என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, September 18, 2025

சாணக்கியன் 179

 

ர்வதராஜன் சந்திரகுப்தனைக் கொல்லச் சொன்னதற்கு ராக்ஷசர் உடனடியாக மறுமொழி எதுவும் சொல்லவில்லை. பர்வதராஜன் தன் இலாபத்திற்காகத் தான்  இதைச் சொல்கிறான் என்று தெரிந்திருந்த ராக்ஷசர் தன் திட்டமும் அதுவாகத் தானிருந்தது என்பதை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அவன் சொல்லித் தான் அவர் யோசிப்பதாகக் காட்டிக் கொண்டு சிறிது யோசித்து விட்டுச் சொன்னார். “ஹிமவாதகூட அரசரே. சந்திரகுப்தன் இறந்தால் அதிக இலாபமடையப் போவது நீங்கள் தான். வென்றதைப் பிரித்துக் கொள்ள வேண்டிய அவசியமும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும். எங்களுக்கு என்ன இலாபம்

 

பர்வதராஜன் சொன்னான். “முதல் இலாபம் எதிரியைத் தண்டித்த மனநிறைவு ராக்ஷசரே. நீங்கள் இளவரசி துர்தராவை என் மகன் மலைகேதுவுக்குத் திருமணம் செய்து தரச் சம்மதித்தால் நான் வென்றதில் பாதியைத் திருப்பித் தரத் தயாராக இருக்கிறேன். அது உங்களுக்கு அடுத்த பெரிய இலாபமாக இருக்கும். நான் என்றுமே பேராசைக்காரனல்ல ராக்ஷசரே. சாணக்கியர் முழுவதுமாக அனைத்தையும் தானே அடைய ஆசைப்படுவது போல நான் ஆசைப்படவில்லை. அவருக்கு நான் தர ஒப்புக்கொண்டிருக்கும் பாதியை உங்களுக்குத் திருப்பித் தருவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.”

 

பர்வதராஜனின் சாமர்த்தியத்தை ராக்ஷசர் உள்ளூர ரசித்தார். தனநந்தரின் மருமகனாக மலைகேது ஆனால், அடுத்த பட்டத்து வாரிசாகவும் ஆகி விடுவான். இப்போது பாதியும், தனநந்தனுக்குப் பின் பாதியும் கிடைத்தால் முழுவதுமே அவனுடையதாகி விடும். இப்போது சந்திரகுப்தனுடன் பிரித்துக் கொண்டால் பாதி மட்டுமே கிடைக்கும். அதுவும் சாணக்கியர் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினால் மட்டுமே அதுவும் கிடைக்கும்.  

 

ராக்ஷசர் தன் மனக்கணக்கை உரக்கச் சொல்லவில்லை. பர்வதராஜனுக்கு உடனடியாக நம்பிக்கையூட்ட விரும்பாதவராகச் சொன்னார். “சாணக்கியரின் நேரடி மேற்பார்வையில் இருக்கும்  சந்திரகுப்தனைக் கொல்வது யாருக்கும் சுலபமல்ல ஹிமவாதகூட அரசரே

 

பர்வதராஜன் சொன்னான். “மொத்தமாக இழந்ததில் பாதியைத் திரும்பப் பெறுவதும் எளிதாக நடக்க முடிந்த காரியமல்லை ராக்ஷசரே. ஆனால் தங்களைப் போன்ற கூர்மதி படைத்த மனிதருக்கு எதுவும் முடியாத காரியமல்ல என்பதையும் நான் அறிவேன். இந்த விஷயத்தில் மறைமுகமாக உங்களுக்கு எந்த உதவி செய்ய முடிந்தாலும் அதைச் செய்ய நான் தயார். என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் சொன்னால் போதும்...”

 

ராக்ஷசர் சொன்னார். “தேவைப்பட்டால் சொல்லியனுப்புகிறேன் அரசே.”  

 

பர்வதராஜன் ஏமாற்றமடைந்தான். உதவி என்ன என்று சொன்னால் அவர் திட்டம் என்ன என்று தெரிந்து விடும் என அவன் எதிர்பார்த்தான். ராக்ஷசரும் சாணக்கியரைப் போலத் தன் திட்டத்தை வெளிப்படையாகச் சொல்லும் பழக்கம் இல்லாதவர் போலிருக்கிறது... பர்வதராஜன் தன் ஏமாற்றத்தை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. “தங்கள் விருப்பம் போலச் செய்யுங்கள். ஆனால் எவ்வளவு சீக்கிரம் காரியத்தை முடிக்கிறீர்களோ அந்த அளவு நல்லது என்று நான் நினைக்கிறேன்.” என்று சொன்னான்.

 

காரியம் கச்சிதமாக முடிய வேண்டும் என்று விரும்புபவர்கள் அவசரப்படக்கூடாது. அவசரப்படும் போது தவறுகளுக்கு அதிக வாய்ப்பிருக்கிறது” 

 

உண்மை. ஆனால் காலம் தாழ்ந்து செய்து முடிக்கப்படும் செயல்களால் நம் நோக்கம் நிறைவேறுவதில்லை என்பதையும் மறந்து விடக்கூடாது.”

 

ராக்ஷசர் தலையசைத்தார். “அதிக பட்சம் ஒரு வாரம் தான். அதற்குள் முடிக்கப் பார்க்கிறேன்

 

நல்லது. காரியம் முடிந்த பின் சந்திப்போம்.” என்று சொல்லி பர்வதராஜன் கைகூப்பினான்.

 

ராக்ஷசரும் கைகூப்பி விட்டு எழுந்தார். அங்கிருந்து நகர்ந்தவர் அடுத்த கணம் இருளில் மறைந்தார். பர்வதராஜனும் எழுந்து வெளியே வந்தான். சுசித்தார்த்தக் அவரைப் பார்த்தவுடன் பரபரப்புடன் கேட்டான். “சொன்னபடி பிரதம அமைச்சர் வந்தாரா அரசே?”

 

வந்தார். பேசினோம். ஒன்று சேர்ந்திருக்கிறோம். என்ன ஆகிறதென்று பார்ப்போம்என்று சொல்லி பர்வதராஜன் கூடுதல் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

 

ராக்ஷசர் கும்மிருட்டில் சுவரோரமாக நின்றபடி கேட்டார்.  “பர்வதராஜன் சென்று விட்டாரா?”

 

சென்று விட்டார் பிரபு.” என்று இருட்டிலிருந்தே ஜீவசித்தியின் குரல் கேட்டது.

 

நல்லது. இனி விளக்கேற்றி விடலாம்என்றார் ராக்ஷசர்.

 

சிறிது நேரத்தில் அந்த வீட்டுக்குள் விளக்குகள் ஏற்றப்பட்டன. ஜீவசித்தியிடம் ராக்ஷசர் சொன்னார். “எங்களுக்குத் தனிமை தேவை ஜீவசித்தி. சிறிது நேரம் கழித்து விட்டு வா

 

ஜீவசித்திஉத்தரவு பிரபுஎன்று சொல்லி விட்டு அங்கிருந்து வெளியேறினான். அவன் சென்ற பிறகு ராக்ஷசர் சொன்னார். “இனி நீ வரலாம் விஷாகா

 

பக்கத்து அறையிலிருந்து தேவகன்னிகை போல் பேரழகாக இருந்த இரு இளம்பெண் வந்தாள். ”எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத அழகு இவளுடையதுஎன்று தனநந்தன் முன்பொரு முறை அவரிடம் சிலாகித்துச் சொல்லி இருந்தான். அது நூறு சதவீத உண்மை என்று ராக்ஷசர் நினைத்தார். அவளிடம் இருக்கும் ஆபத்தை மிகச் சிலரே அறிவார்கள். அவளை அறிந்தவர்கள் அவளை நெருங்க ஆசைப்பட்டதில்லை. காரணம் அவள் ஒரு விஷ கன்னிகை. பூப்படைவதற்கு சற்று முந்தைய காலத்திலிருந்தே சிறிது சிறிதாய் விஷம் உட்கொண்டு தற்போது உடலெல்லாம் விஷமாக இருக்கும் அபூர்வ அழகி அவள். அவளுடைய ஒரு முத்தம் போதும் ஒருவனைப் பரலோகம் அனுப்புவதற்கு. நடனத்திலும் வீணை வாசிப்பிலும் ஈடிணையில்லாத விஷாகா தனநந்தனின் பூரண நம்பிக்கைக்குப் பாத்திரமானவள். தனநந்தன் மனமுவந்து மிகத் தாராளமாக பரிசுகள் வழங்கும் மிகச்சிலரில் அவளும் ஒருத்தி.  அதனாலேயே அவள் அவனிடம் இப்போதும் விசுவாசமாக இருக்கிறாள்.

 

ராக்ஷசர் அவளிடம் கேட்டார். “ஹிமவாதகூட அரசன் சொன்னதைக் கேட்டாய் அல்லவா?”

 

விஷாகா சொன்னாள். “கேட்டேன் பிரபு. இளவரசி கட்டாயத் திருமணத்திற்கு வற்புறுத்தப்பட்டிருப்பது வருத்தத்தைத் தருகிறது.” அவள் குரலில் கோபம் தொனித்தது.  

 

நீ மனம் வைத்தால் இளவரசியைக் காப்பாற்றி விடலாம் விஷாகாஎன்று ராக்ஷசர் மெல்லச் சொன்னார்.

 

விஷாகா சொன்னாள். “சாணக்கியருக்கு என்னைப் பற்றித் தெரியாத வரை நான் முயற்சி செய்ய முடியும். ஆனால் இப்போது நான் எதிரிகளை நெருங்கவும் முடியாத நிலைமை இருக்கிறதே பிரபு. என்ன செய்வது? ஆடல் பாடல்கள் அரண்மனையில் தற்போது நடைபெறுவதே இல்லை. சாணக்கியர், சந்திரகுப்தன் இருவருக்கும் அவற்றில் ஆர்வமில்லை போல் தெரிகிறது.”

 

அந்தச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாம் பர்வதராஜனின் உதவியை நாடலாம்.”

 

விஷாகா தலையசைத்தாள். “அப்படியானால் நான் முயற்சி செய்கிறேன். ஆனால் சந்திரகுப்தனின் மரணத்திற்குப் பிறகு நான் ஒரு கணமும் இங்கிருக்க முடியாது. என் வேலை முடிந்தபின் உடனடியாக நான் தப்பித்துச் செல்வதற்கு ஏற்பாடுகளை உங்களால் செய்ய முடியுமா?”

 

அதை நான் கண்டிப்பாகச் செய்கிறேன் விஷாகா. நீ இதில் வெற்றி பெற்றால் ஒருநாள் அரசர் தனநந்தர் இங்கே திரும்பவும் வரலாம். இளவரசி விருப்பமில்லாத இந்தத் திருமணத்திலிருந்து தப்பிக்கலாம். பழைய பொற்காலத்தைச் சிறிதாவது மீட்கலாம். நீ எடுக்கும் இந்த முயற்சி ஆபத்தானது என்பதை நான் மறுக்க மாட்டேன் விஷாகா. ஆனால் மகத வரலாற்றில் உன் சேவை பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும்...”

 

விஷாகா சொன்னாள். “இறப்பிற்குப் பின் கிடைக்கும் புகழில் எனக்கு ஆர்வம் இல்லை பிரபு. நான் இந்த ஆபத்தான வேலையில் ஈடுபட சம்மதித்தது எதிர்கால இலாபத்திற்காகவும் அல்ல. நானும் ஒரு பெண். நல்லதொரு திருமண வாழ்க்கை அமையும் பாக்கியத்தை என்றோ இழந்து விட்ட ஒரு விஷகன்னிகை.  ஆனால் நான் இன்னொரு பெண்ணின் திருமண வாழ்க்கை பாழாவதையாவது தடுக்க விரும்புகிறேன். அதைச் சாதித்துக் கிடைக்கும் ஆத்ம திருப்தி எனக்குப் போதும். மீதியுள்ள காலத்தில் என் வாழ்க்கை குறித்த விரக்தி என்னை ஆட்கொள்ளும் போது, நான் என் வாழ்வில் அர்த்தமில்லை என்று உணரும் தருணங்களில், இளவரசி துர்தராவின் வாழ்க்கை பாழாவதைத் தடுத்திருக்கிறேன் என்ற ஆத்ம திருப்தியுடன் என் வாழ்க்கையின் கசப்பைக் குறைத்துக் கொள்வேன். அது போதும் எனக்கு

 

ராக்ஷசர் அவள் வார்த்தைகளில் நெகிழ்ந்து போனார். கஷ்ட காலங்களில் தான் சுயநலமான மனிதர்களை நாம் அறிந்து கொள்கிறோம் என்பது பாதி தான் உண்மை. மிக நல்ல மனிதர்களையும் அப்போது தான் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது

 

(தொடரும்)

என்.கணேசன்




Monday, September 15, 2025

யோகி 120


 முக்தானந்தா தொடர்ந்து சொன்னார். “... அவளுடைய தந்தையின் செயலால் எல்லாமே வெறுத்துப் போய் நிம்மதிக்காக ஞான மார்க்கத்தில் நுழைந்தவள் அவள். பின் எங்கள் எல்லோரையும் விட ஆன்மீகத்தில் மிக ஆழமாய்ப் போனவள். அவள் எங்கள் எல்லோரையும் விட அதிகமாக, யோகாலயத்தின் எதிர்காலக் கனவுகளை வளர்த்துக் கொண்டவள். வயதில் மிக இளையவளானாலும் பிரம்மானந்தா உட்பட நாங்கள் எல்லோரும் அவளை மதித்தோம். இங்கே விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தவுடன் அவள் எப்போதோ இங்கிருந்து போய் விடுவாள் என்று நான் எதிர்பார்த்தேன். எங்கே போனாலும் அவளுடைய அறிவுக்கும், ஞானத்திற்கும் சிறப்பான இடம் கிடைத்திருக்கும். ஆனால் அவள் ஏன் போகவில்லை என்பது தெரியவில்லை. பிரம்மானந்தா மாறியது போல் அவளாலும் மாற முடியும் என்று என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் அவள் மாறாமல் இதையெல்லாம் எப்படி சகித்துக் கொண்டிருக்க முடியும் என்றும், பிரம்மானந்தாவுடன் நெருக்கமாக இருக்க முடியும் என்றும் எனக்கு இன்னமும் புரியவில்லை.”

 முக்தானந்தா சொல்வதை எல்லாம் கேட்கையில் அவனுக்கும் கல்பனானந்தா ஒரு புதிராகவே தோன்றினாள்.

 முக்தானந்தா தொடர்ந்து சொன்னார். “எனக்குத் தெரிந்த கல்பனானந்தா ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளதைப் போலவே பெண் உரிமைக்காகவும் தைரியமாய் குரல் கொடுப்பவள். அவள் பட்ட கஷ்டங்கள் அவளுக்காக மட்டுமல்லாமல் மற்ற பெண்களுக்காகவும் போராடத் தூண்டியிருந்தன. அதனால் தான் நான் அன்றைக்கு, சைத்ராவை கல்பனானந்தா காட்டிக் கொடுத்திருக்கவோ, அவளுடைய மரணத்திற்குக் காரணமாய் இருந்திருக்கவோ, வாய்ப்பில்லை என்று உறுதியாக சொன்னேன்....”

 அப்படிப்பட்ட கல்பனானந்தா எந்த விதமான நிர்ப்பந்தங்களால் சிக்கி இங்கேயே இருக்கிறாள் என்பது ஷ்ரவனுக்கும் தெரியவில்லை. ஆனால் சைத்ரா பற்றிய உண்மைகளை அறிந்தவளும், சைத்ரா சொன்ன யோகியை அறிந்தவளுமான ஒருத்தி இங்கே இருக்கிறாள் என்பதும், அவள் முழுவதுமாக எதிரிகள் கோஷ்டியில் சேர்ந்தவளுமல்ல என்பதும் அறிந்து கொள்ள முடிந்தது அவனுக்குத் திருப்தியளித்தது.

 மறுநாள் காலை அவன் வழக்கம் போல் மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருந்த போது மறுபடியும் அந்த ஓநாய் அவனுக்குத் தென்பட்டது. அவன் மகிழ்ச்சியாகஹாய் நண்பாஎன்று மனதிற்குள் அழைத்தான். ஓநாய் அவனை நெருங்கி வந்து அவனைத் தொட்டது. இப்போது அவனுக்கு உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. ஆனால் அது தாங்க முடிந்ததாக இருந்தது. கூடவே உடல் இலகுவாவது போல் ஒரு உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. நன்றியுடன் அந்த ஓநாயை அவன் பார்த்தான். ஓநாய் தீ உமிழும் கண்களால் அவனைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுத் திரும்பியது. அது பின் வேகமாக நகர்ந்தது.

 அது போகுமிடமெல்லாம் அவனால், ஆச்சரியகரமாக, பார்க்க முடிவதை ஷ்ரவன் பிரமிப்புடன் பார்த்தான். ஓநாய் யோகாலயத்தின் அலுவலக அறைக்குள் நுழைந்தது. அது நுழையும் வரை, மூடியிருந்த அலுவலக வாசல் கதவு தான் ஷ்ரவனுக்குத் தெரிந்து கொண்டிருந்தது. ஆனால் அது கதவை ஊடுருவி உள்ளே நுழைந்தவுடன்அலுவலகத்தின் உட்பக்கம் தெரிய ஆரம்பித்தது. அவன் இந்தப் புதிய முன்னேற்றத்தில் திகைத்தான். இது போன்ற வேறு இடக் காட்சிகள் அவனுக்கு இதுவரை தெரிந்ததில்லை.

 ஓநாய் நேராக உள்ளே உள்ள ஹாலுக்குப் போனது. உள்ளே கம்ப்யூட்டர்கள் மட்டுமே இருந்தன. ஆட்கள் இருக்கவில்லை.  ஓநாய் ஒரு கம்ப்யூட்டருக்கு முன்னால் உள்ள நாற்காலியில் தாவி அமர்ந்தது. ஓநாய் தாவி அமர்ந்ததும், தானாக அந்தக் குறிப்பிட்ட கம்ப்யூட்டர் மட்டும் இயங்க ஆரம்பித்தது. ஷ்ரவன் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். கம்ப்யூட்டர் திரையில் தெரிந்தவை எதுவும் புரியவில்லை. ஷ்ரவன் உற்றுப் பார்த்தான். ஏதோ வரவு செலவுக் கணக்கு போல் இருந்தது.  ஓநாய் அவனைத் திரும்பிப் பார்த்தது.

 அவன் மானசீகமாக அதனிடம் கேட்டான். “என்ன சொல்கிறாய்?”

 அது அவனுக்குக் கூடுதலாக எதையும் காட்டாமல் மறைந்து போனது. ஷ்ரவன் தொடர்ந்து அந்த மந்திரத்தை ஜபித்து 1008 கணக்கை முடித்த பின், ஓநாய் சொல்ல வந்தது என்னவாக இருக்குமென்று யோசித்தான்அவன் கம்ப்யூட்டரில் பார்த்தது வரவு செலவுக்கணக்காகத் தான் இருக்குமென்றால் சைத்ராவின் மரணத்திற்கும், அதற்கும் என்ன சம்பந்தமிருக்கும்? அவள் யோகாலயத்தில் எப்போதும் உள்ளே அலுவலகத்தில் வரவுசெலவுக் கணக்கு வேலை பார்த்தவள் அல்ல. அதனால் அவள் அதில் ஏதாவது குளறுபடியைக் கண்டுபிடித்து, அதில் எந்தப் பிரச்சினையும் வந்திருக்க வாய்ப்பில்லை.

 அப்படியிருக்கையில் ஓநாய் ஏன் அதைக் காட்டுகிறது. ஆடிட்டிங் வேலைக்கும் இந்தக் கொலைக்கும் என்ன தொடர்பிருக்க முடியும்? ஆடிட்டிங் என்ற வார்த்தை அவன் எண்ணத்தில் வந்து போனவுடனேயே, அவன் மூளையில் ஒரு பொறி தட்டியது. ஆடிட்டர்!    

 அவன் கண்களைத் திறந்த போது முக்தானந்தா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாலும், அவனைக் கேள்வி கேட்டு தொந்தரவு செய்ய அவர் விரும்பவில்லை.  எல்லாவற்றையும் அவரிடம் சொல்லிக் கொண்டிருப்பது அவனுக்கு சாத்தியமும் இல்லை. அவர் அதைக் கேட்டு எதுவும் செய்யப் போவதுமில்லை. அவன் நம்பும் மந்திர சக்தி அவனுக்கு வழிகாட்டி உதவட்டும் என்று அவரும் பிரார்த்தித்து மௌனமாக இருந்தார்.

 

 ன்று காலை ஷ்ரவன் தோட்ட வேலைக்குப் போன போது கல்பனானந்தா மற்ற துறவிகளுக்கு தோட்ட வேலைகளை ஒதுக்கி, என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அவர்கள் அங்கிருந்து செல்லும் வரை ஷ்ரவன் அமைதியாகக் காத்திருந்தான். அவர்கள் பேசினால் கேட்கும் இருபதடி தொலைவில் தான் பாண்டியனின் ஆள் ஒருவன் நின்றிருந்தான். அதனால் கல்பனானந்தா ஷ்ரவனிடம் மண்புழு உரம் போட வேண்டிய இடங்களைச் சொன்னதோடு நிறுத்திக் கொண்டாள்.

 வரிசையாக வைத்திருந்த மண்புழு உரப் பைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு கிளம்பிய ஷ்ரவனுக்கு இன்று அவள் கண்டிப்பாக அவனிடம் வந்து பேசுவாள் என்று உள்ளுணர்வு சொன்னது. இன்று அவன் போகும் இடங்கள் சில, மற்றவர்களும் வேலை செய்து கொண்டிருந்த இடங்களாக இருந்தன. ஆனால் இரண்டு இடங்கள் ஒதுக்குப் புறமான இடங்களாக இருந்தன. அந்த இரண்டு இடங்களில் அவன் வேலை செய்து கொண்டிருக்கும் போது அவள் கண்டிப்பாக வருவாள் என்று எதிர்பார்த்தான்.

 இன்று அவன் குமரேசனிடமும் ஒரு முக்கியத் தகவல் சொல்ல வேண்டி இருந்தது. குமரேசன் எங்கே வேலை செய்கிறான் என்று ஷ்ரவன் பார்வையால் தேடினான். நல்ல வேளையாக அவன் போய் மண்புழு உரம் போட வேண்டிய இடம் ஒன்றுக்கு அருகில் தான் குமரேசன் இருந்தான். அங்கே ஒரு மூத்த துறவி ஒருவரைத் தவிர வேறு யாரும் இல்லை.

 ஷ்ரவன் அந்த இடம் நோக்கி நிதானமாக நடக்க ஆரம்பித்தான். தோள் பட்டையில் ஏதோ பிடித்துக் கொண்டதைச் சரி செய்யும் பாவனையில் ஷ்ரவன் தோள்பட்டையைப் பிடித்துக் கொண்டு முழங்கையை மேலே  உயர்த்தினான். இந்த சமிக்ஞைக்குப் பொருள்: “நான் உன்னிடம் பேச வேண்டியிருக்கிறது

 குமரேசன் அதைப் பார்த்தான். ஆனால் எந்த விதமான எதிர்வினையும் காட்டாமல் அவன் செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான். ஷ்ரவன் அவன் வேலை செய்து கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள செடிகளுக்கு மண்புழு உரம் போட்டுக் கொண்டிருந்த போது, குமரேசன் ஒரு மண்வெட்டியை எடுத்துக் கொண்டு அவனருகில் வேறெதோ வேலை செய்வது போல் வந்தான்.

 ஷ்ரவன் சுற்றுப்புறத்தைப் பார்த்தான். மூத்த துறவி ஐம்பதடிகள் தொலைவில் எதோ வேலை செய்து கொண்டிருந்தார். கண்காணிப்பாளன் அவருக்கும் ஐம்பதடிகள் அந்தப்பக்கம் தள்ளி நின்று கொண்டிருந்தான். ஆக கண்காணிப்பாளனுக்கும் ஷ்ரவனுக்கு இடையே நூறடி இடைவெளி இருக்கிறது. முகம் அந்தக் கண்காணிப்பாளனுக்குத் தெரியாதபடி வைத்துக் கொண்டு, குமரேசனுடன் மிகத் தாழ்ந்த குரலில் பேசினால் கண்காணிப்பாளனுக்குத் தெரியவோகேட்கவோ வழியில்லை.

 ஷ்ரவன் மண்புழு உரத்தைப் பரப்பிக் கொண்டே குமரேசனிடம் தாழ்ந்த குரலில் சொன்னான். “பிரச்சினை வரவு செலவுக் கணக்கு சம்பந்தப்பட்டதாய் இருக்கலாம்னு நினைக்கிறேன். இங்கே அக்கவுண்ட்ஸ் இருக்கற ஆபிஸ் கம்ப்யூட்டர்கள் பக்கம் போகவே வழியில்லை. அதனால் ஆடிட்டர் திவாகரன் ஆபிசில் அந்த முயற்சியை எடுப்பது நல்லது.”

 குமரேசன் தலையசைக்கும் தவறையும் செய்யாமல், சட்டியில் மண்ணை அள்ளிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

(தொடரும்)

என்.கணேசன்





Thursday, September 11, 2025

சாணக்கியன் 178

 

சுசித்தார்த்தக் சென்றதும் பர்வதராஜன் கண்களைக் கூர்மையாக்கினான். இருட்டில் இருக்கும் இடத்தைப் பற்றிக் கூடுதலாக அறிய முயன்றான். சில அடிகள் தள்ளி ஒரு நாற்காலி இருப்பது மட்டும் புலனாகியது. அதற்கு மேல் எதுவும் தெரியவில்லை. அங்கு நிலவிய அமானுஷ்ய அமைதி பயமுறுத்துவதாக இருந்தது. அவனைத் தீர்த்துக் கட்ட ஆச்சாரியர் செய்திருக்கும் ஏற்பாடாக இது இருக்குமோ என்ற புது பயம் அவனுக்குள் மெல்ல எழுந்தது. அவன் தன் இடுப்பில் சொருகியிருந்த குறுவாளைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். சிறிது நேரம் அங்கே எந்தச் சத்தமும் இல்லை. பின் மெல்ல யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது

 

பர்வதராஜன் கண்களைச் சுருக்கிக் கொண்டு பார்த்தான். நிழலாய் ஒரு உருவம் தெரிந்தது. “வணக்கம், ஹிமவாதகூட அரசரேஎன்று ஒரு குரல் கேட்டது.

 

பர்வதராஜன் கைகளைக் கூப்பியபடி சொன்னான். “வணக்கம். தங்களைக் காண முடிந்தால் சரியான ஆளிடம் தான் நான் பேசுகிறேனா என்பதை என்னால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.”

 

எதிரே இருந்த உருவம் ஒரு மர முக்காலியை இருவருக்கிடையே தள்ளி வைத்து, பர்வதராஜனின் அருகிலிருந்த அகல்விளக்கை எடுத்து அந்த முக்காலியில் வைத்தது. இப்போது சற்று கூடுதல் வெளிச்சம் விழுந்ததால் எதிரே ராக்ஷசர் தெரிந்தார். அவரைப் பார்த்ததும், இங்கே அவனை வரவழைத்தது சாணக்கியரின் சதி அல்ல என்று அவன் சந்தேகம் தெளிந்து நிம்மதி அடைந்தான்.  

 

தாங்கள் அடியேனின் அழைப்பிற்குச் செவிமடுத்து வந்ததற்கு மிக்க நன்றி ராக்ஷசரே. இது தங்கள் பெருந்தன்மையை எனக்கு உணர்த்துகிறது. இதை நான் என்றும் நினைவில் வைத்திருப்பேன்.”

 

அரசியலில் இலாபகரமானதை மட்டுமே, அதுவும் அனுகூல சமயங்களில் மட்டுமே, அனைவரும் நினைவு வைத்துக் கொள்கிறார்கள் என்பதை உணர்ந்திருந்த ராக்ஷசர் இது போன்ற வெற்று வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரவில்லைஅவர் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். “ஏன் அழைத்தீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?”

 

பர்வதராஜன் கைகூப்பியபடி எழுந்து நின்றான். “முதலில் அமருங்கள் ராக்ஷசரேபின் பேசுவோம்

 

ராக்ஷசர் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தார். அவர் அமர்ந்த பின்  கைகூப்பியபடியே தானும் அமர்ந்த பர்வதராஜன் சொல்ல ஆரம்பித்தான். “அற்ப சகவாசம் பிராண சங்கடம் என்பார்கள். அந்தப் பிராண சங்கடத்தைச் சில நாட்களாக நான் உணர ஆரம்பித்திருக்கிறேன் ராக்ஷசரேஅந்தச் சங்கடத்தை உணர ஆரம்பித்த பிறகு தான் அந்தச் சகவாசமே அற்பத்தனமானது என்பதும் புரிய ஆரம்பிக்கிறது என்பது தான் வேதனை. ஆனால் என் முட்டாள்தனத்தைப் பற்றிப் பேச நான் தங்களை அழைக்கவில்லை. தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள ஆசைப்படும் நான் அதற்குப் பிராயச்சித்தம் செய்யவும் எண்ணுகிறேன்.”

 

ராக்ஷசர் சொன்னார். “பிராயச்சித்தம் செய்ய முடிந்த சுதந்திரமான நிலையில் நீங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை ஹிமவாதகூட அரசே. எதற்கும் நீங்கள் சந்திரகுப்தனிடமும், சாணக்கியரிடமும் அனுமதி பெறவேண்டிய நிலையில் அல்லவா இருக்கிறீர்கள்

 

பர்வதராஜன் அந்தப் பேச்சில் இருந்த ஏளனத்தைப் பெரிதுபடுத்தவில்லை. அவன் சொன்னான். “நான் என் மனசாட்சியைத் தவிர வேறு யாரிடமும், எதற்கும் அனுமதி கேட்பதில்லை ராக்ஷசரே. அது அனுமதித்த பின் யார் கருத்தையும் நான் லட்சியமும் செய்வதில்லை.”

 

நல்லதுஎன்ற ஒற்றைச் சொல்லில் சொன்ன ராக்ஷசர் மேற்கொண்டு என்ன என்பது போல அவனைப் பார்த்தார்.

 

பர்வதராஜன் மிகுந்த வருத்தத்தை முகத்தில் வரவழைத்துக் கொண்டபடி சொன்னான். “என் மனக்கணக்குகள் தவறாகி விட்டன ராக்ஷசரே. காரணம், ஆசிரியராகப் பணிபுரிந்த ஒரு மனிதன் தர்மம் தவறி நடக்கவே வழியில்லை என்று நான் நம்பிய முட்டாள்தனம் தான். பிறகு மெள்ள மெள்ள அந்த மனிதன் சூழ்ச்சியின் ஊற்றுக்கண் என்று எனக்குப் புரிந்து விட்டது. வெற்றி பெறும் வரை அவர் எனக்குக் காட்டிய முகம் ஒன்று, வெற்றிக்குப் பின் அவர் காட்டும் முகம் வேறு. வெற்றி பெறும் வரை நியாயஸ்தன் போலவே பேசி வந்த அவர் வெற்றிக்குப் பின்னாலோ தன்னுடைய இலாபத்தைத் தவிர வேறு எதையும் யோசிக்க மறுப்பவராகவே இருக்கிறார். அதையும் மனித சுபாவம் என்று எடுத்துக் கொண்டேன். ஆனால் அவர் மகத இளவரசி துர்தராவை, சந்திரகுப்தனுக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைக்க தனநந்தரை வற்புறுத்த ஆரம்பித்த பிறகு என்னால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.”

 

பொறுத்துக் கொள்ள முடியாமல் என்ன செய்தீர்கள்?” என்று ராக்ஷசர் கேட்ட போது பர்வதராஜன் திகைத்தான். இந்த மனிதனை வார்த்தை ஜாலத்தால் மயக்குவது சுலபமல்ல என்பது புரிந்தது. பின் மெல்ல சுதாரித்துக் கொண்டவனாய் சொன்னான். “எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் என் எதிர்ப்புக்கு அவரிடம் எந்த மரியாதையும் இருக்கவில்லை. வெற்றி பெற்றவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அகங்காரத்தோடு நினைக்கிற மனிதனிடம் என்ன பேச முடியும். சாணக்கியர் நியாயம் பேசும் என்னைத் தவிர்த்து தானே மகத அரசரிடம் பேரம் பேச ஆரம்பித்தார். அதைப் பேரம் என்று சொல்வதும் தவறு. மிரட்டல் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். மிரட்டி தனநந்தனைச் சம்மதிக்க வைத்து விட்டார். ஆனால் சம்மதித்த பின்னும், அந்தத் தந்தைக்கு மகளின் திருமணம் வரை இங்கிருக்க அனுமதி தர மறுத்தது தான் கொடுமையிலும் கொடுமை....”

 

சிறிது நேரம் பேசக்கூட முடியாதபடி உணர்ச்சிவசப்பட்டவனாக நடித்த பர்வதராஜன் பின் தன்னைக் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொள்பவன் போல் காட்டிக் கொண்டு தொடர்ந்தான். “... இதையெல்லாம் பார்த்த பின் இனியும் இந்த மனிதனிடம் கூட்டு வைத்துக் கொள்வது தர்மமாகாது என்று முடிவெடுத்தேன். ஆனால் என்னால் தனியாக எதுவும் செய்ய முடியாது என்பதையும் புரிந்து வைத்திருந்தேன். வெளிப்படையாகத் தொடர்ந்து எதிர்த்தால் நான் இங்கேயே என் மரணத்தையும் சந்திக்க வேண்டி வரலாம் என்பதே இப்போதைய யதார்த்தம். அதனால் தான் சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் வெல்ல, அவருக்கிணையான அறிவாளியான உங்கள் உதவியை நாட உத்தேசித்தேன்...”

 

ராக்ஷசர் சொன்னார். “நானே மறைந்து வாழும் நிலைமையில் இருக்கிறேன். என்னால் என்ன செய்ய முடியும்?”

 

நீங்கள் தனி மனிதர் அல்ல ராக்ஷசரே. இப்போதும் தங்களுக்கு விசுவாசிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். நீங்கள் மனம் வைத்தால் ரகசியமாய் எத்தனையோ செய்ய முடியும்.”

 

நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?”

 

ஆச்சாரியரின் பலவீனத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

 

ஆச்சாரியரின் பலவீனம் என்ன?”

 

ஆச்சாரியரின் பலமே தான் அவருடைய பலவீனமும் கூட. இரண்டுமே சந்திரகுப்தன் தான். ஒன்றுமில்லாத அவனை எல்லாமாகவும் ஆக்கிய பிறகு அவருடைய பேராயுதம் அவன் தான். அவன் இல்லாமல் அவரால் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் அவனைக் களத்திலிருந்து நீக்கி விட்டால் அவரும் வேறுவழியில்லாமல் தானாகக் களத்திலிருந்து நீங்கி விடுவார். ஏனென்றால் வேறு யார் மூலமாகவும் களத்தில் நீடிக்க அவர் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளவில்லை. அது எனக்கு நன்றாகவே தெரியும்.”

 

ராக்ஷசர் முன்பே யோசித்து வைத்திருந்த திட்டமும் அதுவாகவே இருந்தது. சந்திரகுப்தன், துர்தரா இருவருக்குமிடையே நடக்கும் திருமணத்தைத் தடுத்து நிறுத்தும் ஒரே வழியாக அவர் அதையே நினைத்திருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேட்டார். “அந்த வேலையை ஏன் நீங்கள் செய்யக் கூடாது. நீங்கள் சாணக்கியரின் கூட்டாளியாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறீர்கள். நானோ அவரது எதிரியாகவும், உயிருக்குப் பயந்து மறைந்து வாழ்பவனாகவும் இருக்கிறேன்.”

 

பர்வதராஜன் சொன்னான். “நான் எப்போதும் அவரது முழுக் கண்காணிப்பில் இருக்கிறேன். நான் என்ன செய்தாலும் அவர் உடனுக்குடன் அறிந்து விடுவார். இந்தச் சந்திப்புக்கே நான் இந்த அதிகாலை வேளையில் எப்படி சிரமப்பட்டு வந்திருக்கிறேன் என்பது உங்களுக்கும் தெரியும். ஆனால் நீங்கள் இன்னும் பிடிபடாமல் இருக்கிறீர்கள். இப்போதும் உங்கள் விசுவாசிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். நீங்கள் மனம் வைத்தால் அவர்களைக் கொண்டு சந்திரகுப்தனைக் கொல்வது முடியாத காரியம் அல்ல.”

  

(தொடரும்)

என்.கணேசன்