என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, July 23, 2026

சதுரங்கம் 28

 


விமல் சோனா ஓட்டலில் மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான், அவனுக்கு நாளை ஒரு போலி பெயர், முகவரியுடன் புதிய ஒரு அலைபேசி கிடைத்து விடும். ஆனால் அடுத்ததாக அவன் செய்யப் போகும் வேலை மிக ஆபத்தானது. பிரச்சினையில்லாமல் முடிந்தால் அவன் மீதமுள்ள வாழ்க்கையை அரசனைப் போல் வாழலாம். ஆனால் பிரச்சினை வந்தால் பின் மீதமுள்ள வாழ்க்கை என்பதே இருக்காது. அவன் ஒரு அனாதைப் பிணமாய் முடிந்து போகவும் வாய்ப்பு உண்டு. அறிவுபூர்வமாக யோசித்தால் அவன் அப்படி அனாதைப் பிணமாகும் வாய்ப்புகள் தான் அதிகம்.  ஆனாலும் அவன் ஏன் அந்த ஆபத்தான வேலையில் இறங்குகிறான் என்றால் பணம், வசதிகள், மது, அசைவ சாப்பாடு, அழகான பெண்கள் சகவாசம் எல்லாம் இல்லாமல் வாழ்வது அனாதைப் பிணமாக முடிவதை விடக் கொடுமையானது. நர்மதா இறந்தவுடன் உயிருக்கு மேல் எதுவும் இல்லை என்று ஓடி வந்தவன் தான் அவன். ஆனால் ஒளிந்து, பதுங்கி இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வது நரக வாழ்க்கை என்பது சில நாட்களிலேயே அவனுக்கு விளங்கி விட்டது.

 

அவனுடைய திட்டத்தை நிறைவேற்ற அவனுக்கு குறைந்தபட்சம் இன்னொரு ஆளின் உதவியாவது வேண்டும். முழு நம்பிக்கைக்குரிய தைரியமான  இரண்டு மூன்று ஆட்கள் அவனுக்கு உதவிக்கு இருந்தால் மேலும் நல்லது. அவனுக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. ஆனால் குடும்பத்தில் யாரும் தங்களுக்கு ஆபத்தை வரவழைத்துக் கொண்டு அவனுக்கு உதவ முன்வர மாட்டார்கள். சினிமாவில் ஒன்றிரண்டு வேடங்கள் கிடைத்த பின் அவன் தமிழ்நாட்டின் அடுத்த ரஜனிகாந்த் ஆகவும், விஜய் ஆகவும் வருவது உறுதி என்ற நம்பிக்கையில் அவர்களை எல்லாம் அலட்சியப்படுத்தி இருந்தான். அத்தனை உச்சத்திற்குச் செல்லா விட்டாலும் தொடர்ந்து திரை வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலாவது பரவாயில்லை. அதுவுமில்லாமல் போய், சின்னத் திரை தொடர்களில் நடித்து தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிற நிலைமையில் இருக்கிற அவனுக்கு நண்பர்கள் சிலர் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஜாலியாக பொழுது போக்குவதில் அவனுடன் சேர்ந்து கொள்பவர்களே தவிர, ஆபத்து, பிரச்சினை என்றால் அடுத்த கணம் அங்கிருந்து மின்னல் வேகத்தில் காணாமல் போகிறவர்கள். அவர்களைச் சொல்லித் தப்பில்லை. அவனே அப்படித்தான். அதனால் அவனுடைய நட்புகள் வேறுவிதமாக இருக்க வாய்ப்பில்லை. புதியவர்களையோ அவன் இதில் நம்பி சேர்த்துக் கொள்ள முடியாது.  என்ன செய்வதென்று அவன் யோசித்துக் கொண்டிருக்கிறான். ஒரு தெளிவும் கிடைக்கவில்லை.

 

அவனுக்கு இப்போது தேவை தைரியமான ஆள். ஆபத்தைக் கண்டு பின் வாங்காத ஆள். அந்த ஆள் நாணயஸ்தனாகவும் இருக்க வேண்டும். விமல் அவனுக்கு வரும் பணத்தின் ஒரு பகுதியை அந்த ஆளுக்குத் தரத் தயார். ஆனால் அந்த ஆள் விமலைக் காட்டிக் கொடுத்து அதே அளவு பணத்தைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். அப்படி பணம் சம்பாதிக்க நினைக்காத ஒரு அடிப்படை நேர்மையாவது அந்த ஆளுக்கு இருக்கவேண்டும். அது போன்ற ஒரு ஆளை எங்கே தேடிக் கண்டுபிடிப்பது? எதிரியுடன் பேரம் பேசி விட்டு பிறகு யோசித்துக் கொள்ளலாம்...  

 

முடிவு எடுத்த பின் விமல் நிம்மதியாகத் தூங்கினான்.

 

த்திவாக்கம் கிராமத்திற்கு அர்ஜுன் பஸ்ஸில் தான் சென்றான். பைக்கில் சென்று வரக்கூடிய அளவுக்கு அது குறைந்த தூரமல்ல. அதை விட அதிக தொலைவுக்கும் அவன் பைக்கில் போவதுண்டு. ஆனால் சுய அடையாளத்தை மறைத்துக் கொண்டு செல்ல வேண்டிய வேலையில் பைக்கின் ரெஜிஸ்டிரேஷன் எண் அவனைக் காட்டிக் கொடுத்து விடும் அபாயம் இருக்கிறது. இன்று போகும் விஷயத்தில் அவன் அடையாளம் தெரிவது பெரிய ஆபத்தில்லை என்றாலும், அவனுடைய வழக்கமான எச்சரிக்கை உணர்வின் காரணமாக அவன் பஸ்ஸையே தேர்ந்தெடுத்தான்.

 

பஸ் நிறுத்தத்தில் ஒரு பெட்டிக் கடையும், டீக்கடையும் மட்டுமே இருந்தன. அருகில் ஒரு பெரிய ஆலமரமும் இருந்தது. ஆலமரத்தடியில் இருவரும், டீக்கடையில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அர்ஜுன் முதலில் டீக்கடைக்காரரிடம் பேசினான்.  கிராமத்திற்கு அந்த ஆலமரத்தைத் தாண்டித் தெரியும் பாதையில் ஒரு மைல் தூரம் உள்ளே போக வேண்டும் என்று டீக்கடைக்காரர் சொன்னார்.  டீக்கடைக்காரரிடம் தன்னை ஒரு எல்..சி ஏஜெண்ட்டாக அர்ஜுன் அறிமுகப்படுத்திக் கொண்டான். மகுடபதி என்பவர் பெயரில் ஒரு பழைய பாலிசி இருப்பதாகவும், நாமினேஷனாக அவர் மனைவி ரங்கநாயகி பெயர் போடப்பட்டு இருப்பதாகவும், விலாசமாக அத்திவாக்கம், காஞ்சிபுரம் என்று மட்டும் தரப்பட்டிருப்பதாகவும், மகுடபதி, ரங்கநாயகி, அல்லது அவர்கள் குடும்பத்தினர் யாராவது இருந்தால் அவர்களிடம் அந்த பாலிசி குறித்து பேச வந்திருப்பதாகவும் தெரிவித்தான்.

 

டீக்கடைக்காரருக்கு மகுடபதி குறித்தோ, அவர் குடும்பம் குறித்தோ எதுவும் தெரிந்திருக்கவில்லை. டீக்கடையில் அமர்ந்திருந்தவர்களுக்கும் தெரியவில்லை. அவர் பக்கத்து பெட்டிக்கடைக்காரரைக் கேட்டார். அவருக்கும் தெரிந்திருக்கவில்லை.  அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஆலமரத்தடி ஆட்களும் வந்தார்கள். அவர்களுக்கும் தெரியவில்லை.

 

அவர்களில் ஒருவர் கேட்டார். “அந்த பாலிசி எப்போ எடுத்தது தம்பி?”

 

நாற்பது வருடங்களுக்கு முன்பு எடுத்த பாலிசி என்று அர்ஜுன் சொன்னவுடன் அவர் சொன்னார். “தம்பி, இந்தக் கிராமத்தில் மாடசாமிங்கற பெருசு இருக்கு. வயசு 75 க்கு மேல இருக்கும். அதுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு..”

 

சொன்னதோடு நிற்காமல், அவர் தன்னுடைய பழைய ஸ்கூட்டரில் அவனை  கிராமத்தின் உள்ளே இருக்கும் மாடசாமியின் வீட்டுக்கும் அழைத்துக் கொண்டு போய் விட்டார். “பெருசு கிட்ட கொஞ்சம் சத்தமாய் பேசணும்.  அப்ப தான் காது கேட்கும். ஆனா பழசு எல்லாத்தையும் புள்ளி விவரத்தோட சொல்லும். நல்ல ஞாபக சக்தி.”

 

மாடசாமிக்கு மகுடபதியை ஞாபகம் இருந்தது. அர்ஜுனை அழைத்துச் சென்றவரிடம் அவர் சொன்னார். “இப்ப முத்துப்பேச்சி குடியிருக்கு இல்லயா. அந்த வீட்டுல தான் மகுடபதி இருந்தார்.” பின் அர்ஜுனிடம் அவர் சொன்னார். “அவரும் அவர் சம்சாரமும் கிட்டத்தட்ட முப்பது வருஷத்துக்கு முன்னாடியே இறந்துட்டாங்களே தம்பி.”

 

அர்ஜுன் மற்றவர்களிடம் சொன்ன எல்..சி பாலிசி கதையையே அவரிடமும் சொன்னான். “அவங்களுக்கு எத்தனை பிள்ளைங்க இருந்தாங்க? இப்ப அவங்க எல்லாம் எங்கே இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா பெரியவரே

 

அவங்களுக்கு ஒரே ஒரு மகள் இருந்தா. ஆனா அவ எங்கே போனா, இப்ப எங்கே இருக்கான்னு எல்லாம் தெரியாது தம்பி.”

 

அவர்களைப் பற்றிக்  கூடுதல் விவரங்கள் தெரிந்திருக்கக் கூடியவர்களும்  அங்கு யாரும் இல்லை என்று அவர் சொன்னார். “இப்போதைக்கு இங்கே இருக்கிறவங்கள்லயே பழைய ஆள் நான் தான். இங்கே வந்து 32 வருஷம் ஆச்சு. மகுடபதி காலத்து மத்த ஆளுங்க எல்லாம் நிலத்தை வித்துட்டு எங்கங்கயோ போய்ட்டாங்க.”

 

அர்ஜுனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவருக்கு பானுமதியின் பெயராவது நினைவிருக்கிறதா என்று அறிந்து கொள்ள விரும்பி கேட்டான். “அவங்களுக்கு ஒரு மகள் இருந்ததாய் சொன்னீங்களே, அவங்க பெயர் தெரியுமா பெரியவரே?”

 

அதெல்லாம் ஞாபகம் இல்லை தம்பி. மகுடபதி பெயர் மட்டும் தான் தெரியும். அவர் மனைவி பெயர் கூடத் தெரியாது. அப்பவெல்லாம் ஒரு பெயரை வெச்சு தான் அந்தக் குடும்பத்து ஆள்கள் அத்தனை பேரையும் கூப்பிடுவோம். மகுடபதி சம்சாரம், மகுடபதி மகள்னு கூப்பிடறது தான் அப்பத்து வழக்கம்.”

 

அர்ஜுன் யோசித்து விட்டுக் கேட்டான். “முதல்ல இறந்தது மகுடபதியா, இல்லை அவங்க மனைவியா?”

 

ரெண்டு பேரும் ஒரே சமயத்துல தான் இறந்தாங்க தம்பி. அவங்க ரெண்டு பேரும் தற்கொலை செய்துட்டு செத்தவங்க தானே

 

அர்ஜுன் அதிர்ச்சியடைந்தான்.


(தொடரும்)

என்.கணேசன்




Monday, July 20, 2026

ரட்சகன் 1


 

நானூறு ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு உள்ள திகார் சிறைச்சாலையில் அப்சல்கான் அடைக்கப்பட்டிருந்த பகுதி ஒதுக்குப்புறமாக இருந்தது. தண்டனை பெற்ற ஆபத்தான கைதிகளும், தீவிரவாதிகளும் மட்டுமே அப்பகுதியில் அடைக்கப்பட்டு இருந்தார்கள். அதனால் அங்கு பலத்த இரட்டிப்பு காவல் இருந்தது. அப்பகுதியில் இருந்த கைதிகள் தங்களுக்குள்ளேயே கூட ஒருவருக்கொருவர் சாதாரணமாகப் பேசிக் கொள்ளவும் அதிக வாய்ப்பிருக்கவில்லை. ஏனென்றால் பெரும்பாலானோர் தனித்தனியாகத் தான் அங்கே அடைக்கப்பட்டிருந்தார்கள். அதனால் அங்கிருக்கையில் கைதிகள் பேசுவதானால் காவலாளிகளிடம் மட்டுமே பேச முடியும். தனிமையும் மௌனமும் சேர்ந்திருக்கும் அந்த சிறைவாசம் கொடுமையானது என்பதால் பொதுவாக அந்தக் கைதிகள் வாய்ப்பு கிடைக்கையில் காவலாளிகளிடம் பேச்சு கொடுப்பது வழக்கம். ஆனால் அங்கு தற்போது சிறைப்பட்டிருக்கும் அப்சல்கான் வித்தியாசமானவனாக இருந்தான். அவன் அங்கு சிறைப்பட்டிருக்கும் இந்த இரண்டாண்டு காலத்தில், மற்ற கைதிகளிடம் மட்டுமல்லாமல் காவலாளிகளிடம் கூட ஒரு வார்த்தை பேசியதில்லை. அதற்கான அவசியத்தையும் அவன் உணர்ந்ததில்லை.

 

சிறையின் அந்தப் பகுதியில் இருக்கும் கைதிகள் தங்களைச் சந்திக்க வரும் ஆட்களிடம் பேசவும் மிக ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் அவர்களைச் சந்திக்க வருபவர்களுக்கும் கட்டுப்பாடுகளும், கெடுபிடிகளும் அதிகம் என்பதால் குடும்பத்தினரும், நண்பர்களும், உறவினர்களும் அவர்களைச் சந்திக்க வருவதும் குறைவாகவே இருக்கும். அப்சல்கானைச் சந்திக்க அப்படி குறைவாகக்கூட யாரும் வந்ததே இல்லை. குடும்பத்தினரும், உறவினர்களும் அவனைச் சந்திக்க விரும்பவில்லை. நண்பர்களையோ அவன் சந்திக்க விரும்பவில்லை. காரணம் அவனுடைய இயக்கத்திற்கு அப்பாற்பட்ட நட்புகள் அவனுக்கு இருக்கவில்லை. உளவுத்துறையின் கழுகுப் பார்வை எப்போதும் அவன் மீதிருப்பதால், அவன் இயக்கத்து நண்பர்கள் பிரச்சினைக்கு உள்ளாவதில் அவனுக்கு விருப்பமில்லை.

 

எப்போதாவது அவனைச் சந்திக்க வரும் அவனுடைய வக்கீலிடம் மட்டுமே அவன் பேசி காவலாளிகள் பார்த்திருக்கிறார்கள். அவன் மிகவும் தாழ்ந்த குரலில் தான் தன் வக்கீலிடம் பேசுவான். அவன் பேசுவது சற்று தள்ளி நிற்கும் காவலாளிக்கும் கூடக் கேட்காது. அந்த வக்கீலே கூட அவனை நோக்கி முன்னால் சாய்ந்து மிகவும் உன்னிப்பாகக் கேட்டு சிரமப்பட்டுத்தான் அவன் என்ன சொல்கிறான் என்பதைப் புரிந்து கொள்வதைக் காவலாளிகள் கவனித்திருக்கிறார்கள்.. அதனால் அங்கு யாருமே அவனுடைய குரலைச் சரியாகக் கேட்டதில்லை.

 

அப்சல்கான் வாய்ப்பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் தருபவன் அல்ல. அவனுக்கு செயல் மூலம் பேசத்தான் பிடிக்கும். இதுவரை அவன் அப்படித் தான் பேசியிருக்கிறான். மூன்று வருடங்களுக்கு முன் புதுடெல்லியில் ஒரு வணிக வளாகத்தில் அவன் வெடிகுண்டு வைத்து பதினைந்து பேர் மரணமடைந்தும், பதினெட்டு பேர் படுகாயமடைந்துமிருக்கிறார்கள். அந்த சமயத்தில் அவன் துரதிர்ஷ்டவசமாகப்  பிடிபட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மரண தண்டனை பெற்று திகார் சிறைக்கு வந்திருக்கிறான்.

 

இப்போதைக்கு அவனுக்கு இருக்கும் ஒரே குறிக்கோள் திகாரிலிருந்து தப்பிப்பது தான். ஆனால் அதற்கு அங்கே சிறிதும் வாய்ப்பிருக்கவில்லை. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த சார்லஸ் சோப்ராஜ் உட்பட சிலர் அங்கிருந்து தப்பித்துப் போயிருக்கிறார்கள். ஆனால் சார்லஸ் சோப்ராஜ் உட்பட அவர்கள் அனைவரும் சில நாட்களிலேயே பிடிபட்டுமிருக்கிறார்கள், ஒரே ஒரு கைதியைத் தவிர! தப்பித்துச் சென்று கடைசி வரை பிடிபடாத கைதி அப்சல்கானைப் போல் பயங்கரவாதி அல்ல. அந்தக் கைதி இன்னொரு கைதியுடன், ஒரு திருட்டுக் குற்றத்தில் சிறைப்படுத்தப்பட்டவன். அதனால் அவன் தீவிரக் கண்காணிப்பிலோ, பலத்த காவல் பகுதியிலோ இருக்கவில்லை. தன் சகாவுடன் சேர்ந்து தப்பித்துச் சென்ற அவன் சகா திரும்ப பிடிபட்டாலும் அவன் பிடிபடவில்லை . அந்த தப்பித்த கைதியின் அதிர்ஷ்டம் பின் எவருக்கும் அமையவில்லை. சிறைச்சாலைக் காவலை பின்னர் பல மடங்கு பலப்படுத்தி விட்டார்கள்ஆனாலும்முடியாதுஎன்று எதையும் நினைக்காத அவன் இதையும் முடியாது என்று எண்ணி நம்பிக்கை இல்லை. எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு வழி இருக்கும். அதைக் கண்டுபிடித்து செயல்படுத்துவது தான் வல்லவனின் சாமர்த்தியம்.

 

சிறைச்சாலை என்பது ஒரு தனி உலகம். அங்கு இருக்கும் சட்டதிட்டங்களும் வாழ்க்கை முறையும் வித்தியாசமானவை. கைதிகளில் விசாரணைக் கைதிகள் அடைக்கப்படும் பகுதியில் கெடுபிடிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் தண்டனை பெற்றவர்கள் அடைக்கப்படும் பகுதியில் கெடுபிடிகள் அதிகம். அந்தக் கைதிகளுக்கு வேலையும் அதிகம். திகார் சிறைச்சாலைக்குள் ஒரு தொழிற்சாலையும் இருப்பதால், தண்டனை பெற்ற கைதிகள் வழக்கமான வேலைகளையோ, தொழிற்சாலை வேலையையோ, சில சமயங்களில் இரண்டையும் சேர்த்தோ செய்ய வேண்டியிருக்கும். ஆனாலும் எழுத்து வடிவில் இருக்கும் சட்டதிட்டங்களின்படி பெரும்பாலும் சிறைச்சாலைகளில் எதுவும் நடப்பதில்லை. பணமும், அதிகார வர்க்கத்தின் ஆதரவும் இருந்தால் அங்கே ஒருவர் கூடுதல் வசதிகளுடன் வாழலாம்சிகரெட், கஞ்சா, உணவுப்பொருள்கள், மொபைல் போன்கள் முதலான அனைத்தும், பணம் தந்தால் அங்கே கிடைக்கும். அப்சல்கான் அப்படிப் பணம் தந்து தன் வசதிகளை அதிகப்படுத்திக் கொள்ளவில்லை. அவன் நினைத்திருந்தால் அதைச் செய்திருக்கலாம். ஏனென்றால் அவன் இருக்கும் இயக்கத்திற்கு பணம் ஒரு பிரச்சினையே அல்ல. ஆனாலும் தன்னுடைய மோசமான சிறை வாழ்க்கையை வசதியான சிறை வாழ்க்கையாக மாற்றிக் கொள்ள அவன் பணம் செலவு செய்யவில்லை.

 

அதற்குக் காரணம் அந்த மோசமான சிறை வாழ்க்கை அவனுக்கு ஒரு பொருட்டல்ல என்பதல்ல. அவன் இருக்கும் அந்த மோசமான சூழலையும், அவனுக்குத் தரப்படும் தரமற்ற உணவையும், அவன் மேல் சுமத்தப்படும் கடுமையான வேலைகளையும் அவன் மிகவும் வெறுத்தான்சிறையில் இருக்கும் ஒவ்வொரு கணமும் அவனுக்கு நரகமாகத் தான் நகர்கிறது. ஆனாலும் பணம் தந்து அந்த நரக வாழ்க்கையை சுலபமாக்காமல் அவன் சுமந்து கொண்டிருப்பது இந்த அரசாங்கத்தின் மீது ஏற்கெனவே இருக்கும் கடுமையான வெறுப்பை மேலும் அதிகரித்துக் கொள்ளத்தான்.

 

அன்பை விட சக்தி வாய்ந்தது எதுவுமில்லை என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். அப்சல்கானுக்கு அதில் உடன்பாடில்லை. அன்பை விடவும் வெறுப்பு அதிக சக்தி வாய்ந்தது. பழிவாங்கும் உணர்வு ஊக்குவிப்பதைப் போல் வேறெதுவும் அவனை ஊக்குவிப்பதில்லைஒவ்வொரு வேதனையை உணரும் போதும், “இதற்கெல்லாம் சேர்த்து ஒரு நாள் நான் பதிலளிப்பேன்என்று அவன் மனதிற்குள் கறுவிக் கொள்வான். இந்த பழிவாங்கும் உணர்வும் வெறுப்பும் தான் அவன் மூளையைக் கூர்மையாக வைத்திருக்கிறது. அது தான் அவன் வாழும் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை, ஒரு குறிக்கோளை, ஏற்படுத்தித் தந்திருக்கிறது. பழி வாங்குவதற்கு, முதலில் இங்கிருந்து அவன் தப்பித்தாக வேண்டும். எப்படியாவது அவன் இங்கிருந்து தப்பிக்க  இப்போதைய இந்தக் கஷ்டங்கள் தான் உந்துகோலாக இருக்கப் போகின்றன. அதனாலேயே இந்தக் கஷ்டங்களை அவன் சகித்து வருகிறான்.  

 

காலம் அவனுக்கு ஆதரவாக இல்லை. ஆனால் அதை அவன் முடிந்த வரை நீட்டித்துக் கொண்டிருக்கிறான்.  உச்சநீதிமன்றத்திலும் அவனுக்கு தண்டனை குறைய வாய்ப்பில்லை என்று அவன் வக்கீல் அவனிடம் வெளிப்படையாகச் சொல்லி இருந்தார். இப்போதெல்லாம் குடியரசுத் தலைவரும் இது போன்ற விஷயங்களில் கருணை காட்டுவதில்லை. அதனால் வழக்கு வேகமாக முடிவது அவன் வாழ்க்கையை வேகமாக முடிப்பது போலத் தான்.   அதனால் டெல்லி உயர்நீதிமன்றத்தின் மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து அவன் உச்சநீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் மேல்முறையீட்டு வழக்கை அவனும் அவனுடைய வக்கீலும் முடிந்த வரை தாமதப்படுத்தி ஆமை வேகத்தில் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் முடிவில்லாமல் அப்படி அவர்கள் வழக்கை நீட்டிக்க முடியாது. அதனால் தான் சில நாட்களாக அவன் மனம் அவசரத்தை உணர்ந்து வருகிறது.

 

அவன் தினமும் தவறாமல் செய்யும் காரியம் சிறையில் படிக்கக் கிடைக்கும் தினசரிப் பத்திரிக்கைகளை ஒரு வரி கூட விடாமல் படிப்பது தான். அவற்றில் இருக்கும் ஏதாவது ஒரு தகவல் அவன் இங்கிருந்து தப்பிப்பதற்கு உதவிகரமாக இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை அவன் இதுவரை இழக்கவில்லை. ஒவ்வொரு நாளும் பொறுமையாக அவன் அந்த நாளிதழ்களைப் படித்து வருகிறான். ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் நூலக அறைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வது வாடிக்கையாகி விட்டாலும் மறுநாளும் நம்பிக்கையோடு வருவது தடைப்படவில்லை.

 

இன்றும் அவன் அப்படித் தான் நம்பிக்கையோடு அந்த நூலக அறைக்குள் நுழைந்தான். அவன் படித்த செய்திகள் அனைத்தும் அவனுக்கு வழக்கமான ஏமாற்றத்தையே தந்தனநாளிதழ்களைப் படித்து முடித்து விட்டு அங்கே பரந்து கிடந்த மற்ற வார, மாத இதழ்களை மேலோட்டமாகப் பார்த்தான். அவற்றில் அவனால் சிறிதும் ரசிக்க முடியாத சினிமா மற்றும் குடும்பக் கட்டுரைகள் மட்டுமே இருக்கும். அதைப் படித்து காலத்தை வீணாக்கிக் கொள்ள அவன் விரும்பவில்லை. ஆனால் அங்கிருந்த வார இதழான உமன்ஸ் வர்ல்டில் இருந்த அட்டைப்படமும், அதன் தலைப்பும் ஒரு கணம் அவனை யோசிக்க வைத்தன. யோசனையுடன் அந்த வார இதழை எடுத்துப் புரட்டினான். அட்டைப்படம் சம்பந்தமான ஒரு குடும்பக் கட்டுரை உள்ளே இருந்தது. அவன் அதைப் படிக்க ஆரம்பித்தான். படித்து முடித்த பின் அவன் நம்பிக்கையுடன் நிமிர்ந்து உட்கார்ந்தான். திகார் சிறைக்கு வந்ததிலிருந்து ஒரு முறை கூடப் புன்னகைத்திராத அவன் முதல் முறையாகப் புன்னகைத்தான்.

 

திகாரிலிருந்து தப்பிக்கும் வழி அவனுக்குப் புலப்பட்டு விட்டது.


(தொடரும்)

என்.கணேசன்



Thursday, July 16, 2026

சதுரங்கம் 27

 


ர்ஜுன் தங்கையிடம் மெல்லக் கேட்டான். “இது அம்மா கையெழுத்து தானா?”

 

நித்யா உறுதியாகச் சொன்னாள். “அம்மா கையெழுத்து தான். அம்மா மளிகை சாமான்கள் லிஸ்ட் எழுதறதை நான் பார்த்திருக்கேனே

 

அம்மா இப்போதெல்லாம் மளிகை சாமான் லிஸ்ட் தவிர வேறெதுவும் எழுதுவதில்லை. வேறெதுவும் எழுத இப்போதெல்லாம் சந்தர்ப்பமும் அவளுக்கு இல்லை….. யோசிக்கையில் மனம் வலித்தது. எந்திரம் போல் இன்று வாழ்பவள் ஒரு காலத்தில் கவிதைகளை நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறாள். எப்போது அந்த ரசனைகளை எல்லாம் அவள் தொலைத்தாள், ஏன் தொலைத்தாள், எப்படித் தொலைத்தாள் என்றெல்லாம் அவன் யோசித்தான். அவனுக்கு பதில் கிடைக்கவில்லை. மனதில் எழுந்த சில கேள்விகளை வாய்விட்டுக் கேட்கவும் அவனுக்கு தைரியம் வரவில்லை. அவன் கேள்விகளை நித்யா எப்படிப் புரிந்து கொள்வாளோ தெரியவில்லை.

 

அவன் மெல்லக் கேட்டான். “நீ என்ன நினைக்கிறாய் நித்யா?”

 

நம்ம குடும்பத்தைப் பற்றியே நமக்குத் தெரியாதது நிறைய இருக்குண்ணா. அதை நீ தான் கண்டுபிடிக்கணும்.”

 

நானா?”

 

நீ தானே பத்திரிக்கை நிருபர். ஊர், உலகத்துல நடக்கிறதை எல்லாம் கண்டுபிடிச்சு எழுதற நீ உன் குடும்பத்தைப் பற்றியே சரியாய் தெரிஞ்சுக்காம இருக்கிறது சரியில்லையேண்ணா….”

 

அம்மா அவளை அழைப்பது கேட்டது. நித்யா போய் விட்டாள்.  அர்ஜுன் யோசிக்க ஆரம்பித்தான். அம்மாவைப் பற்றியும் அவளுடைய குடும்பத்தைப் பற்றியும் அவர்களுக்குத் தெரிந்தது கிட்டத்தட்ட பூஜ்ஜியம் தான். அம்மாவின் இளமைக் காலத்தைப் பற்றி ஒரு முறை நித்யா கேட்ட போது அம்மா கண்கலங்கியபடி தனதறைக்குப் போய்க் கதவைச் சாத்திக் கொண்டதற்குப் பிறகு, அந்த நிகழ்வை, அம்மா இல்லாத சமயத்தில், நித்யா அப்பாவிடமும் சொல்லியிருக்கிறாள். மிகச் சாதாரண கேள்விக்கும் அம்மா அப்படி ஏன் நடந்து கொண்டாள் என்று அப்பாவிடம் கேட்டிருக்கிறாள். நித்யா கேட்டதற்கு அப்பா மென்மையாகச் சொன்னார்.  எல்லார் வாழ்க்கையும் உன் வாழ்க்கை மாதிரி சந்தோஷமாய் இருக்கறதில்லை நித்யா. நினைவுபடுத்தினால் கூட வலிக்கிற கடந்த காலம் சிலருக்கு இருக்கு. அதுல உன் அம்மாவும் ஒருத்தி. அவ அதை மறந்துட்டு வாழ முயற்சி பண்றா. நாம அதுக்கு உதவணும்.”

 

என்ன ஆச்சுப்பா?”

 

வலிக்க வைக்கிற விஷயங்களைத் தெரிஞ்சு நீ என்ன செய்யப் போகிறாய் நித்யா. நல்ல விஷயங்களைப் பற்றி பேசுவோம்.”

 

இல்லைப்பா. எனக்கு அம்மா வழி தாத்தா பாட்டி பெயர் கூடத் தெரியாது. அவங்க எந்த ஊர்ன்னும் தெரியாது. இது விசித்திரமாய் இல்லையாப்பா?”.

 

அப்பா சொன்னார். “உன் தாத்தா பெயர் மகுடபதி. உன் பாட்டி பேர் ரங்கநாயகி. அவங்க வாழ்ந்த ஊர் காஞ்சிபுரம் பக்கத்தில் இருக்கிற அத்திவாக்கம்கிற குக்கிராமம். போதுமா? இனி நாம இதைப் பற்றி பேச வேண்டாம். அவளுக்கு வலிக்கிற விஷயங்கள் நமக்கும் வேண்டாம்.”

 

அதற்கு மேல் அந்த வீட்டில் அம்மாவின் பூர்வீகமும், கடந்த காலமும் பேசப்படவில்லை. அத்திவாக்கம் கிராமத்திலிருக்கும் பானுமதியை, ஞானமூர்த்தி எப்படி சந்தித்தார், எப்படி திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல்கள் எல்லாம் அவர்களுக்குத் தெரியவில்லை. திருமண சமயத்தில் பானுமதியின் பெற்றோர் உயிரோடு இல்லை என்பது மட்டும் தெரியும்.

 

நித்யா சொன்னது போல அவனைப் போன்ற ஒரு பத்திரிக்கை நிருபர் மனம் வைத்தால் எதைத்தான் தெரிந்து கொள்ள முடியாது? அம்மாவைப் பற்றியும், அவளுடைய குடும்பப் பின்னணி பற்றியும் அவன் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பா என்றைக்கோ முற்றுப் புள்ளி வைத்து விட்ட விஷயம் அது என்பதால் அவரிடம் மீண்டும் அந்தப் பேச்சை எடுக்க முடியாது. சித்தப்பாவிடம் கேட்டால் கூட அந்த விவரங்களை அவன் பெற்றுக் கொள்ள முடியும். அவர் அப்பா போல் கறார் பேர்வழி அல்ல. ஆனால் அவன் தாயின் பூர்வீகத்தைப் பற்றி அவன் பெற்றோரிடமே பேசமுடியாமல் இருப்பதைக் காட்டும்படியாக, சித்தப்பாவிடம் கேட்பது சரியல்ல என்று தோன்றியது. மேலும் அவரும் சில விஷயங்களை மறைக்கிறார். தாத்தா அவனுடைய பெற்றோர் திருமணத்திற்கு உடனடியாகச் சம்மதம் தெரிவிக்கவில்லை என்பதை அறிந்ததாக அவன் சொன்ன போதே அவர் அதிர்ச்சியுடன் பார்த்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. பிறகு அவர் அதைச் சமாளித்தார் என்றாலும் அந்தச் சின்ன விஷயத்துக்கு அவர் அதிர்ச்சி அடைந்திருக்கத் தேவையில்லை. படித்த மகனுக்கு எஸ்.எஸ்.எல்.சி வரை கூட படித்திருக்காத பெண் மனைவியாக வருவதில் தாத்தா தயக்கம் காட்டியது குற்றமென்று யாரும் சொல்ல முடியாது....

 

ஹாலில் சத்தமாகப் பாட்டு கேட்டது. “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்... நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்....”

 

நித்யாவின் கைங்கரியம் இது என்று அர்ஜுனுக்குப் புரிந்தது. அம்மாவின் எதிர்வினை எப்படி இருக்கிறது என்று சோதித்துப் பார்க்க அவள் விரும்புகிறாள்... அர்ஜுன் எழுந்து மெல்ல அறைக்கதவருகே நின்று கொண்டு ஹாலைப் பார்த்தான். நித்யா அம்மா நறுக்கச் சொல்லியிருந்த காய்கறிகளை நறுக்கிக் கொண்டு ஹாலில் அமர்ந்திருந்தாள். வேலை செய்யும் போது பாட்டு கேட்டுக் கொண்டே செய்வது அவள் வழக்கம். பெரும்பாலும் காதில் இயர்போன் வைத்துக் கொண்டு தான் பாடல்களைக் கேட்பாள். இன்று அவள் இயர்போன் உபயோகிக்கவில்லை. எஃப் எம் ரேடியோவில் அந்தக் குறிப்பிட்ட பாடல் வந்தவுடன் ஒலியை நன்றாகவே கூட்டியிருக்கிறாள் என்று அர்ஜுனுக்குப் புரிந்தது.

 

அம்மா சமையல் அறையிலிருந்து வேகமாக வந்து ரேடியோவை ஆஃப் செய்தாள். “இவ்வளவு சத்தமாவா பாட்டு கேட்பாங்க. எனக்கு தலைவலியே வந்துடுச்சு..” என்று நித்யாவைத் திட்டி விட்டு வேகமாகவே போய் விட்டாள். தலைவலிக்கும் அளவு சத்தமாக அந்தப் பாடல் ஒலிக்கவில்லை. நித்யா அர்ஜுனை அர்த்தமுள்ள பார்வை பார்த்தாள். ’அம்மாவுக்கு, அவள் ரசித்து எழுதி வைத்த பாடலையே இப்போது கேட்பதற்குத் தலைவலிக்கிறது.’

 

அர்ஜுன் திரும்ப வந்து கட்டிலில் சாய்ந்து கொண்டான். அம்மா விஷயத்தில் நிறைய புதிர்களும், முரண்களும், பதிலில்லா கேள்விகளும் இருக்கின்றன. அப்பா விரும்பி அவளைத் திருமணம் செய்து கொண்டார் என்றால், கண்டிப்பாக அது கட்டாயத் திருமணமாக இருக்க வழியில்லை. அதனால் ஒரு காலத்தில் காதல் பாடல் இனித்தது, இன்று கசக்கிறது என்று சொல்ல வழியில்லை. மேலும், அம்மாவும் அப்பாவும் நிறைய பேசிக் கொண்டிருக்கா விட்டாலும் வார்த்தைகளில்லாத அன்னியோன்னியம் அவர்களுக்கு இடையே இப்போதும் இருப்பதை அவன் பார்க்கிறான்.

 

இந்த வீட்டில் பானுமதியின் பெற்றோர் புகைப்படம் ஒன்று கூட இல்லை. வாசுதேவன்யசோதா புகைப்படம் ஹாலில் பெரிதாகத் தொங்கிக் கொண்டு இருக்கிறது. ஆனால் மகுடபதிரங்கநாயகி படம் ஒன்று கூட இல்லை. சுவரில் தொங்கா விட்டாலும் பழைய புகைப்பட ஆல்பத்திலாவது இருக்கிறதா என்றால் அதுவுமில்லை. சரி வறுமையில் இருந்த அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளக்கூட வசதியில்லாதவர்கள் என்று எடுத்துக் கொண்டாலும் கூட அவர்களைப் பற்றிய ஏதாவது பேச்சு பானுமதி வாயில் இருந்தாவது வரவேண்டும். பானுமதி ஒரு முறை கூட அவர்களைப் பற்றிப் பேசியதில்லை. அதுமட்டுமல்ல, பானுமதியின் உறவினர்கள் என்று சொல்லிக் கொண்டு யாரும் இந்த வீட்டுக்கு வந்ததாகவும் அர்ஜுனுக்கு நினைவில்லை.

 

அவனுடைய தொழிலில் ஒரு சின்னத் தும்பு கிடைத்தால் போதும் அதைப் பிடித்துக் கொண்டு மெல்ல மெல்ல மொத்தத்தையும் அறிந்து கொள்வது சர்வசாதாரணம். அவனுடைய தாய்வழி பாட்டி தாத்தா பெயர் தெரியும், ஊர் தெரியும். இது போதாதா மீதியையும் தெரிந்து கொள்வதற்கு?

 

காஞ்சிபுரம் பக்கத்தில் இருக்கிற அத்திவாக்கம் கிராமத்திற்குச் சென்று வருவதென்று அர்ஜுன் தீர்மானித்தான்.


(தொடரும்)

என்.கணேசன்