என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, March 10, 2022

இல்லுமினாட்டி 145

(சாணக்கியன் நாவல் இன்று மாலைக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதால் காலையிலேயே இல்லுமினாட்டியை அப்டேட் செய்துள்ளேன். சாணக்கியன் கிடைத்தவுடன் அறிவிக்கிறேன். - என்.கணேசன்) 


க்ஷய் கேட்டான். “அதே அளவு ஆபத்து உனக்குமல்லவா இருக்கிறது?”

க்ரிஷ் சொன்னான். “என் தீர்மானங்களின் விளைவை நான் அனுபவிப்பது சரி. அடுத்தவர்களைச் சிக்க வைப்பது சரியல்ல.”

உன்னோடு வருவதென்பது நான் எடுத்த தீர்மானம். அதனால் அதன் விளைவுகளை நான் அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன்

க்ரிஷ் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தான்.  உங்களை அழைத்து வந்தது தலைவர் பாதுகாப்புக்கு. நீங்கள் அவரைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். அது போதும்..”

எர்னெஸ்டோ சொன்னார். “எனக்கு இந்த பங்களாவுக்குள் இருக்கும் வரை எந்தக் கூடுதல் பாதுகாப்பும் தேவையில்லை... நீ தனியாகப் போவதானால் போகவே வேண்டாம்.”

ஆனாலும் க்ரிஷ் தர்மசங்கடத்துடன் அக்ஷயைப் பார்த்தான். அவன் போய்த் திரும்பி வருவது அவனுக்கே நிச்சயமில்லை. அப்படி இருக்கையில் இன்னொருவன் உயிரைப் பணயம் வைப்பது நியாயமாகத் தோன்றவில்லை. அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்ட அக்ஷய் சொன்னான். “உன் நண்பன் அளவுக்கு நான் நிறைய சக்திகள் இல்லாதவனாக இருக்கலாம். ஆனால் என்னால் என்னையும் உன்னையும் ஓரளவாவது பாதுகாக்க முடியும் என்று நம்புகிறேன்.”

இம்மானுவலுக்கு இருவர் போவதும் பிடிக்கவில்லை. “விஸ்வம் மட்டுமல்ல அவன் கூட்டாளியும் இருக்கிறான் என்பதை நீங்கள் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். அவன் எதையெல்லாம் செய்வான் என்பது நமக்கு இன்னும் தெரியவில்லை.”

அவன் சொன்னது க்ரிஷின் தீர்மானத்தை மாற்றவில்லை. அதனால் அக்ஷயும் தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. எர்னெஸ்டோ நீண்ட யோசனைக்குப் பிறகு அவர்கள் இருவரும் செல்ல அனுமதி தந்துவிட்டுச் சொன்னார். “எதாவது பெரிய ஆபத்து என்றால் இம்மானுவலை அழையுங்கள். அல்லது திரும்பி வந்து விடுங்கள். நாம் வேறு வழியை யோசிப்போம். வீரம் என்ற பெயரில் நீங்கள் பலிக்கடாவாகக் கூடாது.”


ஜிப்ஸி மெல்ல பாதாள அறைக்குச் சென்று பார்த்தான். அங்கே வழக்கமான கும்மிருட்டு இல்லாமல் மெலிதான் ஒளி படர்ந்திருந்தது. ஒளி எங்கேயிருந்து வருகிறது என்று ஜிப்ஸி பார்த்தான். அந்த ஒளி சுவரில் பெரிதாக வரையப்பட்டிருந்த பிரமிடுக்குள் இருந்த பெரிய கண்ணிலிருந்து கிளம்பி விஸ்வத்தின் மேல் விழுந்து கொண்டிருந்தது. இல்லுமினாட்டியின் அனைத்தும் பார்க்கும் விழி அப்படி மின்னுவது நல்ல அறிகுறியாக ஜிப்ஸிக்குத் தெரியவில்லை. இமயமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட அந்தச் சின்னம் இதற்கு முன்பு மின்னி விஸ்வத்தைக் கவிழ்த்ததை அவனும் எண்ணிப் பார்த்தான். இந்த உலகின் எத்தனையோ விசித்திரங்களையும், அற்புதங்களையும் ஆராய வந்தவனுக்கு இன்னும் சில விஷயங்கள் பிடிபடாமல் தான் இருக்கின்றன. அவற்றில் ஒன்று இந்தச் சின்னம்... இந்தச் சர்ச்சில் பிரதானமாக இங்கே ஒளிரும் இந்தச் சின்னம் மேலேயும் ஓவியங்களிலிருந்து சில சமயம் ஒளிர்வதை அவன் கவனித்ததுண்டு. அவை ஒளிரும் போதெல்லாம் சில சக்தியலைகள் வீச்சுக்கள் வெளிப்படுகின்றன. இவற்றை விட மேலான சக்திகள் கூட அவனுக்கு அத்துப்படி. ஆனால் இந்த அலைவீச்சுக்கள்  கொஞ்சம் புதிராகவே இருக்கின்றன.... ஜிப்ஸி சத்தமில்லாமல் மறுபடி மேலே வந்தான்.


ஜிப்ஸி தொலைதூரக் கிரகம் ஒன்றின் விஞ்ஞானி. அங்குள்ள ஜீவராசிகள் மனித இனத்தை விடப் பலமடங்கு அறிவிலும், அறிவியல் முன்னேற்றத்திலும் முன்னேறியவர்கள். அங்கிருந்து அவன் இந்த பூமிக்கு ஆராய்ச்சிக்கு வந்த நோக்கம் மனித இனத்தின் அறிவு, மனப்போக்கு, அறிவியல் வளர்ச்சி, உலகத்தின் இயற்கை வளங்கள் ஆகியவற்றை ஆராய்வதும் அவனுடைய கிரகத்தின் வளர்ச்சிக்குத் தேவையானவை அல்லது உதவக்கூடியவை இங்கிருந்தால் அவற்றையும் ஆராய்வது தான்.

அவன் இங்கு வந்த பார்த்த போது பொதுவாகவே மனிதர்கள் அறிவைக் குறைந்த அளவு வாழ்க்கைக்குப் பயன்படுத்துபவர்களாக இருந்தார்கள். பூமியில் சுற்றுச்சூழல் மாசு அதிகமாக இருந்தது. இயற்கையை அலட்சியம் செய்யும் போக்கு அதிகமாக இருந்தது. சூழ்ந்து கொண்டிருக்கும் அழிவை நிறுத்த அவர்கள் எந்தப் பெரிய முயற்சியும் எடுக்காமலேயே இருந்தார்கள். மனிதர்கள் எதைப் பற்றியும் முழுவதாக அறியும் ஆர்வத்தை விடச் சிறிது தெரிந்து கொண்டு அதைப் பற்றி நிறைய பேசும் ஆர்வம் அதிகமுள்ளவர்களாக இருந்தார்கள். எதையும் அரைகுறையாய்த் தெரிந்து கொண்டு நிறைய பேசுவார்கள். ஆனால் முடிவை எட்டுவதோ அதன்படி நடந்து கொள்வதோ அவர்கள் வழக்கத்தில் இருக்கவில்லை.

பூமியில் புதுப் புது நோய்கள் பெருகிக் கொண்டிருந்தன.  அதற்குத் தனித்தனி மருந்துகள் கண்டுபிடித்துக் கொண்டிருந்தார்கள். மூல காரணத்தையே கவனித்து அழிக்கும் அடிப்படை அறிவு அவர்களுக்கு இருக்கவில்லை. இயற்கையின் சீற்றங்கள் எல்லை மீறி அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தன. அவர்கள் அப்படி வந்து கஷ்டப்படும் போது ஏதாவது தீர்வு கண்டேயாக வேண்டும் என்பார்கள். அது நின்று இயல்பு நிலை திரும்பும் போது அதைச் சுத்தமாக மறந்து விடுவார்கள். ஆள்பவர்கள் பணம் சேர்த்துக் கொண்டேயிருந்தார்கள். மக்கள் அவ்வப்போது விமர்சனங்கள் செய்தும். மீதி நேரங்களில் பொழுதுபோக்குகளில் ஈடுபட்டும் வாழ்ந்து மடிந்து கொண்டு இருந்தார்கள். இப்படி ஒன்றிரண்டு விஷயங்களில் தான் என்றில்லாமல் பல விஷயங்களில் இருந்தார்கள்... யாருமே எல்லாவற்றுக்கும் மூலமான வேர்க் காரணங்களை ஆராயவோ, சரிசெய்யவோ ஆர்வம் காட்டவில்லை. ஒவ்வொரு பிரச்சினையிலும் விளைவை நிறுத்த முயன்ற மனித இனம், காரணத்தையே அகற்றும் அறிவோ, துடிப்போ இல்லாமல் இருந்தது. அவர்கள் நிரந்தரமான உயர்வுக்கும் சிறப்பிற்குமான அறிவுபூர்வமான வாழ்க்கை முறைகளைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனாலும் தங்களை உயர்வான அறிவுஜீவிகளாகவே நினைத்தார்கள். எல்லோரும் தனித்தனியாக லாபமடைய ஆசைப்பட்டார்களே ஒழிய ஒட்டுமொத்தமான உயர்வுக்கு முயலும் போக்கு அவர்களிடம் இல்லை. இதெல்லாம் ஜிப்ஸிக்கு வேடிக்கையாகவே இருந்தது.

இதே போக்கில் போனால் இந்த உலகம் இனி ஒரு ஆயிரம் ஆண்டுகளைக் கூடத் தாண்டாது. அதற்குள் முழுவதுமாக அழிந்து விடும். அப்படி எல்லா இயற்கை வளங்களையும் அழித்து விட்டு மனித இனம் அழிந்தால் இந்த உலகத்தில் உபயோகமானது எதுவும் மிஞ்சாது. அவன் கிரகத்திற்குத் தேவையான, பயன்படக்கூடிய நிறைய வளங்கள் இந்தப் பூமியில் இருந்தன என்பதை ஆராய்ந்து கண்டுபிடித்திருந்தான். இந்த முட்டாள் மனித இனம் அதை அழித்து விட்டுத் தாங்கள் அழிவதற்கு முன் தங்களையே அழித்துக் கொண்டால் அந்த வளங்களாவது மிஞ்சும். அவனுடைய கிரகத்தின் சீதோஷ்ண நிலை கிட்டத் தட்ட இந்த பூமியின் சீதோஷ்ண நிலை போலத்தான் இருந்தது.  இந்தப் பூமியை அவர்கள் பல விதங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படிக் கணக்குப் போட்ட வேற்றுக்கிரக ஆராய்ச்சியாளனான ஜிப்ஸி தன் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக மனித இனம் சீக்கிரமாகவே அழிவதற்கு வழிகளை ஆராய்ந்தான்.

அவனுடைய ஆராய்ச்சியில் உலக நிகழ்வுகளை நிர்ணயிக்கும் இல்லுமினாட்டி அமைப்பு சிக்கியது. இது போன்ற அமைப்பு உலகைக் காக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். இப்போதைக்கு அதுவும் உலகப் போக்கின்படியே இருந்தது. அறிவு, அதிகாரம், வலிமை என்ற மூன்றுக்கே முக்கியத்துவம் தந்து இயங்கியும், உலகை இயக்கியும் இருந்த இந்த அமைப்புக்கு ஒரு ஆபத்தானவன் தலைவனானால் பூமியின் அழிவைத் துரிதப்படுத்தலாம் என்பதை ஜிப்ஸி உணர்ந்தான். இல்லுமினாட்டியில் பூமியைக் காப்பாற்றக்கூடிய ஆட்கள் இல்லாவிட்டாலும் அதை வேகமாக அழிக்கக்கூடியவர்களும் இருக்கவில்லை.  மெல்ல மெல்ல அழிக்கும் போக்கே அதில் உள்ளவர்களிடம் கண்ட ஜிப்ஸி தன் ஆராய்ச்சியின் முக்கிய பகுதியாக வேகமாக அழிக்க முடிந்த ஆபத்தானவனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.

அவனுடைய மேலான சக்திகளை வைத்து அதற்கேற்றவனாகத் தேடி விஸ்வத்தைக் கண்டுபிடித்தான். பட்டை தீட்டாத வைரமாக மங்கி இருந்த விஸ்வத்தின் மனதில் ஒரு அக்னியைப் பற்ற வைத்தான். அந்த அக்னி ஜிப்ஸி எதிர்பார்த்தது போலவே எரிமலையாகவே மாற ஆரம்பித்தது.

அப்போது இன்னொரு வலிமையான கிரகத்திலிருந்து, ஜிப்ஸியின் இன ஜீவராசிகளை விடப் பல மடங்கு முன்னேறியிருந்த, க்ரிஷின் பிற்கால நண்பனான வேற்றுக்கிரகவாசி வந்தான்.  அவனும் ஆராய்ச்சிக்காகவே தான் அங்கு வந்தவன் என்றாலும் அவனுக்கு இந்தப் பூமி மக்கள் மீது ஏனோ பரிவு இருந்தது. அவன் ஜிப்ஸியின் திட்டத்தைக் கண்டுபிடித்துக் கண்டித்தான்.

ஜிப்ஸி சொன்னான். “இந்த மனித இனம் வேகமாக அழிந்து கொண்டு தான் இருக்கிறது. ஒழுங்கீனம், அறிவீனம் இரண்டும் கொண்ட இனம் அழிவது நிச்சயம் தானே. அதை நான் துரிதப்படுத்துகிறேன். அவ்வளவு தான்.”

க்ரிஷின் வேற்றுக்கிரகவாசி நண்பன் சொன்னான். “உங்கள் இனத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில் இவர்கள் குறைந்தவர்களாக இருக்கலாம். அதற்காக இப்படி நீ செய்வது சரியல்ல. ஆராய்ச்சிக்குப் போகும் இடங்களை எல்லாம் அழித்து விட்டு வருவது உனக்கு அறிவும், ஒழுங்குமாகத் தெரிகிறதா? உன் கிரகத்திற்கு  நான் வந்து அப்படிச் செய்தால் அதை நீ ஏற்றுக் கொள்வாயா?”

ஜிப்ஸி இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று திகைத்தான். ஆனால் அவனை மறுப்பதோ, பகைப்பதோ ஆபத்து என்று எண்ணியவனாகச் சொன்னான். “மன்னிக்கவும். நான் அந்த வகையில் சிந்திக்கவில்லை. ஆனால் நான் ஒரு ப்ரோகிராம் போட்டு ஆரம்பித்து வைத்தாகி விட்டது... அதைத் திருத்த வழியில்லை

சரி இதோடு நிறுத்திக் கொள். வேறு எந்த முயற்சியும் நீ எடுக்கக்கூடாது...” என்றான். சொன்னவன் ஜிப்ஸியின் திட்டத்துக்கு எதிராக உலகத்தை அழிவிலிருந்து காப்பாற்றக்கூடிய ஒரு மனிதனாக க்ரிஷைக் கண்டுபிடித்து அவனிடம் உலகத்திற்கு வரவிருக்கும் ஆபத்தைச் சொன்னான். அவன் க்ரிஷின் உயிரைக் காப்பாற்ற உதவி செய்ததால் அதே போல் விஸ்வத்தின் உயிரைக் காக்க மட்டும் ஜிப்ஸியும் ஏதாவது உதவி செய்யலாம் என்றும் அதற்கு மேல் இயற்கையாக இங்கு எது நடக்கிறதோ நடக்கட்டும் என்றும் வேற்றுக்கிரகவாசிகள் நாம் இடையில் புகுந்து செயல்படுவது சரியல்ல என்றும் சொல்லி ஜிப்ஸியை எச்சரித்து விட்டுப் போனான்.  

அதன் பிறகு ஜிப்ஸியைக் குழப்பும் பல நிகழ்வுகள் இங்கே நடந்தன.

(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV

Monday, March 7, 2022

யாரோ ஒருவன்? 75


டுத்த அரை மணி நேரத்தில் மெக்கானிக் காரில் ஏதோ ஒரு சிறிய பிரச்சினையைக் கண்டுபிடித்து சரி செய்து விட்டுப் போய்விட அந்த வீட்டில் டீ குடித்த தீபக்கும் அவன் நண்பர்களும் அந்த முதியவர்களுடன் மிக நெருக்கமாகி விட்டார்கள். அனைவரும் அந்தப் பாட்டி தாத்தாவுடன் செல்பி எடுத்துக் கொண்டார்கள். மிகக் குறுகிய காலத்தில் அந்த அளவு நெருக்கமாக அந்த முதியவர்களின் அன்பே காரணம் என்பதையும் உணர்ந்தார்கள்.

கிளம்பும் போது தீபக்கும் அவன் நண்பர்களும், ”கோயமுத்தூர் வந்தா எங்க வீட்டுக்கெல்லாம் கண்டிப்பா வரணும்என்று சொல்ல பரந்தாமன் மெல்லிய சோகத்துடன் சொன்னார். “நாங்க எங்கேயுமே போறதில்லை. நீங்க இந்தப் பக்கம் வந்தா கண்டிப்பா வாங்க.”

கொடிவேரி ஃபால்ஸுக்கு வந்தா கண்டிப்பா உங்களைச் சந்திக்காம போக மாட்டோம் தாத்தாஎன்று தீபக் சொன்னான்.

அலமேலு கண்கள் ஈரமாகச் சொன்னாள். “எங்க மாதவனும் அவன் ஃப்ரண்ட்ஸோட அடிக்கடி கொடிவேரி ஃபால்ஸ் போவான்

மாதவன் அவர்கள் மகன் பெயர் என்று தீபக் யூகித்தான். பாட்டி தாத்தாவிடம் கைகுலுக்கி அன்பான உபசரிப்புக்கு நன்றி தெரிவித்து விட்டு அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள்.


ந்த நாகம் இறந்து போனாலும் கூட வேறு பாம்புகள் பக்கத்து வீட்டில் இருப்பதை வேலாயுதம் முந்தைய நாளிரவு கேட்ட வேறு மெல்லிய சீறல்களால் தெரிந்து கொண்டார். ’பாம்புப் பண்ணையே வெச்சிருப்பான் போலருக்கு.’

மறுநாள் காலையிலிருந்து நாகராஜ் வெளியே வரவில்லை. அவனைப் பார்க்க காலை பதினோரு மணிக்கு ஒரு பணக்காரப் பெண்மணி ஒருத்தி வந்து விட்டுப் போனாள். அவளை வரவேற்கவும், வழியனுப்பவும், சுதர்ஷன் மட்டுமே வெளியே வந்தான்.

மாலை ஐந்து மணிக்கு தான் நாகராஜ் வெளியே வந்தான் வாக்கிங் கிளம்பி விட்டான் என்று எண்ணியபடியே வேலாயுதம் கூர்ந்து பார்க்க நாகராஜ் அதிசயமாய் அவர் பக்கம் திரும்பி மெலிதாகப் புன்னகைத்தான். வேலாயுதத்திற்குக் காண்பது நிஜம் தானா என்று பலத்த சந்தேகம் வந்து மெல்லத் தன்னை ரகசியமாய் கிள்ளிப் பார்த்துக் கொண்டு கனவல்ல என்பது உறுதிப்படுத்திக் கொண்டு அவர் வாயெல்லாம் பல்லானார். “நமஸ்காரம்என்று இரு கைகளையும் கூப்பிய படி காம்பவுண்டு சுவரை அடைந்தார்.

நாகராஜ்நமஸ்காரம்என்று சொல்லிக் கொண்டே புன்னகையுடன் தலையசைத்து விட்டு மெள்ள வெளியே வந்து சுதர்ஷனுக்காக காத்து நின்றான். வேலாயுதம் வெளியே போய் பேச்சுக் கொடுப்போமா என்று யோசித்து முடிவெடுப்பதற்குள் சுதர்ஷன் வீட்டைப் பூட்டிவிட்டு வந்து சேர்ந்து கொள்ள நாகராஜும் சுதர்ஷனும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தார்கள்.

வேலாயுதம் ஏமாற்றமடைந்தாலும் இந்தச் சிறிய புன்னகை முன்னேற்றத்தால் திருப்தி அடைந்தார்.  ஒன்றிரண்டு நாட்களில் மறுபடியும் பேசும் முயற்சியை எடுத்தால் வெற்றி பெறலாம் எனத் தோன்றியது. அந்தத் திருப்தியைக் கெடுக்கும் வகையில் வீட்டின் எதிர்புறத்தில் பாம்பாட்டி தெரிந்தான். அவன் நாகராஜும் சுதர்ஷனும் போகும் திசையிலேயே எதிர்வரிசையில் போக ஆரம்பித்தது தெரிந்தது.

பாவி சுளையா ஐநூறு ஐநூறு ரூபாயா எடுத்துக் கொடுத்தேனேடா. வாங்கிட்டு திரும்பி ஏண்டா வந்து உசிர் எடுக்கறே. ஏண்டா அவன் போற பக்கமே போறே?’ என்று மனதில் புலம்பிய அவருக்கு பாம்பாட்டி நாகராஜை வழியில் இடைமறித்துப் பேச்சுக் கொடுப்பானோ என்ற பயமும் மெல்ல எழுந்தது. அப்படிப் பார்த்துப் பேசினால் அவரிடம் இரண்டு நாள் முன்பு பேசியதை இந்தப் பாம்பாட்டி சொல்லி விடுவானோ, சொன்னால் நாகராஜ் என்ன நினைப்பான். இப்போது செய்த புன்னகையும் எதிர்காலத்தில் செய்யாமல் போய் விடுவானோ, என்ற சிந்தனைகள் தீவிரமாக எழுந்து அவருடைய நிம்மதியைக் குலைத்தன. அதனால் நரேந்திரன் ஏற்பாடு செய்து வைத்திருக்கும் ஒரு உளவுத் துறை ஆள் அங்கேயே மறைவில் இருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருப்பதையும், இன்னொரு ஆள் பாம்பாட்டியை மறைவாகப் பின் தொடர்வதையும் கவனிக்கத் தவறினார்.

பாம்பாட்டியும் தன்னை ஒருவன் பின் தொடர்வதைக் கவனிக்கவில்லை. அவன் கவனமெல்லாம் எதிர்வரிசையில் போய்க் கொண்டிருக்கும் நாகராஜ் மேலேயே இருந்தது. நாகராஜும், சுதர்ஷனும் வழக்கமான விரைவான நடையில் இருக்காததால் ஓரிடத்தில் வேகமாகத் தெருவைக் கடந்து  நாகராஜ் எதிரில் போய் அவனால் நிற்க முடிந்தது.

தன் முன் பணிவுடன் வந்து நின்ற பாம்பாட்டியைக் கேள்விக்குறியுடன் நாகராஜ் பார்த்தான்.

பாம்பாட்டி இடுப்பு வரை மரியாதையுடன் குனிந்து இரு கைகளையும் கூப்பிச் சொன்னான். “நமஸ்காரம் மகராஜ்

நாகராஜ் தானும் இரு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்தபடி அமைதியாகக் கேட்டான். “என்ன விஷயம்?”

உங்க தயவிருந்தா போதும் மகராஜ்என்று பணிவுடன் பாம்பாட்டி சொன்னான்.

நாகராஜின் பார்வை கூர்மையாகியது. “சுத்தி வளைக்காம சொல்லு. பணம் வேணுமா?” என்று கேட்டான்.

பாம்பாட்டி விசேஷ நாகரத்தினம் கிடைக்கப் பெற்ற மகாசக்தி பெற்ற மனிதனிடம் சில்லறைப் பணம் வாங்கித் திருப்தியடையும் மனநிலையில் இருக்கவில்லை. அவன் பணிவாகச் சொன்னான். “பணம் செலவாயிடும் மகராஜ். செலவாகாமல் என் வாழ்க்கைல தங்கற மாதிரி எதானும் தந்தீங்கன்னா உயிர் இருக்கற வரைக்கும் உங்களை மறக்க மாட்டேன்

நாகராஜ் புன்னகைத்தான். பாம்பாட்டி சாமர்த்தியமாகத் தான் பேசுகிறான் என்று நினைத்தபடி சொன்னான். “எதுவுமே சரியான காலத்துல கிடைச்சா தான் உன் வாழ்க்கைல தங்கும். இல்லாட்டி கஷ்டப்பட்டு வரவழைச்சா கூட கைநழுவிப் போயிடும். இதை அனுபவத்துலயே உணர்ந்தவன் நீ…”

பாம்பாட்டி ஒரு கணம் பேச்சிழந்து நின்றான்.  எத்தனை சரியான வார்த்தைகள் என்று நினைத்தவன் பிறகு வருத்தத்தோடு கேட்டான். ”இந்த ஏழைக்கு வயசு ஐம்பத்தைஞ்சாச்சு. இது வரைக்குமே சரியான காலம் வரலை. ஏழைகள் தலையெழுத்துலயே சரியான காலம்கிறது இல்லையா மகராஜ்

நாகராஜ் முகத்தில் இரக்கம் தெரிந்தது. ஆனால் உறுதியான குரலில் அவன் சொன்னான். “நீ ஏழையாய் பிறந்தது வேணும்னா விதியோட தப்பா இருக்கலாம். ஆனா நீ ஏழையாவே இருக்கறது நீயா தேர்ந்தெடுத்துகிட்டது தான். பணக்காரனாக சுலபமான வழிகளைத் தேடி விரயம் பண்ணின நேரத்துல நீ உன் திறமையையும், உழைப்பையும் நம்பி உழைச்சிருந்தா எத்தனையோ உன் வாழ்க்கைல மாத்தியிருக்கலாம்...”

பாம்பாட்டி பரிதாபமாகச் சொன்னான். “உண்மை தான் மகராஜ். அதனால தான் நான் உங்க கிட்ட இப்ப பணம் கேட்கலை. ஒரு நிரந்தரத் தீர்வுக்கு வழி காட்டுங்கன்னு சொல்றேன்...”

நாகராஜ் சொன்னான். “உன்கிட்ட இன்னும் கொஞ்சம் திருட்டுத்தனமும், ஏமாத்தற புத்தியும் இருக்கு. அதை விட்டுடுடறப்ப உன்னைப் பிடிச்சிருக்கற எல்லா பீடையும் கூட விலகிடும்

சொல்லி விட்டு நாகராஜ் நடக்க ஆரம்பிக்க பாம்பாட்டி சிலை போல சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தான். பின் மெள்ள தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் வாழ்க்கையில் அறிவுரைகளைக் கேட்காதவன் அல்ல. இந்த உலகத்தில் தாராளமாக ஒருவர் இன்னொருவருக்குத் தருவதே அறிவுரைகளைத் தான். அதனால் ஏராளமான அறிவுரைகளை அவன் கேட்டிருக்கிறான். ஆனால் இந்த நாகசக்தி படைத்த மனிதனின் அறிவுரை அவன் ஆன்மாவைத் தொட்டது. அவனை முழுவதுமாக அறிந்த மனிதனின் அறிவுரையாக அதை உணர்ந்தான். இன்னொன்றையும் கூடவே அவன் உணர்ந்தான். அவனுக்கு ஆக வேண்டிய நன்மைகளை அந்த நாகசக்தி படைத்த மகராஜ் சற்று முன் அவனுக்கு அருளி விட்டதாகவும், அவன் தன் திருட்டுத்தனம், ஏமாற்றுக்குணம் இரண்டையும் விட்டுவிட்டபின் அதைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் நம்பினான். ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை கிடைக்கும் விசேஷ நாகரத்தினத்தைப் பெற்ற மனிதன் சொன்னால் அது பொய்க்காது...

இந்தச் சிந்தனைகளுடன் வீடு நோக்கி நடந்த பாம்பாட்டி தன் பின்னால் நரேந்திரனின் ஒற்றன் பின் தொடர்வதை உணரவில்லை. அவன் வீடு போய் சேர்ந்த பிறகு அந்த ஒற்றன் நரேந்திரனுக்குப் போன் செய்து நடந்ததைச் சொன்னான். நாகராஜும் அந்தப் பாம்பாட்டியும் பேசிக் கொண்டது என்ன என்பது மட்டும் அவனுக்குத் தெரியவில்லை. நரேந்திரனுக்கு நாகராஜ் என்னும் புதிர் பெரிதாகிக் கொண்டே போவது போலத் தோன்றியது.




(தொடரும்)
என்.கணேசன்

மே 2023 வரை தொடரவிருக்கும் இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில்  உடனடியாக அமேசானில் வாங்க லிங்க்-

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


குறிப்பு: நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சாணக்கியன் நாவல் அச்சகம் சந்திக்கும் சில பிரச்சினைகளால் தாமதமாகி வருகிறது. இந்த வார இறுதிக்குள் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கிறேன். 



Thursday, March 3, 2022

இல்லுமினாட்டி 144



விஸ்வத்தை உறுப்பினர் பதவியிலிருந்து விலக்கியதுடன் அவன் தலைவரைக் கொல்லவும் முயன்றான் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டி அவன் இனி எந்த வகையிலும் இல்லுமினாட்டியில் இணையவோ, தலைவனாகவோ முடியாதபடி எர்னெஸ்டோ செய்து விட்டதை அறிந்த பிறகு நிலைமை மிக அபாயமாவதை இம்மானுவல் உணர்ந்தான். நாடுகளே கூட எர்னெஸ்டோவுக்கு எதிராக எதுவும் செய்ய முயன்றதில்லை. மனிதர்கள் அதைப் பற்றி நினைக்கவும் நடுங்குவார்கள். ஆனால் விஸ்வம் ஒருவன் மட்டும் விதிவிலக்காக இருக்கக் காரணம் அவனுடைய சக்திகள். அவன் இப்போது கண்டிப்பாகக் கோபத்தின் உச்சத்தில் இருப்பான். அவனால் முடிந்ததை எல்லாம் செய்யாமல் விட மாட்டான். அவனிடமிருந்து எர்னெஸ்டோவை இம்மானுவல் காப்பாற்றியாக வேண்டும்...

இம்மானுவல் யோசனையுடன் சொன்னான். “விஸ்வம் செத்தால் ஒழிய நமக்கு நிம்மதியில்லை.”

எர்னெஸ்டோ சிரித்துக் கொண்டே சொன்னார். “அவன் சாவையும் நம்ப முடியாது என்பதை ஞாபகம் வைத்துக் கொள். ஒரு தடவை நாம் அனுபவப்பட்டிருக்கிறோம்.”

இம்மானுவல் சொன்னான். “ஜான் ஸ்மித் நிறைய ஆட்களை விசாரித்திருக்கிறார். இந்த உடலை விட்டு இன்னொரு உடலையும் சேரும் அதிசயம் இன்னொரு முறை நடக்காது என்று அத்தனை பேரும் சொல்லியிருக்கிறார்கள். அதனால் இந்த முறை அவனை ஒழித்தால் நிச்சயம் அதற்குப் பிறகு பிரச்சினை இல்லை”

“சரி எப்படி ஒழிக்கப் போகிறாய்?” எர்னெஸ்டோ கேட்டார்.

இம்மானுவல் க்ரிஷையும் அக்‌ஷயையும் பார்த்து விட்டுச் சொன்னான். “அமானுஷ்ய சக்திகள் பற்றி எல்லாம் இவர்கள் இரண்டு பேருக்குத் தான் தெரியும். அதனால் இவர்கள் தான் ஆலோசனை சொல்ல வேண்டும்”

அக்‌ஷய் சொன்னான். “அவனுக்கு இப்போது இருக்கும் சக்திகள் அளவு தெரியவில்லை. ஆனால் குறைந்த அளவே இருக்கிறது என்பது தான் என் அபிப்பிராயம். ஏனென்றால் அதிகம் இருந்திருந்தால் தலைவரைத் தாக்க அவன் நேரடியாக வந்திருப்பான். என்னையும் மீறி அவரைத் தாக்கும் அளவு சக்திகள் இப்போது இல்லை என்பது மட்டும் நிச்சயம். அதே போல் அவன் என்னையும் ஆக்கிரமித்து என் சக்திகளை அளக்கவோ தெரிந்து கொள்ளவோ இன்னமும் முயற்சி செய்யவில்லை. அவன் அதைச் செய்யாததும்  சக்திகளைச் சேமிக்க வேண்டிய நிலைமையில் இருப்பதைத் தான் தெரிவிக்கிறது. ஆனால் அவன் இப்போது ஏதோ சக்திகள் கூடுதலாகப் பெறுவான் என்று உங்கள் ஆரகிள் சொல்லி இருக்கிறது. அதன் அளவு நமக்குத் தெரியாது. அதனால் அந்தச் சக்திகள் கிடைத்த பின் அவன் என்னவெல்லாம் செய்ய முடியும் என்றும் சொல்ல முடியாது”

எர்னெஸ்டோ சொன்னார். “அவனால் முடிந்ததை எல்லாம் கண்டிப்பாகச் செய்வான். அந்த அளவு உக்கிரத்துடன் அவன் இருப்பான். அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவன் சக்திகளைப் பெறுவான் என்பதை எந்த அளவு நம்பலாம் என்று தான் யோசிக்கிறேன்”

க்ரிஷ் சொன்னான். “அந்தச் சுவடியில் எழுதியிருந்த மற்றதெல்லாம் பலித்திருக்கிறது. அதனால் இதுவும் கண்டிப்பாகப் பலிக்கும். அதில் சந்தேகம் வேண்டியதில்லை”

எர்னெஸ்டோ சொன்னார். “அது உண்மையாகி அவன் நம் விதியையும் உலகத்தின் விதியையும் எழுதுவான் என்பது உண்மையானால் அவன் எழுதுகிற விதி நல்லதாய் இருக்க வாய்ப்பே இல்லை. என்னைப் பொருத்த வரை நம்மைக் காக்க முடிந்தவன் க்ரிஷ் தான். ஆரகிள் சொன்னதும், நம் இல்லுமினாட்டி சின்னம் சொன்னதும், க்ரிஷின் வேற்றுக்கிரகவாசி நண்பன் சொன்னதும் அது தான். அதனால் க்ரிஷைத் தான் நான் நம்பி இருக்கிறேன்”

அவர் நட்புணர்வோடும், அன்போடும் அதைச் செல்லமாகச் சொன்ன மாதிரி இருந்தது. அதை அவர் எந்த அளவு உண்மையாகவே நம்புகிறார் என்பதை அவர்களால் கணிக்க முடியவில்லை. க்ரிஷ் ஆழ்ந்த யோசனையிலிருந்தான்.

இம்மானுவலும் அவர் தொனியிலேயே தொடர்ந்து க்ரிஷைக் கேட்டான். “க்ரிஷ் என்ன செய்யப் போகிறாய்?”

“நான் விஸ்வத்தைச் சந்திக்க அந்தச் சர்ச்சுக்குப் போகிறேன்” க்ரிஷ் அமைதியாகச் சொன்னான். மூவரும் அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா என்பது போல அவனைப் பார்த்தார்கள்.

“அவன் அங்கேயே இருப்பான் என்றால் நாம் படையையே அனுப்பலாமே. இம்மானுவல் சொன்னது போல் அவன் அங்கே இருக்க மாட்டான் என்று தானே நானே சும்மா இருக்கிறேன்.” என்றார் எர்னெஸ்டோ.

“படை அனுப்பினால் அவன் இருக்க மாட்டான். ஓடி விடுவான். நான் ஒருவன் போனால் அவன் ஓட மாட்டான். அவனுடைய “ஈகோ” ஒருவனைப் பார்த்து ஓட அனுமதிக்காது.”

இம்மானுவல் சொன்னான். “அவன் ஆத்திரத்தின் உச்சத்தில் இருக்கும் போது நீ போனால் முதல் வேலையாக உன்னைக் கொன்று விடுவான். அது நிச்சயம். ஏனென்றால் அவன் எதிர்பார்த்திருப்பது நீ இந்தியா சென்று விட்டாய் என்பதைத் தான். அப்படிப் போகாமல் நீ அவன் முன் போய் நிற்பதைத் தவிர வேறு வினையே வேண்டாம்”

எர்னெஸ்டோ சொன்னார். “அப்படியெல்லாம் போய் நீ ஆபத்தில் சிக்கிக் கொள்ள நான் அனுமதிக்க மாட்டேன் க்ரிஷ்.”

“நான் போனால் அது எனக்கு மட்டும் தான் ஆபத்தாக இருக்கலாம். ஆனால் நான் போகாவிட்டால் அது ஏராளமானவர்களுக்கு ஆபத்தாக முடியலாம்.”

“நீ போகும் போது அவன் அங்கே இருக்கா விட்டால்...?”

“நான் அங்கே அவனுக்காகக் காத்திருப்பேன். ஏனென்றால் அவன் திரும்பவும் வராமல் இருக்க மாட்டான். உங்கள் ஆரகிளின் ரகசிய ஓலைச்சுவடி எல்லா முடிவுகளும் அங்கே தான் எடுக்கப்படும் என்று சொல்லியிருப்பதாகத் தான் எனக்குப் படுகிறது. அவன் முடிவெடுக்கும் வேளையில் நான் அங்கே இருக்க விரும்புகிறேன். அவன் மோசமாக எதையும் செய்யாமல் என்னால் பார்த்துக் கொள்ள முடியும்”

“போய் என்ன செய்வாய்?” எர்னெஸ்டோ கேட்டார்.

“அவனிடம் பேசுவேன்” என்று க்ரிஷ் சொன்னவுடன் எர்னெஸ்டோ கலகலவென்று சிரித்து விட்டார். அவரால் சிரிப்பைச் சீக்கிரத்தில் அடக்க முடியவில்லை. அக்‌ஷயும் இம்மானுவலும் கூடப் புன்னகையை அடக்கக் கஷ்டப்பட்டார்கள்.

எர்னெஸ்டோ சொன்னார். “அவன் எனக்கும் எதிரி தான். இத்தனை நாட்களில் அவனைப் பற்றி அதிகம் யோசித்திருக்கிறேன். அவனை ஓரளவு நன்றாகவே புரிந்து கொண்டுமிருக்கிறேன் க்ரிஷ். நீ அவனைத் தாக்கப் போகிறாய் என்று சொன்னால் கூட அவன் பொறுத்துக் கொள்வான். ஆனால் பேசப் போகிறாய் என்றால் கண்டிப்பாகப் பொறுத்துக் கொள்ள மாட்டான். நீ ஒரு முறை பேசியதில் அவன் அடைந்த வீழ்ச்சியை அவன் என்றென்றைக்கும் மறக்க மாட்டான்...”

க்ரிஷ் சொன்னான். “அவன் ஆத்திரப்படுவான் என்பது எனக்கும் புரிகிறது தலைவரே. ஒருவிதத்தில் அது நல்லதும் கூட. ஓரளவு ஆத்திரம் வெளிப்பட்டுக் குறையும். ஆனாலும் நான் அவனிடம் மனம் விட்டுப் பேச வேண்டியிருக்கிறது... என் உள்மனம் அப்படித்தான் சொல்கிறது”

எர்னெஸ்டோ திகைத்தார். மேலும் எதையோ திட்டிச் சொல்ல நினைத்த அவர் பின் மௌனமானார். அவன் முடிவுகள் அறிவுக்குப் புறம்பாக ஆரம்பத்தில் தோன்றினாலும் அவன் அப்படி நடந்து கொண்டு வென்றவன் என்பதை அவர் நினைவுகூர்ந்தார். இல்லுமினாட்டி கூட்டத்திற்கு அத்தனை ஆபத்தையும் ஏற்று அவன் வந்ததும், அந்தக் கூட்டத்தில் பேசி எல்லாவற்றையும் மாற்றியதும் நினைவுக்கு வந்தது. விஸ்வத்தின் ஆளான சிந்துவைத் தண்டிக்காமல் அவளை வீட்டில் அனுமதித்ததுடன் பேசி அவளை மாற்றியதும் நினைவுக்கு வந்தது. ஆனாலும் விஸ்வம் விஷயத்தில் மட்டும் க்ரிஷால் சிறிய மாற்றத்தைக் கூட ஏற்படுத்த முடியாது என்று மனிதர்களின் சுபாவங்களை எடைபோடுவதில் சமர்த்தரான அவருக்குத் தோன்றியது.

அவர் மெல்லச் சொன்னார். “ஆனாலும் அவன் விஷயத்தில் நீ பேசி எதையும் சாதிக்க முடியாது க்ரிஷ். அவன் முழு விஷம்.”

“ஆனாலும் முயற்சி செய்திருக்கிறேன் என்ற ஆறுதலாவது எனக்கு மிஞ்சும் அல்லவா தலைவரே. இல்லா விட்டால் என் வாழ்நாள் பூராவும் என் மனசாட்சி உறுத்திக் கொண்டே இருக்கும்.”

எர்னெஸ்டோ அவனை மிகவும் கனிவுடன் பார்த்தார். இவன் இந்தச் சுயநல சமுதாயத்திற்குச் சிறிதும் பொருத்தமில்லாதவன் என்று தோன்றியது. இவ்வளவு தூரம் நல்லவனைத் தனியாக அனுப்பி ஆபத்தில் சிக்க வைக்க அவர் மனம் ஒப்பவில்லை. “போவதென்றால் தகுந்த பாதுகாப்போடு தான் அனுப்புவேன்” என்றார்.

“அப்படிக் கும்பலாகப் போனால் அவன் ஓடிப் போய் விட வாய்ப்பிருக்கிறது தலைவரே. அப்படிப் போவது வீண்”

அக்ஷய் சொன்னான். “அப்படியானால் பாதுகாப்பிற்கு நான் உன்னோடு வருகிறேன்


க்ரிஷ் உடனடியாக மறுத்தான். “நீங்கள் சொன்னதற்கே கோடி நன்றி அக்‌ஷய். ஆனால் உங்கள் பாதுகாப்பிற்கு நானும் இல்லுமினாட்டியும் உத்தரவாதம் தந்திருக்கிறோம். அதனால் உங்களை ஆபத்தில் சிக்க வைக்கும் எதையும் என்னால் யோசிக்கவும் முடியாது. அவனுக்கு உங்கள் மீதும் கடுமையான ஆத்திரம் இருக்கும். அவன் அதிக சக்தி பெற்றிருந்தால் எந்த அளவு குரூரமாய் மாறுவான் என்று சொல்ல முடியாது”

(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV


(குறிப்பு: நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சாணக்கியன் நாவல் அச்சகம் சந்திக்கும் சில பிரச்சினைகளால் தாமதமாகி வருகிறது. அடுத்த வார இறுதிக்குள் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கிறேன். )



அன்புடன்

என்.கணேசன்

அமேசான் கிண்டிலில் ’பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல்!’ வெளியீடு!

 


அன்பு வாசகர்களே,

வணக்கம்.

தங்களுடைய பேராதரவின் காரணமாக எனது ‘பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல்!’ நான்காம் பதிப்பும் வெற்றிகரமாக விற்றுத் தீர்ந்திருக்கின்றன. அமேசானில் விற்பனையில் இருக்கும் ஆறேழு பிரதிகள் தவிர இந்த அச்சுப் புத்தகங்கள் கைவசம் இல்லை.  

(இந்த நூலையும், என் மற்ற நூல்களையும் அமேசானில் ஆன்லைனில் வாங்க -

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV )

அதனால் அடுத்த பதிப்புக்குப் பதிலாக மின்னூலாக இந்த நூலை அமேசான் கிண்டிலில் வெளியிட்டு இருக்கிறோம். மின்னூலாகப் படிக்க விரும்பும் வாசகர்கள் இந்த நூலை கிண்டிலில் படிக்கலாம். லிங்க் :

https://www.amazon.com/dp/B09TRQDD1D


(குறிப்பு: நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சாணக்கியன் நாவல் அச்சகம் சந்திக்கும் சில பிரச்சினைகளால் தாமதமாகி வருகிறது. அடுத்த வார இறுதிக்குள் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கிறேன். )


அன்புடன்

என்.கணேசன்