என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, August 14, 2025

சாணக்கியன் 174

 

ர்வதராஜன் யோசித்து விட்டு சத்தமாக சுசித்தார்த்தக்கை அழைத்தான். அவன் உடனடியாக வந்ததைப் பார்த்தால் மிக அருகில் தான் இருந்திருப்பான் என்று தோன்றியது. ஒட்டுக் கேட்டுக்கொண்டு இருந்திருக்கலாம். நிஜமாகவே இவன் ராக்ஷசரின் ஆளாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இவன் இயல்பே ஒட்டுக் கேட்பதாகவும் இருக்கலாம். எப்படியே எல்லாத் தகவல்களும் இவனுக்கு வேகமாகத் தெரியவரவும் செய்கின்றன. தனநந்தன் மகளை சந்திரகுப்தன் மணமுடிக்கப் போகும் தகவலையும், தனநந்தன் செல்வத்தை எடுத்துக் கொண்டு போக சாணக்கியர் அனுமதித்த தகவலில் பாதியையும் சரியாகத் தான் சொல்லியிருக்கிறான். அவ்வப்போது இவனிடம் பேச்சுக் கொடுத்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன...

  

வந்தவனிடம் தன் கால்களை அமுக்கச் சொல்லி விட்டு பர்வதராஜன் மெத்தையில் சாய்ந்து கொண்டான். சுசித்தார்த்தக் அவனுடைய கால்களை அமுக்கிக் கொண்டே ஏதோ யோசிப்பது தெரிந்தது. அவன் சற்று தள்ளி அமர்ந்து கொண்டிருந்த மலைகேதுவையும் அடிக்கடி பார்த்தான்.

 

மலைகேது அவனிடம் கேட்டான். “ஏனப்படி பார்க்கிறாய் சுசித்தார்த்தக்?”

 

உடனே அவனைப் பார்ப்பதை நிறுத்தி விட்டு தலைகுனிந்து கொண்ட சுசித்தார்த்தக்ஒன்றுமில்லை இளவரசே. அர்த்தமில்லாத எண்ண ஓட்டம். என்னை மன்னியுங்கள்என்று அவசரமாகச் சொன்னான்.

 

பர்வதராஜன் சொன்னான். “முதலில் உன் எண்ண ஓட்டத்தைச் சொல். பின் நாங்கள் அது அர்த்தமுள்ளதா, அர்த்தமில்லாததா என்று சொல்கிறோம்

 

சுசித்தார்த்தக் சொன்னான். “இப்படி இருந்திருக்கலாம், அப்படி நடந்திருக்கலாம் என்று ஆசைப்படுவது அர்த்தமுள்ளதல்லவே அரசே. நடக்காத, நடக்க வாய்ப்பில்லாத ஒன்றை என் மனது எண்ணுவதே முட்டாள்தனம் என்பதை நான் உணர்ந்தேயிருக்கிறேன்.”

 

பர்வதராஜன் அவனை முறைத்தான். சுசித்தார்த்தக் தலையைத் தாழ்த்திக் கொண்டு சொன்னான். ”மகத இளவரசி மிக அழகாய் இருப்பாள்: நம் இளவரசர் அவளை மணந்து கொண்டால் அவருக்குப் பொருத்தமாகவும், உங்களுக்கு இலாபகரமாகவும் இருக்கும் என்று எனக்குத் தோன்றியது.”

 

பர்வதராஜன் கேட்டான். “இலாபகரமாக இருக்கும் என்று நீ எப்படிச் சொல்கிறாய்?”

 

ராக்ஷசர் மகத இளவரசியை மணந்து கொள்பவனை எதிர்க்காமல் தன் அரசனாகவே ஏற்றுக் கொள்வார். ஏனென்றால் இரண்டு இளவரசர்களும் இறந்து விட்ட நிலையில் அரசர் தனநந்தரின் மருமகனே அடுத்த அரசனாகும் வாரிசாக இருப்பார். அவர் ஏற்றுக் கொள்வது இலாபகரமானது அல்லவா?”

 

பர்வதராஜன் சிரித்தான். “முட்டாளே. ராக்ஷசர் ஆதரித்தால் என்ன, எதிர்த்தால் என்ன, அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தி விடப் போகிறது. அவரே உயிருக்குப் பயந்து எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கிறார். இப்போது மகதத்தின் விதியைத் தீர்மானிப்பவர்கள் மகதத்தை வென்றிருக்கும் நாங்கள் தான். அதை நினைவில் வைத்துக் கொள்.”   

 

சுசித்தார்த்தக் சொன்னான். “ராக்ஷசருக்கு ஆதரவாக இப்போதும் நிறைய படைவீரர்களும், ஒற்றர்களும் இருக்கிறார்கள் அரசே. அவர் நினைத்தால் அவர்களை ஒன்று திரட்டிவிட முடியும். அதற்காகத் தான் அவர் மறைந்திருக்கிறார் என்றும் சரியான சந்தர்ப்பத்திற்குக் காத்திருக்கிறார் என்றும் பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அவருடைய அறிவுத்திறனும் ஆச்சாரியரின் அறிவுத்திறனுக்குச் சளைத்ததல்ல. ஆனால் இப்போதைய சூழ்நிலையைப் பார்த்தால் இந்தத் திருமணம் மூலமாக இருவரும் ஒரேயணியில் சேர்ந்திருக்கும் வாய்ப்பே அதிகமாய் தெரிகிறது

 

பர்வதராஜனுக்குப் பகீரென்றது. அவனுக்கு முன்பே இருந்த சந்தேகம் சரி தானா? அப்படியானால் ராக்ஷசர் கூட சந்திரகுப்தனை ஆதரிக்கும் நிலைமை இருக்கிறதா? அதனால் தான் ராக்ஷசர் பிடிபட்ட பின் குட்டையைக் குழப்பி பிரித்துக் கொள்ளலாம் என்று சூழ்ச்சிக்கார ஆச்சாரியர் சொல்கிறாரா

 

அந்தத் தகவல் பர்வதராஜன் மற்றும் மலைகேது மனங்களில் ஆழமாகப் பதிவதற்காகச் சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு சுசித்தார்த்தக் யோசனையோடு சொன்னான். “ஆனால் இந்தத் திருமணம் அரசர் தனநந்தரின் விருப்பத்திற்கு எதிராக, சாணக்கியரின் கட்டாயத்தின்படி நடக்கிறது என்று தெரிந்தால் கண்டிப்பாக பிரதம அமைச்சர் ராக்ஷசர் கடைசி வரை எதிர்ப்பார். அரசர் தன் பரம எதிரிக்கே மகளை மனப்பூர்வமாகத் திருமணம் செய்து கொடுக்க ஒத்துக் கொள்வார் என்பதை நம்பவும் முடியவில்லை தான். எது உண்மையோ? யாருக்குத் தெரியும். நானொரு பைத்தியக்காரன் என் எண்ண ஓட்டத்தை உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்....”

 

பர்வதராஜன் மனதில் பல்வேறு உணர்ச்சிகள் கொந்தளிக்க ஆரம்பித்தன. ஆச்சாரியரின் பெரிய சதியில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. உண்மையில் இவன் சொல்வது போல் தனநந்தனை மிரட்டியும், கொண்டு போகச் செல்வம் தருகிறேன் என்று ஆசை காட்டியும் ஆச்சாரியர் இத்திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்திருக்கிறாரோ? இதெல்லாம் பர்வதராஜனுக்குத் தெரியக்கூடாது என்று தான் அவனைத் தள்ளியே வைத்திருக்கிறாரோ?

 

ஒரு வீரன் அந்த வேளையில் உள்ளே வந்து பர்வதராஜனை வணங்கி விட்டுச் சொன்னான். “அரசே முந்தைய அரசர் தனநந்தர் கானகம் கிளம்பத் தயாராகி விட்டார். அவர் கொண்டு செல்லும்  செல்வத்தின் கணக்கைக் குறித்துக் கொள்ள பிரதம அமைச்சர் சாணக்கியர் தங்களை வரச் சொல்கிறார்

 

இத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் வெளிப்பார்வைக்குத் தெரியாதபடி சிறிய விஷயங்களையும் நியாயமாகச் செய்யும் சத்தியசந்தன் போல் காட்டிக் கொள்ளத் தான் இப்படி நடிக்கிறார் என்று பர்வதராஜனுக்குப் புரிந்தது. எப்படியோ முள்ளின் மேல் பட்டுத்துணி விழுந்து விட்டது. மிகவும் ஜாக்கிரதையாகவும், நுணுக்கமாகவும் தான் எடுக்க வேண்டும்...

.

இதோ வருகிறேன் என்று சொல்என்று சொன்னபடி பர்வதராஜன். எழுந்தான்.

 

னநந்தன் கானகம் செல்லக் கிளம்பி விட்டான். கிளம்பிய போது அவன் மகள் அவனைக் கட்டிக் கொண்டு அழுத போது அவனாலும் கண்கலங்குவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி விட்டுப் போகிறோம் என்ற நிறைவு மட்டும் மனதின் ஒரு மூலையில் ஆறுதலாகத் தங்கி இருந்தது.

 

தாரிணியும் கண்கலங்க துர்தராவைக் கட்டியணைத்துச் சொன்னாள். “எங்களைப் பற்றி வருத்தப்படாதே துர்தரா. நாங்கள் இங்கே இருந்திருந்தாலும் உன் சகோதரர்கள் வாழ்ந்து புழங்கிய இடங்களைப் பார்க்கையில் அவர்களைப் பற்றிய நினைவுகள் அதிகமாகி எங்கள் துக்கங்களும் அதிகமாகியிருக்கும். கானக வாழ்க்கை எங்கள் மனதை ஓரளவாவது அமைதிப்படுத்தும். அதை நினைத்து நீ அமைதியடைய வேண்டும்.”    

 

அதைக் கேட்டு அமிதநிதாவும் ”உண்மைஎன்று கண்கலங்கியபடி சொன்னாள்.  அவளுக்கும் மகளின் திருமணம் முடிந்த பின் அங்கிருந்து சென்று விட வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கி நின்றது. மகனை நினைவுபடுத்தும் இடங்களில் வாழ்வது அவளுக்கும் கஷ்டமாகவே இருந்தது.

 

தனநந்தனும் தாரிணியும் வெளியே வந்த போது ஒரு பக்கம் சாணக்கியரும் சந்திரகுப்தனும் நின்றிருந்தார்கள். இன்னொரு பக்கம் பர்வதராஜனும், மலைகேதுவும் நின்றிருந்தார்கள்.

 

 

தனநந்தன் சந்திரகுப்தனை முதல் முறையாகப் பார்க்கிறான். அவனைப் பார்த்த பிறகு மகள் வனிடம் மனம் பறிகொடுத்ததில் தனநந்தனால் தவறு காண முடியவில்லை. துர்தராவும் சந்திரகுப்தனும் நல்ல பொருத்தமான ஜோடியாக இருப்பார்கள் என்று தோன்றியது. தனநந்தனைப் பார்த்ததும் சந்திரகுப்தன் கைகூப்பி வணக்கம் தெரிவித்தான். தனநந்தன் தன் வருங்கால மருமகனையும், சாணக்கியரையும் பார்த்துக் கைகூப்பி லேசாகத் தலையசைத்து விட்டு, மறுபுறம் நின்றிருந்த பர்வதராஜன் மற்றும் மலைகேதுவையோ  திரும்பிப் பார்க்காமல் ரதத்தில் ஏறினான்.   

 

முன்னால் இரண்டு காவல் வீர்ர்கள் செல்ல, பின்னால் பயண வண்டியில் பணியாட்கள், அதன்  பின்னால் இரண்டு காவல் வீரர்களுடன் பின் தொடர அவன் ரதம் வேகமாகக் கிளம்பியது. பாடலிபுத்திர வீதிகளில் மக்கள் அவன் போவதை வேடிக்கை பார்க்க நின்றிருந்தார்கள். போகிற போது ஓரக்கண்களால் தனநந்தன் மக்கள் முகங்களைப் பார்த்தான். யாரிடமும் எந்த வருத்தமும் பெரிதாகத் தெரியவில்லை. ஆண்ட காலத்தில் அவனும் அவர்களை ஒரு பொருட்டாக நினைத்ததில்லை. அவர்களும் இப்போது அவன் கானகம் போவதில் எந்தப் பாதிப்பும் அடையவில்லை. ஆனாலும் நேரடியாக அதைப் பார்க்க நேரிட்டதில் அவன் முகம் இறுகியது. பின் அவன் இருபக்கமும் திரும்பாமல் நேர் பார்வை பார்க்க ஆரம்பித்தான். நகர வாயிலைக் கடந்த பின் மட்டும் அவனை அறியாமல் தனநந்தன் பின்னால் திரும்பிப் பார்த்தான். பல ஆண்டுகள் அவன் ஆண்ட தலைநகரம், இப்போது அன்னியமாய் அவனிடமிருந்து என்றென்றைக்குமாய் விலக ஆரம்பித்ததைப் பார்த்த போது அவன் மனம் கனக்க ஆரம்பித்தது….

 

தனநந்தனின் ரதம் கண்களிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்ற சாணக்கியர் நிதானமாகத் தன் குடுமியை முடிந்து கொண்டார். சந்திரகுப்தன் கண்கள் ஈரமானாலும் உதடுகள் புன்னகைத்தன.

 

 (தொடரும்)

என்.கணேசன்

Monday, August 11, 2025

யோகி 115


 ன்று மதிய உணவுக்குச் செல்லும் போதும் ஷ்ரவனும், முக்தானந்தாவும் பேசிக் கொள்ளவில்லை. சாப்பிடும் போதும் வழக்கம் போல் முக்தானந்தா தனியாகவே அமர்ந்து சாப்பிட்டார். சீக்கிரமே சாப்பிட்டு முடித்தவர் ஷ்ரவனுக்காகக் காத்திருக்காமல் உடனடியாக அறைக்கும் வந்து சேர்ந்தார். ஷ்ரவன் அதைக் கவனிக்காதது போலவும், சாப்பிட்டு விட்டு வெளியே சற்று நேரம் நின்று அவர் தெரிகிறாரா என்று பார்ப்பது போலவும் காட்டிக் கொண்டான். பின் அவர் தென்படாததைப் பார்த்துக் கிளம்புவது போலக் கிளம்பினான். கண்காணிப்பவர்கள் அதைப் பார்க்காமலிருக்க வழியில்லை.

 

அவன் அறைக்கு வந்த பின் அன்று காலை அலுவலக கம்ப்யூட்டரில் கண்டுபிடித்த தகவலை முக்தானந்தாவிடம் சொன்னான். அவருக்கு அபிநயானந்தா, கவிதானந்தா இருவர் பற்றியும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் வேறு வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டு இருப்பதில் அவர் ஆச்சரியப்படவில்லை.

 

அவர் அவனை எச்சரித்தார். “நீ அவர்களைப் பற்றி யாரிடமாவது விசாரிப்பதோ, அவர்களிடம் எப்படியாவது பேசப்போவதோ ஆபத்து ஷ்ரவன். அந்தத் தவறை மட்டும் செய்யாதே.”

 

அதை ஷ்ரவன் உணர்ந்தே இருந்தான். ஆனால் அவன் எதையாவது செய்தே ஆக வேண்டும். தேவானந்தகிரியின் அடுத்த வருகைக்கு முன் இங்கிருந்து அவன் போயாக வேண்டும். அதற்கு அவன் தீவிர நடவடிக்கை மேற்கொண்டேயாக வேண்டும்....

 

அவன் திடீரென்று முக்தானந்தாவிடம் கேட்டான். “சுவாமிஜி கல்பனானந்தா பிரம்மானந்தாவுடன் நெருக்கமாக இருந்த போதும் அடிப்படையில் அவர் நல்லவர் என்றும், அது இன்றும் மாறியிருக்க வழியில்லை என்றும் இப்போதும் நம்புகிறீர்களா?”

 

முக்தானந்தா சொன்னார். “ஆமாம்”. அதை யோசிக்க அவர் கண நேரமும் எடுத்துக் கொள்ளாததை ஷ்ரவன் கவனித்தான்.

 

முக்தானந்தா தொடர்ந்து சொன்னார். “ஆனால் அவள் உனக்கு உதவுவாள் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது ஷ்ரவன். அவள் தன்னை ஆபத்திற்கு உள்ளாக்கிக் கொண்டு உனக்கு உதவ மாட்டாள்.”

 

ஷ்ரவன் சொன்னான். “அது எனக்கும் புரிகிறது சுவாமிஜி. நல்லவராக இருப்பதற்கும், முட்டாளாக இருப்பதற்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது...”

 

அவர் அவன் சொன்னதை ரசித்தார். ஷ்ரவன் அன்று காலை கண்ணன் அவரைப் பற்றி விசாரித்ததைச் சொன்னான்.  முக்தானந்தா சொன்னார். “அவன் பாண்டியனின் வலது கையைப் போன்றவன். துறவு உடையில் இருந்தாலும் அவனுக்கும், துறவுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. கண்ணனுக்குக் கீழ் சில தடியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எதைச் செய்யவும் தயங்க மாட்டார்கள்...”

 

ஷ்ரவனுக்கு அன்று பிற்பகல் வேலை தோட்ட வேலையாக இருந்தது. அவனுக்கு கல்பனானந்தா ஒரு தனிப்பகுதியில் வேலையை ஒதுக்கி இருந்தாள். அந்தச் சிறிய தோட்டத்தில் வேறு யாரும் இல்லை. அவன் அங்கே வேலை செய்து கொண்டிருந்த போது கல்பனானந்தா அங்கே வந்தாள். வந்தவள் சுமார் ஐந்தடி தள்ளி நின்று அவன் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் மௌனமாக நின்றாள். ஷ்ரவன் அவளைத் திரும்பிப் பார்த்த போது லேசாக நட்புடன் அவள் புன்னகைத்தாள்.

 

பின் அந்த வகைச் செடிகளைப் பராமரிக்கும் வழிகளை எளிமையாக அவனுக்கு விளக்கினாள். அவளுக்குப் பின்னால் சற்று தூரத்தில் பாண்டியனின் வசிக்கும் கட்டிடம் தெரிந்தது. அடுத்த கட்ட நாடகத்தை அரங்கேற்ற உகந்த சூழ்நிலையாக அது ஷ்ரவனுக்குத் தெரிந்தது. உடனே அவளுக்குப் பின்னால் பார்த்தபடி ஷ்ரவன் சிலையாக அப்படியே சமைந்தான். அவன் முகத்தில் திகைப்பைக் காட்டினான்.

 

கல்பனானந்தா அதைக் கவனித்து திகைப்புடன் கேட்டாள். “என்ன ஆயிற்று?”

 

ஷ்ரவன் உடனே பேச வார்த்தைகள் வராதது போல் கையை மட்டும் நீட்டி பாண்டியனின் கட்டிடத்தைக் காண்பித்தான்.

 

கல்பனானந்தா திரும்பிப் பார்த்தாள். அங்கு எதுவும், யாரும் தெரியவில்லை. ஆனால் ஷ்ரவன் பாண்டியனின் கட்டிடத்தைக் கைகாட்டியதை தூரத்தில் நின்றிருந்த கண்காணிப்பாளன் ஒருவன் பார்த்து விட்டான். அவன் தானிருக்கும் இடத்திலிருந்து மெள்ள அவர்களை நோக்கி வர ஆரம்பித்தான். ஷ்ரவன் ஓரக் கண்ணால் அதைக் கவனித்தாலும், பார்த்தது போல் காட்டிக் கொள்ளவில்லை. கல்பனானந்தாவும் அந்தக் கண்காணிப்பாளன் வருவதைப் பார்த்தாள்.

 

அவள் ஷ்ரவனைக் கேட்டாள். “அங்கே என்ன இருக்கிறது?”

 

ஷ்ரவன் வாயைத் திறந்து மூடினான். பேச வார்த்தைகள் வராதது போல் காட்டிக் கொண்டான்.  கண்காணிப்பாளன் அவர்களுக்கு முப்பது அடி தூரத்திலேயே நின்று கொண்டு கூர்ந்து கவனித்தான்.

 

கல்பனானந்தா மெல்ல ஷ்ரவனைக் கேட்டாள். “உங்களுக்கு வழக்கம் போல் எதாவது காட்சி தெரிகிறதா?”

 

ஷ்ரவன் ஆமாம் என்று தலையை அசைத்தான்.

 

கல்பனானந்தா கேட்டாள். “என்ன தெரிகிறது?”

 

ஓநாய் அந்தக் கட்டிட வாசலில் நின்று கொண்டிருக்கிறது. அது.. அது...”

 

கல்பனானந்தா பரபரப்புடன் கேட்டாள். “அது?”

 

ஷ்ரவன் சொன்னான். “அது வாசல் அருகே இருக்கும் மண்ணைத் தோண்டிக் கொண்டிருப்பது போல் தெரிகிறது.... எதோ குழி தோண்டிக் கொண்டிருப்பது போல்...”

 

கல்பனானந்தா பாண்டியனின் வாசலைத் திரும்பிப் பார்த்தாள். அவள் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. அவள் ஷ்ரவனிடம் திரும்பி, கேட்டாள். “அப்புறம் என்ன தெரிகிறது?”

 

ஷ்ரவன் முகத்தில் திகைப்பைக் காட்டிக் கொண்டே சொன்னான். “அது.... அது.... மறைந்து விட்டது.”

 

ஷ்ரவன் தொடர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தான் என்றாலும், அடிக்கடி நிமிர்ந்து பாண்டியன் வசிக்கும் கட்டிடத்தைப் பார்த்தான். அவனையும் அறியாமல் செய்யும் செயல் போல ஷ்ரவன் காட்டிக்கொண்டான். சிறிது நேரம் கல்பனானந்தா அங்கேயே நின்றாள். அவன் கூடுதலாக எதையாவது பார்த்துச் சொல்வதானால் சொல்லட்டும் என்று நிற்பது போல் அது இருந்தது. முப்பது அடி தூரத்தில் நின்று கொண்டிருந்த கண்காணிப்பாளனும் அங்கேயே நின்றான்.

 

ஷ்ரவன் கல்பனானந்தாவிடம் மெல்லக் கேட்டான். “இதிலிருந்து எனக்கு எப்போது விடுதலை கிடைக்கும் சுவாமினி

 

எதிலிருந்து?”

 

இப்படிக் காட்சிகள் தெரியும் சாபத்திலிருந்து.”

 

கல்பனானந்தா சொன்னாள். “சாபம் என்று ஏன் நினைக்கிறீர்கள்? இறைவன் காரணத்தோடு உங்களுக்குக் கொடுத்த வரம் என்று ஏன் நினைக்கக் கூடாது?”  

 

ஷ்ரவன் வருத்தம் காட்டியபடி சொன்னான். “அப்படிக் காரணம் எதாவது விளங்கினால், வரம் என்று நினைக்கலாம்... ஆனால் காரணம் எதுவும் விளங்க மாட்டேன்கிறதே சுவாமினி

 

கல்பனானந்தா ஆறுதல் சொன்னாள். “பொதுவாகவே மனிதன் அவசரக்காரன். அவனுக்கு ஆரம்பத்திலேயே முடிவு வரை தெரிந்து விட வேண்டும் என்று அவசரம். ஆனால் அப்படித் தெரிந்து விட்டால் வாழ்க்கையில் சுவாரசியம் இருக்காது ஷ்ரவனானந்தா. தகுந்த சமயம் வரும் போது எல்லாமே தெரியும். பொறுமையாக இருங்கள்.”

 

கல்பனானந்தா சென்று விட்டாள்.

 

ஷ்ரவன் முதல் அடி எடுத்து வைத்தாகி விட்டது. பாண்டியனுக்கு இந்தத் தகவல் போகும். சிறிதாவது யோசிக்க முடிந்தவன் பிரச்சினையை உணராமல் இருக்க முடியாது. பாண்டியன் மகாபுத்திசாலி. எச்சரிக்கையுடன் ஒவ்வொன்றையும் திட்டமிடுபவர்.  அதனால் தன் வாசலில் ஓநாய் குழி தோண்டுகிறது என்ற செய்தியை அவரால் அலட்சியப்படுத்த முடியாது. அவர் மிகத் தைரியமானவர் என்றாலும், செய்வினை என்னவெல்லாம் செய்யும் என்ற அனுபவம் உள்ளவன். இப்போதும் ரசம் சாதம், தயிர்சாதம், இட்லி என பத்திய உணவை உண்டு கொண்டு இருக்கும் அவர் இந்தப் புதிய தகவலால் பாதிக்கப்படாமல் இருக்கவே முடியாது.

 

அறிவாளியால் முட்டாள் என்ன செய்வான் என்று தான் சொல்ல முடியாது. ஏனென்றால் முட்டாள்தனம் ஒருவனை எந்த விதத்திலும் யோசிக்க வைக்கலாம். ஐன்ஸ்டீன் சொன்னது போல பிரபஞ்சத்திற்குக் கூட எல்லை உண்டு. ஆனால் முட்டாள்தனம் எல்லை இல்லாதது.  ஆனால் ஒரு புத்திசாலியால், இன்னொரு புத்திசாலி, கிடைத்திருக்கும் தகவலை வைத்து என்ன செய்வான் என்பதைத் திட்டமிட்டுச் சொல்ல முடியும். பாண்டியனின் அலைபேசி உரையாடல்களையும், சமீபத்திய செயல்பாடுகளையும் வைத்தே, அவருடைய சிந்தனை ஓட்டத்தை ஓரளவு நன்றாக ஷ்ரவன் கணித்து வைத்திருந்தான். பயத்தினால் உந்தப்பட்டு உடனடியாக உதவிக்கு ஆளை அழைக்கும் ரகமாக பாண்டியன் இருந்தால், தேவானந்தகிரியை அழைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பாண்டியன் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்து பார்த்து விட்டு, தாக்குப் பிடிக்க முடியாமல் போனால் தான் தேவானந்தகிரியை வரவழைக்க நினைப்பார்

 

மிக ஆபத்தான முயற்சியில் தான் ஷ்ரவன் இறங்கியிருக்கிறான். ஆனால் ஆபத்தை எதிர்கொள்ளாமல் இதில் அவன் வேகமாக முன்னேற முடியாது. என்ன செய்வது!

 

(தொடரும்)

என்.கணேசன்



Thursday, August 7, 2025

சாணக்கியன் 173

 

சாணக்கியர் சொன்னார். ”பர்வதராஜனே. கொடுத்த வாக்கு மாறுவதும், மானமிழந்து வாழ்வதும் ஒன்று என்ற கொள்கையில் இருப்பவன் நான். அதனால் அவன் அப்படிச் சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் என்னால் மறுக்க முடியவில்லை. அதை நான் ஒத்துக் கொள்ள வேண்டியதாய்ப் போயிற்று

 

பர்வதராஜன் உடனே சொன்னான். “நீங்கள் ஒத்துக் கொண்டாலும் சந்திரகுப்தன் ஒத்துக் கொள்ள வேண்டியதில்லையே. அவனுக்குத் தன் திருமணத்தை முடிவெடுத்துக் கொள்ளும் பரிபூரண சுதந்திரம் இருக்கிறதல்லவா? அதனால் அவன் தாராளமாக மறுக்கலாமே.”

 

சந்திரகுப்தன் சொன்னான். “ஆச்சாரியர் வாக்கு மாறினார் என்ற பழிச்சொல் என்னால் வருவதில் எனக்கு உடன்பாடில்லை என்பதால் நானும் இத்திருமணத்திற்குச் சம்மதித்து விட்டேன்.”

 

சாணக்கியர் சொன்னார். “இவனைப் போன்ற ஒருவன் என் மாணவனாக இருப்பது என் பாக்கியமே அல்லவா பர்வதராஜனே. திருமணத்திற்கு நான் ஒத்துக் கொண்டாலும் திருமணம் முடியும் வரை தனநந்தன் இங்கிருக்க முடியாது என்று மிகத் தெளிவாகச் சொல்லி விட்டேன். அவன் மகளின் தாய் வேண்டுமானால் இங்கிருக்கட்டும், அவன் நான் சொன்னபடி இன்றைய சூரியாஸ்தமனத்திற்கு முன் போய் விட வேண்டும் என்று சொல்லி விட்டேன். அவன் இப்போது கிளம்பிக் கொண்டிருக்கிறான். அவன் கிளம்பும் போது வெறும் கையில் போவது அவன் மகள் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தி விடும் என்று தோன்றியதால் அவன் ரதத்தில் அவன் மனைவி, உடைகள் சேர்ந்த பின் மீதமிருக்கும் இடத்தில் எத்தனை செல்வத்தை அவனால் கொண்டு செல்ல முடியுமோ அத்தனை செல்வத்தையும் கொண்டு செல்லவும் அனுமதித்திருக்கிறேன். அது அதிகமாக இருக்க முடியாது என்றாலும் அந்த அனுமதியை அவனுக்கு நான் தந்திருக்கிறேன். நாம் செல்வத்தைப் பிரிக்கும் போது எங்கள் பங்கிலிருந்து அந்தச் செல்வத்தை நீ கழித்துக் கொள்ளலாம்.”

 

அதற்கு மேல் பர்வதராஜனுக்கு ஆட்சேபணை சொல்ல எதுவுமில்லாமல் இருந்தது அவர் பேச்சு என்றாலும் பர்வதராஜன் தன் அதிருப்தியைத் தெரிவிக்க நினைத்தான். “வெற்றிக்குப் பின் தனநந்தன் விஷயத்தை நீங்களாகவே தீர்மானித்த விதம் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை நான் வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன் ஆச்சாரியரே

 

சாணக்கியர் அவன் அதிருப்தியில் எந்த விதமான பாதிப்பும் அடையாதவராகச் சொன்னார். “நீ விருப்பு வெறுப்பின்படி சிந்திப்பதைத் தாண்ட வேண்டும் என்று உனக்கு அறிவுறுத்த வேண்டியவனாக நானிருக்கிறேன் பர்வதராஜனே. தனநந்தன் எனக்குப் பரம எதிரியாக இருந்த போதும் இந்த வேளையில் அந்த வெறுப்பு நாம் எடுக்கும் முடிவுகளைத் தீர்மானிப்பது தவறு என்று நான் நினைக்கக் காரணமே மக்களின் மனதில் நம் மீது நன்மதிப்பு குறைந்துவிடக்கூடாது என்பதால் தான்

 

பர்வதராஜன் எரிச்சலுடன் கேட்டான். “மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நாம் ஏன் கவலைப்பட வேண்டும் ஆச்சாரியரே? நம் தீர்ப்பை அனுசரிக்க வேண்டியவர்கள் அல்லவா அவர்கள்?” 

 

சாணக்கியர் சொன்னார். “நாம் இன்று மகதத்தை வெல்ல முடிந்ததற்கு முக்கிய காரணம் மக்களுக்கு தனநந்தன் மீதிருந்த அதிருப்தியும் என்று நீ மறந்து விடக்கூடாது பர்வதராஜனே. நமக்கு நாளை எதிரிகள் உருவானால் மக்கள் அவர்களுக்கு ஆதரவான நிலை எடுத்து விடும் முட்டாள்தனத்தை நாம் செய்துவிடக் கூடாது.”

 

ஆனாலும் தனநந்தனுக்கு அவ்வளவு கருணை காட்டியிருக்கத் தேவையில்லை. அவன் இனியும் நமக்கு எதிராக நடந்து கொள்ள மாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?”

 

அப்படி நடந்து கொண்டால் தயவு தாட்சண்யம் இல்லாமல் அவனைத் தண்டிப்பேன் பர்வதராஜனே. அதற்கு மேலும் கருணை காண்பிக்க நான் கடவுள் அல்ல. என் கொள்கை ஒன்றே ஒன்று தான். நான் எப்போதும் நியாயமாக நடந்து கொள்வேன். கொடுத்த வாக்கை என்றும் மீற மாட்டேன். ஆனால் அதையே என் பலவீனமாக நினைத்து யாராவது எதிராகச் சதியில் ஈடுபட்டால் அதே வழியில் அவர்களைக் கையாளத் தயங்க மாட்டேன்.”

 

அவர் அழுத்தந்திருத்தமாகச் சொன்னதைக் கேட்டு பர்வதராஜன் சிறிது மௌனம் சாதித்து விட்டுக் கேட்டான். “ராக்ஷசர் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லையா ஆச்சாரியரே?”

 

அவர் பற்றி எதுவும் தெரியவில்லை. அவர் வேலையாட்கள், காவலர்களிடம் விசாரித்து வருகிறேன். அவர் எங்கேயாவது மறைந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றால் அது எந்த இடம் என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறேன்.. இது வரை திட்டவட்டமாக எதுவும் தெரியவில்லை.... இங்கு இருக்கும் பணியாள் ஒருவன் கூட அவர் வீட்டில் பணி புரிந்தவன், அவர் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் என்று கேள்விப்பட்டிருந்தேன். அவனையும் விசாரிக்க வேண்டும்...”

 

பர்வதராஜன் சுசித்தார்த்தக்கை சத்தமாக அழைக்க, சுசித்தார்த்தக் தயங்கியபடி அங்கே வந்தான். சாணக்கியர் அவனைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டார். “நீ எத்தனை ஆண்டுகளாக ராக்ஷசரிடம் பணி புரிந்தாய்?”

 

பத்து வருடங்கள் இருக்கும் பிரபு

 

அவர் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் நீ என்றும் அவர் ரகசியங்கள் பலவும் அறிந்தவன் நீ என்றும் கேள்விப்பட்டிருந்தேனே அது உண்மை தானா?”

 

சுசித்தார்த்தக் பதறியபடி சொன்னான். “யாரோ புரளியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள் பிரபு. அவர் பணியாட்களிடம் எல்லாம் நெருக்கமாக இருப்பவர் அல்ல. எல்லோரையும் ஒரு குறிப்பிட்ட தூரத்திலேயே வைத்திருக்கக்கூடியவர். எப்போதும் கடுகடுவென்றே இருப்பவர் என்பதால் தான் அவர் சொந்தப் பெயரை விட்டு விட்டு அவரை ராக்‌ஷசர் என்று அனைவரும் அழைக்கிறார்கள்...”

 

அவர் தற்போது எங்கேயிருக்கிறார் என்று உனக்குத் தெரியுமா?”

 

சத்தியமாகத் தெரியாது பிரபு

 

சாணக்கியர் யோசித்தபடி அவனையே கூர்ந்து பார்த்திருந்து விட்டு அவனை அனுப்பி விட்டார். பின் அங்கிருந்து கிளம்பியவர் பர்வதராஜனிடம் ரகசியமாய் சொன்னார். “எனக்கென்னவோ இவன் கூடுதலாக அறிந்திருப்பான், எதையோ மறைக்கிறான் என்று தோன்றுகிறது. நீ எப்போதும் இவன் மேல் ஒரு கண் வைத்திருப்பது நல்லது.”

 

அவர்கள் போன பின்பு பர்வதராஜன் யோசனையில் ஆழ்ந்தான். மலைகேது தந்தையிடம் கேட்டான். “என்ன யோசிக்கிறீர்கள் தந்தையே?”

 

பர்வதராஜன் சொன்னான். “இந்த இரண்டு தந்திரக்காரர்களையும் எந்த அளவு நம்பலாம் என்று யோசிக்கிறேன் மகனே

 

ஆச்சாரியர் நம்மிடம் எதையும் மறைக்கவில்லையே தந்தையே.”

 

எதையும் அவர் மறைக்கவில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும் மகனே. அவர் தனநந்தனிடம் பேசும் போது அங்கு நாமிருக்கவில்லையே. ஆச்சாரியரைப் போன்ற அறிவாளி வாக்குக் கொடுத்து ஏமாறும் ரகமல்ல. எனக்கென்னவோ அவரே தனநந்தனிடம் பேரம் பேசி சந்திரகுப்தனுக்கு துர்தராவைத் திருமணம் செய்ய சம்மதிக்க வைத்திருக்கலாம்...”

 

அதனால் அவருக்கென்ன லாபம்?”

 

மகத அரியணையை சந்திரகுப்தனுக்காக அவர் குறித்து வைத்திருப்பதாக என் உள்மனம் சொல்கிறது. அதற்கு அச்சாரமாகவே அவர் சாமர்த்தியமாக அதைச் செய்திருக்கலாம். அவள் அரசியாகிறாள் என்றால் தனநந்தனின் ஆதரவாளர்களும் சந்திரகுப்தனை ஆதரிக்கும் வாய்ப்பிருக்கிறது அல்லவா?   மகதத் தலைநகரையும், முக்கியமான பகுதிகளையும் அவர்கள் எடுத்துக் கொண்டு முக்கியமல்லாத பகுதிகளை நம் தலையில் கட்டப்பார்க்கும் உத்தேசம் அவருக்கு இருக்க வாய்ப்புண்டு. சரி பாதியாய் எல்லாவற்றையும் பிரித்துக் கொள்வது என்று பேசிக் கொண்டோமே ஒழிய எதுயெது யாருக்கு என்று பேசிக் கொள்ளாததை அவர் தந்திரமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது மகனே.”

 

அதற்கு நாம் ஒத்துக் கொள்ளாவிட்டால் அவர் என்ன செய்ய முடியும் தந்தையே?”

 

நாம் கேட்க வேண்டிய கேள்வி அதுவல்ல மகனே, நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விநாம் கேட்பதற்கு அவர் ஒத்துக் கொள்ளா விட்டால் நாம் என்ன செய்ய முடியும் என்பது தான்.”

 

எப்படிப் பிரித்தாலும் கிடைப்பது நமக்கு லாபம் தானே தந்தையே. இந்த வெற்றிக்காக நாம் அதிகம் கஷ்டப்படவில்லையே

 

முட்டாளே. நீயே இப்படிப் பேசினால் எப்படி? அவர் கொடுத்த வாக்கை நாம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நமக்கு மிகுந்த இலாபம் தரும்படியான பகுதிகளையும், செல்வத்தையும் பிரித்தெடுத்துக் கொள்ளத் தான் நாம் யோசிக்க வேண்டுமேயொழிய நமக்கு எதிரான நியாயத்தை நாம் யோசிக்கக் கூடாது....”

 

சரி தான். நாம் கவலைப்பட பெரிதாக எதுவும் இல்லை என்று உங்களிடம் தான் நான் சொல்ல வந்தேன் தந்தையே. நீங்கள் அவரிடம் பேரம் பேசும் போது நான் இதையெல்லாம் சொல்லப் போவதில்லைஎன்ற மலைகேது குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னான். “சுசித்தார்த்தக்குக்கு ராக்ஷசர் பற்றிக் கூடுதல் தெரிந்திருக்கும் என்று ஆச்சாரியர் சொல்கிறாரே அவனிடம் நீங்கள் கேட்டுப் பார்த்தால் என்ன? ராக்ஷசரை சிறைப்பிடித்து விட்டால் பின் சாணக்கியர் பங்கீட்டைத் தொடர்ந்து தாமதிக்க முடியாதல்லவா?”

 

(தொடரும்)

என்.கணேசன்