பாவாவது கடைசி காலத்துல தமிழ்நாட்டுக்கு முதலமைச்சரானார். அவரோட கடைசி காலத்திலாவது அதற்கு சாதகமான சூழல் வந்துச்சு. ஆனால் எங்கண்ணன் அதிகபட்சமா எப்பவாவது ஒரு எம்.எல்.ஏ ஆகலாம். அதுக்கும் மேல முன்னேறப் போறதில்லை அர்ஜுன். ஏன்னா இப்போதைய அரசியல் சூழலும் சரியில்லை, மக்களும் முட்டாள்கள்.”

 

கிட்டத்தட்ட அர்ஜுனின் அபிப்பிராயமும் அதுவாகத் தான் இருந்தது. ஆனால் அதை சித்தப்பா வாயால் கேட்கும் போது அவனுக்கு வலித்தது. அதை உணர்ந்த அவர் அவனிடம் மென்மையாகச் சொன்னார். “கண்டிப்பாய் வெற்றியடையப் போறதில்லைன்னும், இந்த அரசியல் களத்துல கஷ்டப்படத் தான் போறான்னும் எனக்கு உறுதியாய் தெரிஞ்ச பிறகு நான் ஏன் அண்ணாவை ஆதரிக்கணும் அர்ஜுன்? மக்கள் நல்லதுக்கும் கெட்டதுக்கும் வித்தியாசம் தெரியாதவங்க. தந்திரமான பேச்சால் அவங்களை யாரும் எப்பவும் சுலபமாய் ஏமாற்றவோ, திசை திருப்பவோ முடியும். நல்லதையும், கெட்டதையும் சீக்கிரமே மறந்துடற வியாதியும் அவங்களுக்கு இருக்கு. இந்த மாதிரி மக்களுக்காக, என் அண்ணன் தன் வாழ்க்கையை அர்ப்பணிச்சுகிட்டு அழியறதை என்னால பார்க்க முடியலை அர்ஜுன். அதனால தான் நான் அரசியல்ல எங்கண்ணாவை ஆதரிக்கலை.”


(தொடரும்)

என்.கணேசன்

Monday, August 24, 2026

ரட்சகன் 6

 


பேரத்திற்குப் படியாததால் யுவராஜைத் தீர்த்துக் கட்ட நிர்மலாவும், நிரஞ்சனும் ராஜேஷ்வரைக் கட்டாயப்படுத்தினார்கள்.  அவர் இதற்கு முன்பு துரோகத்திற்கு அந்தத் தண்டனையைத் தந்திருக்கிறார். ஆனால் துரோகத்திற்குத் தரும் தண்டனையைக் காதலுக்குத் தர அவர் மனம் சம்மதிக்கவில்லை. தந்திரமாகச் சொன்னதாகவே இருந்தாலும்உங்க மகள் மதிப்புக்கு இணையாய் நீங்க இன்னும் சம்பாதிச்சுடலை சார்.” என்று சொல்ல முடிந்தவனைக் கொல்ல அவருக்கு மனம் வரவில்லை மேலும் மகள் தீவிரமாகக் காதலிக்கும் ஒருவனைக் கொன்று அவளை நேராகப் பார்க்க முடியும் என்று அவருக்குத் தோன்றவில்லை..

 

யுவராஜைத் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் சொத்தில் ஒரு ரூபாய் கூடக் கிடைக்காது என்று ராஜேஷ்வர் மகளிடம் திட்டவட்டமாகச் சொன்ன போது ஒரு கணம் கூடத் தாமதிக்காமல் அவள் அதற்குச் சம்மதித்தாள். இதில் எங்கள் சம்மதமில்லை என்பதால் நாங்கள் திருமணம் செய்து வைக்க முடியாது என்று அவர் சொன்னார். அதற்கும் அவள் சம்மதித்தாள். நிர்மலா, நிரஞ்சன் இருவருடைய கடும் எதிர்ப்பையும் மீறி அவர் மகளை வீட்டை விட்டுச் செல்ல அனுமதித்தார். அவர்களிடம் அவர் சொன்னார். “அவன் தனக்குப் பொருத்தமில்லாதவன் என்று அவளுக்குப் புரிய வந்தால் கண்டிப்பாக அவள் அதைச் சகித்துக் கொண்டு அவனுடன் இருக்க மாட்டாள். ஒரு வேளை அவன் பொருத்தமானவனாகவே இருந்தால் நாம் மறுப்பது சரியல்ல.”

 

நாடே நிர்ப்பயாவின் காதல் திருமணத்தைப் பற்றிப் பேசியது. அதை நிர்மலாவும், நிரஞ்சனும் அவமானமாக நினைத்தார்கள். இரண்டு மாதங்கள் நிர்மலா வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. தோழிகள், உறவினர்கள் யாருடனும் அவள் அலைபேசியில் கூடப் பேசவில்லை. கணவரிடமும் ஒரு மாதம் அவள் பேசவில்லை. நிரஞ்சனும் அவர் மீது சிறிது காலம் கோபமாக இருந்தான். மெள்ள மெள்ள அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினார்கள். ராஜேஷ்வர் மகள் தவறை உணர்ந்து திரும்பி வருவாள் என்று காத்திருக்க ஆரம்பித்தார்.

 

நிர்ப்பயா குடியிருந்த வீட்டில் இருக்கும் வசதியை விட அதிகமாக ராஜேஷ்வரின் வீட்டு வேலைக்காரர்கள் வீடுகளில் வசதிகள் இருந்தன. அதை நிர்மலா அடிக்கடி சொல்லிக் காட்டி அங்கலாய்ப்பாள். ஆனால் தாய் சங்கடப்பட்டது போல் நிர்ப்பயா சங்கடப்பட்டதாகத் தெரியவில்லை. அவள் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தான் அவளைக் கண்காணித்தவர்கள் தெரிவித்தார்கள்.

 

ராஜேஷ்வர் நினைத்தது போல முதல் வருடம் நிர்ப்பயா திரும்பி வரவில்லை. அப்போதும் அவருக்கு யுவராஜ் மீது நம்பிக்கை வந்து விடவில்லை. அவர் எத்தனையோ பொறுமையான ஏமாற்றுக்காரர்களைப் பார்த்து இருக்கிறார். ஒரு குழந்தை பிறந்து அதன் மூலம் நிர்ப்பயா வாழ்வில் தன் இடத்தை வலிமைப்படுத்திக் கொண்டு யுவராஜ் பணம் பறிக்க முயற்சி செய்யக்கூடும் என்று அவர் எதிர்பார்த்தார். சில மாதங்களிலேயே நிர்ப்பயா கருத்தரித்தாள். பல குடும்பங்களில் சமரசம் ஏற்படக்கூடிய சமயம் அது என்றாலும், ராஜேஷ்வர் குடும்பம் அப்போதும் மகளைச் சேர்த்துக் கொள்ளவில்லை. அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மாதங்கள் உருண்டன. ஆனால் யுவராஜ் பக்கத்திலிருந்து பணம் சம்பந்தமான எந்த அழுத்தமும் வரவில்லை. வாரம் ஒரு முறை நிர்ப்பயா, யுவராஜ் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் ராஜேஷ்வருக்கு வந்து சேரும். ஒரு நாள் கூட மகள் முகத்திலோ, மருமகன் முகத்திலோ அவர் வருத்தத்தைப் பார்க்கவில்லை. இருவரும் மகிழ்ச்சியாகவே இருப்பது அவருக்குத் தெரிந்தது. குழந்தை பிறந்த பின் அவர்கள் இருவரின் முகத்தில் மகிழ்ச்சி கூடித்தான் இருந்தது.

 

நிர்ப்பயாவுக்குக் குழந்தை பிறந்தும் இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. ராஜேஷ்வருக்கு யுவராஜும் நிர்ப்பயாவைப் போல 0.01 சதவீதத்தில் சேர்ந்த மனிதன் என்பது உறுதிப்பட்டது. வீட்டில் அல்லாமல் அவன் வேலை பார்க்கும் இடம் மற்றும் சென்று வரும் மற்ற இடங்களில் எல்லாம் அவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதையும் அவர் தன் ஆட்கள் மூலம் கண்காணித்து வந்தார். உள்ளொன்று புறமொன்று இல்லாத அபூர்வமான நல்ல மனிதன் அவன் என்பது அவருக்குச் சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதியானது...

 

நிர்ப்பயாவின் மதிப்பை பெற்றோரை விட அதிகமாய் அவளுடைய கணவன் உணர்ந்தவனாக இருக்கிறான் என்று ராஜேஷ்வருக்குத் தோன்றியது. “உங்க மகள் மதிப்புக்கு இணையாய் நீங்க இன்னும் சம்பாதிச்சுடலை சார்.” என்று அவன் சொன்னது நினைவுக்கு வர அவர் மெல்லப் புன்னகைத்தார். நிர்ப்பயாவின் அருமையை அவள் கணவன் மட்டுமல்ல அந்தக் கட்டுரையை எழுதிய அந்தப் பெண் எழுத்தாளரும் உணர்ந்திருக்கிறார்.

 

என்னங்க தூங்கிட்டீங்களா?” நிர்மலாவின் குரல் ராஜேஷ்வரை நிகழ்காலத்திற்கு வரவழைத்தது.

 

கண்களைத் திறந்து மனைவியைப் பார்த்த அவர் சொன்னார். “இல்லை.”

 

நிர்மலா அவர் கையில் இருந்த உமன்ஸ் வர்ல்டு பத்திரிக்கையைப் பார்த்தாள். அவளுக்கும் அவளுடைய தோழிகள் இருவரும், அவளுடைய சித்தி ஒருத்தியும் அந்தப் பத்திரிக்கையில் வந்த கட்டுரையைப் பாராட்டிச் சொல்லியிருந்தார்கள். அவள் நேற்று தான் அந்தப் பத்திரிக்கையை வாங்கி அந்தக் கட்டுரையைப் படித்திருந்தாள்.

 

படிக்கவும், கேட்கவும் நன்றாய்த் தான் இருக்கிறது. ஆனால் வாழ்கின்ற வாழ்க்கை நன்றாக இல்லையே. அவள் இழந்திருக்கிறது எத்தனைங்கறது நமக்குத் தானே தெரியும்.” என்று சொன்ன அவளுடைய குரலில் வருத்தம் இருந்தது.   

 

அந்த எழுத்தாளர் கட்டுரை முழுவதிலும் வியந்திருந்த விஷயங்களைச் சிலாகிக்க நிர்மலாவால் முடியாமல் இருப்பது ராஜேஷ்வரை ஆச்சரியப்படுத்தியது. அவர் அவளுக்குப் புரிய வைக்க முயன்றார்.  அவளுக்கு வேண்டாததைத் தான் அவள் இழந்திருக்கிறாள். வேண்டியது அவளுக்கு கிடைத்திருக்கிறது. அவள் சந்தோஷமாய் இருக்கிறாள். இதற்கு மேல் அவளுக்கு என்ன வேண்டும் நிர்மலா?”

 

நிர்மலாவுக்கு அவர் சொன்னது புரியவில்லை. முகச்சுளிப்போடு அவரை அவள் பார்த்தாள்.

 

அவர் ஒரு உறையை எடுத்து அவளிடம் நீட்டினார். “அவள் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறாள் என்று நீயே பார்.”

 

நிர்மலா அந்த உறையை வாங்கிப் பிரித்துப் பார்த்தாள். நிர்ப்பயாவின் புகைப்படங்கள் நிறைய இருந்தன. இந்த மூன்றாண்டுகளில் எடுக்கப்பட்டவை அவை. எல்லாவற்றிலும் அவள் சந்தோஷமாய் தான் தெரிந்தாள். சிலவற்றில் தனியாக இருந்தாள். சிலவற்றில் கணவனோடும், சிலவற்றில் குழந்தையோடும், சிலவற்றில் கணவன் மற்றும் குழந்தையோடும் இருந்தாள். முகத்தில் நிறைவோடும், மகிழ்ச்சியோடும் புகைப்படங்களில் மகள் தெரிந்ததைப் பார்த்த பின்னும் அவள் வருத்தம் குறையவில்லை.

 

ராஜேஷ்வர் சொன்னார். “எத்தனையோ அவள் இழந்ததாய் நீ சொல்கிறாய். ஆனால் எதையும் இழக்காத உன்னை விட அவள் அதிக சந்தோஷமாய் தான் தெரிகிறாள். அதைக் கவனித்தாயா?”

 

அவர் சொன்னது அவளுடைய காதுகளில் விழுந்ததா என்று அவருக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அவர் சொன்னது அவளிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தி விடவில்லை. காதில் விழுந்திருந்தாலும் அந்த வார்த்தைகள் அவள் மூளை வரை எட்டவில்லை என்றே அவருக்குத் தோன்றியது. அதற்குள் அவளுடைய கவனம் பேரனின் புகைப்படங்களில் தங்க ஆரம்பித்தது. அவற்றை முதல் முறையாகத் தான் அவள் பார்க்கிறாள் என்பதால் அவள் ஆர்வமாக ஒவ்வொன்றாகக் கூர்ந்து பார்க்க ஆரம்பித்தாள்.

 

மகள் கருத்தரித்திருக்கிறாள் என்ற செய்தி கிடைத்த போது கூட நிர்மலாவின் கோபம் குறைந்திருக்கவில்லை. மகளுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்று அறிந்த போதும் கூட அந்தக் குழந்தையை யுவராஜின் குழந்தையாகத் தான் அவள் நினைத்தாள். அதனால் அந்தக் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று அவள் நினைத்ததில்லை. ராஜேஷ்வருக்கு மட்டும் பேரனைப் பார்க்க வேண்டும், குழந்தையைக் கையில் எடுத்துக் கொஞ்ச வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. ஆனால் அந்தப் பாசம் வேலை செய்யும் என்று கணக்குப் போட்டு யுவராஜ் காத்திருக்கக்கூடும் என்ற சிறு சந்தேகம் அவருக்கு இருந்து வந்ததால் அவர் பேரனைப் பார்க்கச் செல்லவில்லை.  

 

பேரனின் புகைப்படங்களை முதல் முறையாக ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்த நிர்மலாவிடம் ராஜேஷ்வர் கேட்டார். “என்ன பார்க்கிறாய்?”

 

குழந்தைக்கு நம்ம குடும்பத்து சாயல் என்னவெல்லாம் இருக்குன்னு பார்க்கிறேன்.”  இரண்டு நிமிடங்கள் கழித்து ஒரு புகைப்படத்தை அவரிடம் அவள் காட்டினாள். ”பக்கவாட்டில் பார்க்கிறப்போ நம்ம நிரஞ்சன் குழந்தையா இருந்தப்ப தெரிஞ்ச மாதிரியே தெரியறான் பாருங்க.”

 

அவள் காட்டிய புகைப்படம் அவள் சொன்னபடி தான் இருந்தது. குழந்தையிடம் தாய்மாமனின் சாயல் நிறைய இருந்தது. நிர்மலாவின் முகத்தில் இறுக்கம் குறைந்து மென்மை படர்வதை ராஜேஷ்வர் கவனித்தார். 

 

(தொடரும்)

என்.கணேசன்

Thursday, August 20, 2026

சதுரங்கம் 32


 

சோதா தன் மகன் ராஜாராமிடம் பேச வேண்டும் என்று காலையிலிருந்து காத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் ராஜாராமைச் சந்திக்க சிறிதும் இடைவெளியில்லாமல் பிரபலங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். அவள் பொறுமையிழந்தாள். என்ன பிழைப்பு இது? அவள் கணவர் உயிரோடிருந்த போது அவரைச் சந்திக்கவும் இப்படித் தான் ஆட்கள் வந்து கொண்டேயிருப்பார்கள். அவசரமாக அவரிடம் ஏதாவது பேச வேண்டும் என்றால் அது பெரும்பாலும் முடியாது.

 

அவளுடைய தம்பியுடன் பேசியதில் இருந்து அவளால் நிம்மதியாய் இருக்க முடியவில்லை. அத்திவாக்கம் கிராமத்திற்கு அர்ஜுன் போய் வந்திருப்பது வரப்போகிற பூகம்பத்தின் முன்னறிவிப்பாகத்தான் அவளுக்குத் தோன்றுகிறது. ஞானமூர்த்தியை அழைத்து எச்சரிக்கலாமா என்று கூட ஆரம்பத்தில் நினைத்து பின் அவள் மனதை மாற்றிக் கொண்டாள்.

 

ராஜாராமின் செக்ரட்டரியைக் கூப்பிட்டுக் கேட்டாள். “இந்தக் கூட்டம் எல்லாம் எத்தனை மணிக்கு முடியும்?”

 

சாயங்காலம் வரைக்கும் இன்னைக்கு இருக்கும்மா. ஆனா மதியம் 2 மணில 3 மணி வரைக்கும் சார் ஃப்ரீ தான்.”

 

இந்த மாதிரி தொடர்ச்சியா அப்பாயின்மெண்ட் தர்றது நீயா இல்லை அவனா?” யசோதா முகச்சுளிப்போடு கேட்டாள்.

 

செக்ரட்டரி தயக்கத்துடன் சொன்னார். “சார் தாம்மா.... வெளிநாட்டு ஆட்கள் இந்த ரெண்டு நாளா அதிகம்.... டெல்லில நடந்த ஒரு மாநாட்டுக்கு வந்தவங்க  சாரைப் பார்த்துப் பேசணும்னே இங்கே வந்திருக்காங்க... அதுல வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்களும் இருக்காங்க. சார் அவங்களை எல்லாம் சந்திக்க மறுக்கறதில்லை...”

 

என்னவோ போ. அவசரத்துக்கும் அவன் கிட்ட ஒரு வார்த்தை பேச முடியறதில்லை.” என்று யசோதா முகம் சுளித்தாள்.

 

மைதிலி குரல் உள்ளேயிருந்து வந்தது. “அதையே தான் உங்க மகன் கிட்ட அடிக்கடி சொல்றேன். சொல்றது அவர் காதுல எங்கே விழுது?”

 

மாமியாரும் மருமகளும் ஒத்துப் போகும் ஒரே விஷயம் இது தான். மற்றெல்லா விஷயங்களிலும் இருவரும் இருவேறு துருவங்கள்.

 

ஆனால் மைதிலி கூடுதலாக மனதில் நினைத்துக் கொண்டாள். ’கிழவி மகன் கிட்ட பேச அவசரப்படறதைப் பார்த்தால் ஏதோ பெரிய பிரச்சனை மாதிரி தான் தெரியுது. அம்மாவும், மகனும், அடிக்கடி ஏதோ ரகசியம் பேசிக்கறாங்க. ஆனால் நாம என்னன்னு கேட்டால் ஒன்னும் இல்லைம்பாங்க....’  

 

யசோதா ராஜாராமின் செக்ரட்டரியிடம் தாழ்ந்த குரலில் சொன்னாள். “சாப்பிடப் போகறதுக்கு முன்னாடி என் கிட்ட வந்து பேசிட்டு போக ராஜாராம் கிட்ட சொல்லு. சொல்லிவியா, இல்லை மறந்துடுவியா?”

 

கண்டிப்பாய் சொல்றேம்மாஎன்று சொல்லி விட்டு செக்ரட்டரி விரைந்தார். தாழ்ந்த குரலில் பேசினால், பதிலைத் தாழ்ந்த குரலிலேயே சொல்ல வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத அந்த செக்ரட்டரி மீது அவளுக்குக் கோபம் வந்தது. ஏற்கெனவே மைதிலிக்குப் பாம்புக்காது....

 

யசோதா தனதறைக்குச் சென்று மகன் வரவுக்காகப் பொறுமையிழந்து காத்திருந்தாள். நிமிடங்கள் யுகங்களாக நகர்ந்தன. ராஜாராம் மெல்ல வந்தார். ”என்னம்மா உடம்புக்கு எதாவது சரியில்லையா?”

 

யசோதா மகனிடம் அறைக்கதவைச் சாத்தும்படி சைகை செய்ய அவர் அறைக்கதவைச் சாத்தினார். “என்னம்மா?”

 

கேசவன் சொன்னதை அப்படியே யசோதா மகனிடம் தாழ்ந்த குரலில் சொன்னாள். கேட்ட பின் அவர் முகத்திலும் அதிர்ச்சி தெரிந்தது.     

 

யசோதா சொன்னாள்.  உண்மையாகவே அங்கே போனது அர்ஜுன் தானான்னு தெரியலை. ஆனால் மகுடபதியை இத்தனை வருஷம் கழிச்சு விசாரிச்சுகிட்டு போகக்கூடிய ஆள் எனக்குத் தெரிஞ்சு வேற யாரும் இல்லை. ”

 

ராஜாராம் வறண்ட  குரலில் சொன்னார். “அங்கே போனது அர்ஜுனாய் தான் இருக்கணும். ஏன் போனான்னு தெரியாட்டியும், அங்கே சொன்ன இன்சூரன்ஸ் கதைல அவனோட தொழில் முத்திரை தான் தெரியுது. ஆனால் அவன் அங்கே எதையும் தெரிஞ்சுக்க வாய்ப்பிருக்கலை. அதனால பயப்பட   எதுவுமில்லை.”

 

மகுடபதி பெயரைச் சொல்லி கூடுதலா தெரிஞ்சுக்க அவன் போன இடத்துல என் அம்மா வீடும் அங்கே தான்ங்கிறதை அவன் தெரிஞ்சு வெச்சிருப்பானேடா? வந்து கூடுதல் விவரத்தை என் கிட்ட கேட்டால்?”

 

எதைச் சொல்லணுமோ அதை மட்டும் சொல்லும்மா. நீ எல்லாத்தையும் சொல்லணும்னு இல்லையே.”

 

மகுடபதி ஏன் தற்கொலை செய்துகிட்டார்னு கேட்டால்?”

 

ராஜாராம் தாயை அர்த்தமுள்ள பார்வை பார்த்தார். “உனக்கு எப்படிம்மா தெரிஞ்சிருக்கும்? நீ சென்னைல இருக்கே. அவர் அத்திவாக்கத்துல இருக்கார். உன் அம்மா வீட்டுக்காரங்களுக்கும் ஒன்னும் தெரியல. எல்லாரும் வறுமை தான் காரணம்னு நினைச்சாங்கஅவ்வளவு தான்.”

 

மகன் சொன்னதைக் கேட்டு அவள் மனம் சற்று நிம்மதியடைந்தது. ஆனாலும் இன்னொரு சாத்தியக்கூறு அவளைப் பயமுறுத்தியது. “நான் சமாளிச்சுக்குவேன். ஆனால் பானுமதி சமாளிப்பாளா?”

 

ராஜாராம் தாயைக் கூர்ந்து பார்த்து சொன்னார். “அவன் அண்ணியைக் கேட்க மாட்டான்ம்மா. கேட்கறவனாயிருந்தா இன்னேரம் கேட்டிருப்பான். அண்ணியால சமாளிக்க முடியாமல் போயிருந்தால் இன்னேரம் நமக்குத் தெரிஞ்சிருக்கும்.”

 

எனக்கென்னவோ அவன் தேவையில்லாமல் பழசை எல்லாம் கிளறாமல், அவன் காதலிக்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு அவன் வாழ்க்கையை நல்லபடியாய் வாழ ஆரம்பிச்சுட்டா நல்லதுன்னு தோணுதுடா. நீ அவன் கிட்ட அந்த பொண்ணைப் பற்றிக் கேட்டுப் பாரேன். யாரு என்னன்னு தெரிஞ்சுதுன்னா ஞானமூர்த்தி கிட்டே நான் பேசறேன். சீக்கிரமா கல்யாண ஏற்பாட்டைச் செஞ்சா, தேவையில்லாத இந்தப் பழைய கதையை எல்லாம் கிளர்ற மனசோ நேரமோ அவனுக்கு இருக்காது.”

 

நாம அதைப் பற்றிக் கேட்டப்ப அவன் சொல்லலையேம்மா.  அண்ணா கிட்ட சொல்றதுக்கு முன்னாடி நம்ம கிட்ட சொல்றது எப்படின்னு அவன் தயங்கின மாதிரி தான் தோணுச்சு.”

 

யசோதா தளர்ச்சியுடன் கண்களை மூடிக் கொண்டாள். தாய் மனதில் என்ன எண்ண ஓட்டம் ஓடுகின்றது என்பதை ராஜாராம் அறிவார்.  மாற்ற முடியாத விஷயங்களை யோசித்துப் பயனில்லை. கடந்த காலத்தில் திருத்தங்கள் செய்ய நிகழ்காலத்தில் அனுமதியில்லை. இனி ஆக வேண்டியதில் மட்டுமே கவனம் இருப்பது புத்திசாலித்தனம்.

 

தாயை அவளுடைய எண்ண ஓட்டத்தில் இருக்க விட்டு விட்டு ராஜாராம் அமைதியாக வெளியேறினார்.   அவனிடம் தனியாகச் சில விஷயங்களை மனம் விட்டுப் பேசப் போவதாக அவன் சென்ற முறை வந்திருந்த போது அவர் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. சீக்கிரமே பேச வேண்டும். அவன் மனதில் அவர் மேல் இருக்கும் பழைய கோபத்தை முற்றிலுமாக போக்க வேண்டும். பேச வேண்டியதை இங்கு பேசுவது உசிதமல்ல.  அம்மா அடிக்கடி சொல்வது போல் மைதிலிக்குப் பாம்புக் காது. அவள் கேட்பது அவளோடு நிற்காது. மேலும், அவனை இங்கே வரவழைத்துப் பேசினால்  அம்மாவிடம் அவன் அத்திவாக்கம் பற்றியும் மகுடபதி தம்பதியரின் தற்கொலை பற்றியும் கூட எதாவது சடாரென்று கேட்டுவிடும் அபாயம் இருக்கிறது. அம்மா சமாளிப்பாள் என்றாலும் அது நாசுக்கான சமாளிப்பாக இருக்காது. அதனால் வேறொரு இடத்தில் தனியாக அவனை அழைத்துப் பேசுவது தான் நல்லது. அந்த சமயத்தில் அவனாக அந்த வில்லங்க விஷயங்கள் எதையாவது அவரிடம் கேட்க முற்படுகிறானா என்றும் பார்க்க வேண்டும்.  

 

 முடிவு செய்த ராஜாராம் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு முதல் வேலையாக அர்ஜுனுக்குப் போன் செய்தார்.                                                                                                                                                                                                                                                                                  

 (தொடரும்)

என்.கணேசன்