என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, September 15, 2025

யோகி 120


 முக்தானந்தா தொடர்ந்து சொன்னார். “... அவளுடைய தந்தையின் செயலால் எல்லாமே வெறுத்துப் போய் நிம்மதிக்காக ஞான மார்க்கத்தில் நுழைந்தவள் அவள். பின் எங்கள் எல்லோரையும் விட ஆன்மீகத்தில் மிக ஆழமாய்ப் போனவள். அவள் எங்கள் எல்லோரையும் விட அதிகமாக, யோகாலயத்தின் எதிர்காலக் கனவுகளை வளர்த்துக் கொண்டவள். வயதில் மிக இளையவளானாலும் பிரம்மானந்தா உட்பட நாங்கள் எல்லோரும் அவளை மதித்தோம். இங்கே விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தவுடன் அவள் எப்போதோ இங்கிருந்து போய் விடுவாள் என்று நான் எதிர்பார்த்தேன். எங்கே போனாலும் அவளுடைய அறிவுக்கும், ஞானத்திற்கும் சிறப்பான இடம் கிடைத்திருக்கும். ஆனால் அவள் ஏன் போகவில்லை என்பது தெரியவில்லை. பிரம்மானந்தா மாறியது போல் அவளாலும் மாற முடியும் என்று என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் அவள் மாறாமல் இதையெல்லாம் எப்படி சகித்துக் கொண்டிருக்க முடியும் என்றும், பிரம்மானந்தாவுடன் நெருக்கமாக இருக்க முடியும் என்றும் எனக்கு இன்னமும் புரியவில்லை.”

 முக்தானந்தா சொல்வதை எல்லாம் கேட்கையில் அவனுக்கும் கல்பனானந்தா ஒரு புதிராகவே தோன்றினாள்.

 முக்தானந்தா தொடர்ந்து சொன்னார். “எனக்குத் தெரிந்த கல்பனானந்தா ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளதைப் போலவே பெண் உரிமைக்காகவும் தைரியமாய் குரல் கொடுப்பவள். அவள் பட்ட கஷ்டங்கள் அவளுக்காக மட்டுமல்லாமல் மற்ற பெண்களுக்காகவும் போராடத் தூண்டியிருந்தன. அதனால் தான் நான் அன்றைக்கு, சைத்ராவை கல்பனானந்தா காட்டிக் கொடுத்திருக்கவோ, அவளுடைய மரணத்திற்குக் காரணமாய் இருந்திருக்கவோ, வாய்ப்பில்லை என்று உறுதியாக சொன்னேன்....”

 அப்படிப்பட்ட கல்பனானந்தா எந்த விதமான நிர்ப்பந்தங்களால் சிக்கி இங்கேயே இருக்கிறாள் என்பது ஷ்ரவனுக்கும் தெரியவில்லை. ஆனால் சைத்ரா பற்றிய உண்மைகளை அறிந்தவளும், சைத்ரா சொன்ன யோகியை அறிந்தவளுமான ஒருத்தி இங்கே இருக்கிறாள் என்பதும், அவள் முழுவதுமாக எதிரிகள் கோஷ்டியில் சேர்ந்தவளுமல்ல என்பதும் அறிந்து கொள்ள முடிந்தது அவனுக்குத் திருப்தியளித்தது.

 மறுநாள் காலை அவன் வழக்கம் போல் மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருந்த போது மறுபடியும் அந்த ஓநாய் அவனுக்குத் தென்பட்டது. அவன் மகிழ்ச்சியாகஹாய் நண்பாஎன்று மனதிற்குள் அழைத்தான். ஓநாய் அவனை நெருங்கி வந்து அவனைத் தொட்டது. இப்போது அவனுக்கு உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. ஆனால் அது தாங்க முடிந்ததாக இருந்தது. கூடவே உடல் இலகுவாவது போல் ஒரு உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. நன்றியுடன் அந்த ஓநாயை அவன் பார்த்தான். ஓநாய் தீ உமிழும் கண்களால் அவனைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுத் திரும்பியது. அது பின் வேகமாக நகர்ந்தது.

 அது போகுமிடமெல்லாம் அவனால், ஆச்சரியகரமாக, பார்க்க முடிவதை ஷ்ரவன் பிரமிப்புடன் பார்த்தான். ஓநாய் யோகாலயத்தின் அலுவலக அறைக்குள் நுழைந்தது. அது நுழையும் வரை, மூடியிருந்த அலுவலக வாசல் கதவு தான் ஷ்ரவனுக்குத் தெரிந்து கொண்டிருந்தது. ஆனால் அது கதவை ஊடுருவி உள்ளே நுழைந்தவுடன்அலுவலகத்தின் உட்பக்கம் தெரிய ஆரம்பித்தது. அவன் இந்தப் புதிய முன்னேற்றத்தில் திகைத்தான். இது போன்ற வேறு இடக் காட்சிகள் அவனுக்கு இதுவரை தெரிந்ததில்லை.

 ஓநாய் நேராக உள்ளே உள்ள ஹாலுக்குப் போனது. உள்ளே கம்ப்யூட்டர்கள் மட்டுமே இருந்தன. ஆட்கள் இருக்கவில்லை.  ஓநாய் ஒரு கம்ப்யூட்டருக்கு முன்னால் உள்ள நாற்காலியில் தாவி அமர்ந்தது. ஓநாய் தாவி அமர்ந்ததும், தானாக அந்தக் குறிப்பிட்ட கம்ப்யூட்டர் மட்டும் இயங்க ஆரம்பித்தது. ஷ்ரவன் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். கம்ப்யூட்டர் திரையில் தெரிந்தவை எதுவும் புரியவில்லை. ஷ்ரவன் உற்றுப் பார்த்தான். ஏதோ வரவு செலவுக் கணக்கு போல் இருந்தது.  ஓநாய் அவனைத் திரும்பிப் பார்த்தது.

 அவன் மானசீகமாக அதனிடம் கேட்டான். “என்ன சொல்கிறாய்?”

 அது அவனுக்குக் கூடுதலாக எதையும் காட்டாமல் மறைந்து போனது. ஷ்ரவன் தொடர்ந்து அந்த மந்திரத்தை ஜபித்து 1008 கணக்கை முடித்த பின், ஓநாய் சொல்ல வந்தது என்னவாக இருக்குமென்று யோசித்தான்அவன் கம்ப்யூட்டரில் பார்த்தது வரவு செலவுக்கணக்காகத் தான் இருக்குமென்றால் சைத்ராவின் மரணத்திற்கும், அதற்கும் என்ன சம்பந்தமிருக்கும்? அவள் யோகாலயத்தில் எப்போதும் உள்ளே அலுவலகத்தில் வரவுசெலவுக் கணக்கு வேலை பார்த்தவள் அல்ல. அதனால் அவள் அதில் ஏதாவது குளறுபடியைக் கண்டுபிடித்து, அதில் எந்தப் பிரச்சினையும் வந்திருக்க வாய்ப்பில்லை.

 அப்படியிருக்கையில் ஓநாய் ஏன் அதைக் காட்டுகிறது. ஆடிட்டிங் வேலைக்கும் இந்தக் கொலைக்கும் என்ன தொடர்பிருக்க முடியும்? ஆடிட்டிங் என்ற வார்த்தை அவன் எண்ணத்தில் வந்து போனவுடனேயே, அவன் மூளையில் ஒரு பொறி தட்டியது. ஆடிட்டர்!    

 அவன் கண்களைத் திறந்த போது முக்தானந்தா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாலும், அவனைக் கேள்வி கேட்டு தொந்தரவு செய்ய அவர் விரும்பவில்லை.  எல்லாவற்றையும் அவரிடம் சொல்லிக் கொண்டிருப்பது அவனுக்கு சாத்தியமும் இல்லை. அவர் அதைக் கேட்டு எதுவும் செய்யப் போவதுமில்லை. அவன் நம்பும் மந்திர சக்தி அவனுக்கு வழிகாட்டி உதவட்டும் என்று அவரும் பிரார்த்தித்து மௌனமாக இருந்தார்.

 

 ன்று காலை ஷ்ரவன் தோட்ட வேலைக்குப் போன போது கல்பனானந்தா மற்ற துறவிகளுக்கு தோட்ட வேலைகளை ஒதுக்கி, என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அவர்கள் அங்கிருந்து செல்லும் வரை ஷ்ரவன் அமைதியாகக் காத்திருந்தான். அவர்கள் பேசினால் கேட்கும் இருபதடி தொலைவில் தான் பாண்டியனின் ஆள் ஒருவன் நின்றிருந்தான். அதனால் கல்பனானந்தா ஷ்ரவனிடம் மண்புழு உரம் போட வேண்டிய இடங்களைச் சொன்னதோடு நிறுத்திக் கொண்டாள்.

 வரிசையாக வைத்திருந்த மண்புழு உரப் பைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு கிளம்பிய ஷ்ரவனுக்கு இன்று அவள் கண்டிப்பாக அவனிடம் வந்து பேசுவாள் என்று உள்ளுணர்வு சொன்னது. இன்று அவன் போகும் இடங்கள் சில, மற்றவர்களும் வேலை செய்து கொண்டிருந்த இடங்களாக இருந்தன. ஆனால் இரண்டு இடங்கள் ஒதுக்குப் புறமான இடங்களாக இருந்தன. அந்த இரண்டு இடங்களில் அவன் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவள் கண்டிப்பாக வருவாள் என்று எதிர்பார்த்தான்.

 இன்று அவன் குமரேசனிடமும் ஒரு முக்கியத் தகவல் சொல்ல வேண்டி இருந்தது. குமரேசன் எங்கே வேலை செய்கிறான் என்று ஷ்ரவன் பார்வையால் தேடினான். நல்ல வேளையாக அவன் போய் மண்புழு உரம் போட வேண்டிய இடம் ஒன்றுக்கு அருகில் தான் குமரேசன் இருந்தான். அங்கே ஒரு மூத்த துறவி ஒருவரைத் தவிர வேறு யாரும் இல்லை.

 ஷ்ரவன் அந்த இடம் நோக்கி நிதானமாக நடக்க ஆரம்பித்தான். தோள் பட்டையில் ஏதோ பிடித்துக் கொண்டதைச் சரி செய்யும் பாவனையில் ஷ்ரவன் தோள்பட்டையைப் பிடித்துக் கொண்டு முழங்கையை மேலே  உயர்த்தினான். இந்த சமிக்ஞைக்குப் பொருள்: “நான் உன்னிடம் பேச வேண்டியிருக்கிறது

 குமரேசன் அதைப் பார்த்தான். ஆனால் எந்த விதமான எதிர்வினையும் காட்டாமல் அவன் செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான். ஷ்ரவன் அவன் வேலை செய்து கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள செடிகளுக்கு மண்புழு உரம் போட்டுக் கொண்டிருந்த போது, குமரேசன் ஒரு மண்வெட்டியை எடுத்துக் கொண்டு அவனருகில் வேறெதோ வேலை செய்வது போல் வந்தான்.

 ஷ்ரவன் சுற்றுப்புறத்தைப் பார்த்தான். மூத்த துறவி ஐம்பதடிகள் தொலைவில் எதோ வேலை செய்து கொண்டிருந்தார். கண்காணிப்பாளன் அவருக்கும் ஐம்பதடிகள் அந்தப்பக்கம் தள்ளி நின்று கொண்டிருந்தான். ஆக கண்காணிப்பாளனுக்கும் ஷ்ரவனுக்கு இடையே நூறடி இடைவெளி இருக்கிறது. முகம் அந்தக் கண்காணிப்பாளனுக்குத் தெரியாதபடி வைத்துக் கொண்டு, குமரேசனுடன் மிகத் தாழ்ந்த குரலில் பேசினால் கண்காணிப்பாளனுக்குத் தெரியவோகேட்கவோ வழியில்லை.

 ஷ்ரவன் மண்புழு உரத்தைப் பரப்பிக் கொண்டே குமரேசனிடம் தாழ்ந்த குரலில் சொன்னான். “பிரச்சினை வரவு செலவுக் கணக்கு சம்பந்தப்பட்டதாய் இருக்கலாம்னு நினைக்கிறேன். இங்கே அக்கவுண்ட்ஸ் இருக்கற ஆபிஸ் கம்ப்யூட்டர்கள் பக்கம் போகவே வழியில்லை. அதனால் ஆடிட்டர் திவாகரன் ஆபிசில் அந்த முயற்சியை எடுப்பது நல்லது.”

 குமரேசன் தலையசைக்கும் தவறையும் செய்யாமல், சட்டியில் மண்ணை அள்ளிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

(தொடரும்)

என்.கணேசன்





Thursday, September 11, 2025

சாணக்கியன் 178

 

சுசித்தார்த்தக் சென்றதும் பர்வதராஜன் கண்களைக் கூர்மையாக்கினான். இருட்டில் இருக்கும் இடத்தைப் பற்றிக் கூடுதலாக அறிய முயன்றான். சில அடிகள் தள்ளி ஒரு நாற்காலி இருப்பது மட்டும் புலனாகியது. அதற்கு மேல் எதுவும் தெரியவில்லை. அங்கு நிலவிய அமானுஷ்ய அமைதி பயமுறுத்துவதாக இருந்தது. அவனைத் தீர்த்துக் கட்ட ஆச்சாரியர் செய்திருக்கும் ஏற்பாடாக இது இருக்குமோ என்ற புது பயம் அவனுக்குள் மெல்ல எழுந்தது. அவன் தன் இடுப்பில் சொருகியிருந்த குறுவாளைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். சிறிது நேரம் அங்கே எந்தச் சத்தமும் இல்லை. பின் மெல்ல யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது

 

பர்வதராஜன் கண்களைச் சுருக்கிக் கொண்டு பார்த்தான். நிழலாய் ஒரு உருவம் தெரிந்தது. “வணக்கம், ஹிமவாதகூட அரசரேஎன்று ஒரு குரல் கேட்டது.

 

பர்வதராஜன் கைகளைக் கூப்பியபடி சொன்னான். “வணக்கம். தங்களைக் காண முடிந்தால் சரியான ஆளிடம் தான் நான் பேசுகிறேனா என்பதை என்னால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.”

 

எதிரே இருந்த உருவம் ஒரு மர முக்காலியை இருவருக்கிடையே தள்ளி வைத்து, பர்வதராஜனின் அருகிலிருந்த அகல்விளக்கை எடுத்து அந்த முக்காலியில் வைத்தது. இப்போது சற்று கூடுதல் வெளிச்சம் விழுந்ததால் எதிரே ராக்ஷசர் தெரிந்தார். அவரைப் பார்த்ததும், இங்கே அவனை வரவழைத்தது சாணக்கியரின் சதி அல்ல என்று அவன் சந்தேகம் தெளிந்து நிம்மதி அடைந்தான்.  

 

தாங்கள் அடியேனின் அழைப்பிற்குச் செவிமடுத்து வந்ததற்கு மிக்க நன்றி ராக்ஷசரே. இது தங்கள் பெருந்தன்மையை எனக்கு உணர்த்துகிறது. இதை நான் என்றும் நினைவில் வைத்திருப்பேன்.”

 

அரசியலில் இலாபகரமானதை மட்டுமே, அதுவும் அனுகூல சமயங்களில் மட்டுமே, அனைவரும் நினைவு வைத்துக் கொள்கிறார்கள் என்பதை உணர்ந்திருந்த ராக்ஷசர் இது போன்ற வெற்று வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரவில்லைஅவர் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். “ஏன் அழைத்தீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?”

 

பர்வதராஜன் கைகூப்பியபடி எழுந்து நின்றான். “முதலில் அமருங்கள் ராக்ஷசரேபின் பேசுவோம்

 

ராக்ஷசர் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தார். அவர் அமர்ந்த பின்  கைகூப்பியபடியே தானும் அமர்ந்த பர்வதராஜன் சொல்ல ஆரம்பித்தான். “அற்ப சகவாசம் பிராண சங்கடம் என்பார்கள். அந்தப் பிராண சங்கடத்தைச் சில நாட்களாக நான் உணர ஆரம்பித்திருக்கிறேன் ராக்ஷசரேஅந்தச் சங்கடத்தை உணர ஆரம்பித்த பிறகு தான் அந்தச் சகவாசமே அற்பத்தனமானது என்பதும் புரிய ஆரம்பிக்கிறது என்பது தான் வேதனை. ஆனால் என் முட்டாள்தனத்தைப் பற்றிப் பேச நான் தங்களை அழைக்கவில்லை. தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள ஆசைப்படும் நான் அதற்குப் பிராயச்சித்தம் செய்யவும் எண்ணுகிறேன்.”

 

ராக்ஷசர் சொன்னார். “பிராயச்சித்தம் செய்ய முடிந்த சுதந்திரமான நிலையில் நீங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை ஹிமவாதகூட அரசே. எதற்கும் நீங்கள் சந்திரகுப்தனிடமும், சாணக்கியரிடமும் அனுமதி பெறவேண்டிய நிலையில் அல்லவா இருக்கிறீர்கள்

 

பர்வதராஜன் அந்தப் பேச்சில் இருந்த ஏளனத்தைப் பெரிதுபடுத்தவில்லை. அவன் சொன்னான். “நான் என் மனசாட்சியைத் தவிர வேறு யாரிடமும், எதற்கும் அனுமதி கேட்பதில்லை ராக்ஷசரே. அது அனுமதித்த பின் யார் கருத்தையும் நான் லட்சியமும் செய்வதில்லை.”

 

நல்லதுஎன்ற ஒற்றைச் சொல்லில் சொன்ன ராக்ஷசர் மேற்கொண்டு என்ன என்பது போல அவனைப் பார்த்தார்.

 

பர்வதராஜன் மிகுந்த வருத்தத்தை முகத்தில் வரவழைத்துக் கொண்டபடி சொன்னான். “என் மனக்கணக்குகள் தவறாகி விட்டன ராக்ஷசரே. காரணம், ஆசிரியராகப் பணிபுரிந்த ஒரு மனிதன் தர்மம் தவறி நடக்கவே வழியில்லை என்று நான் நம்பிய முட்டாள்தனம் தான். பிறகு மெள்ள மெள்ள அந்த மனிதன் சூழ்ச்சியின் ஊற்றுக்கண் என்று எனக்குப் புரிந்து விட்டது. வெற்றி பெறும் வரை அவர் எனக்குக் காட்டிய முகம் ஒன்று, வெற்றிக்குப் பின் அவர் காட்டும் முகம் வேறு. வெற்றி பெறும் வரை நியாயஸ்தன் போலவே பேசி வந்த அவர் வெற்றிக்குப் பின்னாலோ தன்னுடைய இலாபத்தைத் தவிர வேறு எதையும் யோசிக்க மறுப்பவராகவே இருக்கிறார். அதையும் மனித சுபாவம் என்று எடுத்துக் கொண்டேன். ஆனால் அவர் மகத இளவரசி துர்தராவை, சந்திரகுப்தனுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைக்க தனநந்தரை வற்புறுத்த ஆரம்பித்த பிறகு என்னால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.”

 

பொறுத்துக் கொள்ள முடியாமல் என்ன செய்தீர்கள்?” என்று ராக்ஷசர் கேட்ட போது பர்வதராஜன் திகைத்தான். இந்த மனிதனை வார்த்தை ஜாலத்தால் மயக்குவது சுலபமல்ல என்பது புரிந்தது. பின் மெல்ல சுதாரித்துக் கொண்டவனாய் சொன்னான். “எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் என் எதிர்ப்புக்கு அவரிடம் எந்த மரியாதையும் இருக்கவில்லை. வெற்றி பெற்றவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அகங்காரத்தோடு நினைக்கிற மனிதனிடம் என்ன பேச முடியும். சாணக்கியர் நியாயம் பேசும் என்னைத் தவிர்த்து தானே மகத அரசரிடம் பேரம் பேச ஆரம்பித்தார். அதைப் பேரம் என்று சொல்வதும் தவறு. மிரட்டல் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். மிரட்டி தனநந்தனைச் சம்மதிக்க வைத்து விட்டார். ஆனால் சம்மதித்த பின்னும், அந்தத் தந்தைக்கு மகளின் திருமணம் வரை இங்கிருக்க அனுமதி தர மறுத்தது தான் கொடுமையிலும் கொடுமை....”

 

சிறிது நேரம் பேசக்கூட முடியாதபடி உணர்ச்சிவசப்பட்டவனாக நடித்த பர்வதராஜன் பின் தன்னைக் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொள்பவன் போல் காட்டிக் கொண்டு தொடர்ந்தான். “... இதையெல்லாம் பார்த்த பின் இனியும் இந்த மனிதனிடம் கூட்டு வைத்துக் கொள்வது தர்மமாகாது என்று முடிவெடுத்தேன். ஆனால் என்னால் தனியாக எதுவும் செய்ய முடியாது என்பதையும் புரிந்து வைத்திருந்தேன். வெளிப்படையாகத் தொடர்ந்து எதிர்த்தால் நான் இங்கேயே என் மரணத்தையும் சந்திக்க வேண்டி வரலாம் என்பதே இப்போதைய யதார்த்தம். அதனால் தான் சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் வெல்ல, அவருக்கிணையான அறிவாளியான உங்கள் உதவியை நாட உத்தேசித்தேன்...”

 

ராக்ஷசர் சொன்னார். “நானே மறைந்து வாழும் நிலைமையில் இருக்கிறேன். என்னால் என்ன செய்ய முடியும்?”

 

நீங்கள் தனி மனிதர் அல்ல ராக்ஷசரே. இப்போதும் தங்களுக்கு விசுவாசிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். நீங்கள் மனம் வைத்தால் ரகசியமாய் எத்தனையோ செய்ய முடியும்.”

 

நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?”

 

ஆச்சாரியரின் பலவீனத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

 

ஆச்சாரியரின் பலவீனம் என்ன?”

 

ஆச்சாரியரின் பலமே தான் அவருடைய பலவீனமும் கூட. இரண்டுமே சந்திரகுப்தன் தான். ஒன்றுமில்லாத அவனை எல்லாமாகவும் ஆக்கிய பிறகு அவருடைய பேராயுதம் அவன் தான். அவன் இல்லாமல் அவரால் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் அவனைக் களத்திலிருந்து நீக்கி விட்டால் அவரும் வேறுவழியில்லாமல் தானாகக் களத்திலிருந்து நீங்கி விடுவார். ஏனென்றால் வேறு யார் மூலமாகவும் களத்தில் நீடிக்க அவர் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளவில்லை. அது எனக்கு நன்றாகவே தெரியும்.”

 

ராக்ஷசர் முன்பே யோசித்து வைத்திருந்த திட்டமும் அதுவாகவே இருந்தது. சந்திரகுப்தன், துர்தரா இருவருக்குமிடையே நடக்கும் திருமணத்தைத் தடுத்து நிறுத்தும் ஒரே வழியாக அவர் அதையே நினைத்திருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேட்டார். “அந்த வேலையை ஏன் நீங்கள் செய்யக் கூடாது. நீங்கள் சாணக்கியரின் கூட்டாளியாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறீர்கள். நானோ அவரது எதிரியாகவும், உயிருக்குப் பயந்து மறைந்து வாழ்பவனாகவும் இருக்கிறேன்.”

 

பர்வதராஜன் சொன்னான். “நான் எப்போதும் அவரது முழுக் கண்காணிப்பில் இருக்கிறேன். நான் என்ன செய்தாலும் அவர் உடனுக்குடன் அறிந்து விடுவார். இந்தச் சந்திப்புக்கே நான் இந்த அதிகாலை வேளையில் எப்படி சிரமப்பட்டு வந்திருக்கிறேன் என்பது உங்களுக்கும் தெரியும். ஆனால் நீங்கள் இன்னும் பிடிபடாமல் இருக்கிறீர்கள். இப்போதும் உங்கள் விசுவாசிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். நீங்கள் மனம் வைத்தால் அவர்களைக் கொண்டு சந்திரகுப்தனைக் கொல்வது முடியாத காரியம் அல்ல.”

  

(தொடரும்)

என்.கணேசன்



Monday, September 8, 2025

யோகி 119


 ஷ்ரவன் வாசலைத் தாண்டி உள்ளே சென்றான். முன் அறையில் ஒரு அமர்ந்திருந்த இளைஞனிடம்  தன்னை பாண்டியன் வரச்சொல்லி இருப்பதாக அவன் தெரிவித்தான். அந்த இளைஞன் உள்ளே சென்று விட்டு வந்து ஷ்ரவனை உள்ளே அனுப்பினான்.

பாண்டியனுடைய அறையில் நுழைந்து ஷ்ரவன் வணக்கம் தெரிவித்தான். பாண்டியன் பதில் வணக்கம் தெரிவித்து விட்டு அவனை அமரச் சொன்னார். “உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்க வேண்டும் ஷ்ரவனானந்தா. நேற்று நீங்கள் கண்ட காட்சியைப் பற்றி சுவாமினி கல்பனானந்தா என்னிடம் தெரிவித்தார். அதைப் பற்றி நேரடியாகவே உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று எனக்குத் தோன்றியது. அதனால் தான் வரச் சொன்னேன்.”

அவர் வணக்கம் தெரிவித்ததும், அவர் பேச்சில் தொனித்த மரியாதையும் கல்பனானந்தா ஷ்ரவன் கேட்ட கேள்வியை அவரிடம் தெரிவித்து விடவில்லை என்பதைத் தெரிவித்தன. அவனுக்குச் சற்று நிம்மதியாயிற்று.

ஷ்ரவன் தன் முகத்தில் சிறிது தர்மசங்கடத்தைக் காண்பித்தான். ”இது பல காலமாய் எனக்கு இருந்து வரும் பிரச்சினைஜி. திடீர் திடீர் என்று எதாவது காட்சி தெரிகிறது. சிலவற்றுக்குக் காரணம் தெரிகிறது. அர்த்தம் தெரிகிறது. சிலவற்றுக்குக் காரணம் தெரிவதில்லை. நான் நேற்று பார்த்தது உங்கள் வாசல் என்று கூட எனக்குத் தெரிந்திருக்கவில்லை. உங்கள் இருப்பிடம் இதுவென்று சுவாமிஜி கண்ணன் காண்பித்த பிறகு தான் தெரிந்து கொண்டேன். நான் கண்ட காட்சி எதோ பிரமை என்று இப்போது நினைக்கிறேன். ஏனென்றால் இப்போது உள்ளே வருகையில் அந்த இடத்தை நன்றாகப் பார்த்து விட்டு தான் வருகிறேன். அங்கே குழி எதுவும் இல்லைஜி...”

பாண்டியன் சொன்னார். “சில சமயங்களில் நம் மேல் பார்வைக்குத் தெரியாத விஷயங்கள் விசேஷ சக்தி இருக்கும் சிலருக்குத் தெரிய வரலாம். கல்பனானந்தாவிடம் உங்களுக்கு இருக்கும் அந்த விசேஷ சக்தி பற்றியும், உங்களுடைய சிறு வயது சம்பவங்களையும் நீங்கள் முன்பு சொல்லியிருந்தீர்களாம். அதையும் அவர் சொன்னதால், நீங்கள் பார்த்த காட்சியில் ஆழமான அர்த்தம் எதாவது இருக்குமோ என்று சந்தேகம் வந்ததால் தான் உங்களைக் கூப்பிட்டு பேசத் தோன்றியது.”

எனக்கு இன்னமும் யோகிஜி இருக்கும் புனித இடத்தில் துஷ்ட சக்திகள் உலாவ முடியும் என்பதில் நம்பிக்கை இல்லைஜி. அதனால் தான் எனக்கு நான் காணும் காட்சிகள் அர்த்தமுள்ளது தானா என்ற சந்தேகம் வருகிறது.”

இல்லாத சக்திகளை எல்லாம் இருப்பதாகச் சொல்லி ஒருவர் புகழ் தேடி அலைகிறார்அதை நம்பும் ஒரு பெரிய கூட்டமும் இருக்கிறது. இவனும் அந்தக் கூட்டத்தில் இருந்து கொண்டு தனக்கு இருக்கிற சக்தியைக் கூட உண்மை என்று நம்ப மறுக்கிறான். வேடிக்கை தான்.’ என்று எண்ணிய பாண்டியன் சொன்னார். “யோகிஜி ஒருவர் மட்டும் இங்கில்லை. நூற்றுக்கணக்கில் வேறு பலரும் இருக்கிறோம். யோகிஜி அடிக்கடி பயணம் போய் வருபவர். அவர் இங்கே இருக்கும் நாட்கள் அதிகமில்லை. அதனால் கூட இப்படி நடக்கலாம்.”

ஷ்ரவன் யோசிப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டான். அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த பாண்டியன் கேட்டார். “இப்போது இங்கே வரும் போது உங்களுக்கு அந்த ஓநாய் தென்படவில்லையா?”

இல்லைஜி. எதாவது சில சமயங்களில் தான் திடீர் என்று எனக்கு அப்படித் தெரிகிறது. ஹைதராபாதில் இருந்த மந்திரவாதி சோமையாஜுலு, ”நீ அதை அடிக்கடி நினைக்க வேண்டும், ஆழமாய் நினைக்க வேண்டும். அப்படியானால் தான் நீ அதோடு தொடர்பு கொள்ள முடியும். அதிகம் பார்க்க முடியும். அது சொல்லும் செய்திகளை நீ புரிந்து கொள்ள முடியும். பின் எப்போதும் உனக்கு அது தெரிந்து கொண்டிருக்கும்.” என்று என் சிறுவயதில் ஒரு முறை சொல்லியிருக்கிறார். ஆனால் என் அப்பாஅந்தக் கண்றாவியை எல்லாம் நீ நினைக்கவே வேண்டாம். ஒழுங்காகப் படிப்பைக் கவனிஎன்று திட்டியதால் நான் பின் அதிகம் நினைப்பதே இல்லை. இப்போது துறவியாகி விட்டேன். யோகிஜி சொல்லும் வழியில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனாலும் இந்த மாதிரியான காட்சிகள் வந்து தொலைகிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை...”

பாண்டியன் அவனுக்கு ஆரம்பத்திலிருந்து இருக்கும் இரட்டை மனநிலையைப் புரிந்து கொண்டார்.  அவன் தொடர்ந்து கவனம் செலுத்தினால் அவனால் எல்லா சமயங்களிலும் அந்தச் சக்திகளைக் கண்டு கொள்ள முடியும் என்று சோமையாஜுலு சொன்ன செய்தி அவரை யோசிக்க வைத்தது. இப்போது அவன் அது தேவையில்லாத தொல்லை என்றே நினைப்பதால் அந்தக் காட்சிகளைக் காண விரும்பவில்லை. யோகிஜி சொல்லும் வழியில் போவதில் அவன் உறுதியாக இருப்பதால் யோகிஜியையே அவனிடம் சொல்ல வைக்க வேண்டும்

பாண்டியன் சொன்னார். “நீங்கள் நினைப்பது சரிதான் ஷ்ரவனானந்தா. யோகிஜி எல்லாம் தெரிந்தவர். இன்றிரவு அவர் வந்து விடுவார். நான் நேரம் கிடைக்கையில் உங்களுக்காக அவரிடம் பேசுகிறேன். நீங்கள் அவருடைய அறிவுரைப்படியே நடந்து கொள்வது நல்லது.”

ஷ்ரவன் தன் முகத்தில் பரவசம் காட்டினான். “நான் யோகிஜியின் கவனத்திற்கு வருவதற்கே பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்காக அவரிடம் பேசுவதாக நீங்கள் சொன்னது உங்கள் பெரிய மனதைக் காட்டுகிறதுஜி.”

பாண்டியன் புன்னகைத்தார்யோகிஜி உங்களுக்கு என்ன சொல்வார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு இது போன்ற அமானுஷ்ய விஷயங்களில் ஆர்வம் அதிகம். அதனால் இனி எதாவது காட்சிகள் உங்களுக்குத் தெரிந்தால் என்னிடம் நேரடியாக வந்து நீங்கள் சொல்லலாம்.”

சரிஜிஎன்று சொல்லி பாண்டியன் ஒரு கணம் காத்திருந்து விட்டு, அவர் கூடுதலாக எதுவும் சொல்லாமல் போகவே, மெல்ல எழுந்தான். “நன்றிஜி

அவன் போகும் போதும் அவருடைய வாசல் அருகே தரையை இருபக்கமும் பார்த்து விட்டுப் போவதை பாண்டியன் கவனித்தார்.

வெளியே வந்த ஷ்ரவன் நேராக சத்சங்கம் நடக்கும் கூட்டத்திற்குச் சென்றான்ஒரு நடுத்தர வயதுத் துறவி உபநிஷத்துக்கள் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார். அவன் சென்று பின்னால் வரிசையில் அமர்ந்து கொண்டான். உரை முடிந்து திரும்பி வெளியே வரும் போது தான் முக்தானந்தா அவனைப் பார்த்தார். அவனைப் பார்த்ததும் ஒரேயடியாக அவர் முகம் மலர்ந்தது. ஆனால் உடனடியாக அதை மறைத்துக் கொண்டு விறுவிறுவென்று தனியாக அறைக்கு விரைந்தார். ஷ்ரவனும் அவருடன் சேர்ந்து கொள்ள விருப்பமில்லாதவன் போல் மெல்ல நடந்து சென்றான். தூரத்திலிருந்து அவர்களைக் கவனித்த கண்ணன் திருப்தி அடைந்தார்.  

ஷ்ரவன் அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டவுடன் முக்தானந்தா எழுந்து வந்து அவன் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார். “உன்னைப் பார்க்கும் வரை எனக்கு தவிப்பாகத் தான் இருந்தது ஷ்ரவன். உன்னைப் பார்த்த பிறகு தான் நிம்மதியை உணர்ந்தேன்.”

ஷ்ரவன் அவரது அன்பில் நெகிழ்ந்தான். அங்கு நடந்ததை அவரிடம் தெரிவித்து விட்டுச் சொன்னான்.  “நீங்கள் சொன்னது போல் கல்பனானந்தா நான் கேட்ட கேள்வியை பாண்டியனுக்குத் தெரிவிக்கவில்லை சுவாமிஜி. அவர் அதைச் சொல்லியிருந்தால் பாண்டியன் எப்படி யோசிக்க ஆரம்பித்திருப்பார் என்று சொல்ல முடியாது.”

முக்தானந்தா கல்பனானந்தாவைப் பற்றிய தன் உள்ளுணர்வு சரியாக இருந்ததில் மகிழ்ச்சியடைந்ததாய் ஷ்ரவனுக்குத் தோன்றியது.

ஷ்ரவன் சொன்னான். “கல்பனானந்தா யோகியையும் பார்த்திருக்கிறார். சைத்ராவையும் கவனிக்க முடிந்த நிலையில் தான் இங்கே இருந்திருக்கிறார். அதனால் அவரிடம் விசாரித்தால் பல உண்மைகள் தெரியவரும் என்று நான் நினைக்கிறேன் சுவாமிஜி

ஷ்ரவன், நீ அவளையும் ஆபத்திற்குள்ளாக்காமல், நீயும் ஆபத்தில் சிக்கிக் கொள்ளாமல் ஜாக்கிரதையாகத் தான் அவளை விசாரிக்க வேண்டும். சாதாரண நேரத்தை விட இரண்டு நிமிடம் அதிகமாய் அவளிடம் பேசி இருக்கிறாய் என்று தெரிந்தாலே அவர்களுக்குச் சந்தேகம் எழுந்து விடும். அதனால் மிக எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.”

அவர் அவனுடைய பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்பட்டபடியே கல்பனானந்தாவின் பாதுகாப்புக்காகவும் கவலைப்பட்டது ஷ்ரவனுக்குப் புரிந்தது. அவள் மீது அவருக்கு பிரத்தியேக அன்பும், அக்கறையும் இருந்ததை ஷ்ரவன் உணர்ந்தான்.

 முக்தானந்தா அவனிடம் நெகிழ்ந்த மனதுடன் சொன்னார். “அவள் சின்ன வயதிலிருந்தே நிறைய கஷ்டப்பட்டவள். எங்களுடைய யோகாலயக் குழுவில் அவள் சேர்ந்த போது அவளுக்கு வயது 21 தான். எங்கள் எல்லோரையும் விட அவள் மிக இளையவள். அவளுடைய தந்தை காமாந்தகன். தன் மகளிடமே தவறாக நடந்து கொள்ள பலமுறை முயன்றவன். அவளுடைய தாய் கணவனை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத ஒரு கோழையாக இருந்தாள். அழுவதைத் தவிர அந்தத் தாய் வேறு எதுவும் செய்யவில்லை. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, வேறு வழி தெரியாமல், 18 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி வந்தவள் கல்பனானந்தா...”

 ஷ்ரவன் அதிர்ந்தான். ஒரு அன்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவனுக்கு அவர் சொன்னதை ஜீரணிக்க மிகவும் கஷ்டமாக இருந்தது.

(தொடரும்)

என்.கணேசன்






Thursday, September 4, 2025

சாணக்கியன் 177

 

ராக்ஷசர் நடந்த சம்பவங்களால் ஆரம்பத்தில் பெருந்துக்கத்தில் மூழ்கினார் என்றாலும் துக்கத்திலேயே தங்கியிருந்து எதையும் சாதிக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து அடுத்து ஆக வேண்டிய விஷயங்களை யோசிக்க ஆரம்பித்திருந்தார்ஆனாலும் நடந்ததை எல்லாம் ஜீரணிப்பது அவருக்குக் கஷ்டமாகத் தானிருந்தது. இளவரசர்களும், சேனாதிபதியும் போர்க்களத்தில் இறக்காமல் மாளிகைக்குள்ளே மரணமடைந்திருந்த விதமும், நள்ளிரவிலேயே எதிரிப்படைகள் உள்ளே நுழைந்த விதமும் குறித்து விரிவாக அவர் அறிய நேர்ந்த போது என்ன நடந்திருக்கும் என்பதை அவரால் சரியாகவே ஊகிக்க முடிந்தது. ஜீவசித்தியின் விசுவாசத்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலும் அவர் எதிரிகளிடம் சிக்காமல் தப்பிக்க முடிந்ததும், தற்போது அவருடைய நண்பர் சந்தன் தாஸின் வீட்டில் மறைந்திருக்க முடிந்ததும்  மட்டுமே சமீப காலத்தில் நடந்த ஆறுதல் அளிக்கும் விஷயங்கள்

 

தற்போது அவர் பாதுகாப்பாக இருந்தாலும் கூட அவர் தொடர்ந்து கேள்விப்படும் விஷயங்கள் அவருக்கு ஆத்திரமூட்டுபவையாக இருக்கின்றன. அரசர் தனநந்தன் உயிரோடு மகதத்திலிருந்து செல்லும் அனுமதிக்காக மகளை எதிரி சந்திரகுப்தனுக்குத் திருமணம் செய்து தர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானது அவருக்கு ஜீரணிக்க முடியாததாய் இருந்தது. தனநந்தனும் சரி, துர்தராவும் சரி நிர்ப்பந்திக்கப்படாமல் அதற்குச் சம்மதித்திருக்க வழியே இல்லை என்று அவர் உறுதியாக நம்பினார். இனியும் ஏதாவது செய்யாமல் இருந்தால் பின் எப்போதுமே எதுவும் செய்து பலனில்லை என்று புரிந்ததால் அதிரடியாக என்ன செய்ய முடியும் என்று யோசித்து சில முடிவுகளை எட்டியிருந்தார்...

 

அவர் ஒளிந்திருந்த அறையின் கதவு இரு முறை தட்டப்பட்டு ஒரு கணம் தாமதித்து பின் மூன்று முறை தட்டப்பட்டது. காவலர்களின் தலைவனான ஜீவசித்தி ஏதோ தகவலுடன் வந்திருக்கிறான். அவர் வேகமாக எழுந்து கதவைத் திறந்தார்.

 

ஜீவசித்தி உள்ளே நுழைந்து வேகமாக கதவைத் தாளிட்டான்.

 

என்ன செய்தி ஜீவசித்தி

 

அரசர் வனப்பிரஸ்தம் சென்று விட்டார் பிரபுஎன்று ஜீவசித்தி தாழ்ந்த குரலில் சொன்னான்.

 

ராக்ஷசர் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டார். “அப்படியானால் இளவரசியின் திருமணம் முடிந்து விட்டதா?”

 

இல்லை பிரபு. இன்னும் பதினைந்து நாட்களுக்கு விவாக முகூர்த்தம் இல்லாததால் திருமணம் அதன் பின்னரே நடக்கும் போல் தெரிகிறது. திருமணம் முடியும் வரை இங்கிருக்க அரசருக்கு அனுமதி மறுக்கப்பட்டது போல் தெரிகிறது. பட்டத்தரசி மட்டும் திருமணம் முடியும் வரை இங்கிருக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்அரசரும், இரண்டாவது அரசியாரும் வனப்பிரஸ்தம் போய் விட்டார்கள்.”

 

வேதனையுடன் கண்களை மூடி ஒரு கணம் யோசித்து விட்டு ராக்ஷசர் கேட்டார். “வனத்தில் நாம் மன்னரைச் சந்தித்துப் பேசுவதில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா?”

 

மன்னருடன் அனுப்பப்பட்டுள்ள வீரர்களில் இருவரும், பணியாட்களில் இருவரும் சாணக்கியரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆட்கள் பிரபு. அவர்கள் மூலம் உடனடியாக எல்லாவற்றையும் சாணக்கியர் அறிந்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறது

 

பெருமூச்சு விட்டபடி ராக்ஷசர் கேட்டார். “வேறென்ன செய்தி?”

 

தங்களைச் சந்தித்துப் பேச ஹிமவாதகூட அரசர் பர்வதராஜன் விருப்பம் தெரிவித்திருக்கிறார்

 

ராக்ஷசர் சந்தேகத்துடன் ஜீவசித்தியைப் பார்த்தார். ”நம் எதிரியுடன் கூட்டு சேர்ந்து படையெடுத்து வந்த பர்வதராஜனுடைய இந்தத் திடீர் விருப்பத்துக்கு என்ன காரணம்?”

 

ஜீவசித்தி சொன்னான். “அவருக்கும் சாணக்கியருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது பிரபு. பர்வதராஜனைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக சாணக்கியர் முடிவுகள் எடுப்பதை பர்வதராஜன் விரும்பவில்லை என்று தெரிகிறது. இளவரசிக்கும், சந்திரகுப்தனுக்கும் இடையே நடக்கவிருக்கும் திருமணமும் அவரை அதிருப்தியடைய வைத்துள்ளது என்றும் தெரிகிறது. அவர் தன் மகன் மலைகேதுவுக்கு இளவரசியை மணமுடிக்கும் உத்தேசத்தில் முன்பு இருந்திருக்கிறார் போலத் தெரிகிறது. நமக்கு அவர்கள் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வசதியாக நம் நம்பிக்கைக்குரிய ஒருவனைப் பணியாளாக பர்வதராஜன் தங்கியிருக்கும் மாளிகையில் சேர்த்திருக்கிறேன். அவன் தங்கள் வீட்டில் பணிபுரிந்தவன் என்று சொல்லி, தங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் என்று அவர்களை நம்பவும் வைத்திருக்கிறான். அவன் மூலம் தங்களைத் தொடர்பு கொள்ள தற்போது பர்வதராஜன் முயற்சி செய்கிறார்…”

 

ராக்ஷசர் சொன்னார். ”பர்வதராஜன் நம்பத் தகுந்த ஆள் அல்லவே. சாணக்கியருடன் சேர்ந்து நம்மை வென்றவர் இப்போது அவரை எதிர்க்கிறார் என்றால், நம்முடன் சேர்ந்த பின் நம்மை எதிர்க்கவும் துணிய மாட்டார் என்று என்ன நிச்சயம்?”

 

ஜீவசித்தி தலையசைத்தான். “தாங்கள் சொல்வது சரியே. ஆனால் எதிரிக்கு எதிரியாகிறவர்களை நாம் பயன்படுத்துவது இலாபகரமானது என்று தாங்கள் எண்ணி அவரைத் தொடர்பு கொண்டு அவர் மனதில் இருப்பதைத் தெரிந்து கொள்ள நினைக்கலாம் என்று எனக்குத் தோன்றியதால் தங்களுக்குத் தெரிவிக்க வந்தேன் பிரபு.”

 

ராக்ஷசருக்கு ஜீவசித்தி நினைத்ததிலும் தவறில்லை என்று தோன்றியது. இப்போது எதிரணியில் எழுந்துள்ள இந்த விரிசலைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டால் அவர் ஏற்கெனவே யோசித்து வைத்திருந்த திட்டத்தை நிறைவேற்றுவதும், அதன் பின் எழும் பிரச்னைகளைத் சமாளிப்பதும் எளிதாக இருக்கும். பர்வதராஜனால் பெரிதாகப் பயன் இல்லை என்று தெரிந்தாலும் நஷ்டமில்லை. அலட்சியப்படுத்தி அனுப்பி விட்டு, பின் வேறெதாவது முயற்சி செய்து பார்க்கலாம்….   

 

ராக்ஷசர் மெல்லக் கேட்டார். “ஒருவேளை நானிருக்கும் இடத்தை அறிய வேண்டி சாணக்கியர் செய்யும் சூழ்ச்சியாக இது இருந்தால்…?”

 

அந்தப் பயம் எனக்குமிருக்கிறது பிரபு. நமக்குப் பாதுகாப்பான வேறொரு மறைவிடத்தில் சந்திக்க ஏற்பாடு செய்வோம். ஏதாவது சதி வலையாக அவர்கள் உத்தேசம் இருந்தால் அங்கிருந்து உடனடியாகத் தப்பிக்கும் வசதிகளை முன்கூட்டியே செய்து கொண்ட பிறகு சந்திப்பை உறுதிப்படுத்துவோம்.”

 

ராக்ஷசர் சம்மதித்தார்.

 

ர்வதராஜனும் மலைகேதுவும் உறங்காமல் விழித்திருந்தார்கள். சுசித்தார்த்தக் பர்வதராஜன் ஒருவனாகத் தான் வரவேண்டும் என்றும் மலைகேதுவுக்குக் கூட உடன் வரும் அனுமதியில்லை என்றும் தெரிவித்து இருந்தான்.  பர்வதராஜன் அதற்குச் சம்மதித்து நள்ளிரவு கழியட்டும் என்று காத்திருந்தான். மலைகேதுவுக்கும் உறக்கம் வரவில்லை. அதனால் அவனும் விழித்திருந்தான். அவனுக்கு இதில் ஏதாவது சதியிருக்கலாம் என்று உள்ளுணர்வு ஆரம்பத்திலிருந்தே எச்சரித்துக் கொண்டே இருந்தது. அதை அவன் தந்தையிடம் கவலையுடன் தெரிவித்தான்.

 

சதி யாருடையதாக இருக்கும் என்று நீ நினைக்கிறாய் மகனே?” என்று பர்வதராஜன் கேட்டான். மலைகேதுவுக்கு அதில் தெளிவு இல்லாததால் சொல்லத் தெரியவில்லை.

 

பர்வதராஜன் சொன்னான். “நமக்கு எதிராக சதி செய்ய முடிந்தவர்கள் இருவர். ஒருவர் சாணக்கியர், இன்னொருவர் ராக்ஷசர். சாணக்கியர் இதில் சதி செய்து பெறப்போவது எதுவுமில்லை. அவருக்கு ராக்ஷசர் இருக்குமிடம் தெரிந்தால் உடனே கைது செய்து சிறைப்படுத்தி விடுவார். அப்படியே என்னைச் சோதிக்க நினைத்து சாணக்கியர் இந்த நாடகத்தை அரங்கேற்றினாலும், அல்லது இதில் என்னை அவர் கண்டுபிடித்தாலும் நான் ராக்ஷசரைப் பிடித்துக் கொடுக்கும் உத்தேசத்தில் தான் இப்படி நடித்தேன் என்று சொல்லித் தப்பித்துக் கொள்வேன். ராக்ஷசருக்கு முக்கிய எதிரிகள் சாணக்கியரும், சந்திரகுப்தனும் தான். நான் ஒரு பொருட்டே அல்ல. என்னைத் தீர்த்துக் கட்டினால் கூட அதை வைத்து அவர் சாதிக்கப் போவது எதுவுமில்லைஅதனால் சதி செய்வதானாலும் அந்த இருவருக்கெதிராகத் தான் சதி செய்வாரேயொழிய என்னை வீழ்த்த சதி செய்யும் முயற்சியில் ஈடுபட மாட்டார். அதனால் எந்த வகையிலும் பயப்பட ஏதுமில்லை மகனே. இதில் நாம் இழப்பதும் ஏதுமில்லை.”

 

மலைகேது தந்தையின் வார்த்தைகளில் திருப்தி அடைந்தான்.

 

நள்ளிரவு கழிந்ததும் சுசித்தார்த்தக் பர்வதராஜனை அழைத்துச் சென்றான். அவன் பர்வதராஜனை காவல் வீரர்கள் இருக்காத குறுகிய தெருக்கள் வழியாக அழைத்துக் கொண்டு போனான். இருவரும் போர்வையை உடலில் சுற்றிக் கொண்டு, முகத்தையும் பாதி மறைத்துக் கொண்டு போனார்கள். ஊரே உறங்கிக் கொண்டிருந்ததால் அவர்கள் யார் கண்ணிலும் பட்டிருக்க வாய்ப்பில்லை. ஒரு பெரிய வீட்டை அடைந்ததும் அந்த வீட்டைச் சுற்றிச் சென்று  பின் வாசற்கதவு வழியே சுசித்தார்த்தக் பர்வதராஜனை அழைத்துக் கொண்டு போனான். உள்ளே ஒரு சிறிய அகல் விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்ததுஅதன் அருகே ஒரு இருக்கை காலியாக இருந்தது. அது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. மற்ற இடங்களில் இருள் மண்டிக் கிடந்தது. சுசித்தார்த்தக் பர்வதராஜனை அந்த இருக்கையில் அமர வைத்து விட்டுநான் வெளியே காத்திருக்கிறேன் அரசேஎன்று சொல்லி விட்டுச் சென்றான்.

 

(தொடரும்)

என்.கணேசன்