என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, June 13, 2013

பரம(ன்) ரகசியம் – 48



ரிஷிகேசத்திற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய குருஜியை யாரும் அடையாளம் கண்டுபிடிப்பது சுலபமாக இருக்காது. ஒரு தொப்பியும் கருப்புக் கண்ணாடியும் அணிந்து இருந்தார். தன் வழக்கமான உடைகளில் இருந்தும் மாறி பைஜாமா குர்தா அணிந்திருந்தார். அவருடன் ஒரே ஒரு இளைஞனை மட்டும் அழைத்து வந்திருந்தார். 

ரிஷிகேசத்தில் அவருக்காக ஜீப் தயாராக இருந்தது. அதை அவருடன் வந்த இளைஞனே ஓட்டினான். கருப்புக் கண்ணாடியையும் தொப்பியையும் கழற்றி விட்ட குருஜி அந்த இளைஞனுக்கு மலைப்பாதையில் போகும் வழியைச் சொல்லிக் கொண்டே வந்தார். ஒரு இடத்தில் ஜீப்பை நிறுத்தி ஒற்றையடிப் பாதையில் நடக்க வேண்டி இருந்தது. இளைஞன் அவர் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டான்.

நகரம் மாறி விட்ட போதும் இது போன்ற காட்டு வழிப்பாதைகள் மாறாமல் அப்படியே இருக்கிறது என்று நினைத்துக் கொண்டார். ஒரு காலத்தில் அவர் இமயமலையில் பல இடங்களில் சுற்றி இருக்கிறார். தேடல் நிறைந்த காலங்கள் அவை. அவருக்குப் பலவற்றையும் சொல்லிக் கொடுத்த காலங்கள் அவை. நாளை என்பதைப் பற்றியே யோசிக்காமல் நிகழ்காலத்தில் முழுமையாக சஞ்சரித்த காலங்கள். எத்தனை விதமான மனிதர்கள்.... எத்தனை விதமான பாடங்கள்.....

கிட்டத்தட்ட  மூன்று மைல் தூரம் கடந்த பின் அந்த இளைஞனை அங்கேயே ஒரு பாறை மீது உட்கார்ந்திருக்கச் சொன்னார். இளைஞன் உள்ளூர நன்றி தெரிவித்து அங்கே உட்கார்ந்து கொள்ள மேலும் ஒரு பர்லாங் நடந்த குருஜி ஒரு குகையை அடைந்தார். அந்த குகையின் நுழைவாயில் ஒற்றையடிப் பாதையில் வருபவர்களுக்குத் தெரியாதபடி இருந்தது. சில அடிகள் பாதையில் இருந்து வலப்புறம் போய் நின்றால் மட்டுமே குகை இருப்பது தெரியும்.

குருஜி அந்த குகையின் உள்ளே நுழைந்தார். குகையின் உள்ளே இருட்டாக இருந்தது. பைஜாமாவில் இருந்து சிறிய டார்ச் லைட்டை எடுத்து அதன் ஒளியின் உதவியுடன் சிறிது நடந்தார். விசாலமான ஒரு பகுதியில் கிட்டத்தட்ட அவர் வயதை ஒத்த ஒரு முதியவர் புலித்தோலின் மீது பத்மாசனத்தில் கண்களை மூடி அமர்ந்திருந்தார். டார்ச் லைட்டை அணைத்த குருஜி அவர் முன்னே அமர்ந்தார்.

மறுபடியும் குகையில் இருள் சூழ்ந்தது. பத்து நிமிடங்கள் கழிந்த பின் குரல் கேட்டது. வா ராமா

அந்தப் பெயர் வைத்து குருஜியை அழைப்பவர்கள் இன்று ஓரிருவர்கள் தான் இருக்கிறார்கள். குருஜி டார்ச் விளக்கைப் போட்டு சொன்னார். “உன் தியானத்தை நான் கலைத்து விட்டேன் போல் இருக்கிறது. உதயா

நண்பனை ஞாபகம் வைத்துக் கொண்டு நாற்பது வருஷம் கழித்து வந்திருக்கிறாய்.  தியானம் கலைந்தால் பரவாயில்லை... வா, வெளியே போய் வெளிச்சத்தில் பேசலாம்.

இருவரும் வெளியே வந்தார்கள். குருஜி தன் நண்பனை அன்புடன் பார்த்தார்.  மெலிந்த மாநிற தேகம், பரட்டைத் தலை, தீட்சண்யமான கண்கள், நீண்ட தாடி, இடுப்பில் ஒரு காவி வேட்டி எனப் பழைய கோலத்திலேயே இருந்தாலும் வயதான அறிகுறி தேகத்தில் தெரியவே செய்தது.

உதயன் ஒரு மர நிழலில் உட்கார்ந்து நண்பனை அருகில் உட்காரச் சொன்னார். குருஜி உட்கார்ந்தார்.  

ஒரு நண்பனைப் பார்க்க வேண்டுமென்றால் விசேஷ மானஸ லிங்கம் உன் வாழ்க்கையில் வர வேண்டி இருக்கிறது இல்லையா?

தன் நண்பனைப் பெருமை கலந்த வியப்புடன் குருஜி பார்த்தார். ஒரு மனிதனைப் பார்த்தவுடனேயே அவன் பழைய சரித்திரத்தைப் படிக்கிற சக்தி இன்னும் உதயனுக்கு அப்படியே இருக்கிறது.....

குருஜியைப் போலவே உதயனும் பெரும் தேடலுடன் இமய மலைக்கு கேரளாவில் இருந்து வந்தவன். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே வயதும், தீவிர அறிவு வேட்கையும் இருந்தது. குருஜிக்கு ஞானத் தேடலிலும், புனித நூல்களிலும் மிக அதிக நாட்டம் இருந்தது என்றால் அபூர்வ சக்திகளில் மிக அதிக நாட்டம் உதயனுக்கு இருந்தது. சில வருடங்கள் இரண்டு மூன்று குருக்களிடம் சேர்ந்தே இருவரும் இருந்தார்கள். கடைசியாக தீஜுவாலையாக ஒளிர்விடும் கண்களை உடைய சித்தரிடம் இருவரும் ஒன்றாக வந்து சேர்ந்தார்கள்.

அந்த சித்தரின் சொந்தப் பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது. அவர் கண்களை வைத்து இமயமலைச்சாரல்களில் அவரை மற்றவர்கள் அக்னி நேத்ர சித்தர் என்றழைத்தார்கள். அவர் தன் பெயரைச் சொன்னதில்லை. பல யோகிகளும், சித்தர்களும் அவரை மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருந்தார்கள். அவர் அறியாதது எதுவுமில்லை என்கிற கருத்து எல்லோரிடமும் இருந்தது. உதயனும், குருஜியும் அவரிடம் கற்கப் போன போது அவர் ஒரு மாத காலம் அவர்களைக் கண்டு கொள்ளவே இல்லை. இருவரும் விடாப்பிடியாக அவர் பின்னாலேயே இருந்தார்கள்.

ஒரு நாள் இருவரையும் கூப்பிட்டு அவர் சொன்னார். “உங்கள் இரண்டு பேரையும் பார்த்தால் நான் சொல்வதைக் கடைசி வரை கேட்கிற லட்சணம் தெரியவில்லை. அப்படி இருக்கையில் இங்கே என் பின்னாலேயே இருந்து ஏன் காலத்தை வீணடிக்கிறீர்கள்?

குருஜி சொன்னார். உங்கள் பின்னால் இருக்கும் காலம் வீணடிக்கப்படும் காலம் என்று நாங்கள் நினைக்கவில்லை குருவே. உங்கள் நிழலில் கூடப் பாடம் கிடைக்கும் என்று வந்திருக்கிறோம் குருவே

“நான் யாருக்கும் குருவல்ல. நான் மடமோ, ஆசிரமமோ நடத்தவில்லை.என்ற சொன்ன சித்தர் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. மறுபடியும் அவர்கள் இருவரையும் கண்டு கொள்ளாமல் இருக்க ஆரம்பித்தார். மேலும் ஒரு மாதம் சென்றது. தன் அபூர்வ சக்தியால் அடிக்கடி சித்தர் காணாமல் போனாலும் போன வேலை முடிந்தவுடன் தன் இருப்பிடத்திற்கே வரும் பழக்கத்தை அவர் வைத்திருந்தார். அவர் அப்படி திரும்பி வரும் போதெல்லாம் அந்த இரண்டு இளைஞர்களும் பொறுமையாக அங்கு இருந்தார்கள்.

பின் ஒரு நாள் அவர்களை மறுபடியும் அழைத்தார். குருஜியிடம் கேட்டார். உனக்கு என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?

“நிறைய தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது குருவே. எதையென்று சொல்ல?குருஜி சொன்னார்.

“அதில் முதலில் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறாய்?

குருஜி இரண்டு மூன்று மிக அபூர்வ புத்த மத சூத்திர நூல்களைச் சொன்னார்.

உதயனிடம் சித்தர் கேட்டார். “உனக்கு என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?

“அஷ்டமஹா சித்திகள் அறிந்து கொள்ள வேண்டும்?

அறிந்து என்ன செய்யப் போகிறாய்?

“வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்?

சித்தர் புன்னகைத்தார். இருவரையும் தன்னிடம் கற்றுக் கொள்ள அனுமதித்தார். இருவரும் வேறு வேறு நேரங்களில் அவரிடம் கற்றார்கள். குருஜி மிகக் கடினமான ஞானப் பொக்கிஷங்களைக் கற்றது அந்தச் சித்தரிடம் தான். எழுத்தில் இல்லாமல் காலம் காலமாய் வாய் வழியாக மட்டுமே அறிந்து கொண்டு வரப்படும் எத்தனையோ விஷயங்களை குருஜி கற்றார். அதே போல உதயனும் அபூர்வ சக்திகளைக் கற்றார். இருவரும் குரு கற்றுத் தந்த தவநிலையில் இருந்து எத்தனையோ உயர்நிலைகளை எட்டினார்கள்.

சித்தர் ஒரு நாள் இருவரையும் கேட்டார். “இந்த உலகத்திலேயே மிகப் பெரிய குற்றம் எது தெரியுமா?

இருவரும் தங்களறிவிற்குப் பட்டதைச் சொன்னார்கள். சித்தர் சொன்னார். “சிகரத்தைத் தொடும் திறமை உள்ளவன் சராசரியாக இருந்து சாவது தான் உலகத்திலேயே அவன் செய்யக்கூடிய மிகப் பெரிய குற்றம்.

இரண்டு இளைஞர்களும் அந்த வார்த்தைகளைத் தங்கள் மனதில் செதுக்கி வைத்துக் கொண்டார்கள். இருவரும் அதன் பிறகு சராசரியாக என்றுமே இருந்ததில்லை.

சுமார் இரண்டு வருடங்கள் கழித்து ஒரு நாள் இருவரும் காட்டு வழியாகப் போய்க் கொண்டிருந்த போது ஒரு சிங்கம் மிக ஆக்ரோஷமாக அவர்களை நோக்கிப் பாய்ந்து வந்தது. தான் கற்றிருந்த சக்தியால் சிங்கத்தை உதயன் ஒரு பார்வை பார்க்க சிங்கம் ஏதோ சுவர் தடுத்தது போலப் பாதியில் அப்படியே நின்றது. பின் திரும்பி ஓடியது. குருஜி அசந்து போனார்.

இருவரும் சித்தரிடம் இந்த சம்பவத்தைச் சொன்ன போது சித்தர் உதயனைப் பாராட்டுவதற்குப் பதிலாகக் கடிந்து கொண்டார். நல்ல சுத்தமான சாத்வீக மன அலைகளில் நீங்கள் இருந்திருந்தால் அந்தச் சிங்கம் பாய்ந்தே வந்திருக்காது. தவறான மன அலைகளில் சிங்கத்தை அப்படி வரவழைத்துப் பின் தடுத்து நிறுத்த அபூர்வ சக்தியைச் செலவழிப்பதில் பெருமை என்ன இருக்கிறது?

அதற்குப் பின் உதயனின் பல பரிசோதனைகள் சித்தரை அதிருப்திப்படுத்த ஒரு நாள் உதயனை அழைத்துச் சொன்னார். “அடிப்படைகள் எல்லாம் உனக்குச் சொல்லித் தந்து விட்டேன். மீதியை நீயே உன் பயற்சியாலும் புத்தியாலும் அடைந்து விடலாம். இனி உனக்கு என்னால் எதுவும் சொல்லித் தர முடியாது. நீ போகலாம். கடைசியாக ஒன்று சொல்கிறேன் நினைவு வைத்துக் கொள். மனிதனாகப் பிறக்கும் வாய்ப்பு மிகப்பெரிய வரப்பிரசாதம். அற்ப விஷயங்களில் அதை வீணாக்கி விடாதே

இனி அவர் மனம் மாறாது என்பதைப் புரிந்து கொண்ட உதயன் அவரை வணங்கி விட்டுப் போனார். உதயன் போனது குருஜிக்குப் பெரிய இழப்பாகத் தோன்றியது. அடுத்த ஆறு மாதத்தில் சித்தர் அவரையும் அனுப்பி விட்டார். இனி நீ என்ன படித்தாலும் ஒரே உண்மையை வேறு வேறு வார்த்தைகளில் படிப்பது போலத் தான். அதனால் நீ போகலாம். கடைசியாக உனக்கு ஒன்று சொல்கிறேன். ஒரு மனிதனை நிர்ணையிப்பது அவனுக்கு என்ன தெரியும் என்பதல்ல, அவன் என்னவாக இருக்கிறான் என்பதே அவனை நிர்ணயிக்கிறது. அதை என்றும் மறந்து விடாதே”....


சொல்லித்தர சித்தரிடம் எவ்வளவோ இருந்தாலும் அரைகுறையாக நிறுத்தி விட்டுத் தங்களை அவர் அனுப்பி விட்டதாகவே நண்பர்கள் இருவரும் எண்ணினார்கள். அதனால் குருவான சித்தரிடம் இருவருக்கும் அதிருப்தி இருந்தது.  

குருஜி அங்கிருந்து வந்து விட்ட பிறகு நண்பர்கள் இருவர் பாதைகள் இணையவில்லை. உதயன் மாந்திரிகம், தந்த்ரா என்று எதெதிலோ ஆழமாக இறங்கி அபூர்வ சக்திகள் பல அடைய ஆரம்பித்தார். அடிக்கடி குருஜி தன் நண்பரைச் சென்று பார்ப்பதுண்டு. இமய மலையிலிருந்து ஒரேயடியாக குருஜி இறங்கி விட்ட பிறகு உதயனைச் சந்திக்கவில்லை. உதயன் நிரந்தரமாக ஒரு குகையில் வசித்து வந்ததால் அந்த இருப்பிடம் மட்டும் அவருக்கு நினைவு இருந்தது.....

உதயா நீ அடைய நினைத்ததை எல்லாம் அடைந்து விட்டாயா?குருஜி தன் நண்பனைக் கேட்டார்.

“உம்... எத்தனையோ நிலைகளைத் தொட்டு விட்டேன். ஆனாலும் முழுதாக திருப்தி வரவில்லை... ஒரு நிலை அடையும் போது அடுத்த நிலை கண்ணுக்குத் தெரிகிறது... பழையபடி அதைத் தேடி ஒரு பயணம் என்று வாழ்க்கை போகிறது... ராமா நம் சித்தர் குரு என்னை ஆரம்பத்தில் ஒன்று கேட்டாரே ஞாபகம் இருக்கிறதா? அஷ்டமஹா சித்திகளை அடைந்து நீ என்ன செய்யப் போகிறாய்என்று அவர் கேட்டதற்கு நான் ‘வாழ்ந்து என்ன செய்யப் போகிறேன்என்று துடுக்குத் தனமாக கேட்டேன். ஆனால் இன்று அவர் கேட்ட கேள்வி புதிய அர்த்தத்தோடு தினமும் என் மனதில் எழுகிறது

குருஜி உதயனை ஆச்சரியத்தோடு பார்த்துச் சொன்னார். “தத்துவம் படித்தது நான் என்றாலும் நீ என்னை விடத் தத்துவம் நன்றாகப் பேசுகிறாய்
உதயன் சிரித்தார். வயதும் அனுபவமும் ஒரு மனிதனை அந்த திசையில் பயணம் செய்ய வைத்து விடுகிறது என்று நினைக்கிறேன்..... அபூர்வ சக்திகள் படித்தது நான் என்றாலும் இந்த வயதில் நீ அதில் ஆர்வம் காட்டி விசேஷ மானஸ லிங்கம் பின்னால் போனது தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது

குருஜிக்கு அவர் வார்த்தைகளில் இருந்த உண்மை அப்போது தான் உறைத்தது. சிறிது நேரம் மௌனமாக இருந்து மரங்களில் வித விதமான ஒலிகளை எழுப்பிக் கொண்டிருந்த பறவைகளை வேடிக்கை பார்த்தார்.

திடீரென்று உதயன் வாய் விட்டுச் சிரித்தார். குருஜி கேட்டார். “என்ன?

நீ நம் குருவின் பாதையிலேயே குறுக்கிடுவாய் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை உதயன் சிரித்துக் கொண்டே சொன்னார்.

இதில் அவர் சம்பந்தப்பட்டிருப்பார் என்று எனக்கு எப்படித் தெரியும். அவர் இதைப் பற்றி நம்மிடம் பேசியது கூட இல்லை...

உதயன் ஏதோ யோசனையில் ஆழந்து போக குருஜி கேட்டார். “என்ன யோசிக்கிறாய்

“நம் குரு நீ இதில் சம்பந்தப்பட்டிருப்பதைப் பற்றி என்ன நினைப்பார் என்று யோசிக்கிறேன்...

“உன் ஞான திருஷ்டியில் அதையும் பார்த்து தான் சொல்லேன்

நம் குரு மாதிரி சித்தர்களின் எண்ணங்களையும், எதிர்காலத்தையும் சொல்லக் கூடிய அளவு நான் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை.... இங்க்லீஷில் Highly Classified-Top Secret” என்று சொல்வார்களே இதெல்லாம் அது போலத் தான். அதை எல்லாம் பார்க்கக் கற்றுக் கொள்ள சாதாரணமான மேல் நிலைகள் போதாது. மாந்திரிகம் பக்கமெல்லாம் போகாமல் இருந்திருந்தால் இதற்குள் அதையும் நான் கற்றிருக்கலாம் என்று தோன்றுகிறதுஏனென்றால் மாந்திரிகம் எல்லாம் அந்த சக்திக்கு நேர் எதிரானது....

“சரி அதை விடு. அந்த நாள் அந்தக் கொலைகாரன் எப்படி இறந்தான் என்பதைப் பார்த்துச் சொல் பார்க்கலாம்.....

உதயன் குருஜிக்குப் பின்னால் ஒரு வெற்றிடத்தையே சிறிது நேரம் பார்த்து விட்டுச் சொன்னார். அவன் சிவலிங்கத்தைப் பார்த்து விட்டு உள்ளே போகிறான்... அது தெரிகிறது..... அந்த பூஜை அறையே ஜெகஜ்ஜோதியாய் தெரிகிறது.... அந்த ஜோதி வெளிச்சத்தில் உள்ளே நடப்பது எதுவும் தெரியவில்லை.... அவன் பீதியுடன் வெளியே ஓடி வருகிறான். யாரோ துரத்துவது போல் ஓடி வருகிறான்... மெயின் கேட் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு திரும்பிப் பார்க்கிறான். அவன் கண்களில் மரண பயம்.... அவனால் மூச்சு விட முடியவில்லை.... நெஞ்சைப் பிடித்துக் கொள்கிறான்..... அப்படியே சாய்கிறான்.....  சாகிறான்

குருஜி கேட்டார். “அந்தப் பூஜை அறையில் அவனைப் பயமுறுத்தியது சித்தரா சிவலிங்கமா என்று கூடச் சொல்ல முடியாதா?

என்னால் ஒளி வெள்ளத்தைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை ராமா

குருஜி ஆழ்ந்த யோசனையுடன் நண்பனைப் பார்க்க, உதயன் குருஜியின் தலைக்கு மேல் வெற்றிடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். தலைக்கு மேல் டிவி வைத்திருக்கிறது போல் சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்த நண்பனை குருஜி கேட்டார். “என்ன பார்க்கிறாய்?

“நீ சிவலிங்கத்திடம் பேசிக் கொண்டிருந்ததைப் பார்க்கிறேன். உன் வாழ்க்கையில் நீ இது வரை செய்த பிரசங்கங்களிலேயே இது சிறப்பானது என்று நான் நினைக்கிறேன் ராமா. ஆனால் இதை உலகம் என்றுமே கேட்கப் போவதில்லை.... என்ன அழகாய் சொன்னாய். ”...மகாசக்தியான உனக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கப் போவதில்லை. உன் சக்திக்கு இசைவாக அணுகுபவர்கள் எவருக்கும் எதையும் நீயும் மறுக்கப் போவதில்லை. பிரச்சினை உன்னிடம் இருந்து வரப் போவதில்லை. அது எனக்குத் தெரியும். பிரச்சினை சக்திகளால் உண்டாவதில்லை. மனிதர்களால் தான் உண்டாகிறது…” சரி அதை எல்லாம் விடு. நீ உன் நண்பனைப் பார்த்து விட்டுப் போக மட்டும் இத்தனை தூரம் வரை வரவில்லை என்று தெரிகிறது. உனக்கு என்னால் என்ன ஆக வேண்டும்?

குருஜி உடனடியாகப் பதில் சொல்லவில்லை. அபூர்வ சக்திகளைத் தேடியே தன் வாழ்நாளில் பெரும்பகுதியைச் செலவு செய்திருந்த உதயனின் சாதனைகள் சாதாரணமானவை அல்ல என்பதை குருஜி அறிவார். நண்பனை மிக நீண்ட காலம் நேரில் சந்திக்கவில்லையே ஒழிய நண்பனின் புகழ் அவர் காதில் அவ்வப்போது விழுந்து கொண்டு தான் இருந்தது. முக்கியமாக மாந்திரிகத்தில் உதயனுக்கு இணையாக இக்காலத்தில் இன்னொருவர் இல்லை என்று விஷயம் தெரிந்தவர்கள் உறுதியாகச் சொன்னார்கள்....

குருஜி மெல்ல சொன்னார். “சீக்கிரமே விசேஷ மானச லிங்கத்தை வைத்து பரிசோதனைகள் ஆரம்பிக்கப் போகிறோம். அதற்கு உன் உதவி கிடைத்தால் நல்லது என்று நினைக்கிறேன்....

உதயன் தன் நண்பனைப் பார்த்து தயக்கமில்லாமல் சொன்னார். “ராமா, அந்த சிவலிங்கத்திடம் என் சக்திகளை நான் வீணாக்க விரும்பவில்லை

ஏமாற்றத்துடன் குருஜி கேட்டார். “ஏன் அப்படிச் சொல்கிறாய் உதயா?

“நீ அந்த சிவலிங்கத்தை நெருங்காமல் தள்ளியே ஏன் இருந்தாயோ அதே காரணத்திற்காகத் தான் நான் மறுக்கிறேன் ராமா. அது இறைசக்தியா, சித்தர்கள் சக்தியா, இரண்டும் சேர்ந்த கலவையா என்றெல்லாம் உன் ஆராய்ச்சிகளுக்குப் பின் தான் தெரியும் என்றாலும் இப்போதைக்கு அது மாபெரும் சக்தியாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதன் சக்தியின் அளவு கூட இன்னும் நமக்கு விளங்கவில்லை. அதோடு மோத நான் தயாராக இல்லை. வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறேன். இந்தக் கட்டத்தில் ஆழம் தெரியாமல் நான் காலை விட விரும்பவில்லை...

நண்பனின் குரலில் உறுதி இருந்தது. அவரது ஏமாற்றத்தைப் பார்த்த உதயன் மனம் இரங்கியவராகச் சொன்னார். “வேறு ஏதாவது கேள் ராமா. கண்டிப்பாகச் செய்கிறேன்...

குருஜி சொன்னார். “எங்கள் ஆராய்ச்சிகள் முடிகிற வரை நம் குரு சிவலிங்கத்தை எந்த விதத்திலும் நெருங்காதபடியும், ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள எந்த விதத்திலும் பாதிக்காதபடியுமாவது ஏதாவது செய்ய வேண்டும் உதயா.

குருவின் பாதையில் தன்னையும் குறுக்கிடச் சொல்லும் நண்பனை லேசான புன்னகையுடனும் யோசனையுடனும் பார்த்த உதயன் பின் சம்மதித்தார். வேறு ஏதாவது கேள், கண்டிப்பாகச் செய்கிறேன் என்று கொடுத்த வாக்கைப் பொய்யாக்க அவர் விரும்பவில்லை... குருவைப் பிரிந்த பின் கற்ற வித்தைகளை குருவிடம் காட்ட ஒரு வாய்ப்பும் இதன் மூலம் கிடைத்திருக்கிறது என்று நினைத்த போது அவர் புன்னகை குறும்புச் சிரிப்பாக மாறியது.


(தொடரும்)

-          என்.கணேசன்

 



Monday, June 10, 2013

கோவில் வழிபாடு ஏன்?



அறிவார்ந்த ஆன்மிகம்-8

ங்கும் இறைவன் நிறைந்திருக்கின்றான் என்று கிட்டத்தட்ட அனைத்து மதங்களுமே சொல்கின்றன. அப்படி இருக்கையில் வழிபாட்டுத்தலங்கள் சென்று வழிபட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி அறிவு சார்ந்ததாகவே இருக்கின்றது. இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் முன்னோர்கள் செய்தார்கள், அதனால் நீயும் செய்என்ற பதில் ஆன்மிகத்தை மேம்படுத்தாமல் அலட்சியத்தையே அதிகப்படுத்தும்.  எனவே அந்தக் கேள்விக்கு அறிவுபூர்வமான பதிலையே பார்ப்போம்.

சிவஞானப் பிரகாச வெண்பா இதற்கு ஒரு பதில் கூறுகிறது.
பசுவின் உடல் முழுவதும் பால் மறைந்திருந்தபோதிலும், மடியின் மூலமாகவே பால் வெளிப்படுவதுபோலவும், சூரியன் எங்கும் பரவியிருந்த போதிலும், கண்ணாடிகள் மூலமே கிரணங்கள் வெளிப்படுவதுபோலவும், நிலத்துக்கு அடியில் நீர் இருந்தபோதிலும் தோண்டிய இடத்தில் தானே நீர் தோன்றுவதுபோலவும், இறைவன் எங்கும் வியாபித்திருந்தபோதிலும் பெரியோர்கள் அமைத்த ஆலயங்களில் உள்ள மூர்த்திகளின் மூலமாகவே அவன் வெளிப்பட்டு அன்பர்களுக்கு அருள் செய்வான்.”

எங்கும் சிவனிருப்பன் ஆனாலும் ஏசற்ற
சங்கமத்தும் சற்குருவின் தன்னிடத்தும்-லிங்கத்தும்
ஆவினுடன் பெல்லாமும் ஆவரித்து நிற்கினும்பால்
பரவுமுலைக் கண்மிகுதிப் பார்.

முன்பெல்லாம் கோயில்களை எங்கே கட்ட வேண்டும் என்பதை மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுத்து தான் கட்ட ஆரம்பிப்பார்கள். இப்போது போல் கிடைத்த இடத்தில் எல்லாம் கோயில் கட்டும் பழக்கம் முன்பு இருக்கவில்லை. ஒரு புனிதத்தன்மை வாய்ந்த இடத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். பெரும்பாலும் ஊருக்கு ஒதுக்குப்புறம், மலைப்பகுதிகள், அமைதி தவழும் இடங்களில் தான் கோயில் அமையும்.   அந்தக் கோயிலில் ஸ்தாபிக்கப்படும் முக்கிய சிலைகள் சாமுத்திரிகா லட்சணங்களைக் கருத்தில் கொண்டு அமைக்கப்படும். ஸ்தாபிக்கும் போது சொல்லப்படும் மந்திரங்களும், நடத்தப்படும் ஹோமங்களும்  சிலை என்ற நிலையிலிருக்கும் கல்லில் தெய்வத்தை வரவழைக்கும் அர்த்தமுள்ள சடங்குகளே. மேலும் ஆன்மிகத்தைப் பெருக்கும் எல்லா விதமான வழிகளையும், நுட்பங்களையும் கவனத்தில் வைத்துத் தான் கோயில் கட்டுவார்கள்.

அப்படி அமைக்கப்படும் கோயிலில் மூலவர் இருக்கும் கர்ப்பக்கிரகம் சக்தி வாய்ந்த காந்த அலைகள் நிரம்பிய இடமாக இருக்கும். சில கோயில்களில் மூலவர் விக்கிரகத்திற்குக் கீழே செப்புத் தகடுகள் பதிக்கப்பட்டிருக்கும். அவை அந்த காந்த சக்தி அலைகளைப் பன்மடங்காக வெளிப்படுத்தும் தன்மை உடையவையாக இருக்கும்.

ஒரு வட்டத்தை மையப்புள்ளி இன்றி நாம் வரைய முடியாது. இறைவன் தான் நம் வாழ்வின் மையம், ஆதாரம் எல்லாம். அந்த இறை மையத்தை ஆதாரமாகக் கொண்டே நாம் இயங்குகின்றோம் என்பதை உணர்த்துவதே இந்த பிரதக்ஷிணம் என்ற வலம் வருதல். வலம் வருவதும் நாம் இடமிருந்து வலமாகத் தான் செய்கிறோம். இப்படி வலம் வருகையில் இறைவன் எப்போதும் நமக்கு வலப்பக்கமாகவே இருக்கிறான். நம் நாட்டில் வலப்பக்கத்தை மங்கலமாகக் கருதுகிறார்கள். ஆங்கிலத்தில் கூட அது right side என்றே அழைக்கப்படுகிறது. 

மேலும், கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் சக்தியின் சுற்று பாதை அது தான் என்பதற்காகவே. அதே பாதையில் பயணிப்பது சிறிது காலத்திற்காகவாவது நம்மையும் அந்த சக்தி இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளவே. எனவே கர்ப்பக்கிரகத்தை வலம் வருகையில் எல்லாம் வல்ல இறைவன் என்ற சக்தி வாய்ந்த மையத்தை வைத்தே நாம் நம் வாழ்வில் இயங்குகிறோம் அவன் அருளைப் பெறவே கோயிலிற்கு வந்துள்ளோம் என்ற பாவனை நமக்குள் இருக்க வேண்டும். அந்தப் பாவனையில் கோயிலைச் சுற்றி வரும் போது, நமக்குள்ளே பக்தி தூய்மையாக இருக்கும் போது அந்த காந்த சக்தி அலைகள் நமக்குள் நுழைய நாம் வழி செய்து கொள்கிறோம்.

அப்படி அந்த சக்தி அலைகளில் தோய்ந்து கர்ப்பக்கிரகம் முன் வந்து வணங்குகிற போது மூலவர் விக்கிரகத்திலிருந்து வெளிப்படும் தெய்வீக சக்தி அலை வீச்சினை முழுவதுமாகப் பெற்றுக் கொள்கிற அளவுக்கு நாம் தூய்மை அடைந்து இருப்போம். கர்ப்பக்கிரகமும் மூன்று புறமும் அடைபட்டு சக்திகளைத் தேக்கி வைத்துக் கொண்டிருப்பதால் வாசல் வழியாக முழு வீச்சில் வெளிப்படும் சக்திகள் தொழுதபடி முன்னால் இருபக்கமும் நிற்கும் பக்தர்கள் மீது நன்றாக விழுகின்றன. அப்படி கிடைக்கும் தெய்வீக அலைகளை உள்வாங்கிக் கொண்டால் நாம் அடையும் பலன்கள் எல்லையற்றவை.  அதனால் தான் கோயில் விளங்கக் குடி விளங்கும் என்றும் ஆலயம் தொழுவது சாலவும்  நன்று”  என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் எண்ணங்கள் வேறெங்கோ இருந்து எந்திரத்தனமாய் நாம் சுற்றினால் சுற்றியும் சக்தி இருந்தால் கூட அது உள்ளே நுழைய முடியாதபடி நாம் நம் மனக்கதவை மூடி வைத்திருக்கிறோம் என்று பொருள்.  எத்தனையோ பேர் பல கோயில்களுக்குப் போனாலும், கோயில்களிலேயே அதிக நேரம் இருந்தாலும் கூட மனத்தையும், எண்ணத்தையும் வேறெங்கோ அனுப்பி விடுவதால் தான் அந்த ஆன்மிக சக்தி அலைகளைப் பெற்று பலனடையத் தவறி விடுகிறார்கள். உடல் மட்டும் அங்கு தங்குவது போதாது. முக்கியமாக மனம் அங்கு தங்க வேண்டும். அப்போது தான்  கோயில் வழிபாட்டில் அமைதியும், நன்மைகளும் கிடைக்கும்.

முன்பு போல கோயில்கள் இன்று ஆன்மிகப் பரிபூரணத் தன்மையுடன் கட்டப்படுகின்றனவா என்பது கேள்விக்குரிய விஷயமே. படாடோபம் மற்றும் மற்ற நோக்கங்கள் பிரதானமாகப் போய் ஆன்மிகமும், பக்தியும் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை இன்று அதிகம் இருக்கிறது. தெய்வீக சக்தி சூரியனாய் ஒளி வீசிக் கொண்டு இருந்தாலும் அஞ்ஞானப் போர்வைக்குள் நம்மைக் கட்டிக் கொண்டு காரிருளில் மூடங்கிக் கிடக்கும் அவலம் அதிகம் இருக்கிறது. இந்த சூழ்நிலையிலும் கூட பக்தியுடனும், மனத்தூய்மையுடனும் கோயிலுக்குச் சென்றால் அஞ்ஞானப் போர்வை விலகி தெய்வீக அருளை முழுமையாகப் பெற முடியும்.

இப்படி முழுமையாக தெய்வீக அருளைப் பெற்றவர்கள் நாளாவட்டத்தில் தங்கள் உள்ளத்தையே கோயிலாக்கிக் கொள்ள முடியும். அப்படி திருமூலர் இறைவனை மனத்துள்ளே வைத்துப் பூசை செய்வதையே பெரிதும் வலியுறுத்துகிறார்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.

உள்ளமே சிவன் உறையும் கருவறையாகும். ஊனாகிய உடம்பே கோயிலாகும். அக்கோயிலில் வள்ளலாகிய தலைவனைச் சென்று வழிபடுவதற்கு வாய் கோபுர வாசலாகும். இதனை உணர்ந்து, தெளிந்து ஞானம் அடைவதற்குச் சீவனே சிவலிங்கம். இவ்வாறு அறிந்து வழிபடுவோர்க்கு வஞ்சனை செய்யும் ஞானேந்தியங்கள் ஐந்தும் பெரிய ஒளி பொருந்திய விளக்காகும் என்றும் திருமந்திரம் விளக்குகிறது.

ஆனால் அப்படி அகக்கோயில் அமையும் உயர்நிலை ஏற்படும் வரை தெய்வீக அருளைப் பரிபூரணமாகப் பெற புறக்கோயில்களில் முறையாகத் தொழுதல் மனிதர்களுக்கு அவசியமாகிறது.

-      என்.கணேசன்
-      நன்றி: தினத்தந்தி-ஆன்மிகம்-30-04-2013

Thursday, June 6, 2013

பரம(ன்) ரகசியம் – 47



ஸ்வர் காரில் இருந்து இறங்கியவுடன் சுற்றிலும் பார்த்தான். மிக விஸ்தாரமான இடம். சில வகுப்பறைகளில் இருந்து வேதகோஷம் கேட்டது.

சற்று முன் கேட்டைத் திறந்த வாட்ச்மேன் “அது தான் சார் ஆபிஸ் ரூம்என்று கை காட்டி விட்டுப் போனான். ஈஸ்வர் அங்கு உள்ளே போய்  வேதபாடசாலை நிர்வாகியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அவன் பெயரைக் கேட்டவுடன் அவர் எழுந்து நின்று அவனை வரவேற்றார். அவருக்குக் கிட்டத்தட்ட அறுபது வயதிருக்கும். அவர் நெற்றியில் திருநீற்றுப் பட்டை இருந்தது. குடுமி வைத்திருந்தார். முடியெல்லாம் பாதி நரைத்திருந்தது. தன்னை சிவராம ஐயர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் குரலில் ஏனோ படபடப்பு தெரிந்தது.

அவரே அவனை அழைத்துக் கொண்டு வேதபாடசாலையைச் சுற்றிக் காட்டினார். வகுப்பறைகள் மிக சுத்தமாக இருந்தன. வகுப்பறைகளை அவர்கள் கடந்த போது மாணவர்கள் அவர்களை வேடிக்கை பார்த்தார்கள்.  மாணவர்கள் தங்கும் இடங்கள், ஆசிரியர் தங்கும் இடங்கள் எல்லாம் தனித்தனியாக வசதியாக இருந்தன. பெரிய நூலகம் இருந்தது. பத்தாயிரத்திற்கும் மேல் புத்தகங்கள் இருப்பதாக அவர் பெருமையுடன் சொன்னார்.

சற்று தள்ளி இருந்த ஒரு வீட்டைக் காண்பித்து குருஜி வருடம் ஒரு முறை வந்து அங்கு தான் தங்குவார் என்று சொன்னார். இப்போதும் குருஜி அங்கு தான் இருக்கிறார் என்று சொன்னார். ஈஸ்வர் தலையாட்டினான். நூலகத்தைத்  தாண்டி நிறைய துளசிச்செடிகள், பூச்செடிகள், மரங்கள் கொண்ட தோட்டம் இருந்தது. எல்லாவற்றையும் தாண்டி ஒதுக்குப் புறமாக ஒரு பெரிய வீடு இருப்பதைக் காட்டி ஈஸ்வர் கேட்டான். அது என்ன?

சிவராம ஐயர் அவசர அவசரமாகச் சொன்னார். “அங்கு தட்டுமுட்டுச் சாமான் எல்லாம் போட்டு வைத்திருக்கிறோம். அங்கே யாரும் இல்லை....

ஈஸ்வர் தலையாட்டினான். அந்த கட்டிடத்திற்கு வெளியே இரண்டு பேர் மர வேலைகளில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்தான். ஈஸ்வர் ஒரு நிமிடம் நின்று அந்த ஒதுக்குப் புறக் கட்டிடத்தையே பார்க்க சிவராம ஐயருக்கு வயிற்றைக் கலக்கியது. நல்ல வேளையாக ஈஸ்வர் அவர் பக்கம் திரும்பிப் பார்க்காததால் அதைக் கவனிக்கவில்லை.

ஒரு ஆள் குருஜி தங்கியிருந்த வீட்டின் வாசலில் இருந்து சிவராம ஐயருக்கு சைகை காண்பித்தான். சிவராம ஐயர் ஈஸ்வரிடம் சொன்னார். “உங்களுக்கு குருஜியைப் பார்க்க விருப்பம் இருந்தால் இப்போது அவரைப் பார்த்துப் பேசலாம்....     

ஈஸ்வர் ஆவலுடன் குருஜியைச் சந்திக்கச் சென்றான். வாசல் வரை அவனை அழைத்துச் சென்ற சிவராம ஐயர் நிம்மதியாக அவனிடம் இருந்து விடை பெற்றார்.

குருஜி ஈஸ்வர் வந்திறங்கிய கணத்தில் இருந்து பார்வை எட்டிய தூரத்தில் அவன் இருக்கும் போதெல்லாம் அவனையே தான் ரகசியமாய் கண்காணித்து வந்தார். அவன் இறங்கியவுடன் செய்த முதல் காரியமே அவரைத் திகைப்பில் ஆழ்த்தியது. மண்ணைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு அவன் இறங்கக் காரணம் அவருக்குப் புரியவில்லை. அமெரிக்காவில் பிறந்து அமெரிக்காவிலேயே வளர்ந்த அவன் கோயில் மண்ணைத் தொட்டுக் கும்பிட்டாலே அது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் தான். அப்படி இருக்கையில் அவன் இங்கு வந்தவுடன் தொட்டுக் கும்பிடக் காரணம் வேதங்கள் சொல்லித் தரப்படும் இடம் என்பதாலா இல்லை.... அதற்கு மேற்பட்ட காரணத்தை அவரால் நினைக்க முடியவில்லை. முக்கியமாய் சிவலிங்கம் இங்கு இருப்பதை அவன் உணர்ந்து செய்திருக்கக் காரணமே இல்லை.. அவருடைய குருநாதரான சித்தர் சித்து விளையாட்டு ஏதேனும் செய்திருந்தால் ஒழிய.....

ஈஸ்வரைச் சுற்றி ஏதாவது ஒளிவட்டம் தெரிகிறதா என்று குருஜி பார்த்தார். எதுவும் தெரியவில்லை. அப்படி இருந்திருந்தாலும் அவருக்குத் தற்போது தெரிய வாய்ப்பில்லை. கணபதியைச் சுற்றி பார்க்க முடிந்தவரை தாக்குப் பிடித்த அந்த சக்தி அப்படியே வடிந்து விட்டது. மூன்று நாட்கள் தவமிருப்பது போல் இருந்து பெற்ற அந்த கூர்சக்தி யதார்த்த வாழ்க்கைக்கு வந்தவுடன் காணாமல் போய் விட்டது.... அதை அவர் பெரியதாக நினைக்கவில்லை. நினைக்க இப்போது எத்தனையோ முக்கிய விஷயங்கள் இருக்கின்றன!

சிவலிங்கம் இருக்கும் கட்டிடத்தை ஈஸ்வர் ஒரு நிமிடம் பார்த்து நின்றது வேறு அவருக்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. கணபதி எந்தக் காரணத்தைக் கொண்டும் வெளியே வந்து விடாமல் இருக்க அவர் ஆட்களை ஏற்பாடு செய்திருந்தாலும் கூட ஈஸ்வர் அவரைச் சந்திக்க வரும் வரை பதட்டம் அவரை விட்டு விலகவில்லை.

வணக்கம் குருஜிஎன்று கைகூப்பி வணங்கிய ஈஸ்வர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.  “நான் ஈஸ்வர். அமெரிக்காவில் விர்ஜினியா யூனிவர்சிட்டியில் சைக்காலஜி டிபார்ட்மெண்டில் இருக்கிறேன். இங்கே அப்பாவின் பூர்விக வீடு இருக்கிறது. ஒரு மாச லீவில் வந்திருக்கிறேன். அமெரிக்காவில் இருக்கும் என் நண்பன் ஒருத்தன் உங்கள் வேத பாடசாலைக்கு அடிக்கடி பணம் அனுப்புகிறவன். முடிந்தால் ஒரு தடவை பார்த்து விட்டு வரச் சொன்னான். அதனால் தான் வந்தேன். போனஸாக உங்களைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்ததில் சந்தோஷம்....

குருஜி புன்னகையுடன் அவனை உட்காரச் சொன்னார். “உங்களைப் பார்த்ததில் எனக்கும் சந்தோஷம். வெளிநாட்டுக்குப் போனவுடனேயே தாய்நாட்டு சம்பந்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அறுந்து போகிறது. ஆனால் அப்படி இல்லாமல் இன்னும் தாய்நாட்டு மண் மேல் அக்கறை இருந்து அதிலும் இது மாதிரி வேதம், ஆன்மிகம் மேல் ஆர்வம் இருந்து, முடிந்த பண உதவி செய்யும் உங்கள் நண்பர் மாதிரி ஆட்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். இங்கே உங்கள் பூர்விக வீடு எங்கே இருக்கிறது? இங்கே யார் இருக்கிறார்கள்அவர் அறியாதது போலக் கேட்டார்.
ஈஸ்வருக்கு பரமேஸ்வரனைப் பற்றிச் சொல்ல வேண்டி வந்தது.

குருஜி ஆச்சரியம் காட்டினார். “ஓ அவர் பேரனா நீங்கள்? சமீபத்தில் கூட அவர் அண்ணா கொலை செய்யப்பட்டு சிவலிங்கம் ஒன்று திருட்டுப் போனதாகக் கேள்விப்பட்டேன்....

ஈஸ்வர் ஆமென்று தலையசைத்தானே ஒழிய அதைப் பற்றி எதுவும் சொல்லப் போகவில்லை. அவனாக அதைப் பற்றி ஏதாவது பேசுவான் என்று குருஜி எதிர்பார்த்தது நடக்கவில்லை.

தயவு செய்து பன்மையில் அழைக்காதீர்கள், ஒருமையிலேயே அழையுங்கள் என்று சொன்ன ஈஸ்வர்  பிறகு அவர் எழுத்துக்களை புத்தகங்களில் படித்திருப்பதைச் சொன்னான். அவர் பேச்சுக்களை யூட்யூபில் கேட்டிருப்பதைச் சொன்னான். பதஞ்சலியின் யோகசூத்திரங்கள் பற்றி அவர் பேசிய தொடர் உரைகள் தன்னை நிறைய சிந்திக்க வைத்தது என்று சொன்னான்.

அவன் பேச்சில் ஒன்றை குருஜி கவனித்தார். அவன் புகழ்ச்சியாகப் பேசிய போதும் தேவை இல்லாமல் அபரிமிதமாகப் புகழ்ந்து விடவில்லை. பலரும் அவரைக் கண்டு பேசச் சந்தர்ப்பம் கிடைத்த மகிழ்ச்சியில் ஆஹா ஓஹோ என்று புகழ்வார்கள். புளங்காகிதம் அடைந்து பேசுவார்கள். உங்களைப் பார்த்தது நான் செய்த பெரும் பேறு என்பது போலப் பேசுவார்கள். ஈஸ்வர் வித்தியாசப்பட்டான்.

அவர்கள் பேச்சு ஆன்மிகம் பக்கம் நகர்ந்தது. குருஜி மிக அருமையாகத் தன் கருத்துக்களைச் சொன்னார். நிறைய புனித நூல்களில் இருந்து உவமைகளை சிறிய சொல் கூட மாறாமல் சொன்னார். வரலாற்று உதாரணங்களைச் சொன்னார். ஈஸ்வரால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை. மனிதரா இவர் இல்லை என்சைக்ளோபீடியாவா?.....

குருஜி விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் அவன் உளவியல் துறையில் என்னவாக இருக்கிறான் என்று விசாரித்தார். ஈஸ்வர் உதவிப் பேராசிரியராக இருப்பதாக மட்டும் ஈஸ்வர் சொன்னானே ஒழிய உலகப் புகழ்பெற்ற மனோத்த்துவக் கட்டுரைகளைத் தந்திருப்பதாகவோ, தன் துறையில் தான் பெரியவன் என்றோ சுற்றி வளைத்துக் கூடச் சொல்லவில்லை.  தன்னைப் பற்றியும் அவன் அதிகமாகப் புகழ்ந்து விடவில்லை. சிலர் அடுத்தவரைப் புகழ்வது என்றால் கஞ்சத்தனமாக இருப்பார்கள். ஆனால் தங்களை வியந்து கொள்வதில் அவர்களுக்குச் சலிப்பிருக்காது. ஈஸ்வர் இதிலும் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டான்.

இந்த வயதில் இந்த மன முதிர்ச்சி அபூர்வம் என்று குருஜி நினைத்தார்.

ஈஸ்வர் அடுத்ததாக ஆர்வத்துடன் அவர் இளமைக்காலத்தின் இமயமலை அனுபவங்களைப் பற்றிக் கேட்டான். குறிப்பாக சித்தர்களுடனான அவர் அனுபவங்களைக் கேட்டான்.

குருஜிக்கு பேச்சு தர்மசங்கடமான விஷயங்களை நோக்கித் திரும்புவது போலத் தோன்றியது. ஆனால் வேறு வழியில்லாமல் அவர் குருநாதர் தவிர மற்ற சித்தர்களைப் பற்றிப் பேசினார்.

“அதெல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள் ஈஸ்வர். ஒரு சித்தருடன் நான் ஆறேழு மாதம் கூட இருந்திருப்பேன். அவர் ஒரு வார்த்தை கூட வாய் திறந்து பேசினதில்லை. அவர் ஊமையோ என்று கூட எனக்கு சந்தேகமாக இருந்தது. ஆனால் அவர் ஊமையல்ல. அவசியம் இல்லாமல் பேசுவது வீண் என்று நினைக்கிற ரகம் அவர். அவ்வளவு தான். இன்னொரு சித்தர் இமயமலையில் மார்கழியில் கூட வெறும் கோவணத்தோடு தான் சுற்றிக் கொண்டிருப்பார். நமக்கெல்லாம் எத்தனை துணிகள் உடம்பில் சுற்றிக் கொண்டாலும் உடம்பு வெட வெடவென்று நடுங்கும். அவருக்கு அந்தப் பிரச்சினையே இல்லை..... பொதுவாக அவர்கள் மக்களோட கவனத்தைக் கவர விரும்புவதில்லை... மக்கள் கவனம் ஒரு தொந்திரவாகக் கூட அவர்கள் நினைக்கிறதுண்டு.... அதனாலேயே நகரங்களுக்கு அபூர்வமாய் போனாலும் ஏதோ ஒரு பாமரன் மாதிரி தான் தென்படுவார்கள். சில நேரங்கள்ல பொது இடங்களில் இருந்தால் கூட மற்றவர்கள் கண்ணுக்குத் தென்படாமலேயே இருந்துடறதும் உண்டு...

கண்கள் தீ மாதிரி ஜொலிக்கிற சித்தர் யாரையாவது நீங்கள் இதுவரைக்கும் பார்த்திருக்கிறீர்களா குருஜி

குருஜி ஒரு கணம் அப்படியே உறைந்து போனார். இந்த நேரடிக் கேள்வியை அவனிடமிருந்து அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் தன்னை சமாளிக்க அரை நிமிடம் தேவைப்பட்டது.

தன் கேள்வி அவரை அதிர்ச்சி அடையச் செய்து விட்டது என்று ஈஸ்வருக்குப் புரிந்தது. ஒரு கேள்விக்கு நேரம் கழித்து வரும் பதில் கூட பல உண்மைகள் சொல்லும் என்பதை உளவியலில் கரை கண்ட அவன் அறிவான். பல நேரங்களில் அப்புறமாக வரும் பதிலை விட அதற்கு முன் வரும் மௌனம் நிறைய விஷயங்களை உணர்த்தி விடும்... தெரியும் அல்லது தெரியாது என்று சொல்வதற்கு ஏன் இந்த அதிர்ச்சி?

யோசிப்பது போல பாவனை செய்த குருஜி சாதுர்யமாகப் பதில் சொன்னார். “அப்படி ஒரு சித்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. நீ ஏன் ஈஸ்வர் கேட்கிறாய்?

எங்கள் பெரிய தாத்தாவிடம் அந்த சிவலிங்கத்தைக் கொண்டு வந்து கொடுத்த சித்தர் கண்கள் அப்படி அடிக்கடி ஜொலிக்குமாம். கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்களும் பல சித்தர்களோடு பழகியவர் அல்லவா அதனால் தான் கேட்டேன்...

பேச்சு சிவலிங்கம் பற்றி வந்தவுடன் குருஜி அதைப் பிடித்துக் கொண்டார். இவன் வாயில் இருந்து அந்த சிவலிங்கம் பற்றி என்னவெல்லாம் வருகிறது என்று பார்க்க வேண்டும்.  ஈஸ்வர் அந்தக் கொலைகாரனை அனுப்பினதும், சிவலிங்கத்தைத் திருடிகிட்டு போனதும் யார் என்று தெரிந்ததா?..

“இன்னும் தெரியலை குருஜி

அந்த சிவலிங்கத்தைத் திருடிகிட்டுப் போகற அளவுக்கு அதில் என்ன இருக்கிறது ஈஸ்வர்? அது ஸ்படிக லிங்கம் மரகத லிங்கம் மாதிரியான ரகமா என்ன?

“இல்லை குருஜி. அதை சக்தி வாய்ந்த சிவலிங்கமாக சிலர் நம்பற மாதிரி தெரியுது

குருஜி ஆச்சரியப்படுவது போல நடித்தார். சக்தி வாய்ந்த சிவலிங்கமாக இருந்தால் கும்பிட்டு விட்டுப் போகலாமே, ஏன் திருடிக் கொண்டு போக வேண்டும்?

தங்களிடம் அந்த சிவலிங்கம் இருந்தால் அந்த சக்தியைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சிலர் நினைத்திருக்கலாம்...

“ஆராய்ச்சியாளனாகிய நீ என்ன சொல்கிறாய் ஈஸ்வர் அது சாத்தியமா?

ஈஸ்வர் விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் உளவியல் உதவிப் பேராசிரியர் என்று சொல்லி இருந்தானே ஒழிய ஆராய்ச்சியாளன் என்று குருஜியிடம் சொல்லவே இல்லை. அப்படி இருக்கையில் எப்படி அதைச் சொன்னார் என்ற ஆச்சரியம் ஈஸ்வருக்கு எழுந்தாலும் அவன் காண்பித்துக் கொள்ளாமல், என்ன சொல்வது என்று யோசிப்பது போல் நடித்தான். ஆனால் அவன் மூளை வேகமாய் மற்ற சில விஷயங்களையும் கவனிக்கச் சொன்னது. அவர் பொதுவாக ஆன்மிகம், வரலாறு போன்றவை பற்றிப் பேசும் போது மிக இயல்பாகவே இருந்தாலும் சிவலிங்கம் பற்றிப் பேசும் போது மட்டும் அவர் குரலிலும் கண்களிலும் ஒரு கூடுதல் ஆர்வம் இருந்தது.

அதில் தவறு ஒன்றையும் அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. சிலருக்கு சில விஷயங்களை அதிகமாகத் தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும்.... ஈஸ்வருக்கு அந்த ஆர்வத்தின் ஆழத்தைச் சோதித்துப் பார்க்கத் தோன்றியது. அதனால் சொன்னான். எனக்கென்னவோ சிவலிங்கத்தின் சக்தியை அப்படி யாரும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்று தான் தோன்றுகிறது

ஏன் ஈஸ்வர்? இறைவனின் சக்தியோ இயற்கையின் சக்தியோ என்ன பெயர் வைத்துக் கொண்டாலும் சரி அது விருப்பு வெறுப்பு இல்லாதது, அதை யாரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன். உதாரணத்திற்கு மின்சாரத்தை எடுத்துக் கொள்ளேன். யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்த ஆள் ஸ்விட்ச் போட்டால் தான் எரிவேன் என்று அது பாரபட்சம் காட்டுமா என்ன?

ஈஸ்வர் சொன்னான். அது இறைவன் சக்தியாக மட்டும் இருந்தால் நீங்கள் சொல்வது சரி. அது சித்தர்கள் தங்கள் சக்தியை எல்லாம் ஆவாகனம் செய்து வணங்கப்பட்ட சிலை என்று சொல்கிறார்கள். அந்த சித்தர்கள் எந்த மாதிரி சக்திகளை எல்லாம் எந்த நோக்கத்திற்காகவெல்லாம் ஆவாகனம் செய்து வைத்திருக்கிறார்கள் என்று யாருக்குத் தெரியும். சித்தர்கள் கூட ஒன்றிரண்டு பேர் அல்ல. பல நூறு வருஷங்களாய் பல விதமான சித்தர்கள் அப்படிச் செய்து வணங்கி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட இதெல்லாம் கம்ப்யூட்டர் ப்ரோகிராம் மாதிரி. சித்தர்கள் எந்த ப்ரோகிராம் போட்டு வைத்திருக்கிறார்களோ அப்படித் தான் அந்த சிவலிங்கம் இயங்கும் என்று நினைக்கிறேன்...

குருஜி ஒரு கணம் பேச்சிழந்து போனார். ஆழமாய் யோசித்தால் அவன் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை என்று தோன்றியது. அவன் சொன்னது ஏதோ ஒரு விதத்தில் அவரைப் பாதித்தது போல ஈஸ்வருக்குத் தோன்றியது.

குருஜி சில நொடிகளில் இயல்பு நிலைக்கு மாறினார். “நீ சொல்வதும் சரி தான் ஈஸ்வர். ஆனால் ஒரு கம்ப்யூட்டரை ஒரு ப்ரோகிராம் போட்டு ஒரு விதமாக இயக்க முடியும் என்றால் இன்னொரு ப்ரோகிராம் போட்டு வேறு விதமாகவும் இயக்க முடியும் இல்லையா?

“முடியும். ஆனால் அந்த சித்தர்கள் போட்ட ப்ரோகிராமைப் புரிந்து கொண்டால் தான் வேறு ப்ரோகிராம் எப்படிப் போடுவது என்று சிந்திக்கக் கூட முடியும். அந்த அளவுக்கு திறமை இருக்கிறவர்கள் கைகளுக்கு அந்த சிவலிங்கம் போயிருந்தால் தான் இந்த வாதம் பொருந்தும்....

இது பற்றி அதிகமாகப் பேசி விட்டோமோ என்ற சந்தேகம் குருஜிக்கு வந்தது. அவன் வாயில் இருந்து வார்த்தைகளை வரவழைப்பதற்குப் பதிலாக, தானும் பேசிக் கொண்டிருப்பது அபாயம் என்று உள்ளுணர்வு எச்சரிக்க குருஜி மெல்ல பேச்சை மாற்றினார்.

“நீ சித்தர்கள் யாரையாவது பார்த்திருக்கிறாயா ஈஸ்வர்?

“இல்லை குருஜி. நிறைய சக்தி வாய்ந்த ஆட்களைப் பார்த்திருக்கிறேன். அமெரிக்காவிலும் அது போல ஆட்கள் உண்டு. ஆனால் சித்தர்கள் அந்த சக்திகளையும் கடந்து போகக் கூடியவர்கள் அல்லவா? அப்படிப்பட்ட ஆட்கள் பார்க்கக் கிடைக்கவில்லை.

ஜவுளிக்கடையில் பார்த்தது சித்தர் என்று அவனுக்கு விளங்கவில்லையா என்று குருஜிக்கு சந்தேகம் வந்தது. கணபதி சொல்வதை வைத்துப் பார்த்தால் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் சித்தர் கண் மறைந்து போயிருக்க வேண்டும். ஈஸ்வர் அவரைச் சரியாகப் பார்க்கக் கூட நேரம் இருந்திருக்காது. கணபதியைப் பற்றிப் பேச்சு எடுக்க எந்த முகாந்திரமும் இல்லாததால் குருஜிக்கு அவன் பேச்சை எடுக்க முடியவில்லை. முடிந்திருந்தால் கணபதி பற்றி என்ன நினைக்கிறான் என்பதை அவர் தெரிந்து கொண்டிருப்பார்.

குருஜி தன் மற்ற முக்கிய சந்தேகத்தைக் கேட்டார். ஈஸ்வர் தற்செயலாய் நான் நீ வேதபாடசாலைக்குள் நுழைந்த போது இந்த மண்ணைத் தொட்டுக் கும்பிட்டதைக் கவனித்தேன். என்ன காரணம்?

ஈஸ்வர் இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஆனால் சமாளித்தான். “வேதங்கள் சொல்லித் தரப்படும் இடம் என்கிறதால் அப்படிக் கும்பிடத் தோன்றியது...

குருஜிக்கு நம்ப முடியவில்லை. இவன் ஆள் செண்டிமெண்ட் ரகமோ, வேதங்கள் மீது ஈடுபாடு உள்ள ரகமோ அல்ல. எதையோ மறைக்கிறான்.... என்னவாக இருக்கும்?

கடிகார முள் ஒன்றரை மணியைக் காட்டியது. குருஜி அவனைச் சீக்கிரம் அனுப்பி விட நினைத்தார். “சரி... ஈஸ்வர்.. உன்னை சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம்.... உன் நேரத்தை நிறைய எடுத்துக் கொண்டேன் என்று நினைக்கிறேன்...

ஈஸ்வர் எழுந்தான். “நான் சொல்ல வேண்டியதை நீங்கள் சொல்கிறீர்கள் குருஜி.....

“இன்னும் எத்தனை நாள் இந்தியாவில் இருப்பாய் ஈஸ்வர்?

இனி மூன்று வாரம் வரை இருப்பேன் குருஜி. நீங்கள் இந்த வேதபாடசாலையில் எத்தனை நாள் இருப்பீர்கள் குருஜி?

“நான்.... நான்... நாளைக்குப் போய் விடுவேன்

“இந்த வேதபாடசாலையில் தங்குகிற சமயம் ஒரு சிறப்புச் சொற்பொழிவு தருவீர்கள் என்று கேள்விப்பட்டேன். இந்த முறை இல்லையா குருஜி

இந்த தடவை இல்லை ஈஸ்வர்.

ஈஸ்வர் அவருக்கு நன்றி தெரிவித்து விட்டுக் கிளம்பினான். போகும் போது திடீரென்று ஒரு உண்மை உறைத்தது. அந்த சிவலிங்கம் ஒரு சித்தர் தந்தது  என்று மட்டும் தான் ஆரம்பத்தில் அவன் குருஜியிடம் சொன்னான். பல நூறு வருடங்களாக சித்தர்கள் பூஜித்தது போன்ற தகவல்களை அவன் சொல்லி இருக்கவில்லை. ஆனாலும் கூடக் கடைசியில் அதைச் சொல்லி சித்தர்கள் சக்திகளை எந்த நோக்கத்திற்காக அந்த சிவலிங்கத்தில் ஆவாகனம் செய்திருக்கிறார்களோ என்று அவன் வாய் தவறிச் சொன்ன போது கூட அவர் ஆச்சரியப்பட்டு விடவில்லை. முதல் முறை அறிவதாக இருந்தால் கேட்டிருக்கக் கூடிய கேள்விகள் எதையும் குருஜி கேட்கவில்லை.....

ஈஸ்வர் காரை நெருங்கும் வரை குருஜியின் பார்வை தன் மேல் இருப்பது போலவே அவனுக்கு உள்ளுணர்வு சொல்லியது. காரை நெருங்கியவுடன் திடீர் என்று திரும்பிப் பார்த்தான். ஜன்னல் வழியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்த குருஜி சடாரென்று ஜன்னலில் இருந்து விலகினார்.

வேதபாடசாலையை விட்டுக் காரில் கிளம்பும் போது ஈஸ்வருக்கு மனதில் மேலும் நிறைய கேள்விகள் இருந்தன.


(தொடரும்)


-          என்.கணேசன்

Tuesday, June 4, 2013

எதையும் புரிந்து செய்யுங்கள்!



அறிவார்ந்த ஆன்மிகம் - 7

த்தனை சுலோகங்கள் சொல்கிறோம், எத்தனை நேரம் பிரார்த்தனை செய்கிறோம், எத்தனை கோயில்களுக்கு எத்தனை தடவை போய் வருகிறோம் என்பதை வைத்தே ஆன்மிகத்தை அடையாளம் காணும் பழக்கம் நம்மில் பல பேருக்கு இருக்கிறது.  ஆனால் அப்படி அடையாளப் படுத்துவது சரியா என்பதை விளக்க சுவாமி கமலாத்மானந்தர் ஒரு குட்டிக் கதை சொல்வதுண்டு.

ஒரு காட்டில் பச்சைக்கிளிகளைப் பிடிக்கும் நோக்கத்தில் வந்த வேடன் ஒருவன் ஒரு மரத்தடியில் வலை விரித்து அதில் தானியங்களைத் தூவினான். அவன் எதிர்பார்த்தபடியே கிளிகள் பறந்து வந்து வலியில் சிக்கிக் கொண்டன. சிக்கிய பறவைகளைப் பிடிக்க வேடன் சென்றான்.

அப்போது அந்தப் பக்கம் ஒரு முனிவர் வந்தார். வலையில் சிக்கி இருந்த கிளிகளைப் பார்த்ததும் இரக்கப்பட்ட அவர் வேடனிடம் வேண்டிக் கொண்டார். வேடனே இந்தக் கிளிகளைக் கொல்லாதே

வேடன் சொன்னான். “சுவாமி எனக்கு இன்று இந்தக் கிளிகளே உணவு. இவற்றிற்குப் பதிலாக வேறு ஏதாவது தந்தால் நான் இவற்றை விட்டு விடுகிறேன்.

முனிவர் தன்னிடம் இருந்த உணவை அந்த வேடனுக்குத் தந்து அவனிடம் அந்தக் கிளிகளை விடுவிக்கச் சொன்னார். உணவைப் பெற்றுக் கொண்ட அந்த வேடனும் அந்தக் கிளிகளை விடுவித்து விட்டுச் சென்றான்.

அவன் சென்ற பின் முனிவர் “கிளிகளே! இவன் வேடன். இவன் வலை விரிப்பான், தானியங்களைத் தூவுவான். நீங்கள் பறந்து வந்து அவனது வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்என்று அந்த கிளிகளுக்குப் புத்திமதி சொல்லி விட்டுப் போனார்.

சில நாட்கள் கழித்து வேடன் மீண்டும் கிளிகளைப் பிடிக்க அந்தக் காட்டுக்குள் வலையுடன் வந்தான். அவனைப் பார்த்ததும் கிளிகள் ஒன்று சேர்ந்து கூறின. கிளிகளே! இவன் வேடன். இவன் வலை விரிப்பான், தானியங்களைத் தூவுவான். நீங்கள் பறந்து வந்து அவனது வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்

வேடனுக்கு அந்தக் கிளிகள் முன்பு நடந்ததை இன்னும் நினைவு வைத்திருப்பது ஆச்சரியமாயும் வருத்தமாயும் இருந்தது. “இனி இங்கு நான் வலை விரித்தாலும் இவை என் வலையில் சிக்காது. எனவே இங்கு என் வலையை விரித்துப் பயனில்லைஎன்று எண்ணி வேறு இடம் தேடிப் போனான்.

சில நாட்கள் கழிந்தன. மறுபடியும் அந்த வேடன் அங்கு வந்தான். அவனைப் பார்த்தவுடனேயே கிளிகள் கிளிகளே! இவன் வேடன். இவன் வலை விரிப்பான், தானியங்களைத் தூவுவான். நீங்கள் பறந்து வந்து அவனது வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்என்று கூறின.

வேடன் “முன்பு நடந்ததை இன்னுமா இந்தக் கிளிகள் நினைவு வைத்திருக்கின்றனஎன்று வியந்து கொண்டே வேறு இடம் சென்றான்.

மேலும் சில நாட்கள் கழிந்து மீண்டும் வேடன் அதே இடத்திற்கு வலை விரிக்க வந்த போதும் அவை முன்பு கூறியதையே கூறவே வேடன் திகைத்துப் போனான். என்றாலும் அவன் “இன்று எனக்கு வேட்டையாடுவதற்கு வேறெந்த மிருகமும், பறவையும் கிடைக்கவில்லை. அதனால் இந்தக் கிளிகள் சிக்கா விட்டாலும் சரி வேறு ஏதாவது பறவைகள் என் வலையில் வந்து சிக்குகிறதா எனப் பார்க்கலாம்என்று நினைத்தவனாய் அங்கேயே வலை விரித்து அதில் தானியங்களைத் தூவினான்.

வேடன் வலை விரிப்பதையும் தானியங்கள் தூவுவதையுமே பார்த்துக் கொண்டிருந்த கிளிகள் கிளிகளே! இவன் வேடன். இவன் வலை விரிப்பான், தானியங்களைத் தூவுவான். நீங்கள் பறந்து வந்து அவனது வலையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்என்று சொல்லிக் கொண்டே பறந்து வந்து வலையில் சிக்கிக் கொண்டன.

அப்போது தான் அந்த வேடனுக்கு அவை சொன்னதையே சொல்லும் கிளிகள் என்றும் முனிவர் கூறியதையே சொல்ல முடிந்த அவைகளுக்கு அதன் அர்த்தம் புரிந்திருக்கவில்லை என்று புரிந்தது.

சுவாமி கமலாத்மானந்தர் சொன்ன இந்தக் குட்டிக் கதை இன்றைய ஆன்மிக சூழலை அழகாகப் பிரதிபலிப்பதாகவே உள்ளது. அந்த முனிவர் கிளிகள் மேல் உள்ள இரக்கத்தில் சொல்லி விட்டுப் போன புத்திமதி போல மனித குலத்தைக் காப்பாற்றவும் வழிநடத்தவும் கூடிய எத்தனையோ உயர்வான விஷயங்களை பெரியோர் பலர் நமக்காகச் சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள். அந்த வகையில் தான் நமக்கு எத்தனையோ ஞானப் பொக்கிஷங்கள் கிடைத்திருக்கின்றன. வேதங்கள், உபநிஷத்துக்கள், பகவத் கீதை, திருக்கிறள், குரான், பைபிள் எல்லாம் நாம் இந்தப் பிறவிப் பெருங்கடலில் மூழ்கித் தத்தளித்து விடாமல் பாதுகாப்பாகவும், அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கடந்து செல்லத் தான் பெரும் கருணையுடன் நமக்கு கொடுக்கப் பட்டிருக்கின்றன.  

அவற்றைப் படிப்பது சுலபம். கேட்பது சுலபம். மேற்போக்காகப் புரிந்து கொள்வதும் கூட சுலபம் தான். ஆனால் அவற்றிலேயே எல்லாம் தெரிந்து விட்டதாக எண்ணி விடுவது முட்டாள்தனம். அவற்றில் சில கோட்பாடுகளை மட்டும் எடுத்துக் கொண்டு அது எந்தக் காலத்தில் எந்த நோக்கத்தில் எந்த உள்நோக்கத்தில் சொல்லப்பட்டு இருந்தது என்பதைப் புரிந்து கொள்ளாமல் எந்திரத்தனமாய் பின்பற்றுவது மடமை. அப்படிச் செய்பவர்களுக்கும் இந்தக் கதையில் சொல்லப்பட்ட கிளிகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை.

நமக்கு சொல்லப்பட்டிருக்கும் ஆன்மிக மார்க்கத்தில் கண்மூடித்தனமாகச் செல்லும் போது வெளித் தோற்றத்திற்கு அது ஞானமாகவே தோன்றலாம். வேடன் அந்தக் கிளிகள் ஒப்பித்ததைப் பார்த்து கிளிகள் முன்பு நடந்ததை நினைவு வைத்துக் கொண்டிருக்கின்றன, எச்சரிக்கையாக இருக்கின்றன என்று எண்ணியது போலத் தான் அதுவும்.

உண்மையான பரிட்சை, வலைகள் வீசப்படும் போது தான், நமக்கு நடக்கின்றது. வலியப் போய் வலையில் சிக்கிக் கொள்கிறோமா, சிக்காமல் எச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்கிறோமா என்பது தான் நமக்கு நடக்கும் பரிட்சை. படித்ததும், கேட்டதும், புரிந்ததும் எந்த அளவில் இருந்திருக்கிறது என்பது அந்தப் பரிட்சையில் தான் தெரியும்.

நமக்குள்ளே சக்கையை சேகரித்துக் வைத்துக் கொண்டிருக்கிறோமா, ஆன்மிக சாரத்தைச் சேகரித்து வைத்துக் கொண்டிருக்கிறோமா என்பது, எதையும் புரிந்து கொண்டு செய்கிறோமா, புரிந்து கொள்ளாமல் எந்திரத்தனமாகச் செய்கிறோமா என்பதில் இருந்து தான் வெளிப்படும்.  

படிப்பது புனித நூல்களே என்றாலும், சொல்வது உயர்வான சுலோகங்களே என்றாலும், அதில் மனம் தங்கவில்லையானால் அது எந்தப் பயனையும் தராது. அதன் உண்மையான பொருள் புரிய வேண்டும், புரிந்ததில் மனம் தங்க வேண்டும். அது குறித்து சிந்திக்க வேண்டும். அப்போது தான் சாரத்தைப் பெறுகிறோம் என்று பொருள். அது தான் நம் மனத்தைப் பண்படுத்தும்.

கோயில்களுக்குச் செல்லும் போதும் மனதில் இறை சிந்தனை இல்லாவிட்டால் அதுவும் கடைவீதிக்குச் செல்வது போன்ற மற்ற செயல்களின் கணக்கிலேயே சேரும். மனதில் பக்தியும், சிரத்தையும் இருந்தால் மட்டுமே இறையருள் பெற முடியும்.

அதே போல் மற்ற ஆன்மிகச் செயல்களையும் புரிந்து கொண்டு முழு மனதோடு லயித்துச் செய்யுங்கள். அப்போது தான் அவை எந்த நோக்கத்திற்காக உருவாக்கப் பட்டிருக்கின்றனவோ அதன் பலன்களை அடைய முடியும். அப்படிப் புரிந்து கொள்ளாமல் எந்திரத் தனமாக  பெயரளவில் செய்யப்படும் செயல்கள் வெளிப்பார்வைக்கு ஆன்மிகமாகத் தெரிந்தாலும் அவை நாம் போகும் வழியில் துணைக்கு வாரா!

-          என்.கணேசன்   
-          நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 23-04-2013