என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, June 20, 2022

யாரோ ஒருவன்? 90


வுனத்தின் முடிவில் நாகராஜ் சொன்னான். “நேரில் வாங்க. பேசுவோம்

நரேந்திரனுக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. உணர்ச்சிவசப்பட்டவனாகக் கேட்டான். “எப்ப சார் வரட்டும்?”

இப்பவே வாங்கஎன்றான் நாகராஜ்.

நரேந்திரன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஏழரை. உடனடியாக அவன் கிளம்பினான்.


ரேந்திரன் நாகராஜ் வீட்டு மெயின் கேட்டைத் திறந்து உள்ளே வருவதைப் பார்த்த வேலாயுதத்திற்குப் பகீரென்றது. நரேந்திரன் தன் சிந்தனைகளிலேயே மூழ்கியவனாக இருந்ததால் அவன் அவரைக் கவனிக்கவில்லை. அவர் அவனைக் கூர்ந்து பார்த்து விட்டு மகனுக்குத் தெரிவிக்க அவசரமாக உள்ளே ஓடினார்.

கல்யாண் மணியைச் சந்திக்கக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தான். தந்தை முகத்தில் தெரிந்த கலவரம் அவனைப் பயமுறுத்தியதுமேகலா பக்கத்து அறையில் இருந்ததால் அவளுக்குக் கேட்காமலிருக்கும் பொருட்டு கல்யாண் தாழ்ந்த குரலில் அவரைக் கேட்டான். “என்னப்பா?”

அந்த ரா அதிகாரி இப்ப பக்கத்து வீட்டுக்குள்ளே போயிருக்கான்

கல்யாண் திகைத்தான். வீட்டில் திருட்டுப் போயிருந்ததைக் கண்டுபிடித்து விட்டு அதற்காக ரா அதிகாரியை நாகராஜ் கூப்பிட்டு விட்டானோ? சந்தேகத்தின் பேரில் நரேந்திரன் அடுத்ததாய் இங்கும் வரக்கூடுமோ என்ற யோசனைகள் தான் ஆரம்பத்தில் அவன் மனதில் எழுந்தன. ஆனால் பிறகு யோசிக்கையில் அது அபத்தமாகத் தோன்றியது.  போலீஸைக் கூப்பிடாமல் பழைய வழக்கை விசாரிக்க வந்திருக்கும் சிறப்பு அதிகாரியான நரேந்திரனை இதற்கு ஏன் நாகராஜ் கூப்பிடப் போகிறான்? அவர்கள் இருவரும் எந்த வகையில் தொடர்பு வைத்திருந்தாலும் அது ஆபத்தாகவே தோன்றியது. ஆழ்ந்து சிந்தித்து விட்டு நரேந்திரன் பக்கத்து வீட்டிலிருந்து போன பிறகு இங்கிருந்து மணி வீட்டுக்குப் போவதே நல்லது என்ற முடிவுக்கு கல்யாண் வந்தான். ஒருவேளை ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டிக் கொண்டு  நரேந்திரன் இங்கே வந்தாலும் அவனைச் சந்தித்துப் பேசி அவனை அனுப்பியதற்குப் பிறகு மணி வீட்டுக்குச் செல்வதே நல்லதென்று அவன் அறிவு எச்சரித்தது. அவன் தன் முடிவைத் தந்தையிடம் சொன்னான்.

வேலாயுதம் பரபரப்புடன் சொன்னார். “அதுவும் சரி தான். நான் வெளியே ஏதாவது செய்துகிட்டே பக்கத்து வீட்டைக் கண்காணிக்கிறேன். அந்த ரா அதிகாரி என்ன பண்றான்னு பார்ப்போம்...”


ரேந்திரன் உள்ளே சென்ற போது நாகராஜ் முந்தைய சந்திப்பின் போது அமர்ந்திருந்த நாற்காலியிலேயே  அமைதியாக அமர்ந்திருந்தான். அவனுக்கு முன் நரேந்திரன் சென்ற முறை அமர்ந்திருந்த நாற்காலி காலியாக இருந்தது. சுதர்ஷன் சுவரில் சாய்ந்தபடியே நின்றிருந்தான். காலி நாற்காலியைப் பார்த்துக் கைகாட்டிய  நாகராஜ், நரேந்திரன் அமர்ந்தபின் அமைதியாகச் சொன்னான். “எல்லாத்தையும் ஆரம்பத்திலிருந்து சொல்லுங்க...”

எல்லாவற்றையும் அவன் அறிந்திருப்பான் என்றே தோன்றினாலும் அவன் அப்படிச் சொன்னது நரேந்திரனுக்குச் சிறிது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் அவன் நடந்திருப்பதைச் சுருக்கமாகச் சொன்னான்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட நாகராஜ் கேட்டான். “அவங்க அந்த இடத்தைக் கண்காணிக்க வரலை, கண்டுபிடிக்கப் போறதில்லைன்னு ஒரு நிலைமை தொடர்ந்தா அந்த ரெண்டு பேர் கதையை எப்படி முடிக்கறதா இருந்தீங்க?”

எப்படியாவது தண்டனை வாங்கித் தரணும்னு நினைச்சேன்.... ஆனா எப்படிங்கறதை நான் தீர்மானிச்சிருக்கலைநரேந்திரன் உண்மையைச் சொன்னான்.

அவங்க செஞ்சிருக்கற தவறுக்கு மரண தண்டனை தான் சரியாய் இருக்கும். ஆனால் அந்த அரசியல்வாதி சட்டப்படி அது நடக்க விட  மாட்டாரு. நீங்க தனிப்பட்ட முறையில அவங்களைக் கொல்றது தான் நீதி வழங்கின மாதிரி இருக்கும். அவங்கள உயிரோட விட்டா அவங்க எப்ப வேணும்னாலும் உங்கள காட்டிக் கொடுத்துடற அபாயத்தையும் தவிர்க்கிற மாதிரி இருக்கும். நீங்க அதுக்குத் தயாராய் இருந்தீங்களா?”

நரேந்திரன் சோகமாகப் புன்னகைத்தான். “எத்தனையோ தடவை நானும் இதே வழில யோசிச்சிருக்கேன். அவங்களக் கடத்திக் கொண்டு போய்  உண்மையை வரவழைச்ச விதம் சட்டப்படி தவறுன்னாலும், உண்மையை வரவழைக்க எனக்கு வேற வழியிருக்கலைங்கற நியாயம் என் பக்கம் இருந்துச்சு. ஆனா உயிரை எடுக்கறதுங்கறது அவங்க மட்டத்துக்கு என்னையும் இறக்கிட்ட மாதிரியாயிடும் இல்லையா. அதனால அதுக்கு மட்டும் என் மனசாட்சி ஒத்துக்கல...”

நாகராஜ் சிறிது நேரம் அவனையே கூர்ந்து பார்த்தான். அவன் முகபாவனையை வைத்து அவன் என்ன நினைக்கிறான் என்பது தெரியவில்லை. முடிவில் சொன்னான். “சரி நான் சொல்லற மாதிரி செய்யிங்க... மீதியை நான் பார்த்துக்கறேன்....”


ரு மணி நேரத்தில் நரேந்திரன் வெளியே வர வேலாயுதம் அவன் முகபாவனை, நடை வைத்து ஏதாவது தெரிகிறதா என்பதை ஊகிக்க முயன்றார். அவன் அவர் பக்கம் திரும்பவேயில்லை.... வேகமாக கார் ஏறிப் போய் விட்டான்அவர் மகனிடம் நரேந்திரன் போய் விட்ட தகவலைச் சொல்ல ஓடினார். கல்யாண் சீக்கிரம் போய் மணியிடமிருந்து விசேஷ நாகரத்தினத்தை வாங்கி விட்டு வந்து விடட்டும்....


நேற்றிரவு ஒற்றை வறண்ட சப்பாத்திக்காகக் காத்திருந்த மதன்லாலும், சஞ்சய் ஷர்மாவும் ஏமாந்து போனார்கள். இரவு பத்து மணியளவில் சஞ்சய் சொன்னான். “தடியன் இத்தனை நாள்ல இப்படி செஞ்சதில்லை. கொண்டு வர்றது ஒரு சப்பாத்தி, அதுவும் வறண்ட சப்பாத்தின்னாலும் அந்தந்த நேரத்துக்கு கொண்டு வந்துட்டு இருந்தான். இன்னைக்கு என்ன ஆச்சுன்னே தெரியலை.... வர்ற வழியில அவன் எதாவது அடிபட்டு செத்து கித்துப் போயிருப்பானா அண்ணா?”

மதன்லால் பசி எப்படியெல்லாம் மனிதனைத் தரம் தாழ்த்தி விடுகிறது என்று நினைத்தான்.  இல்லா விட்டால் அந்த வறண்ட சப்பாத்தி வரவில்லை என்று இருவரும் இப்படித் துடித்துப் போவார்களாபசி வயிற்றைக் கிள்ளியது….. உடல் ஒவ்வொரு கணமும் வலுவிழந்து கொண்டே போகிறது. இதே ரீதியில் போனால் சில காலம் கழித்து சங்கிலியைக் கழற்றி விட்டாலும் நடந்து வெளியே போகும் சக்தி கூட மிஞ்சாது.

தண்ணியைக் குடிச்சுட்டு படுப்போம்…. சனியன் நாளைக்காவது காலைல வந்து சேர்வான். கேட்டா எதாவது ஏடாகூடமாய் சொல்வான்….” என்று சஞ்சயிடம் சொன்னாலும் ஒருவேளை வழியில் அப்படி விபத்தில் தடியன் இறந்து போயிருந்தால்…. என்ற சந்தேகம் பயமுறுத்தியது.

தண்ணி ரொம்பவே ஜில்லுன்னு இருக்குண்ணா?” பரிதாபமாக சஞ்சய் சொன்னான்.

இவன் ஒருத்தன் போதும் எல்லா நம்பிக்கையையும் ஒருத்தன் இழக்கறதுக்கு…” என்று மனதில் விரக்தியுடன் நினைத்துக் கொண்ட அவன் அப்படியே உறங்கிப் போனான். உடலின் பலவீனம் கடுங்குளிரிலும் எப்படியோ இருவரையும் உறங்க வைத்தது.

காலை ஐந்து மணிக்கு சஞ்சய் ஷர்மாஅண்ணா….” என்றழைக்கும் சத்தம் கேட்டு மதன்லால் கண்விழித்தான். “என்ன?”

எனக்கு ஜன்னி வந்துடும் போல இருக்குண்ணா? அவ்ளோ குளிருது…. பசியும் தாங்க முடியல….”

மதன்லாலும் அதைக் கேட்ட பிறகு அப்படியே உணர ஆரம்பித்தான். இந்த அதிகாலையில் இந்த இம்சை அரசன் எழுப்பாமல் இருந்திருந்தால் கொஞ்சம் அதிகம் உறங்கி இருந்திருக்கலாம்….. காலையாவது தடியன் வராமல் இருக்க மாட்டான்….

சஞ்சய் சும்மா புலம்பாம இரு…. கொஞ்ச நேரத்துல விடிஞ்சுடும். குளிரும் குறைஞ்சுடும்…. தடியனும் வந்துடுவான்….”

தடியன் வருவான்னு நீங்க நிஜமாகவே நம்பறீங்களாண்ணா?”

மதன்லால் இங்கிருந்து தப்பிக்கும் வரை சஞ்சயைப் பகைத்துக் கொள்ள விரும்பாததால் பொறுமை காத்துவருவான்னு தான் நினைக்கிறேன்….” என்று சொன்னான்.

காலம் நகர்ந்து கொண்டே போனது. தடியன் வந்தபாடில்லைஸ்ஸ்ஸ் சத்தம் திடீரென்று கேட்டதுஒரு பாம்பு மதன்லால் அறைக்குள் நுழைய மதன்லால் அலறினான். “சஞ்சய்  பாம்பு…..”

ஐயோஎன்னண்ணா சொல்றீங்கஇரும்புச் சங்கிலியால அடிக்கப் பாருங்கண்ணா….. ஐயோ இங்கேயும் ஒரு பாம்புண்ணா…...”

வரிசையாக பாம்புகள் சில இருவர் அறையிலும் நுழைய இருவரும் பீதியில் உச்சஸ்தாயியில் அலற ஆரம்பித்தார்கள்….


(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.


நாமே முடிவெடுக்க வேண்டியவர்கள் | கீதை

Thursday, June 16, 2022

சாணக்கியன் 9

 

விஷ்ணுகுப்தர் பாடலிபுத்திரத்தை விட்டு  வெளியேறும் வரை அவரையே கண்காணித்து வந்த ஒற்றன் பிறகு ராக்‌ஷசரிடம் வந்து சொன்னான். “தாங்கள் கண்காணிக்கச் சொன்ன அன்று அந்த மனிதர் நள்ளிரவில் தான் விடுதிக்கு வந்து சேர்ந்தார். பெரும்பாலும் அவர் கங்கைக்குப் போய் வந்திருக்கலாம் என்பதை யூகிக்க முடிகிறது பிரபுநேற்று அவர் நகருக்கு வெளிப்புறத்தில் உள்ள ஒரு ஏழை வீட்டில் போய் சிறிது நேரம் பேசி விட்டு வந்தார். மறுபடி மாலையிலும் அதே வீட்டுக்குப் போய் அவர் பேசினார். என்ன பேசினார் என்று தெரியவில்லை. ஆனால் இன்று அதிகாலை அந்த வீட்டிலிருந்து ஒரு சிறுவனை அழைத்துக் கொண்டு பாடலிபுத்திரம் விட்டு வெளியேறினார். அவருக்கு ஒரு பணியாள் தேவைப்பட்டு அதற்காக அந்தச் சிறுவனை அழைத்துச் சென்றிருக்கலாம் என்று தோன்றியது…. ஆனால் அந்தச் சிறுவனின் தாய்மாமன் மற்றவர்களிடம் பேசிய போது அந்த அந்தணர் தன் மருமகனுக்குக் கல்விகற்றுத் தருவதாகச் சொல்லி அழைத்துப் போயிருப்பதாகச் சொல்கிறான்….”

 

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட பிறகும் ராக்ஷசருக்கு குழப்பமே மிஞ்சியது. பணிச் சிறுவனுக்காக விஷ்ணுகுப்தர் பாடலிபுத்திரம் வந்திருக்க வேண்டியதில்லை.  புரட்சிகரமான கருத்துள்ளவராக இழிகுலத்து மாணவனுக்கும் கற்றுத்தருவது அவரது கொள்கையாக இருந்தால்  தட்சசீலத்துக்கு அருகிலேயே யாராவது ஒரு சிறுவனைத் தேர்ந்தெடுத்து இருக்கலாம். விஷ்ணுகுப்தர் பாடலிபுத்திரம் வந்து போனதற்கான உண்மைக் காரணம் மகதத்தின் பிரதம அமைச்சருக்கு இன்னமும் பிடிபடவில்லை. ஆனால் விஷ்ணுகுப்தர் பாடலிபுத்திரத்தை விட்டு வெளியேறி விட்டதால் அவர் நிம்மதி அடைந்தார்.

 

 

பாடலிபுத்திரத்தை விட்டு வெளியேறும் வரை ஒற்றன் ஒருவன் தன்னைப் பின் தொடர்ந்து கொண்டிருந்ததை விஷ்ணுகுப்தர் அறிந்தே இருந்தார். அவர் கங்கைக்கரையிலிருந்து இரவில் விடுதிக்கு வந்த போதிலிருந்தே இந்த ஒற்றன் அவரைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.  அவர் அதைப் பெரிது படுத்தவில்லை. அவரும் சந்திரகுப்தனும் நீண்ட பயணத்தை மேற்கொண்டார்கள்.

 

அந்தக் காலத்தில் பெரும்பாலும் பயணிகள் கூட்டம் கூட்டமாகவே பயணித்தார்கள். வியாபாரிகள், தீர்த்த யாத்திரை போகிறவர்கள், துறவிகள் ஆகியவர்கள் தான் அதிகமாக நெடுந்தூரம் போகிறவர்கள். மற்றவர்களின் பயணங்கள் சிறுதூரப் பயணங்களே. அரசர்கள் மற்றும் அரச குடும்பத்தவர்கள் குதிரைகள் பூட்டிய ரதங்கள், அல்லது குதிரைகள் பூட்டிய பயண வண்டிகள் மூலம் போவார்கள். தூதர்கள், வீரர்கள் போன்றவர்கள் குதிரைகளில் வேகமாகப் போகிறவர்கள். மற்ற பயணிகள் கால்நடையாகவும், மாட்டு வண்டிகளிலும் தான் அதிகம் செல்வார்கள். இரவு நேரங்களில் வழியில் இருக்கும் கிராமங்களில் தங்குவார்கள். அல்லது வெட்டவெளிகளில் சிறிய கூடாரங்கள் அமைத்துத் தங்குவார்கள். கால்நடையாகப் போகிறவர்கள் முழுப் பயணத்தையும் கால்நடையாகவே போய் விட வேண்டியிருப்பதில்லை. சிறிது தொலைவு வரை அவர்களுக்கு மாட்டு வண்டிகளில் இடம் கிடைக்கலாம். சில சமயங்களில் சிறிது தூரம் குதிரையில் போகிறவர்கள் அவர்களை ஏற்றிச் செல்லலாம். ஒருவருக்கொருவர் முடிந்த அளவு உதவிக்கொள்வது அவர்களுக்கு இயல்பான விஷயமாக இருந்தது. சில இடங்களில் சில குழுக்கள் பிரிந்து வேறு பக்கமாக வேறு ஊர்களுக்குப் பயணிக்கும். வேறு சில ஆட்கள் அல்லது குழுக்கள் இவர்களுடன் சேர்ந்து கொள்வார்கள்.

 

வழியில் இருக்கும் கிராமங்களில் வசதியாக வாழும் விவசாயிகளின் வீடுகளில் எல்லோருக்கும் உணவு கிடைக்கும். அவர்கள் அப்படி வழிப்பயணிகளுக்கு உணவிட முடிந்ததைக் கடமையாகவும், ஒரு புண்ணியச் செயலாகவும் எண்ணினார்கள். வழியில் மரங்களில் இருக்கும் கனிகளும் பயணிகளின் வயிற்றை நிறைப்பதுண்டு. மாட்டு வண்டிகளில் பயணிப்பவர்கள் பாத்திரங்களையும் எடுத்து வருவதுண்டு. வழியில் வெட்ட வெளிகளில் கூடாரம் அமைத்து சமைத்துக் கொள்வதுண்டு. அப்படிச் சமைக்கையில் அங்கு இருக்கும் மற்றவர்களுக்கும் தந்து பகிர்ந்துண்டே அவர்களும் சாப்பிடுவது வழக்கம். சந்தித்துப் பிரிவதற்குள் எத்தனையோ நட்புகள் மனிதர்களுக்குள் உருவாவது உண்டு.

 

முதல் முறையாக இப்படிப்பட்ட பயணத்தை மேற்கொண்ட சந்திரகுப்தனுக்கு தினமும் புதிய புதிய அனுபவமாக இருந்ததுபாடலிபுத்திரத்திலிருந்து தட்ச சீலம் மிக நீண்ட தூரம் என்பதால் யாருமே கிளம்பிய இடத்திலிருந்து தட்ச சீலம் வரை அவர்களுடன் கடைசி வரை பயணிப்பவர்களாக இருக்கவில்லை. பல விதமான மனிதர்களை சந்திரகுப்தன் சந்தித்தான். விஷ்ணுகுப்தர் அவனிடம் சொன்னார். “கவனி. நீ ஒரு நாள் அரசனாகப் போகிறாய் என்றால் இந்த மனிதர்கள் எல்லாம் ஒரு நாள் உன் குடிமக்கள் ஆகலாம். தன் குடிமக்களைச் சரியாக அறியாதவன் அரசாளத் தகுதியில்லாதவனாகிறான். அதனால் நன்றாகக் கவனி. புரிந்து கொள்.”

 

சந்திரகுப்தனின் பாடம் அந்தப் பயணத்திலேயே ஆரம்பித்து விட்டது. சின்னச் சின்ன விஷயங்களில் எல்லாம் சூட்சுமமான விஷயங்களை அவர் அவனுக்குச் சொல்லித் தந்தார். அவர் பேசியதில் அனாவசியமான எதுவுமே இருந்ததில்லை. அவர் ஒவ்வொன்றையும்நீ அரசனாக வேண்டுமென்றால்” ”அரசனாகும் போதுஎன்று சொன்னது அவன் கனவை அவர் எதிர்கால நிஜம் என்றே எடுத்துக் கொண்டது போலிருந்தது. அவன் தாய்மாமனும், மற்றவர்களும் அவன் அரச கனவைக் கேலி செய்திருக்கிறார்கள். அவன் தாயின் அன்பான புன்னகையில் கூட அவன் அப்படி ஒரு நாள் ஆக முடியும் என்ற நம்பிக்கை இருக்கவில்லை. அவனே கனவு மட்டுமே கண்டிருந்தானே ஒழிய, அந்தக் கனவு மிகமிகப் பிடித்திருந்ததே ஒழிய, அது நனவாகும் என்று நம்பியிருக்கவில்லை.

 

ஆனால் விஷ்ணுகுப்தர் அதை உறுதியாக நம்பியது போலத் தெரிந்தது.  அவர் அதை அஸ்திவாரமாக வைத்தே அவனுக்கு அறிவுரைகள் சொன்னார். அதனாலேயே அவர் சொன்னதை மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு அவர் சொன்னபடியே செய்தான். கவனிக்கச் சொன்னவர் சில சமயங்களில் அவன் என்ன கவனித்தான் என்று கேட்பார். அவன் சொல்லும் பதிலைக் கேட்டுக் கொண்டுஅதை ஏன் கவனிக்கவில்லை, இதை எப்படிக் கவனிக்கத் தவறினாய்என்றெல்லாம் கேட்பார். கவனிப்பதில் இத்தனை விஷயங்கள் இருக்கின்றனவா என்று சந்திரகுப்தன் ஆச்சரியப்படுவான். அடுத்த முறை அதை எல்லாம் சேர்த்து கவனிப்பான்.

 

நிறைய கவனி. நிறைய கேள். ஆனால் குறைவாக மட்டுமே பேசு. நீ பேசிக் கொண்டிருக்கும் போது நீ கற்றுக் கொள்வதில்லைஎன்று விஷ்ணுகுப்தர் அவனிடம் சொன்னார். அவர் கற்பித்த எதிலுமே அவர் ஒரு முன்னுதாரணமாக இருந்ததையும் அவன் கவனித்தான்.

 

பயணத்தில் அவர்களுக்கு உணவு தந்தவர்களை மறக்காமல் வாழ்த்தும் பழக்கம் அவருக்கிருந்தது. ”அன்ன தாதா சுகீ பவ (அன்னமளித்தவன் நலமாக இருக்கட்டும்)” என்று வாழ்த்துவார். அவனும் அப்படிச் சொல்லக் கற்றுக் கொண்டான். பயணத்தில் எத்தனையோ பேர் அவர்களை மாட்டு வண்டிகளிலும், குதிரைகளிலும் ஏற்றிக் கொண்டு சென்றிருந்தார்கள். அவர்களை எல்லாம் பயணத்தின் முடிவில் வாழ்த்தும் பழக்கத்தையும் அவன் கற்றிருந்தான்.  அவர் அவனிடம் சொன்னார். “உனக்கு உதவியவன் உனக்கு உதவியதற்காக சந்தோஷப்பட வேண்டும். அந்த நிறைவை நீ அவனுக்கு ஏற்படுத்தவில்லை என்றால் எதிர்காலத்தில் அவன் உனக்கு உதவும் வாய்ப்பு வரும் போது உதவாமல் போகலாம்.”

 

எதுவுமே அந்தந்த நேரத்திற்கான செயல்களாக இருக்காமல் எதிர்காலத்திற்கும் சேர்த்து யோசிக்க வேண்டிய செயல்களாக இருக்க வேண்டும் என்று அவர் சொல்லிக் கொடுத்தார். சந்திரகுப்தன் சிந்திக்கும் விதங்களே சில நாட்களில் மாற ஆரம்பித்தன.

 

ஒரு நாள் அவர்கள் இருவரும் நடந்து கொண்டிருக்கையில் ஒரு முள் விஷ்ணுகுப்தரின் காலைக் குத்தி விட்டது. அந்த முள்ளை எடுத்துப் போட்டு விட்டு நடக்க ஆரம்பிக்காமல் அமைதியாகக் குனிந்து அந்த முட்செடியையே பிடுங்கி எறிய பார்த்தார். அது சுலபத்தில் வரவில்லை. அது ஆழமாக வேர் விட்டிருந்தது. ஆனாலும் பொறுமையாக அந்த மண்ணைக் குழிதோண்டி அந்த முட்செடியை வேரோடு பிடுங்கி எறிந்து விட்டு தான் பயணத்தைத் தொடர்ந்தார். அதிலும் கூட சந்திரகுப்தன் பாடம் கற்றான். உதவியவர்களை வாழ்த்தியது போலவே, எதிரிகளை வேரோடு அழிப்பதும் முக்கியம், இல்லாவிட்டால் அவர்கள் நம்மை மறுபடியும் தொந்தரவு செய்யும் வாய்ப்பு இருக்கிறது...

 

(தொடரும்)

என்.கணேசன்

Monday, June 13, 2022

அரக்கன்

 


அரக்கன்

.

பைக்கில் வந்திறங்கி, எதிர்க்குடிசை பாண்டியிடம் பேசிக் கொண்டிருக்கும் இளைஞன் முகம் மகாதேவனுக்கு மிகவும் பரிச்சயமுள்ளதாகத் தோன்றியது.    அவன் பைக்கை விட்டு இறங்கும் போது ஒரு கணம் தான் அவன் முகத்தை அவர் பார்த்திருந்தார்.  அதன் பின் அவன் அந்தப்பக்கம் திரும்பி விட்டதால், இப்போது அவன் முதுகு மட்டும் தான் அவருக்குத் தெரிகிறது. வயோதிகத்தினால் கண்பார்வை மங்கி வருவதால் அவன் அவர் சந்தேகப்படும் நபர் தானா என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. அவன் திரும்பும் போது தான் சொல்ல முடியும். அதற்குள் அவர் மனம் அலை பாய்ந்தது.

 

அவர் அந்த இளைஞனையே உற்றுப் பார்ப்பதை பாண்டி கவனித்தான். பாண்டியின் கண்கள் கூர்மையானவை. அவன் உள்ளுணர்வும் மிகவும் எச்சரிக்கையானது. அவனைச் சுற்றி நடக்கும் எதையும் உடனடியாகக் கூர்ந்து கவனிப்பவன் அவன். அது அவனுடைய தொழிலுக்கு அவசியமும் கூட. அவனையோ அவன் வாடிக்கையாளர்களையோ கவனிக்கும் நபர் போலீஸாராகவோ, போலீஸ் ஒற்றராகவோ இருக்கலாம் என்ற சிறிய சந்தேகம் அவனுக்கு வந்தாலும் கூட, சினிமாப்படத்தில் கடவுள் மாயமாவது போல, அவன் இருந்த இடத்திலிருந்து மின்னல் வேகத்தில் மாயமாகி விடுவான். கவனிப்பது எதிர்க்குடிசை பெருசு என்பதால் பாண்டி பதறாமல்  அமைதியாகவே தன் வாடிக்கையாளனிடம் பேசிக் கொண்டிருந்தான்.

 

அந்த இளைஞன் பர்ஸிலிருந்து பணத்தை எண்ணிக் கொடுத்து, பாண்டி கொடுத்த சிறிய பொட்டலத்தை வாங்கிக் கொண்டு திரும்பினான். மகாதேவனுக்கு அந்த இளைஞன் அவர் சந்தேகப்பட்ட நபர் தான் என்பது உடனடியாக உறுதியாகியது. தொடர்ந்து அவருடைய அந்தராத்மாவின் ஆழத்திலிருந்து எழுந்த ஓலத்தை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. விதி வலிது! 

 

ஆனால் அந்த இளைஞன் எதிர்க்குடிசை முன் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த கிழவர் பக்கம் பார்க்கவில்லை. அவன் அவரைப் பார்த்திருந்தாலும் அவனுக்கு அடையாளம் தெரிந்திருக்காது.  அவன் பைக் ஏறி வேகமாகப் போய் விட்டான். அந்த இளைஞனின் பைக் பார்வையிலிருந்து மறையும் வரை மகாதேவன் அவனையே சோகமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

பாண்டி கேட்டான். “ஏன் அப்புடி பாக்கறே பெருசு? தெரிஞ்சவனா அந்தப் பையன்?”

 

இல்லையென அவர் தலையசைத்தார். என்றோ பிரிந்து விட்ட மகனை அறிந்தவன் என்று சொல்லக்கூட அவரால் முடியவில்லை. “இதே சாயல்ல எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் இருந்தான். அவன் ஞாபகம் வந்துச்சு. அதான் பார்த்தேன்.”

 

பாண்டிக்கு அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது. கிழவர் இந்தச் சேரிக்கு வசிக்க வந்து ஆறேழு வருடங்கள் ஆகி விட்டன. அவரைத் தேடி இது வரை யாரும் வந்ததில்லை. அவருக்குக் குடும்பம் இருக்கிறதா என்றும் தெரியவில்லை. அவர் அதைப் பற்றி யாரிடமும் பேசியதுமில்லை. அக்கம் பக்கத்தினர் சில சமயங்களில் குடும்பம் பற்றியோ, உறவுகள் பற்றியோ கேட்டால், “யாருமில்லை. எல்லாரையும் இழந்தாச்சுஎன்று மட்டும் பொதுவாகச் சொல்லி நிறுத்திக் கொள்வார். அதற்கு மேல் எதுவும் சொல்ல மாட்டார். தெரிந்த ஆட்களின் சாயல் இருப்பவர்களைக் கூடச் சோகமாகப் பார்க்கும் அந்தக் கிழவரை அவன் இரக்கத்துடன் பார்த்தான்.

 

இந்தச் சேரிக்கு வந்ததிலிருந்து இன்று வரை அவர் ஒருவரிடமும் சண்டை போட்டோ, கோபப்பட்டோ அவன் பார்த்ததில்லை. ஏன், அவர் குரல் உயர்த்திப் பேசிக் கூட அவன் கேட்டதில்லை. எப்போதும் தானுண்டு, தன் வேலையுண்டு என்று தனிமையிலேயே இருப்பார். சேரியில் எல்லோரும் அவரைபரம சாதுஎன்றே நினைத்தார்கள். ஆனால் ஒரு காலத்தில் அவர் இதற்கு நேரெதிராக இருந்தார் என்பதையும், அவர் குடும்பத்தினரே அவரைஅரக்கன்என்று அழைத்தார்கள் என்பதையும் அவன் அறிய மாட்டான்.     

 

ரு வசதியான குடும்பத்தில், பெற்றோருக்கு இரண்டு பெண்களுக்கு அடுத்து பிறந்தவர் மகாதேவன். ஆண்பிள்ளையைத் தலையில் வைத்துக் கொண்டாடும் தலைமுறை அது. இரண்டு பெண்களுக்குப் பின் தவமிருந்து பெற்ற மகாதேவனை அவர் பெற்றோர் அப்படித் தான் கொண்டாடினார்கள். எல்லையில்லாத பாசம் காட்டி, மகன் கேட்கும் போதெல்லாம் ஏன், எதற்கு என்று கேட்காமல் பணத்தைக் கொடுத்து, எதற்கும், எப்போதும் கண்டிக்காமல் பெற்றோர் வளர்த்ததால் மகாதேவனிடம் நல்ல பண்புகள் எதுவும் ஆரம்பத்திலிருந்தே  இருக்கவில்லை. பொறுப்பற்றவராகவும், ஷோக்குப் பேர்வழியாகவும் வளர்ந்த அவருக்கு தன்னுடைய சுகம், சௌகரியம், தேவைகள் மட்டுமே என்றும் பிரதானமாக இருந்தன.  அவற்றில் ஏதாவது குறை இருந்தால், அதற்குத் தடங்கலாக யாராவது இருந்தால், அவரால் சிறிதும் சகித்துக் கொள்ள முடியாது. உடனே கோபத்தில் கத்தியும், ஆர்ப்பாட்டம் செய்தும், பொருட்களை உடைத்தும்  தன் அதிருப்தியை அவர் வெளிப்படுத்துவார். அதனால் வீட்டார் அவருடைய மனம் சிறிதும் கோணாமல் பார்த்துக் கொள்வார்கள். எப்படியோ அவர் சுமாராகப் படித்து ஒரு பட்டதாரி ஆனார்.

 

மிகவும் செல்லமாய், சிறப்புச் சலுகையுடன் வளர்ந்ததால் மகாதேவனால் எந்த வேலைக்கும் போக முடியவில்லை. பிறருக்கு வேலை செய்து சம்பாதிப்பதை அவர் அடிமைத்தனமாகவே பார்த்தார், அதனால் சுய தொழிலே நல்லது என்று முடிவெடுத்து தொழிலில் இறங்கினார். அதிலும் ஒழுங்கு முறையோ, உழைப்போ, முழுக்கவனமோ இல்லாததால், அதில் போட்ட முதலீடு கரையத் தொடங்கியது. இந்தக் கட்டத்தில் தான் அவருடைய பெற்றோர் நிலைமை பூதாகரமாகப் போவதை உணர்ந்தார்கள்.

 

கல்யாணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகப் போய்விடும்என்று யாரோ சொன்னார்கள். திருமணம் செய்து வைத்தால் மகனுக்குத் தானாகப் பொறுப்பு வந்து விடும் என்று அவர்களும் நினைத்தார்கள். அவர்கள் இறப்பதற்கு முன் புத்திசாலித்தனமாக, அரசாங்க வேலை பார்க்கும் ஒரு ஏழைக் குடும்பத்துப் பெண்ணை மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.  பிரச்சினை கைமாறியது.

 

அவர் மனைவி கிரிஜா பத்தரை மாற்றுத் தங்கமாக இருந்தாள். மகள் மல்லிகாவையும், மகன் சுரேஷையும் அவருக்குப் பெற்றுத் தந்தாள்.  கணவர் சரியாகச் சம்பாதித்துத் தரா விட்டாலும்,  ஏழைக் குடும்பத்துப் பெண்ணான அவளுக்கு, தன் சம்பளத்தில் குடும்பச் செலவுகளைச் சமாளிக்கத் தெரிந்திருந்தது. கிரிஜா தன் சம்பளத்தில் எப்படியோ குடும்பத்தை நடத்தினாள். மகாதேவன் கடைசியாகச் செய்த கூட்டு வியாபாரத்தில் கூட்டாளி அவருக்குப் போதையை அறிமுகப்படுத்தி, அவர் போதையில் இருக்கையில், வியாபாரப் பணத்தைச் சுருட்ட ஆரம்பித்தான். மகாதேவனின் பெற்றோரின் சொத்து எல்லாம் முடிந்து, அவர் மனைவியின் பணம், நகை எல்லாம் முடிந்த அளவு பிடுங்கி, அந்த வியாபாரத்தில் போட்டார்.  ஆரம்பத்தில் கிரிஜா அவருக்கு நல்லவிதமாய் அறிவுரை சொல்லிப் பார்த்தாள். அவருக்கு எப்போதும் அடுத்தவர்களின் அறிவுரை அதிகப்பிரசங்கித்தனமாயும், அவரை  அவமானப்படுத்துவதாகவும் தான் தோன்றும். அதனால் அவர் கோபம் கொண்டு வீட்டில் பாத்திரங்களை உடைத்தும், மனைவியையும், பிள்ளைகளையும் அடித்தும் தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். தன்னுடைய அறிவுரை, பண நஷ்டத்திலும், மனக் கஷ்டத்திலும் முடிந்ததால் கிரிஜா அறிவுரை சொல்வதையே விட்டு விட்டாள்.

 

அவளுடைய பணமும், நகைகளும் தீர்ந்தவுடன் அவருடைய கூட்டாளி இனி இவரிடமிருந்து எதுவும் பெயராது என்பதைப் புரிந்து கொண்டு ஒரு நாள் இருப்பதை எல்லாம் சுருட்டிக் கொண்டு, சொல்லிக் கொள்ளாமல் தலைமறைவானான் அப்போதும் கூட கிரிஜா அவரிடம் கோபித்துக் கொள்வதற்குப் பதிலாகசனியன் விட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் சும்மா இருங்கள் போதும். என் சம்பளத்தில் எப்படியாவது சமாளிப்போம்என்று தான் சொன்னாள். ஆனால் போதைப்பழக்கம் அவரைச் சும்மா இருக்க விடவில்லை. அவருக்குக் குடும்ப செலவைச் சமாளிக்கும் பிரச்சினை பற்றிய கவலையில்லை. அதை கிரிஜா பார்த்துக் கொள்வாள். பணமில்லாமல் போதைப் பழக்கத்தைச் சமாளிக்க முடியவில்லை என்பது தான் அவருடைய தலையாய பிரச்சினையாக இருந்தது. கண்டவர்களிடம் கடன் வாங்கி அதற்குச் செலவு செய்ய ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் அவரை நெருக்க ஆரம்பித்தார்கள். 

 

அந்தச் சமயத்தில் தான் கிரிஜா, பட்டப்படிப்பு முடித்த மகள் மல்லிகாவின் திருமணத்திற்கு வரன் பார்க்க ஆரம்பித்தாள். அப்போது மகன் சுரேஷ் பத்தாவது படித்துக் கொண்டிருந்தான் கிரிஜா வங்கியிலும், தெரிந்தவர்கள், மற்றும் உறவினர்களிடமும், கடன் வாங்கி,  திருமண ஏற்பாடுகளை ஒருத்தியாகவே செய்தாள்.. கணவர் மகளைத் தாரை வார்த்துக் கொடுக்கும் போது அருகில் இருந்தால் போதும் என்று நினைத்தாள்.  

 

திருமணத்திற்குத் தேவையான நகைகளை எல்லாம் ஒரு நாள் வாங்கிக் கொண்டு வந்து அவரிடம் காட்டினாள். அதில் அவருக்கு கடனாளிகளைச் சமாளிப்பதற்கும், மேற்கொண்டு போதுமான அளவு போதைப் பொருள் வாங்குவதற்கும் வழி தெரிந்தது. மகள் திருமணத்திற்கு இன்னும் ஐந்து நாட்களே இருக்கையில் அந்த நகைகளையும், திருமணத்திற்கு வாங்கி வைத்திருந்த வெள்ளிச் சாமான்களையும் எடுத்துக் கொண்டு ஒருநாள் நள்ளிரவில் அவர் ஓடிப் போனார். போதை அப்போதைய சந்தோஷத்தைத் தவிர வேறு எதையும் லட்சியம் செய்வதில்லை. அதன் ஆதிக்கத்தில் இருந்த அவரும் மனைவியின் நிலைமை, மகளின் எதிர்காலம், நியாயம், தர்மம், மனிதாபிமானம், அன்பு, பாசம் என்று எதைப் பற்றியும் யோசிக்கவில்லை.   

 

அந்தப் பணத்தில் அவரால் மூன்று வருடங்கள் தாக்குப்பிடிக்க முடிந்தது.  கையிருப்பு முடிந்து, இனி கடனும் கிடைக்க வழியில்லை என்ற நிலைமை வந்த போது தான் வேலைகளுக்குப் போக ஆரம்பித்தார். எடுபிடி வேலைகள் கூடச் செய்தார். ஒரு காலத்தில் அடிமைத்தனம் என்று நினைத்த வேலைகளை விடப் பல மடங்கு கேவலமான வேலைகளையும் அவர் செய்ய வேண்டி வந்தது. அதட்டலையும், மிரட்டலையும். அவமானத்தையும் அவர் சகிக்க வேண்டி வந்தது. அறிவுரைகளைச் சகிக்க முடியாத மனிதருக்கு, கசப்பான அனுபவங்களையே வரிசையாகப் பாடங்களாகத் தந்து வாழ்க்கை அறிவுறுத்தியது. ஆடி அடங்கி வாழ்க்கையில் ஞானோதயம் வந்த போது,  வயோதிகமும் வந்து சேர்ந்திருந்தது. கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை வாழ்ந்திருந்ததால் ஆரோக்கியமும் முற்றிலும் பாழ்பட்டு விட்டது. முடிவில் போதைப்பழக்க மறுவாழ்வு மையம்ஒன்று அவரை போதை அரக்கனிடமிருந்து  காப்பாற்றியது. அதன்பின் அவர் ஒரு சிறிய ஓட்டலில் வேலைக்குச் சேர்ந்தார். உணவு ஓட்டலில் கிடைத்தது. தங்குவதற்கு அருகில் உள்ள அந்தச் சேரியில் ஒரு குடிசை குறைந்த வாடகைக்குக் கிடைத்தது.

 

வாழ்க்கையின் இறுதியில் யோசிக்க முடிந்த போது, நினைவில் இருத்திக் கொள்ள அவருக்கு இனிமையான நினைவுகள் எதுவும் இருக்கவில்லை. அது போன்ற நினைவுகளும் கூட முந்தைய காலத்தில் சம்பாதித்திருந்தால் மட்டுமே அல்லவா ஒருவர் வைத்திருக்க முடியும்?  வாழ்ந்த வாழ்க்கையைப் பரிசீலித்துப் பார்க்கையில், அவருக்குத் தன்னையே வெறுக்காமல் இருக்க முடியவில்லை. கடைசியாக, மகளின் திருமணத்திற்கென்று மனைவி கஷ்டப்பட்டு வாங்கிய நகைகளையும் எடுத்துக் கொண்டு ஓடி வந்ததை எண்ணுகையில் அவருக்கே அவரை மன்னிக்க முடியவில்லை. அவரது சகோதரிகளும், சில உறவினர்களும், சில அக்கம்பக்கத்தினரும் அவரை அரக்கன் என்று அவர் காதுபடவே சொன்னதுண்டு. அந்த அடைமொழி, அவருக்கு இப்போது தவறாகத் தெரியவில்லை. அவரே தன்னை அப்படித்தான் இப்போது நினைக்கிறார். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் அந்த அடைமொழியை நிரூபித்திருக்கிறார். செல்லமாய் வளர்ந்தவர்கள் எல்லாரும் அவரைப் போல் ஆகி விடுவதில்லை. பலரும் ஒருகாலத்தில் விழித்துக் கொண்டு ஒழுங்காகி விடுகிறார்கள். ஆனால் அவருக்கோ சாகப் போகிற காலத்தில் தான் ஞானோதயம் பிறந்திருக்கிறது.     

 

வாய்விட்டு நிறைய நாட்கள் அழுது இப்போது தான் அவர் ஓய்ந்திருக்கிறார். இப்போதெல்லாம் அவர் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. ஒரு காலத்தில் அற்ப விஷயத்திற்கு எல்லாம் வந்து கொண்டிருந்த கோபம் இப்போது பெரிய விஷயத்துக்கும் கூட வருவதில்லை. அவருக்கு கிடைக்கும் வசவுகள், கசப்பான அனுபவங்கள், வலிகள் எல்லாவற்றுக்கும் காரணம் அவருடைய பழைய கர்மாக்கள் என்று நம்பினார். அதெல்லாம் தனக்கு வர வேண்டியதே என்று நினைத்தார். ‘இதுவும் வேண்டும். எனக்கு இன்னமும் வேண்டும்!’ ஒவ்வொரு வலியையும், ஒவ்வொரு அவமானத்தையும் அவர் தனக்குக் கிடைக்கும் தண்டனையாகவே மனப்பூர்வமாகவே ஏற்றுக் கொண்டார். ஆனால் சுற்றியிருப்பவர்களோ அது புரியாமல், சில சமயங்களில், அவரை மகானைப் போல நினைப்பது அவருக்கு வேடிக்கையாக இருக்கும். அது போன்ற நேரங்களில் நான் மகா மட்டமானவன், அரக்கன், மனிதன் என்று சொல்லக்கூட லாயக்கில்லாதவன்என்று கத்திச் சொல்லத் தோன்றும். ஆனால் அதற்கும் மனம் சலிக்கும்.

 

பலரும் அவரிடம் குடும்பத்தைப் பற்றி விசாரித்திருக்கிறார்கள். குடும்பம் ஒன்று இருப்பதையே யாரிடமும் அவர் சொல்லவில்லை.  இப்போதும்  நேராகச் சென்று மன்னிப்பு கேட்டால், அவருடைய பிள்ளைகள் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ, அவருடைய மனைவி அவரை ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. ஆனால் இனி எந்த விதத்திலும் அவர்களைத் தொந்தரவு செய்வதில்லை என்று உறுதியாக முடிவெடுத்திருந்தார்.

 

ஆனால் கடைசியாக மனைவியையும், மகனையும், மகளையும் தூரத்தில் இருந்தாவது ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும் என்று அவருக்கு மிகவும் ஆசையாக இருந்தது. ஒரு நாள் சென்று, தூரத்திலிருந்து அவர் வீட்டைக் கண்காணித்தார். அருகிலேயே போனாலும் அவர்கள் யாருக்கும் அடையாளம் தெரியும் தோற்றத்தில் அவர் இல்லை.   ஆனாலும் அவர் அவர்களை நெருங்க விரும்பவில்லை.

 

சுரேஷ் பைக்கில் வெளியே போவதையும், கிரிஜா பாசத்துடன் வெளியே வந்து அவனை வழியனுப்பி வைப்பதையும் பார்த்தார். மாலையில் மல்லிகா தாய் வீட்டுக்கு வந்தாள்.  சிறிது நேரத்தில் அவளும், கிரிஜாவும் கோயிலுக்குப் போனார்கள். போகும் போது அவரைத் தாண்டி தான் போனார்கள். மகள் முகத்தில் சந்தோஷமும், கழுத்தில் தாலியும், உடலில் தங்க நகைகளும் இருந்தன.  ஆனால் அவர் மனைவி கழுத்தில் வெறும் தாலிச் சரடு மட்டும் தான் இருந்தது. காதிலும் மூக்கிலும் தங்கம் இருந்தாலும் கழுத்தில் தங்கம் எதுவும் இல்லை. பழைய கடன்கள் இன்னமும் தீரவில்லை போல் இருக்கிறது. ஐந்தாறு மல்லிப்பூக்களைச் சேர்த்துக் கட்டி தலையில் அவள் வைத்திருந்தாள். அது ஒன்று தான் கூடுதல்.

 

திரும்பி வரும் போது ஒரு இடத்தில் அமர்ந்து குமுறிக் குமுறி அழுதார். அவரைத் திருமணம் செய்து கொண்டதைத் தவிர அந்த உத்தமி, வேறு எந்தத் தவறையும் செய்யவில்லையே! அழுது ஓய்ந்த பின் தன்னையே அவர் மனசமாதானப்படுத்திக் கொண்டார். ’இதெல்லாம் கொஞ்ச காலம் தான். இப்போது சுரேஷ் தலையெடுத்து விட்டான். அவன் அம்மாவை நன்றாகப் பார்த்துக் கொள்வான். அவள் கஷ்டங்கள் எல்லாம் தீரும்.’

 

அதன் பின் அவர் அவர்களைப் பார்க்கப் போகவில்லை. இனி எத்தனை காலம் இருக்கப் போகிறாரோ தெரியவில்லை. இறந்தாலும் அவர்களுக்குத் தெரிவிக்கிற மாதிரி எந்தக் குறிப்புகளையும், ஆதாரங்களையும்  அவர் தன்னிடம் வைத்திருக்கவில்லை. ’இறந்தால் அனாதைப் பிணமாக கார்ப்பரேஷன்காரன்  எடுத்துக் கொண்டு போகட்டும். குடும்பத்தாருக்கு எந்தச் செலவும் வேண்டாம். தலையில் வைக்கும் பூவாவது கிரிஜாவுக்கு மிஞ்சட்டும். நான் செத்த சமாச்சாரம் தெரிந்து அவள் அதையும் தியாகம் செய்ய வேண்டாம்.’

 

வைராக்கியத்துடன் வாழ்க்கையில் ஓரளவு அமைதியும் வந்து சேர்ந்திருக்கும் காலத்தில் தான் அவர் மகனைத் திரும்ப ஒருமுறை பார்க்கிறார். பாண்டியிடம் அவன் வந்து போதைப் பொருள் வாங்கிச் சென்றது அவருக்குப் பேரதிர்ச்சியாகவும், பெரும் வேதனையாகவும் இருந்தது. அவர் குடும்பத்தில் சரித்திரம் திரும்புகிறதா?

 

சுரேஷ் ஆட்கள் அதிகமில்லாத பூங்காவில் தனியாக அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு, அந்தப் போதைப் பொடியை மூக்கில் உறிஞ்சிக் கொண்டு இருந்தான். சொர்க்கத்தின் கதவுகள் திறப்பது போல் இன்பமாக இருந்தது. அவன் ஒரு மாதமாகத் தான் இந்தச் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். ஆரம்பத்தில் அவனுக்கு குற்றவுணர்ச்சி சற்று இருக்கத் தான் செய்தது. ஆனால் யோசிக்கையில் அது தேவையற்றது என்பது புரிந்தது. எதிலும் ஒரு அளவில் இருந்தால் பிரச்சினை இல்லை. அளவுக்கு அதிகமானால் தான் எதுவும் பிரச்சினை. அளவைத் தாண்டும் அளவு அவன் முட்டாள் அல்ல. அவன் அப்பாவைப் போல் கண்டிப்பாக ஆகிவிட மாட்டான். பின் இந்த வயதில் அனுபவிக்காமல் வாழ்க்கையில் எந்த வயதில் இந்த சந்தோஷங்களை எல்லாம் அனுபவிப்பது?

 

அருகில் யாரோ வந்து நிற்பது போல் தோன்றவே அவன் கண்களைத் திறந்தான். யாரோ ஒரு பிச்சைக்காரன்! சுரேஷ் சட்டைப் பையிலிருந்து பத்து ரூபாயை எடுத்து நீட்டினான். அந்தக் கிழவன் அதை வாங்க கையை நீட்டவில்லை.

 

என்ன தான் வேணும்?” என்று சிறு எரிச்சலுடன் சுரேஷ் கேட்டான்.

 

இந்தப் பழக்கத்தை விட்டுடு சுரேஷ்.” என்று சொல்லி அந்தக் கிழவன் கைகூப்பியது அவனுக்குத் திகைப்பாய் இருந்தது. கூர்ந்து பார்த்த பின் அவனுக்கு தந்தையின் அடையாளம் தெரிந்தது.

 

சுரேஷுக்கு முதலில் ஏற்பட்ட அதிர்ச்சி பின் கடுங்கோபமாய் மாறியது. அவன் தன் வாழ்க்கையில், இந்த மனிதனை வெறுத்தது போல் வேறு யாரையும் வெறுத்ததில்லை. அம்மாவும், அவனும், அக்காவும் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் இந்த நாய் தான்.  குடும்பத்திற்காக ஒரு சிறு துரும்பையும் நகர்த்தாத இந்த நாய், எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணமாய் இருந்த இந்த நாய், இப்போது அவனுக்கு அறிவுரை சொல்ல எங்கிருந்தோ வந்திருக்கிறது. அறிவுரை சொல்ல இந்த நாய்க்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

 

சுரேஷ் இறுக்கமான முகத்துடன், ஒரு புழுவைப் பார்ப்பது போல், தந்தையைப் பார்த்து வெறுப்பு கலந்த அலட்சியத்துடன் கேட்டான்.  நீ இவ்வளவு நாள் எங்கேயிருந்தே?”

 

மகன் மரியாதை தராமல் பேசியதற்கு மகாதேவன் வருத்தப்படவில்லை. இதைத் தான் அவர் சம்பாதித்திருக்கிறார். இதற்கு அவனைக் குறை கூற எதுவுமில்லை. அமைதியாகப் பதில் சொன்னார். “நரகத்தில் இருந்தேன். இப்பவும் அங்கே தான் இருக்கேன். நீயும் அங்கே வந்துடாதப்பா

 

அந்த ஆளின் கோபத்தைத் தான் சுரேஷ் சிறு வயதிலிருந்து பார்த்திருக்கிறான். அவரது அமைதி அவனுக்குப் புதியது. ஓங்கி நான்கு அறை அறைய வேண்டும் என்று தோன்றினாலும் அந்த ஆளின் உடலில் கை படுவது கூட அவனுக்கு அருவறுப்பாக இருந்தது. அலட்சியமாக அவன் இன்னொரு சிட்டிகைப் பொடி எடுத்து மூக்கின் நுனியில் வைத்து மெல்ல உறிஞ்சினான். அது தான் அந்த ஆளுக்கு அவன் தரக்கூடிய சரியான பதில் என்று தோன்றியது.

 

அவன் எண்ண ஓட்டங்களை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் ஒன்றும் சொல்லாமல் அவனையே மிகுந்த வேதனையுடன் பார்த்தார். அது அவனை மேலும் கோபமூட்டியது. “உன் மகன் உன்னை மாதிரி தானே ஆவான். அதுல என்ன தப்பிருக்கு?” என்று கேட்டான்.

 

மகாதேவன் வருத்தத்துடன் சொன்னார். “என் மகன் என்னை மாதிரி ஆகறது தப்பில்லை. ஆனால் கிரிஜாவோட மகன் அப்படி ஆகிறது சரியா சுரேஷ்?”

 

தாயின் பெயரைச் சொன்னது சுரேஷை அசைத்தது. அவன் கோபத்துடன்  சொன்னான். “பொண்டாட்டி, புள்ள மேல திடீர்னு அக்கறை வந்துடுச்சு.. வயசான காலத்துல உனக்கு குடும்பம் தேவைப்படுது. அதனால அக்கறை இருக்கறவன் மாதிரி நடிச்சு ஒட்டிக்க பாக்கிறியா? வாய்ல கெட்ட வார்த்தை வந்துடும். பேசாம போயிடு.”

 

மகாதேவன் பொறுமையாகச் சொன்னார். “நான் ஒட்டிக்க வரலை. அப்படி வர்றதுன்னா எப்பவோ வந்திருப்பேன். வந்து சேர்ற அருகதை எனக்கில்லை. ஏன் மன்னிப்பு கேட்கற அருகதை கூட எனக்கு இல்லை. இனி எப்பவும் நான் வரவும் மாட்டேன். இந்தப் பழக்கம் இப்ப சுகமா தெரியும். ஆனால் கடைசில பணம், மானம், மரியாதை, பெருமை எல்லாம் இழந்து கடைசில என்னை மாதிரி உன்னை ஆக்கிடும்ப்பா. அதுக்கு நானே ஒரு உதாரணம்ப்பா

 

சுரேஷ் கோபமாய்ச் சொன்னான். “மரியாதையா ஓடிப்போயிரு. உன்னைப் பார்க்கவே எனக்கு அருவருப்பாய் இருக்கு. அதனால கண்டிப்பா உன்னை மாதிரி நான் ஆயிட மாட்டேன். எனக்கு எந்த அளவுல நிறுத்திக்கணும்னு தெரியும்

 

மகாதேவன் விரக்தியுடன் சிரித்தார். ”இப்படி தான் நானும் ஆரம்பத்துல நினைச்சேன். இதை ஆரம்பிக்கிற ஒவ்வொருத்தனும் நினைச்சிருக்கான். புதைகுழில உள்ளே இழுத்துகிட்டே போய் அழிச்சுடற பழக்கம் இதுப்பா. என் அனுபவத்துல மட்டுமில்ல, என்னை மாதிரி எத்தனையோ பேர் அனுபவத்தை வெச்சும் சொல்றேன். வேண்டாம்ப்பா. எனக்காக வேண்டாம். உன் அம்மாவுக்காக விட்டுடுப்பா. அவளை நீயும் தண்டிச்சுடாதப்பா. அவ பாவம்ப்பா. அந்த உத்தமி ஏற்கெனவே என்னால நிறைய துக்கத்தை அனுபவிச்சிருக்கா. நீயும் அதையே அவளுக்குக் குடுத்துடாதப்பா. இதைச் சொல்ல தான் வந்தேன். இனி வந்து உன்னை நான் தொந்தரவு செய்ய மாட்டேன்ப்பாசொல்லச் சொல்ல அவர் உடைந்து போய் பேரழுகை அழுதபடி கைகூப்பி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

 

சுரேஷ் தந்தையை திகைப்புடன் பார்த்தான். அவர் சொன்னதையும் அம்மாவையும், நினைக்கையில் அவனையறியாமல் போதைப் பொட்டலத்தை அவன் கை தூர எறிந்தது. அந்தக் காட்சியை தூர இருந்து பார்த்து விட்டு ஆகாயத்தை நோக்கி கைகூப்பி விட்டு, மகாதேவன் வேகமாக நடக்க ஆரம்பித்தார். இனி மகன் கண்ணில் பட அவர் விரும்பவில்லை. வாழ்வில் ஒரு முறையாவது ஒரு நல்ல தகப்பனாகவும், நல்ல கணவனாகவும் இருக்க முடிந்த நிறைவு அவருக்கிருந்தது.

 

சில நிமிடங்கள் சிலை போல அமர்ந்திருந்த சுரேஷ் பின் சுயநினைவுக்கு வந்து, எழுந்து ஓடிச் சென்று தந்தை எங்கேயாவது தென்படுகிறாரா என்று அங்குமிங்கும் பார்த்தான். எத்தனை தேடியும் அவனால் அவரைப் பார்க்க முடியவில்லை. இனி எப்போதும் அவரைப் பார்க்க முடியாது என்று அவன் உள்ளுணர்வு சொன்னது. அவன் கண்கள் லேசாகக் கலங்கின.  

 

 

-    என்.கணேசன்