என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, October 20, 2022

சாணக்கியன் 27

 

லெக்ஸாண்டர் ஹிந்துகுஷ் மலைமுகடுகளைப் பார்த்தபடி மௌனமாக அமர்ந்திருந்தான். அவன் தற்போது பாக்ட்ரியா பகுதியில் இருக்கிறான். அப்பகுதியில் தலைவனாக இருந்த சசிகுப்தன் முன்பு பாரசீக மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு பாக்ட்ரியாவை ஆண்டு வந்தவன். போர் வரும் சமயங்களில் தன் படையுடன் சென்று பாரசீக மன்னருக்கு உதவுபவன். ஆனால் அலெக்ஸாண்டருடன் பாரசீக மன்னர் போரிட்ட போது மட்டும் சசிகுப்தன் பாரசீக மன்னருக்கு உதவுவதற்குப் பதிலாக அலெக்ஸாண்டருக்கு உதவி செய்து தன் பதவியைக் காப்பாற்றிக் கொண்டான். பாரதம் நோக்கிக் கிளம்பியிருக்கும் அலெக்ஸாண்டர் தன் படையுடன் அப்பகுதியில் சில நாட்கள் ஓய்வெடுக்கத் தீர்மானித்திருந்தான்.

 

இப்படித் தங்கியிருக்கும் சமயங்களில் அலெக்ஸாண்டர் பெரும்பாலும் தன் அடுத்த வெற்றிக்குத் தேவையானவற்றைத் திட்டமிடுவதும், ஆலோசிப்பதும் தான் வழக்கம். அந்தச் சமயங்களில் எப்போதும் அவனைச் சுற்றிப் படைத்தலைவர்கள், தகவல்கள் சொல்பவர்கள், ஒற்றர்கள் போன்றோர் இருந்து கொண்டேயிருப்பார்கள் என்றாலும்  அவன் அபூர்வமாகச் சில சமயங்களில் தனிமையை அதிகம் விரும்புவதுண்டு. அந்தச் சமயங்களில் அனாவசியமாக யாரும் வந்து பேசுவதை அவன் ரசிப்பதில்லை. அப்படிக் குறுக்கீடுகள் வருவதை அவன் தொந்தரவாகவே கருதுவான். அதனால் சரியான காரணம் இல்லாமல் அவன் தனிமையில் யாரும் குறுக்கிடுவதில்லை.

 

அந்தத் தனிமை நேரங்களில் அவன் மிக ஆழமானவன். போர் தந்திரங்களையும், உல்லாச விஷயங்களையும் தவிர்த்து விட்டுத் தத்துவார்த்தமான உண்மைகளை அவன் அதிகம் சிந்திக்கும் நேரமது. அரிஸ்டாட்டிலின் இணையற்ற மாணவனான அவன் அந்தச் சமயங்களில் மானிட வாழ்க்கையைப் பற்றியும் அறிவின் உச்ச விஷயங்களைப் பற்றியும் தான் சிந்தித்துக் கொண்டிருப்பான். உலகையே வென்று வரக் கிளம்பியிருக்கும் மாவீரனான அவன் சில சமயங்களில் இப்படி தத்துவார்த்த விஷயங்களைச் சிந்தித்துக் கொண்டு தனிமையில் அமர்ந்திருப்பது பலருக்கு ஆச்சரியமாக இருப்பதுண்டு. அவன் நன்றாகப் பேசும் மனநிலையில் இருக்கும் போது அவர்கள் அவனிடம் தங்கள் ஆச்சரியத்தை வாய்விட்டுச் சொல்வதும் உண்டு. அவர்களுடைய ஆச்சரியம் அவனை ஆச்சரியப்படுத்தும். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்று அவனுக்குத் தோன்றும். எல்லைகளை மீறிப் புதிய புதிய தேசங்களை வெற்றிக் கொள்வது அவனுக்கு எந்த அளவு ஆனந்தத்தைத் தருகிறதோ அதே அளவு மானசீகமாகவும் எல்லைகளை மீறி யோசிக்க அவனுக்கு மிகவும் பிடிக்கும். புதிய உண்மைகளைக் கண்டுபிடிக்கவும் அதை வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ளவும் அவனுக்குப் பிடிக்கும். வெளியே அவன் வெல்லும் தேசங்கள் வெளிப்பார்வைக்குப் பெருமை என்றால் உள்ளே அவன் உணரும் உண்மைகள் உள்ளத்திற்குப் பேரானந்தம் தருபவை. அவன் ஆசிரியரான அரிஸ்டாட்டில் எத்தனையோ ஞான விதைகளை அவன் உள்ளத்தில் விதைத்திருக்கிறார். சில சமயங்களில் தனிமையில் அவற்றை யோசிக்கத் தோன்றும். மனித வாழ்க்கையின் விசித்திரங்களைப் பற்றி ஆராயத் தோன்றும். வெளிப்புற வெற்றிகளைப் போலவே உள்ளத்தின் வெற்றிகளும் முக்கியமானவையே. அதுவும் மகத்தான வீரமே. வெளிப்புற வெற்றிகளை மட்டும் பார்க்கவும் யோசிக்கவும் முடிவது பாதி வாழ்க்கை மட்டுமே வாழ்கிறவர்கள். அதனால் தான் அவன் முழு வாழ்க்கை வாழ முயற்சிப்பது அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது....

 

அலெக்ஸாண்டர் சிந்தனை கலைந்து அவனருகே வந்து அமைதியாக நின்ற வீரனை மெல்லத் திரும்பிப் பார்த்தான். அவன் அப்படித் திரும்பிப் பார்க்காமல் இருந்திருந்தால் அந்த வீரன் போய் சிறிது நேரம் கழித்து வந்திருப்பான்.

 

வீரன் அவனை வணங்கி விட்டுச் சொன்னான். “தங்களைக் காண காந்தார அரசர் ஆம்பி குமாரனிடமிருந்து தூதர் ஒருவர் வந்திருக்கிறார், சக்கரவர்த்தி

 

அலெக்ஸாண்டர் ஒரு கணம் யோசித்து விட்டுச் சொன்னான். ”உள்ளே அனுப்பு. மொழிபெயர்ப்பாளனையும் வரச் சொல்.”

 

வீரன் சென்று காந்தார தூதரையும் மொழிபெயர்ப்பாளரையும் உள்ளே அனுப்பி வைத்தான்.

 

காந்தார தூதர் அலெக்ஸாண்டரை வணங்கி விட்டுச் சொன்னார். “வெற்றி மீது வெற்றி சேர்த்துக் கொண்டிருக்கும் சக்கரவர்த்திக்கு காந்தார அரசர் ஆம்பி குமாரர் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் அனுப்பியுள்ளார்.....”

 

மொழிபெயர்ப்பாளன் அதை மொழிபெயர்த்துச் சொன்னதும் அலெக்ஸாண்டர் குழப்பத்துடன் கேட்டான். “நான் கேள்விப்பட்ட வரையில் ஆம்பி குமாரன் காந்தார இளவரசர் அல்லவா? அவரை காந்தார அரசர் என்று நீங்கள் கூறக்காரணம் என்ன தூதரே?”

 

மொழிபெயர்ப்பாளன் அதை மொழிபெயர்த்துச் சொன்னதும் தூதர் சொன்னார். “முந்தைய அரசர் இறைவனடி சேர்ந்து விட்டதால் ஆம்பி குமாரர் தற்போது காந்தார அரசராக  இருக்கிறார் சக்கரவர்த்தி.”

 

அலெக்ஸாண்டர் இது வரை அந்தச் செய்தியை அறியவில்லை. எல்லாச் செய்திகளையும் உடனுக்குடன் அறிய விரும்பும் அலெக்ஸாண்டர் இந்தச் செய்தி இதுவரை தன்னை ஏன் எட்டவில்லை என்று யோசித்தபடியே ’மேற்கொண்டு சொல்’ என்று சைகை செய்தான்.

 

காந்தார தூதர் அலெக்ஸாண்டரின் பெருமையையும், காந்தாரத்தின் வலிமையையும் பற்றி மிக உயர்வாகச் சொல்ல ஆரம்பித்தார். அலெக்ஸாண்டர் முகம் எந்த உணர்ச்சியையும் காட்டா விட்டாலும் உள்ளூர அவன் சுவாரசியம் இழந்தான். இது போன்ற உயர்வு நவிற்சிகளைக் கேட்டு அவனுக்குச் சலித்து விட்டது. மொழி பெயர்ப்பாளனும் வாக்கியத்துக்கு வாக்கியம் மொழிபெயர்த்துச் சலித்தான். கடைசியில் ஆம்பி குமாரன் அனுப்பிய செய்தி இது தான். மாவீரனான அலெக்ஸாண்டருடன் வலிமையான காந்தாரத்தின் அரசனான ஆம்பி குமாரன் நட்பு பாராட்ட விரும்புகிறான். இருவருடைய நட்பினால் இரு பக்கமும் இலாபமடைய நிறைய இருக்கிறது. அது குறித்துப் பேச ஆம்பி குமாரன் அலெக்ஸாண்டரை ஒரு முறை சந்திக்க விரும்புகிறான்...

 

அலெக்ஸாண்டர் சுருக்கமாகச் சொன்னான். “மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தேன் என்று தங்கள் அரசரிடம் கூறுங்கள் தூதரே. நானும் ஆம்பி குமாரரைச் சந்திக்க விரும்புகிறேன். எங்கு எப்போது சந்திக்கலாம் என்பதை விரைவில் என் தூதர் மூலம் சொல்லி அனுப்புகிறேன் என்று அவரிடம் தெரிவியுங்கள்”

 

காந்தார தூதர் மீண்டும் பணிவுடன் வணங்கி நன்றி தெரிவித்து விட்டுச் சென்றார். அவர் சென்ற பிறகு சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்து விட்டு அலெக்ஸாண்டர் சசிகுப்தனை வரவழைத்தான்.

 

சசிகுப்தன் உடனே வந்தான். பணிவுடன் வணங்கி விட்டு நின்ற அவனிடம் அலெக்ஸாண்டர் கேட்டான். “காந்தார அரசர் இறந்ததும், ஆம்பி குமாரன் அரியணை ஏறியதும் நீ அறிவாயா சசிகுப்தா?”

 

“இல்லை சக்கரவர்த்தி. தங்களுக்கு இந்தச் செய்தியைத் தெரிவித்தது யார்?”

 

“ஆம்பி குமாரனிடமிருந்து வந்த ஒரு தூதன் தான் அதைச் சொன்னான்.”

 

“இருக்கலாம் சக்கரவர்த்தி. காந்தார அரசர் வயோதிகத்தின் காரணமாகச் சில காலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று காந்தாரத்திலிருந்து வருபவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்....”

 

“இது போன்ற ஆட்சி மாற்றச் செய்திகள் எனக்கு உடனுக்குடன் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் சசிகுப்தா. குறிப்பாக நான் போகவிருக்கிற பிரதேசங்களில் நடப்பவை எனக்கு முதலில் தெரிய வருவது முக்கியம். பல நேரங்களில் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பது நிலவரங்களை முன்கூட்டியே அறிந்திருப்பது தான்...”

 

இந்த ஒரு தகவல் அலெக்ஸாண்டரைப் பொருத்த வரை எதையும் நிர்ணயிக்கப் போகும் தகவல் அல்ல என்பதை சசிகுப்தன் அறிவான். அதை அப்படி அலெக்ஸாண்டரும் நினைக்கவில்லை என்பதையும் அவன் அறிவான். இப்போது அலெக்ஸாண்டர் அதிருப்தியடைந்திருப்பது முக்கியமோ இல்லையோ போகவிருக்கும் இடத்தில் நடந்த செய்தி எப்படி தனக்கு முதலில் கிடைக்கவில்லை என்பதால் தான் என்பதும் அவனுக்குப் புரிந்தது. மிகவும் கூர்மையான அறிவு படைத்த சசிகுப்தன் சில மனக்கணக்குகள் போட்டு என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்தவனாக மெல்லச் சொன்னான். ”காந்தாரத்திலிருந்து வரும் வணிகர்கள் கூட இதை நமக்குச் சொல்லவில்லை என்பதால் அவர்கள் அங்கிருந்து கிளம்பும் போதும் இதை அவர்களும் அறிந்திருக்கவில்லை என்று தெரிகிறது.”

 

அலெக்ஸாண்டர் சந்தேகத்துடன் கேட்டான். “நாட்டில் அரசர் இறப்பதும், இளவரசர் அரசராவதும் கூட எப்படி மக்களுக்குத் தெரியாமல் போகும் சசிகுப்தா?”

 

“நடக்கும் போது கண்டிப்பாகத் தெரிய வரும் சக்கரவர்த்தி. அவர்களுக்குத் தெரியவில்லை என்றால் நடக்கவில்லை என்று தான் அர்த்தம்”

 

“நீ சொல்வதைப் பார்த்தால் அரசர் இருக்கும் போதே இளவரசன் ஆம்பி குமாரன் தன்னை அரசனாகச் சொல்லிக் கொண்டு தூதரை அனுப்பியிருப்பது போல் அல்லவா தெரிகிறது. ஆம்பி குமாரன் அப்படி ஏன் செய்கிறான்?” அலெக்ஸாண்டர் திகைப்புடன் கேட்டான்.

 

(தொடரும்)

என்.கணேசன்

 



இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)


நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் ரிஜிஸ்டர் தபால் அல்லது குரியர் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம். 

உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

Monday, October 17, 2022

யாரோ ஒருவன்? 107


ல்யாணுக்கு யோசிக்க யோசிக்க தாங்கள் செய்திருப்பது வடிகட்டிய முட்டாள்தனம் என்று புரிய ஆரம்பித்தது. சாதாரணமாகவே நாகரத்தினங்கள் வைத்திருந்து சக்தி படைத்தவனாக இருக்கும் நாகராஜ் ஒரு அரை மணி நேர சந்திப்புக்கு ஐந்து லட்சம் வாங்குகிறான். அப்படிக் கொடுத்து அவனைத் தரிசித்து அருள்வாக்கு வாங்க மாதக்கணக்கில் ஆட்கள் காத்திருக்கிறார்கள், அவனுக்குத் தெரிந்த மில் அதிபர் மாதிரியான ஆட்கள் அவனைச் சந்தித்த பிறகு கோடிக்கணக்கில் லாபம் கிடைப்பதாகச் சொல்கிறார்கள் என்பதெல்லாம் அவன் சக்திகளின் அளவைச் சொல்கின்றன. அப்படிப்பட்டவனுக்கு இப்போது விசேஷ நாகரத்தினமும் கிடைத்திருக்கிறது. அதனால் அவனுக்குப் பலமடங்கு சக்திகள் கூடியிருக்கும். அப்படிப்பட்ட சக்திமானின் வீட்டிலிருந்தே அந்த விசேஷ நாகரத்தினத்தைத் திருடக் குறைந்தபட்ச அறிவு படைத்தவனே முயற்சி செய்ய மாட்டானே. இந்தக் கிழவர் ”அவன் என்னைப் பார்த்து சிரிக்கிறான். அதனால் அவனுக்குத் தெரியவில்லை என்று அர்த்தம்” என்று சொன்னதை வைத்து பேராசையினால் முயற்சி செய்யப் போய் அவன் அனுப்பிய ஆள்களை வைத்தே நாகராஜ் அவனிடமிருந்த ஒரே ஒரு சின்ன நாகரத்தினத்தையும் திருடிக் கொண்டானே! நாகராஜின் சிரிப்புக்கு அர்த்தம் இப்போதல்லவா புரிகிறது! அப்படி அவர்களைத் தூங்க வைத்து, அந்த ஆட்களை மயங்க வைத்து இந்த வேலையைச் செய்த நாகராஜுக்கு இந்த வீட்டிலிருந்து எல்லா நகைகள், பணத்தையும் கூட எடுத்துக் கொண்டு போகவும் முடிந்திருக்கும். அவர்களைக் கொன்று விட்டுப் போகவும் கூட முடிந்திருக்கும்.... இதை நினைக்கையில் அவனுக்கு உடல் நடுங்கியது.

வேலாயுதம் திகிலுடன் கேட்டார். “ஏண்டா நடுங்கறே?”

கல்யாண் காரணத்தைச் சொன்ன போது அவருக்கும் அது சரிதான் என்று புரிய அவர் பீதியுடன் அவனைப் பார்த்தார். “இனி என்னடா செய்யறது?”  

அவனுக்கு வழியெதுவும் புலப்படவில்லை. “ஒன்னுமே புரியலை”  என்று சொல்லியபடி எழுந்தான். இனி இதையே யோசித்துக் கொண்டிருந்தால் பைத்தியம் தான் பிடிக்கும்... அவன் வெளியே வர வேலாயுதம் பின்னாலேயே வந்தார்.

வெளியே பக்கத்து வீட்டில் அதிசயமாக நாகராஜும், சுதர்சனும் செடிகளுக்கு இடையே இருந்த களைகளைப் பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். சுதர்சன் அந்தப் பக்கத்து காம்பவுண்டு சுவர்பக்கம் இருக்க, நாகராஜ் இவர்கள் வீட்டுக் காம்பவுண்டு சுவர்பக்கம் தான் இருந்தான்.

வேலாயுதம் மகனிடம் கேட்டார். “நான் அவன் கிட்ட போய் பேச்சுக் கொடுத்துப் பார்க்கட்டுமா?”  

“என்னன்னு பேசப் போறீங்க?” கல்யாண் திகிலுடன் கேட்டான். ஏதாவது ஏடாகூடமாய் பேசி இன்னும் நிலைமையை அவர் மோசமாக்கி விடுவாரோ என்ற பயம் அவனுக்கு இருந்தது.

வேலாயுதம் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. ”அவன் என்ன தான் சொல்றான்னு பார்ப்போமே! என்று தனக்குள்ளேயே பேசுவது போல் சத்தமாய் சொல்லி விட்டு கல்யாண் தடுப்பதற்குள் அவர் “குட் மார்னிங்” என்று சத்தமாகச் சொன்னபடியே காம்பவுண்ட் சுவர் பக்கம் போனார்.  

நாகராஜ் நிமிர்ந்து பார்த்து “குட் மார்னிங்” என்று புன்னகையுடன் சொன்னான்.

வேலாயுதம் ரகசியம் ஒன்றை அவனுடன் பகிர்ந்து கொள்பவர் போலத் தாழ்ந்த குரலில் சொன்னார். “மூனு நாளைக்கு முன்னால அதிகாலைல நம்ம ரெண்டு பேர் வீட்டுக்கும் திருடர்கள் வந்திருக்கற மாதிரி தெரியுது. எதிர்வீட்டுக்காரர் தான் சொன்னார். எங்க வீட்டிலிருந்து வெளியே வந்து உங்க வீட்டுக்குள்ளே போனாங்களாம். அவனுக அவரைப் பார்த்தும் கூட கொஞ்சமும் பயப்படலையாம். அதனால அவர் நாம தான் எதோ வேலையை அவனுக கிட்ட ஒப்படைச்சிருக்கோம்னு நினைச்சிருக்காரு. அவர் சொன்ன பிறகு வீட்ல எல்லாம் செக் பண்ணிப் பார்த்தோம். ஒன்னு ரெண்டு சின்னப் பொருள்கள் தான் காணாம போயிருக்கு. நீங்க உங்க வீட்டுல எல்லாம் இருக்கான்னு பார்த்தீங்களா?”

அவர் பின்னாலேயே வந்து நின்ற கல்யாணுக்கு அவர் புத்திசாலித்தனமாய் தான் பேசியிருப்பது போலப் பட்டது. நாகராஜ் எல்லாம் அறிவான் என்றாலும் கூட இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறான் என்று அறிய அவரைப் போலவே கல்யாணும் ஆவலாக இருந்தான்.

நாகராஜ் சொன்னான். “இந்த வீட்டுல திருடறதுக்கு விலை மதிக்க முடியாததுன்னு சொல்ல எங்க உயிரைத் தவிர எதுவுமே இல்லையே. அதனால ஒருவேளை திருடர்கள் வந்திருந்தாலும் ஏமாந்து தான் போயிருப்பாங்க”

சொல்லி மீண்டும் ஒரு சிறியதாய் ஒரு புன்முறுவல் பூத்து விட்டு அந்தப்பக்கம் திரும்பி நாகராஜ் மறுபடி களை பிடுங்க ஆரம்பித்தான். அவன் அதிர்ச்சியோ ஆர்வமோ காட்டாமல் திருட்டு சம்பந்தமாகவோ, திருடர்கள் சம்பந்தமாகவோ வேறெந்தக் கேள்வியும் கேட்காமல் பேச்சை முடித்துக் கொண்டது இருவரையும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. கல்யாண் பக்கம் அவன் திரும்பக்கூட இல்லை.

அவர்கள் திரும்பவும் கார் பக்கம் வந்தவுடன் வேலாயுதம் சொன்னார். “அங்கே விலை மதிக்க முடியாததே உயிர் தானாம். நீ சொன்ன மாதிரி ‘உங்க உயிர் போகாம இருக்கிறதே அதிர்ஷ்டம் தான்’னு அவன் நமக்கு சொல்லாமல் சொல்றானா?”


ஜீம் அகமது ரிஷிகேசத்திலிருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருக்கும் போதே போன் மூலமாக ஒருவனிடம் பேசி நாகராஜ் மகராஜ் என்ற நாகசக்தி படைத்த மனிதனைப் பற்றிய எல்லாத்தகவல்களும் தனக்கு ஒரு நாளில் வந்தாக வேண்டும் என்று கட்டளையிட்டான். பின் அடுத்து ஒருவனுக்குப் போன் செய்து உடனடியாகச் சென்று பீம்சிங்கைச் சந்திக்கச் சொன்னான். பீம்சிங்கைச் சந்திக்கும் முறையை விளக்கி, விலாசத்தையும் அவனுக்குத் தந்தான்.

காலை பத்து மணிக்கு அஜீம் அகமதின் ஆள் சாந்தினி சௌக் பகுதியில் இருந்த செல்வந்தர்கள் மட்டுமே வசிக்க முடிந்த அந்தப் பெரிய அபார்ட்மெண்ட்ஸை அண்ணாந்து பார்த்தான். பின் பீம்சிங்குக்குப் போன் செய்தான். மூன்று முறை அடித்தவுடன் இணைப்பைத் துண்டித்து மறுபடி மூன்று நிமிடம் கழித்து போன் செய்து அது மூன்று முறை அடித்தவுடன் இணைப்பை மறுபடி துண்டித்து, சரியாக மூன்று நிமிடம் கழித்து மூன்றாவது முறையும் போன் செய்தான். மூன்றாம் முறை அடித்த போது பீம்சிங் போனை எடுத்தான். ‘ஹலோ” என்று எச்சரிக்கையுடன் அவன் குரல் கேட்டது.

“நமஸ்தேஜி. அஜீம்ஜி ஒரு புது வேலை விஷயமா உங்க கிட்டே பேச விரும்பறார்”

“நீங்க எங்கே இருக்கீங்க?”

“உங்க அபார்ட்மெண்ட்ஸுக்கு எதிர்ப்பக்கம் நின்னுகிட்டிருக்கேன் ஜீ”

சிறிது நேரம் பீம்சிங் ஒன்றும் சொல்லவில்லை. தன் ஃப்ளாட்டிலிருந்து வெளியே தெரியும் ஆளைப் பார்த்த பின் தான் உள்ளே அழைப்பதா இல்லை வேண்டாமா என்று முடிவு செய்வான் போலிருக்கிறது. அஜீம் அகமதின் ஆள் வெயில் விழும் இடத்தில் நின்று கொண்டு மூன்றாவது மாடியைப் பார்த்தான்.  ஏ3 எந்தப் பக்கம் என்று சரியாகத் தெரியவில்லை....

பீம்சிங்கின் குரல் கேட்டது. “சரி செக்யூரிட்டி கிட்ட போங்க. நான் சொல்லியிருக்கேன். உள்ளே விடுவான்”

அவன் சொன்னபடியே செக்யூரிட்டி வேறெதுவும் கேள்வி கேட்காமல் அஜீம் அகமதின் ஆளை உள்ளே விட்டு லிஃப்ட் இருக்கும் பக்கம் கைகாட்டினான்.

அஜீம் அகமதின் ஆளை  ஏ3 ஃப்ளாட்டில் இருந்த பீம்சிங் சிரிப்பே இல்லாத முகத்துடன் வரவேற்றான். அஜீம் அகமதின் ஆள் அஜீம் அகமதுக்குப் போன் செய்து அவன் குரல் கேட்டவுடன் செல்போனை பீம்சிங்கிடம் கொடுத்தான்.

“பீம்சிங். உன் கடவுள் உனக்கு வேறெந்த வேலைக்கும் வழிகாட்டிடலையே” என்ற அஜீம் அகமதின் குரலைக் கேட்டவுடன் பீம்சிங் வாய்விட்டுச் சிரித்தபடி சொன்னான். “இல்லைஜி.”

சரி உனக்கொரு வேலை இருக்கிறதுஎன்று சொன்ன அஜீம் அகமது வேலையை விவரித்துச் சொல்லி விட்டுகாளிங்க சுவாமியோட காட்டு காளி கோயிலுக்கு 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை ராகு காலத்துல வீட்ல இருந்து  கிம்பி  இருட்டறதுக்குள்ளே போய்ச் சேரணுமாம். அவர் எதோ உனக்கு சக்தி மந்திரக்கவசம் போட்டு அனுப்பறாராம். 24ஆம் தேதி ராத்திரி இந்த வேலையை அவர் சொன்ன மாதிரி முடிக்கணுமாம். இந்த வேலைக்கு உன் ரேட்டு என்னன்னு சொல்லு” 

“இந்த வேலை நமக்கு ஆகாது அஜீம்ஜீ. மன்னிச்சுடுங்க. ஆளை விடுங்க”

அஜீம் அகமது திகைப்புடன் கேட்டான். “ஏன்?”

பீம்சிங் சொன்னான். “அந்தக் காட்டு காளிக் கோயில் பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். ஒரு பாம்பு சுற்று வட்டாரத்துல இருந்தாலே மனுஷனுக்குத் தூக்கம் வர மாட்டேன்குது. அப்படி இருக்கறப்ப அந்தக் கோயில்ல நூத்துக்கணக்குல பாம்புக இருக்கு.”

அஜீம் அகமது சொன்னான். “உன்னை அந்தப் பாம்புகள் கடிக்காதுன்னு அந்த சுவாமிஜி உத்திரவாதம் கொடுத்திருக்கார் பீம்சிங்”


சுவாமிஜி என்ன தான் சொன்னாலும் சுற்றி பாம்புகள் தெரியற இடத்துக்கு அப்படியெல்லாம் தைரியமாய் என்னால போய்ட்டு வர முடியாதுஜீ.” பீம்சிங் திட்டவட்டமாய் சொல்லி விட்டான்.

(தொடரும்)
என்.கணேசன்


  

Thursday, October 13, 2022

சாணக்கியன் 26

 

ந்திரதத் விஷ்ணுகுப்தரிடம் கவலையுடன் கேட்டார். ”அலெக்ஸாண்டரை அனைவரும் சேர்ந்து எதிர்த்தால் தான் வெற்றி காண முடியும் என்று நீ சொன்னாய் விஷ்ணு. ஆனால் யாரும் அவரவர்களுக்கு ஆபத்து வராமல் ஒன்று சேர மாட்டார்களே. மனித சுபாவத்தை என்னை விட நன்றாக அறிந்தவன் நீயல்லவா? அவர்களுக்கு எல்லாவற்றையும் புரிய வைத்து அனைவரையும் ஒன்று சேர்ப்பவர் யார்?”

 

நான் முயற்சி செய்கிறேன் இந்திரதத். இது போன்ற சூழ்நிலைகளில் பெரியவர்களும், வலிமையானவர்களும் முடிவெடுப்பது தான் மிக முக்கியம். அவர்கள் முடிவெடுத்தால் கண்டிப்பாக மற்றவர்கள் இணைந்து கொள்வார்கள்.”

 

இதற்குத் தலைமை தாங்குவது யார் என்ற கேள்வி எழுகிறதே விஷ்ணு. நீ சொன்ன பெரியவர்களில், வலிமையானவர்களில் அதிக படை வலிமை படைத்தவர்கள் யார்?”

 

மகதம்

 

இந்திரதத் விஷ்ணுகுப்தரைத் திகைப்புடன் பார்த்தார். “தனநந்தனிடம் நீயே நேரில் போய் அறிவுரை சொல்லப் போகிறாயா விஷ்ணு

 

விஷ்ணுகுப்தர் தன் தந்தையைக் கொன்ற தனநந்தனிடம் போய் இது குறித்து அறிவுரை சொல்வதை இந்திரதத்தால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

 

விஷ்ணுகுப்தர் அமைதியாகச் சொன்னார். “அறிவுரை சொல்வதை தனநந்தன் சிறிதும் விரும்ப மாட்டான் இந்திரதத். அதனால் அவனிடம் நான் அறிவுரை சொல்லப் போவதில்லை. உதவி கேட்கப் போகிறேன். பாரதம் அன்னியரால் வெல்லப்பட உள்ளது. நீ தலைமையேற்று அவர்களைத் துரத்தியடித்து பெருமை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப் போகிறேன்....”

 

சந்திரகுப்தனைப் போலவே இந்திரதத்தும் நண்பனின் மனவலிமையையும், உயர் குணத்தையும் கண்டு வியந்து போனார்.  தன்னுடைய வெறுப்பைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு பாரத மண்ணின் பாதுகாப்பிற்காக இப்படி பகைவனிடமே சென்று வேண்டுகோள் விடுக்கும் பெருந்தன்மை எத்தனை பேருக்கு வரும்? எத்தனை பேரால் இது முடியும்?

 

நீ சொல்வதற்கு தனநந்தன் செவி மடுப்பான் என்று நீ நம்புகிறாயா விஷ்ணு

 

முயற்சி செய்யும் கடமை எனக்கிருக்கிறது இந்திரதத். அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பது தனநந்தனுக்கும், இறைவனுக்குமே வெளிச்சம். நல்ல எண்ணத்தால், தேசபக்தியால் இதற்கு தனநந்தன் உடன்படுவான் என்று நான் நம்பவில்லை.  ஆனால் புகழுக்காகவும், அனைவரையும் தலைமை தாங்கிப் போகும் பெருமைக்காகவும் இதற்கு உடன்படும் வாய்ப்பு இருக்கிறது என்று தோன்றுகிறது.... காரணம் எதுவாக இருந்தாலும் நல்லது நடந்தால் சரி”

 

இந்திரதத் அதற்குக் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அது நடக்கலாம். அல்லது நடக்காமலும் போகலாம். அவரை இன்னொரு சிந்தனை வாட்டி எடுக்க ஆரம்பித்தது. அதை அவர் நண்பனிடம் வெளிப்படையாகவே சொன்னார். “கேகய மன்னர் தனநந்தனின் தலைமையை ஏற்கக் கண்டிப்பாக உடன்பட மாட்டார் விஷ்ணு. அவருக்கு அவன் மீது உயர்ந்த அபிப்பிராயம் இல்லை. அவன் தலைமை ஏற்பதைச் சிறுமையாக அவர் கருதுவார்…”

 

விஷ்ணுகுப்தர் சொன்னார். “அதை அவர் பெருமையாக நினைக்க முடியாது என்பதை நானும் அறிவேன் இந்திரதத். ஆனால் சில சமயங்களில் நாம் இரண்டு சிறுமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. அலெக்ஸாண்டரிடம் தோற்பதை விட இது சிறுமை அல்ல என்பதை நீ தான் அவருக்குப் புரிய வைக்க வேண்டும் நண்பா….”

 

இந்திரதத் சொன்னார். “அவரிடம் அலெக்ஸாண்டரிடம் தோற்க வேண்டியிருக்கும் என்பதைப் புரிய வைப்பதே எனக்கு மிகவும் கஷ்டம் தான் விஷ்ணு. அதைப் புரிய வைக்க முடிந்தால் அல்லவா அதை விட இந்தச் சிறுமை சிறியது என்பதை நான் புரிய வைக்க முடியும். உண்மையைச் சொன்னால் நானே அலெக்ஸாண்டர் எங்களைத் தோற்கடிக்க முடியும் என்பதை ஆரம்பத்தில் நம்பவில்லை அல்லவா? இப்போதும் அதைச் சொல்வது நீ என்பதால், உன் அறிவுக்கூர்மை ஆணித்தரமாக யூகிப்பது நடக்காமல் போகாது என்று நம்புவதால் தான் நானே அலெக்ஸாண்டர் எங்களை வெல்வது சாத்தியமாக இருக்கலாம் என்று நம்புகிறேன்.  எதற்கும் நீ மகதம் போய் விட்டு வா விஷ்ணு. தனநந்தனின் முடிவு என்ன என்று தெரிந்த பின் தான் எங்கள் மன்னரிடம் இதை நான் சொல்ல முடியும். அவனே மறுப்பானானால் எங்கள்  மன்னரிடம் நான் அதைப் பேசுவது கூட அர்த்தமற்றது...”

 

விஷ்ணுகுப்தர் பெருமூச்சு விட்டார். நண்பன் சொன்னதில் அவர் எந்தத் தவறும் காணவில்லை. இந்திரதத் அவருடைய நண்பனாக இருக்கலாம். ஆனால் இந்திரதத்துக்கு கேகய நாட்டின் அமைச்சர் பொறுப்பும் இருக்கிறது. விஷ்ணுகுப்தர் அவரிடம் பேசியது போல அவர் கேகய மன்னரிடம் சென்று பேச முடியாது….  ஆரம்ப இடத்திலேயே அதுவும் நண்பனிடத்திலேயே சம்மதிக்க வைப்பதில் இத்தனை சிக்கல்கள் என்றால் மற்ற இடங்களில் எப்படி இருக்கும் என்று யோசித்த போது ஒரு பாரம் அவர் நெஞ்சை அழுத்தியது.

 

நண்பனைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த இந்திரதத் அவரது வேதனையை உணர்ந்து கொண்டு வருத்தத்துடன் மென்மையாகச் சொன்னார். “விஷ்ணு. ஒன்றுபட்ட பாரதம் என்ற உன்னுடைய கனவில் நான் பங்கெடுத்துக் கொள்ளலாம். ஆனால் பலருக்கும் அது நிஜத்தில் புரியாத கற்பனை பிம்பமாகவே இருக்கும் என்பதே யதார்த்தம். என்ன தான் உன்னதங்களைச் சொல்லி நீ அதைப் புரிய வைக்க முயன்றாலும் அவரவர் தனிப்பட்ட லாப நஷ்டங்களை வைத்தே ஒவ்வொருவரும் எதையும் தீர்மானிப்பார்கள் என்பதே உண்மை…”

 

விஷ்ணுகுப்தர் கண நேரத்தில் மனதில் இடம் பிடித்த பாரத்தைத் தள்ளி விட்டு அமைதியாகச் சொன்னார். “நீ சொல்லும் யதார்த்த நிலை எனக்கும் புரியாமல் இல்லை இந்திரதத். ஆனால் யதார்த்தங்களை நாம் தான் உருவாக்குகிறோம். இருக்கின்ற நிலைமைகளை அப்படியே ஏற்றுக் கொள்வதால் எதுவும் எப்போதும் மாறிவிடுவதில்லை. பலரும் போகும் போக்கிலேயே நம்மைப் போல் அறிந்தவர்களும் போவோமானால் நம் அறிவுக்கு அர்த்தமில்லாமல் போகிறது என்பதோடு நல்ல மாற்றங்களை சமூகத்தில் நம்மால் ஏற்படுத்தி விடவும் முடியாது. சொல்ல வேண்டிய உன்னதங்களை சலிக்காமல் சொல்லியே ஆக வேண்டும். நன்மைகள் என்றும் தீமைகளின் வேகத்தில் மனிதர்கள் மனதில் பதியாது. என்றாலும் சொல்லும் நல்ல விஷயங்கள் சிலர் மனதிலாவது சிறிது தங்கும். பின் கூடுதல் இடம் பிடிக்கும். இன்றில்லா விட்டாலும் சில காலம் கழித்தாவது அது பலனளிக்கும். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது….”

 

விஷ்ணுகுப்தரின் வார்த்தைகளில் நெகிழ்ந்து போன இந்திரதத் பதில் சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் மௌனமாக கைகூப்பினார்.

 

விஷ்ணுகுப்தரின் தொடர்ந்த பயணத்தில் சிற்றரசுகளையும், குடியரசுகளையும் அவர் கடக்க வேண்டியிருந்தது. அவர்களுடன் பேசி எந்தப் பேருதவியும் கிடைக்க வழியில்லை என்றாலும், இரவில் தங்குகின்ற இடங்களில் தங்குகின்ற நேரத்தில் அவர் சிற்றரசர்களிடமும், மக்கள் தலைவர்களிடமும் பாரதத்தின் எல்லையில் புதிதாக உருவாகியிருக்கும் நிலைமை குறித்து பேசினார். அவர்கள்  தோற்றத்தில் மாறுபட்டார்களேயொழிய அடிப்படை எண்ண ஓட்டங்களில் ஒன்று போலவே இருந்தார்கள். பாரத மண்ணின் மைந்தர்கள் என்ற சிந்தனை கிட்டத்தட்ட எங்குமே காணப்படவில்லை. ஒரு சிலர் மட்டுமே அவர் சொன்ன பிறகாவது அதை உணரவும், சிந்திக்கவும் முடிந்தவர்களாக இருந்தார்கள். அவர்களும் சில குடியரசுகளில் இருக்கும் சிந்தனையாளர்களாக இருந்தார்கள். அவர்களும் சிந்தனைக்கு உயர்வாகத் தோன்றும் இது நிஜமானால் மிக நன்றாக இருக்கும் என்று நினைத்தார்களே ஒழிய அது நிஜமாகும் என்று நம்பியதாகத் தெரியவில்லை.

 

மற்றவர்கள் அனைவரும் அலெக்ஸாண்டர் வரட்டும், பார்த்துக் கொள்ளலாம் என்றும் அடுத்தவர்கள் எல்லாரும் என்ன செய்கிறார்களோ அதையே செய்யலாம் என்றும் நினைப்பதாகச் சொன்னார்கள். போரிட்டு வெல்ல  முடியா விட்டால் சரணடைந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வது தான் அவர்கள் நிலைப்பாடாக இருந்தது. அதற்கு மேல் அவர்களுக்குச் சிந்திக்க எதுவும் இருக்கவில்லை. பலருக்குத் தங்கள் எல்லைகளைத் தாண்டி எதையும் யோசிக்க முடியவில்லை. அனைவரும் தட்சசீல ஆச்சாரியரை உயர்வாக நினைத்தார்கள். மரியாதையுடன் நடத்தினார்கள். ஆனால் அவர் தன்னுடைய சித்தாந்தங்களையும், தேசபக்தியையும் அவர்களுக்குப் புரிய வைக்க முடியவில்லை.

 

வேதங்கள், உபநிஷத்துக்களை உருவாக்கிய பாரதம், மாமுனிவர்களையும், யோகிகளையும், மகாவீரரையும், புத்தனையும் உருவாக்கிய பாரதம் இக்காலத்திற்குத் தேவையான மகாபுருஷர்களை உருவாக்கத் தவறி விட்டதோ என்று அவர் வருத்தப்பட்டார்.   அவர் பார்க்கின்ற இடங்களில் எல்லாம் ஞான சூனியங்களே அதிகம் இருந்தார்கள் அவர்களுக்குத் தனிப்பட்ட லாப நஷ்டங்களில் இருக்கும் கவனம், அறிவுகூர்மை எல்லாம் மற்ற விஷயங்களுக்கு நகர்ந்து விடாமல் இருப்பதாகவே அவருக்குத் தோன்றியது

 

மகதம் நோக்கிச் சென்ற அவரது பயணத்தில் இருந்த வேகம் வழியில் அவர் சிந்தனைகளை முக்கியமானவர்களிடம் சேர்க்க வைக்க முடிவதில் இருக்கவில்லை. அதில் அவருக்குப் பெரிய ஏமாற்றமும் இருக்கவில்லை. ஏனென்றால் அவர் அவர்களிடம் அதிகம் எதிர்பார்த்திருக்கவும் இல்லை. ஒரே ஒருவனின் தீர்மானம் தான் இப்போதைக்கு வரலாற்றை எழுதப் போகிறது. அவன் முன்னுக்கு வந்தால் அவன் பின்வர மற்றவர்களைத் திரட்டுவதில் சிரமம் பெரிதாக இருக்கப் போவதில்லை. அப்படிச் சிலர் வராமல் இருந்தாலும் பாதிப்பு எதுவும் இருக்கப் போவதில்லை. தனநந்தன் என்ன தீர்மானிப்பானோ?

 

(தொடரும்)

என்.கணேசன்



இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)


நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் ரிஜிஸ்டர் தபால் அல்லது குரியர் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம். 

உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

புத்தம் சரணம் கச்சாமி நாவலுக்கு தினமலர் மதுரைப் பதிப்பில் விமர்சனம்!

 அன்பு வாசகர்களே!


புத்தம் சரணம் கச்சாமி நாவலுக்கு இன்று (13.10.2022) தினமலர் மதுரை பதிப்பில் வந்துள்ள விமர்சனம் உங்கள் பார்வைக்கு -




Monday, October 10, 2022

யாரோ ஒருவன்? 106


ல்யாணுக்கு யோசிக்க சிறிது நேரம் தேவைப்பட்டது. அவன் கார்க்கதவைச் சாத்தி விட்டு மறுபடி வீட்டுக்குள்ளே போனான். வேலாயுதம் மகனைப் பின் தொடர்ந்து வந்தார். இருவரும் வேலாயுதத்தின் அறைக்குள் நுழைந்து கொள்ள மேகலா அதைப் பார்த்து விட்டு மகளிடம் அங்கலாய்த்தாள். “வரவர உங்கப்பாவுக்கும் தாத்தாவுக்கும் பைத்தியம் பிடிச்சு அது அதிகமாயிட்டே போற மாதிரி தான் எனக்குத் தோணுது. ஒரு சின்ன ரத்தினக்கல் காணாம போனதுக்கு ரெண்டு பேரும் பண்ற கூத்து தாங்கல. பாரு. இப்ப தான் உங்கப்பா கம்பெனிக்கு கிளம்பினாரு. போனவர் திரும்ப மனசு மாறி உள்ளே வந்து உன் தாத்தா ரூம்ல உட்கார்ந்து திரும்பவும் டிஸ்கஸ் பண்றாங்க.”

தர்ஷினி சொன்னாள். “தாத்தா. பக்கத்து வீட்டுக்கு நாகராஜ் அங்கிள் குடிவந்த பிறகே பைத்தியம் மாதிரி ஆயிட்டார். அப்பா அந்த ரத்தினக்கல் காணாம போனபிறகு அந்த மாதிரியாயிட்டார். அந்த ரத்தினக்கல் என்ன விலை இருக்கும்மா

அதோட சைஸ் பாத்தா அதிக பட்சமாவே பத்தாயிரத்துக்குள்ளே தான் இருக்கும். உங்கப்பாக்கு அதுல ஏதோ செண்டிமெண்ட். அதனால தான் அது காணாம போனது அவருக்குத் தாங்கலஎன்றாள் மேகலா.

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கையில் வேலாயுதம் திரும்பவும் மகனிடம் கேட்டுக் கொண்டிருந்தார். ”அன்னைக்கு என்ன ஆயிருக்கும்னு நீ நினைக்கிறாய்டா

கல்யாண் அன்று நடந்ததாக மணி சொன்னதை நினைவுபடுத்திப் பார்த்தான். உங்க பக்கத்து வீட்டுக் கேட்டை நெருங்கினது தான் தெரியும். பின்னே எதுவும் எங்களுக்கு ஞாபகம் இல்லை.... எங்களுக்கு ஞாபகம் வந்தப்பவும் நாங்க அந்த வீட்டு கேட் முன்னாடியே நின்னுட்டிருந்தோம். மணி மூனே முக்கால் ஆகி இருந்துச்சு... எங்க யாருக்குமே என்ன நடந்துச்சுன்னு தெரியல. ஒரே நேரத்துல அத்தனை பேருக்கும் நினைவு போயிடுச்சு. ஒரே நேரத்துல அத்தனை பேருக்கும் நினைவு வந்துச்சு. இடைப்பட்ட ஒன்னே முக்கால் நேரமும் என்ன நடந்துச்சுன்னு யாருக்கும் தெரியல. எவ்வளவோ யோசிச்சும் நினைவுக்கு வரல...”

ஒன்னே முக்கால் மணி நேரமும் அந்த கேட் முன்னாடியே நின்னுகிட்டா இருந்தீங்க?”

அது தான் தெரியலை.... ஆனா நாங்க எங்க வேலையை ஆரம்பிச்சு முடிச்சிருந்தா எப்படி களைப்பை உணர்வோமோ அந்தக் களைப்பு எங்க எல்லாருக்குமே இருந்துச்சு. எங்க இதயத்துடிப்பு கூட கூடுதலா இருந்துச்சு....”

இப்போது எதிர்வீட்டுக்காரர் சொல்கிறார்உங்கள் வீட்டுக்குள்ளிருந்து ஆட்கள் வெளியே வந்து பக்கத்து வீட்டுக்குள் போனார்கள் என்று”. அப்படியானால் அவர்கள் இந்த வீட்டிலிருந்து அந்த நாகரத்தினக்கல்லைத் திருடி பக்கத்து வீட்டுக்குப் போய் கொடுத்திருக்கிறார்களா? நாகராஜ் அவர்களை வசியம் செய்து அப்படி செய்ய வைத்திருக்கிறானா?... அவர்களை மட்டுமல்ல. வேலாயுதம், கல்யாண், வீட்டாள்கள் எல்லோரையும் என்னவோ செய்து உறங்கச் செய்திருக்கிறான்.... நினைக்க நினைக்க கால்களின் கீழே இருக்கும் நிலம் வெடித்துப் படுகுழியில் சரிந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு கல்யாணுக்கு ஏற்பட்டது. என்ன நடந்திருக்கலாம் என்பதை அவன் வேலாயுதத்திடம் சொல்ல அவர் தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்து பலவீனமான குரலில் கேட்டார். “என்னடா சொல்றே?”


ரேந்திரன் ரா தலைவரிடம் தன் கோயமுத்தூர் அனுபவங்களை விரிவாகச் சொன்னான். ரா தலைவர் நாகராஜ் பற்றி அவன் சொன்னதை எல்லாம் கேட்டு பிரமித்துப் போனார். அவர் அவனிடம் கேட்டார். “அவர் அங்கிருந்து கொண்டே இங்கே இந்த அற்புதங்களை நிகழ்த்த முடிந்தது அந்த விசேஷ நாகரத்தினத்தினால் தான் என்று நினைக்கிறாயா?”

“அப்படித் தான் தோன்றுகிறது. ஏற்கெனவே அவருக்கிருந்த சக்திகள் மற்ற நாகரத்தினங்களால் அவருக்குக் கிடைத்திருக்கலாம் என்றாலும் இந்த விசேஷ நாகரத்தினம் கடவுளைப் போன்ற சக்திகளைக் கொடுக்கும் என்று அந்த பாம்பாட்டி சொன்னான். அதை நிரூபிக்கிற மாதிரி தான் நடந்திருக்கிறது”

”அவர் அந்த வேலையைச் செய்யாமல் இருந்திருந்தால் ஜனார்தன் த்ரிவேதி இன்று இந்தியா முழுவதும் பேசும் நபராக உன்னைப் பிரபலமடையச் செய்திருப்பார். பாராளுமன்றத்தில் கூட நீ பேசப்பட்டிருப்பாய். ராவின் பெயரும் பெரிய விமர்சனத்திற்குள்ளாகி இருக்கும். அதனால் நீ மட்டுமல்ல, ராவும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது..... அவர் சொல்வதைப் பார்த்தால் அஜீம் அகமது இப்போது இந்தியாவில் இருக்கிறான்”

“ஆமாம் சார். மதன்லால், சஞ்சய் ஷர்மா இருவரையும் கண்டுபிடித்திருக்கும் அறிவுகூர்மையில் அவன் தான் தெரிகிறான். அதை அவன் வெளிநாட்டிலிருந்தே கூடச் செய்திருக்கலாம் என்றாலும், அவன் இங்கே வந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் இங்கே வந்து சேர்ந்திருக்கிறான். அது என் பாக்கியம்”

அதைச் சொல்லும் போது அவன் கண்கள் மின்னின. அஜீம் அகமதின் வருகை அவனுக்குள் பெரியதொரு எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அவரால் உணர முடிந்தது. தந்தையின் மரணக்கணக்கைத் தீர்க்கும் பெரியதொரு வாய்ப்பு அவனுக்குக் கிடைத்திருக்கிறது என்று அவன் நினைக்கிறான் என்பது புரிந்தது.

ரா தலைவர் சொன்னார். “அவன் சாதாரணமானவன் அல்ல. அவனிடம் நீ மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.”

நரேந்திரன் அமைதியாகச் சொன்னான். “தெரியும் சார். அதனால் தான் அவன் இங்கே வந்திருப்பது தெரிந்தும் இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் பயன்படுத்தும் நம் வழக்கமான வழிமுறைகள் எதையும் முடுக்கி விடவில்லை. ஜனார்தன் த்ரிவேதியைக் கூடக் கண்காணிப்பதை நிறுத்தி விட்டேன். இங்கே அபாயம் எதுவுமில்லை என்பதை அவன் உணரட்டும் என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்திருக்கிறேன். அவனுக்கு மிக நெருக்கமான ஆட்களின் நடமாட்டம் டெல்லியில் அதிகரித்திருக்கிறது. அதைக் கவனித்த பிறகும் அந்த ஆட்களைக் கூடப் பின் தொடர வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேன்.  இந்த முறை அவனைத் தப்பவிடக்கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன்.”

ரா தலைவர் மெல்லக் கேட்டார். “நீ நாகராஜை உதவி கேட்டிருந்தால் அஜீம் அகமதைப் பிடித்துக் கொடுக்க அவர் உனக்கு உதவியிருக்க மாட்டாரா?”

நரேந்திரன் சொன்னான். “அது நான் வாங்கும் சம்பளத்திற்கு அவரை வேலை பார்க்கச் சொல்வது போல ஆகி விடுமல்லவா சார்”

ரா தலைவர் புன்னகைத்தார். அவன் சொன்ன விதம் அவரைக் கவர்ந்தது. நரேந்திரன் சொன்னான். ”அவர்கள் அந்த ஃபேக்டரியைக் கண்காணிக்க ஆரம்பித்து விட்ட பிறகு நான் என்ன செய்தாலும், செய்யாமல் விட்டாலும் எனக்குப் பிரச்சினை தான் என்ற நிலை இருந்தது. என் வாழ்க்கை லட்சியமே நிறைவேறாமல் போய் விடும், வேலை போய் விடும், எதிரிகள் சுலபமாக என்னை அழித்து விடுவார்கள் என்ற நிலைமை இருந்த போது வேறு வழி தெரியாமல், அவர் உதவுவாரா இல்லையா என்ற நிச்சயம் கூட இல்லாமல், அவரிடம் உதவி கேட்டேன். அதில் நியாயம் இருந்தது. இனி நான் பார்த்துக் கொள்வேன் சார்.”

ரா தலைவர் சொன்னார். “நீ சொல்வதும் சரி தான். இனி இது நம் வேலை. அஜீம் அகமது பிடிபடுவது நமக்கு முக்கியம். உன் அப்பாவைக் கொன்றது மூலம் ’ரா’வுக்கே அவன் சவால் விட்டிருக்கிறான்.  அந்த சவாலை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். எத்தனை ஆட்கள் உனக்கு வேண்டுமானாலும் சொல். என் தரப்பிலிருந்து என்ன உதவி வேண்டுமானாலும் சொல். அவன் இந்த முறை இங்கேயிருந்து தப்பி விடக்கூடாது என்பது உன் இலக்கு மட்டுமல்ல. ரா வின் இலக்கும் தான் அது.”

(தொடரும்)
என்.கணேசன்  

பரபரப்பான இந்த நாவலை வாங்கிப்படிக்க என்.கணேசன் புக்ஸை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.