என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, November 6, 2025

சாணக்கியன் 186

 

ராக்ஷசரின் கடிதத்தைப் படித்து மலைகேது உற்சாகம் அடைந்தான்அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தப்பித்துச் சென்றாலும் பொது எதிரியிடம் கொண்டிருந்த வெறுப்பையும், அவன் தந்தையின் மீது கொண்டிருந்த அன்பையும் மறக்காமல் இருந்தது அவனுக்கு ஆறுதலைத் தந்ததுமுக்கியமாக எதிரியை வீழ்த்துவதைத் தவிர வேறெந்த எதிர்பார்ப்புமில்லாமல் உதவ முன்வந்தது அவனுக்கு மகிழ்ச்சியளித்ததுமலைகேது உடனடியாக அந்தக் கடிதத்துடன் சென்று மூன்று மன்னர்களையும் மறுபடி சந்தித்தான்.

 

மலைகேது அவர்களிடம் கடிதத்தைப் படித்துக் காட்டி உணர்ச்சிகரமாகப் பேசினான்.  ”சிறந்த அறிவாளியும் அனுபவஸ்தருமான ராக்ஷசரே நம்முடன் இணையும் போது நாம் வேறெதையும் யோசிக்க வேண்டியதில்லை. துரோகத்தைத் தண்டிக்காமல் பின்வாங்குவது மட்டும் கூடாது. அடிமட்ட மனிதன் கூட ஊதியமில்லாமல் எந்த வேலையையும் செய்வதில்லை. சிறு வியாபாரி கூட தகுந்த விலை கிடைக்காமல் சிறு பொருளையும் யாருக்கும் தருவதில்லை. அப்படியிருக்கையில் நம் படைகளையெல்லாம் இவ்வளவு தூரம் கூட்டி வந்து நிறைய இழப்புகளைச் சந்தித்துப் போராடியிருக்கிறோம். முடிவில் வெற்றி கிடைத்த பின் ராக்ஷசர் சொல்வது போல் வெற்றியில் பங்கு தர மனமில்லாமல் கொல்ல சதி செய்வதை நாம் ஏற்றுக் கொண்டால், அதை எதிர்த்துப் போராடா விட்டால், மானமில்லா மன்னர்கள் என்ற அவப்பெயரை நாம் பெற்று விட மாட்டோமா? அவப்பெயரை விடுங்கள், நம்மை நாமே மன்னிக்க முடியுமா?”

 

அவர்களுக்கு அவன் பேச்சில் இருந்த உண்மைகளை மறுக்க முடியவில்லை. ஆனால் சமீப காலமாக நடக்கும் எதிர்பார்க்காத சம்பவங்களால் அவர்கள் நிறைய குழம்பிப் போயிருந்தார்கள். அதனால் அவசரப்பட்டு எந்த முடிவையும் அவர்கள் எடுக்க விரும்பவில்லை. யோசித்து முடிவெடுக்க இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டார்கள்.

 

சம்மதித்த மலைகேது திரும்பி வந்து ராக்ஷசரின் தூதரிடம் சொன்னான். “ராக்ஷசருக்கு என் வணக்கங்களைத் தெரிவிப்பாயாக. அவர் சொல்வதை நான் நன்றியுடனும், அன்புடனும் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல். ஆனால் என் நட்பு மன்னர்கள் யோசிக்க இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் அபிப்பிராயம் அறிந்த பிறகு நானே விவரங்களுடன் என் தூதனை அனுப்பி வைக்கிறேன் என்று தெரிவி.”

 

தூதராக வந்த ஒற்றன் தலையசைத்து, தலைவணங்கி விட்டு விடைபெற்றான்.

 

சாணக்கியர் மலைகேது அனுப்பிய மடலைப் படித்து விட்டு அமைதியாகச் சொன்னார். “உணவருந்தி சற்று இளைப்பாறி விட்டு வா தூதனே. நான் அதற்குள் பதில் மடல் தயாராக வைத்திருக்கிறேன்.”

 

அவன் வணங்கி விட்டுச் சென்றவுடன் அவர் நிதானமாக யோசித்து பதில் எழுத ஆரம்பித்தார்.

 

தந்தையின் மறைவால் வாடும் மலைகேதுவுக்கு ஆசிகள்.

ஒரு மனிதன் எல்லோரிடமும் சத்தியவானாகவும், நியாயம் தவறாதவனாகவும் இருக்க முடியா விட்டாலும் கூட அவன் பூஜிப்பவர்களிடமும், அவனை மிகவும் நம்பியிருப்பவர்களிடமுமாவது நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும். அதுவே அவன் மனிதனாக இருப்பதற்குக் குறைந்த பட்சத் தகுதி. அந்தக் குறைந்த பட்சத் தகுதியையும் தக்க வைத்துக் கொள்ள உன் தந்தை தவறி விட்டது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

 

கொடுத்த வாக்கைத் தவறுவது எனக்கு உடன்பாடானதல்ல. அதனால் தான் என் பரம எதிரியாக அனைவரும் அறிந்த தனநந்தனிடம் கூட நான் அவன் மகளுக்குப் பிடித்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று சொன்ன வாக்கை மீறவில்லை. சந்திரகுப்தனுக்கு அவன் மகள் துர்தராவைத் திருமணம் செய்து தர நான் மறுக்கவில்லை. அது குறித்து உன் தந்தை அதிருப்தி தெரிவித்த போது கூட நான் கொடுத்த வாக்கை மீற ஒத்துக் கொள்ளவில்லை. இதனை நீயும் நன்றாக அறிவாய்.

 

ஆனால் நான் உன் தந்தைக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் முன்னரே, அதை நிறைவேற்ற எனக்கு வேண்டிய அவகாசம் கொடுக்காமல் உன் தந்தை நம் எதிரணியில் உள்ளவர்களோடு சேர்ந்து கொண்டு சந்திரகுப்தனைக் கொன்று விடத் திட்டமிட்டது உனக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. வெற்றியைக் கொண்டாட கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு உன் தந்தை என்னிடம் வந்த போது, கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமில்லா விட்டாலும் கூட நான் சம்மதித்தேன். கலை நிகழ்ச்சிகளின் போது சந்திரகுப்தனைக் கொல்ல எதிரியோடு கைகோர்த்துக் கொண்டு உன் தந்தை திட்டமிட்டது துரதிர்ஷ்டமே. ஆனால் உன் தந்தையோடு கைகோர்த்த எதிரி உன் தந்தையைத் தண்டிப்பதற்கும் அந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டது கர்மவினைப்பயன் என்றே சொல்ல வேண்டும். எங்களுடன் சேர்ந்து கொண்டு அவர்களைத் தோற்கடித்ததற்குப் பழி வாங்கும் விதமாக சந்திரகுப்தனோடு சேர்த்து உன் தந்தையையும் கொன்று விட எதிரி தீர்மானித்ததை நீங்கள் அறிந்திருக்கவில்லை. கடைசி நேரத்தில் இந்தச் சதி பற்றி அறிய நேர்ந்த நான் சந்திரகுப்தனைக் காப்பாற்றிவிட முடிந்தது. உன் தந்தையோ விதைத்த கர்மத்தை அறுவடை செய்யும்படியாகி விட்டது.

 

எப்போது எங்களுடன் இருந்து கொண்டே எதிரியுடன் கைகோர்த்து எங்களை அழிக்க முற்பட்டீர்களோ அப்போதே எங்கள் நட்பையும், வெற்றியில் பங்கு கேட்கும் தார்மீக உரிமையையும் நீங்கள் இழந்து விட்டீர்கள். நியாயமாகப் பார்த்தால் எங்களிடமிருந்து நீ எதிர்பார்க்க வேண்டியது தண்டனையைத் தான். அதை அறிந்த உன் குற்றவுணர்ச்சி தான் உன்னை பாடலிபுத்திரத்தில் இருந்து ரகசியமாய் தப்பிக்க வைத்தது என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன்.

 

உண்மை இப்படியிருக்க நீ உன் தந்தையின் மரணத்திற்குக் காரணமாக இருப்பவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைப்பது வியப்பாக இருக்கிறது. ஆனாலும் நான் குற்றவாளிகள் குறித்து தகவல் தருபவர்களுக்குத் தகுந்த சன்மானம் தருவதாக அறிவித்திருக்கிறேன். தகவல் கிடைத்தால் அந்தச் சதியில் பங்கு பெற்ற மற்றவர்களைக் கண்டுபிடித்து, தர வேண்டிய தகுந்த தண்டனையைப் பற்றி நான் யோசிக்கிறேன்.

 

பழைய நட்பையும், உன் இளமையையும் கருத்தில் கொண்டு உன்னை எங்கள் எதிரிப் பட்டியலில் சேர்க்கவில்லை. நீயும் உன் படைகளும் ஹிமவாத கூடத்திற்குத் திரும்பிப் போக அனுமதியளிக்கிறேன். ஆனால் நீ மறுபடியும் எங்களுக்கு எதிராக ஏதாவது செயலில் ஈடுபடும் பட்சத்தில் இந்தக் கருணையை என்னால் நீட்டிக்க முடியாது. பிறகு நாங்கள் எதிரியாகவே உன்னை நடத்த வேண்டியிருக்கும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்

 

இப்படிக்கு

சாணக்கியன்

மலைகேதுவுக்குக் கடிதம் எழுதிய கையோடு சாணக்கியர் காஷ்மீர, குலு, நேபாள மன்னர்களுக்கும் தனித்தனியாக கடிதங்கள் எழுதினார்.

 

நண்பரே,

வணக்கம்.

ஒன்றிணைந்து நாம் எடுத்துக் கொண்ட பணி மாபெரும் வெற்றி பெற்ற வேளையில் அந்த வெற்றியை நாம் பூரண திருப்தியுடன் கொண்டாட முடியாத ஒரு சூழல் துரதிர்ஷ்டவசமாக உருவாகியிருக்கிறது. ஹிமவாதகூட அரசனான பர்வதராஜன் வெற்றியின் முழுப் பங்கையும் அனுபவிக்க பேராசைப்பட்டு எதிரியின் பிரதம அமைச்சரோடு சேர்ந்து கொண்டு சந்திரகுப்தனைக் கொல்லும் திட்டத்தை அரங்கேற்றி விட்டார். இறையருளால் அது கடைசி நேரத்தில் என் கவனத்திற்கு வந்து சந்திரகுப்தனை நான் காப்பாற்றி விட்டேன். ஆனால் எதிரி சந்திரகுப்தனை மட்டுமல்லாமல் பர்வதராஜனையும் எதிரியாகவே பாவித்திருந்ததால் பர்வதராஜனுக்கு எதிராகவும் திட்டம் இருந்து அதில் பர்வதராஜன் பலியாகி விட்டார். நடந்ததை எடுத்துச் சொல்ல நான் மலைகேதுவை நாடிய போது மலைகேதுவும் தப்பி ஓடியிருப்பதை வேதனையுடன் நான் அறிய நேர்ந்தது. எதிரியின் வெறுப்பைப் புரிந்து கொள்ள முடிந்த எனக்கு நண்பர்களின் துரோகத்தை இன்னமும் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போதும் திகைப்பில் இருக்கிறேன்.

 

ஆனால் எல்லா நிகழ்வுகளையும் நாம் கடந்து செல்லவே வேண்டியிருக்கிறது. நடக்க வேண்டியதைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. வரும் சப்தமி நாளன்று சந்திரகுப்தனுக்கு தனநந்தனின் மகள் துர்தராவுடன்  திருமணத்தை நிச்சயித்திருக்கிறோம். தசமியன்று சந்திரகுப்தன் மகத மன்னனாக முடிசூட்டப் போகிறான். இந்த இரண்டு நாட்களிலும் பங்கெடுத்து சந்திரகுப்தனுக்கு ஆசிகள் வழங்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

 

பர்வதராஜன் எங்களுக்குத் துரோகம் செய்யும் முயற்சியில் மரணமடைந்தாலும் மகத வெற்றிக்குப் பின் தங்களுக்குத் தருவதாக என்ன வாக்களித்திருக்கிறாரோ அந்த வாக்கை நிறைவேற்றும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திரும்பிச் செல்கையில் தாங்கள் அவர் வாக்களித்திருந்ததைப் பெற்றுச் செல்லலாம்.

 

(தொடரும்)

என்.கணேசன்



என்.கணேசனின் நூல்களை வாங்க விரும்புவோர் பதிப்பாளரை 94863 09351 எண்ணில் வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும்!

Monday, November 3, 2025

யோகி 128

 

பாண்டியன் டாக்டர் சுகுமாரனைத் தனியாக வெளியே அழைத்துப் போய் ஷ்ரவனானந்தாவுக்கு இருக்கும் விசேஷ சக்தி விவரங்களைச் சொன்னார். சுகுமாரன் திகைப்புடன் அனைத்தையும் கேட்டுக் கொண்டார். ஷ்ரவன் நேற்று அவர்கள் எதிரியைக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறான் என்று சொன்ன போது சுகுமாரன் தங்களுக்கு இத்தனை பிரச்சினைகளை உருவாக்கிய ஆளைப் பார்க்க வேண்டுமென்று துடித்தார். பாண்டியன் அவருக்கு அந்த நபரின் புகைப்படங்களைக் காட்டிய போது அவருக்கும் அந்த நபர் பரிச்சயமானவன் அல்ல என்று சொன்னார். பாண்டியன் தேவானந்தகிரியிடம் நேற்று பேசினதையும் சொன்ன போது சுகுமாரன் பரம திருப்தி அடைந்தார்.

 

இருவரும் அறைக்குத் திரும்பி வந்தார்கள். டாக்டர் சுகுமாரன் ஷ்ரவனைப் பார்த்த பார்வையில் மரியாதை தெரிந்தது.

 

ஷ்ரவன் சுகுமாரனிடம் சொன்னான். “என்னை மன்னித்து விடுங்கள். சில சமயங்களில் எனக்கு வேண்டாதது எல்லாம் தெரிகிறது. புதியவர்கள் பற்றி தெரிந்தாலும் வெளியே சொல்லக்கூடாது என்று நினைத்தாலும் மண்டை ஓட்டைப் பார்த்ததும் பதட்டமடைந்து என்னை அறியாமல் சொல்லி விட்டேன்...”

 

சுகுமாரன் கைகூப்பினார். “தப்பேயில்லை....”

 

பாண்டியன் சுகுமாரனைத் தொடர்ந்து பேச அனுமதிக்காமல் இடைமறித்து ஷ்ரவனிடம் சொன்னார். “நீங்கள் நேற்று சொன்ன இளைஞனைப் பற்றிய கூடுதல் விவரங்கள் எங்களுக்குத் தேவைப்படுகின்றன ஷ்ரவனானந்தா.”

 

ஷ்ரவன் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான். “எனக்கு அந்த ஆளைப் பற்றி வேறு எந்தக் காட்சியும் தெரியவில்லையேஜி.”

 

பாண்டியன் சொன்னார். “இது போன்ற சக்திகளின் பிரயோகங்களில் பரிச்சயமான ஒருவர் எங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவர். அவர் கேரளாவில் காசர்கோட்டில் இருக்கிறார். அவரிடம் பேசிய போது அவர் அந்த ஆளைப் பற்றி மேலும் அதிகமாக உங்களுக்குத் தெரிவதற்குச் சில ஆலோசனைகள் சொல்லியிருக்கிறார்.”

 

இவர்கள் இதுவிஷயமாக தேவானந்தகிரியை உடனடியாகத் தொடர்ந்து கொண்டு பேசுவார்கள் என்பதை ஷ்ரவன் எதிர்பார்த்திருக்கவில்லை. மனதுக்குள் அவன் அதிர்ந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. தேவானந்தகிரி நேராக இங்கே வராவிட்டாலும் கூட, அவர் இதில் சம்பந்தப்படுவது அவனை எப்போதும் ஆபத்தின் எல்லைக் கோட்டில் வைத்திருக்கும் என்ற புரிதல் அவனுக்கு இருந்தது. ஆனால் ஆபத்தான விளையாட்டை அவன் ஆரம்பித்தாகி விட்டது. இனி இடையில் நிறுத்த வழியில்லை.

 

ஷ்ரவன் கேட்டான். “என்ன ஆலோசனைகள்ஜி...”

 

பாண்டியன் சொன்னார். “எதையுமே சரியான காலத்தில் முறையாக முயற்சித்தால் வெற்றி நிச்சயம் என்கிறார். இது போன்ற விசேஷ சக்தி சம்பந்தமான முயற்சிகள் அதற்குச் சாதகமான காலத்தில் தான் எடுக்கப்படவேண்டும் என்று அவர் சொல்கிறார்...”

 

ஷ்ரவன் தலையசைத்தாலும் அவன் முகத்தில் குழப்பம் தெரிவதை பாண்டியன் கவனித்தார்.  அவர் அவனிடம் விளக்கமாகச் சொன்னார். “இதெல்லாம் சரியான முகூர்த்த காலத்தில் ஆரம்பிக்கப்படுவது முக்கியம் என்று அவர் சொல்கிறார். இன்றைக்கு உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கி மதியம் 11.57 க்கு நீங்கள் அந்த இளைஞன் மீது கவனம் குவிக்க ஆரம்பித்தால் கண்டிப்பாக உங்களுக்கு அவனைப் பற்றிய கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்று அவர் சொன்னார். இயல்பாக இருக்கும் எந்தச் சக்தியும் அந்த சமயத்தில் கூடுதலாகப் பெருகும் என்கிறார் அவர்.”

 

ஷ்ரவன் கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் 11.47.  சிறிது யோசித்து விட்டு அவன் பாண்டியனிடம் சொன்னான். “நீங்கள் 11.57க்கு அலாரம் வைக்கிறீர்களா ஜீ. நான் அது வரை என் இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்திக்கிறேன். அலாரம் அடித்தவுடன் அந்த இளைஞன் மீது என் கவனத்தைக் குவிக்கிறேன். பார்ப்போம் எதாவது கூடுதலாகத் தெரிய வருகிறதா என்று...”

 

பாண்டியனுக்கு அவன் உடனடியாக அவர் சொன்னதை முயற்சி செய்து பார்க்கத் தயாரானது மிகவும் பிடித்தது.  சரியென்று அவரது கைபேசியில் அவர் அலாரத்தை 11.57க்கு வைத்தார். 

 

ஷ்ரவன் கண்களை மூடிக் கொண்டான். அவனுக்கு என்ன சொல்லப் போகிறோம் என்று தெரியவில்லை. மிகவும் கவனமாக அவன் இந்தச் சூழ்நிலையைக் கையாள வேண்டும். இந்தச் சூழ்நிலையை மட்டுமல்ல, தொடர்ந்து வரும் சூழ்நிலைகளையும் கச்சிதமாகக் கையாள வேண்டும். அவன் தன் இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தித்து விட்டு மந்திர ஜபத்தை மனதிற்குள் சொல்ல ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் அதில் அவன் ஐக்கியமாகி லயிக்க ஆரம்பித்தான். பாண்டியனையும், சுகுமாரனையும், அந்தச் சூழ்நிலையையும் கூட மறந்தான். அவனுக்குள் அந்த மந்திரம் மட்டுமே நிறைந்திருந்தது. முடிவில் அவனே அந்த மந்திரமானான்.

 

சாந்தமும், பேரமைதியும் அவனிடம் தெரிய ஆரம்பித்தது. அவனிடம் தெரிந்த மாற்றத்தைப் பார்த்து பாண்டியனும், சுகுமாரனும் பிரமித்தனர். பாண்டியனுக்கு ஆன்மீக அனுபவங்கள் கிடையாது. அவருக்கு அதில் சிறிதும் ஈடுபாடும் இல்லாமல் இருந்ததால் அவர் மற்றவர்களிடமும் அவற்றைக் கவனித்தது இல்லை. ஆனால் அவன் இப்போது இருக்கும் நிலை நடிப்பல்ல என்பதையும் அவன் வேறெதோ உலகத்திற்குச் சென்று விட்டதையும் அவர் உணர்ந்தார். சுகுமாரனும் கிட்டத்தட்ட அவரைப் போலவே உணர்ந்தார்.

 

அவர்கள் இருவரும் அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதை ஷ்ரவன் உணரவில்லை. மந்திரமாய் அவனே எங்கும் வியாபித்திருந்தான். அதில் இன்னொன்றுக்கு இடம் இருக்கவில்லை. அலாரம் அடித்த போது தான் அவன் நிகழ்காலத்திற்குத் திரும்பினான். எங்கு, எதற்காக உட்கார்ந்து மந்திர ஜபம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதும் அப்போது தான் அவனுக்கு நினைவுக்கு வந்தது.  அவன் உருவாக்கிய கற்பனை எதிரியைப் பற்றி இனி எதையாவது சொல்லியாக வேண்டும்... மூளையில் ஒரு பொறி தட்டியது. கத்தி முனையில் நடக்கும் வித்தை தான். ஆனால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!

 

ஷ்ரவன் தாழ்ந்த குரலில் சொன்னான். “அவன்... அவன் எதையோ தேடிக் கொண்டிருக்கிறான்....”

 

பாண்டியனும் தாழ்ந்த குரலில் பரபரப்புடன் கேட்டார். “என்ன தேடுகிறான்...?”

 

சிறிது நேர மௌனத்திற்குப் பின் ஷ்ரவன் சொன்னான். “யாரோ ஒரு நிஜ யோகியை?”

 

பாண்டியனும் சுகுமாரனும் ஒருவரை ஒருவர் பரபரப்புடன் பார்த்துக் கொண்டார்கள். பாண்டியன் கேட்டார். “எதற்கு அவன் நிஜ யோகியைத் தேடுகிறான்....?”

 

இதுவரை அவன் அவர்களுக்கு வேறொரு ஆள் மூலம் முன்பே தெரிந்ததைச் சொல்லி அவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதித்து விட்டான். அந்த இடத்திலிருந்து இனி அவர்களை அவன் எப்படி வழிநடத்துவது என்பதை அவனே புத்திசாலித்தனமாய் திட்டமிடலாம். திட்டம் அவனுடையதாய் இருந்தாலும் முடிவு அவர்களாய் எடுப்பது போல் இருப்பது மட்டும் இதில் மிக முக்கியம்

 

அவன் மெல்லச் சொன்னான். “அவரது காலடி மண் அவனுக்கு வேண்டியிருக்கிறது...”

 

இருவரும் திகைத்தார்கள். பாண்டியன் கேட்டார். “காலடி மண்ணா? எதற்கு?...”

 

எதோ ஒரு விசேஷ பூஜைக்கு.....”

 

என்ன பூஜை? எதற்கான பூஜை?...”

 

ம்ம்ம்....” ஷ்ரவன் எதையோ உற்றுப் பார்ப்பது போல் காட்டிக் கொண்டான். ”பூஜையில் பெரிய விளக்கொன்று தெரிகிறது, மயான காளியின் படம் ஒன்றும் தெரிகிறது.... நிறைய சின்னங்கள் தரையில் வரையப்பட்டு இருக்கின்றன.”

 

அவன் கூடுதலாக எதாவது சொல்வான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த பாண்டியன் அவன் எதையும் சொல்லாமல் போகவே மெல்லக் கேட்டார்.

 

அவர்கள் தேடும் நிஜ யோகி எங்கேயிருக்கிறார் என்று தெரிகிறதா?”

 

ஷ்ரவன் அந்தக் கேள்விக்கு பரசுராமன் சொன்ன பதிலையே சொல்வது நல்லது என்று எண்ணினான்.  ஏதோ தோட்டம் தெரிகிறது.....”

 

சொல்லி விட்டு அவன் மௌனமானான். பாண்டியன் பரபரப்புடன் கேட்டார். “பிறகு என்ன தெரிகிறது?”

 

பிறகு, பிறகு....” என்ற ஷ்ரவன் பின் முகத்தில் ஏமாற்றத்தைக் காட்டிச் சொன்னான். ”எல்லாம் மறைந்து விட்டது.” 

 

அவன் கண்களைத் திறந்த போது அவர்கள் இருவர் முகத்திலும் திகைப்பும், ஏமாற்றமும் கலந்து தெரிவதைப் பார்த்து வருத்தம் காட்டிச் சொன்னான். “காட்சி திடீரென்று வருவதைப் போலவே திடீரென்று போயும் விடுகிறது. என்னை மன்னிக்க வேண்டும்.”

 

பாண்டியன் சொன்னார். “மன்னிக்க எதுவுமில்லை ஷ்ரவனானந்தா. நீங்கள் இவ்வளவு சொன்னதே பெரிய விஷயம் தான். அடுத்த முறையும் முகூர்த்தம் பார்த்து தொடங்குவோம். கண்டிப்பாக, கூடுதலாக எதாவது தெரிய வரும்...”

 

பாண்டியன் ஷ்ரவனை அனுப்பி விட்டார். சுகுமாரன் பாண்டியனிடம் ஏமாற்றத்துடன் சொன்னார். “நான் எதிரி பற்றிய எல்லா தகவலும் இப்போதே தெரிந்து விடும் என்று எதிர்பார்த்தேன்...”

 

பாண்டியன் சொன்னார். “அவன் இவ்வளவு சொன்னதே பெரிய விஷயம் தான். எதிரி ஒரு நிஜ யோகியைத் தேடறான்னு கண்டுபிடிக்கவே தேவானந்தகிரிக்கு மந்திரம், யந்திரம், பூஜைன்னு எல்லாம் தேவைப்பட்டுச்சு. இவன் அது எதுவுமில்லாமல் நிமிஷங்கள்ல சொல்லிட்டான். கூடுதலாய் அவன் அந்த நிஜ யோகியை, அவரோட காலடி மண்ணுக்காக தான் தேடறான்னும் சொல்லிட்டான்.”

 

ஆனா அந்த மண் எதுக்குன்னு சொல்லலையே. அதை எப்படி தெரிஞ்சுக்கறது?”

 

தேவானந்தகிரிக்கு போன் பண்ணினா தெரிஞ்சுடப் போகுதுஎன்ற பாண்டியன் தன் அலைபேசியை எடுத்தார்..


(தொடரும்)

என்.கணேசன்

 



Thursday, October 30, 2025

சாணக்கியன் 185


 

லைகேது விரைந்து சென்று தன் சேனையுடன் சேர்ந்து கொண்ட பின் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். படைகளைச் சந்திக்கும் வரை அது முடியும் என்ற முழு நம்பிக்கை அவனுக்கு இருக்கவில்லை. ஆனால் கடைசி வரை நம்பிக்கை தந்து அவனுடன் இருந்தவன் சுசித்தார்த்தக் மட்டுமே. அதனால் சுசித்தார்த்தக் மீது அவனுக்குப் பரமதிருப்தி இருந்தது. உயிர் காப்பாற்றி படைகளோடு சேர்க்கிற வரை உறுதுணையாக இருந்தவன் என்பதால் அவன் சுசித்தார்த்தக்குக்கு ஒரு தங்கச் சங்கிலியும், ஒரு முத்து மாலையையும் வழங்கி கௌரவித்தான்.

 

பின் ஆழ்ந்து சிந்தித்து என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்று யோசித்து முடிவெடுத்து விட்டு அவன் காஷ்மீர குலு நேபாள மன்னர்களைச் சந்திக்கப் போனான்.

 

அந்த மூன்று மன்னர்களும் சற்று முன் தான் பர்வதராஜன் மர்மமான முறையில் இறந்து போனதைக் கேள்விப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு அந்த மரணத்தின் பின்னணி எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதால் கிடைக்கின்ற முதல் தகவலை உண்மை என்று முழுமையாக நம்பும் மனநிலையில் இருந்தார்கள்.

 

அவர்களிடம் அவன் பேசிய விதம் அவன் பர்வதராஜனின் மகன் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தது. “என் தந்தையின் ஆத்மார்த்தமான நண்பர்களே. அவர் தனக்காக யோசித்ததை விட உங்கள் மூவருக்காக யோசித்தது அதிகம். என்னிடம் அடிக்கடிமகனே வெற்றி அடைந்ததில் நமக்குச் சரியான பங்கு கிடைக்கிறதோ இல்லையோ, என் நண்பர்களுக்குச் சரியான பங்கு கிடைக்க வேண்டும் என்பதே எனக்கு அதிமுக்கியம்என்று  சொல்வார். வெற்றிக்குப் பிறகு பங்கீடு குறித்து ஆச்சாரியரிடம் அடிக்கடி பேசியும் வந்தார். ஆனால் ஆச்சாரியர் அவரிடம் பிடிகொடுத்துப் பேசவில்லை. அது அவருக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. அவர் இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு கூட வருத்தத்துடன் சொன்னார். “மகனே. வெற்றி இப்படி ஆச்சாரியரை மாற்றி விடும் என்று நான் கற்பனையிலும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆச்சாரியர் இப்போதுவெற்றியில் நாமிருவரும் பங்கு பிரித்துக் கொள்வோம். உங்கள் நண்பர்களுக்கு நாம் ஏன் பங்கு தர வேண்டும்என்கிற வகையில் பேசுகிறார். நான் அதை ஏற்க ஆணித்தரமாக மறுத்து விட்டேன்.  ’எங்களுக்கு இல்லா விட்டாலும் பரவாயில்லை ஆச்சாரியரே. என்னை நம்பி வந்திருக்கும் என் நண்பர்களுக்குரிய பங்கைக் கொடுத்து விடுங்கள். அது அவர்களுக்கு மறுக்கப்பட்டால் இறந்தாலும் இந்தக் கட்டை வேகாதுஎன்று சொல்லியிருக்கிறேன் என்றார்....” என்று குரல் தழுதழுக்கச் சொல்லி விட்டு மலைகேது வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

 

காஷ்மீர மன்னன் கவலையுடன் கேட்டான். “பின் என்ன நடந்தது?” 

 

மலைகேது அவன் தந்தை இருந்திருந்தால் எப்படிப் பேசுவாரோ அப்படியே கற்பனையில் ஜோடித்துப் பேசினான். “தந்தை சொன்னதற்கு ஆச்சாரியரும் சந்திரகுப்தனும்முதலில் வெற்றியைக் கொண்டாடுவோம். பிறகு இந்தப் பங்கீட்டைப் பற்றிப் பேசுவோம்என்று சொல்லி விட்டார்கள். அப்பாவியான என் தந்தை அதை நம்பிவிட்டார். அவர்கள் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தார்கள். முதல் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற என் தந்தை உயிரோடு திரும்பவில்லை. என்னையும் அந்த நிகழ்ச்சிகளுக்கு அழைத்திருந்தார்கள். நல்ல வேளையாக உடல்நலக் குறைவு காரணமாக நான் செல்லவில்லை. அதனால் தான் உயிர் தப்பினேன் என்று சொல்ல வேண்டும்....”

 

நேபாள மன்னன் கேட்டான். “அவர் எப்படி இறந்தார்?”

 

விஷத்தால் இறந்ததாய் எனக்குச் செய்தி கிடைத்தது. அவர் குடித்த மதுவில் அவர்கள் விஷத்தைக் கலந்திருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கிருக்கிறது.”

 

ஆச்சாரியர் என்ன சொல்கிறார்?” என்று குலு மன்னன் கேட்டான்.

 

மலைகேது சொன்னான். “யார் கேட்டார்கள்? கேட்க நான் அங்கேயே இருந்திருந்தால் அவர் எதாவது கதை திரித்துச் சொல்லியிருப்பார். பின் என்னை என்ன செய்வார் என்று யாருக்குத் தெரியும். நான் உடனே அங்கிருந்து தப்பித்து வந்து என் உயிரைக் காப்பாற்றிக் கொண்டேன்இப்போது என்னை ஆட்டிப் படைக்கும் எண்ணமெல்லாம் என் தந்தையின் மரணத்திற்கு அவர்களைப் பழி வாங்க வேண்டும் என்பதல்ல. அவர் கடைசி வரை உங்களுக்குப் பெற்றுத் தர நினைத்ததை உங்களுக்குப் பெற்றுத் தந்து விட வேண்டும் என்ற எண்ணம் தான்.”

 

அவர்கள் மூவரும் அவனை வியப்புடனும், மிகுந்த மரியாதையுடனும் பார்த்தார்கள்.

 

லைகேது அந்த மூன்று மன்னர்களின் இரக்கத்தையும், நன்மதிப்பையும் சம்பாதிப்பதில் வெற்றி கண்டாலும் அவன் அவர்களை சாணக்கியருக்கும், சந்திரகுப்தனுக்கும் எதிராகத் திருப்புவதற்கு சிரமப்பட வேண்டியிருந்தது. பர்வதராஜனின் மரணம் அநியாயமானது என்று அவர்கள் ஒத்துக் கொண்டாலும் அதற்காகவோ, தங்கள் பங்குக்காகவோ இணைந்து சந்திரகுப்தனுக்கு எதிராக போராட அவர்கள் தயங்கினார்கள்.

 

நேபாள மன்னன் வெளிப்படையாகவே சொன்னான். “மலைகேது உன் உத்தேசம் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அவர்களை எதிர்ப்பது நம்மால் முடிகிற காரியமா என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. பெரிதாகப் படை என்று ஒன்று இல்லாத போதே யவன சத்ரப் பிலிப்பைக் கொன்றவர்கள் அவர்கள். வாஹிக் பிரதேசத்தை வென்ற பிறகு யவன சத்ரப் யூடெமஸைக் கொன்றார்கள். மேலும் பலத்தைப் பெருக்கிக் கொண்டு உன் தந்தையையும் கொன்று விட்டார்கள். இப்போது இணையற்ற பலத்தோடு இருக்கும் அவர்களை எதிர்த்து வெல்வதை விடு, நாம் உயிரோடு இருப்பதாவது முடிகிற காரியமா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.”

 

அவன் சொன்னதை காஷ்மீர குலு மன்னர்கள் மெல்லத் தலையசைத்து ஆமோதித்தது மலைகேதுவை எரிச்சலடையச் செய்தது. அவன் இக்குறுகிய காலத்தில் அவன் தந்தையின் தந்திரத்தையும் பேச்சையும் திறம்படக் கற்றுத் தேர்ந்திருந்ததால் விடாமுயற்சியோடு சொன்னான். “நம் பயமும், தயக்கமும் தான் சாணக்கியரின் பலமாக இருக்கிறது. நாம் இத்தனை தூரம் போராடி நம் வீரர்களையும், ஆயுதங்களையும், குதிரைகளையும், யானைகளையும் இழந்தது ஒரு பலனுமில்லாமல் திரும்பப் போவதற்கா? இதையும் யோசித்துப் பாருங்கள்

 

காஷ்மீர மன்னன் சொன்னான். “உண்மை தான். ஆனால் எங்களையெல்லாம் விட அறிவும், அனுபவமும், வலிமையும் வாய்ந்த உன் தந்தையே அவர்களை எதிர்த்து பெற்ற பலன் உயிரை இழந்தது தான் என்கிற போது நாம் நம் வலிமையை பெருக்கிக் கொள்ளாமல் அவர்களை எதிர்ப்பது புத்திசாலித்தனமாகத் தெரியவில்லை மலைகேது

 

குலு மன்னனும் சொன்னான். “காஷ்மீர மன்னன் சொல்வது சரி தான். நாம் முன்யோசனை இல்லாமல், நம்மை மேலும் பலப்படுத்திக் கொள்ளாமல் எந்த முயற்சியில் ஈடுபடுவதும் நல்லதல்ல... அதனால் பொறு. நாம் யோசிப்போம்.”

 

மலைகேதுக்கு அதற்கு மேல் வற்புறுத்த முடியவில்லை. ஒரேயடியாக ஏற்றுக் கொள்ளா விட்டாலும் அவர்கள் தொடர்ந்து பாடலிபுத்திரம் செல்லாமல் அங்கேயே தங்கி யோசிக்கத் தீர்மானித்ததே ஆரம்ப வெற்றியாக மலைகேதுவுக்குத் தோன்றியது.  “நல்லது யோசியுங்கள். ஆனால் உங்களுக்காக என் தந்தை செய்திருக்கும் தியாகம் வீணாகக் கூடாது என்பதையும் மறந்து விடாதீர்கள்என்று சொன்னான்.

 

அவனுக்கு மறுநாளே ராக்ஷசரின் கடிதம் ஒரு தூதன் மூலம் வந்து சேர்ந்தது.

 

ஹிமவாதகூட இளவரசருக்கு வணக்கம்.

 

நாம் இதற்கு முன் சந்திக்கும் வாய்ப்பு இருந்திரா விட்டாலும் தங்கள் தந்தையைக் கண்டு பேசும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறேன். நடந்ததை எல்லாம் மறந்து அவருடன் நட்பு பாராட்டும் சந்தர்ப்பமும் எனக்குக் கிடைத்திருந்தது. நமது பொது எதிரியை எப்படி வீழ்த்துவது என்று சேர்ந்து ஆலோசித்து ஒரு முடிவையும் நாங்கள் எட்டியிருந்தோம். ஆனால் நாங்கள் எங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன் நம் பொது எதிரி சதி செய்து உங்கள் தந்தையைக் கொன்று விட்டது எனக்கு பேரதிர்ச்சியையும், பெருந்துக்கத்தையும் தந்தது. ஆனால் தாங்கள் தங்கள் தந்தையின் மரணத்தில் எச்சரிக்கையடைந்து பாடலிபுத்திரத்திலிருந்து தப்பித்துச் சென்றது  எனக்கு மிகுந்த ஆசுவாசத்தைத் தருகிறது. தாங்கள் இங்கேயே தங்கியிருந்தால் உங்கள் உயிருக்கும் ஆபத்து சம்பவித்திருக்கும் என்பது உறுதி.

 

தங்கள் தந்தை இறந்த போதிலும் அவர் நமக்கு விட்டுச் சென்ற பணி நாம் செய்வதற்காகக் காத்திருக்கிறது. அந்தப் பணியை நாம் செய்தால் ஒழிய அவர் ஆத்மா சாந்தியடையாது. அதைச் செய்யாமல் நீங்களும் தலைநிமிர்ந்து வாழ முடியாது. உங்களுடன் போருக்கு வந்த நட்பு மன்னர்களும் நிம்மதியாக இருக்க முடியாது. ஏனென்றால் நம் பொது எதிரி உங்கள் தந்தையைக் கொன்றதோடு திருப்தியடையப் போவதில்லை. அடுத்ததாக எதிரி வீழ்த்த நினைத்திருக்கும் பட்டியலில் உங்கள் அனைவர் பெயர்களும் இருக்கின்றன என்பதை நான் அறிவேன். ஏனென்றால் வெற்றியில் பங்கு கேட்க வரும் யாரையும் எதிரியாக நினைக்கும் போக்கு எதிரியிடம் வெளிப்பட்டு வருகிறது. அதனால் தங்கள் தந்தையின் மரணத்திற்குப் பழி தீர்க்க மட்டுமல்லாமல் எதிரியின் எதிர்காலத் தாக்குதல்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள நாம் ஒன்றிணைந்து போராடுவதே இப்போது நமக்கு இருக்கும் ஒரே வழி. இந்த உண்மை நிலையைத் தாங்கள் உணர்வது மட்டுமல்லாமல் தங்கள் நட்பு மன்னர்களுக்கும் புரிய வைத்து ஒருங்கிணையுங்கள். எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் உங்களுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். எதிரியை வீழ்த்துவது ஒன்றே நான் எதிர்பார்க்கும் ஒரே பலன்.   

 

தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

 

இப்படிக்கு,

தங்கள் தந்தையின் கடைசி நண்பன்

 

 

(தொடரும்)

என்.கணேசன்