என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, August 24, 2026

ரட்சகன் 6

 


பேரத்திற்குப் படியாததால் யுவராஜைத் தீர்த்துக் கட்ட நிர்மலாவும், நிரஞ்சனும் ராஜேஷ்வரைக் கட்டாயப்படுத்தினார்கள்.  அவர் இதற்கு முன்பு துரோகத்திற்கு அந்தத் தண்டனையைத் தந்திருக்கிறார். ஆனால் துரோகத்திற்குத் தரும் தண்டனையைக் காதலுக்குத் தர அவர் மனம் சம்மதிக்கவில்லை. தந்திரமாகச் சொன்னதாகவே இருந்தாலும்உங்க மகள் மதிப்புக்கு இணையாய் நீங்க இன்னும் சம்பாதிச்சுடலை சார்.” என்று சொல்ல முடிந்தவனைக் கொல்ல அவருக்கு மனம் வரவில்லை மேலும் மகள் தீவிரமாகக் காதலிக்கும் ஒருவனைக் கொன்று அவளை நேராகப் பார்க்க முடியும் என்று அவருக்குத் தோன்றவில்லை..

 

யுவராஜைத் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் சொத்தில் ஒரு ரூபாய் கூடக் கிடைக்காது என்று ராஜேஷ்வர் மகளிடம் திட்டவட்டமாகச் சொன்ன போது ஒரு கணம் கூடத் தாமதிக்காமல் அவள் அதற்குச் சம்மதித்தாள். இதில் எங்கள் சம்மதமில்லை என்பதால் நாங்கள் திருமணம் செய்து வைக்க முடியாது என்று அவர் சொன்னார். அதற்கும் அவள் சம்மதித்தாள். நிர்மலா, நிரஞ்சன் இருவருடைய கடும் எதிர்ப்பையும் மீறி அவர் மகளை வீட்டை விட்டுச் செல்ல அனுமதித்தார். அவர்களிடம் அவர் சொன்னார். “அவன் தனக்குப் பொருத்தமில்லாதவன் என்று அவளுக்குப் புரிய வந்தால் கண்டிப்பாக அவள் அதைச் சகித்துக் கொண்டு அவனுடன் இருக்க மாட்டாள். ஒரு வேளை அவன் பொருத்தமானவனாகவே இருந்தால் நாம் மறுப்பது சரியல்ல.”

 

நாடே நிர்ப்பயாவின் காதல் திருமணத்தைப் பற்றிப் பேசியது. அதை நிர்மலாவும், நிரஞ்சனும் அவமானமாக நினைத்தார்கள். இரண்டு மாதங்கள் நிர்மலா வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. தோழிகள், உறவினர்கள் யாருடனும் அவள் அலைபேசியில் கூடப் பேசவில்லை. கணவரிடமும் ஒரு மாதம் அவள் பேசவில்லை. நிரஞ்சனும் அவர் மீது சிறிது காலம் கோபமாக இருந்தான். மெள்ள மெள்ள அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினார்கள். ராஜேஷ்வர் மகள் தவறை உணர்ந்து திரும்பி வருவாள் என்று காத்திருக்க ஆரம்பித்தார்.

 

நிர்ப்பயா குடியிருந்த வீட்டில் இருக்கும் வசதியை விட அதிகமாக ராஜேஷ்வரின் வீட்டு வேலைக்காரர்கள் வீடுகளில் வசதிகள் இருந்தன. அதை நிர்மலா அடிக்கடி சொல்லிக் காட்டி அங்கலாய்ப்பாள். ஆனால் தாய் சங்கடப்பட்டது போல் நிர்ப்பயா சங்கடப்பட்டதாகத் தெரியவில்லை. அவள் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தான் அவளைக் கண்காணித்தவர்கள் தெரிவித்தார்கள்.

 

ராஜேஷ்வர் நினைத்தது போல முதல் வருடம் நிர்ப்பயா திரும்பி வரவில்லை. அப்போதும் அவருக்கு யுவராஜ் மீது நம்பிக்கை வந்து விடவில்லை. அவர் எத்தனையோ பொறுமையான ஏமாற்றுக்காரர்களைப் பார்த்து இருக்கிறார். ஒரு குழந்தை பிறந்து அதன் மூலம் நிர்ப்பயா வாழ்வில் தன் இடத்தை வலிமைப்படுத்திக் கொண்டு யுவராஜ் பணம் பறிக்க முயற்சி செய்யக்கூடும் என்று அவர் எதிர்பார்த்தார். சில மாதங்களிலேயே நிர்ப்பயா கருத்தரித்தாள். பல குடும்பங்களில் சமரசம் ஏற்படக்கூடிய சமயம் அது என்றாலும், ராஜேஷ்வர் குடும்பம் அப்போதும் மகளைச் சேர்த்துக் கொள்ளவில்லை. அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மாதங்கள் உருண்டன. ஆனால் யுவராஜ் பக்கத்திலிருந்து பணம் சம்பந்தமான எந்த அழுத்தமும் வரவில்லை. வாரம் ஒரு முறை நிர்ப்பயா, யுவராஜ் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் ராஜேஷ்வருக்கு வந்து சேரும். ஒரு நாள் கூட மகள் முகத்திலோ, மருமகன் முகத்திலோ அவர் வருத்தத்தைப் பார்க்கவில்லை. இருவரும் மகிழ்ச்சியாகவே இருப்பது அவருக்குத் தெரிந்தது. குழந்தை பிறந்த பின் அவர்கள் இருவரின் முகத்தில் மகிழ்ச்சி கூடித்தான் இருந்தது.

 

நிர்ப்பயாவுக்குக் குழந்தை பிறந்தும் இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. ராஜேஷ்வருக்கு யுவராஜும் நிர்ப்பயாவைப் போல 0.01 சதவீதத்தில் சேர்ந்த மனிதன் என்பது உறுதிப்பட்டது. வீட்டில் அல்லாமல் அவன் வேலை பார்க்கும் இடம் மற்றும் சென்று வரும் மற்ற இடங்களில் எல்லாம் அவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதையும் அவர் தன் ஆட்கள் மூலம் கண்காணித்து வந்தார். உள்ளொன்று புறமொன்று இல்லாத அபூர்வமான நல்ல மனிதன் அவன் என்பது அவருக்குச் சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதியானது...

 

நிர்ப்பயாவின் மதிப்பை பெற்றோரை விட அதிகமாய் அவளுடைய கணவன் உணர்ந்தவனாக இருக்கிறான் என்று ராஜேஷ்வருக்குத் தோன்றியது. “உங்க மகள் மதிப்புக்கு இணையாய் நீங்க இன்னும் சம்பாதிச்சுடலை சார்.” என்று அவன் சொன்னது நினைவுக்கு வர அவர் மெல்லப் புன்னகைத்தார். நிர்ப்பயாவின் அருமையை அவள் கணவன் மட்டுமல்ல அந்தக் கட்டுரையை எழுதிய அந்தப் பெண் எழுத்தாளரும் உணர்ந்திருக்கிறார்.

 

என்னங்க தூங்கிட்டீங்களா?” நிர்மலாவின் குரல் ராஜேஷ்வரை நிகழ்காலத்திற்கு வரவழைத்தது.

 

கண்களைத் திறந்து மனைவியைப் பார்த்த அவர் சொன்னார். “இல்லை.”

 

நிர்மலா அவர் கையில் இருந்த உமன்ஸ் வர்ல்டு பத்திரிக்கையைப் பார்த்தாள். அவளுக்கும் அவளுடைய தோழிகள் இருவரும், அவளுடைய சித்தி ஒருத்தியும் அந்தப் பத்திரிக்கையில் வந்த கட்டுரையைப் பாராட்டிச் சொல்லியிருந்தார்கள். அவள் நேற்று தான் அந்தப் பத்திரிக்கையை வாங்கி அந்தக் கட்டுரையைப் படித்திருந்தாள்.

 

படிக்கவும், கேட்கவும் நன்றாய்த் தான் இருக்கிறது. ஆனால் வாழ்கின்ற வாழ்க்கை நன்றாக இல்லையே. அவள் இழந்திருக்கிறது எத்தனைங்கறது நமக்குத் தானே தெரியும்.” என்று சொன்ன அவளுடைய குரலில் வருத்தம் இருந்தது.   

 

அந்த எழுத்தாளர் கட்டுரை முழுவதிலும் வியந்திருந்த விஷயங்களைச் சிலாகிக்க நிர்மலாவால் முடியாமல் இருப்பது ராஜேஷ்வரை ஆச்சரியப்படுத்தியது. அவர் அவளுக்குப் புரிய வைக்க முயன்றார்.  அவளுக்கு வேண்டாததைத் தான் அவள் இழந்திருக்கிறாள். வேண்டியது அவளுக்கு கிடைத்திருக்கிறது. அவள் சந்தோஷமாய் இருக்கிறாள். இதற்கு மேல் அவளுக்கு என்ன வேண்டும் நிர்மலா?”

 

நிர்மலாவுக்கு அவர் சொன்னது புரியவில்லை. முகச்சுளிப்போடு அவரை அவள் பார்த்தாள்.

 

அவர் ஒரு உறையை எடுத்து அவளிடம் நீட்டினார். “அவள் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறாள் என்று நீயே பார்.”

 

நிர்மலா அந்த உறையை வாங்கிப் பிரித்துப் பார்த்தாள். நிர்ப்பயாவின் புகைப்படங்கள் நிறைய இருந்தன. இந்த மூன்றாண்டுகளில் எடுக்கப்பட்டவை அவை. எல்லாவற்றிலும் அவள் சந்தோஷமாய் தான் தெரிந்தாள். சிலவற்றில் தனியாக இருந்தாள். சிலவற்றில் கணவனோடும், சிலவற்றில் குழந்தையோடும், சிலவற்றில் கணவன் மற்றும் குழந்தையோடும் இருந்தாள். முகத்தில் நிறைவோடும், மகிழ்ச்சியோடும் புகைப்படங்களில் மகள் தெரிந்ததைப் பார்த்த பின்னும் அவள் வருத்தம் குறையவில்லை.

 

ராஜேஷ்வர் சொன்னார். “எத்தனையோ அவள் இழந்ததாய் நீ சொல்கிறாய். ஆனால் எதையும் இழக்காத உன்னை விட அவள் அதிக சந்தோஷமாய் தான் தெரிகிறாள். அதைக் கவனித்தாயா?”

 

அவர் சொன்னது அவளுடைய காதுகளில் விழுந்ததா என்று அவருக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அவர் சொன்னது அவளிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தி விடவில்லை. காதில் விழுந்திருந்தாலும் அந்த வார்த்தைகள் அவள் மூளை வரை எட்டவில்லை என்றே அவருக்குத் தோன்றியது. அதற்குள் அவளுடைய கவனம் பேரனின் புகைப்படங்களில் தங்க ஆரம்பித்தது. அவற்றை முதல் முறையாகத் தான் அவள் பார்க்கிறாள் என்பதால் அவள் ஆர்வமாக ஒவ்வொன்றாகக் கூர்ந்து பார்க்க ஆரம்பித்தாள்.

 

மகள் கருத்தரித்திருக்கிறாள் என்ற செய்தி கிடைத்த போது கூட நிர்மலாவின் கோபம் குறைந்திருக்கவில்லை. மகளுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்று அறிந்த போதும் கூட அந்தக் குழந்தையை யுவராஜின் குழந்தையாகத் தான் அவள் நினைத்தாள். அதனால் அந்தக் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று அவள் நினைத்ததில்லை. ராஜேஷ்வருக்கு மட்டும் பேரனைப் பார்க்க வேண்டும், குழந்தையைக் கையில் எடுத்துக் கொஞ்ச வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. ஆனால் அந்தப் பாசம் வேலை செய்யும் என்று கணக்குப் போட்டு யுவராஜ் காத்திருக்கக்கூடும் என்ற சிறு சந்தேகம் அவருக்கு இருந்து வந்ததால் அவர் பேரனைப் பார்க்கச் செல்லவில்லை.  

 

பேரனின் புகைப்படங்களை முதல் முறையாக ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்த நிர்மலாவிடம் ராஜேஷ்வர் கேட்டார். “என்ன பார்க்கிறாய்?”

 

குழந்தைக்கு நம்ம குடும்பத்து சாயல் என்னவெல்லாம் இருக்குன்னு பார்க்கிறேன்.”  இரண்டு நிமிடங்கள் கழித்து ஒரு புகைப்படத்தை அவரிடம் அவள் காட்டினாள். ”பக்கவாட்டில் பார்க்கிறப்போ நம்ம நிரஞ்சன் குழந்தையா இருந்தப்ப தெரிஞ்ச மாதிரியே தெரியறான் பாருங்க.”

 

அவள் காட்டிய புகைப்படம் அவள் சொன்னபடி தான் இருந்தது. குழந்தையிடம் தாய்மாமனின் சாயல் நிறைய இருந்தது. நிர்மலாவின் முகத்தில் இறுக்கம் குறைந்து மென்மை படர்வதை ராஜேஷ்வர் கவனித்தார். 

 

(தொடரும்)

என்.கணேசன்

Thursday, August 20, 2026

சதுரங்கம் 32


 

சோதா தன் மகன் ராஜாராமிடம் பேச வேண்டும் என்று காலையிலிருந்து காத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் ராஜாராமைச் சந்திக்க சிறிதும் இடைவெளியில்லாமல் பிரபலங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். அவள் பொறுமையிழந்தாள். என்ன பிழைப்பு இது? அவள் கணவர் உயிரோடிருந்த போது அவரைச் சந்திக்கவும் இப்படித் தான் ஆட்கள் வந்து கொண்டேயிருப்பார்கள். அவசரமாக அவரிடம் ஏதாவது பேச வேண்டும் என்றால் அது பெரும்பாலும் முடியாது.

 

அவளுடைய தம்பியுடன் பேசியதில் இருந்து அவளால் நிம்மதியாய் இருக்க முடியவில்லை. அத்திவாக்கம் கிராமத்திற்கு அர்ஜுன் போய் வந்திருப்பது வரப்போகிற பூகம்பத்தின் முன்னறிவிப்பாகத்தான் அவளுக்குத் தோன்றுகிறது. ஞானமூர்த்தியை அழைத்து எச்சரிக்கலாமா என்று கூட ஆரம்பத்தில் நினைத்து பின் அவள் மனதை மாற்றிக் கொண்டாள்.

 

ராஜாராமின் செக்ரட்டரியைக் கூப்பிட்டுக் கேட்டாள். “இந்தக் கூட்டம் எல்லாம் எத்தனை மணிக்கு முடியும்?”

 

சாயங்காலம் வரைக்கும் இன்னைக்கு இருக்கும்மா. ஆனா மதியம் 2 மணில 3 மணி வரைக்கும் சார் ஃப்ரீ தான்.”

 

இந்த மாதிரி தொடர்ச்சியா அப்பாயின்மெண்ட் தர்றது நீயா இல்லை அவனா?” யசோதா முகச்சுளிப்போடு கேட்டாள்.

 

செக்ரட்டரி தயக்கத்துடன் சொன்னார். “சார் தாம்மா.... வெளிநாட்டு ஆட்கள் இந்த ரெண்டு நாளா அதிகம்.... டெல்லில நடந்த ஒரு மாநாட்டுக்கு வந்தவங்க  சாரைப் பார்த்துப் பேசணும்னே இங்கே வந்திருக்காங்க... அதுல வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்களும் இருக்காங்க. சார் அவங்களை எல்லாம் சந்திக்க மறுக்கறதில்லை...”

 

என்னவோ போ. அவசரத்துக்கும் அவன் கிட்ட ஒரு வார்த்தை பேச முடியறதில்லை.” என்று யசோதா முகம் சுளித்தாள்.

 

மைதிலி குரல் உள்ளேயிருந்து வந்தது. “அதையே தான் உங்க மகன் கிட்ட அடிக்கடி சொல்றேன். சொல்றது அவர் காதுல எங்கே விழுது?”

 

மாமியாரும் மருமகளும் ஒத்துப் போகும் ஒரே விஷயம் இது தான். மற்றெல்லா விஷயங்களிலும் இருவரும் இருவேறு துருவங்கள்.

 

ஆனால் மைதிலி கூடுதலாக மனதில் நினைத்துக் கொண்டாள். ’கிழவி மகன் கிட்ட பேச அவசரப்படறதைப் பார்த்தால் ஏதோ பெரிய பிரச்சனை மாதிரி தான் தெரியுது. அம்மாவும், மகனும், அடிக்கடி ஏதோ ரகசியம் பேசிக்கறாங்க. ஆனால் நாம என்னன்னு கேட்டால் ஒன்னும் இல்லைம்பாங்க....’  

 

யசோதா ராஜாராமின் செக்ரட்டரியிடம் தாழ்ந்த குரலில் சொன்னாள். “சாப்பிடப் போகறதுக்கு முன்னாடி என் கிட்ட வந்து பேசிட்டு போக ராஜாராம் கிட்ட சொல்லு. சொல்லிவியா, இல்லை மறந்துடுவியா?”

 

கண்டிப்பாய் சொல்றேம்மாஎன்று சொல்லி விட்டு செக்ரட்டரி விரைந்தார். தாழ்ந்த குரலில் பேசினால், பதிலைத் தாழ்ந்த குரலிலேயே சொல்ல வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத அந்த செக்ரட்டரி மீது அவளுக்குக் கோபம் வந்தது. ஏற்கெனவே மைதிலிக்குப் பாம்புக்காது....

 

யசோதா தனதறைக்குச் சென்று மகன் வரவுக்காகப் பொறுமையிழந்து காத்திருந்தாள். நிமிடங்கள் யுகங்களாக நகர்ந்தன. ராஜாராம் மெல்ல வந்தார். ”என்னம்மா உடம்புக்கு எதாவது சரியில்லையா?”

 

யசோதா மகனிடம் அறைக்கதவைச் சாத்தும்படி சைகை செய்ய அவர் அறைக்கதவைச் சாத்தினார். “என்னம்மா?”

 

கேசவன் சொன்னதை அப்படியே யசோதா மகனிடம் தாழ்ந்த குரலில் சொன்னாள். கேட்ட பின் அவர் முகத்திலும் அதிர்ச்சி தெரிந்தது.     

 

யசோதா சொன்னாள்.  உண்மையாகவே அங்கே போனது அர்ஜுன் தானான்னு தெரியலை. ஆனால் மகுடபதியை இத்தனை வருஷம் கழிச்சு விசாரிச்சுகிட்டு போகக்கூடிய ஆள் எனக்குத் தெரிஞ்சு வேற யாரும் இல்லை. ”

 

ராஜாராம் வறண்ட  குரலில் சொன்னார். “அங்கே போனது அர்ஜுனாய் தான் இருக்கணும். ஏன் போனான்னு தெரியாட்டியும், அங்கே சொன்ன இன்சூரன்ஸ் கதைல அவனோட தொழில் முத்திரை தான் தெரியுது. ஆனால் அவன் அங்கே எதையும் தெரிஞ்சுக்க வாய்ப்பிருக்கலை. அதனால பயப்பட   எதுவுமில்லை.”

 

மகுடபதி பெயரைச் சொல்லி கூடுதலா தெரிஞ்சுக்க அவன் போன இடத்துல என் அம்மா வீடும் அங்கே தான்ங்கிறதை அவன் தெரிஞ்சு வெச்சிருப்பானேடா? வந்து கூடுதல் விவரத்தை என் கிட்ட கேட்டால்?”

 

எதைச் சொல்லணுமோ அதை மட்டும் சொல்லும்மா. நீ எல்லாத்தையும் சொல்லணும்னு இல்லையே.”

 

மகுடபதி ஏன் தற்கொலை செய்துகிட்டார்னு கேட்டால்?”

 

ராஜாராம் தாயை அர்த்தமுள்ள பார்வை பார்த்தார். “உனக்கு எப்படிம்மா தெரிஞ்சிருக்கும்? நீ சென்னைல இருக்கே. அவர் அத்திவாக்கத்துல இருக்கார். உன் அம்மா வீட்டுக்காரங்களுக்கும் ஒன்னும் தெரியல. எல்லாரும் வறுமை தான் காரணம்னு நினைச்சாங்கஅவ்வளவு தான்.”

 

மகன் சொன்னதைக் கேட்டு அவள் மனம் சற்று நிம்மதியடைந்தது. ஆனாலும் இன்னொரு சாத்தியக்கூறு அவளைப் பயமுறுத்தியது. “நான் சமாளிச்சுக்குவேன். ஆனால் பானுமதி சமாளிப்பாளா?”

 

ராஜாராம் தாயைக் கூர்ந்து பார்த்து சொன்னார். “அவன் அண்ணியைக் கேட்க மாட்டான்ம்மா. கேட்கறவனாயிருந்தா இன்னேரம் கேட்டிருப்பான். அண்ணியால சமாளிக்க முடியாமல் போயிருந்தால் இன்னேரம் நமக்குத் தெரிஞ்சிருக்கும்.”

 

எனக்கென்னவோ அவன் தேவையில்லாமல் பழசை எல்லாம் கிளறாமல், அவன் காதலிக்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு அவன் வாழ்க்கையை நல்லபடியாய் வாழ ஆரம்பிச்சுட்டா நல்லதுன்னு தோணுதுடா. நீ அவன் கிட்ட அந்த பொண்ணைப் பற்றிக் கேட்டுப் பாரேன். யாரு என்னன்னு தெரிஞ்சுதுன்னா ஞானமூர்த்தி கிட்டே நான் பேசறேன். சீக்கிரமா கல்யாண ஏற்பாட்டைச் செஞ்சா, தேவையில்லாத இந்தப் பழைய கதையை எல்லாம் கிளர்ற மனசோ நேரமோ அவனுக்கு இருக்காது.”

 

நாம அதைப் பற்றிக் கேட்டப்ப அவன் சொல்லலையேம்மா.  அண்ணா கிட்ட சொல்றதுக்கு முன்னாடி நம்ம கிட்ட சொல்றது எப்படின்னு அவன் தயங்கின மாதிரி தான் தோணுச்சு.”

 

யசோதா தளர்ச்சியுடன் கண்களை மூடிக் கொண்டாள். தாய் மனதில் என்ன எண்ண ஓட்டம் ஓடுகின்றது என்பதை ராஜாராம் அறிவார்.  மாற்ற முடியாத விஷயங்களை யோசித்துப் பயனில்லை. கடந்த காலத்தில் திருத்தங்கள் செய்ய நிகழ்காலத்தில் அனுமதியில்லை. இனி ஆக வேண்டியதில் மட்டுமே கவனம் இருப்பது புத்திசாலித்தனம்.

 

தாயை அவளுடைய எண்ண ஓட்டத்தில் இருக்க விட்டு விட்டு ராஜாராம் அமைதியாக வெளியேறினார்.   அவனிடம் தனியாகச் சில விஷயங்களை மனம் விட்டுப் பேசப் போவதாக அவன் சென்ற முறை வந்திருந்த போது அவர் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. சீக்கிரமே பேச வேண்டும். அவன் மனதில் அவர் மேல் இருக்கும் பழைய கோபத்தை முற்றிலுமாக போக்க வேண்டும். பேச வேண்டியதை இங்கு பேசுவது உசிதமல்ல.  அம்மா அடிக்கடி சொல்வது போல் மைதிலிக்குப் பாம்புக் காது. அவள் கேட்பது அவளோடு நிற்காது. மேலும், அவனை இங்கே வரவழைத்துப் பேசினால்  அம்மாவிடம் அவன் அத்திவாக்கம் பற்றியும் மகுடபதி தம்பதியரின் தற்கொலை பற்றியும் கூட எதாவது சடாரென்று கேட்டுவிடும் அபாயம் இருக்கிறது. அம்மா சமாளிப்பாள் என்றாலும் அது நாசுக்கான சமாளிப்பாக இருக்காது. அதனால் வேறொரு இடத்தில் தனியாக அவனை அழைத்துப் பேசுவது தான் நல்லது. அந்த சமயத்தில் அவனாக அந்த வில்லங்க விஷயங்கள் எதையாவது அவரிடம் கேட்க முற்படுகிறானா என்றும் பார்க்க வேண்டும்.  

 

 முடிவு செய்த ராஜாராம் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு முதல் வேலையாக அர்ஜுனுக்குப் போன் செய்தார்.                                                                                                                                                                                                                                                                                  

 (தொடரும்)

என்.கணேசன்  

Monday, August 17, 2026

ரட்சகன் 5

 


காலம் பொன் போன்றது என்ற பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, ராஜேஷ்வருக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்தும். சில நிமிடங்களில் அவர் பல நூறு கோடி ரூபாய்களைச் சம்பாதித்ததும் உண்டு. சில நிமிடங்களில் அவர் பல நூறு கோடி ரூபாய்களை இழந்ததும் உண்டு. அவருடைய முடிவுகள் ஒவ்வொன்றும் இந்தியாவின் பொருளாதாரத்தையும் பல்லாயிரம் மனிதர்களின் தனிப்பட்ட வாழ்வையும் பாதிக்க வல்லவை. அவர் முடிவெடுக்கும் ஒவ்வொரு வினாடியும் ஏராளமானவர்களின் வாழ்க்கையில் திருப்புமுனைகளை ஏற்படுத்தும் விதமாக இருந்திருக்கிறது, இருக்கிறது, இருக்கும். அதனாலேயே அவருக்கு வழக்கமான வியாபார சம்பந்தமான விஷயங்களைத் தவிர மற்றவற்றைக் கவனிக்கவும் நேரம் இருப்பதில்லை.

 

அப்படிப்பட்டவர் உமன்ஸ் வர்ல்டு பத்திரிக்கையில் மகள் தந்திருந்த பேட்டிக் கட்டுரையை முழுவதுமாகப் படிக்க அன்று நேரத்தை ஒதுக்கினார். சில வரிகளை இரண்டு முறை படித்தார். சில வரிகளைப் படித்து விட்டு புன்முறுவல் பூத்தார். சில வரிகளைப் படித்து விட்டு கண்கலங்கினார். சில வரிகளைப் படித்து விட்டு அவர் கண்களை மூடி யோசித்தார். அந்தப் பத்திரிக்கையை மூடி வைக்கையில் அவர் மனம் லேசாக இருந்தது.

 

அந்த எழுத்தாளர் எழுதியிருந்தார். “செல்வம் மனிதனை மாற்றக்கூடியது என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். பெருஞ்செல்வம் பெரிய அளவிலேயே மனிதனை மாற்றக் கூடியது என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை. ஆனால் பெருஞ்செல்வமும் மாற்றி விடாத ஒரு தூய்மையான ஸ்படிகமாக இந்தப் பெண் இருக்கிறாள் என்பதை நான் வியப்போடு பார்க்கிறேன்.”

 

பெருஞ்செல்வம் அவளை மாற்றி விடவில்லை என்பது மட்டுமல்ல, அந்தப் பெருஞ்செல்வத்தை உதறித் தள்ளி விட்டு செல்லுமளவு அவளிடம் அது ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தாமல் இருந்திருக்கிறது...  

 

சிறுவயதிலிருந்தே அவருடைய மகள் நிர்ப்பயா மிக வித்தியாசமானவளாக இருந்தாள். ஆடம்பரமான எதிலுமே நாட்டமில்லாதவளாக அவள் இருந்தாள். கல்வியில் அவள் சிறந்து விளங்கினாள். எல்லா வகுப்புகளிலும் மதிப்பெண்களில் முதல் மூன்று இடங்களைத் தாண்டி அவள் எப்போதும் கீழிறங்கியதில்லை. கலந்து கொள்ளும் கல்வி சம்பந்தமான போட்டிகளில் அவள் பரிசு பெறாமல் இருந்ததில்லை. அறிவுத் திறமையில் பெற்றோரைப் பெருமைப்படுத்திய அவள் மற்ற விஷயங்களில் புதிராகவும், வித்தியாசமானவளாகவும் இருந்தாள்.

 

முதல் குழந்தையான அவள் எதைக் கேட்டாலும் கோடிக்கணக்கில் செலவு செய்து வாங்கித்தர முடிந்த அவரிடம் அவளாகக் கேட்டது புத்தகங்கள் மட்டுமே. விலையுயர்ந்த பொருள்கள் எதுவும் அவளுக்கு ஒரு பொருட்டாக இருந்ததேயில்லை. பழகுகின்ற ஆட்களிடமும் அவள் குணாதிசயங்களில் உயர்தரத்தை எதிர்பார்த்தாளே ஒழிய அவர்களுடைய செல்வநிலை அவளுக்கு ஒரு பொருட்டாக இருந்ததில்லை.

 

அரண்மனை போன்ற அவருடைய வீட்டில் அடிக்கடி விருந்துகள் நடக்கும். சினிமா நடிகர் நடிகைகள், அமைச்சர்கள், பெரிய அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், பெரும்பணக்காரர்கள், மற்ற பிரபலங்கள் எனப் பலர் கலந்து கொள்வார்கள். அந்த விருந்துகளில் கலந்து கொள்வதை மிகப் பெரிய கவுரமாக அவர்கள் மற்றவர்களிடமும் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் அந்த விருந்துகளில் பெரும்பாலும் அவருடைய மகள் தென்பட மாட்டாள். அவளுடைய அறையில் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பாள். அவருடைய மனைவி நிர்மலாவுக்கு மகள் இப்படிச் செய்வது கடுங்கோபமாகவும், அவமானமாகவும் இருக்கும். மகளை அவள் கடுமையாகத் திட்டுவதும் உண்டு.

 

ஏன் நீ வரலை

 

வந்தால் போரடிக்குதும்மா

 

என்னடி போர். எல்லாரும் எப்படி சந்தோஷமாய் அனுபவிச்சாங்க தெரியுமா? உனக்கு சந்தோஷத்தை அனுபவிக்கத் தெரியல.”

 

உனக்கு சந்தோஷம்னா என்னன்னு தெரியுமாம்மா?”

 

என்னடி கேள்வி இது?”

 

நிர்ப்பயா தாயை இரக்கத்துடன் பார்த்து விட்டு பழையபடி தன் புத்தகத்தில் ஆழ்ந்து விடுவாள்.

 

ராஜேஷ்வரும் அவள் வராததற்கு ஒரு முறை காரணம் கேட்டதுண்டு.  நிர்ப்பயா அன்று சொன்னாள். “யாரும் உங்க மேலயோ அம்மா மேலயோ இருக்கிற அன்பால வரலை. எல்லாரும் உங்க பணத்துக்காக வர்றாங்க. நம்ம வீட்டோட, விருந்தோட பிரம்மாண்டத்தை அனுபவிச்சுட்டுப் போக வர்றாங்க. ஆத்மார்த்தமாய் யாரும் பேசறதுமில்லை. பழகறதுமில்லை. எல்லாரும் போலித்தனமாய் இருக்காங்கப்பா. என்னால அந்த போலித்தனத்தை ரசிக்க முடியல.”

 

என்றோ இந்த போலித்தனத்தை ஏற்றுக் கொள்ளப் பழகி விட்ட ராஜேஷ்வரை நிர்ப்பயா ஆச்சரியப்படுத்தினாள். இது தான் உலகம், இது தான் உலக இயல்பு என்று அவள் எப்போது உணர்ந்து கொள்வாள் என்று அவருக்கு விளங்கவில்லை. அவளுடைய மதிப்பீடுகளும், விருப்பங்களும் பணம் சாராதவையாக இருந்தன. அவரிடம் குவிந்திருக்கும் பணம் அவளுக்குப் பெரிய விஷயமாக இருப்பதாகவே அவருக்குத் தோன்றவில்லை. அது ஏன் என்று அவர் அவளிடம் ஒரு முறை நேரடியாகவே கேட்டிருக்கிறார்.

 

அவள் சொன்னாள். “உங்க பணத்தையும், நீங்க இருக்கிற உயரத்தையும் நான் மதிக்கிறேன்ப்பா. உங்களால தான் எத்தனையோ லட்சக்கணக்கானவங்களுக்கு ஒரு வேலையோ, வாழ்வாதாரமோ இருக்கு. அது எனக்குப் பெருமையாய் தான் இருக்கு.”

 

அவளுடைய சிந்தனையோட்டம் அந்த விஷயத்தில் மட்டுமல்லாமல் மற்ற எல்லா விஷயங்களிலும் கூட வித்தியாசமாக இருந்தது. மேலும் அவளால் பெரும்பாலானவர்களைப் போல முட்டாள்த்தனமான பேச்சுகளையும் கிசுகிசுக்களையும் வம்பு தும்புகளையும் ரசிக்க முடிந்ததில்லை. அவற்றில் கலந்து கொள்ளாமல் மௌனமாக ஒதுங்கி விடுவாள்.

 

அவளுடைய தம்பி நிரஞ்சன் அவளுக்கு எதிர்மாறாக இருந்தான். அவன் ஜாலியாகவும், வாழ்க்கையை அனுபவிக்கத் துடிப்பவனாகவும் இருந்தான். தந்தையின் பணத்தையும், குடும்ப விருந்துகளையும் ரசித்து அனுபவிப்பவனாகவும், அதே நேரத்தில், வியாபார நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு வியாபாரத்தையும் சிறப்பாகச் செய்பவனாக இருந்தான். இளமைக்கே உரிய சில அவசரங்கள் அவனிடம் இருப்பதைத் தவிர ராஜேஷ்வர் மற்றபடி அவனிடம் தவறு காணவில்லை. மகன் விஷயத்தில் பெற்றோர் இருவரும் திருப்தியாகவே இருந்தனர்.

 

மகள் கல்லூரியில் சேர்ந்தவுடனேயே அவளுக்குத் தகுந்த வரனைப் பார்ப்பதில் நிர்மலா மும்முரமாக இறங்கினாள். மகளது படிப்பு முடிந்தவுடன்  தான் திருமணம் என்றாலும் தகுந்த வரனை முன்கூட்டியே தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்வது முக்கியம் என்று அவள் நினைத்தாள். நிர்ப்பயாவைத் திருமணம் செய்து கொள்ள தகுந்த வரன்களிடையே கடுமையான போட்டி நிலவியது.

 

ராஜேஷ்வரும், குடும்பத்தினரும் சிறிதும் எதிர்பாராத விதமாக நிர்ப்பயா தன்னுடன் கல்லூரியில் படிக்கும் யுவராஜ் என்ற ஒரு இளைஞனைக் காதலிப்பதாகச் சொன்னாள். அவன் ஐபிஎஸ் தேர்வுக்கு முயற்சிக்கிறான் என்றும் அதை அவன் முடித்தவுடன் அவனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அவள் உறுதியாகவும் இருந்தாள். நடுத்தர வர்க்கத்திலும் கீழ்மட்டத்தில் இருக்கும் அந்த இளைஞனை அவள் திருமணம் செய்து கொள்வதை ராஜேஷ்வர், நிர்மலா, நிரஞ்சன் மூவருமே விரும்பவில்லை. அவர்களைப் போலவே அவனுக்கும் தாய்மொழி தமிழ் தான் என்பதைத் தவிர வேறு எந்தப் பொருத்தமும் இல்லாததால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். நிர்ப்பயாவின் பணத்திற்காகத் தான் யுவராஜ் அவளைக் காதலிக்கிறான் என்று சொன்னார்கள். அவர்கள் எதிர்ப்பு அவளை அசைக்கவில்லை. யுவராஜ் ஐபிஎஸ் ஆனதும் அவள் அவனை மணந்து கொள்ளத் தயாரானாள்.

 

நிரஞ்சன் தந்தையிடம், அவர்கள் இருவர் மட்டுமே இருக்கையில் சொன்னான். “அந்தப் பையன் கிட்ட பேசிப் பாருங்கப்பா. இல்லாட்டி முடிச்சுடுவோம்.” அதையே நிர்மலாவும் பிறகு சொன்னாள். நிர்ப்பயாவை மாற்ற முடியாது என்பது உறுதியாகத் தெரிந்ததால் அந்த இளைஞனை விலக வைப்பது தான் ஒரே வழி என்று ராஜேஷ்வரும் நினைத்தார்.

 

ஒரு நாள் ராஜேஷ்வர் யுவராஜை தனியாக வரவழைத்தார். நிர்ப்பயாவுக்குப் பதிலாக அவனுக்கு எத்தனை பணம் வேண்டும் என்று அவனிடம் வெளிப்படையாகவே கேட்டார்.

 

யுவராஜ் சொன்னான். “உங்க மகள் மதிப்புக்கு இணையாய் நீங்க இன்னும் சம்பாதிச்சுடலை சார்.”

 

அவன் அமைதியாகத் தான் அதைச் சொன்னான். ஆனால் அந்த வார்த்தைகள் அவரை அறைந்தன. ஆனாலும் நிர்ப்பயாவின் தந்தையாக அவரில் ஒரு பகுதி அந்தப் பதிலை மெச்சவும் செய்தது. அவன் மீது ஒரு தனி மதிப்பும் அவருக்கு ஏற்பட்டது. நிர்ப்பயாவை அவன் ஆத்மார்த்தமாய் தான் காதலிப்பதாகவும், அவருடைய பணத்தில் ஒற்றை ரூபாய் கூட அவனுக்கு வேண்டாம் என்றும் சொன்னான்.

 

நடுத்தர வர்க்கத்திலிருந்து தொழிலை ஆரம்பித்து இந்த அளவு உயர்ந்தவர் தான் அவரும். அவர் இத்தனை கால அனுபவத்தில் பல்லாயிரம் விதமான ஏமாற்றுக்காரர்களைப் பார்த்திருக்கிறார். ”பணம் ஒரு பொருட்டே அல்லஎன்று சொல்பவர்களில் 99.99 சதவீதம் பேர் பொய்யர்களே. மீதி இருக்கும் 0.01 பேரில் நிர்ப்பயா ஒருத்தியைத் தவிர அவர் வேறு யாரையும் பார்த்தது இல்லை. இனி பார்க்க முடியும் என்ற நம்பிக்கையும் இல்லை. அதனால் அந்த 0.01 சதவீதத்தில் அவனைச் சேர்க்க அவர் தயங்கினார். சமயம் வரும் போது அவன் வேறு முகம் காட்டுவான் என்று அவர் நம்பினார்.


(தொடரும்)

என்.கணேசன்