என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, March 23, 2026

யோகி 148

 

ஷ்ரவனை அன்றிரவு பாண்டியன் இருப்பிடத்திற்கு வரும்படி கண்ணன் மாலையிலேயே சொல்லி விட்டுப் போனார். இதுவரையில் அவர்களுக்கே தெரிந்த விஷயங்களை வைத்துச் சொல்லி அவன் சமாளித்தாகி விட்டது. அவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதித்தாகி விட்டது. இன்று என்ன சொல்லப் போகிறான் என்பது அவனுக்கே நிச்சயமில்லை.

 

அன்றிரவு அங்கு அவன் போன போது டாக்டர் சுகுமாரனும் ஏற்கெனவே வந்திருந்தார். பாண்டியனோடு பேசிக் கொண்டிருந்த அவர் அவனை உற்சாகமாக வரவேற்றார். பாண்டியனும் அவனை நட்புடன் பார்த்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, முகூர்த்த நேரத்திற்கு சுமார் 20 நிமிடம் முன்பே ஷ்ரவன் கண்களை மூடி ஆரம்பித்தான்.

 

மனதார பிரார்த்தனை செய்து விட்டு ஷ்ரவன் மந்திர ஜபத்தைச் சொல்ல ஆரம்பித்து சிறிது நேரத்தில் மந்திரத்தோடு அவன் ஐக்கியமானான். அவன் முகத்தில் சாந்தி தெரிய ஆரம்பித்தது. அவர்கள் இருவரும் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அலாரம் அடித்து அவனை மந்திரத்தில் இருந்து பிரித்தது.

 

அவன் கண்களைத் திறக்கவில்லை. அவன் ஏதாவது வழி காட்டச் சொல்லி ஓநாயை எண்ணி வேண்டினான். ஆனால் அன்று ஓநாய் அவன் காட்சிக்குக் கிடைக்கவில்லை. இந்த மேலான சக்திகள் அவனைக் குழப்பின. எதிர்பாராத சமயங்களில் காணக் கிடைக்கின்றன. அவனுக்கு ஏதாவது வழிகாட்டுகின்றன. ஆனால் திடீரென்று வருவது போலவே திடீரென்று அவை வருவது நின்றும் போகின்றன. அதற்கான காரணங்கள் மனித அறிவுக்கு எட்டுவதில்லை.

 

என்ன சொல்வது என்று ஷ்ரவன் யோசித்தான். பாண்டியன் எப்போதும் அமர்ந்திருக்கும் அறையைத் தாண்டி ஒரு அறை இருக்கிறது. அந்த அறைக்கு பாண்டியனைத் தவிர யாரும் உள்ளே போவதில்லை. போவதென்றால் பாண்டியனின் மேசையில் ஏறி இறங்கித் தான் அந்த அறைக்கு ஒருவர் போக முடியும். அப்படி வழியை அடைத்து தான் பாண்டியனின் மேசை இருந்தது. மறுபக்கத்தில் இருப்பதால் பாண்டியன் அந்த அறைக்குத் தாராளமாகப் போக முடியும் என்றாலும், பாண்டியனே மற்றவர்கள் இருக்கையில் அதற்குள் போவதில்லை. அந்த அறைக்குள் என்ன இருக்கின்றது என்று ஷ்ரவனுக்குத் தெரியவில்லை. ஒரு முறை அவன் அவரைச் சந்திக்க அறைக்கு வந்த போது அவர் உள் அறையில் இருந்தார்.   அவருக்காக ஷ்ரவன் காத்திருந்த போது உள் அறையில் பீரோவைச் சாத்திப் பூட்டும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் பாண்டியன் வெளியே வந்தார். அது ஷ்ரவனுக்கு நினைவு வந்தது.

 

ஷ்ரவன் ஆபத்தான விளையாட்டு என்றாலும் உள்ளுணர்வால் உந்தப்பட்டு ஆரம்பித்தான். “ஓநாய் தெரிகிறது.... அது வாசலில் தான் இருக்கிறது....    அதன் கண்களில் தீ எரிகிறது.... அது என்னையே கோபத்தோடு பார்ப்பது போலிருக்கிறது...” ஷ்ரவன் கண்களை மூடிக் கொண்டே முகத்தைத் திருப்பிக் கொண்டான்..

 

இருவரும் படபடப்புடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் மெல்ல எழுந்து ஜன்னல் வழியே வெளியே பார்த்தார்.  ஓநாய் தெரியவில்லை. கையிலிருக்கும் தாயத்தைக் கழட்டினால் அது தெரிய வரலாம்.

 

சுகுமாரன் அவரிடம் சைகையால் கேட்டார். “ஓநாய் தெரிகிறதா?” பாண்டியன் இல்லையென்று தலையசைத்தார். இருவரும் ஷ்ரவனையே அதிக படபடப்புடன் பார்க்க ஆரம்பித்தார்கள்.

 

ஷ்ரவன் லேசான நடுக்கத்துடன் சொன்னான். “அது…. அது….. ஐயையோ அது பாய்ந்து உள்ளே வருகிறது…”

 

டாக்டர் சுகுமாரன் பாண்டியனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

 

ஷ்ரவன் தொடர்ந்து சொன்னான். “… உங்கள் மேசையின் மீது தாவுகிறதுஅப்படியே அங்கிருந்து குதித்து உங்கள் உள் அறைக்குப் போகிறது…. அங்கே பூட்டியிருக்கும் பீரோவுக்குள் ஊடுருவி உள்ளே போய் விட்டது…..”

 

பாண்டியனின் முகத்தில் திகைப்பு தெரிந்தது. அவருடைய உள் அறைக்கு ஷ்ரவன் வந்ததில்லை. டாக்டர் சுகுமாரனே கூட வந்ததில்லை. அதனால் அறைக்குள் என்ன இருக்கிறது என்பது கூட ஷ்ரவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

 

பாண்டியன் மெல்ல கேட்டார். “அப்புறம் என்ன தெரிகிறது?”

 

ஷ்ரவன் மிக உன்னிப்பாகப் பார்ப்பது போல் பார்த்து பின் ஏமாற்றத்தைக் காட்டிக் கொண்டு ஷ்ரவன் சொன்னான். “எல்லாம் மறைந்து விட்டது….. இப்போது எதுவுமே தெரியவில்லை…”

 

ஷ்ரவன் கண்விழித்தான். அவன் பார்வை சற்று திகிலோடு அந்த உள் அறை வாசலுக்குப் போனது. அதைக் கவனித்த சுகுமாரன் பாண்டியனின் உள் அறையைப் பீதியுடன் பார்த்தார். “உள்ளே போனதை வெளியே துரத்த என்ன வழி?”

 

ஷ்ரவன் மெல்ல சொன்னான். “அந்தக் காட்சி தெரிந்தபடியே ஆகியிருக்கும்கிறது நிச்சயமில்லை. அன்னைக்கு இந்த வாசல்ல குழி தோண்டற வேலையை ஓநாய் ஆரம்பிச்சதாய் நான் காட்சி பார்த்தேன். ஆனால் நேர்ல வந்தப்ப குழியெல்லாம் இருக்கலை. இந்தக் காட்சிகள்  வரப்போகிற நிகழ்வு எதையாவது சூட்சுமமாய் சொல்றதாய் இருக்கலாம்.”

 

பாண்டியன் யோசிக்க, சுகுமாரன் சொன்னார். “எதுக்கும் பீரோவுக்குள்ளே பார்த்துடறது நல்லது

 

ஷ்ரவன் பாண்டியனிடம் சொன்னான். “ஆமாம்ஜி. வேணும்னா போய்ப் பார்த்துக்கோங்க

 

பாண்டியன் மேசையில் ஏறி அமர்ந்து அந்தப் பக்கம் கால் வைத்துத் தாண்டினார். சுகுமாரன் சொன்னார். “நீங்கள் போய்ப் பார்த்தால் உங்களுக்கு என்ன தெரியப் போகுது? இது இருக்கே.” என்று தாயத்தைக் காட்டினார்.

 

ஷ்ரவன் அமைதியாய் இருந்தான். அவனையே அவர்கள் பார்க்கச் சொல்கிற வாய்ப்புக்காகத் தான் அவன் காத்திருந்தான். ஆனால் அதை அவர்களாகச் சொல்ல வேண்டும். அங்கு போய்ப் பார்க்க அவன் ஆர்வம் காட்டுவதாய் அவர்கள் நினைத்துவிடக்கூடாது. பாண்டியன் சற்றுத் தயங்கினார். தேவையில்லாமல் யாரையும் அவர் அந்த அறைக்குள் அனுமதிப்பதில்லை. யோசித்த போது ஒரு பீரோவை அவனுக்குத் திறந்து காண்பிப்பதால் எந்தப் பிரச்சினையும் வந்துவிடாது என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது.

 

பாண்டியன் ஷ்ரவனிடம் சொன்னார். “நீங்களே வந்து பாருங்களேன்.”

 

ஷ்ரவன் தயக்கத்தோடு மேசையைத் தாண்ட, டாக்டர் சுகுமாரனும் அப்படியே தாண்டினார். மூவரும் அந்த உள் அறைக்குள் நுழைந்தார்கள்.

 

அந்த உள் அறை பெரியதாக இருந்தது. அங்கு பெரிய காட்ரேஜ் பீரோக்கள் ஏழு இருந்தன. பாண்டியன் ஷ்ரவனிடம் கேட்டார். “எந்த பீரோவுக்குள்ளே போனதைப் பார்த்தீர்கள்?”

 

ஷ்ரவன் சும்மா ஒரு பீரோவைக் காட்டினான். “இதற்குள்ளே போனதைத் தான் நான் பார்த்தேன்ஜி

 

பாண்டியன் ஒரு பீரோவின் மேலே உள்ளே தள்ளி மறைவாய் வைத்திருந்த சாவிக் கொத்தை எடுத்து ஷ்ரவன் காட்டிய பீரோவைத் திறந்தார். உள்ளே எல்லா அடுக்குகளிலும் வீடு மற்றும் நிலப்பத்திரங்கள் போல் தெரிந்தவை அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

 

பாண்டியனும் சுகுமாரனும் அவனையே பார்ப்பதைக் கவனித்த ஷ்ரவன் சற்று நெருங்கிப் போய் பார்த்தான். அவை சொத்துப் பத்திரங்கள் தான் என்பது அவனுக்கு உறுதியானது. ஷ்ரவன் இத்தனை பத்திரங்களா என்று திகைத்தாலும் அதை முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை. மற்ற பீரோக்களிலும் இப்படிப் பத்திரங்களே இருக்குமா, வேறு எதாவது இருக்குமா?

 

உள்ளே ஓநாய் தெரியவில்லைஎன்றான்.  உண்மையில் ஓநாய் உள்ளே இருக்கக்கூடிய அளவு காலி இடம் பீரோவில் இல்லை.  

 

பாண்டியன் அவனிடம் கேட்டார். “அப்படியானால் நீங்கள் பார்த்த காட்சிக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும் ஷ்ரவனானந்தா?”

 

ஷ்ரவன் சொன்னான். “இந்த பீரோவில் இருப்பவை சம்பந்தமான விஷயங்களில் எதாவது பிரச்சினை ஏற்படுத்த அது முயற்சி செய்யலாம் என்று நான் நினைக்கிறேன்…”

 

பாண்டியன் யோசனையுடன் தலையசைத்தார். அதற்கு மேல் அவர் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அந்த அறையிலிருந்து மூவரும் வெளியே வந்தார்கள்.

 

தேவானந்தகிரி அனுப்பிய ஆள் யோகாலயத்துக்கு மதியம் வந்து சேர்ந்தான். அவனுக்குத் திரும்பிச் செல்ல மாலையில் விமானத்தில் டிக்கட் முன்பதிவு ஆகியிருந்தது. அதனால் அவனுக்கு அங்கு அதிக நேரம் தங்கும் உத்தேசமில்லை. அப்படித் தங்க அவனுக்குக் காரணமும் இருக்கவில்லை. அவன் தெரிவிக்க வேண்டிய தகவல் சுருக்கமானது. அதற்கு ஐந்து நிமிடத்திற்கு மேல் அவசியமில்லை.

 

அவன் மனப்பாடம் செய்து வந்ததை பாண்டியனிடம் ஒப்பித்தான். “எதிரி உங்கள் யோகாலயத்தில் தான் இப்போது இருப்பதாக சுவாமிஜி சொல்லி அனுப்பியிருக்கிறார். அவர் வைத்துப் பார்த்த பிரஷ்னம் மூலம் அதை அறிந்திருக்கிறார். விசேஷ சக்திகள் உள்ளதாகச் சொல்லிக் கொண்டு உங்களிடம் வந்திருக்கும் துறவியே உங்கள் எதிரியாக இருக்க வேண்டும் என்று அவர் நம்புகிறார்.  இதை போனில் தெரிவிப்பது கூட ஆபத்து என்று  அவர் எண்ணியதால் தான், இதை நேரடியாகத் தெரிவிக்க என்னை இங்கே அனுப்பியிருக்கிறார்.”

 

பாண்டியன் தலையில் இடி விழுந்ததைப் போல் உணர்ந்தார்.

 

(தொடரும்)

என்.கணேசன்




Thursday, March 19, 2026

சதுரங்கம் 10


 ஞானமூர்த்தி தன் முன் வந்தமர்ந்த மகனைப் பெருமிதத்துடன் பார்த்தபடி சொன்னார். “ரொம்ப நல்லா எழுதியிருக்கே அர்ஜுன். சமீப காலமாய் சமூகத்தில் பெருகி வரும் மோசடிகளையும், குற்றங்களையும் விரிவாய் எழுதி, அதற்கான காரணங்கள் என்னென்னன்னு தெளிவாய் விவரிச்சிருக்கே. மக்களிடம் இருக்கும் பேராசை, வேகமாய் ஆதாயங்களைப் பெறத் துடிக்கும் அவசரம், நாட்டு நடப்புகளைக் கவனிக்கத் தவறுவது, மோசடிக்கான வாய்ப்புகள் பற்றிய அடிப்படை அறிவு இல்லாததுன்னு வரிசையாய் பட்டியல் போட்டு ரொம்ப அருமையாய்ச் சொல்லியிருக்கே. அதிலிருந்து எப்படி தற்காத்துக்கறதுன்னும் அதே ஆழத்துல சொல்லியிருக்கிறது விசேஷம். நிறைய பேர் பிரச்சினை என்னன்னு அழகாய் சுட்டிக்காட்டிடுவாங்க. ஆனால் தீர்வு என்னன்னு தெளிவாய்ச் சொல்ல மாட்டாங்க. அது பொத்தாம் பொதுவாய் இருக்கும்.  நீ அந்தத் தவறைச் செய்யல.”

 

அவர் மகனுக்காகக் கூட பொய்யான இதமளிக்கும் வார்த்தைகளைச் சொல்லக்கூடியவர் அல்ல என்பதால் அவர் சொன்னது அர்ஜுனுக்கு பரமதிருப்தியாக இருந்தது. அவர் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே நித்யாவும் அங்கு வந்தமர்ந்து கொண்டாள். அவள் முகத்திலும் பெருமிதம் தெரிந்தது.

 

பானுமதி சற்று தள்ளியிருந்தாலும் அவளும் கணவர் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள். நித்யா அங்கு சென்று அமர்ந்ததையும், அவள் முகத்தில் பெருமிதம் தெரிந்ததையும் கூட அவள் கவனித்தாள்.   சற்று முன் அண்ணனிடம்நீ அம்மா மாதிரியே தனியொரு கூட்டுக்குள்ளே இருக்கிறாய். அது தப்புண்ணாஎன்று தனிமையில் சுட்டிக் காட்டியிருந்தாலும் நித்யா வேறு யார் முன்பும் என்றைக்கும் அண்ணனை விட்டுக் கொடுத்ததில்லை. கணவர், மகன், மகள் மூவரும் நெருக்கமாக அமர்ந்து இருக்கும் அந்தக் காட்சியைப் பார்க்கையில் ஒரு ஆதர்ச குடும்பமாகவே பானுமதிக்குத் தெரிந்தது. அவள் தான் ஒரு அபசுரமாய், அன்னியமாய் அதில் ஒட்ட முடியாதவளாக, தள்ளியே இருக்கிறாள்...

 

அர்ஜுன் தந்தையிடம் கேட்டான். “இதுல எதையாவது சேர்த்திருக்கலாம்னு தோணுதாப்பா?”

 

ஞானமூர்த்தி ஒரு கணம் யோசித்து விட்டுச் சொன்னார். “பெரிய அளவுல மக்கள் ஏமாறுவதற்குக் காரணம் மற்ற ஏமாளிகளும் தான். இத்தனை பேர் இதைச் செய்யறாங்களே, ஆதரிக்கிறாங்களே, காரணமில்லாமலா அப்படிச் செய்வாங்கன்னு நினைக்கிற மனோபாவம் மக்களுக்கு அதிகம் உண்டு.  உதாரணத்துக்கு, அதிக வட்டி தர்றோம், பெரிய அளவுல ஆதாயம் தர்றோம்னு ஏமாத்தறதையே எடுத்துக்கோ. ஆரம்பத்துல அதுல முதலீடு செய்யாதவன் கூட கொஞ்ச காலம் கழிச்சு, தன்னைச் சுற்றிலும் நிறைய பேர் அதுல முதலீடு செய்யறதையும், அவங்க அதிக வட்டி வாங்கி அனுபவிக்கறதையும் பார்த்துட்டு மனம் மாறிடறான். தானும் அதில் முதலீடு செய்ய ஆரம்பிச்சடறான்.  ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ அதிக வட்டி கொடுத்துட்டு, நிறைய பேர் கிட்ட பணம் வாங்கிட்டு, திடீர்னு ஒரு நாள் தலைமறைவாகிடறது காலம் காலமாய் நடந்துட்டு தான் வருது. ஆனாலும் திரும்பத் திரும்ப மக்கள் ஏமாறுவதற்கு அவங்களோட ஆட்டுமந்தை புத்தியும் கூட ஒரு காரணம் தான்.  சீட்டுக் கம்பெனி உதாரணத்தை நீ சொல்லியிருக்கிற இடத்தில் இந்தக் காரணத்தையும் கூட சேர்த்திருக்கலாம்…”

 

நித்யாவும் அர்ஜுனும் தந்தையை வியப்புடன் பார்த்தார்கள். எதையும் வேகமாகவும் ஆழமாகவும் அலச முடிந்த அவருடைய பேரறிவு அவர்களை இப்படி அடிக்கடி வியப்பில் ஆழ்த்தும். அவர்கள் அவரை அப்படிப் பார்ப்பதையும் பானுமதி கவனித்தாள். தந்தையையாவது அவர்கள் அப்படிப் பார்க்க முடிகிறதே என்று அவள் நினைத்தாள். அவளைப் போல் அவளுடைய குழந்தைகள் முட்டாள்களாக இல்லை. அது அவளுக்குத் திருப்தியாக இருந்தது. அவளைப் போல் அவர்கள் ஆக வேண்டாம்.   

 

அர்ஜுன் சொன்னான். “அப்பா, தாத்தாவோட நூற்றாண்டு விழாவை ஒட்டி, அவரைப் பற்றி ஒரு சிறப்புக் கட்டுரை எங்க பத்திரிக்கைல எழுத தேவசகாயம் சார் சொல்லியிருக்கார். குடும்பத்து ஆளுங்க எல்லார் கிட்டயும் பேட்டி எடுத்தும் அதுல சேர்க்கச் சொல்லியிருக்கார். அதனால பேட்டி எடுக்கறத உங்க கிட்ட இருந்து ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அப்புறம் பாட்டி, சித்தப்பா, அம்மா கிட்ட பேட்டி எடுக்கலாம்னு இருக்கேன்…”

 

சொல்லி விட்டு அவன் தள்ளியிருந்த தாயைப் பார்த்தான். பானுமதி மெள்ள சமையலறைப் பக்கம் நகர்ந்தாள். நித்யா அண்ணன் அம்மாவைப் பார்த்ததையும், அம்மா சமையலறைக்குச் சென்று விட்டதையும் கவனித்தாள்.

 

தாத்தா இருக்கறப்ப சித்தப்பாக்குக் கல்யாணம் ஆகியிருந்துச்சாப்பா. ஆகியிருந்தா சித்தியையும் பேட்டி எடுக்கலாம்…” அர்ஜுன் சொன்னான்.

 

ஞானமூர்த்தி சொன்னார். “இல்லை. அவர் இறந்தப்பறம் ராஜாராம் தான் கல்யாணம் செய்துகிட்டான்.”

 

சரி. அப்படின்னா நீங்க நாலு பேர். உங்க கிட்டே எப்போ பேட்டியை ஆரம்பிக்கலாம்?”

 

எப்ப வேணும்னாலும் ஆரம்பிக்கலாம். அவரைப் பற்றிச் சொல்ல நான் தயார் செய்துக்கணும்னே இல்லை. மனசெல்லாம் அவர் இப்பவும் நிறைஞ்சு இருக்கார். அவர் சம்பந்தமான எதையும் என் வாழ்க்கைல நான் நினைவுபடுத்திக்கணும்னே இல்லை. மறந்தாத் தானே நினைவுபடுத்திக்கணும். என்னால எப்பவும் அவர் சம்பந்தமான எதையும் மறக்க முடியாது. ரொம்ப பெரிய மனுஷன்டா அவர். அவர் மாதிரி இன்னொரு ஆளை யாருமே பார்க்க முடியாதுடா.” சொல்லும் போதே ஞானமூர்த்தியின் குரல் தழுதழுத்தது.

 

அர்ஜுனுக்கு தந்தையைச் சீண்டிப் பார்க்கத் தோன்றியது. அவன் அவரிடம் புன்னகையுடன் கிண்டலாகச் சொன்னான். “ஆமா எல்லாருக்கும் அவங்கவங்க அப்பா உசத்தி தான். அவங்களால அவரை மாதிரி இன்னொரு ஆளைப் பார்க்க முடியாது தான்.” 

 

நித்யாவும் புன்னகைத்தாள். ஞானமூர்த்தியும் பிள்ளைகளுடன் சேர்ந்து கொண்டு புன்னகைத்தாலும் அவர் கண்கள் லேசாக ஈரமாகின. ஒரு கணம் மகனையே யோசனையுடன் பார்த்து விட்டுச் சொன்னார்.

 

உனக்கு ஒரு உண்மை தெரியுமா அர்ஜுன். உண்மையில் நான் அவர் பெற்ற மகன் இல்லை.”

 

அர்ஜுன், நித்யா இருவரும் அதிர்ச்சியுடன் தந்தையைப் பார்த்தார்கள்.

 

ஞானமூர்த்தி சொன்னார். “இப்ப நான் சொல்றது நமக்குள்ளேயே இருக்கட்டும். என்னைப் பெற்றவங்க அவரோட ஊரைச் சேர்ந்தவங்க. ஏதோ தூரத்து உறவும் கூட. என் ஐந்தாவது வயசுல நான் என்னைப் பெற்றவங்களை ஒரு விபத்துல இழந்துட்டேன். அனாதையா நிர்க்கதியா நின்ன என்னை அவர் கூட்டிகிட்டு வந்துட்டார். அனாதைப் பையனாவே அவர் என்னை வளர்த்து இருக்கலாம். வீட்டுல சில எடுபிடி வேலைகள் செய்ய வெச்சிருக்கலாம். அவருக்கு ராஜாராம் அப்ப தான் பிறந்திருந்தான். அதனால குழந்தைகள் இல்லைங்கற நிலைமையும் இல்லை. ஆனா அந்தப் பெரிய மனுஷன் என்னைத் தத்து எடுத்துகிட்டார்…..” சொல்லச் சொல்ல அவர் குரல் உடைந்தது.

 

ஒரு நிமிடம் மௌனமாக இருந்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஞானமூர்த்தி தொடர்ந்து சொன்னார். அந்த நாள்ல இருந்து அவர் நான் அவரோட தத்துப் பிள்ளைன்னு யார் கிட்டயும் சொன்னது கூட இல்லை. விஷயம் தெரிஞ்ச ஒருசிலரைக் கூட அதுபற்றி வெளியில் சொல்ல அவர் அனுமதிச்சதில்லை. அவரைப் பொருத்த வரைக்கும் அவருக்கு நான் தான் அவரோட மூத்த பிள்ளை. ராஜாராம் அவரோட ரெண்டாவது பிள்ளை. அப்படித் தான் அவர் நினைச்சார். அப்படித்தான் அவர் மத்தவங்க கிட்டயும் சொன்னார். அதனால உலகமும் எங்களை அப்படி தான் நினைச்சுகிட்டு இருக்கு. அவர் இறந்த பிறகும் அவருக்கு கொள்ளி கூட நான் தான் வெச்சேன்…. அப்படி அன்பு காட்டி வளர்க்க நான் அவருக்கு என்ன செஞ்சேன்னு எனக்குத் தெரியலை. எனக்கு என்னைப் பெத்தவங்க முகம் கூட ஞாபகம் இல்லை. என் அப்பா அவர் தான்….”

 

அவரையும் மீறி அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. அர்ஜுனும், நித்யாவும் கூடக் கண்கலங்கினார்கள். அர்ஜுனுக்கு இது வரை புரியாத சில விஷயங்கள் இப்போது தான் மெள்ளப் புரிய ஆரம்பித்தன.


 (தொடரும்)

என்.கணேசன்



Monday, March 16, 2026

யோகி 147

 

தேவானந்தகிரி நீண்ட யோசனைக்குப் பின் இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள முடிவு செய்தார். அவர் இது போன்ற விஷயங்களைக் கண்டுபிடிக்கப் போலீஸுக்குப் போவதில்லை. அவருடையபிரஷ்னம்அவருக்குக் குற்றவாளியைக் காட்டிக் கொடுத்து விடும். அவர் காலில் காயமான நேரத்தை உத்தேசமாக மனதில் குறித்துக் கொண்ட அவர், அதை வைத்து சில கணக்குகளைப் போட்டார். பின் யோகாலயத்திலிருந்து பாண்டியன் அவரை அலைபேசியில் அழைத்து அங்கு வரச்சொல்லி வேண்டுகோள் விடுத்த நேரத்தை, அலைபேசியில் பார்த்து, குறித்துக் கொண்டார். பின் தன் ஐந்து வயதுப் பேத்தியை அவர் அழைத்தார். சோளிகள் நிறைந்திருந்த டப்பாவை அவளிடம் நீட்டி அதிலிருந்து ஒரு கைப்பிடி சோளிகள் எடுத்துத் தரச் சொன்னார். அவள் எடுத்த சோளிகளை மேசையில் வைக்கச் சொன்னார்.

 

அவளை அனுப்பி விட்டு, மேசையில் இருந்த சோளிகளை எண்ணியவர் சற்று முன் எடுத்த இரண்டு நேரக்குறிப்புக் கணக்குகளையும் எடுத்துக் கொண்டு மேலும் சில கணக்குகள் போட்டார். முடிவில் இதன் பின்னணியில் யோகாலயத்தின் எதிரி இருப்பதாய் பிரஷ்னம் தெரிவித்தது. இதுவரை நடந்ததை எல்லாம் யோசித்துப் பார்த்தார். யோகாலயத்திலிருந்து பாண்டியன் சொன்னதை எல்லாம் நினைவுபடுத்திப் பார்த்த போது அவர் சொல்லியிருந்த விசேஷ சக்திகள் கொண்ட புதிய துறவி தேவானந்தகிரியின் சந்தேகத்தைக் கிளப்பினான். அவனைப் பற்றி மேலும் தீவிரமாக அவர் யோசித்துக் கொண்டு இருந்த போது பல்லி சத்தமிட்டது.

 

சற்று தள்ளி விளையாடிக் கொண்டிருந்த அவரது ஐந்து வயதுப் பேத்தி, அதே நேரத்தில், ஒரு பெரிய வட்டத்தை சாக்பீசில் வரைந்து வெளிப்பக்கத்திலிருந்து வட்டத்திற்குள்ளே குதித்தாள். திகைத்த தேவானந்தகிரி கடிகாரத்தைப் பார்த்து நேரத்தைக் குறித்துக் கொண்டு பஞ்சாங்கத்தைப் பிரித்தார். சிறிது நேரத்தில் அவரது சந்தேகம் உறுதியாகிறது. அவரைச் செல்ல விடாமல் தடுத்த பின்னணியில் யோகாலயத்தின் எதிரி இருப்பது மட்டுமல்ல, அவன் தற்போது யோகாலயத்தின் உள்ளேயே இருக்கிறான்...

 

பரபரப்புடன் அவர் பாண்டியனிடம் இதைத் தெரிவிக்க அலைபேசியை எடுத்தார். அலைபேசி அவர் கையிலிருந்து நழுவியது. இதுவும் ஒரு சகுனம். அலைபேசியில் இதைத் தெரிவிப்பது உசிதம் அல்ல என்று சகுனம் சொல்கிறது.

 

சிறிது ஆலோசனைக்குப் பிறகு தேவானந்தகிரி பாண்டியனை அழைத்து, அன்று மாலை அங்கு கிளம்பி வர முடியாதபடி அவரது காலில் அடிபட்டிருப்பதைச் சொன்னார். பாண்டியனின் ஏமாற்றம் அவர் பேச்சில் வெளிப்படையாகத் தெரிந்தது.

 

தேவானந்தகிரி சொன்னார். “கவலைப்படாதீங்க. நான் நேர்ல வர முடியாட்டியும், உங்களுக்குத் தேவையான ஒன்றை என் ஆள் மூலம் நாளைக்கு அனுப்பறேன்.”

 

ந்த உரையாடல் பதிவைக் கேட்ட ராகவனுக்கும், குமரேசனுக்கும்,  தேவானந்தகிரி ஆள் மூலம் எதை நாளை அனுப்புகிறார் என்பதை யூகிக்க முடியவில்லை. ஏதாவது பூஜை செய்து அந்தப் பிரசாதத்தை ஆள் மூலம் அனுப்புவார் போலிருக்கிறது என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்கள். வரவிருக்கும் ஆபத்து அவர்களுக்குத் தெரியவில்லை.

 

தேவானந்தகிரி வர முடியாதது பாண்டியனுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் அவர் நாளை எதோ முக்கியமானதை அவருடைய ஆள் மூலம் அனுப்புவதாகச் சொன்னது சிறிது ஆறுதலாக இருந்தது. அந்த முக்கியமானது என்ன என்று அவர் கேட்ட போது தேவானந்தகிரிஒரே நாள் தானே பொறுங்கள்என்று சொல்லி விட்டார்.

 

ஒரு நாளில் எத்தனை மணிகள், நிமிடங்கள், வினாடிகள் இருக்கின்றன, அவற்றைக் கடப்பது எவ்வளவு கஷ்டம் என்பது, தேவையோடு காத்திருப்பவனுக்குத் தான் தெரியும். பாண்டியன் பெருமூச்சு விட்டார்.

 

அவருடைய அலைபேசி இசைத்தது. அழைத்தது சுகுமாரன்.

 

பாண்டியன் அலைபேசியை எடுத்துப் பேசினார். “சொல்லுங்க டாக்டர்

 

தேவானந்தகிரி எத்தனை மணிக்கு வர்றார்?”

 

அவர் காலில் அடிபட்டுடுச்சாம். அதனால அவர் இன்னைக்கு வரலை. நாளைக்கு ஆள் மூலமாய் எதோ முக்கியமானதை அனுப்பறாராம்.”

 

சுகுமாரன் சலித்துக் கொண்டார். “ஏன் நமக்குன்னே இப்படி நடக்குதுன்னு தெரியலை பாண்டியன். எல்லாத்துலயுமே ஒரு தடங்கல், பிரச்சினை. என்னால வீட்டுல நிம்மதியாய் இருக்க முடியலை...”

 

சுகுமாரனுக்குத் தற்போதைய பெரிய பிரச்சினைக்குக் காரணம் அவர் மனைவியின் தோழி. அவர் மனைவி அந்தத் தோழியைக் கண்மூடித்தனமாய் நம்புவது தான். ஒரு நாய்க்குத் தாயத்து கட்டுவதை அவர் மனைவியால் இப்போதும் ஜீரணிக்க முடியவில்லை. அவர் இதெல்லாம் யோகி பிரம்மானந்தாஜியின் ஆலோசனையின் படி தான் நடக்கிறது என்று சொன்னதை இரண்டு நாட்கள் முன்பு வரை எதிர்க்குரல் இல்லாமல் கேட்டு வந்த அவர் மனைவி இரண்டு நாள் முன்பு, “போகச் சொல்லுங்க உங்க யோகிஜிய. அவருக்கு ஒரு எழவும் தெரியாது. வெறும் பேச்சு மட்டும் தான்.” என்று சொல்லி விட்டாளாம்.

 

பாண்டியன் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கினார். நல்லவேளை சுகுமாரன் யோகிஜி இருக்கும் போது இதைச் சொல்லவில்லை. யோகிஜி கேட்டிருந்தால் நொந்து போயிருப்பார்.

 

இது இவளாய் பேசறதில்லை பாண்டியன். இவள் தலையில வேண்டாததை எல்லாம் ஏத்தறது இவ சிநேகிதி தான். நான் தேவானந்தகிரி வந்தா, அந்த சிநேகிதி கிட்ட இருந்து இவளைக் காப்பாத்த எதாவது பண்ண முடியுமான்னு கேட்கலாம்னு இருந்தேன்இப்ப அதுக்கும் வழியில்லாமல் போயிடுச்சு. நீங்க அந்த நிஜ யோகி வந்தப்ப என்னையும் கூப்பிட்டிருந்தால் அவர் கிட்டயாவது எதாவது ஆலோசனை கேட்டிருக்கலாம். நீங்கள் என்னைக் கூப்பிடாமயே அவர் கிட்ட பேசி அவரை அனுப்பிச்சிட்டீங்க.”

 

அந்த நிஜ யோகி முன்னால் இந்த யோகிஜி முள்ளில் அமர்ந்திருப்பது போல் அமைதியிழந்து இருந்ததை பாண்டியனால் அவரிடம் சொல்ல முடியவில்லை. அந்த யோகியிடம் மலர்ச்சி இருந்தது போலவே தெளிவும் இருந்ததாய் பாண்டியன் நினைத்தார். என்ன கேட்டிருந்தாலும் அந்த யோகி யோசிக்காமல் பதில் சொல்லியிருப்பார். ஆனால் அந்தப் பதில் புரியுமா, பிடிக்குமா என்பது தான் நிச்சயமில்லை. டாக்டர் சுகுமாரனும் இங்கு அந்தச் சமயத்தில் இருந்திருந்தால் சந்திப்பு மிக சுவாரசியமாக இருந்திருக்கும் என்று தோன்றியது

 

சரி பாண்டியன், நான் ராத்திரி சாப்பிட்டு விட்டு அங்கே வந்துடறேன்.”

 

தேவானந்தகிரி இன்னைக்கு வரலைன்னு சொன்னேனே. வரலைன்னா பூஜையும் இருக்காது. பின்ன எதுக்கு வர்றீங்க?”

 

ஷ்ரவனானந்தா மூலம் தெரிஞ்சுக்க தேவானந்தகிரி கொடுத்திருக்கிற முகூர்த்தங்கள்ல கடைசி முகூர்த்தம் இன்னைக்கு ராத்திரி இருக்கே. மறந்துட்டீங்களா?”

 

அப்போது தான் அது பாண்டியனுக்கு நினைவு வந்தது.  ஆமாம் மறந்துட்டேன்.”

 

நான் அவர் சொன்ன அன்னைக்கே வந்து என் டைரியில் குறிச்சு வெச்சுகிட்டேன்.”

 

பாண்டியனுக்குத் தங்கள் நிலையே வேடிக்கையாகத் தான் இருந்தது. ஒரு காலத்தில் தீவிர நாத்திகர்களாக இருந்த அவரும், சுகுமாரனும் மந்திரவாதம், செய்வினை போன்றவற்றை நம்ப ஆரம்பித்திருப்பது மட்டுமல்லாமல் டைரியில் முகூர்த்தங்களைக் குறித்து வைத்துக் கொண்டு தேவானந்தகிரி, ஷ்ரவனானந்தா போன்றவர்களுக்காகக் காத்திருக்க ஆரம்பித்து விட்டது காலத்தின் கோலம் அல்லவா?

 

பாண்டியன். இன்னொரு விஷயம் உங்களுக்குத் தெரியுமா? உங்க ஏரியால இன்ஸ்பெக்டராய் செல்வம்னு ஒருத்தன் இருந்தானே. அவனை அவன் மனைவி இன்னைக்கு எங்க ஆஸ்பத்திரி சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட  காட்டக்   கூட்டிகிட்டு வந்திருந்தாள். அவனோட பிரச்சினையைக் கேட்டால் ரொம்பவே வேடிக்கையாய் இருக்கு. யாருமே அவனைக் கொஞ்ச நேரம் தொடர்ந்து உற்றுப் பார்த்துகிட்டே இருக்கக்கூடாதாம். அப்படிப் பார்த்தா பயங்கரமாய் அவனுக்குக் கோபம் வந்துடுமாம். கெட்ட கெட்ட வார்த்தையால திட்ட ஆரம்பிச்சுடுவானாம். அவனுக்கு தூத்துக்குடிக்கு வேலை மாற்றலான பிறகு இப்படி ஆயிடுச்சுன்னு சொல்லி அவள் அழுதாள்…”

 

தேவானந்தகிரி வராமல் இருந்திருந்தால் தங்கள் நிலைமையும் அப்படித் தான் ஆகியிருந்திருக்குமோ என்று பாண்டியன் எண்ணிக் கொண்டார். இப்படியே விட்டிருந்தால் பைத்தியம் பிடித்திருக்கும் என்று தேவானந்தகிரி சொன்னது அவர் நினைவுக்கு வந்தது. ஆனால் அவர் செல்வத்தின் பிரச்சினைக்கும் சைத்ராவின் ஆவி பின்னணி இருப்பதை சுகுமாரனிடம் சொல்லவில்லை. சொல்லி பீதியை மேலும் கிளப்பி, கூடுதல் புலம்பல்களைக் கேட்கும் மனநிலையில் அவர் இல்லை


(தொடரும்)

என்.கணேசன்



Thursday, March 12, 2026

சதுரங்கம் 9


ர்ஜுன் அதற்கு மேல் அங்கே நிற்கவில்லை. ஒரு கணம் தங்கையை யோசனையுடன் பார்த்து விட்டு அவளுடைய அறையிலிருந்து வெளியே வந்து விட்டான். அம்மா அப்போதும் அங்கேயே தான் நின்று துணியை மடித்துக் கொண்டு இருந்தாள். தங்கை சொன்னது அவள் காதிலும் விழுந்திருக்க வேண்டும். ஆனால் அவள் மகன் பக்கம் திரும்பவில்லை.

 

அர்ஜுன் தனதறைக்கு வந்தான். தங்கை சொன்ன விஷயங்கள் அவனை மிகவும் யோசிக்க வைத்தன. அம்மாவைப் போல் அவனும் ஒரு தனி கூட்டுக்குள் இருக்கிறான் என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. எந்த ஒரு விஷயத்தை அம்மாவின் தவறாக அவன் நினைத்துக் கொண்டிருக்கிறானோ அதே தவறு அவனிடமும் இருப்பதாக, நியாயமானவளாக அவன் நினைக்கும் அவன் தங்கையே சொல்கிறாள். அம்மாவும் தனிக்கூட்டுக்குள் இருப்பதை நித்யா தெரிந்து கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இத்தனைக்கும் அம்மா அவனிடம் ஒரு இடைவெளியில் இருப்பது போல் அவளிடம் என்றுமே இருந்ததில்லை. மகள் என்றுமே அவளுக்கு செல்லம் தான்.  அப்படியிருந்தும் நித்யா அம்மாவைச் சரியாக எடை போட்டு இருக்கிறாள். அது தான் கீதா அவனைக் காதலிக்கிறாள் என்ற நித்யாவின் கணிப்புக்கு அதிக கனம் தந்தது.  

 

வார்த்தைகள்ல சொல்றதுக்கு முன்னாடி மனசார உணர்ற விஷயம் அது. நீ உணரலைன்னு தெரிஞ்சதுக்கப்பறம் வார்த்தையால அவங்க எப்படி சொல்வாங்க?” என்ற வார்த்தைகள் அவன் காதில் ரீங்காரம் செய்தன.  அவன் மனம் கீதாவைப் பற்றிய நினைவுகளை அலசியது.

 

ஒரே தொழிலில் இருப்பதால் அடிக்கடி சந்தித்துக் கொண்டதில் ஆரம்பித்த நட்பு அவர்களுடையது. கீதா மிக நல்ல பெண். நேர்மையானவள். யோசித்துப் பார்த்தால், அழகானவளும் கூட. அடிக்கடிப் பார்த்தாலும், எத்தனையோ நிருபர்களை, புன்னகையுடனும், கைகாட்டலுடனும், ஹலோவுடனும் அவன் நிறுத்திக் கொண்டிருந்தாலும் கீதா மட்டும் அதை எல்லாம் தாண்டி அவன் வாழ்க்கையில் வந்திருந்தாள். இருவரும் தினமும் சந்திக்கா விட்டாலும், கடந்த இரண்டு வருடங்களாக தினமும் அலைபேசியில் பேசிக் கொள்ளாமல் இருந்ததில்லை. ஆனால் அவர்கள் இருவரும் அதிகமாகப் பேசிக் கொள்வதெல்லாம் அவர்களுடைய துறை சார்ந்த விஷயங்களைத் தான். அவளாவது தன் குடும்ப விஷயங்களை வெளிப்படையாக அவனிடம் சொல்லியிருக்கிறாள். ஆனால் அவன் தன் குடும்ப விஷயங்களை அவளிடம் வெளிப்படையாகப் பேசியதில்லை. ஒருவேளை அவர்கள் இருவரும் தினமும் பேசிக் கொள்கிறார்கள் என்பதை வைத்து அது காதலால் என்று நித்யா சந்தேகப்படுகிறாளோ? எதிர்பாலின நட்புக்குப் பல சமயங்களில் காதல் என்ற தவறான பெயர் சமூகத்தால் வைக்கப்பட்டு விடுவது உண்டு.  நித்யா அந்த வகை முட்டாள் அல்ல.

 

நித்யா தான் அவன் பிறந்த நாளுக்கு கீதாவை இங்கே அழைக்கச் சொன்னவள். அப்படி கீதா வந்த போது தான் நித்யா கீதாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறாள். அதற்கு முன்போ, பின்போ அவர்கள் இருவரும் பேசிக் கொண்டதில்லை. அந்த ஒரு சந்திப்பிலேயே நித்யா இந்த அனுமானத்திற்கு வந்திருக்கிறாள். அவன் மனம் கீதாவுடனான பழைய நினைவுகளை அசை போட ஆரம்பித்தது. அவளுடன் பழகிய தருணங்கள் திரைப்படமாய் மனத்திரையில் வந்து போனது.  புதிதாகப் பார்ப்பது போல் அவன் பார்க்க ஆரம்பித்தான்.

 

ஒவ்வொரு முறையும் அவனைப் பார்க்கையில் அவள் கண்களில் தெரிந்த உற்சாகம், மற்றவர்களைத் தவிர்த்து அவனுடன் மட்டும் அவள் அதிகம் பழகியது எல்லாம் ஒரு நெருக்கமான நட்பின் அறிகுறிகளாகக் கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் பலருடன் ஒரே இடத்தில் இருக்கையில், அவன் மற்றவர்களுடன் உரையாடிக் கொண்டோ, வேறு எதையாவது கவனித்துக் கொண்டோ இருந்து விட்டுத் திடீரென்று திரும்பிப் பார்க்கையில் சில சமயங்களில் அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்ததை இப்போது அவன் நினைவுகூர்கிறான்.  அந்த சமயங்களில் என்ன?’ என்று அவன் புருவங்களை உயர்த்தி, பார்வையால் கேட்டிருக்கிறான். சில சமயங்களில் ஒன்றுமில்லைஎன்று சைகையால் சொல்லித் திரும்பியிருக்கிறாள். சில சமயங்களில்உன்னிடம் அவர் என்ன சொல்கிறார் என்று யோசித்தபடி பார்த்தேன்என்றும், சில சமயங்களில்நீ என்ன கவனிக்கிறாய் என்று பார்த்தேன்என்றும் பிறகு விளக்கியிருக்கிறாள்.

 

ஒரு பெண்ணின் பார்வையின் அர்த்தம் புரியாத அளவு அவன் அறிவுக்குறைபாடு உள்ளவன் அல்ல. ஒரு சிறு பார்வையிலேயே பலதையும் புரிந்து கொள்ளக்கூடிய அளவு சூட்சும அறிவு படைத்தவன் தான் அவன். அப்படி இருந்தும், அவளைப் புரிந்து கொள்ளாதது மட்டுமல்ல, ”என்ன?” என்று கேட்கும் அளவு அவன் மரமண்டையாக இருந்திருக்கிறான். இப்போது தங்கை தெரிவித்த போது கூட அவன் முதலில் அதை நம்ப மறுத்திருக்கிறான்.

 

ஒரு நோயாளியின் நோயை விருப்பு வெறுப்பில்லாமல் ஆராய்ச்சி செய்யும் மருத்துவர் போல, விலகி நின்று யோசிக்கையில் ஒன்று அவனுக்குப் புரிந்தது. அந்தக் காதலை அங்கீகரிப்பதில் அவன் ஆழ்மனம் அசௌகரியத்தை உணர்ந்திருக்கிறது.  அது ஏனென்று அவன் மேலும் யோசித்தான். மிக நெருக்கமாக யாரிடம் பழகுவதையும் அது தான் அவனைத் தடுத்திருக்கிறது. ஒரு எல்லையோடு அவனை நிறுத்தியிருக்கிறது. அதற்கு மேல் போவதில் அசௌகரியத்தை உணர்ந்திருக்கிறது.

 

ஆழமாக யோசித்த அந்தக் கணத்தில், காரிருளில் மின்னலாக ஒரு உண்மை அவனுக்குப் புலப்பட்டது. சிறு வயதிலிருந்தே அவன் தாயிடம் எதிர்பார்த்து கிடைக்காத அன்பு அவனை ஆழமாகக் காயப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு முறை அவன் நெருங்கிப் போன போதும் அவள் அவனிடமிருந்து விலகியே போய் இருக்கிறாள். யாரையும் மிக அதிகமாக நேசிப்பதும், நெருங்குவதும் காயப்படத்தான் என்ற அனுபவ பாடத்தை அவன் குழந்தைப்பருவத்திலேயே அவன் ஆழ்மனம் கற்றிருக்கிறது. அது தான் அவன் வளர்ந்த பின்னும், நட்பல்லாத காதல் என்பதை ஏற்க விடாமல் அவனைத் தடுத்திருக்கிறது. அவள் காட்டுவது நட்பு தான் என்று எண்ண வைத்து அவனை  நட்பிலேயே நிற்க வைத்திருக்கிறது. வேறொருத்தியாக இருந்திருந்தால் என்றோ விலகிப் போயிருப்பாள். ஆனால் பாவம் கீதா, விலக முடியாமல் அவனுக்கு சௌகரியமான நட்பிலேயே அவனுடன் இன்னும் பழகிக் கொண்டு இருக்கிறாள்.

 

அவன் மேலும் யோசித்தான். இப்போது அவன் மிகவும் நேசிக்கும் அவனுடைய தங்கை கூட அவளாக உரிமை எடுத்துக் கொண்டு அவனிடம் அன்பு காட்டி, அவனைப் பற்றி பெருமிதமாக எண்ணி, அவனுடன் சிறு சண்டைகள் போட்டு, அன்பைக் கொடுத்தும், அன்பை எதிர்பார்த்தும் அவனுடைய அரண்களை உடைத்து தான் உள்ளே நுழைந்திருக்கிறாள். நீ எனக்கு முக்கியம், நான் என்றைக்கும் உன்னைக் காயப்படுத்த மாட்டேன் என்று அவன் ஆழ்மனதிற்கு சிறிது சிறிதாக நம்பிக்கை ஊட்டி தான் அவள் அவனை நெருங்கியிருக்கிறாள்.

 

திடீரென்று அவனுக்கு ஏனோ அழத் தோன்றியது. அவன் சத்தமில்லாமல் அழுதான். அவனுடைய பலவீனத்திற்காகவும், அவனுடைய ஆழ்மன காயத்திற்காகவும் அவன் அழுதான். அதையெல்லாம் மீறி அவனை நேசிக்கும் அவன் தங்கையையும், அவனைக் காதலிக்கும் கீதாவையும் நன்றியுடன் நினைத்து அழுதான்.

 

அழுது சிறிது மனப்பாரம் குறைந்த போது நித்யா சொன்னது மறுபடி அவன் காதுகளில் ஒலித்தது. ”நீயும் சில சமயத்துல நம்ம அம்மா மாதிரியே நடந்துக்கறே. நீ உன்னோட தனி கூட்டுக்குள்ளே இருக்கே. அது தப்புண்ணா.” இன்னொரு சாத்தியக்கூறும் அவனுக்கு அந்தக் கணத்தில் புலப்பட்டது. அப்படியானால் அவன் நிலைமையில் தான் அம்மாவும் இருக்கிறாளோ? அவளும் ஆழ்மனதில் அவனைப் போலவே காயப்பட்டிருப்பாளோ? ஆழமாக அவன் யோசித்தான். அவளும் மகளையும், கணவரையும் தவிர வேறு யாருடனும் நெருக்கமாகப் பழகி அவன் பார்த்தது இல்லை. அவளுக்குத் தோழிகள் இல்லை. அவள் சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்தவள். அவளுக்கு உடன்பிறப்புகளோ, உறவினர்களோ யாருமில்லை. அனாதையான அவளும் அவனைப் போலவே சிறுவயதிலேயே எத்தனையோ காயப்பட்டிருக்கலாம். மேலும் காயப்படாமல் இருக்க அவளும் ஒரு கூட்டுக்குள் தஞ்சம் புகுந்திருக்கலாம்….

 

இந்தப் புதிய கோணத்தில் யோசிக்கும் போது அவனுக்கு அம்மா மீதிருக்கும் கோபம் குறைந்து பச்சாதாபம் பிறந்தது.

 

அர்ஜுன்ஞான மூர்த்தி அழைக்கும் சத்தம் கேட்டது. அவன் கட்டுரையை அவர் படித்து முடித்து விட்டார்.  அர்ஜுன் கண்களைத் துடைத்து கொண்டான். எழுந்து கண்ணாடியைப் பார்த்தான். அழுத சுவடு தெரியவில்லை. அவன் கட்டுரைக்கான தீர்ப்பு என்ன என்று அறிய ஆர்வத்துடன் சென்றான்.

 

(தொடரும்)

என்.கணேசன்