என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, July 11, 2022

யாரோ ஒருவன் 93

 

ஜீம் அகமது தன் வாழ்க்கையில் பல ரக மனிதர்களைப் பார்த்திருக்கிறான். மிக நல்ல மனிதர்களிலிருந்து மிக மட்டமான மனிதர்கள் வரை, பேரறிவு படைத்த மனிதர்களிலிருந்து அடிமுட்டாள் மனிதர்கள் வரை, எதற்கும் கலங்காத, தைரியமான இரும்புமன மனிதர்களிலிருந்து கோழைத்தனத்தின் உச்ச மனிதர்கள் வரை  கவனித்திருக்கும் அனுபவம் இருக்கிறது. ஆனால் எல்லாருமே சில சின்னஞ்சிறு வித்தியாசங்களுடனாவது ஒரு ரகத்தில் அடக்கி விடமுடிந்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் செய்கைகளுக்குப் பின்னால் சில காரணங்களைக் கண்டுபிடித்துவிட முடியும். அதே போல் இதைச் செய்தவர்கள் இனி என்னவெல்லாம் செய்யக்கூடும் என்பதையும் அவனால் யூகிக்க முடிந்தவர்களாக இருந்தார்கள். ஆனால் மகேந்திரன் மகன் அவனைச் சிறிது குழப்பினான்.

 

சஞ்சய் ஷர்மா காணாமல் போன பின் அவனைக் கடத்தியது அவர்களோ, அவர்களுக்குத் தெரிந்த ஆட்களோ இல்லை என்றான பிறகு அவனுக்கு மகேந்திரன் மகன் மீது சந்தேகம் வந்தது. மதன்லாலும் காணாமல் போன பிறகு கடத்தியது மகேந்திரன் மகனே என்பது அவனுக்கு உறுதியாகியது. அவனுடைய பழைய வரலாறு அறிந்திருந்ததால் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்ளத் தயக்கமில்லாத அவன் தான் அந்தக் காரியத்தைச் செய்திருப்பான் என்று புரிந்தது. கடத்தியவனுக்குப் பணம் தான் முக்கியம் என்றால் மதன்லாலை விடப் பணக்காரர்களைக் குறி வைத்திருப்பான். போலீஸ் அதிகாரியையே கடத்தும் மனோதைரியமும், அவசியமும் மகேந்திரன் மகனுக்குத் தான் பொருந்துகிறது என்று கணித்தான். ஐம்பது லட்சம் கேட்டுப் போன் செய்ததை எல்லாம் அஜீம் அகமது உண்மை என்று நம்பவில்லை.

 

அந்தப் பூட்டிய ஃபேக்டரியில் மதன்லாலையும், சஞ்சய் ஷர்மாவையும் கண்டுபிடித்து அவன் ஆட்கள் போன் செய்த போது அங்கு மகேந்திரன் மகன் தான் அவர்களை அடைத்து வைத்திருக்க வேண்டும் என்று உடனே அஜீம் அகமது யூகித்தான். அந்த ரோந்து போலீஸ் அவன் ஆட்களை அழைத்துக் கொண்டு போனதற்கும் கூடப் பின்னணியில் மகேந்திரன் மகன் இருக்கக்கூடும். குறுகிய காலத்தில் அவர்களை அவனால் அப்புறப்படுத்த முடியாமல் போயிருக்கலாம். அதனால் அப்படியே விட்டுப் போயிருக்கலாம். அவன் இடத்தில் அஜீம் அகமது இருந்தால், அவர்களிடம் கறக்க வேண்டிய விஷயங்களைக் கறந்து முடித்திருந்தால், அவன்  அவர்களைக் கொன்று எங்காவது புதைத்திருப்பான். அதை மகேந்திரன் மகனுக்குச் செய்ய முடியாமல் மனசாட்சி தடுத்திருக்கலாம். ஆனால் அவர்களை அப்படியே விட்டு வந்திருந்தால் அவன் அவர்களைக் கடத்தியதை அவர்கள் தெரிவித்திருப்பார்கள். இந்தச் சிக்கல் மகேந்திரன் மகனுக்கு இருந்திருக்கும். இது வரை நூல் பிடித்தது போல் அனுமானிக்க முடிந்த அஜீம் அகமதுக்கு இதன் பின் நடந்தவை எதுவுமே பிடிபடவில்லை.

 

சங்கிலியால் கட்டப்பட்டிருந்த வடுக்கள் இருவர் கை கால்களிலும் தெரிகின்றது. அப்படியானால் சங்கிலிகளைக் கழற்றுவதற்கு முன்னால் பாம்புகளைக் கடிக்க வைத்திருக்கலாம் என்றாலும் ஏன் இப்படி அரைகுறை விஷமுள்ள பாம்புகளால் கடிக்க வைத்திருக்கிறான்? இல்லை விஷமுள்ள பாம்புகளாக நினைத்து அந்தப் பாம்புகளைக் கடிக்க வைத்துப் போய் விட்டானா? அவற்றின் விஷம் போதவில்லையோ? இன்னும் மதன்லாலும், சஞ்சய் ஷர்மாவும் ஐசியூவில் தான் இருக்கிறார்கள். இன்னும் அவர்கள் உடல்நிலையைத் தீர்மானமாக டாக்டர்கள் சொல்லவில்லை. பாம்பு சமாச்சாரம் அவனை நிறையவே குழப்பியது. இது மகேந்திரனின் மகன் முத்திரையாக இல்லை!

 

எதற்கும் டெல்லியின் சுற்றுவட்டாரங்களில் இது போன்ற விஷயங்களுக்கு விஷப்பாம்புகள் கிடைக்குமிடங்களை அஜீம் அகமது விசாரிக்கச் சொன்னான். விசாரித்ததில் ஆக்ராவின் அருகில் ஒரு ஆள் அப்படித் தருவதுண்டு என்ற தகவல் கிடைத்தது. ஒருவேளை அவன் மகேந்திரன் மகனுக்குத் தந்திருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் வந்தது. ஆனால் அந்த ஆள் கடந்த மாதம் தான் அது போல் ஒருவருக்கு வாடகைக்குப் பாம்புகள் தந்ததாகவும் அதன்பின் யாருக்கும் அப்படித் தரவில்லை என்றும் சொன்னான். 

 

இன்னொரு விஷயம் அவனுக்கு நெருடலாக இருந்தது. மகேந்திரன் மகன் இப்போது கோயமுத்தூரில் இருக்கிறான். அவன் இங்கே நேரடியாக எதையும் செய்திருக்க வழியில்லை. அவனுக்கு யாரோ இங்கிருந்து கொண்டே உதவுகிறார்கள். யாரது? ’ராவிலிருந்து யாராவது உதவ வாய்ப்பிருக்கிறது என்று எடுத்துக் கொண்டாலும் பாம்புகளைப் பயன்படுத்தக்குடிய ரா அதிகாரிகள் யாரையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

அவன் சிந்தனைகளை செல்போன் இசைத்துக் குறுக்கிட்டது. “ஹலோ

 

ஆஸ்பத்திரியில் அவங்க ரெண்டு பேரும் இன்னும் மயக்க நிலையிலேயே இருக்காங்க. ரெண்டு பேரோட லேப் ரிப்போர்ட்ஸும் வந்துடுச்சுன்னும் அவங்க உயிருக்கு ஆபத்து இல்லைன்னாலும் என்ன ஆகும்கிறதுல டாக்டர்களே ரொம்ப குழப்பத்துல இருக்காங்கன்னும் தகவல் வந்திருக்கு பாஸ்……”

 

அஜீம் அகமது யோசித்தான். அவன் இந்தியா வந்திருப்பதையோ, மதன்லாலும், சஞ்சய் ஷர்மாவும் கிடைத்திருப்பதையோ அவன் இன்னமும் ஜனார்தன் த்ரிவேதியிடம் தெரிவித்திருக்கவில்லை. அவன் இந்தியா வந்திருப்பதை மிக அவசியம் என்ற நிலை வந்தால் ஒழிய அவரிடம் தெரிவிக்கும் உத்தேசம் இல்லை. விரலால் எண்ண முடிந்த எண்ணிக்கையைத் தாண்டி அதிகம் பேர் அறிந்தால் தேவையில்லாத ஆபத்து என்று அவன் உறுதியாக நினைத்தான்.  என்ன நடந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்து விட்டால் சஞ்சய் ஷர்மா கிடைத்து விட்டான் என்பதை அவரிடம் தெரிவிக்கலாம். முதலில் டாக்டர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டு என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்வது மிக முக்கியம்அஜீம் அகமது சொன்னான். “உடனடியாய் டாக்டர் கிட்ட நீ போய் பேசு…”

 

டாக்டர் அவர்களுக்கு மிகவும் வேண்டப்பட்ட ஆள். சட்ட விரோதமான செயல்களில் அவர்கள் ஆட்கள் ஈடுபட்டு காயமடையும் போது சிகிச்சைக்கு அவருடைய ஆஸ்பத்திரிக்குத் தான் அவர்கள் போவது வழக்கம்.

 

அஜீம் அகமதுக்கு போன் செய்து பேசியவன் அடுத்த அரை மணி நேரத்தில் டாக்டர் முன்னால் அமர்ந்திருந்தான். டாக்டர் அவனிடம் விளக்கினார். “சஞ்சய் ஷர்மா உடம்புல ரெண்டு கால்லயும் பாம்புகள் கடிச்சிருக்கு. வலது கால்ல மூனு இடங்கள்லயும், இடது கால்ல ஒரு இடத்துலயும் பாம்புக்கடி காயங்களைப் பார்க்க முடியுது. மதன்லால் வலது கால்ல ஒரு இடத்துலயும், இடது கைல ரெண்டு இடங்கள்லயும் பாம்பு கடிச்சிருக்கு. கடிச்சது விஷப்பாம்பு. ஆனா அது உயிரை எடுக்கறதுக்குப் பதிலா மூளை நரம்புகளையும், கைகால் நரம்புகளையும் பாதிக்கிற விஷமா இருந்திருக்கு. அதனால என்ன பாதிப்பு எவ்வளவு பாதிப்புங்கறது அவங்க முழு விழிப்புணர்வுக்கு வந்த பிறகு தான் நமக்குத் தெரியும்…”

 

அவங்க விழிப்புணர்வுக்கு இது வரை வரவேயில்லையா?”

 

அரைகுறையா வர்றாங்க…. சில நிமிஷத்துல திரும்பவும் மயக்கமடைஞ்சுடறாங்க….”

 

அப்படி அரைகுறையா நினைவுக்கு வர்றப்ப ஏதாவது சொல்றாங்களா?”

 

பாம்புங்கற வார்த்தையை தான் அதிகம் சொல்றாங்க. ரொம்பவே அது அவங்கள பயப்படுத்திடுச்சுன்னு நினைக்கிறேன்….”

 

வேற எந்த வார்த்தையும் சொல்றதில்லையா?”

 

சப்பாத்தின்னும் அப்பப்ப சொல்றாங்க….”

 

சப்பாத்தின்னா…. ரெண்டு பேருமா?”

 

ஆமாம்

 

பாம்பு என்ற வார்த்தையை அவர்கள் சொல்வதை அந்த ஆளால் புரிந்து கொள்ள முடிந்தது. பயத்தினால் சொன்னது என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இருவருமே சப்பாத்தியைச் சொல்வதற்கு என்ன காரணமிருக்கும் என்பது அவனுக்குப் புரியவில்லை. அவன் டாக்டரைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டான். “ஆள் பேர் எதாவது சொல்கிறார்களா?”

 

இல்லைஎப்பவாவது தடியன்னு சொல்றாங்க

 

அவங்க எப்ப முழு விழிப்புணர்வுக்கு வருவாங்க

நாளைக்கு முழு விழிப்புணர்வு வந்துடும்னு நினைக்கிறோம். நான் முதல்லயே சொன்ன மாதிரி அவங்களோட மூளை பாதிப்பின் விளைவுகள் என்னங்கறதை  அப்புறமா தான் நாம தெரிஞ்சுக்க முடியும்.”

 

அடுத்த ஐந்து நிமிடத்தில்  டாக்டரிடம் பேசியதன் ஒலிப்பதிவு அஜீம் அகமதை வந்து சேர்ந்தது. முழுவதுமாகக் கேட்ட அஜீம் அகமது தன் ஆளுக்குப் போன் செய்து சொன்னான். “ஜனார்தன் த்ரிவேதி கிட்ட ரெண்டு பேரும் கிடைச்சுட்ட தகவலைச் சொல். நான் இந்தியா வந்துட்டேன், இங்கே இருக்கேன்கிறது மட்டும் அந்த ஆளுக்குத் தெரிய வேண்டாம். மத்தபடி இவங்க கிடைச்சது எப்படிங்கற விவரங்களை சொல்லு. அந்த ஆள் போய் அவங்க ரெண்டு பேரையும் பார்க்கட்டும். அவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்கட்டும்.  அதுக்கப்பறம் நாம என்ன செய்யறதுன்னு முடிவு செய்வோம்…”

 

(தொடரும்)

என்.கணேசன்

 

இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

 

Thursday, July 7, 2022

சாணக்கியன் 12

காலம் வேகமாக உருண்டோடியது. சந்திரகுப்தன் தட்சசீலம் வந்து பத்து ஆண்டுகள் கழிந்து விட்டன. அவன் அழகும், வீரமும் மிகுந்த இளைஞனாகி விட்டான். தட்ச சீலத்தின் பிரசித்தி பெற்ற அந்தக் கல்விக்கூடத்தில் முன்னணி மாணவர்களில் ஒருவனாகவும் அவன் இருக்கிறான்.  அங்கும் மற்ற ஆசிரியர்களிலிருந்து ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் பல விதங்களில் மாறுபட்டிருப்பதை சந்திரகுப்தன் கவனித்தான். மற்றவர்களுக்கு அது அவர்களின் உத்தியோகமாக மட்டும் இருந்தது. மாணவர்களுக்கு கற்றுத்தரும் பணி முடிந்த பின் மீதியிருக்கும் காலம் அவர்களுக்கு ஓய்வுக்காலமாகவும், ஒருவரிடம் ஒருவர் பேசிக் கொண்டு பொழுது போக்கும் காலமாகவும் இருந்தது. சிலர் ஏடுகள், சுவடிகள் வாசிக்கும் பழக்கமும் வைத்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு மேல் அவர்கள் அதிகம் எதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை

 

ஆனால் விஷ்ணுகுப்தர் ஓய்வு எடுத்துக் கொள்ளும் காலம் மிக அபூர்வமாகவே இருந்தது. சதாசர்வகாலம் எதையாவது படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருந்தார். அல்லது கல்விக்கூடத்திற்கு வருகை தரும் வெளியாட்களிடம் விசாரித்து வெளியுலகத் தகவல்களைத் தெரிந்து கொள்வதில் ஈடுபட்டிருப்பார். உள்ளூர்வாசிகளானாலும் சரி, வெளியூர்களிலிருந்து வரும் யாத்திரீகர்களானாலும் சரி அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள அவருக்கு நிறைய விஷயங்கள் இருந்தன. அதனால் அரசர்கள், மந்திரிகள், சேனாதிபதிகள், அரசகுடும்பத்தினர் பற்றிய தகவல்கள் பற்றியும், மற்ற தேசங்களில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் பற்றியும் அவர் நிறைய அறிந்தவராக இருந்தார்.

 

சந்திரகுப்தனிடம் அவர் ஒரு முறை சொன்னார். “எந்த ஒரு தகவலையும் அறிவாளி அலட்சியப்படுத்தக் கூடாது. எது எப்போது பயன் தரும் என்று யாராலும் தீர்மானமாகச் சொல்ல முடியாது.  எங்கேயோ நடக்கிற விஷயத்தை நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கக்கூடாது. அது நாளை நாமிருக்கும் இடத்திலும் கூட நடக்கலாம். சக மனிதர்களின் அந்தரங்க விஷயங்கள் நமக்கு அனாவசியம். ஆனால் ஆள்பவர்களின் அந்தரங்க விஷயங்களும், ஆள்பவர்களுக்கு நெருக்கமானவர்களின் அந்தரங்க விஷயங்களும் அலட்சியப்படுத்தக் கூடாதவை. ஆட்சியில் நடக்கும் மாற்றங்களை அவை தீர்மானிக்க முடிந்தவைகளாக இருக்கலாம்.  சில முக்கியத் தகவல்களை முன்கூட்டியே தெரிந்து வைத்திருப்பவர்கள் அந்தத் தகவல்களால் அதிக லாபமடைபவர்களாக இருக்கிறார்கள். எனவே அரசனாக விரும்புபவன் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டவே கூடாது…”

 

அரசனாக விரும்புபவன் என்ற வார்த்தையைச் சொல்லும் போதெல்லாம் அவர் வார்த்தைகளில் அழுத்தம் இருக்கும். அதைக் கேட்கும் போதெல்லாம் சந்திரகுப்தனின் கண்களில் ஒரு ஒளி வீசும். அவர் சொன்ன எந்த விஷயத்தையும் சந்திரகுப்தன் அலட்சியப்படுத்தியதில்லை என்றாலும் அந்த வார்த்தையுடன் அவர் சொல்லும் விஷயங்களில் சிறு குறையும் காண முடியாதவனாக இருந்தான். அவர் கற்றுத் தந்த பாடங்கள் அல்லாமல் மற்ற பாடங்களிலும் பயிற்சிகளிலும் அவனுடைய ஒவ்வொரு முன்னேற்றத்தையும் அவர் கூர்ந்து கவனித்து வந்தார். அதில் உண்மையாகவே சாதனை என்று அவர் நினைத்த விஷயங்களையும், இன்னும் கவனம் தேவை, முயற்சியும் பயிற்சியும் தேவை என்று அவர் நினைத்த விஷயங்களையும் அவனிடம் அவ்வப்போது தெரிவிக்க அவர் தயங்கவில்லை. அவர் எதில் எல்லாம் முயற்சியும் பயிற்சியும் தேவை என்று சொல்கிறாரோ அதையே அவர் இன்னொரு முறை சொல்லும் சந்தர்ப்பத்தை சந்திரகுப்தன் ஏற்படுத்தித் தரவில்லை.

 

விஷ்ணுகுப்தர் எல்லா மாணவர்களிடமும் அக்கறை காட்டினார் என்றாலும், விசேஷத் திறமைகள் கொண்டவர்களிடம் கூடுதல் அக்கறையும் கவனமும் அவர் எடுத்துக் கொண்டார். அவர் அவர்களை ஒரு தனிக்கும்பலாக உருவாக்கினார். பல வேலைகளை அவர்கள் சேர்ந்து செய்யும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களுக்குள் நல்ல நட்பும் ஆரோக்கியமான போட்டியும் உருவாக வைத்தார்.  அந்த வகையிலும் சந்திரகுப்தனைச் சுற்றி ஒரு உயர்வகைக் கூட்டம் எப்போதும் இருக்கும்படியும் பார்த்துக் கொண்டார்.

 

சந்திரகுப்தன் அவர் ஆழ்ந்து உறங்கியோ, ஓய்வு எடுக்கும் வேளையிலோ பார்த்தது இந்தப் பத்து வருடங்களில் விரல் விட்டு எண்ணிய நாட்களில் மட்டுமாக இருந்தது. அந்த நாட்களும் அவர் அபூர்வமாக உடல்நலம் குன்றி இருந்த நாட்களாக இருந்தன. மற்ற நாட்களில் எல்லாம் அவன் உறங்கப் போகும் போது அவர் ஏதாவது படித்துக் கொண்டிருப்பார். அவன் விழித்தெழும் போதும் ஏதாவது படித்துக் கொண்டிருப்பார் அல்லது தியானத்தில் இருப்பார்.

 

ஒரு முறை சந்திரகுப்தன் அவரிடம் கேட்டான். “ஆச்சாரியரே நீங்கள் எப்போது தான் ஓய்வெடுத்துக் கொள்வீர்கள்?”

 

என் பாரதம் வலிமையாகவும், சுபிட்சமாகவும் ஆகும் போதுஎன்று அவர் புன்னகையுடன் சொன்னார்.   

 

பாரதம் என்ற சொல்லை அவர் போல மற்றவர்கள் அதிகம் பயன்படுத்தியதை சந்திரகுப்தன் பார்த்ததில்லை. வேதங்களிலும், புராணங்களிலும், இதிகாசங்களிலும் காணப்பட்ட அந்த சொல் நிகழ்காலத்திற்குச் சம்பந்தம் இல்லாத பழஞ்சொல்லாகவே மாறி விட்டிருந்த காலத்திலும் அவருக்கு மட்டுமே அந்தச் சொல் இன்றும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. பாரதமும், பரதக் கண்டமும் பழைய பொலிவோடு நிகழ்கால நிஜமாக வேண்டும் என்ற அவரது பேராவலை முடிந்த வரை அவர் தன் மாணவர்கள் மனதில் பதிக்க முயன்றார். அவரைப் பொருத்த வரை அந்தக் கனவு எதிர்கால நிஜமாகப் போகிற ஒன்று தான். அதில் சந்திரகுப்தன் ஒரு நாள் முடிசூடுவான்.  அவர் அதை அவனிடம் வாய் விட்டு நேர்படச் சொன்னதில்லை என்றாலும்  அவன் மனதிலும் அந்த இலக்கைக் கொழுந்துவிட்டு எரியச் செய்திருந்தார். அரசனாக வேண்டும் என்ற அவனது இயல்பான ஆசையுடன் பாரதத்தை ஒட்ட வைத்தது அவர் தான்.

 

பரந்த பாரதத்தின் சக்கரவர்த்தியாக அவன் முடிசூட வேண்டும், முழு பாரதமும் அவன் ஆட்சியில் சுபிட்சமாக விளங்க வேண்டும் என்ற அவருடைய பெருங்கனவு நிஜமாகும் அறிகுறி அவனுக்கு மங்கலாகக் கூடத் தெரியவில்லை. சந்திரகுப்தன் இயல்பாகவே அறிவுக்கூர்மை இருப்பவன். ஆச்சாரியரின் மாணவனாக அவன் ஆன பின் அந்த அறிவுக்கூர்மை பல மடங்காகி இருந்தது. தட்சசீல கல்விக்கூடத்தின் தலைசிறந்த மாணவன் என்ற நிலையை மட்டுமே அவன் எட்டியிருந்தான். அந்தத் தகுதி அவனைச்  சக்கரவர்த்தியாக்கப் போதுமானதல்ல என்பதையும், சக்கரவர்த்திகள் அப்படி உருவாக்கப்படுவதில்லை என்பதையும் அவன் அறிவான். அவன் அரச குடும்பத்தவனும் அல்ல. அப்படி இருக்கையில் அவன் ஒரு குறுநில மன்னனாக ஆவதற்குக் கூட வழியில்லை. பின் எப்படி என்கிற சந்தேகம் எழுந்து அவனிடம் அவ்வப்போது உற்சாகக்குறைவை ஏற்படுத்துவதுண்டு.

 

அவனுடைய மனதில் ஓடும் எண்ணங்களை அவன் இருப்பையும், முகத்தையும் பார்த்தே படித்து விட முடிந்த விஷ்ணுகுப்தர் அவனிடம் ஒரு நாளிரவு சொன்னார். “நீ தயார் நிலையில் இரு. வாய்ப்புகள் தானாக வரும். வாய்ப்புகள் வந்தபின் தயார்ப்படுத்திக் கொள்ள காலம் போதாது.” அவர் வார்த்தைகளில் சிறு துளியளவும் சந்தேகம் இல்லை. அவர் எப்படி அதை நிச்சயமாக நம்புகிறார் என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் அவனை விடப் பலமடங்கு அறிவும் தீர்க்கதரிசனமும் உள்ளவர். நிஜத்துக்கு ஒத்து வராத எதையும் அவரிடம் அவன் பார்த்ததுமில்லை. எனவே அந்த உற்சாகக்குறைவான காலங்களிலும் அவர் உறுதியைப் பார்த்தே அவன் உற்சாகத்தைப் பெற்றான்.

 

வில்வித்தை, மற்போர் மற்றும் போர்வீரனுக்கான பயிற்சிகள் அவனுக்கு அங்கே முறையாகக் கற்றுத்தரப்பட்டன. அவனுடன் இரண்டு சிற்றரசர்களின் மகன்களும், ஒரு சேனாதிபதியின் மகனும் கூடக் கற்றுக் கொண்டார்கள். ஆனால் அவர்களை விடப் பலமடங்கு முன்னேற்றம் சந்திரகுப்தனிடம் இருந்ததைக் கவனித்த போதெல்லாம் விஷ்ணுகுப்தர் சொந்த மகனின் முன்னேற்றத்தைப் பார்த்துப் பெருமிதம் அடையும் தந்தையின் மனநிலையில் இருப்பார்….

 

இருட்டிய பிறகும் சில சமயங்களில் அவர் தன் மாணவர்களிடம் பேசிக் கொண்டு அமர்ந்திருப்பதுண்டு. அந்தச் சமயங்களில் பேச்சு பல விஷயங்களில் நகரும். சில நாட்கள் கடுமையான விவாதங்கள் நடக்கும். இரு பிரிவுகளாக அவர்களைப் பேச வைத்துக் கேட்டு முடிவில் அவர் தன் அபிப்பிராயங்களைச் சொல்வதுண்டு. சில நாட்களில் அவர் நாட்டு நடப்பை மாணவர்களிடம் கேட்பதுண்டு. அவர் தனிப்பட்ட முறையில் பலரிடம் விசாரித்து அதைத் தெரிந்து வைத்திருந்தாலும் கூட அவருடைய மாணவர்களும் தங்கள் வழியில் முக்கியமானதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று எப்போதும் எதிர்பார்ப்பதுண்டு. அதனாலேயே சந்திரகுப்தனும் அவன் நண்பர்களும் நாட்டு நிலவரத்தை அதிகமாகவே தெரிந்து வைத்திருப்பதுண்டு.

 

ன்றைய தினம் அப்படிப்பட்ட தினமாக இருந்ததுவிஷ்ணுகுப்தர் தன் மாணவர்களிடம் சொன்னார். “நாம் வசிக்கும் காந்தார தேசம் பாரதத்தின் தலைவாசலில் இருக்கிறது. அதனால் காந்தாரம் பாரதத்தின் வரலாற்றில் மிக முக்கியமான பங்கை அளிப்பதாக இருக்கிறது. சில நாட்களாக காந்தாரத்தில் கவலையளிக்கும்படியான நிலைமை உருவாகி வருவதாக நான் கேள்விப்படுகிறேன். அது உண்மை தானா? என்ன பிரச்சினை? எங்கே பிரச்சினை? காந்தாரத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?”

 

(தொடரும்)

என்.கணேசன்


இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.


Monday, July 4, 2022

யாரோ ஒருவன்? 92


வீடு திரும்புகையில் கல்யாண் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அவன் எதை எதிர்பார்த்திருந்தாலும் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்கள் திருடப் போகும் போது பாம்புகளைப் பார்த்து பயந்து ஓடி வர வாய்ப்பு உள்ளதாக அவன் நினைத்திருந்தான். அல்லது நாகராஜ் அல்லது சுதர்ஷன் விழிப்படைந்து அவர்களைத் துரத்த வாய்ப்புள்ளதாகக் கூட நினைத்திருந்தான்ஆனால் அந்த ஒன்றே முக்கால் மணி நேரத்தில் என்ன நடந்ததென்றே தெரியாமல் அந்தத் திருடர்கள் விழிப்பார்கள் என்றோ, வெற்றிகரமான திருடன் என்று பெயரெடுத்த ஒருவன் வாங்கின முன் தொகையைத் திருப்பித்தந்து தோல்வியை ஒப்புக் கொள்வான் என்றோ சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. இப்போது யோசிக்கையில் நாகராஜ் திருடர்களை மட்டுமல்லாமல் அவனையும் அவன் தந்தையையும் உறங்க வைத்திருக்கிறான் என்பது புரிந்தது. சாதாரண காலத்திலேயே அவன் தந்தை அதிகம் உறங்காதவர். அப்படிப்பட்டவர் பக்கத்து வீட்டிலிருந்து நாகரத்தினம் திருடப்பட்டு கொண்டுவரப்படும் முக்கியமான நேரத்தில் கண்டிப்பாகத் தூங்கவே முடியாது. அவரும் உறங்கியிருக்கிறார், அவனும் அவனை அறியாமல் உறங்கியிருக்கிறான் என்றால் அதுவும் நாகராஜின் கைங்கர்யமாகவே இருக்க வேண்டும். கடைசியாக மணி எச்சரித்தது இப்போது நினைத்தாலும் அவனைத் திகிலடைய வைக்கிறது. இத்தனை செய்தவன் சத்தமில்லாமல் உயிரையும் எடுக்க முடிந்தவன், எச்சரிக்கையாக இருங்கள் என்று மணி சொன்னதில் உண்மை இருக்கிறது...

கல்யாண் வீட்டுக்குள் நுழைந்த போது வேலாயுதம் பேராவலுடன் ஓடி வந்தார். மகனின் களையிழந்த முகத்தைப் பார்த்து அவர்கள் வேலை முடியவில்லை என்பது அவருக்குப் புரிந்து ஏமாற்றம் அவரைப் பற்றிக் கொண்டது. “என்ன ஆச்சாம்... பாம்பைப் பார்த்து பயந்து ஓடிட்டானுகளா?”

கல்யாண் மணி சொன்னதைத் தெரிவித்த போது அவர் முகத்தில் ஈயாடவில்லை. நாகராஜ் அனைத்தையும் அறிவான் என்பதும், அவர்களை உறங்க வைத்தவன் அவன் தான் என்பதும் அவருக்கும் மெள்ளப் புரிந்தது. இத்தனை செய்ய முடிந்தவன் எதையும் செய்யமுடியும் என்கிற வகையில் மணி எச்சரித்ததைக் கேட்டு அவரும் பீதியடைந்தார்.

சிறிது யோசித்து விட்டு அவர் மெல்லக் கேட்டார். “அந்த ஒன்னே முக்கால் மணி நேரமும் அவனுக அப்படியே சிலை மாதிரி நின்னுட்டானுகளா? இதென்னடா புராணக்கதை கேட்கற மாதிரி இருக்கு.”

அவனுக்கு ஒன்னுமே புரியலை. ஆனா அப்படியே நின்னுகிட்டிருந்த மாதிரி தெரியலை.... என்னவோ நடந்திருக்கு, என்னவோ செஞ்சிருக்காங்க.... அவங்க யாருக்குமே அது எதுவுமே ஞாபகம் வராதது தான் பிரச்னை....”

இருவருமே தங்கள் தங்கள் சிந்தனை ஓட்டத்தில் தங்கினார்கள். இருவர் மனதிலுமே நாகராஜ் அடுத்ததாக என்ன செய்வான் என்ற கேள்வி பயத்துடன் விஸ்வரூபம் எடுத்தது. ஆனால் இருவருமே அதை வாய்விட்டுக் கேட்டுக் கொள்ள பயந்தார்கள்.


ஜீம் அகமதின் ஆட்கள் இரவு பன்னிரண்டு ஆக வேண்டிக் காத்திருந்தார்கள். ரோந்து போலீஸ் அந்த நெடுஞ்சாலையில் இரவு ரோந்து போகும் நேரம் பதினொன்றரையும் அதிகாலை மூன்றரை மணியும் என்பது விசாரித்த போது தெரிந்தது.   சென்ற முறை அவர்கள் ஆட்கள் இருவர் மாட்டிக் கொண்டது போல் இன்னொரு முறை ஆக அவர்கள் விரும்பவில்லை.  அன்று அந்த ஃபேக்டரியின் உள்ளே மதன்லாலும், சஞ்சய் ஷர்மாவும் இருக்கிறார்களா என்பதைக் கண்டிப்பாகக் கண்டுபிடித்துச் சொல்லும்படி அஜீம் அகமது கட்டளை பிறப்பித்திருந்தான். பதினொன்றரை மணிக்கான ரோந்து அப்பகுதியைக் கடந்து போய் விட்ட செய்தி பதினொன்றே முக்கால் மணிக்கு வந்து சேர்ந்தது. கால் மணி நேரம் மேலும் காத்திருந்து விட்டு இரண்டு பேர் பைக்கில் புறப்பட்டார்கள்.

நெடுஞ்சாலையில் இரவு நேர வாகனங்கள் அவ்வப்போது வந்து சென்று கொண்டிருந்தனவே ஒழிய ஆட்களின் நடமாட்டமே இருக்கவில்லை. பைக்கில் சென்று அதைச் சுவரை ஒட்டி நிறுத்தி விட்டு இருவரும் இறங்கினார்கள். இருபக்கமும் பார்வையை ஓடவிட்டு விட்டு யாரும் பார்க்கவில்லை என்பது உறுதியானவுடன் ஒருவன் பூட்டைத் திறக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட மற்றவன் யாராவது கவனிக்கிறார்களா என்று கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஐந்து நிமிடத்தில் பூட்டைத் திறந்து இருவரும் வேகமாக உள்ளே சென்று கதவைச் சாத்திக் கொண்டார்கள். உள்ளே சற்று தள்ளி தான் கட்டிடம் இருந்தது. அது இருளில் மூழ்கியிருந்தது. டார்ச் விளக்குடன் சத்தமில்லாமல் நடந்து கட்டிடத்திற்குள்ளே நுழைந்தார்கள்…. உள்ளே எங்காவது யாராவது இருக்கிறார்களா என்று கவனமாகப் பார்த்துக் கொண்டே போனவர்கள் கட்டிடத்தின் பின்பகுதியை அடைந்தார்கள்.

பின்பகுதியின் கடைசி இரண்டு அறைகளில் மயங்கிக் கிடந்த இருவரையும் கண்டுபிடித்த போது அவர்கள் அதிர்ந்து போனார்கள். அடுத்த நிமிடம் அவர்கள் தலைவனுக்குப் போன் செய்தார்கள். அந்தத் தலைவன் அஜீம் அகமதுக்குப் போன் செய்து தகவலைச் சொன்னான்.

அஜீம் அகமது மெல்லக் கேட்டான். “ரெண்டு பேரும் செத்துட்டாங்களா, உயிரோடு இருக்காங்களா?”

உயிரோடு தான் இருக்காங்க. ஆனா மயங்கிக் கிடக்கிறாங்க. ரொம்ப பலவீனமாய் இருக்காங்க. பாம்புக்கடியும் அவங்க உடம்புல இருக்கிறதா பசங்க சொல்றானுக…”

அவங்களக் கட்டிப் போட்டிருந்தாங்களா?”

இல்லை…”

அப்படின்னா அவங்களை அடைச்சிருந்த அறைகளைப் பூட்டி வச்சிருந்தாங்களா?”

அதுவும் இல்லைன்னு பசங்க சொல்றானுக.”

அஜீம் அகமதுக்குக் குழப்பமாக இருந்தது. அறையையும் பூட்டவில்லை, கட்டியும் போடவில்லை என்றால் இவர்கள் ரெண்டு பேரும் ஏன் தப்பித்து வந்துவிடவில்லை…. அதற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும். இவர்களே போய் அங்கே ஒளிந்திருந்தால் தான் அப்படி இருக்க முடியும். ஆனால் இவர்களே போய் அங்கே ஒளிந்திருப்பது மிகவும் அபத்தமாகப் பட்டது.  சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். “அவனுகள தூக்கிட்டு வந்துடுவோம். பிறகு என்ன ஏதுன்னு விசாரிக்கலாம்….”. அதோடு நிறுத்தாமல் அவர்களை எப்படி எடுத்து வருவதென்றும் விளக்கினான்.

அடுத்த அரை மணி நேரத்தில் அஜீம் அகமதின் ஆட்கள்போதை ஒழிப்புத் துறைவேன் ஒன்றிலும், ஜீப் ஒன்றிலுமாக அந்த ஃபேக்டரியைச் சென்றடைந்தார்கள். ஜீப்பில் அதிகாரிகளின் சீருடையில் நடுத்தர வயது ஆளும், வயதான ஆளும் கம்பீரமாக வீற்றிருக்க, பின்னால் வந்த வேனில் ஏழு இளைஞர்கள் சீருடையில் இருந்தார்கள். ஒரு உண்மையான டாக்டர் ஒருவரும் அவர்களுடன் இருந்தார். ஒருவேளை போலீஸாரே பார்த்தாலும் இரண்டு வாகனங்களிலும் இருப்பவர்கள் போதை ஒழிப்புத்துறை ஆட்கள் அல்ல என்று சொல்ல முடியாதபடி இருந்தது அவர்கள் தோற்றமும், நடவடிக்கைகளும். ஜீப் மற்றும் வேன் டிரைவர்கள் வாகனங்களிலேயே இருக்க மற்றவர்கள் ஃபேக்டரிக்குள் விரைந்தார்கள்.

டாக்டர் மதன்லால், சஞ்சய் ஷர்மா இருவரின் நாடிகளையும் சோதித்துப் பார்த்து விட்டுச் சொன்னார். “ரெண்டு பேரும் ரொம்பவே பலவீனமாய் இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரம் கழிஞ்சிருந்தா செத்தே போயிருப்பாங்க. உடனடியா ஆஸ்பத்திரில அட்மிட் பண்றது நல்லது….”

டாக்டர் அவர்களைப் பரிசோதித்துக் கொண்டிருக்கையில் ஜீப்பில் வந்த அதிகாரிகள் தோற்றத்திலிருந்த இருவரும் அந்த அறைகளை ஆராய்ந்தார்கள். பின் மதன்லால் உடலையும் சஞ்சய் ஷர்மா உடலையும் ஆராய்ந்தார்கள். மிக நுட்பமாக ஆராய்ந்து விட்டு அவர்கள் தலையசைக்க மற்றவர்கள்  இரண்டு உடல்களையும் தூக்கிச் சென்றார்கள்.

அதிகாரிகளின் தோற்றத்திலிருந்தவர்களில் நடுத்தரவயதுக்காரன் அஜீம் அகமதுக்குப் போன் செய்தான். ”அவங்க ரெண்டு பேரையும் செக் பண்ணின டாக்டர் ரொம்பவே பலவீனமாய் இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரம் போயிருந்தா செத்திருப்பாங்கன்னு சொல்றார். ரெண்டு பேர் கை கால்கள்லயும் அவங்கள சங்கிலியால கட்டிப் போட்டிருந்த தழும்புகள் தெரியுது….”

அஜீம் அகமது கேட்டான். “பாம்புகள் ஏதாவது உங்க கண்ணுக்குப் பட்டுச்சா

இது வரைக்கும் படலை. நாங்க நேரா அவங்க இருக்கற இடத்துக்கே போயிட்டதால மற்ற இடங்கள்ல இருக்கான்னு தெரியலை….”  

அதையும் பாருங்க. பிறகு கிளம்பிடுங்க. அனாவசியமா அங்கே அதிக நேரம் தங்க வேண்டாம். அவங்க ரெண்டு பேரையும் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிகிட்டு போயாச்சா?”

இப்ப தான் போறாங்க சார்

சரி”  என்று அஜீம் அகமது இணைப்பைத் துண்டித்தான். அவர்கள் இருவரும் முதலில் போய் மதன்லாலையும், சஞ்சய் ஷர்மாவையும் கண்டுபிடித்த இருவருமாகச் சேர்ந்து அந்தக் கட்டிடம் முழுவதும் பாம்பு ஏதாவது தென்படுகிறதா என்று தேடினார்கள். எதுவும் அவர்கள் கண்ணில் படவில்லை.


(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.