மகாவிஷ்ணு கோயில் பூசாரிக்கு பிரதம அமைச்சர் ராக்ஷசர் அழைக்கிறார் என்ற தகவல் மறுநாள் காலையில் கிடைத்தவுடன் மனதில் பதற்றம் உருவாகியது. ராக்ஷசர் அழைக்கிறார் என்றால் எதோ பிரச்னை அழைக்கிறது என்று அர்த்தம் என உள்ளுணர்வு எச்சரித்தது. பெரும்பாலும் அந்த மகான் விஷயமாகத் தான் அவரை ராக்ஷசர் அழைக்கிறார் என்பது மட்டும் புரிந்தது. இளவரசர் சுதானுவைப் போல ராக்ஷசருக்கும் அந்த மகானிடம் எதாவது கேட்க வேண்டி இருக்கலாம். அல்லது வேறு விஷயமாகவும் இருக்கலாம். அந்த வேறு விஷய யூகம் தான் பதற்றத்தை அதிகப்படுத்தியது.
அவசர அவசரமாக பூசாரி ராக்ஷசர் முன் சென்று நின்று வணங்கினார். ராக்ஷசர் ஒரு குற்றவாளியை நீதிபதி ஆராய்வது போல் சிறிது நேரம் ஆராய்ந்து விட்டுக் கேட்டார். “நேற்று கோயிலுக்கு ஒரு மகான் வந்தார் என்று கேள்விப்பட்டேன். அவர் உங்களுக்கு நன்றாகத் தெரிந்தவரா?”
“இல்லை பிரபு. இதற்கு முன்பு ஒரே ஒரு முறை கோயிலுக்கு வந்தவர் என்ற அளவில் தான் தெரியும்.”
“அப்படியானால் இளவரசருக்கு அவர் மிகவும் வேண்டப்பட்டவரோ?”
“இல்லை பிரபு. இளவரசரும் அவரை, சென்ற முறை கோயிலுக்கு வந்த போது தான் முதல் முறையாகப் பார்த்திருக்கிறார்.”
ராக்ஷசர் ஒன்றும் சொல்லாமல் பூசாரியையே யோசனையுடன் பார்க்கவே பூசாரி இந்த மனிதரிடம் அனைத்தையும் சொல்லி விடுவதே பாதுகாப்பு என்று உணர்ந்தவராக அந்த மகான் சென்ற முறை வந்ததிலிருந்து நேற்று வந்து போனது வரை அனைத்தையும் சொன்னார்.
ராக்ஷசருக்குக் குழப்பமாக இருந்தது. சென்ற முறை மகான் அதிகாலையில் கோயிலுக்கு வந்த பிறகு தான் அரசியும், சுதானுவும் சென்றிருக்கிறார்கள். யாரிவர் என்று அரசி கேட்டதிலிருந்து முந்தைய பரிச்சயம் அவர்களுக்கும், அந்த மகானுக்குமிடையே இல்லை என்பது நிச்சயம்.
“சென்ற முறை அவர் வந்த போது எதோ அருள்வாக்கை இளவரசருக்குச் சொன்னார் என்றீர்களே? என்ன சொன்னார்?”
“அந்த மகான் குரல் கரகரத்த குரல் பிரபு. மிகத் தாழ்ந்த குரலில் அவர் சொன்னதால் அது என்ன என்று என் காதுகளில் தெளிவாக விழவில்லை…”
நேற்று சுதானுவே பொற்காசுகளைக் கொடுத்து இவரை வெளியே அனுப்பி விட்டிருக்கிறான். அதிலிருந்து என்ன பேசுகிறார்கள் என்பதை பூசாரி அறிந்து கொள்வதில் அவர்களுக்கு விருப்பமில்லை என்பதும் தெளிவாகிறது. பூசாரி பொற்காசுகளை வாங்கிக் கொண்டது போல அந்த மகான் தாம்பாளத்துடன் கிடைத்த சன்மானத்தைப் பெற்றுக் கொண்டு விடவில்லை, அதை விட்டு விட்டே போயிருக்கிறார் என்பதை எண்ணுகையில் அவர் உண்மையாகவே ஆன்மிகப் பெரியவராய் தான் இருக்க வேண்டும்.
“இப்போது அந்த மகான் எங்கே?”
“தெரியவில்லை பிரபு. வேறெதாவது கோயிலுக்குப் போயிருப்பார்.”
பூசாரியின் அனுமானத்தை ராக்ஷசர் ரசிக்கவில்லை என்பது அவர் முகத்தின் கடுமையிலிருந்து தெரிந்தது. “இன்னொரு முறை அந்த மகான் வந்தால் தன்னிடம் தெரிவிக்கும்படி இளவரசர் சொல்லியிருக்கிறாரா?”
“இல்லை பிரபு”
“சரி. அந்த மகான் வந்தாரானால் என்னிடம் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும். அந்த மகானைப் போக விட்டு விடக்கூடாது. புரிந்ததா?”
பணிவுடன் தலையசைத்து விட்டுக் கிளம்பிய பூசாரிக்கு ராக்ஷசரிடம் அவர் எல்லாவற்றையும் சொல்லி விட்டது தெரிந்தால் சுதானுவின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என்ற பயம் வந்தது. ராக்ஷசர் அழைத்து குடைந்து விசாரித்தார் என்பதை அவராகவே தெரிவித்து விட்டால் சுதானுவிடம் நல்ல பெயர் எடுக்கலாம் என்று தோன்றியது. தெரிவித்ததற்கு ஏதாவது சன்மானம் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்றும் தோன்றியது. இன்னும் சில பொற்காசுகள் கிடைத்தால் மகளின் திருமணத்தைச் சிரமமில்லாமல் முடித்து விடலாம்…. இப்போதே சென்று தெரிவித்தால் ராக்ஷசரின் ஒற்றர்கள் கண்களில் பட்டு விடும் வாய்ப்பு அதிகம் என்பதால் இருட்டிய பிறகு அரண்மனைக்குச் சென்று பேசுவது நல்லது என்று முடிவு செய்தார்.
சுதானு கோபத்துடன் தாயிடம் கேட்டான். “பாடலிபுத்திரத்தில்
இளவரசரான எனக்குக் கூட பிரதம அமைச்சரின் அனுமதியில்லாமல் யாரையும் சந்திக்க உரிமை இல்லையா?”
தாரிணி சொன்னாள். “புதிர் போடாமல் விஷயத்தைச் சொல் மகனே”
“நேற்று நாம் அந்த மகானைச் சந்தித்து விட்டு வந்த தகவல் தெரிந்து பூசாரியை அழைத்து முழு விவரத்தை ராக்ஷசர் கேட்டிருக்கிறார். அவருக்கு தேவைக்கும் அதிகமாக இடம் கொடுத்து வைத்திருக்கிறார் தந்தை.”
”மெல்லப் பேசு மகனே. அவரால் தான் நிறைய விஷயங்கள் மகதத்தில் சரியாக நடப்பதாய் உன் தந்தை நினைக்கிறார். அவரைப் பற்றி யாரும் எந்தப் புகாரும் சொல்வதை உன் தந்தை விரும்புவதில்லை.”
“ஆனால் இளவரசனான என்னையே வேவு பார்ப்பதும், நான் யாரைச் சந்தித்து என்ன பேசினேன் என்று விசாரிப்பதும் எல்லை மீறும் செயல்களாகவே நான் பார்க்கிறேன். நான் மன்னனாகும் போது அவரை வைக்க வேண்டிய இடத்திலேயே வைத்திருப்பேன் தாயே”
போருக்கான ஆயத்தங்கள் பற்றி நடந்த அடுத்த ஆலோசனைக்கூட்டத்தில் புதியவர்களாக இரண்டு இளவரசர்களும் சேர்க்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கான இருக்கைகள் அரசருக்கு அருகிலேயே இருக்காமல் சேனாதிபதி அருகே இருந்ததை சுகேஷ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் சுதானு மரியாதைக் குறைவாகவே நினைத்தான். அரசரின் தனி இருக்கைக்கு இருபுறமும் வைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் ஒரு புறம் முதலாவதாக ராக்ஷசர் இருக்கையும், அவர் அருகே மற்ற அமைச்சர்கள் இருக்கைகளும் இருக்க இன்னொரு புறம் முதலாவதாக சேனாதிபதி இருக்கையும், அவனருகே சுகேஷ், அடுத்ததாக சுதானுவின் இருக்கைகளும் இருந்தன ’நீங்கள் இளவரசர்களாக இருக்கலாம். ஆனால் இங்கு உங்கள் இடம் எங்களுக்குப் பின்பு தான்’ என்று அது அறிவிப்பதாக சுதானுவுக்குத் தோன்றியது. இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் செய்பவர் ராக்ஷசர் என்பதால் அவர் மீது அவனுக்குக் கோபம் கூடியது.
தனநந்தன் கேட்டான். “எதிரிகள் தற்போது எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் எங்கே நம்மைத் தாக்க உத்தேசித்திருக்கிறார்கள்?”
ராக்ஷசர்
சொன்னார். “இப்போது எல்லோரும் சந்திரகுப்தனின் வாஹிக் பிரதேசத்தில் தான் இருக்கிறார்கள். அவர்கள் திட்டம் என்ன என்பது தெரியவில்லை. மகதத்தின் வடக்கு மற்றும் மேற்கு
பகுதி எல்லைகளில் தான் அவர்கள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம். நம் ஒற்றர்கள் வாஹிக்
பிரதேசத்திலும், நமது வடக்கு, மேற்கு பக்க எல்லைகளிலும் கூர்ந்து கவனித்துக் கொண்டு
தான் இருக்கிறார்கள்.”
ராக்ஷசர்
சொன்னார். “உண்மை. எனவே வடக்கு, மேற்குப் பகுதிகளில் முன்பே கணிசமான படைகளை நிறுத்துவது
நல்லதென்று நினைக்கிறேன். இரு திசைகளிலும் இரண்டிரண்டு இடங்களில் நாம் படைகளை நிறுத்தினால்,
அங்கிருந்து எங்கே தேவையோ அங்கே தேவைப்படும் நேரத்தில் நகர்த்திக் கொள்ள முடியும்…”
ராக்ஷசர் தொடர்ந்து ஆயுதங்கள் தயாரிக்கும் பணி அசுர வேகத்தில் நடந்து கொண்டிருப்பதைச் சொன்னார். பத்ரசால் வீரர்களின் போர்ப்பயிற்சிகள் முழு வீச்சில் நடப்பதைச் சொல்லி விட்டு போருக்கு வீரர்கள் தயார்நிலையில் இருப்பதாகச் சொன்னான். விரிவான ஆலோசனைகளும், திட்டங்களும் தொடர்ந்தன.
மறுநாளே படைகளைப் பிரித்து அனுப்பும் ஆயத்தப்பணிகள் ஆரம்பித்தன. அது சேனாதிபதி பத்ரசாலின் பொறுப்பிலேயே நடந்தது என்றாலும் அந்த இடத்திற்கு ராக்ஷசரும் வந்து சேர்ந்தார். பத்ரசால் அவர் வருகையால் சஞ்சலம் அடைந்தான். ஒரு வார்த்தையும் பேசாமல் வேடிக்கை பார்ப்பவர் போல் அவர் நின்று கொண்டிருந்தாலும் அதில் அவன் ஆபத்தை உணர்ந்தான்.
அந்தச் சமயத்தில் சுதானுவும் அங்கே வந்து சேர்ந்தான். ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அதிகாரத்தைத் தந்தை தந்த பிறகு இனி முக்கியமான வேலைகளில் கலந்து கொள்வதும், பொறுப்புகளைத் தானாக ஏற்றுக் கொள்வதும் அவருக்கு அவன் மேல் இருக்கும் அபிப்பிராயத்தை உயர்த்தும் என்று அவன் கணக்குப் போட்டான். சுகேஷை விட அவன் மேலானவன், தகுதியானவன் என்கிற எண்ணத்தை அவருக்கு வர வைத்து விட வேண்டும் என்ற துடிப்போடு இருந்ததால் அங்கு வந்தவனுக்கு ராக்ஷசரும் அங்கிருப்பது திருப்தியை அளித்தது. அவன் ஈடுபாட்டை அவரும் அறியட்டும், சுகேஷை விடத் துடிப்பானவன், பொறுப்பானவன் என்ற அபிப்பிராயம் அவருக்கும் வரட்டும் என்று நினைத்தான். அவர் கருத்துக்கு அவன் தந்தையிடம் எப்போதுமே கூடுதல் மதிப்பு உண்டு.
குதிரைகள் வரிசை வரிசையாக வந்து நிறுத்தப்பட ஆரம்பித்த போது ராக்ஷசர் ஏதோ ஒரு பிழையை உணர்ந்தார். ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அவர் கண்கள் விரிந்து பரந்து நின்ற குதிரைப்படையை அலச ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் அவருக்குப் பிழையாய் தெரிந்த விஷயம் என்ன என்பது புலப்பட்டது. அவர் அறிந்த வரை அவர்களது குதிரைப்படையில் ஏறத்தாழ பாதியளவு உயர்ஜாதிக் குதிரைகளான பாரசீகக்குதிரைகள் . ஆனால் இப்போது அவர் கண்முன் பாரசீகக் குதிரைகள் பாதியளவு இல்லை. அவற்றின் எண்ணிக்கை குறைவாகவும், மற்ற குதிரைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் தெரிந்தது.
(தொடரும்)
என்.கணேசன்