என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Wednesday, December 25, 2019

முந்தைய சிந்தனைகள் 53

என் நூல்களில் இருந்து சில சிந்தனை அட்டைகள் -












என்.கணேசன்

Monday, December 23, 2019

சத்ரபதி 104


ஷாஹாஜியின் மறைவுச் செய்தி சிவாஜியைத் துக்கத்தில் ஆழ்த்தியது. என்றைக்குமே தொலைவிலேயே இருந்த அவன் தந்தை தொலைவிலேயே இறந்தும் போனது, அவருடைய கடைசி தருணங்களில் அவருடன் இருக்க முடியவில்லையே என்ற வருத்தத்தை அவன் மனதில் ஏற்படுத்தியது. கடைசி தருணத்தில் அவர் அருகில் இல்லாமல் போனது அவன் மட்டுமல்ல, வெங்கோஜியும் தான் என்றாலும் அந்தச் சமயத்தில் தஞ்சாவூரில் இருந்த வெங்கோஜி தகவல் கிடைத்ததும் விரைந்து சென்று அவருக்கு ஈமக்கிரியை செய்து அவர் இறந்த இடத்திலேயே அவரைப் புதைத்து அவருக்கு ஈமக்கிரியைகள் செய்து விட்டுப் போயிருந்தான். சிவாஜிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஷாஹாஜியின் மரணச்செய்தி சிவாஜியைப் பாதித்ததை விட ஜீஜாபாயை இருமடங்கு பாதித்தது. அவருடன் அவள் மகிழ்ச்சியாக வாழ்ந்த காலம் மிகவும் குறைவு தான் என்றாலும் அந்தக் குறைவான காலத்தை மனதில் ஒரு மூலையில் பொக்கிஷமாக வைத்திருந்து திரும்பத் திரும்ப வாழ்ந்தவள் அவள். எங்கோ ஒரு தொலைவிடத்தில் தான் அவர் என்றும் இருந்தவர் என்றாலும் எங்கோ இருக்கிறார் என்ற ஆசுவாசத்தில் இருந்தவள் அவள். இப்போது அந்த ஆசுவாசமும் பறி போய் வெறுமையை அவள் உணர்ந்தாள்.

அவருடனான கடைசி சந்திப்பு இப்போதும் அவள் மனதில் பசுமையாக நினைவு இருக்கிறது. கடைசியாக சாம்பாஜியைப் பற்றி அவளிடம் பேசினார். அவள் கையைக் கண்கலங்கப் பிடித்துக் கொண்டார். ”நான் கிளம்புகிறேன் ஜீஜா…” என்றார், அது உலகத்திலிருந்து கிளம்புவதற்குமான கடைசி விடைபெறல் ஆகி விட்டதே என்று ஜீஜாபாய் மௌனமாக அழுதாள்.

சிவாஜி சிங்கக்கோட்டையில் தந்தைக்கு ஈமக்கிரியைகள் செய்து முடித்த பின் தந்தையின் சமாதியைக் கண்டு வணங்கி விட்டு வருவதற்காகச் சென்றான். ஷாஹாஜியின் மறைவு பீஜாப்பூர் சுல்தானை எதிர்த்து கிளர்ச்சி செய்தவர்களுக்குச் சொந்தமான பகுதியில் நிகழ்ந்திருந்தது. அங்கேயே வெங்கோஜி அவரைப் புதைத்து விட்டுச் சென்றிருந்தான்.

அங்கே சென்ற சிவாஜிக்கு, தந்தை அவனுடைய இடத்திலும் இல்லாமல் அவருடைய இடத்திலும் இல்லாமல் ஏதோ ஒரு அன்னிய பூமியில் இறந்து, வெங்கோஜி அங்கேயே அவரைப் புதைத்து, அவருடைய சமாதி மதிப்பு மரியாதை அற்றுக் கவனிப்பாரும் இல்லாமல் அமைந்திருப்பது மிகுந்த மனவருத்தம் தந்தது. ஆன்மாவுக்கு அழிவில்லை, அழியும் உடலில் அதிக அக்கறை காட்டுவது உசிதமும் அல்ல என்று தத்துவம் அறிந்திருந்த போதும் அது அவன் மனவருத்தத்தைத் தணித்து விடவில்லை. அவர் சமாதி அருகே நிறைய நேரம் அமர்ந்திருந்தான்.

சிவாஜி வந்திருக்கும் செய்தி அறிந்து அப்பகுதியில் இருப்பவர்களும், அருகில் இருப்பவர்களும், அந்தப் பகுதிக்கு உரிமையாளரான பிரபுவும் அங்கு வந்து சேர்ந்தார்கள். சிவாஜி அவர்களிடம் தன் தந்தையின் மரணம் பற்றி விவரமாகக் கேட்டறிந்தான். வாழ்ந்த நாளெல்லாம் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகியிருந்த அவர் வாழ்வின் கடைசித் தருணத்தில் புன்னகையுடன் இந்த உலகில் இருந்து விடைபெற்றது மட்டும் நெகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் இருந்தது.

தந்தையின் நினைவாக அப்பகுதியில் இருந்த ஏழைகளுக்கு சிவாஜி நிறைய தானங்கள் செய்தான். பின் அப்பகுதியின் உரிமையாளரான பிரபுவிடமிருந்து அந்த நிலத்தைப் பெற்று அங்கே ஒரு சமாதிக்கட்டிடம் எழுப்பி தினமும் இரவும் பகலும் அங்கு விளக்கு எரியும்படி ஏற்பாடு செய்து விட்டு சிவாஜி தன் இருப்பிடம் திரும்பினான்.


ரங்கசீபுக்கு சிவாஜியின் செயல்பாடுகள் குறித்துக் கிடைத்துக் கொண்டிருந்த தகவல்கள் எல்லாம் உருவாகிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய அபாயத்தையே அடையாளம் காட்டின. அவனுடைய மகன் முவாசிம் மீதும் ராஜா ஜஸ்வந்சிங் மீதும் கடுமையான அதிருப்தி அவன் மனதில் ஏற்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் சிங்கக் கோட்டையில் சிவாஜியை எதிர்த்துப் போராடித் தோற்றதற்கு அவர்கள் சகாயாத்ரி மலையில் அவனுக்கு இருந்து வரும் சாதக அம்சங்களைக் காரணமாகச் சொன்னார்கள். ஆனால் அதற்குப் பின் சிவாஜியைப் பிடிக்க அவர்கள் எந்தப் பெரிய முயற்சியும் எடுக்கவில்லை. அது ஏன் என்பது அவர்களும் அல்லாவுமே அறிந்த ரகசியமாக இருந்தது.

சிங்கக் கோட்டையிலிருந்து சூரத் வரை உள்ள தொலைவு குறைவானதல்ல. முகலாயர்கள் பகுதிகளின் எல்லைப் புறங்களிலேயே சிவாஜி பயணித்துச் சென்றிருக்கிறான். அவனை அந்தச் சமயத்தில் பிடிக்க முறையாக முயன்றிருந்தால் முகலாயப்படை கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும். ஏனென்றால் அவனுக்குப் பாதுகாப்பான சகாயாத்ரி மலையிலிருந்து விலகி அவன் வந்திருக்கிறான். அப்படி இருந்தும் அவனைப் பிடிப்பதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அதற்கான காரணங்கள் கேட்ட போது குழப்பங்கள் நிறைந்த பதில்களே கிடைத்தன.

சிவாஜி அவர்கள் பகுதிகளைத் தாக்கவில்லை, அவன் யாத்திரை தான் போனான், அப்படி அவனைத் தாக்கினாலும் அவன் தப்பித்து விடுவான், அவன் சாமர்த்தியம் அப்படி, சூரத் போவான் என்று எதிர்பார்க்கவில்லை என்று எல்லாம் பல பூச்சு வார்த்தைகளில் கூறினார்கள். அந்த வார்த்தைகளுக்குப் பின்னணியில் அவர்களுக்கு அவன் மீது ஏற்பட்டிருந்த பயம் தான் ஔரங்கசீப்புக்குத் தெளிவாகத் தெரிந்தது.

அவன் மாயாவி, மறைமுகத் தாக்குதல்களில் வல்லவன், அவனை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்பது போன்ற நம்பிக்கைகள் அவர்களிடம் வேரூன்றி இருந்தன. அதை நிரூபிப்பது போலவே சூரத்தில் உள்ளே நுழைந்து எல்லாவற்றையும் சிவாஜி கொள்ளையடித்துச் சென்றான். அங்கே கவர்னர் என்ற பெயரில் இருந்த அறிவும், தைரியமும் அற்ற ஜந்து படையனுப்பத் தகவல் அனுப்பி விட்டு, படை வரும் வரை சிவாஜியிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டோ, குறைந்தபட்சத் தொகை கொடுத்தோ காலம் தாழ்த்தாமல், கோட்டைக்குள் ஒளிந்து தன் உயிரைப் பத்திரப்படுத்திக் கொண்டிருக்கிறான். இத்தனை கேவலமாக நடந்து கொண்ட அந்த ஜந்து நகர மக்கள் தன் மேல் சாணியைக் கரைத்து ஊற்றியதாகப் புகாரையும் அனுப்பியதை ஔரங்கசீப்பால் தாங்க முடியவில்லை. நியாயமாக அந்த நகர மக்கள் இனயதுல்லா கான் மீது வெடிகுண்டு வீசியிருக்க வேண்டும் என்று ஔரங்கசீப்புக்கே ஆத்திரம் வந்தது.  எப்படிப்பட்டவர்களை எல்லாம் வைத்துக் கொண்டு ஆட்சி புரிய வேண்டியிருக்கிறது என்று அவன் விதியையே நொந்து கொண்டான்.

தக்காணக் கவர்னராக இருந்த அவன் மகன் முவாசிம் அந்தப் பதவிக்குச் சிறிதும் பொருத்தமில்லை என்பது நிரூபணமான பின் அவனை அந்தப் பதவியில் வைத்திருப்பது முட்டாள்தனம் என்பது புரிந்த பின்னும் ஔரங்கசீப் மகனை அந்தப் பதவியிலிருந்து விலக்குவதற்கு யோசித்தான்.  அவனுக்கு அவன் மகன்கள் தலைநகரில் இருப்பது வேறு விதமான ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடும் என்ற பயம் இருந்தது. பழைய சரித்திரம் அவன் காலத்திலும் அரங்கேறுவதை அவன் விரும்பவில்லை. ஆனால் சிவாஜி போன்ற ஒரு பேராபத்தை தக்காணத்தில் வைத்துக் கொண்டு முவாசிம்மைப் போன்ற செயலற்றவனையும் அங்கே வைத்திருப்பது மாபெரும் தவறாக இருக்கும் என்று அவனது அறிவு எச்சரித்தது.

இந்த நிலைமையில் இந்தச் சிந்தனைகளில் ஔரங்கசீப் ஆழ்ந்திருந்த போது தான் ஒரு ஒற்றன் அடுத்த இரண்டு தகவல்களைக் கொண்டு வந்தான். முதலாவது சிவாஜி தன் பெயரில் தங்க செப்பு நாணயங்களை அச்சடித்து வெளியிட்டிருந்தான். சிவாஜியே அரசனாக இருந்த போதிலும் தந்தை உயிரோடு இருந்த வரை அவன் தன் பெயரில் நாணயங்களை அச்சடித்ததில்லை. இப்போது அதையும் செய்து தன் சுயராஜ்ஜியத்தை அவன் பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

இன்னொரு தகவல் சிவாஜி கப்பற்படையையும் பலப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்பதாக இருந்தது. ஏற்கெனவே மலைப்பகுதியில் அவன் வீழ்த்தப்பட முடியாதவன் என்ற நிலையை உருவாக்கி விட்டான். சமவெளிகளிலும் அவ்வப்போது அவன் சாகசம் புரிந்து வருகிறான். இப்போது நீர்ப்பரப்பிலும் அவன் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது என்ற தகவல், விஸ்வரூபம் எடுத்து வரும் அபாயத்தை அவனுக்கு எச்சரித்தது.

முத்தாய்ப்பாய் தூதன் சொன்னான். “ஹஜ் யாத்திரை செல்லும் செல்வந்தர்களின் படகுகளையும், கப்பல்களையும் நீர்ப்பரப்பில் இடைமறித்துத் தாக்கி பணயத்தொகை கொடுத்த பிறகே நேதாஜி பால்கர் தலைமையிலிருக்கும் சிவாஜியின் கப்பற்படை விடுவிக்கிறது சக்கரவர்த்தி. இந்த வழிப்பறிக் கொள்ளையில் நம் பிரஜைகள் மட்டுமல்ல, பீஜாப்பூரின் பிரஜைகளும் சிக்கிப் பெரும் செல்வத்தை இழந்திருக்கிறார்கள்”

அத்தகவலும் கிடைத்த பின் உடனடியாக எதையாவது செய்தேயாக வேண்டும் என்று ஔரங்கசீப் முடிவெடுத்தான். சிவாஜியைச் சமாளித்து வெல்ல சாதாரணத் திறமையும் வலிமையும் போதாது என்பதைப் புரிந்து கொண்டிருந்த அவன் முவாசிம்மை திரும்ப வரவழைத்து, சிவாஜியை வீழ்த்த முடிந்த அசாதாரணத் திறமையும், மன உறுதியும், வீரமும் கொண்ட செயல்வீரன் யாரையாவது அங்கு அனுப்ப முடியுமா என்று யோசித்தான்.


அவனுடைய அதிர்ஷ்டமாகவும், சிவாஜியின் துரதிர்ஷ்டமாகவும் அப்படிப்பட்ட மாவீரன் ஒருவனல்ல இருவர் ஔரங்கசீப்பின் கவனத்தில் வந்தார்கள்.

(தொடரும்)
என்.கணேசன்


Thursday, December 19, 2019

இல்லுமினாட்டி 28

ந்த தடிமனான ஃபைலை அவருடைய மேஜையில் வைத்து விட்டு இம்மானுவல் சொன்னான். ”இதில் விஸ்வம் இந்தியாவில் ஹரித்வாரில் தங்கி இருந்த வீட்டில் அவனைச் சந்தித்த மனிதர்கள் முதற்கொண்டு எல்லாத் தகவல்களும் இருக்கின்றன தலைவரே. அங்கே மாஸ்டரைத் தவிர அவனை அதிகம் சந்தித்த மனிதர்கள் யாருமில்லை. அவனாகச் சென்று சந்தித்த மனிதர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு குறைந்த மனிதர்களே. அவர்களுடனும் அவன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவில்லை. ஏதாவது ஒரு வேலையாக வேண்டிச் சந்தித்து, வேலை முடிந்த பின் அவர்களிடமிருந்தும் தூரமாகவே இருந்திருக்கிறான். மாஸ்டரின் ரகசிய ஆன்மீக இயக்கத்தில் சேர்வதற்கு முன் அவன் தொடர்பு வைத்திருந்தது சில அபூர்வ சக்திகள் இருந்த குருமார்களிடம் மட்டுமே. அந்தத் தொடர்பும் அவன் கற்று முடிந்த பின் இருக்கவில்லை. அவன் புனேயில் நம் இல்லுமினாட்டியின் நவீன்சந்திர ஷாவைச் சந்தித்த பிறகு அவனை மிக உன்னிப்பாக எங்கள் பார்வையிலேயே வைத்திருந்தோம். அவன் பின்னால் எப்போதுமே நம் ஆள் ஒருவன் இருந்திருக்கிறான். அப்படிக் கண்காணித்த போது கூட அவன் வேறு எந்த ஒரு ஆளுடனாவது நெருங்கிய தொடர்பில் இருந்த தடயம் நமக்குக் கிடைக்கவில்லை. அவன் லண்டனுக்குப் போய் நம் இல்லுமினாட்டியின் உறுப்பினர்களைப் பார்த்த போதும் சரி, பிறகு ம்யூனிக் நகரத்திற்கு வந்து நம் செயற்குழு உறுப்பினர்களைப் பார்த்த போதும் சரி அவனை யாரும் பின் தொடர்ந்து வரவில்லை என்பது உறுதி. ம்யூனிக் நகரத்திற்கு அவன் ஆரம்பத்தில் வந்த அந்த நாளுக்கு முன்னேயே யாராவது வந்து இங்கே அவனுக்காகக் காத்திருக்கும் வாய்ப்பு இருக்கிறதா என்பதையும் கூட எல்லாக் கோணங்களிலும் சோதித்துப் பார்த்து விட்டோம். அவனை யாரும் பின் தொடரவோ, கண்காணிக்கவோ இல்லை... ம்யூனிக்கில் இரண்டாவதும், கடைசியுமான கூட்டத்தில் பேச அவன் திரும்ப வந்த போதும் அவனைத் தொடர்ந்து யாரும் வரவில்லை. முன்பே வந்திருந்து அவனைப் பின் தொடரவும் இல்லை..”

இம்மானுவல் சொன்னதை எல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த எர்னென்ஸ்டோ அவன் மேஜையில் வைத்த ஃபைலை எடுத்துப் பிரித்துப் பார்த்தார். விஸ்வம் இந்தியாவில் தொடர்பில் இருந்தவர்கள், அவர்கள் பற்றிய விவரங்கள், அவர்களை அவன் எத்தனை முறை சந்தித்திருக்கிறான் என்பதிலிருந்து ஏராளமான தகவல்கள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. இல்லுமினாட்டியின் கவனத்திற்கு விஸ்வம் வந்த பிறகோ சிறிய தகவல்கள் கூட விடுபட்டிருக்கவில்லை. அவன் இரண்டு முறை ம்யூனிக் வந்த போதும் விமானத்தில் அவனுடன் பயணித்த பயணிகளில் எத்தனை பேர் அவன் தங்கிய ஓட்டலிலேயே தங்கினார்கள், எத்தனை பேர் அருகிலிருந்த ஓட்டல்களில் தங்கினார்கள், அவர்களில் யாரிடமெல்லாம் விஸ்வம் ஒரு வார்த்தையாவது பேசினான் என்பது முதற்கொண்டு எல்லாத் தகவல்களும் பல புகைப்படங்களோடு இருந்தன. ம்யூனிக் நகரத்திற்குப் பயணத்திற்கான இரண்டு முறைப் பயணத்திலும் பயணம் செய்திருந்த ஒரு பயணியின் வாழ்க்கை வரலாறே அந்த ஃபைலில் இருந்தது. அதே போல் இரண்டு முறையும் அவன் தங்கியிருந்த ஓட்டலில் அதே நாட்களில் தங்கியிருந்த இரண்டு நபர்களின் வாழ்க்கை வரலாறுகளும் இருந்தன. இந்த மனிதர்கள் எல்லோருமே வெவ்வேறு சமயங்களில் அந்த இடத்தை விட்டுப் போயிருக்கிறார்கள். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல்கள் கூட அந்த ஃபைலில் இருந்தன.

அந்த ஃபைலின் பக்கங்களை மேலோட்டமாகப் புரட்டிக் கொண்டே வந்து அவ்வப்போது ஒரு சில விவரங்களைக் கூடுதல் கவனத்துடன் படித்து விட்டு ஃபைலை மூடிய எர்னெஸ்டோ இதற்கு மேல் கண்காணிக்க எதுவுமில்லை என்று நினைத்தபடி இம்மானுவலிடம் அமைதியாகக் கேட்டார். “இத்தனை தகவல்களுக்குப் பின்னும் அவன் கூட்டாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதைத் தவிர வேறு எந்த முடிவை நீ எட்டி இருக்கிறாய் இம்மானுவல்?”

அந்த ஆள் விஸ்வத்தை விட அதிகமான சக்திகள் படைத்த ஆள் என்பதில் சந்தேகமில்லை. அந்த அதீத சக்திகள் மூலமாகவே விஸ்வத்துக்குத் தெரியாமலேயே அந்த ஆள் அவனைக் கண்காணித்திருக்க வேண்டும். ஏனென்றால் விஸ்வத்தின் குணாதிசயங்களை அலசியதில் அவன் இன்னொருவர் கண்காணிப்பில் இருப்பதை ரசிப்பான் என்று தோன்றவில்லை. அதனால் அப்படி அதிகமான சக்திகள் படைத்த அந்த ஆளை விஸ்வத்திற்குத் தெரிந்திருக்க வழியில்லை. அப்படித் தெரிந்திருந்தால் அந்த ஆளிடம் தானும் கற்று அந்த ஆளை மிஞ்சியிருக்காமல் விஸ்வம் இருந்திருக்க மாட்டான்... ”

இம்மானுவல் சொன்னதை ஒரு நிமிடம் யோசித்து விட்டு எர்னெஸ்டோ சொன்னார். ”முன்பின் தெரியாத ஆள் விஸ்வத்தின் நடவடிக்கைகளை ஏன் கவனித்து வந்திருக்க வேண்டும்? அவன் ஏன், எந்த வகையில் விஸ்வத்தைத் தொடர்பு கொண்டான்? அப்படித் தெரியாதவன் ஒருவனை நம்பி விஸ்வம் அவனுடன் காரில் போயிருப்பானா?”
                                          
இம்மானுவல் சொன்னான். “அதையும் நாங்கள் சிந்திக்காமல் இல்லை. ஒருவேளை அந்த அதிசக்தி மனிதன் விஸ்வத்திற்குப் பரிச்சயமான, ஆனால் அதிகம் தொடர்பில் இல்லாத ஆளாய் இருக்கலாம். அந்த ஆள் தன் சக்தி மூலமாகவே விஸ்வத்துக்கே தெரியாமல் அவனைக் கண்காணித்துக் கொண்டும் இருந்திருக்கலாம். இன்னொரு யூகமும் இருக்கிறது...”

சொல்லி விட்டு அவரை இம்மானுவல் தயக்கத்துடன் பார்த்தான். எர்னெஸ்டோ சொன்னார். “எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்

இம்மானுவல் சொன்னான். “க்ரிஷை ஒரு ஏலியன் தொடர்பு கொண்டது போல் விஸ்வத்தைத் தொடர்பு கொண்டதும் ஒரு ஏலியனாகவோ, அல்லது அதற்கு இணையான அமானுஷ்ய சக்தியாக இருக்கலாம்ஏனென்றால் விஸ்வத்தின் மரணத்தைப் பற்றித் தெரிந்து கொண்டதிலிருந்து அவனை இன்னொரு உடம்பில் புகுந்து கொள்ள வைத்து ரகசியமாய் அழைத்துக் கொண்டு போயிருக்கும் விதத்தையும் பார்த்தால் அமானுஷ்ய முத்திரை தான் தெரிகிறது. ஆழமாக யோசித்துப் பார்த்தால் க்ரிஷ் விஷயத்தில் நடந்தது தான் விஸ்வத்தின் விஷயத்திலும் நடந்திருக்கிறது...

”எதைச் சொல்கிறாய்?”

“க்ரிஷைக் கடுமையான விஷப்பாம்பு கடித்து இறக்க இருந்த சமயத்தில் ஏலியன் தான் அவனைக் காப்பாற்றியிருக்கிறது.  இரண்டு நிமிடங்களில் கிட்டத்தட்ட 16000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிற அமேசான் காடுகளுக்கு அவனைத் தூக்கிக் கொண்டு போய் விஷமுறிவு மருந்து தந்து காப்பாற்றி இருக்கிறது. அது மனிதர்களால் முடிந்த காரியம் அல்ல. சில வினாடிகளுக்குப் பின் சாட்டிலைட் காமிராவுக்குக் கூட சம்பந்தப்பட்ட காட்சிகள் அகப்படவில்லை. விஸ்வமும் இறந்து போய்க் கிட்டத்தட்ட இதே போல் அமானுஷ்ய முறையில் தான் காப்பாற்றப்பட்டு இருக்கிறான். அவனுடைய கூட்டாளி நம்முடைய இத்தனை துல்லியமான கண்காணிப்பில் கூட எந்த விதத்திலும் நமக்கு அகப்படாமல் இருப்பதற்கு அதே காரணமாக ஏன் இருக்கக்கூடாது?....”

எர்னென்ஸ்டோ அவனைத் திகைப்புடன் பார்த்தபடி சொன்னார். “எனக்குத் தலை சுற்றுகிறது. இன்னொரு ஏலியனா?”

இம்மானுவல் சொன்னான். “யூகம் தான். ஏலியனாக இல்லாவிட்டால் வேறெதோ அமானுஷ்ய சக்தியாக இருந்திருக்கலாம். விஸ்வத்தின் கூட்டாளி ஒரு மனிதனாக இருந்திருந்தால் நாங்கள் கண்டிப்பாகக் கண்டுபிடித்திருப்போம்...”

எர்னெஸ்டோ சிறிது யோசித்து விட்டுச் சொன்னார். ”க்ரிஷை அந்த ஏலியன் தொடர்பு கொண்ட சமயம் அந்த இடங்களில் எத்தனையோ வித்தியாசமான அலைவரிசைகளை நாசாவும், இஸ்ரோவும் கண்டுபிடித்தன....”  

இம்மானுவல் சொன்னான். “அதே போல் இப்போது இங்கேயும் அந்த அலைவரிசைகளில் ஏதாவது வித்தியாசத்தை நாசாவும் இஸ்ரோவும் கண்டுபிடித்திருக்கலாம். அதைப் பார்த்து விட்டுச் சொல்லும்படி நாசா, இஸ்ரோ இரண்டிலுமே ஆட்களை ஏற்பாடு செய்திருக்கிறேன். நம் உறுப்பினர் விஸ்வேஸ்வரய்யாவிடம் நீங்களும் பேசுவது நல்லது...”

அவன் தீவிரமாகவே தன் யூகத்தை நம்ப ஆரம்பித்திருக்கிறான் என்பது எர்னெஸ்டோவுக்கு இன்னும் ஆச்சரியமாகத் தான் இருந்தது. அவர் சொன்னார். “அந்தக் கூட்டாளி ஏலியனாக இருந்திருந்தால் க்ரிஷைத் தூக்கிக் கொண்டு போனது போல தூக்கிக் கொண்டு போயிருக்கலாம். அல்லது நீ சொன்னது போல் அமானுஷ்ய சக்தியாக இருந்திருந்தாலும் இப்படிக் காரில் வந்து கூட்டிக் கொண்டு போயிருக்கும் என்று தோன்றவில்லை...”

இம்மானுவலுக்கு அவருடைய அந்த வாதத்தை மறுக்க முடியவில்லை. காரில் அழைத்துப் போவது ஏலியன் அல்லது அமானுஷ்ய சக்தியின் வேலையாக இருக்கும் என்று நினைப்பதே அவனுக்கும் அபத்தமாகப் பட்டது. ஆனால் விஸ்வத்தின் மரணத்தை அது நிகழும் போதே உணர முடிந்தது சாதாரண மனித சக்தியாகவும் தோன்றவில்லை.

அவன் மெல்லச் சொன்னான். “அப்படியானால் நான் முன்பே சொன்னது போல விஸ்வத்தைக் காட்டிலும் கூடுதல் சக்திகள் கொண்ட ஏதோ ஒரு மனிதன் தன் சக்திகள் மூலமாக ஏதோ ஒரு காரணத்துடன் அவனைக் கண்காணித்துக் கொண்டே இருந்திருக்கலாம். தன் அமானுஷ்ய சக்தி மூலம் அவனைக் காப்பாற்றி அழைத்துக் கொண்டு போயிருக்கலாம்....”

கடைசியில் இந்த யூகத்தில் இருவரும் உடன்பட்டாலும் அந்த ஏதோவொரு காரணம் என்னவாக இருக்கும் என்பதை இருவராலும் கணிக்க முடியவில்லை.

(தொடரும்)
என்.கணேசன்

ஜனவரியில் நாவல் வெளிவரவுள்ளது