சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 20, 2025

சாணக்கியன் 149

 

காவிஷ்ணு கோயில் பூசாரிக்கு பிரதம அமைச்சர் ராக்‌ஷசர் அழைக்கிறார் என்ற தகவல் மறுநாள் காலையில் கிடைத்தவுடன் மனதில் பதற்றம் உருவாகியது. ராக்‌ஷசர் அழைக்கிறார் என்றால் எதோ பிரச்னை அழைக்கிறது என்று அர்த்தம் என உள்ளுணர்வு எச்சரித்தது. பெரும்பாலும் அந்த மகான் விஷயமாகத் தான் அவரை ராக்‌ஷசர் அழைக்கிறார் என்பது மட்டும் புரிந்தது. இளவரசர் சுதானுவைப் போல ராக்‌ஷசருக்கும் அந்த மகானிடம் எதாவது கேட்க வேண்டி இருக்கலாம். அல்லது வேறு விஷயமாகவும் இருக்கலாம். அந்த வேறு விஷய யூகம் தான் பதற்றத்தை அதிகப்படுத்தியது.

அவசர அவசரமாக பூசாரி ராக்‌ஷசர் முன் சென்று நின்று வணங்கினார். ராக்‌ஷசர் ஒரு குற்றவாளியை நீதிபதி ஆராய்வது போல் சிறிது நேரம் ஆராய்ந்து விட்டுக் கேட்டார். “நேற்று கோயிலுக்கு ஒரு மகான் வந்தார் என்று கேள்விப்பட்டேன். அவர் உங்களுக்கு நன்றாகத் தெரிந்தவரா?”

“இல்லை பிரபு. இதற்கு முன்பு ஒரே ஒரு முறை கோயிலுக்கு வந்தவர் என்ற அளவில் தான் தெரியும்.”

“அப்படியானால் இளவரசருக்கு அவர் மிகவும் வேண்டப்பட்டவரோ?”

“இல்லை பிரபு. இளவரசரும் அவரை, சென்ற முறை கோயிலுக்கு வந்த போது தான் முதல் முறையாகப் பார்த்திருக்கிறார்.”

ராக்‌ஷசர் ஒன்றும் சொல்லாமல் பூசாரியையே யோசனையுடன் பார்க்கவே பூசாரி இந்த மனிதரிடம் அனைத்தையும் சொல்லி விடுவதே பாதுகாப்பு என்று உணர்ந்தவராக அந்த மகான் சென்ற முறை வந்ததிலிருந்து நேற்று வந்து போனது வரை அனைத்தையும் சொன்னார்.

ராக்‌ஷசருக்குக் குழப்பமாக இருந்தது. சென்ற முறை மகான் அதிகாலையில் கோயிலுக்கு  வந்த பிறகு தான் அரசியும், சுதானுவும் சென்றிருக்கிறார்கள். யாரிவர் என்று அரசி கேட்டதிலிருந்து முந்தைய பரிச்சயம் அவர்களுக்கும், அந்த மகானுக்குமிடையே இல்லை என்பது நிச்சயம்.

சென்ற முறை அவர் வந்த போது எதோ அருள்வாக்கை இளவரசருக்குச் சொன்னார் என்றீர்களே? என்ன சொன்னார்?”

“அந்த மகான் குரல் கரகரத்த குரல் பிரபு. மிகத் தாழ்ந்த குரலில் அவர் சொன்னதால் அது என்ன என்று என் காதுகளில் தெளிவாக விழவில்லை…”

நேற்று சுதானுவே பொற்காசுகளைக் கொடுத்து இவரை வெளியே அனுப்பி விட்டிருக்கிறான்.  அதிலிருந்து என்ன பேசுகிறார்கள் என்பதை பூசாரி அறிந்து கொள்வதில்  அவர்களுக்கு விருப்பமில்லை என்பதும் தெளிவாகிறது. பூசாரி பொற்காசுகளை வாங்கிக் கொண்டது போல அந்த மகான் தாம்பாளத்துடன் கிடைத்த சன்மானத்தைப் பெற்றுக் கொண்டு விடவில்லை, அதை விட்டு விட்டே போயிருக்கிறார் என்பதை எண்ணுகையில் அவர் உண்மையாகவே ஆன்மிகப் பெரியவராய் தான் இருக்க வேண்டும்.

“இப்போது அந்த மகான் எங்கே?”

“தெரியவில்லை பிரபு. வேறெதாவது கோயிலுக்குப் போயிருப்பார்.”

பூசாரியின் அனுமானத்தை ராக்‌ஷசர் ரசிக்கவில்லை என்பது அவர் முகத்தின் கடுமையிலிருந்து தெரிந்தது. “இன்னொரு முறை அந்த மகான் வந்தால் தன்னிடம் தெரிவிக்கும்படி இளவரசர் சொல்லியிருக்கிறாரா?”

“இல்லை பிரபு”

“சரி. அந்த மகான் வந்தாரானால் என்னிடம் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும். அந்த மகானைப் போக விட்டு விடக்கூடாது. புரிந்ததா?”

பணிவுடன் தலையசைத்து விட்டுக் கிளம்பிய பூசாரிக்கு ராக்‌ஷசரிடம் அவர் எல்லாவற்றையும் சொல்லி விட்டது தெரிந்தால் சுதானுவின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமோ என்ற பயம் வந்தது. ராக்‌ஷசர் அழைத்து குடைந்து விசாரித்தார் என்பதை அவராகவே தெரிவித்து விட்டால் சுதானுவிடம் நல்ல பெயர் எடுக்கலாம் என்று தோன்றியது. தெரிவித்ததற்கு ஏதாவது சன்மானம் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்றும் தோன்றியது. இன்னும் சில பொற்காசுகள் கிடைத்தால் மகளின் திருமணத்தைச் சிரமமில்லாமல் முடித்து விடலாம்…. இப்போதே சென்று தெரிவித்தால் ராக்‌ஷசரின் ஒற்றர்கள் கண்களில் பட்டு விடும் வாய்ப்பு அதிகம் என்பதால் இருட்டிய பிறகு அரண்மனைக்குச் சென்று பேசுவது நல்லது என்று முடிவு செய்தார்.


சுதானு கோபத்துடன் தாயிடம் கேட்டான். “பாடலிபுத்திரத்தில் இளவரசரான எனக்குக் கூட பிரதம அமைச்சரின் அனுமதியில்லாமல் யாரையும் சந்திக்க உரிமை இல்லையா?”

தாரிணி சொன்னாள். “புதிர் போடாமல் விஷயத்தைச் சொல் மகனே”

“நேற்று நாம் அந்த மகானைச் சந்தித்து விட்டு வந்த தகவல் தெரிந்து பூசாரியை அழைத்து முழு விவரத்தை ராக்‌ஷசர் கேட்டிருக்கிறார். அவருக்கு தேவைக்கும் அதிகமாக இடம் கொடுத்து வைத்திருக்கிறார் தந்தை.”

”மெல்லப் பேசு மகனே. அவரால் தான் நிறைய விஷயங்கள் மகதத்தில் சரியாக நடப்பதாய் உன் தந்தை நினைக்கிறார். அவரைப் பற்றி யாரும் எந்தப் புகாரும் சொல்வதை உன் தந்தை விரும்புவதில்லை.”

“ஆனால் இளவரசனான என்னையே வேவு பார்ப்பதும், நான் யாரைச் சந்தித்து என்ன பேசினேன் என்று விசாரிப்பதும் எல்லை மீறும் செயல்களாகவே நான் பார்க்கிறேன். நான் மன்னனாகும் போது அவரை வைக்க வேண்டிய இடத்திலேயே வைத்திருப்பேன் தாயே”   


போருக்கான ஆயத்தங்கள் பற்றி நடந்த அடுத்த ஆலோசனைக்கூட்டத்தில் புதியவர்களாக இரண்டு இளவரசர்களும் சேர்க்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கான இருக்கைகள் அரசருக்கு அருகிலேயே இருக்காமல் சேனாதிபதி அருகே இருந்ததை சுகேஷ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் சுதானு மரியாதைக் குறைவாகவே நினைத்தான். அரசரின் தனி இருக்கைக்கு இருபுறமும் வைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் ஒரு புறம் முதலாவதாக ராக்‌ஷசர் இருக்கையும், அவர் அருகே மற்ற அமைச்சர்கள் இருக்கைகளும் இருக்க இன்னொரு புறம் முதலாவதாக சேனாதிபதி இருக்கையும், அவனருகே சுகேஷ், அடுத்ததாக சுதானுவின் இருக்கைகளும் இருந்தன ’நீங்கள் இளவரசர்களாக இருக்கலாம். ஆனால் இங்கு உங்கள் இடம் எங்களுக்குப் பின்பு தான்’ என்று அது அறிவிப்பதாக சுதானுவுக்குத் தோன்றியது. இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் செய்பவர் ராக்‌ஷசர் என்பதால் அவர் மீது அவனுக்குக் கோபம் கூடியது.

தனநந்தன் கேட்டான். “எதிரிகள் தற்போது எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் எங்கே நம்மைத் தாக்க உத்தேசித்திருக்கிறார்கள்?”

ராக்‌ஷசர் சொன்னார். “இப்போது எல்லோரும் சந்திரகுப்தனின் வாஹிக் பிரதேசத்தில் தான் இருக்கிறார்கள். அவர்கள் திட்டம் என்ன என்பது தெரியவில்லை. மகதத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி எல்லைகளில் தான் அவர்கள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம். நம் ஒற்றர்கள் வாஹிக் பிரதேசத்திலும், நமது வடக்கு, மேற்கு பக்க எல்லைகளிலும் கூர்ந்து கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.” சுதானு கேட்டான். “ஆனால் தகவல் தெரிந்த பின்பு நம் படைகள் அங்கே சென்று சேருமளவு நமக்கு காலம் போதாதே?”

ராக்‌ஷசர் சொன்னார். “உண்மை. எனவே வடக்கு, மேற்குப் பகுதிகளில் முன்பே கணிசமான படைகளை நிறுத்துவது நல்லதென்று நினைக்கிறேன். இரு திசைகளிலும் இரண்டிரண்டு இடங்களில் நாம் படைகளை நிறுத்தினால், அங்கிருந்து எங்கே தேவையோ அங்கே தேவைப்படும் நேரத்தில் நகர்த்திக் கொள்ள முடியும்…” சுகேஷ் சொன்னான். “அது நல்ல யோசனை”

ராக்‌ஷசர் தொடர்ந்து ஆயுதங்கள் தயாரிக்கும் பணி அசுர வேகத்தில் நடந்து கொண்டிருப்பதைச் சொன்னார். பத்ரசால் வீரர்களின் போர்ப்பயிற்சிகள் முழு வீச்சில் நடப்பதைச் சொல்லி விட்டு போருக்கு வீரர்கள் தயார்நிலையில் இருப்பதாகச் சொன்னான். விரிவான ஆலோசனைகளும், திட்டங்களும் தொடர்ந்தன.

மறுநாளே படைகளைப் பிரித்து அனுப்பும் ஆயத்தப்பணிகள் ஆரம்பித்தன. அது சேனாதிபதி பத்ரசாலின் பொறுப்பிலேயே நடந்தது என்றாலும் அந்த இடத்திற்கு ராக்‌ஷசரும் வந்து சேர்ந்தார். பத்ரசால் அவர் வருகையால் சஞ்சலம் அடைந்தான்.  ஒரு வார்த்தையும் பேசாமல் வேடிக்கை பார்ப்பவர் போல் அவர் நின்று கொண்டிருந்தாலும் அதில் அவன் ஆபத்தை உணர்ந்தான்.

அந்தச் சமயத்தில் சுதானுவும் அங்கே வந்து சேர்ந்தான். ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அதிகாரத்தைத் தந்தை தந்த பிறகு இனி முக்கியமான வேலைகளில் கலந்து கொள்வதும், பொறுப்புகளைத் தானாக ஏற்றுக் கொள்வதும் அவருக்கு அவன் மேல் இருக்கும் அபிப்பிராயத்தை உயர்த்தும் என்று அவன் கணக்குப் போட்டான். சுகேஷை விட அவன் மேலானவன், தகுதியானவன் என்கிற எண்ணத்தை அவருக்கு வர வைத்து விட வேண்டும் என்ற துடிப்போடு இருந்ததால் அங்கு வந்தவனுக்கு ராக்‌ஷசரும் அங்கிருப்பது திருப்தியை அளித்தது. அவன் ஈடுபாட்டை அவரும் அறியட்டும், சுகேஷை விடத் துடிப்பானவன், பொறுப்பானவன் என்ற அபிப்பிராயம் அவருக்கும் வரட்டும் என்று நினைத்தான். அவர் கருத்துக்கு அவன் தந்தையிடம் எப்போதுமே கூடுதல் மதிப்பு உண்டு.

குதிரைகள் வரிசை வரிசையாக வந்து நிறுத்தப்பட ஆரம்பித்த போது ராக்ஷசர் ஏதோ ஒரு பிழையை உணர்ந்தார். ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அவர் கண்கள் விரிந்து பரந்து நின்ற குதிரைப்படையை அலச ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் அவருக்குப் பிழையாய் தெரிந்த விஷயம் என்ன என்பது புலப்பட்டது. அவர் அறிந்த வரை அவர்களது குதிரைப்படையில் ஏறத்தாழ பாதியளவு உயர்ஜாதிக் குதிரைகளான பாரசீகக்குதிரைகள் . ஆனால் இப்போது அவர் கண்முன் பாரசீகக் குதிரைகள் பாதியளவு இல்லை. அவற்றின் எண்ணிக்கை குறைவாகவும், மற்ற குதிரைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் தெரிந்தது.

 (தொடரும்)

என்.கணேசன்   




Monday, February 17, 2025

யோகி 90

ல்பனானந்தாவை ஷ்ரவனும் அமைதியாகப் பார்த்தான். தன்னுடைய நியாயமான கேள்விக்கு அறிவுபூர்வமான பதில் அவளிடமிருந்து வரும் என்று காத்திருப்பது போல் காட்டிக் கொண்டான்.

 

கல்பனானந்தா சிறிது மௌனத்திற்குப் பிறகு சொன்னாள். “ஷ்ரவன் யோகாலயத்தில் யோகிஜி மட்டும் இல்லை. என்னைப் போல் நிறைய பேர் இருக்கிறார்கள். நாங்கள் யோகிஜிக்கு சமமானவர்கள் அல்ல. எங்களுக்கு எதிரிகள் இருக்கலாம். அவர்கள் எங்களுக்கு எதிராக ஏதாவது ஏவல் சக்தியை அனுப்பலாம். அப்படி யாராவது, ஏதாவது ஏவல் சக்தியை எங்களில் யாருக்காவது அனுப்பி, அதை நீங்கள் பார்த்திருக்கலாம். நீங்கள் சொன்னது போல யோகி வாழும் இடத்தில் இருப்பவர்களுக்கு எந்த ஏவல் சக்தியும் எந்த ஆபத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. உங்களையே அந்த ஏவல் சக்தி தாக்கினாலும் கூட, நீங்கள் இங்கிருப்பதால், உங்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தி விடவில்லை பார்த்தீர்களா? மற்றபடி யோகிஜிக்கு நல்லவர் கெட்டவர் எல்லாம் ஒன்று தான். அனைவர் மேலும் அவர் கருணையே காட்டுவார். அதனால் அந்த ஏவல் சக்திகள் இங்கே உலாவுவதைக் கூட அவர் தடுக்கவில்லை. ஆனால் அந்த ஏவல் சக்திகள் இங்குள்ளவருக்கு ஏதாவது ஆபத்தை ஏற்படுத்திவிட முயன்றால் அதை அவர் கண்டிப்பாகத் தடுப்பார்.”

 

ஷ்ரவன் மனதினுள் அவளுடைய வாதத்திறமையை மெச்சினான்.  நெஞ்சில் கை வைத்து பணிவு காட்டிச் சொன்னான். ” நன்றி சுவாமினி. நான் இந்தக் கோணத்தில் யோசிக்கவில்லை.”

 

கல்பனானந்தா தலையசைத்தாள். அவள் அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை. அதே சமயம், அவனை அனுப்பவும் முயற்சிக்கவில்லை. அதனால் ஷ்ரவன் தனக்குச் சிலகாலமாய் தீவிரமாக இருக்கும் துறவற சிந்தனைகளைச் சொன்னான். இந்த முறை வீட்டுக்குப் போய் எல்லாவற்றையும் துறந்து விட்டு இங்கேயே வந்து, மீதி வாழ்நாளை யோகிஜியின் நிழலில் கழிக்க விரும்புவதாகச் சொன்னான். இது போன்ற அமானுஷ்ய சக்திகளைக் காட்டிலும் யோகிஜியின் தெய்வீக சக்திகளில் கடுகளவாவது தனக்கு வாய்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதாய் அவன் சொன்னான்.

 

அவள் அவன் சொன்னதை வரவேற்கவும் இல்லை, எதிரான கருத்தைச் சொல்லவும் இல்லை. ‘புரிகிறதுஎன்பது போல தலையசைத்துவிட்டுச் சொன்னாள். “நீங்கள் ஆசைப்படுவது நிறைவேற என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

 

அவன் நன்றி தெரிவித்து விட்டு விடைபெற்றான். அவன் வீசியிருக்கும் தூண்டில் எந்த அளவு அவர்களைக் கவரும் என்று அவனுக்குத் தெரியவில்லை.  ஆபத்தான விளையாட்டில் தான் அவன் இறங்கியிருக்கிறான் என்றாலும், எது வந்தாலும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருக்கிறது.

 

வன் கதையளக்கிறானா, இல்லை உண்மையைச் சொல்கிறானா?” பாண்டியன் பிரம்மானந்தாவிடம் கேட்டார்.

 

பிரம்மானந்தா சற்று யோசித்து விட்டுச் சொன்னார். “இவன்  சொல்றதைப் பார்த்தால், ஹைத்ராபாத் சோமையாஜுலு சம்பவம், சுமார் இருபது வருஷங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் போல தான் தெரியுது. அது கேள்விப்பட்ட மாதிரியும் இருக்கு. ஆனால் உறுதியாய் சொல்ல முடியலை

 

நம்ம நாட்டுல இது மாதிரியான சம்பவங்கள் நிறைய நடக்குது. ஒரே மாதிரியான சம்பவங்கள் நிறைய நடக்கறதால, இந்தக் குழப்பம் தவிர்க்க முடியாததுபாண்டியன் சொன்னார்.

 

தேவானந்தகிரிக்கு சுமார் முப்பது வருஷங்களாவது மாந்திரீகத்தில் அனுபவம் இருக்கும். அதனால் இவன் சொல்கிற சோமையாஜுலு நிஜமான ஆளாய் இருந்தால் தேவானந்தகிரிக்குத் தெரியாமல் இருக்காது.” என்று சொன்ன பிரம்மானந்தா உடனடியாக தன் உதவியாளனை அழைத்து தேவானந்தகிரிக்குப் போன் செய்யச் சொன்னார்.

 

தலையசைத்து விட்டுச் சென்ற உதவியாளன் இரண்டு நிமிடங்களில் திரும்பி வந்து தயக்கத்துடன் சொன்னான். “சுவாமிஜியோட சீடன் தான் பேசினான். அவர் ஏதோ பிரஸ்னம் பார்த்துட்டு இருக்காராம். அது முடிஞ்சவுடன நீங்க கூப்பிட்டதாய்ச் சொல்றேன்னான்.”

 

பிரம்மானந்தா உள்ளுக்குள் எழுந்த கோபத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார். அவர் அழைத்தவுடன் எல்லா வேலைகளையும் ஒதுக்கி விட்டு ஒருவர் பேச வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். அவரை விட தேவானந்தகிரி பார்த்துக் கொண்டிருக்கும் ப்ரஸ்னம், அவருடைய சீடனுக்கு முக்கியமாக இருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. அதை அவரால் வாய்விட்டுச் சொல்லவும் முடியவில்லை.

 

பாண்டியன் சொன்னார். “இருக்கவே இருக்கு கூகுள். பார்த்துட்டா போச்சு

 

அவர் தன் ஆள் ஒருவனைக் கூப்பிட்டு கூகுளில் தேடச் சொன்னார். அவன் சிறிது நேரத்தில் கூகுளில் தேடி, தகவல்களைச் சேமித்துக் கொண்டு வந்து அவரிடம் தந்தான். சோமையாஜுலு என்ற பிரபல மாந்திரீகர் ஹைதராபாத்தில் இருந்தது உண்மை, கூலிப்படையால் அவர் கொல்லப்பட்டதும் உண்மை என்று தெரிந்தது. அந்தச் சம்பவங்களின் காலமும் கிட்டத்தட்ட ஷ்ரவனின் பிள்ளைப்பருவமாகத் தான் இருக்க வேண்டும் என்பதும் தெரிந்தது.

 

ஆனால் சோமையாஜுலுவின் பக்கத்து வீட்டில் வசித்த ஷ்ரவன் என்ற சிறுவனைப் பற்றிய தகவல் ஒன்றும் இருக்கவில்லை. அவர் கொலைக்குச் சம்பந்தமில்லாத தகவல்கள் அக்காலத்தில் பேசப்பட்டிருக்க வாய்ப்பும் இல்லை என்பதும் பாண்டியனுக்குப் புரிந்தே இருந்தது.

 

பிரம்மானந்தாவின் உதவியாளன் வந்து சொன்னான். “தேவானந்தகிரி போன் செஞ்சிருக்கார் யோகிஜி. என்ன சொல்லட்டும்.”

 

பிரம்மானந்தாவின் மனநிலை அவருடைய இறுகிய முகத்தில் தெரிய, பாண்டியன் உடனடியாகச் சொன்னார். “நமக்குத் தான் காரியம் ஆகணும் யோகிஜி. சோமையாஜுலுங்கற மந்திரவாதி ஒரு காலத்துல ஹைதராபாத்தில் இருந்தானா, கொல்லப்பட்டானான்னு வேணும்னா நாம கூகுள்ல தெரிஞ்சுக்க முடியும். ஆனா இப்ப இந்த ஷ்ரவன் சொல்ற மத்த விஷயங்கள் எல்லாம் சரியாய் இருக்க வாய்ப்பிருக்கா, இல்லை இவன் எதோ கதையளக்கறானான்னு தெரிய தேவானந்தகிரியோட உதவி நமக்குத் தேவை.”

 

பிரம்மானந்தா வேண்டா வெறுப்பாக அலைபேசியை உதவியாளனிடமிருந்து வாங்கினாலும், அவர் தேவானந்தகிரியிடம் பேசிய போது, பேச்சில் அவர் மனநிலை வெளிப்படவில்லை. அன்பும், பணிவுமே பேச்சில் வெளிப்பட்டன. “நான் அடிக்கடி அன்புத் தொந்தரவு செய்யறதுக்கு மன்னிக்கணும். உங்களுக்கு பல வருஷங்களுக்கு முன்னால் ஹைதராபாத்தில் இருந்த மந்திரவாதி சோமையாஜுலுவைத் தெரியுமா?”

 

ஆந்திரால அவர் அந்தக் காலத்துல ரொம்பவும் பிரபலம் யோகிஜி. மாந்திரீகத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர். ஆனால் கொலை செய்யப்பட்டு இறந்தார்னு கேள்விப்பட்டேன். ஏன் கேட்கறீங்க யோகிஜி?”

 

இங்கே யோகா தியான வகுப்புக்கு வந்த ஒருத்தனுக்கு ஓநாய் தெரிஞ்சுது, அவன் பிரக்ஞை இல்லாமல் கொஞ்ச நேரம் விழுந்து கிடந்தான்னு சொன்னேனில்லையா, அவன் ஹைத்ராபாத்காரன். அவன் சோமையாஜுலு வீட்டுக்கு பக்கத்துல குடியிருந்தவன். அவரோட ஏவல் சக்திகளைப் பார்க்க அவனுக்கு முடிஞ்சிருக்காம். அதனால அவர் அவனைப் பயன்படுத்திக்க முயற்சியும் செய்திருக்காராம். இது எந்த அளவு சரியாயிருக்கும்?”

 

சிறிது யோசித்து விட்டு தேவானந்தகிரி சொன்னார். “பல லட்சம் பேர்ல ஒருத்தனுக்கு அபூர்வமாய் அந்தச் சக்தி சின்ன வயசுலயே கிடைக்கறதுண்டு. அதுலயும் அந்த சக்தி இருக்குன்னு தெரிய வர்றது ரொம்ப ரொம்ப அபூர்வம். அந்தப் பையனே அவர் வீட்டுக்குப் பக்கத்துல இருந்ததால தான் அந்த ஏவல் சக்திகளை பார்க்கற வாய்ப்பு கிடைச்சு, அதனால தெரிஞ்சிருக்கு. அப்படிப் பார்த்தால் கோடியில ஒருத்தருக்கு தான் ரெண்டும் சேர்ந்து அமையும். அந்த மாதிரி ஒருத்தன் கிடைச்சா அவனை மாந்திரீகத்துக்குப் பயன்படுத்திக்கறது உண்டு. அதை என் குருவும் எனக்குச் சொல்லியிருக்கார். ஆனால் இதுவரைக்கும் நான் அப்படிப்பட்ட யாரையும் பார்த்ததில்லை. அதனால எனக்கே நீங்கள் சொன்ன ஆளைப் பார்க்க ஆர்வமாய் இருக்கு.”

 

அவனுக்கு அந்த சக்தி இருக்கறதுல மகிழ்ச்சியில்லை. அவன் ஆன்மீகத்துல ஆழமாய் போக ஆசைப்படறவன். நாளையோட அவன் தியான வகுப்புகள் முடிஞ்சு ஹைத்ராபாத் போயிடுவான்.”

 

நிஜமாவே மாந்திரீகத்துக்கு அது பெரிய இழப்பு தான். ஏன்னா விசேஷ பூஜைகள் செஞ்சு தெரிஞ்சுக்கற விஷயங்களை, ஒரு ஆளை வெச்சே தெரிஞ்சுக்கறது மாந்திரீகத்துல பாதி வேலையைக் குறைச்சுடுது. என்ன ஏவல் சக்தின்னு அவன் மூலம் தெரிஞ்சுகிட்டு, அதற்கு பரிகார பூஜைகள் மட்டும் செஞ்சால் போதுமே.”

 

மேலும் பேச்சை வளர்த்தாமல் சுருக்கமாகப் பேசி விட்டு, இணைப்பைத் துண்டித்த பிரம்மானந்தா பாண்டியனைப் பார்த்தார்.   பேச்சை முழுதும் கேட்டிருந்த பாண்டியன் யோசிக்க ஆரம்பித்தார்.


(தொடரும்)

என்.கணேசன்



Thursday, February 13, 2025

சாணக்கியன் 148

 

பாடலிபுத்திர  நகர வாயிற்காவலர்கள் எப்படியெல்லாம் சோதிக்கிறார்கள் என்பதை சின்ஹரன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாலும் அவனது வெளித் தோற்றம் சிந்தனைகளில் ஆழ்ந்தபடி பொறுமையுடன் காத்திருக்கும் ஆன்மிக முதியவராகவே அவனைக் காட்டியது. வருபவர்கள் சிறிது சந்தேகத்தை ஏற்படுத்தினாலும் அவர்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு தீவிரமாகவும் விரிவாகவும் விசாரிக்கப்படும் விதத்தை அவன் கவனித்தான். ஆயுதக்கிடங்கு எரிக்கப்பட்டதன் விளைவாக இந்தச் சோதனை ஆரம்பித்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அதே போல வெளியே செல்பவர்களையும் பரிசோதித்த பின்பே அனுப்புவதையும் கவனித்தான். தனநந்தனின் புதையல் காணாமல் போனபின் போகிறவர்களையும் சோதிப்பதை ஆரம்பித்திருப்பார்கள் என்று தோன்றியது.

 

வரிசையில் அவன் முன்னேறி காவலர்கள் அவனைச் சோதிக்க நெருங்கிய போது இந்தக் கிழவரைப் பரிசோதிக்க என்ன இருக்கிறது என்று காவலர்கள் நினைத்தது போலிருந்தது. அவன் தன்னுடைய அடையாளச் சீட்டையும், கையிலிருந்த பழைய பையையும் அவர்கள் பரிசோதிக்க நீட்டினான். அவன் அடையாளச் சீட்டு வைசாலி நகரவாசியாக அவனைக் காட்டியது. அவன் பையில் பழைய காவி உடைகள் இரண்டிருந்தன. வந்திருக்கும் உத்தேசம் என்னவென்று கேட்டார்கள். கரகரத்த முதிர்ந்த குரலில் மகாவிஷ்ணு கோயிலுக்கு தொழ வந்திருப்பதாய் சின்ஹரன் சொன்னான். இந்த முதிய மனிதனும், பையிலிருக்கும் உடைகளும் மகதத்திற்கு எந்த விதமான ஆபத்தையும் ஏற்படுத்திவிட முடியாதென்பதால் அவர்கள் அதிகம் யோசிக்காமல் உள்ளே அனுமதித்தார்கள்.     

 

சின்ஹரன் நேராக மகாவிஷ்ணு கோயிலுக்கே போனான். கோயிலில் இருந்த பூசாரி சின்ஹரனைப் பார்த்தவுடன் பரபரப்படைந்தார். ஏனென்றால் இளவரசன் சுதானு அந்த மகான் மறுபடி வந்தாரா, அவர் எங்கிருப்பவர் என்று தெரியுமா என்று பல முறை அவரிடம் கேட்டிருந்தான். இளவரசன் காணத் துடித்த மகான் இன்று திடீரென்று வந்து சேர்ந்தது அவருக்குப் பரபரப்பாக இருந்தது.

 

பூசாரி சின்ஹரனைப் பார்த்ததும் பயபக்தியுடன் கைகூப்பி வணங்கினார். “வாருங்கள் சுவாமி. அரசியாரும், இளவரசரும் தங்களைப் பார்க்க வேண்டும் என்று அன்று நீங்கள் சென்ற பிறகு நிறைய முயற்சி செய்தார்கள். உங்களைப் பிறகு காண முடியாததில் அவர்களுக்கு ஒரே வருத்தம்.”

 

சின்ஹரன் புன்னகையுடன் சொன்னான். “அந்த வருத்தத்தை இறைவனைக் காண முடியாததில் காட்டியிருந்தால் எப்போதோ கடைத்தேறி இருப்பார்கள்.”

 

மகான்கள் வாயிலிருந்தே இத்தகைய வார்த்தைகள் வர முடியும் என்று பூசாரி எண்ணியபடி சொன்னார். “அவர்களுக்குத் தங்களிடம் ஏதோ கேட்க வேண்டுமாம். தாங்கள் அரண்மனைக்குச் சென்றால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்...”

 

சின்ஹரன் சொன்னான். “மகாவிஷ்ணுவைத் தேடி வந்தவன் மனிதர்களைத் தேடிச் செல்வது உசிதம் என்று தோன்றவில்லை. என்னை மன்னியுங்கள்”

 

பூசாரிக்கு அவர் மகான் என்பது மேலும் உறுதியாகியது. அரண்மனைக்குச் சென்று வெகுமதிகள் பெறும் வாய்ப்பை எத்தனை பேரால் உதறித்தள்ள முடியும்?

 

அவர் அவசரமாகச் சொன்னார். “அப்படியானால் இறைவனைத் தொழுது விட்டு தயவு செய்து இங்கே சற்று நேரம் ஓய்வெடுங்கள். நான் தாங்கள் வந்திருக்கும் தகவலை அனுப்பி அவர்கள் தங்களை வந்து பார்க்க ஏற்பாடு செய்கிறேன்.”

 

சின்ஹரன் சிறிது தயக்கத்தோடு யோசிப்பவன் போல பாவனை காட்டினான். பூசாரி அந்த மகான் மறுத்து விடுவாரோ என்று பயந்தார். அதனால் யோசிக்கவும் சமயம் தராமல் அங்கேயிருந்து வேகமாக வெளியேறினார். அவர் ஓட்டமும் நடையுமாக அரண்மனையை அடைந்து வாயிற்காவலன் மூலம் சுதானுவுக்குத் தகவல் அனுப்பி விட்டு அதே வேகத்தில் கோயிலுக்குத் திரும்பி வந்தார். வரும் போது அந்த மகான் காத்திருக்காமல் போயிருப்பாரோ என்ற சந்தேகம் இருந்தது. நல்ல வேளையாக அந்த மகான் கோயிலிலேயே தியானம் செய்தபடி அமர்ந்திருந்தார்.

 

அந்த மகான் மகாவிஷ்ணு கோயிலுக்கு வந்திருக்கிறார் என்ற தகவல் கிடைத்தவுடன் சுதானுவும், தாரிணியும் தாமதிக்காமல் விரைந்து வந்தார்கள். சுதானு பூசாரியின் கையில் சில பொற்காசுகளைத் திணித்து விட்டுச் சொன்னான். “அவரிடம் நாங்கள் தனிமையில் பேச வேண்டியிருக்கிறது

 

பூசாரி புரிந்து கொண்டு பொற்காசுகள் கிடைத்த மகிழ்ச்சியுடன்நான் வெளியே தங்கள் ரதத்தருகே நிற்கிறேன் இளவரசே.” என்று கூறி அவர்களைத் தனிமையில் விட்டு வெளியேறினார்.

 

தாரிணி கொண்டு வந்திருந்த பெரிய தாம்பாளத்தில் கனிகளும், பட்டுத் துணியும்பொற்காசுகளும் இருந்தன. சின்ஹரன் முன் மிகுந்த பயபக்தியுடன் அந்தத் தாம்பாளத்தை வைத்து விட்டு இருவரும் வணங்கி எழுந்தார்கள்.

 

சின்ஹரன் மெள்ள கண்களைத் திறந்து வலது கையை உயர்த்தி அவர்கள் இருவரையும் ஆசிர்வதித்தான். பின் தாம்பாளத்தைத் தள்ளி வைத்தபடி சொன்னான். “மகாவிஷ்ணுவின் அருளைத் தவிர அடியேன் வேறெதையும் நாடியதில்லை. எனக்குத் தேவையுமில்லை.”

 

தாரிணி பயபக்தியுடன் சொன்னாள். “எங்கள் சந்தோஷத்திற்காக நீங்கள் இதைப் பெற்றுக் கொண்டு ஆசிவழங்க வேண்டும் சுவாமி

 

சின்ஹரன் கரகரத்த குரலில் சொன்னான். “இறைவனின் அருளைக் கேட்டுப் பெறுங்கள். மனிதர்களின் ஆசியில் என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது.”

 

தாரிணி சொன்னாள். “அப்படிச் சொல்லாதீர்கள் சுவாமி. இறைவனின் திருவடிகளையே மனதில் பற்றிக் கொண்டிருக்கும் தங்களைப் போன்ற மகான்கள் ஆசியில் எத்தனையோ நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.”

 

சின்ஹரன் அந்த நம்பிக்கைக்கு எதிராக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. சுதானு அவசரமாக ஆவலுடன் சொன்னான். “சுவாமி அன்று நீங்கள் எனக்கு அருள்வாக்கு ஒன்றைச் சொல்லியிருந்தீர்கள். அதன் முழுப்பொருள் எனக்கு விளங்கவில்லை. தாங்கள் அதை விளக்கினால் எனக்கு மிக உதவியாய் இருக்கும்

 

சின்ஹரன் சொன்னான். “அதைப் பயன்படுத்திக் கொள்ளும் யோகம் உனக்கு இருக்குமானால் அதன் பொருள் தானாக உனக்குப் புலப்படும்.”

 

சுதானுவுக்குச் சுருக்கென்றது. விளங்கவில்லை என்றால் யோகமில்லை என்று பொருளாகி விடுமா என்று பயந்தவனாகச் சொன்னான்.  “அரைகுறையாய் புரிந்து கொண்டு அது தவறாக இருந்து விடக்கூடாது என்று தான் விளக்கமாகச் சொல்லுங்கள் என்று கேட்கிறேன் சுவாமி

 

சின்ஹரன் உடனடியாக ஒன்றும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டான். அவன் கண்களை மூடி முக்காலத்தையும் பார்த்துக் கொண்டிருப்பது அரசிக்குத் தோன்றியது.

 

சின்ஹரன் கண்களை மூடியபடியே சொன்னான். “நீ எதை அடைய வேண்டிக் கொண்டு இந்தக் கோயிலுக்கு வந்தாயோ அதை அடைய உனக்கு ஒரு கச்சிதமான சந்தர்ப்பம் வரப் போகிறது என்று சொல்லியிருந்தேன். அதற்கு மேல் உனக்கு அதை விளக்க எனக்கு அனுமதியில்லை.”

 

தாரிணி மெல்லச் சொன்னாள். “விளக்க வேண்டாம். கூடுதல் தகவல்கள் எதாவது தந்தால் அவனுக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்று கேட்கிறான். தயவு செய்து அனுக்கிரகிக்க வேண்டும் சுவாமி

 

சின்ஹரன் மெள்ள கண்களைத் திறந்து சுதானுவைக் கூர்மையாகப் பார்த்தபடி சொன்னான். “அடுத்த வளர்பிறை ஏகாதசி நள்ளிரவு தான் அனைத்தும் முடிவுசெய்யப்படும் நாள். அதற்குப் பின் எடுக்கிற முயற்சி எதுவும் பலன் தராது. உன் முயற்சியில் உன் விதி மட்டுமல்லாமல் மகதத்தின் விதியும் தீர்மானமாகப் போகிறது. அதனால் எச்சரிக்கையுடன் சிந்தித்துச் செயல்படு.”

 

சுதானு தலையசைத்தான். பின் மெல்லக் கேட்டான். “அந்த சமயத்தில் தான் தாங்கள் சொன்ன எதிரிகளின் முற்றுகையும் இருக்குமா?”

 

சின்ஹரன் தலையை மட்டும் அசைத்து விட்டு எழுந்தான். ஒன்றுமே பேசாமல் அங்கிருந்து கிளம்ப யத்தனித்தான். தாரிணி பயபக்தியுடன் அந்தத் தாம்பாளத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள். சின்ஹரன் இரு கைகளாலும் வேண்டாம் என்று சைகை காட்டி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்

 

யாரோ ஒரு மகானை மகாவிஷ்ணு கோயிலில் சுதானுவும், அரசியும்  சந்தித்த தகவல் ராக்‌ஷசருக்கு அன்றிரவே எட்டியது.

 

ராக்‌ஷசருக்கு இளவரசன் சுதானு மீது நல்ல அபிப்பிராயம் கிடையாது. அவன் அதிகம் உணர்ச்சிவசப்படுவன், கோபக்காரன் என்பதோடு தன்னிச்சையாகச் செயல்படுகிறவன், பெரியவர்களின் அறிவுரைகளைக் கேட்க மறுக்கிறவன் என்பதும் அவன் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற உணர்வை அவர் மனதில் ஏற்படுத்தியிருந்தன….

 

அவர் யோசனையுடன் தகவல் கொண்டு வந்த ஒற்றனிடம் கேட்டார். “அவர் வந்தது எப்போது?”

 

காலையில் தான். நகர வாயிற்காவலர்கள் சொன்ன நேரத்தைப் பார்த்தால் வந்தவர் நேரடியாக மகாவிஷ்ணு கோயிலுக்குப் போய் வழிபட்டிருக்கிறார் போலத் தெரிகிறது. அவர் வந்திருக்கும் தகவலை அரண்மனைக்குச் சென்று பூசாரி தெரிவித்திருக்கிறார். உடனே அரசியும் இளவரசனும் சென்று அந்த மகானைச் சந்தித்திருக்கிறார்கள்.”

 

அரசி கோயில்களுக்குச் செல்வதும், மகான்களைச் சந்திப்பதும் எப்போதும் நடப்பது தான். ஆனால் சுதானு அப்படிச் செல்பவன் அல்ல….

 

அந்த மகான் இப்போது எங்கே ருக்கிறார்

 

“தெரியவில்லை. இளவரசர் அவரைச் சந்தித்து விட்டுத் திரும்பியிருக்கிறார் என்ற தகவல் கிடைத்த பிறகு தான் நாங்கள் அந்த மகான் பற்றிய தகவல் சேகரிக்க ஆரம்பித்தோம். அவர் வந்த விவரங்கள் கிடைத்தன. ஆனால் போன விவரங்கள் கிடைக்கவில்லை. பயணியர் விடுதி உட்படப் பல இடங்களில் பார்த்து விட்டோம். அவர் எங்கும் இல்லை.”

 

ராக்ஷசரின் மூளையில் ஒரு சிறு அபாய மணி அடித்தது.

 

(தொடரும்)

என்.கணேசன்





Wednesday, February 12, 2025

முந்தைய சிந்தனைகள் 119

 சிந்திக்க சில உண்மைகள் என் நூல்களில் இருந்து...












Monday, February 10, 2025

யோகி 89


ஷ்ரவன் சொன்னான். “நான் ஆரம்பத்தில் இருந்து சொன்னால் தான் உங்களுக்கு என் வித்தியாசமான பிரச்சினையை சரியாகப் புரிந்து கொள்ள முடியும் சுவாமினி. அதனால தயவு செய்து பொறுமையாய் கேளுங்கள். எங்கள் பூர்வீகம் ராமநாதபுரத்தில் ஒரு குக்கிராமம் என்றாலும், தாத்தா சின்ன வயதிலேயே தொழிலுக்காக ஹைதராபாத்தில் போய் அங்கேயே தங்கி விட்டார். அதனால் எங்கப்பாவே அங்கே தான் பிறந்து வளர்ந்தார். நானும் அப்படித் தான். எனக்கு எட்டு வயதிருக்கும் போது என் பக்கத்து வீட்டுக்கு ஒரு மந்திரவாதி வசிக்க வந்தார். அவர் பெயர் சோமையாஜுலு. மாந்திரீகத்தில் அவர் அந்தக் காலத்தில் மிகப் பிரபலம். எப்போதுமே அவர் வீட்டு வாசலில் கார்கள் நின்று கொண்டே இருக்கும். காலையில் ஏழு மணியிலிருந்து இரவு ஒரு மணி வரைக்கும் வெளியாட்கள் அவர் வீட்டில் இருப்பார்கள்.”

 

ஒரு நாள் இரவு சிரஞ்சீவியின் ஒரு சினிமாப்படம் இரவுக்காட்சி பார்த்து விட்டு நானும், என் அம்மா, அப்பாவும் திரும்பி வந்தோம். அப்போது பக்கத்து வீட்டில் ஏதோ பூஜை நடந்து கொண்டு இருந்தது. அர்த்த ஜாமத்து பூஜைகள் அந்த வீட்டில் நடப்பது சர்வசகஜம். அப்போது அந்த வீட்டு வாசலில் ஒரு நரி நின்னுகிட்டு இருக்கறதை பார்த்துட்டு நான், “ஹை நரின்னு கைகாட்டி சொன்னேன்.

 

என் அம்மாவும், அப்பாவும் நான் கைகாட்டிய இடத்தைப் பார்த்தார்கள். அவர்கள் இருவருக்கும் அந்த நரி தெரியவில்லை. அவர்கள் என்னை விசித்திரமாய் பார்த்தார்கள். பையன் என்னவோ உளறுகிறான் என்று விட்டு விட்டார்கள். ஆனால் அதன் பின்பு நான் பக்கத்து வீட்டில் ஏதாவது மாந்திரீக பூஜை நடக்கும் போதெல்லாம் பலதையும் பார்க்க ஆரம்பித்தேன். ஒருநாள் ஆந்தை, இன்னொரு நாள் வௌவால், ஒரு நாள் மண்டை ஓடு, இன்னொரு நாள் அதுவரைக்கும் பார்த்திருக்காத ஒரு வினோத உருவம்... கடைசியாய் பார்த்த உருவத்தின் வாயில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்த நாள் இரவு எனக்குக் கடுமையான காய்ச்சலே வந்து விட்டது. ஆரம்பத்தில் கற்பனையாய் எதோ பையன் உளறுகிறான் என்று நினைத்துக் கொண்டிருந்த என் அப்பாவுக்கு இதில் நிஜமாகவே எதோ இருக்கிறதென்று மெள்ளப் புரிய ஆரம்பித்தது. அவர் ஒரு நாள் அந்த மந்திரவாதியிடமே போய் நடந்ததையெல்லாம் சொல்லி இதெல்லாம் எதனால் என்று கேட்டார்.”

 

சோமையாஜுலு மிகவும் ஆச்சரியப்பட்டார். அவர் என்னைக் கூப்பிட்டு நான் எப்போது, எதைப் பார்த்தேன் என்று விவரமாய்க் கேட்டார். நானும் சொன்னேன். அவர் என்னை அனுப்பிவிட்டு என் அப்பாவிடம் எனக்கு ஒரு விசேஷ சக்தி இருக்கிறதென்று சொன்னார். ”மாந்திரீகத்தால அனுப்பப்பட்ட ஏவல் சக்தி, அனுப்பிய மந்திரவாதிக்கும், அந்தச் சக்தியால தாக்கப்படற ஆளுக்கும் மட்டும் தான் தெரியும். ஆனால் உங்க மகனுக்கும் அதைப் பார்க்கற சக்தி இயல்பாகவே வந்திருக்கு. இது பல லட்சம் பேர்ல ஒருத்தருக்கு மட்டும் தான் வாய்க்கும். இந்த அபூர்வசக்தி உங்க மகனுக்கும் கிடைச்சுருக்குஎன்று சொன்னார்.”

 

எங்கப்பா பயந்துட்டார். ’என் மகனுக்கு இதெல்லாம் வேண்டாம். இது வராமல் இருக்க எதாவது செய்ய முடியுமாஎன்று கேட்டார். அதற்கு சோமையாஜுலுஇந்த மாதிரி சக்தி தானாய் வரும். தானாய் போகலாம். நாமாய் ஒன்னும் செய்ய முடியாதுஎன்று சொல்லி விட்டார். அதைக் கேட்டு என் அப்பா மிகவும் வருத்தப்பட்டார். அதற்கு சோமையாஜுலு சொன்னார். “இதெல்லாம் எல்லாருக்கும் அமையாது. மாந்திரீகம் பண்ற எனக்கே நான் அனுப்பற ஏவல் சக்தி மட்டும் தான் தெரியும். வேற யாரோ யாருக்கோ அனுப்பிய ஏவல் சக்தியை என்னால் பார்க்க முடியாது. பாதிக்கப்பட்டவன் என் கிட்டயே வந்து கேட்டாலும் நான் அதற்கான விசேஷ பூஜைகள் எல்லாம் செஞ்சா தான் எனக்கே தெரியும். அப்படி இருக்கறப்ப உங்க மகனுக்கு எந்தப் பூஜையும், முயற்சியும் இல்லாமலேயே தெரியுதுன்னு சொன்னால் அது பெரிய பாக்கியம்.”

 

அவர் அது மட்டும் சொல்லவில்லை. அவரிடம் வருகிற, பில்லி சூனியம், ஏவல் சக்திகளால் பாதிக்கப்பட்ட ஆட்களுக்கு இருக்கிற பாதிப்பைப் பற்றிச் சொல்ல என்னை அவருடன் அனுப்ப முடியுமாஎன்று கூட அப்பாவிடம் கேட்டார். ”கஷ்டமான பூஜைகள் இல்லாமயே உங்க பையனால சிலதைப் பார்க்க முடியுது. கொஞ்சம் அவனுக்கு பயிற்சி கொடுத்தா இன்னும் கூட சூட்சுமமான விஷயங்களையும் அவனால பார்த்து சொல்ல முடியும். அதற்கெல்லாம் அதிக நேரம் ஆகாது. உங்க மகனை நான் சொல்ற சமயங்கள்ல அனுப்பி வைச்சா நான் பணமும் தாராளமாய் தர்றேன்என்றும் சொன்னார். நாங்களும் அப்போது பணம் போதாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு தான் இருந்தோம். ஆனாலும் என் அப்பா அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அந்த மாதிரி பணம் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லி வந்து விட்டார்.”

 

ஒருவிதத்தில் அதுவும் நல்லதாயிற்று. இரண்டு வருடங்கள் கழித்து  சோமையாஜுலுவை சுட்டுக் கொன்று விட்டார்கள். ஒரு முரட்டு அரசியல்வாதி தனக்கு வந்திருக்கிற கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் சோமையாஜுலு செய்திருக்கும் பில்லி, சூனியம் தான் என்று நினைத்து வாடகைக் கொலையாளிகளை வைத்து சோமையாஜுலுவைக் கொன்று விட்டார். அந்த காலத்தில் அது ஆந்திராவில் மிகவும் பரபரப்பாய் பேசப்பட்டது. நானும் அவர் கூட போய் வந்து கொண்டிருந்தால் என்ன ஆகிருக்குமோ தெரியவில்லை...”

 

கல்பனானந்தா ஷ்ரவனைத் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.  அவளைப் போலவே தான் பாண்டியனும், பிரம்மானந்தாவும் அவன் பேசுவதைத் திகைப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

 

ஷ்ரவன் தொடர்ந்தான். “அவருடைய மரணத்திற்குப் பின்னாலும் அபூர்வமாய் பல வருடங்களுக்கு ஒரு தடவை சிலதை என்னால் பார்க்க முடிந்தது. பெரியவனான பிறகு எதையும் நான் வாய் திறந்து சொல்வதை நிறுத்தி விட்டேன். எனக்கு அபூர்வ சக்திகள் மேல நிறைய ஆர்வம் இருக்கிறது சுவாமினி. ஆனால் நான் உணர ஆசைப்பட்டதெல்லாம் தெய்வீக சக்திகளைத் தான். நம் யோகிஜீக்கு கிடைத்த அந்த தெய்வீக சக்திகளில் ஒரு சிறுதுளி எனக்கு கிடைத்தாலும் அதை நான் பெரிய பாக்கியமாய் நினைப்பேன்…. ஆனால் நான் ஆசைப்பட்டதற்கு எதிர்மாறாய் தான் எனக்கு நடக்கிறது. என்ன செய்வது?”

 

ஷ்ரவன் இங்கு வந்தபின் கிடைத்த முதல் நாள் இரவு அனுபவத்தை மிகுந்த வேதனை காட்டிச் சொன்னான். சில நாட்களுக்கு முன் பார்த்த ஓமன் ஆங்கிலத் திரைப்படத்தின் விளைவாகத் தான் அது இருக்க வேண்டும் என்று சொன்னான். ஆனாலும் அரை மணி நேரம் உணர்விழக்கும்படியாக மிகுந்த சக்தி வாய்ந்த தாக்குதலாக அது இருந்தது என்றான்.

 

உங்கள் வகுப்பிலும் நான் பார்த்தது அதே ஓநாயைத் தான் சுவாமினி. முதல் தடவை பார்த்த போது அது நாயா ஓநாயா என்ற எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் இந்த தடவை நான் பார்த்தது ஓநாய் தான். சந்தேகமேயில்லை. அது உள்ளே நுழைந்து எல்லாரையும் பார்த்தது. பின் போய் விட்டது. அதைப் பார்த்தவுடனே என் கவனமெல்லாம் அங்கே போய் விட்டது. நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று கூட என் காதில் விழவில்லை. மன்னித்து விடுங்கள் சுவாமினி.”

 

கல்பனானந்தா அதிர்ச்சியில் சிலை போல் அமர்ந்திருந்தாள். அவள் அவனைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அவ்வளவு சீக்கிரம் நிதானம் தவறும் நபர் அல்ல என்று ஷ்ரவன் கணித்திருந்தான். அப்படிப்பட்டவள் காட்டிய அதிர்ச்சி, இந்த ஓநாய் சமாச்சாரம் அவள் இப்போது தான் கேள்விப்படுகிறாள் என்பதை சூசகமாக அவனுக்கு அறிவித்தது. அனுப்பியவர்கள் இங்கே அவனுக்கு ஏற்பட்ட முதல் அனுபவத்தை அவளிடம் சொல்லவில்லை போல் தெரிகிறது. ஆனாலும் அவளை இந்தத் தகவல் ஏன் அதிர வைக்கிறது என்று ஷ்ரவனுக்குப் புரியவில்லை. ஆச்சரியம், திகைப்பு சரி தான். ஆனால் அதிர்ச்சிக்கு என்ன காரணம்?    

 

கல்பனானந்தா சீக்கிரமே நிதானத்திற்கு வந்து மெல்ல கேட்டாள். “இந்த தடவை ஓநாயை மட்டும் தான் பார்த்தீர்களா? அந்த இளைஞனை நீங்கள் பார்க்கவில்லையா?”

 

இல்லை சுவாமினி

 

கல்பனானந்தா அமைதியாகச் சொன்னாள். “அபூர்வமாய் ஏவல்சக்தியைப் பார்க்க முடிந்த சக்தி உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அது நீங்கள் விரும்பாத சக்தியானாலும், வருத்தப்பட என்ன இருக்கிறது? பிடிக்கா விட்டால் அலட்சியப்படுத்தி விடலாமே?”

 

ஷ்ரவன் வருத்தத்தோடு சொன்னான். “நான் சின்ன வயதில் பார்த்தது ஏவல் சக்திகளாய் இருக்கலாம். ஆனால் இப்போது பார்ப்பது சினிமாவில் பார்த்ததாக அல்லவா இருக்கிறது சுவாமினி. இது இன்னும் மோசமாகவல்லவா இருக்கு.”

 

ஏன் சினிமாவில் பார்த்தது என்று சொல்கிறீர்கள். இதுவும் உண்மையில் ஏவல் சக்திகளாய் இருந்தால்?”

 

சூரியன் இருக்கும் இடத்தில் எப்படி இருட்டு இருக்க முடியும் சுவாமினி? யோகிஜி வாழ்கிற இடத்தில் எப்படி துஷ்ட ஏவல் சக்திகள் உலாவ முடியும்?”

 

கல்பனானந்தாவின் பார்வை மேலும் கூர்மையாகியது. அவன் மனதில் ஆழத்தில் உள்ளதைப் பார்க்க விரும்புபவள் போல் பார்த்தாள்.


(தொடரும்)

என்.கணேசன்