என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, July 17, 2023

யோகி 5

 

கிருஷ்ணமூர்த்தி போன வேகத்திலேயே அந்த மொட்டைக் கடிதத்தை எடுத்துக் கொண்டு திரும்பி வந்தார். சொன்னபடியே அந்த மொட்டைக் கடிதத்தை இணைத்து தன் கைப்பட புகாரை எழுதிக் கொடுத்தார். கொடுக்கையில் இன்ஸ்பெக்டரிடம் அவர் அழாத குறையாக வேண்டிக் கொண்டார். “என் மகளுக்கு ஏதாவது ஆகறதுக்கு முன்னாடி தயவு செஞ்சு சீக்கிரம் போய் விசாரிங்க....” சொல்லச் சொல்ல அவருக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

 

இதற்கு முன்பே ஏதாவது ஆகியிருக்கவும் வாய்ப்பிருக்கிறதே என்றும் அவர் அறிவு அவரை எச்சரித்தது. காரணம் கடிதம் தபாலில் தான் வந்திருக்கிறது. இன்று தபாலில் வந்து சேர்கிறது என்றால், நேற்று எழுதி தபால் பெட்டியில் அது போடப்பட்டிருக்க வேண்டும். ஒரு நாள் கழிந்து விட்டது...

 

இன்ஸ்பெக்டர் செல்வம் சொன்னார். “கவலையே படாதீங்க சார். இனி நான் செய்யப் போற முதல் வேலையே இது தான். போய்ட்டு வந்து நிலவரத்தை ராத்திரிக்குள்ளே உங்களுக்குச் சொல்றேன்... நிம்மதியாய் இருங்க. நீங்க பயப்படற அளவுக்குப் பெருசா எதுவும் நடக்கவோ, நடந்திருக்கவோ வாய்ப்பில்லை. ஏன்னா, சோஷியல் மீடியா, பத்திரிக்கை எல்லாம் இருக்கறதுனால ரொம்ப தைரியமா ஆசிரமத்து ஆள்களும் தப்பு செஞ்சுட முடியாது... ”

 

இன்ஸ்பெக்டர் சொன்னது சற்று தைரியம் தந்தது. கிருஷ்ணமூர்த்தி கைகூப்பினார். ”ரொம்ப நன்றி.”

 

கிருஷ்ணமூர்த்தி திரும்ப வீடு வந்து சேரும் போது சாயங்காலமாகி விட்டது. அதன் பின் தான் அவரும், சேதுமாதவனும் மதிய சாப்பாட்டையே அரைகுறையாய் சாப்பிட்டார்கள். இயல்பாக ருசித்துச் சாப்பிட முடிந்த மனநிலையில் இருவருமே இல்லை.

 

சேதுமாதவனுக்கும், கிருஷ்ணமூர்த்தி சொன்ன தகவல்கள் மனநிம்மதியைக் குலைத்திருந்தன. சிறிய விஷயத்தை ஆசிரமத்து ஆட்கள் பெரிதாக்குகிறார்கள் என்று தோன்றியது. திரும்ப யோசிக்கையில், அது சிறிய விஷயம் அல்லவோ என்ற சந்தேகமும் பலமாக எழுந்தது.   

 

சிறிது நேரத்தில் சேதுமாதவனின் நண்பர்கள் அமீர் பாயும், மைக்கேலும் வந்தார்கள். அமீர் பாய் அத்தெருவில் ஒரு சிறு மளிகைக்கடை வைத்திருக்கிறார். மைக்கேல் ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர். அவர்கள் இருவர் வீடுகளும் அதே தெருவில் தான் இருந்தன. தினமும் மூவரும் சேர்ந்து தான் வாக்கிங் போவார்கள். இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பூங்கா வரை நடந்து சென்று, அந்தப் பூங்காவில் சுமார் முக்கால் மணி நேரம் அமர்ந்து பேசி விட்டுத் திரும்புவார்கள். அன்று நடந்துள்ளதை எல்லாம் கேள்விப்பட்டு அவர்களும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தார்கள்.

 

அமீர் பாய் வருத்தத்தோடு சொன்னார். “இப்ப எல்லாம் ஆன்மீகம்கிற பேர்ல அக்கிரமங்க அதிகமாய் நடக்குது. எல்லா மதங்கள்லயும் இது தான் நிலைமை.”  மைக்கேல் அதை ஆமோதித்து தலையசைத்தார்.

 

அந்த நேரத்தில் கிருஷ்ணமூர்த்தியின் கைபேசி இசைத்தது. பேசியது இன்ஸ்பெக்டர் செல்வம் தான். “சார் யோகாலயத்துல நான் போய் விசாரிச்சேன். உங்க மகள் கிட்டயே பேசினேன். அவங்க ஆபத்து எதுவும் இல்லைன்னும், பாதுகாப்பாய் அங்கே இருக்கறதாவும் சொல்லிட்டாங்க.”

 

கிருஷ்ணமூர்த்தி சொன்னார். “அதை அவ என்கிட்டயே வந்து நேர்லயே சொல்லி இருக்கலாமே. ஒரு நிமிஷத்துல என் சந்தேகமும், பயமும் தீர்ந்திருக்குமே

 

அதைத் தான் சார் நானும் உங்க மகள் கிட்ட கேட்டேன். அவங்களுக்கு ஆசிரம விதிமுறை எதையும் மீற மனசில்லையாம். அதனால தான் உங்களை நேர்ல சந்திச்சு பேச விரும்பலையாம். அதனால அவங்களுக்கு ஆபத்துன்னு நினச்சு  நீங்க பயப்பட அவசியமேயில்ல சார். நிம்மதியாய் இருங்க...”

 

கிருஷ்ணமூர்த்திக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இன்ஸ்பெக்டர் போனை வைத்து விட்டார்.

 

சேதுமாதவன் மகனைக் கேட்டார். “என்னடா விஷயம்?”

 

கிருஷ்ணமூர்த்தி அதிர்ச்சியிலிருந்து மீளாமல், இன்ஸ்பெக்டர் சொன்னதை அப்படியே சொன்னார். கேட்டு விட்டு சேதுமாதவனும் திகைத்தார்.

 

மைக்கேல் கேட்டார். “சைத்ரா அப்படி சொல்லியிருக்க வாய்ப்பில்லைன்னு நீங்க நினைக்கிறீங்களா?”

 

கிருஷ்ணமூர்த்தி சொன்னார். “ஆமா சார். ஏன்னா எங்க குடும்பத்துல எப்பவுமே சடங்கு, சம்பிரதாயம், வழிமுறைகளை விட அதுக்குப் பின்னாடி இருக்கற அர்த்தம், சாராம்சத்துக்கு அதிக முக்கியம் தருவோம். அப்பா அதைச் சொல்லி சொல்லி எனக்கும், சைத்ராவுக்கும் கூட எங்க வாழ்க்கைல அது ஒரு பகுதியாவே ஆயிடுச்சு. நான் அவள் சன்னியாசியானதைக் கூட எதிர்த்தவன் கிடையாது. இன்னைக்கு அவளைப் பார்க்கப் போனது கூட எங்க உறவைப் புதுப்பிச்சுக்க அல்ல. அப்படி இருக்கறப்ப என் மகள் நேர்ல வந்துஎந்த ஆபத்தும் இல்லை, தைரியமா போங்கன்னு சொல்ல ரெண்டு வினாடி கூட ஆகாது. அதை சொல்ல அவங்க அனுமதிக்கலை. அப்படிச் சொல்ல என் மகளும் விரும்பலைன்னு சொல்றதை என்னால நம்ப முடியல சார். என் மகளைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். நீங்க என்னப்பா சொல்றீங்க?”

 

சேதுமாதவன் சொன்னார். “எனக்கும் சைத்ரா அப்படி சொல்லியிருப்பாள்னு தோணல

 

சிறிது நேரம் அங்கே கனத்த மௌனம் நிலவியது. அமீர்பாய் சொன்னார். “என் சொந்தக்காரன் அந்தப் போலீஸ் ஸ்டேஷன் இருக்கற ஏரியால தான் இருக்கான். அந்த இன்ஸ்பெக்டரைப் பத்தி அவன் கிட்ட கேட்டால் அவன் சரியாய் சொல்வான். அந்த இன்ஸ்பெக்டர் பேரென்ன?”

 

கிருஷ்ணமூர்த்தி சொன்னார். “செல்வம்

 

அமீர்பாய் உடனே கைபேசியில் அந்த உறவினருக்குப் போன் செய்து பேசினார். பரஸ்பர நலம் விசாரிப்புக்குப் பின் ஸ்பீக்கரை ஆன் செய்து விட்டுக் கேட்டார். “உங்க ஏரியா போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் எப்படிப்பட்ட ஆள்?”

 

ரொம்ப மோசமான ஆள் பாய் அவன். சரியான வசூல் ராஜா. ஏன் பாய் கேட்கறீங்க?”

 

என்னோட நண்பர் ஒருத்தர் அங்கே ஒரு புகார் தந்துட்டு வந்திருக்கார். அந்த ஆள் நேர்மையா அதை விசாரிப்பானான்னு ஒரு சந்தேகம் வந்துச்சு. அதான் கேட்டேன்.”

 

அவரு அவன் கிட்ட புகாரோட கொஞ்சம் பணத்தையும் குடுத்துட்டு வந்திருந்தா அவன் சரியா விசாரிப்பான். எவனை விசாரிக்கிறானோ அவன் அதை விட அதிகம் பணத்தை குடுத்தா அந்த ஆளுக்குச் சாதகமா ரிப்போர்ட் எழுதிடுவான். அவன் இந்த ஸ்டேஷனுக்கு வந்து நல்லா சம்பாதிச்சுட்டான் பாய்....”

 

அமீர்பாய் கைபேசியை சட்டைப்பையில் வைத்தபடி சொன்னார். “அப்படின்னா அந்த இன்ஸ்பெக்டர் காசை வாங்கிட்டு தான் அவங்களுக்கு சாதகமா உங்க கிட்ட சொல்லியிருக்கணும்

 

மைக்கேல் யோசனையுடன் சொன்னார். “மேலிடத்துல செல்வாக்கு இருக்கற யாராவது நமக்குத் தெரிஞ்சவங்க இருந்தா தான் நமக்கு உண்மை என்னன்னு தெரிஞ்சுக்க முடியும்...”

 

கிருஷ்ணமூர்த்தி சொன்னார். “முதலமைச்சரே அப்பாவோட நெருங்கிய நண்பர் தான் சார். எங்க நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன். சி எம் இன்னைக்கு காலைல தான் ட்ரீட்மெண்டுக்காக அமெரிக்கா போனார்...”

 

சுமார் பதினைந்து ஆண்டுகளாக சேதுமாதவனிடம் நெருங்கிப் பழகியிருந்த போதும் அவர் இதுவரை முதலமைச்சருடன் இருந்த நட்பு குறித்து ஒரு முறை கூடச் சொல்லி இருக்காததால், அமீர் பாயும், மைக்கேலும் ஆச்சரியத்துடன் சேதுமாதவனைப் பார்த்தார்கள்.

 

சேதுமாதவன் மெல்லச் சொன்னார். “ஆமா.... ஒன்னாம் க்ளாஸ்ல இருந்து காலேஜ் வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் ஒன்னா தான் படிச்சோம்

 

அமீர் பாய் குற்றம் சாட்டும் பாவனையில் சொன்னார். “இத்தனை நாள் பழகியும் நீங்க சொல்லவேயில்லை...”

 

அதைப் பெருமையாகச் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்பது போல் சேதுமாதவன் மௌனம் சாதித்தார்.

 

கிருஷ்ணமூர்த்தி அமீர் பாயிடம் சொன்னார். “முதலமைச்சரான பிறகு இவர் போய் அவரை ஒரு தடவையும் பார்க்கவுமில்லை...”

 

சேதுமாதவன் அன்று மதியம் கிருஷ்ணமூர்த்தியிடம் சொன்ன காரணங்களையே தயக்கத்துடன் தன் நண்பர்களிடமும் சொன்னார். இப்படியும் ஒரு மனிதரா என்று அவர்கள் இருவரும் சேதுமாதவனைப் பார்த்தார்கள்.

 

கிருஷ்ணமூர்த்தி சொன்னார். “ஒருவேளை இவர் அவர் கிட்ட போய்ட்டு வந்துட்டு இருந்திருந்தா அவரோட செகரட்டரி அல்லது அவருக்கு வேண்டிய வேற யாராவது நெருங்கின ஆள்களோட பரிச்சயம் ஆயிருக்கும்... அவங்க கிட்ட நாம உதவி கேட்டிருக்கலாம்...”

 

அமீர் பாய் கேட்டார். “முதலமைச்சரோட பர்சனல் போன் நம்பராவது இருக்கா?”

 

சேதுமாதவன் இல்லை எனத் தலையசைத்தார்.

 

போன் நம்பர் இருந்தா அவர் அங்கே போனவுடனயாவது பேசலாமேன்னு தான் கேட்டேன்என்றார் அமீர் பாய்.

 

மைக்கேல் சொன்னார். “இப்ப வர்றப்ப ந்யூஸ் பாத்துட்டு தான் வர்றேன். அவர் அங்கே போய்ச் சேர்ந்தவுடனே நேராய் ஆஸ்பத்திரிக்குத் தான் போறாராம். அந்த நிலைமைல தான் அவர் இருக்கார்

 

அப்படியானால் முதலமைச்சரைத் தொடர்பு கொள்ள வாய்ப்பேயில்லை. சேதுமாதவனை நினைவு வைத்திருக்கக்கூடிய முதல்வரின் மனைவியும் தற்போது உயிருடன் இல்லை. இனி என்ன செய்வது என்று அவர்கள் நால்வரும் யோசித்தார்கள்.


(தொடரும்)

என்.கணேசன்






Thursday, July 13, 2023

சாணக்கியன் 65

 

ஸ்காவதி நகரத்தை மாளவத்தைப் போல பிரச்சினையான பகுதியாக யவனர்கள் நினைக்கவில்லை என்பதால் அங்கே நகரக் காவலதிகாரி அதீத எச்சரிக்கை கொண்டவனாக இருக்கவில்லை.  அந்த நகருக்குள் நுழைந்த சாணக்கியர் மீது அவனுக்குச் சந்தேகம் எழவில்லை. தனியாக வந்த அந்த அந்தணர் அவன் பார்வைக்கு ஒரு சாதாரண யாத்திரீகராகவே தோன்றினார். விசாரித்த போது அவரும் தீர்த்த யாத்திரைக்குக் கிளம்பியிருக்கும் தட்சசீல வாசியாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.  

 

நீங்கள் இங்கே வந்திருக்கும் காரணம்?”

 

என் நண்பரின் உறவினர் இங்கே வசிக்கிறார். யாத்திரை போகும் வழியில் அவரை நலம் விசாரித்துக் கொண்டு வரும்படி என் நண்பர் சொன்னதால் வந்திருக்கிறேன்

 

உங்கள் நண்பரின் உறவினர் பெயர்?”

 

சாரகன்

 

அதற்கு மேல் கேள்விகள் எதுவும் அவரிடம் அவன் கேட்கவில்லை. சாணக்கியர் அமைதியாக நகரத்தினுள் பிரவேசித்தார். வீதிகளில் தெரிந்த மக்கள் அமைதியாகத் தெரிந்தார்கள். யவன வீரர்களும், மஸ்காவதி வீரர்களும் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட சரிசமமாகவே தெரிந்தாலும் அவர் பார்வைக்கு இரு படைவீரர்களிடையே நிறைய வேற்றுமைகள் தெரிந்தன. இன்னும் மஸ்காவதி வீரர்களால் யவன வீரர்களுடன் இயல்பாகக் கலந்துறவாட முடியாதது தெளிவாகவே தெரிந்தது. வழியில் மாடு மேய்த்துக் கொண்டு வந்த ஒரு இளைஞனிடம்  சாரகனின் வீடு எங்கிருக்கிறது என்று விசாரித்துத் தெரிந்து கொண்டு சாணக்கியர் சாரகனின் வீட்டை அடைந்தார். சில மாதங்களுக்கு முன்பு வரை சாரகன் கொல்லனாக இருந்ததன் அறிகுறியாக பழைய பட்டறை ஒன்று வீட்டின் முன்புறம் இருந்தது.    

 

வீட்டின் வெளியே வெறித்த பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்த கிழவர் தான் சாரகனாக இருக்க வேண்டும் என்று சாணக்கியர் யூகித்தார். ஆனால் தன் வீட்டின் முன் வந்து நிற்கும் அந்தணர் வழி தவறி அங்கே வந்து விட்டதாகவே சாரகன் நினைத்தது போலிருந்தது. அதனால் சாணக்கியர் தவறான இடத்திற்கு வந்து விட்டதை உணர்ந்து தானாகவே அங்கிருந்து போய் விடுவார் என்று எதிர்பார்த்தது போல் சாரகன் சலனமில்லாமல் அமர்ந்திருந்தார்.

 

ஆனால் சாணக்கியர் அப்படிப் போய் விடாமல் வணக்கம் தெரிவித்து முன்னாலேயே நின்ற போது தன்னைத் தேடி தான் வந்திருக்கிறார் என்பது உறுதியாகி சாரகன் மெல்லத் தளர்ச்சியுடன் எழுந்து நின்றார்.   

 

சாணக்கியர் கைகளைக் கூப்பியபடி சொன்னார். “நான் விஷ்ணுகுப்தன். தட்சசீலத்திலிருந்து வருகிறேன்.”

 

சாரகனும் இரு கைகளையும் கூப்பி வணங்கினார். ஆனால் எந்த வார்த்தைகளும் அவர் வாயிலிருந்து வெளிவரவில்லை.

 

சாணக்கியர் சொன்னார். “உள்ளே சென்று பேசுவோமா?”

 

சாரகன் அதை எதிர்பார்க்காதது போலிருந்தது. அவர் மெல்லச் சொன்னார். “பல அந்தணர்கள் எங்கள் வீட்டிற்குள்ளே வருவதில்லை. அதனால் தான் தங்களை உள்ளே அழைக்கவில்லை. மன்னிக்கவும்.”

 

சாணக்கியர் சொன்னார். “என் தாய் மண்ணில் நான் மிதிக்கக்கூடாத இடமென்று எதையும் நினைப்பதில்லை.”

 

சாரகன்வாருங்கள் அந்தணரேஎன்று சொன்னபடி தளர்ச்சியுடன் வீட்டுக்குள் நுழைந்தார். சாணக்கியர் அவரைப் பின் தொடர்ந்து வீட்டுக்குள் சென்றார். வீட்டிற்குள் பொருட்கள் எல்லாம் அங்கங்கேயே விழுந்து கிடந்தன. கிழவர் பொருட்களை ஒழுங்கிபடுத்தி வைக்கும் சிரமத்தை மேற்கொள்ளவில்லை என்பது தெரிந்தது. சாணக்கியரின் பார்வை வீட்டை ஒரு முறை அலசியதைக் கவனித்த சாரகன் வரண்ட குரலில் சொன்னார். ”ஒரு காலத்தில் நேசிக்கும் ஆட்கள் வீட்டிலும், வாழ்க்கையிலும் இருந்ததால் எல்லாமே ஒழுங்காக இருந்தன. இப்போது ஆட்களும் இல்லை. அர்த்தமும் இல்லை, ஒழுங்கும் இல்லை….”

 

சொல்லி விட்டு, பாய் எங்கே இருக்கிறது என்று அவர் ஒரு கணம் யோசித்தது போல் இருந்தது. அவர் கண்கள் மந்தமாக அங்குமிங்கும் பார்த்துக் கடைசியில் வீட்டின் ஒரு மூலையில் சாத்தி வைக்கப்பட்டிருந்த பாயைக் கண்டுபிடித்தன. அந்தப் பாயைத் தரையில் விரித்துஅமருங்கள் அந்தணரேஎன்றார்.

 

சாணக்கியர் அந்தப் பாயில் அமர்ந்தார்.  சாரகன் அவர் எதிரே தரையில் இருந்த இரண்டு மண்பாண்டங்களை ஒதுக்கி வைத்து விட்டு அமர்ந்தபடி மெல்லக் கேட்டார். “தாங்கள் என்ன விஷயமாக என்னைக் காண வந்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிந்து கொள்ளலாமா?”

                                                        

சாணக்கியர் சொன்னார். “எனக்கு நிறைய ஆயுதங்கள் வேண்டியிருக்கின்றன. இந்தப் பிரதேசத்திலேயே உங்களை விடச் சிறப்பாய் ஆயுதங்கள் செய்பவர் யாரும் இல்லை என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்….”

 

சாரகன் ஒரு கணம் கண்களை மூடியிருந்து விட்டுச் சொன்னார். “நான் தொழிலை நிறுத்தி பல மாதங்களாகி விட்டது. மூச்சு நிற்பதற்காக இந்த வீட்டில் தன்னந்தனியாகக் காத்திருக்கிறேன் அந்தணரே. மஸ்காவதி படையில் வீரர்களாக இருந்த என் இரண்டு பிள்ளைகளும் யவன வீரர்களால் அநியாயமாகக் கொல்லப்பட்டார்கள். அலெக்ஸாண்டர் அவன் படையில் சேர விருப்பமில்லாத வீரர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு இங்கிருந்து சென்று விடலாம் என்று எங்கள் அரசியிடம் அனுமதி அளித்தான். அவன் வார்த்தைகளை நம்பி நிறைய வீரர்கள் வெளியேறினார்கள். வெளியேறிய வீரர்களில் என் மகன்களும் இருந்தார்கள். பின்னாலேயே போய் யவனப்படை நிராயுதபாணிகளாய் இருந்த அவர்களைக் கொன்று குவிக்கும் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். உலகாள வந்தவனாக தன்னை உயர்த்திச் சொல்லும் அவன் தன் வாக்கைக் காப்பாற்றாத நீச்சனாக இருப்பான் என்று அவர்களுக்குச் சந்தேகமும் வந்திருக்காது. ஆனால் அப்படியே நடந்தது அந்தணரே. என் மகன்கள் இறந்து போனார்கள். நான் இன்னும் இருக்கிறேன்….. அவர்கள் உயிரை எடுத்துக் கொண்ட இறைவன் என் உயிரையும் அப்போதே எடுத்துக் கொள்ளாமல் ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறான் என்று இறைவனிடம் நான் கேட்காத நாளில்லை. இறைவன் ஏனோ மௌனமாகவே இருக்கிறான்….” சொல்லும் போது அவர் கண்கள் கலங்கின. குரல் தழுதழுத்தது.

 

சாணக்கியர் அமைதியாகச் சொன்னர். “உங்களுக்குப் பதிலளிக்கத் தான் இறைவன் என்னை இங்கே அனுப்பி வைத்திருக்கிறான், சாரகரே      

 

சாரகன் முகத்தில் திகைப்பு தெரிந்தது. அவர் சாணக்கியரைக் கூர்ந்து பார்த்தார். சாணக்கியர் முகத்தில் கேலி செய்யும் அறிகுறி எதுவும் தெரியவில்லை.  இந்த மனிதர் சித்தரோ? இறைவனின் தூதுவரோ?

 

சாணக்கியர் அமைதியாகச் சொன்னார். “உங்கள் உயிரையும் அப்போதே இறைவன் எடுத்து விட்டிருந்தால் உங்கள் மகன்களின் உயிரைப் பறித்த யவனர்களை யார் பழி வாங்குவார்கள் சாரகரே. பழி வாங்கிக் கணக்கைத் தீர்க்கத் தான் உங்களை இறைவன் வாழ வைத்திருக்கிறான் சாரகரே

 

சாரகன் முகத்தில் ஒரு மின்னல் வெட்டி மறுபடியும் இருள் சூழ்ந்தது.  அவர் சோகமாகச் சொன்னார். “மகன்கள் உயிரோடு இருந்த காலத்தில் தனியாக நின்று இரண்டு மூன்று வீரர்களையாவது வீழ்த்தும் திராணி இந்த உடலுக்கு இருந்தது அந்தணரே. ஆனால் என் பிள்ளைகளுடன் அனைத்துப் பலத்தையும் நான் இழந்து விட்டேன். இப்போது ஒரு வீரனைச் சமாளிக்கும் பலம் கூட இல்லாத நான் யவனர்களைப் பழி வாங்குவதென்பது முடியாத காரியம்….”

 

சாணக்கியர் சொன்னார். “தனியாக நின்று நீங்கள் யவனர்களுடன் போரிட வேண்டியதில்லை சாரங்கரே. அதற்காக எத்தனையோ வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் யவனர்களுடன் போரிட அவர்களுக்கு நீங்கள் ஆயுதங்கள் செய்து கொடுத்தால் போதும்….”

 

சாரங்கனிடம் தெரிந்த சோகம், விரக்தி, மந்தத் தன்மை எல்லாம் ஒரு கணம் விடைபெற்றன. அவர் தீர்க்கமாகக் கேட்டார். “நீங்கள் யார் அந்தணரே. நான் பல தேசங்களுக்கு ஆயுதங்கள் தயாரித்துத் தந்திருக்கிறேன். பல அரசர்கள், சேனாதிபதிகள், படைத்தளபதிகள் தங்களுக்காகப் பிரத்தியேகமாக ஆயுதங்கள் என்னிடமிருந்து வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள். ஆனால் இது வரை எந்த அந்தணரும் இந்தக் கோரிக்கையோடு என்னிடம் வந்ததில்லை….”

 

சாணக்கியர் சொன்னார். “இந்தப் புனிதமான பாரத மண்ணின் புத்திரன் நான். யவனர்கள் என் தாய் மண்ணை ஆக்கிரமிப்பது கண்டு பொறுக்க முடியாத ஒரு சாதாரண அந்தணன். இந்தத் தேசத்தின் மிகப்பெரிய சாபக்கேடு பிரிவினை தான் சாரகரே. நீங்கள் மஸ்காவதியை உங்கள் தாய்நாடாக நினைக்கிறீர்கள். உங்கள் சிந்தனை அதைத் தாண்டி பாரதத்தைத் தாயகமாக நினைக்க அனுமதிக்கவில்லை. இப்படி ஒவ்வொருவரும் சிறு துண்டு நிலங்களைத் தங்கள் தாய்நாடாக நினைக்கிறார்கள். அதைத் தாண்டி அவர்கள் சிந்தனைகள் செல்வதில்லை.  இந்தக் குறுகிய சிந்தனையால் நாம் சிறு சிறு பிரிவுகளாய் பிரிந்து பலவீனமாக நிற்பதால் தான் அலெக்ஸாண்டர் இந்த மண்ணில் காலடி வைக்கவும், சிறு சிறு பகுதிகளாக ஆக்கிரமித்துக் கொண்டே போகவும் முடிந்தது. ஒட்டு மொத்த பாரதமாக வலிமையோடு சேர்ந்து எதிர்த்திருந்தால் அலெக்ஸாண்டர் இங்கே வந்திருக்க முடியாது. நாம் தனித்தனியாகப் போராடித் தோற்கிறோம். தனித்தனியாக எல்லாவற்றையும் இழக்கிறோம். தனித்தனியாக துக்கத்தில் மூழ்குகிறோம். ஆனால் ஒன்றாகச் சேர்ந்து நின்றால் தோல்விக்கும், இழப்பிற்கும், துக்கத்திற்கும் வாய்ப்பே இருக்காது.  இந்தப் பாடத்தை இப்போதாவது கற்றுக் கொண்டால் நாம் யவனர்களை இந்த மண்ணிலிருந்து துரத்த முடியும்….”

 

சாணக்கியர் நீண்ட நேரம் பேசினார். நிறைய விஷயங்கள் பேசினார். அவர் பேசிய நிறைய விஷயங்கள் சாரகனுக்குப் புரியவில்லை. ஆனால் யவனர்களுக்கு எதிராக ஒரு பேரியக்கம் தயாராகிக் கொண்டிருக்கின்றது என்ற செய்தி அழுத்தந்திருத்தமாகப் புரிந்தது. அந்த இயக்கம் யவனர்களோடு போர் புரிய சாணக்கியர் ஆயுதங்கள் செய்து தரக் கேட்கிறார் என்பது புரிந்தது.  அவர் உருவாக்கித் தரும் ஒவ்வொரு ஆயுதமும், அவர் மகன்களைக் கொன்ற யவனரை வீழ்த்தவும், துரத்தவும் பயன்படும் என்பதும் புரிந்தது. அதன் பிறகு வேறு எதுவும் புரிய வேண்டியதில்லை என்று நினைத்தார் அவர். சாரகனின் சோர்வான உடலில் சக்தியும், சோகமான மனதில் உற்சாகமும் தானாகப் பெருக்கெடுக்க ஆரம்பித்தது….    

 

(தொடரும்)

என்.கணேசன்

Monday, July 10, 2023

யோகி 4

 

கிருஷ்ணமூர்த்தி ஒரு கணம் பேச்சிழந்தார். அவர் மகளை அவர் மிக நன்றாக அறிவார். அவளுடைய தந்தை அவளுக்கு ஆபத்து என்று கேள்விப்பட்டு வந்திருக்கிறார், ஆபத்தில்லாமல் பாதுகாப்பாக இருப்பதாக அவளே நேரடியாகச் சொன்னால் நிம்மதியாகப் போய் விடுவார் என்ற நிலைமை இருக்கையில், ஆசிரமத்தின் அற்ப விதியைக் காரணம் காட்டி நேரில் வர மறுப்பவள் அல்ல அவர் மகள். இந்த மனிதர் பொய் சொல்கிறார். உண்மையில் அவர் மகளுக்கு இங்கே ஆபத்து இருக்கிறது

 

அவர் வெளிப்படையாகச் சொன்னார். “நீங்க பொய் சொல்றீங்க. என் மகள் அப்படிச் சொல்லியிருக்க மாட்டா

 

அந்த நடுத்தர வயதுத் துறவி அவரை இரக்கத்தோடு பார்ப்பது போல் பார்த்துச் சொன்னார். ”எல்லா உறவுகளையும் துறந்து வருவதற்குப் பெயர் தான் துறவு. நீங்கள் இன்னும் மகள் என்ற பழைய பாசத்தோடு தான் இருக்கிறீர்கள். அதை திரும்பவும் வளர்த்து விட விரும்பாமல் தான் அவர்கள் உங்களைச் சந்திக்க விரும்பவில்லை என்ற உண்மையைத் தயவு செய்து நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் ஐயா. தயவு செய்து நிம்மதியாகப் போங்கள். அவருக்கு ஆபத்து இல்லை. அப்படி அவருக்கு ஏதாவது ஆபத்து வர நாங்கள் அனுமதிக்க மாட்டோம்…”

 

அவர் இரக்கத்தோடு பார்த்ததும், சொன்னதும் கிருஷ்ணமூர்த்தியை மிகவும் ஆத்திரமடையச் செய்தது. வாசலில் நின்றிருந்த திடகாத்திரமான இளைஞர்கள் இப்போது உள்ளே விட்டார்கள். அவர்கள் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்த பார்வையும் ரவுடித்தனமாக இருந்தது. அவர் இனியும் ஏதாவது முரண்டு பிடித்தால் அவரைத் தூக்கி வெளியே வீசவும் அவர்கள் தயங்க மாட்டார்கள் போலத் தோன்றியது.

 

கிருஷ்ணமூர்த்தி ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு உறுதியான குரலில் அந்த நடுத்தர வயதுத் துறவியைப் பார்த்து சொன்னார். என் மகள் நீங்க சொல்ற மாதிரி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை. எனக்கு இப்ப அந்த மொட்டைக் கடிதம் உண்மை தானோன்னு சந்தேகமாயிருக்கு. உங்க வார்த்தைகளை நம்பி நான் நிம்மதியாய் போக முடியாது.”

 

திரும்பவும் நீங்கள் அவரை உங்கள் மகள் என்றே சொல்கிறீர்கள். அந்த பந்தத்தை அவர் எப்போதோ துறந்து விட்டார். இப்போது அவர் எங்கள் ஆசிரமத்து சன்னியாசினி.”

 

கிருஷ்ணமூர்த்தி பொரிந்து தள்ளினார். “துறந்தது அவள் தான், நானல்ல. எனக்கு எப்பவும் அவள் என் மகள் தான். என்னய்யா பெரிய விதிமுறை. ஆனானப்பட்ட ஆதிசங்கரரே அம்மா இறந்தவுடன, அம்மாவுக்கு கொள்ளி போட ஓடோடி வந்தவருய்யா. அவரை விடப் பெரிய துறவிகளாய்யா நீங்கல்லாம்…”  

 

அதற்கு பதில் சொல்லும் அவசியம் இல்லை என்பது போல்  அந்தத் துறவி அமைதியாக நின்றார். கிருஷ்ணமூர்த்திக்கு இருந்த ஆத்திரத்தில் அந்த ஆளை ஓங்கி ஒரு அறை அறைந்தால் என்ன என்று தோன்றியது. தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னார். “என் மகளைப் பார்த்துப் பேச எனக்கு அனுமதி தராட்டி நான் போலீஸ்ல  புகார் தர வேண்டியிருக்கும்….”

 

அந்தத் துறவி அலட்சியம் கலந்த அமைதியுடன் சொன்னார். “உங்கள் விருப்பப்படி செய்யுங்கள் ஐயா

 

கிருஷ்ணமூர்த்திக்குத் தன் காதுகளை நம்ப முடியவில்லை. என்ன மனிதர்கள் இவர்கள் என்று தோன்றியது. அதற்கு மேல் அவர்களிடம் பேச ஒன்றுமில்லை என்று நினைத்தவராக அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.

 

யோகாலயத்தின் உள்ளே கண்காணிப்பு காமிரா பதிவில், வரவேற்பறையில் நடப்பதை எல்லாம் ஒரு மனிதர் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய கூர்மையான பார்வை கிருஷ்ணமூர்த்தியை விட்டு, கண நேரமும் அகலவில்லை. அங்கிருந்து கிருஷ்ணமூர்த்தி வெளியேறும் வரை பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர்,  அவர் வெளியேறியவுடன், தன்னருகில் நின்று கொண்டிருந்த அடியாளிடம் அமைதியாகச் சொன்னார். “அந்த ஆள் எங்கே போறான், என்ன செய்யறான்னு பாரு

 

அந்த அடியாள் தலையசைத்து விட்டு நகர்ந்தான்.

 

கிருஷ்ணமூர்த்தி யோகாலயத்திலிருந்து கிளம்பி சிறிது தூரம் சென்று காரை நிறுத்தி விட்டு யோசித்தார்.  அவர் காரைத் தொடர்ந்து, பைக்கில் வந்து கொண்டிருந்தவனும் தன் பைக்கை நிறுத்தி தன் கைபேசியை எடுத்துப் பேசுவது போல் பாவனை செய்தான். ஆனால் அதற்கு அவசியமே இருக்கவில்லை. கிருஷ்ணமூர்த்திக்கு, தன்னை ஒருவன் பின் தொடர்ந்து வருவதோ, தான் காரை நிறுத்தியவுடன் சற்று தொலைவில் அவனும் நின்று விட்டதோ தெரிந்திருக்கவில்லை. அவர் கவனமெல்லாம் அவர் மகள் பற்றிய யோசனைகளிலேயே இருந்தது.

 

சைத்ராவுக்கு உண்மையிலேயே ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்பது இப்போது அவருக்கு உறுதியாகத் தெரிந்து விட்டது. அப்படி ஆபத்து இருக்கா விட்டால் அவர்கள் அந்த முட்டாள்தனமான விதிமுறையைச் சொல்லி அனுமதி மறுத்திருக்க மாட்டார்கள். ஒரு நிமிடம் அவள் வந்து பேசி விட்டுப் போவதில் இருபக்கத்தாருக்கும் பிரச்சினை தீர்ந்து போயிருக்கும். அந்தச் சின்ன விஷயத்தையும் அவர்கள் செய்யாமல் விட்டது, அது அவர்களுக்குச் சின்ன விஷயமாக இல்லை என்பதையே காண்பிக்கிறது. அதனால் இனி யோசிக்க எதுவும் இல்லைபோலீஸில் புகார் செய்வதைத் தவிர வேறு வழியில்லை

 

ஒரு முடிவுக்கு வந்தவராக, கிருஷ்ணமூர்த்தி கைபேசியை எடுத்து, யோகாலயம் எந்தப் பகுதி போலீஸ் ஸ்டேஷனின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்று இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தார். பின் காரைக் கிளப்பினார். அப்போதும் சரி, அதன் பின்னும் சரி, தன்னை ஒருவன் பைக்கில் பின் தொடர்வதை அவர் அறியவில்லை. மகளும், மகளின் பாதுகாப்பும் மட்டுமே அவர் மனதில் நிறைந்திருந்ததால், வேறு எதற்கும் அவர் மனதில் இடம் இருக்கவில்லை.

 

போலீஸ் ஸ்டேஷனில் அவர் உள்ளே நுழைந்த போது போலீஸ் இன்ஸ்பெக்டர் இருக்கவில்லை. அவருக்குத் தன்னுடைய புகாரை ஏட்டிடம் தந்து விட்டுச் செல்ல மனமிருக்கவில்லை.

 

ஏட்டிடம் அவர் கேட்டார். “இன்ஸ்பெக்டர் எப்ப வருவார்?”

 

அரை மணி நேரத்துல வந்துடுவார் சார்.”

 

கிருஷ்ணமூர்த்தி தலையசைத்து விட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார். அங்கு காத்திருக்கும் போதும் அவர் மனம் மகளுக்காக மிகவும் கவலைப்பட்டது. அவளுக்கு என்ன ஆபத்து, அது நிகழ்ந்து விட்டதா, இல்லையா என்று எதுவுமே புரியாத நிலைமை கொடுமையாகத் தோன்றியது. இன்ஸ்பெக்டருக்காகக் காத்திருக்கும் சமயத்தில் அப்பாவுக்குப் போன் செய்து தெரிவிக்க வேண்டும் என்று தோன்றினாலும், இந்த கவலைக்குரிய தகவலை அவருக்குத் தெரிவித்து அவர் நிம்மதியையும் கெடுக்க வேண்டாம் என்றும் தோன்றியது.

 

நல்ல வேளையாக இருபது நிமிடங்களிலேயே இன்ஸ்பெக்டர் வந்து விட்டார். கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்தபடியே தன் அறைக்குள் அவர் போக, ஏட்டு சொன்னார். “நீங்க போய்ப் பாருங்க சார்

 

கிருஷ்ணமூர்த்தி இன்ஸ்பெக்டரிடம் சென்று விசிட்டிங் கார்டு தந்து  தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இன்ஸ்பெக்டரின் மேசையில் இருந்த பெயர்ப்பலகை அவர் பெயர்செல்வம்என்று தெரிவித்தது. 

 

டாக்டர் என்று பார்த்தவுடனேயே இன்ஸ்பெக்டர் முகத்தில் மரியாதை தெரிந்தது. “உட்காருங்க சார்

 

உட்கார்ந்த கிருஷ்ணமூர்த்தி, தான் வந்த காரணத்தை அவரிடம் சொன்னார். இடைமறிக்காமல் அவர் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்ட இன்ஸ்பெக்டர் கேட்டார். “அந்த மொட்டைக் கடிதத்தைக் கொண்டு வந்திருக்கீங்களா சார்?”

 

அது வீட்டுல இருக்கு. நான் எடுத்துகிட்டு வரல. யோகாலயத்துல சைத்ராவைப் பார்க்க அனுமதிக்க மாட்டாங்கங்கற யோசனையே எனக்கு வரல…”

 

இன்ஸ்பெக்டர் புரிகிறது என்பது போல் தலையசைத்து விட்டுச் சொன்னார். “சார் அவங்க பெரிய இடம். யோகி பிரம்மானந்தாவைப் பார்க்க முதலமைச்சர், கவர்னர், பிரதமர் எல்லாம் வந்துட்டுப் போறாங்க. அதனால நீங்க அந்த மொட்டைக் கடிதத்தோட உங்க புகாரையும் எழுத்து வடிவுல தந்தா தான் நான் அங்கே போய் விசாரிக்கவே முடியும்... இல்லாட்டி சரியான காரணம் இல்லாமல் நான் போய் அவங்கள தொந்தரவு செய்யறதா அவங்க மேலிடத்துல புகார் செய்யக்கூடியவங்க…”

 

கிருஷ்ணமூர்த்திக்குப் புரிந்தது. அவர் சொன்னார்  தாராளமா புகாரை எழுதித் தர்றேன். அந்த மொட்டைக் கடிதத்தையும் உடனே போய் எடுத்துகிட்டு வந்து தர்றேன்ஆனா நீங்க எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விசாரிக்கணும்….”

 

சொல்லி விட்டு வேகமாகப் போகும் அவரையே பார்த்துக் கொண்டு இருந்த, அவர் கார் கிளம்பும் சத்தம் கேட்டவுடன் யோகாலயத்துக்குப் போன் செய்தார்.


(தொடரும்)

என்.கணேசன்