அர்ஜுனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தத்
தகவல்கள் அவன் அறியாதவை. அப்பா இது வரை இதையெல்லாம் அவனிடமோ நித்யாவிடமோ சொன்னதில்லை. வருடா வருடம்
அவர் இமயமலைக்குப் போய் அங்கு ஒரு வாரம் தங்கி விட்டு வருவார் என்றாலும் அவருடைய பயண
அனுபவங்களை அவர் அவர்களிடம் சொன்னதில்லை. அவர்களும் கேட்டதில்லை...
அர்ஜுன் கேட்டான். “முதல் தடவை
அந்த மகானைப் பார்த்தார் என்கிறீர்கள் சரி. ஒவ்வொரு
தடவையும் அந்த மகானை அவர் சந்திக்கிறார் என்று எப்படிச் சொல்கிறீர்கள் சித்தப்பா?”
“வெறும்
அனுமானம் தான்.” என்று ராஜாராம் ஒத்துக் கொண்டார். “முதல் தடவை
நண்பர்களோடு ட்ரெக்கிங் போவதற்காகப் போனவன் அடுத்த தடவைகள்ல போனப்ப எல்லாம் அவர்களைக்
கூப்பிடக்கூட இல்லை. அதனால் நான் அப்படி நினைக்கிறேன்....”
அர்ஜுன் அந்த இரண்டு நண்பர்கள் யாரென்று
கேட்டான். இருவரில் ஒருவர் தற்போது உயிரோடு இல்லை என்றும், இன்னொருவர்
வெளிநாட்டுக்குச் சென்று அங்கேயே வசிக்க ஆரம்பித்து விட்டார் என்றும் ராஜாராம் சொன்னார். சிறிது நேரம் அவரும் அவனும் ஒன்றும் பேசிக் கொள்ளாமல் கடல்
காட்சியையும், காற்றையும் ரசித்து அனுபவித்தார்கள்.
ராஜாராம் அர்ஜுனிடம் மெல்லக் கேட்டார். “என்னடா
கல்யாணம் எப்போ? அண்ணா கிட்ட சொல்லிட்டியா?”
”அப்பா கிட்ட
இன்னும் சொல்லலை சித்தப்பா”
“அண்ணா கண்டிப்பாய்
மறுக்க மாட்டானேடா.”
”அது எனக்கும்
தெரியும் சித்தப்பா. கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வருஷம் போகட்டும்னு நினைக்கிறேன்
சித்தப்பா. அதனால தான் சொல்லலை.”
“அந்தப்
பொண்ணு பெயர் என்னடா?”
”கீதா” என்று சொன்ன
அர்ஜுன் அவளும் வேறொரு பத்திரிக்கையில் நிருபராக இருக்கிறாள் என்பதையும் தெரிவித்தான். பத்திரிக்கையின்
பெயரைக் கேட்டுக் கொண்ட ராஜாராம் அதற்கு மேல் கீதாவைப் பற்றிய தகவல்களை அவனிடம் கேட்கவில்லை. இந்தத்
தகவல் போதும். இனி மீதியை அவரே தெரிந்து கொண்டுவிட முடியும்.
“சரி சித்தப்பா
நான் கிளம்பறேன்” என்று அர்ஜுன் கிளம்பினான். அவர் தலையசைத்தார். அவன் போய்
விட்டான். சிறிது நேரம் அவர் மட்டும் கடந்த கால நிகழ்வுகள் குறித்த
சிந்தனைகளில் ஆழ்ந்தபடி அங்கே அமர்ந்திருந்தார். முடிவில்
அவரும் அங்கிருந்து கிளம்ப எழுந்த போது அவர் மனம் கனத்திருந்தது. ‘சில மனக்கணக்குகள்
பொய்த்து விடுகின்றன. பொய்த்து விட வாய்ப்பிருக்கிறது என்ற பிரக்ஞையாவது முன்பே
இருந்திருந்தால் கூட, சில முடிவுகளை வேறு விதமாக எடுத்திருக்கலாம். என்ன செய்வது? வாழ்க்கைக்
கடிகாரத்தில் பின்னுக்குத் திருப்பும் வசதியில்லையே!’
அர்ஜுன் நித்யாவிடம் சித்தப்பாவின் கடற்கரை பங்களாவைப் பற்றிச்
சொல்லிக் கொண்டிருக்க, நித்யாவும் மிகுந்த உற்சாகத்துடன் அண்ணன் சொல்வதைக் கேட்டுக்
கொண்டிருந்தாள். முடிவில் கேட்டாள். “அதை சித்தப்பா
எப்போ வாங்கினார்?”
“சரியாய்
தெரியலை. கிட்டத்தட்ட மூனு வருஷம் இருக்கலாம்னு நினைக்கிறேன்.”
“சித்தப்பா
கிரஹப்பிரவேசத்துக்கு ஏன் நம்மளைக் கூப்பிடவேயில்லை?”
அந்தக் கேள்வியை அர்ஜுனும் அங்கிருந்து
வருகையில் தனக்குள் கேட்டுக் கொண்டிருந்தான். ஒரே ஒரு
பதில் தான் அவனுக்குக் கிடைத்தது. அதை அவளிடமும் சொன்னான். “கூப்பிட்டிருந்தால், அதை வாங்க
உனக்கு எப்படி பணம் கிடைச்சுதுன்னு அப்பா அவரைக் கேட்டுடுவாரோன்னு தவிர்த்து இருக்கலாம்னு
தோணுது.”
நித்யா புன்னகையுடன் சொன்னாள். “இருக்கும். அப்பாக்கு
மட்டும் ஏன் அண்ணா அந்த மாதிரி ஆசையெல்லாம் வர மாட்டேங்குது?”
சித்தப்பா சொன்னது அர்ஜுனுக்கு நினைவு
வந்தது. ”கடவுள் குற்றங்குறையில்லாத ஒரு நிறைமனிதனைப் படைக்க ஆசைப்பட்டு
அண்ணாவைப் படைச்சாரோன்னு நான் சில சமயங்கள்ல ஆச்சரியப்பட்டதுண்டு.” அவர் சொன்னதை
அவன் தங்கையிடம் சொல்ல அவள் பெருமிதத்துடன் சொன்னாள். “அப்பா க்ரேட். இல்லையா
அண்ணா?”
“இருக்கலாம்
நித்யா. ஆனால் அது அவரை எந்த மாதிரியான வாழ்க்கை நிலைல வெச்சிருக்குன்னு
யோசிக்கறப்ப அது முட்டாள்த்தனம் கூடன்னு தோணுது.”
அவள் ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்தாள். அவன் கேட்டான். “உனக்கு
அப்படித் தோணலையா நித்யா?”
“இல்லை அண்ணா. திருடனுக்கும், கொள்ளையடிக்கறவனுக்கும்
கூட அதைச் செய்யாதவங்க முட்டாள்களாய் தோணலாம். ஆனால் அதை நம்மால ஏற்றுக்க முடியுமா அண்ணா?”
அர்ஜுன் தங்கையைப் பெருமிதத்தோடு பார்த்தான். அவள் சொல்வதும்
சரிதான்... அவளிடம் அவன் சித்தப்பா சொன்ன இமயமலைச் சம்பவத்தையும் சொன்னான். அவளும்
அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டாள்.
“அண்ணா நாம அப்பா கிட்ட நேரடியாய் இதைக் கேட்டால் என்ன?”
“நீ கேளு” என்றான் அர்ஜுன். வாயாடியான
அவள் அவரைப் பல முறை கேள்விகளால் துளைத்திருக்கிறாள். அதனால்
அவள் கேட்பது அவருக்கு வித்தியாசமாய்த் தெரியாது..
அன்றிரவு செய்திகளில் ஒரு அமைச்சரின் காரசாரமான பேச்சு விவாத
விஷயமாக இருந்தது. அவர் ஒரு மதத்தினரின் உணர்வுகளைப் புண்படும் வகையில் பேசியிருந்தார்.
இனி சில நாட்களுக்கு இது தான் இங்கு
பேசுபொருளாக இருக்கும் என்பது அர்ஜுனுக்குப் புரிந்தது. அரசியலில்
அரசியல்வாதியின் ஒவ்வொரு பேச்சுக்கும் காரணம் உண்டு. எதுவுமே
உணர்ச்சிவசப்பட்டோ, வாய்தவறியோ வந்துவிடுவதில்லை. எல்லாமே
கணக்கு போட்டு பேசப்படுபவை, அல்லது பேசத் தவிர்ப்பவையாகத் தான் இருக்கும். இது போன்ற
பேச்சுக்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசப்படுபவை போலத் தோன்றினாலும், இவை மக்கள்
கவனத்தைத் திசை திருப்பும் நோக்கத்தினாலேயே பேசப்படுபவை. ஆளும் கட்சிக்குப்
பிரச்சினையான ஒன்றின் மீது மக்கள் கவனம் போகக்கூடாது என்னும் அவசியம் வரும் போது இப்படி
வில்லங்கமாக எதையாவது பேசி மக்கள் கவனத்தைத்
திருப்பவென்றே சிலர் இருக்கிறார்கள்.
ஆனால் இப்போதைக்கு ஆளும் கட்சிக்குப்
பிரச்சினையாகும் பெரிய விஷயம் எதுவும் இல்லை. இப்போது
தேர்தலும் நெருக்கத்தில் இல்லை. பின் ஏன் இந்த ஆள் இப்படிப் பேசுகிறார் என்று அர்ஜுன் யோசித்தான். செய்திகளில்
அடுத்து நர்மதாவின் வீட்டு சிசிடிவி கேமிரா இரண்டு நாட்கள் முன்பே பழுதாகி விட்டிருக்கிறது
என்றும் அதை அவள் சரிப்படுத்தாமல் வைத்திருப்பது விரக்தியாலும், தற்கொலை
எண்ணத்தாலும் என்று போலீஸார் நினைப்பதாகவும் செய்தி வாசித்தார்கள். அன்று காலை
தான் நர்மதாவின் தங்கை தமிழக போலீசார் மந்தமாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தாள். நர்மதாவின்
கொலையைத் தவிர வேறு எதுவும் பரபரப்பாக இங்கு நடந்து விடவில்லை. அதிலும்
கூட அவனைப் போன்ற சிலர் தான் ஆளும் கட்சியைச் சேர்ந்த யாரோ இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம்
என்று நினைக்கிறார்களே ஒழிய பொதுமக்கள் அந்த வகையில் இன்னும் யோசிக்க ஆரம்பிக்கவில்லை. அப்படி
மக்கள் யோசிக்க ஆரம்பிப்பதற்கு முன் அவர்கள் கவனத்தைத் திருப்ப நினைக்கும் முன்னெச்சரிக்கையோ? அந்த வகையில்
அவன் யோசிக்க ஆரம்பித்த போது, நர்மதா கொலை பற்றித் தீவிரமாக விசாரிப்பது முக்கியமாக அவனுக்குத்
தோன்ற ஆரம்பித்தது.
அன்றிரவிலேயே ராஜாராமுக்கு கீதா பற்றிய அனைத்து தகவல்களும்
வந்து சேர்ந்தன. கீதாவின் தந்தை ஒரு அரசு வங்கியில் மேலாளராக
வேலை பார்க்கிறார். அம்மா இல்லத்தரசி. கீதாவின் தம்பி பத்தாவது படிக்கிறான்.
அவர்கள் வசிக்கும் வீடு சொந்த வீடு. கீதா பட்டதாரி.
’நாட்டு நடப்பு’ பத்திரிக்கையில் மூன்று
வருடங்களாக அவள் நிருபராக வேலை பார்க்கிறாள். அவள் இப்போது
வாங்கும் மாத சம்பளம் பெட்ரோல் செலவு நீங்கலாக ரூ.21000/- கலகலப்பான
நல்ல பெண். அவளும் அர்ஜுனும்
மூன்று வருடங்களாகப் பழகுகிறார்கள். அவர்கள் இருவரும்
காதலர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் மற்ற பல நிருபர்களுக்கு இருக்கிறது....
யசோதா மகனிடம் பேச சமயம் பார்த்துக்
காத்திருந்தாள். மைதிலி தன் இளைய சகோதரியுடன் தினமும் இரவு ஒன்பதரை மணிக்குப்
பேச ஆரம்பிப்பது வழக்கம். அப்படிப் பேசுகையில் அவள் மொட்டை மாடிக்குச் சென்று விடுவாள். அவள் அப்படிச்
சென்ற அடுத்த நிமிடம் யசோதா மகன் அறைக்கு வந்தாள். “அர்ஜுன்
என்னடா சொல்றான்?”
“அத்திவாக்கம்
போனதைப் பற்றி இன்னைக்கும் அவன் மூச்சு விடலை. கல்யாணம்
எப்படான்னு கேட்டேன். இன்னும் ஒரு வருஷம் கழிச்சுன்னு சொல்றான். அவன் அந்தப்
பெண்ணைக் காதலிக்கிறதைப் பற்றி இன்னும் அண்ணா கிட்ட பேசலையாம்...”
யசோதா முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. அவள் மெல்லக்
கேட்டாள். “அந்தப் பொண்ணைப் பற்றி எதாவது விவரம் தெரிஞ்சுதா?”
தனக்குக் கிடைத்த விவரங்களை ராஜாராம்
அவளிடம் சொன்னார். அவர்கள் குடும்ப கௌரவத்திற்கு பெண்ணின் குடும்பம் போதாது
தான். ஆனாலும் பெரிதாகக் குறை சொல்ல எதுவுமில்லை. அதனால்
பேரனுக்கு மனைவியாகப் போகும் பெண் குறித்து அதிருப்தி எதையும் அவள் உணரவில்லை. ஆனால் ஒரு
வருடம் கழித்து தான் அவன் திருமணம் செய்து கொள்வதாக உள்ளான் என்பது தான் அவளை அதிருப்தியடைய
வைத்தது. ஆனால் அந்த விஷயத்தில் அவள் எதுவும் செய்வதற்கில்லை. அன்று முழுவதும்
அவள் மனம் பேரனைச் சுற்றியே இருந்தது. தேவையில்லாமல் அவன்
பழைய விஷயங்களைக் கிளறாமல் இருந்தால் போதும் என்று அவள் மனம் பிரார்த்தித்தது.
(தொடரும்)
என்.கணேசன்



