பேரத்திற்குப் படியாததால் யுவராஜைத் தீர்த்துக் கட்ட நிர்மலாவும், நிரஞ்சனும்
ராஜேஷ்வரைக் கட்டாயப்படுத்தினார்கள்.
அவர் இதற்கு முன்பு துரோகத்திற்கு அந்தத் தண்டனையைத் தந்திருக்கிறார். ஆனால் துரோகத்திற்குத்
தரும் தண்டனையைக் காதலுக்குத் தர அவர் மனம் சம்மதிக்கவில்லை. தந்திரமாகச்
சொன்னதாகவே இருந்தாலும் “உங்க மகள் மதிப்புக்கு இணையாய் நீங்க இன்னும் சம்பாதிச்சுடலை
சார்.” என்று சொல்ல முடிந்தவனைக் கொல்ல அவருக்கு மனம் வரவில்லை மேலும்
மகள் தீவிரமாகக் காதலிக்கும் ஒருவனைக் கொன்று அவளை நேராகப் பார்க்க முடியும் என்று
அவருக்குத் தோன்றவில்லை..
யுவராஜைத் திருமணம் செய்து கொள்வதாக
இருந்தால் சொத்தில் ஒரு ரூபாய் கூடக் கிடைக்காது என்று ராஜேஷ்வர் மகளிடம் திட்டவட்டமாகச்
சொன்ன போது ஒரு கணம் கூடத் தாமதிக்காமல் அவள் அதற்குச் சம்மதித்தாள். இதில் எங்கள்
சம்மதமில்லை என்பதால் நாங்கள் திருமணம் செய்து வைக்க முடியாது என்று அவர் சொன்னார். அதற்கும்
அவள் சம்மதித்தாள். நிர்மலா, நிரஞ்சன் இருவருடைய
கடும் எதிர்ப்பையும் மீறி அவர் மகளை வீட்டை விட்டுச் செல்ல அனுமதித்தார். அவர்களிடம்
அவர் சொன்னார். “அவன் தனக்குப் பொருத்தமில்லாதவன் என்று அவளுக்குப் புரிய
வந்தால் கண்டிப்பாக அவள் அதைச் சகித்துக் கொண்டு அவனுடன் இருக்க மாட்டாள். ஒரு வேளை
அவன் பொருத்தமானவனாகவே இருந்தால் நாம் மறுப்பது சரியல்ல.”
நாடே நிர்ப்பயாவின் காதல் திருமணத்தைப்
பற்றிப் பேசியது. அதை நிர்மலாவும், நிரஞ்சனும்
அவமானமாக நினைத்தார்கள். இரண்டு மாதங்கள் நிர்மலா வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. தோழிகள், உறவினர்கள்
யாருடனும் அவள் அலைபேசியில் கூடப் பேசவில்லை. கணவரிடமும்
ஒரு மாதம் அவள் பேசவில்லை. நிரஞ்சனும் அவர் மீது சிறிது காலம் கோபமாக இருந்தான். மெள்ள மெள்ள
அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினார்கள். ராஜேஷ்வர்
மகள் தவறை உணர்ந்து திரும்பி வருவாள் என்று காத்திருக்க ஆரம்பித்தார்.
நிர்ப்பயா குடியிருந்த வீட்டில் இருக்கும்
வசதியை விட அதிகமாக ராஜேஷ்வரின் வீட்டு வேலைக்காரர்கள் வீடுகளில் வசதிகள் இருந்தன. அதை நிர்மலா
அடிக்கடி சொல்லிக் காட்டி அங்கலாய்ப்பாள். ஆனால் தாய்
சங்கடப்பட்டது போல் நிர்ப்பயா சங்கடப்பட்டதாகத் தெரியவில்லை. அவள் மகிழ்ச்சியாக
இருப்பதாகத் தான் அவளைக் கண்காணித்தவர்கள் தெரிவித்தார்கள்.
ராஜேஷ்வர் நினைத்தது போல முதல் வருடம்
நிர்ப்பயா திரும்பி வரவில்லை. அப்போதும் அவருக்கு யுவராஜ் மீது நம்பிக்கை வந்து விடவில்லை. அவர் எத்தனையோ
பொறுமையான ஏமாற்றுக்காரர்களைப் பார்த்து இருக்கிறார். ஒரு குழந்தை
பிறந்து அதன் மூலம் நிர்ப்பயா வாழ்வில் தன் இடத்தை வலிமைப்படுத்திக் கொண்டு யுவராஜ்
பணம் பறிக்க முயற்சி செய்யக்கூடும் என்று அவர் எதிர்பார்த்தார். சில மாதங்களிலேயே
நிர்ப்பயா கருத்தரித்தாள். பல குடும்பங்களில் சமரசம் ஏற்படக்கூடிய சமயம் அது என்றாலும், ராஜேஷ்வர்
குடும்பம் அப்போதும் மகளைச் சேர்த்துக் கொள்ளவில்லை. அவளுக்கு
ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மாதங்கள் உருண்டன. ஆனால் யுவராஜ்
பக்கத்திலிருந்து பணம் சம்பந்தமான எந்த அழுத்தமும் வரவில்லை. வாரம் ஒரு
முறை நிர்ப்பயா, யுவராஜ் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் ராஜேஷ்வருக்கு வந்து
சேரும். ஒரு நாள் கூட மகள் முகத்திலோ, மருமகன்
முகத்திலோ அவர் வருத்தத்தைப் பார்க்கவில்லை. இருவரும்
மகிழ்ச்சியாகவே இருப்பது அவருக்குத் தெரிந்தது. குழந்தை
பிறந்த பின் அவர்கள் இருவரின் முகத்தில் மகிழ்ச்சி கூடித்தான் இருந்தது.
நிர்ப்பயாவுக்குக் குழந்தை பிறந்தும்
இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. ராஜேஷ்வருக்கு யுவராஜும் நிர்ப்பயாவைப் போல
0.01 சதவீதத்தில் சேர்ந்த மனிதன் என்பது உறுதிப்பட்டது. வீட்டில்
அல்லாமல் அவன் வேலை பார்க்கும் இடம் மற்றும் சென்று வரும் மற்ற இடங்களில் எல்லாம் அவன்
எப்படி நடந்து கொள்கிறான் என்பதையும் அவர் தன் ஆட்கள் மூலம் கண்காணித்து வந்தார். உள்ளொன்று
புறமொன்று இல்லாத அபூர்வமான நல்ல மனிதன் அவன் என்பது அவருக்குச் சந்தேகத்திற்கு இடமில்லாமல்
உறுதியானது...
நிர்ப்பயாவின் மதிப்பை பெற்றோரை விட
அதிகமாய் அவளுடைய கணவன் உணர்ந்தவனாக இருக்கிறான் என்று ராஜேஷ்வருக்குத் தோன்றியது. “உங்க மகள்
மதிப்புக்கு இணையாய் நீங்க இன்னும் சம்பாதிச்சுடலை சார்.” என்று அவன்
சொன்னது நினைவுக்கு வர அவர் மெல்லப் புன்னகைத்தார். நிர்ப்பயாவின்
அருமையை அவள் கணவன் மட்டுமல்ல அந்தக் கட்டுரையை எழுதிய அந்தப் பெண் எழுத்தாளரும் உணர்ந்திருக்கிறார்.
“என்னங்க
தூங்கிட்டீங்களா?” நிர்மலாவின் குரல் ராஜேஷ்வரை நிகழ்காலத்திற்கு வரவழைத்தது.
கண்களைத் திறந்து மனைவியைப் பார்த்த
அவர் சொன்னார். “இல்லை.”
நிர்மலா அவர் கையில் இருந்த உமன்ஸ்
வர்ல்டு பத்திரிக்கையைப் பார்த்தாள். அவளுக்கும் அவளுடைய
தோழிகள் இருவரும், அவளுடைய சித்தி ஒருத்தியும் அந்தப் பத்திரிக்கையில் வந்த
கட்டுரையைப் பாராட்டிச் சொல்லியிருந்தார்கள். அவள் நேற்று
தான் அந்தப் பத்திரிக்கையை வாங்கி அந்தக் கட்டுரையைப் படித்திருந்தாள்.
”படிக்கவும், கேட்கவும்
நன்றாய்த் தான் இருக்கிறது. ஆனால் வாழ்கின்ற வாழ்க்கை நன்றாக இல்லையே. அவள் இழந்திருக்கிறது
எத்தனைங்கறது நமக்குத் தானே தெரியும்.” என்று சொன்ன அவளுடைய
குரலில் வருத்தம் இருந்தது.
அந்த எழுத்தாளர் கட்டுரை முழுவதிலும்
வியந்திருந்த விஷயங்களைச் சிலாகிக்க நிர்மலாவால் முடியாமல் இருப்பது ராஜேஷ்வரை ஆச்சரியப்படுத்தியது. அவர் அவளுக்குப்
புரிய வைக்க முயன்றார். “அவளுக்கு
வேண்டாததைத் தான் அவள் இழந்திருக்கிறாள். வேண்டியது அவளுக்கு
கிடைத்திருக்கிறது. அவள் சந்தோஷமாய் இருக்கிறாள். இதற்கு
மேல் அவளுக்கு என்ன வேண்டும் நிர்மலா?”
நிர்மலாவுக்கு அவர் சொன்னது புரியவில்லை. முகச்சுளிப்போடு
அவரை அவள் பார்த்தாள்.
அவர் ஒரு உறையை எடுத்து அவளிடம் நீட்டினார். “அவள் எவ்வளவு
சந்தோஷமாய் இருக்கிறாள் என்று நீயே பார்.”
நிர்மலா அந்த உறையை வாங்கிப் பிரித்துப்
பார்த்தாள். நிர்ப்பயாவின் புகைப்படங்கள் நிறைய இருந்தன. இந்த மூன்றாண்டுகளில்
எடுக்கப்பட்டவை அவை. எல்லாவற்றிலும் அவள் சந்தோஷமாய் தான் தெரிந்தாள். சிலவற்றில்
தனியாக இருந்தாள். சிலவற்றில் கணவனோடும், சிலவற்றில்
குழந்தையோடும், சிலவற்றில் கணவன் மற்றும் குழந்தையோடும் இருந்தாள். முகத்தில்
நிறைவோடும், மகிழ்ச்சியோடும் புகைப்படங்களில் மகள் தெரிந்ததைப் பார்த்த
பின்னும் அவள் வருத்தம் குறையவில்லை.
ராஜேஷ்வர் சொன்னார். “எத்தனையோ
அவள் இழந்ததாய் நீ சொல்கிறாய். ஆனால் எதையும் இழக்காத உன்னை விட அவள் அதிக சந்தோஷமாய் தான்
தெரிகிறாள். அதைக் கவனித்தாயா?”
அவர் சொன்னது அவளுடைய காதுகளில் விழுந்ததா
என்று அவருக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அவர் சொன்னது அவளிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தி
விடவில்லை. காதில் விழுந்திருந்தாலும் அந்த வார்த்தைகள் அவள் மூளை வரை
எட்டவில்லை என்றே அவருக்குத் தோன்றியது. அதற்குள் அவளுடைய
கவனம் பேரனின் புகைப்படங்களில் தங்க ஆரம்பித்தது. அவற்றை
முதல் முறையாகத் தான் அவள் பார்க்கிறாள் என்பதால் அவள் ஆர்வமாக ஒவ்வொன்றாகக் கூர்ந்து
பார்க்க ஆரம்பித்தாள்.
மகள் கருத்தரித்திருக்கிறாள் என்ற செய்தி
கிடைத்த போது கூட நிர்மலாவின் கோபம் குறைந்திருக்கவில்லை. மகளுக்கு
ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்று அறிந்த போதும் கூட அந்தக் குழந்தையை யுவராஜின்
குழந்தையாகத் தான் அவள் நினைத்தாள். அதனால் அந்தக் குழந்தையைப்
பார்க்க வேண்டும் என்று அவள் நினைத்ததில்லை. ராஜேஷ்வருக்கு
மட்டும் பேரனைப் பார்க்க வேண்டும், குழந்தையைக் கையில்
எடுத்துக் கொஞ்ச வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. ஆனால் அந்தப்
பாசம் வேலை செய்யும் என்று கணக்குப் போட்டு யுவராஜ் காத்திருக்கக்கூடும் என்ற சிறு
சந்தேகம் அவருக்கு இருந்து வந்ததால் அவர் பேரனைப் பார்க்கச் செல்லவில்லை.
பேரனின் புகைப்படங்களை முதல் முறையாக
ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்த நிர்மலாவிடம் ராஜேஷ்வர் கேட்டார். “என்ன பார்க்கிறாய்?”
“குழந்தைக்கு
நம்ம குடும்பத்து சாயல் என்னவெல்லாம் இருக்குன்னு பார்க்கிறேன்.” இரண்டு நிமிடங்கள் கழித்து ஒரு புகைப்படத்தை அவரிடம் அவள்
காட்டினாள். ”பக்கவாட்டில் பார்க்கிறப்போ நம்ம நிரஞ்சன் குழந்தையா இருந்தப்ப
தெரிஞ்ச மாதிரியே தெரியறான் பாருங்க.”
அவள் காட்டிய புகைப்படம் அவள் சொன்னபடி
தான் இருந்தது. குழந்தையிடம் தாய்மாமனின் சாயல் நிறைய இருந்தது. நிர்மலாவின்
முகத்தில் இறுக்கம் குறைந்து மென்மை படர்வதை ராஜேஷ்வர் கவனித்தார்.




