என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, December 18, 2017

ஷாமனின் சக்தி யாத்திரை!

அமானுஷ்ய ஆன்மீகம் – 24


ஷாமனாக மாறுவது என்பது ஒருவருக்கு மறுபிறவியைப் போன்றதாகக் கருதப்படுகிறது. பழையது அனைத்தையும் புறந்தள்ளி நீக்கி விட்டு, புதியது ஒன்றாக முழுவதுமாக மாறி விடுவது யாருக்குமே எளிதான அனுபவமாக இருக்க முடியாது. ஆனால் பழையதைப் பிடித்துக் கொண்டே இருந்தால் புதியதில் புகுதல் முடியாது என்கிற இக்கட்டான நிலையில் அறியாமையும், பலவீனமுமான பழைய வாழ்க்கையை நிராகரித்து ஞானமும், சக்தியும் நிறைந்த புதிய வாழ்க்கைக்கு ஒரு ஷாமன் முழு மன உறுதியுடனேயே நுழைய வேண்டியிருக்கிறது.  

எடுத்திருக்கும் புதிய அவதாரத்தின் அனைத்துப் பரிமாணங்களுக்கும் புதியது என்பதால் எல்லாவற்றையும் சந்தேகத்துடனும், பயத்துடனேயுமே ஒரு ஷாமன் சில காலமாவது  அணுகவேண்டி வருவது இயற்கையாகவே இருக்கிறது. எனவே ஷாமனாக வாழ்வைப் புதிதாகத் துவங்கும் காலகட்டத்தில் பயம், சந்தேகம், குழப்பம் ஆகியவற்றை ஷாமன் அதிகமாகவே வெளிப்படுத்த வேண்டி வருகிறது. உணவில் அதிக விருப்பம் இல்லாமை, மற்றவர்களுடன் சேர்ந்து பழகுவதில் நாட்டமில்லாமை, வெறித்த பார்வை, அதிக தூக்கம், அதிக மௌனம் முதலானவை ஷாமனின் புதிய சக்தி யாத்திரையில் ஆரம்ப நிலைகளாக இருக்கின்றன.

ஷாமன்கள் அனைவரும் இணையான சக்திகள் படைத்தவர்களாக இருப்பதில்லை என்பது ஷாமனிஸத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம். ஷாமனிஸத்தில் கடவுள் என்கிற உச்ச தெய்வீக சக்தி அதிகம் பேசப்படுவதில்லை. மனித சக்திக்கும், இறை சக்திக்கும் இடைப்பட்ட பலவித மகாசக்திகளே அதிகம் பயன்பாட்டு சக்திகளாக கவனிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஷாமனும் தன் இயல்பிற்கும், தகுதிக்கும் தகுந்த அந்தவகை ஒரு மேல்நிலை சக்தியாலேயே தொடர்பு கொள்ளப்படுகிறார். அந்த சக்தியும் தனக்கு இணையான சக்திகளையே அந்த ஷாமனுக்கு அறிமுகப்படுத்தவும், பயிற்சிகள் தரவும் செய்கின்றன. எனவே அந்த சக்தி அல்லது சக்திகளின் எல்லைகளே அந்த ஷாமனுடைய எல்லைகளாகவும் அமைந்து விடுகின்றன.

அதனால் ஷாமன்களில் பல சக்தி நிலைகள் கொண்ட ஷாமன்கள் இருக்கிறார்கள். அவர்களை அந்தந்த நிலைகளிலேயே ஷாமனிஸம் ஏற்றுக் கொள்கின்றது. அந்த ஷாமன்களை அவர்களுக்குரிய ஸ்தானங்களையே தந்து அந்த அளவிலேயே பயன்படுத்திக் கொள்கிறது. ஒரு ஷாமனின் நோய்க்காலம் முடிந்து ஷாமன் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்த பின்னர் மூத்த ஷாமன்கள் மற்றும் சமூக முக்கியஸ்தர்கள் முன்னிலையில் அந்த ஷாமன் வரவழைக்கப்படுகிறார். புதிய ஷாமனிடம் அவர்கள் சில கனவுகளுக்கு அர்த்தம் என்ன என்று  கேட்பார்கள். தாவர, மிருக சக்திகளிடம் அறிந்தவை என்ன, அவை அனுப்பிய செய்திகள் என்ன என்றெல்லாம் கேட்பார்கள். பதில்களை புதிய ஷாமன் விவரித்துச் சொல்ல வேண்டும். அந்தப் புதிய ஷாமன் தான் அடைந்திருக்கும் சக்தியை அவர்கள் முன் நிரூபிக்கவும் வேண்டும். அதையெல்லாம் வைத்தே அவர்கள் புதிய ஷாமனின் வெற்றி குறித்தும், புதிய ஷாமனைத் தொடர்பு கொண்ட சக்திகள் குறித்தும், புதிய ஷாமனின் சூட்சும அறிவுத் திறன் குறித்தும் ஒரு முடிவுக்கு வருவார்கள். அந்த தாவரம், மிருகம் சம்பந்தப்பட்ட உடைகளும், சின்னங்களையுமே அந்த ஷாமன் அணிவது வழக்கமாகப் பின்பற்றப்படும். அதனால் ஷாமன்கள் அணியும் உடைகள், அணிகலன்கள், சின்னங்கள் வைத்தே ஒருவர் அந்த ஷாமன் குறித்த விவரங்கள் பலவற்றையும் அறிய முடியும்.

ஷாமனிஸம் பின்பற்றப்படும் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் ஷாமன்களின் எண்ணிக்கை ஏறத்தாழவும் ஒரே அளவில் இருக்காது. உதாரணத்திற்கு சைபீரியா பகுதியில் ஷாமன்கள் மிக அபூர்வமாக அங்கொருவரும், இங்கொருவருமாகத் தான் இருப்பார்கள். ஆனால் அமேசான் பகுதியில் ஷாமன்களின் எண்ணிக்கை அதிகமிருக்கும்.     

ஷாமன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே அவர்களுக்குத் தீட்சை அளித்து அவர்கள் கௌரவிக்கப்பட்டு விடுவதில்லை. ஷாமன்கள் தாங்கள் அறிந்தவற்றையும், தங்கள் சக்திகளையும் மெருகேற்றி, பலப்படுத்திக் கொள்ள அவர்களுக்கு உரிய காலம் தரப்படுகின்றது. கவனம் சிதறாமல், அலட்சியம் இல்லாமல் ஷாமன்கள் தாங்கள் அறிந்த சக்திகளை வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் முழுவதுமாகத் தேர்ச்சி பெற்று விட்டார்கள் என்ற நம்பிக்கை வந்த பின்னரே அவர்களுக்கு தீட்சை அளிக்கப்படுகின்றது.

தீட்சையின் போது ஷாமன் தன்னை நிரூபித்தாக வேண்டும். அந்த முறைகள் சில பகுதிகளில் மிகவும் கடினமானதாக இருக்கும். உதாரணத்திற்கு வடகிழக்கு சீனப்பகுதியில் மஞ்சு இனத்து மக்களின் ஷாமன் பொது இடத்தில் எரியும் நிலக்கரியின் மீது நடக்க வேண்டும். நம் ஊரின் தீ மிதித்தல் சீனாவின் அப்பகுதியிலும் உண்டு. அப்படி ஷாமன் நடந்து காலில் எந்த தீக்காயமும் இல்லாமல் இருந்தால் தான் உயர்சக்திகள் அல்லது ஆவிகளின் அருள் பெற்றிருக்கிறார் என்று நம்பினார்கள். அதே போல் பனிக்காலத்தில் பனிப்பரப்பில் ஒன்பது குழிகள் தோண்டி ஒரு குழியில் இறங்கி மறு குழி வழியாக மேலே வர வேண்டும். அப்படி ஒன்பதாவது குழி வரை இறங்கி ஏறி வந்தால் தான் அந்த ஷாமன் சக்தி படைத்த ஷாமன் என்று ஒத்துக் கொள்வார்கள்.

சீனாவில் அக்காலத்தில் பின்பற்றப்பட்ட இந்த கடுமையான சோதனை அருகே இருந்த திபெத் மூலமாக வந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறார்கள். திபெத்திலும் இது போன்ற கடுமையான சோதனைகள் உண்டுஅங்கும் கடும் உறைபனிக்கால இரவில் நனைந்த துணிகளை தன் வெற்றுடம்பின் சூட்டாலேயே ஒரு யோகி உலர்த்திக் கொடுக்க வேண்டும். அந்த அளவு சூட்டைத் தன் உடலில் எந்த பாதிப்பும் இல்லாமல் உருவாக்கிக் கொடுக்க முடிந்தவரே ஷாமன் என்று அங்கீகரிக்கப்பட்டார். உறைபனிக்காலத்தில் உடல் சூட்டை எந்த அளவு உயர்த்த முடியும் என்பதை வைத்தே எஸ்கிமோக்களும் ஷாமனாக ஒருவரை அங்கீகரிக்கிறார்கள். சில பகுதிகளில் இரண்டு ஷாமன்கள் சண்டையிட்டு வெற்றி வாகை சூடுபவர் சிறந்த ஷாமனாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.


பிற்காலத்தில் அது போன்ற கடுமையான சோதனைகள் கைவிடப்பட்டன. உடல் சக்தியை விட, நிகழ்த்த முடிந்த அமானுஷ்ய அறிவுசக்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தர ஆரம்பித்தார்கள். அதே போல அவர்கள் ஆவியுலகில் இருந்து பெற்றுத்தரும் ஆலோசனைகள் எந்த அளவு பலன் அல்லது வெற்றி தருகின்றது என்பதை வைத்தே ஷாமன்கள் மதிக்கப்பட்டார்கள்.

ஒரு ஷாமனின் சக்தி யாத்திரையில் அவர் மூன்று வித்தைகளில் முழுவதுமாகத் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒன்று மூலிகைகள் குறித்த முழுமையான ஞானம். இது தாவர சக்திகளைத் தொடர்பு கொண்டு அவற்றின் ஆசி பெற்றவர்க்கே முழுமையாக வாய்க்கும் என்று ஷாமனிஸம் நம்புகிறது. அதனால் எந்த நோய்க்கும் எந்தத் தாவரத்தின் எந்தப் பகுதி மருந்தாகலாம் என்று சொல்வது மட்டுமல்லாமல் அந்தத் தாவரப் பகுதியை உடனடியாகத் தருவித்து உயிர்காப்பது கைதேர்ந்த  ஷாமனின் அத்தியாவசியத் திறமையாக ஷாமனிஸம் கருதுகிறது.

இரண்டாவது ஒரு ஷாமன் மிகுந்த மனோ தைரியம் படைத்தவராக இருக்க வேண்டும் என்று ஷாமனிஸ மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆபத்துக் காலங்களில் அந்த மனோதைரியம் இல்லா விட்டால், எதிரில் வரும் சக்தி கண்டு அந்த ஷாமன் பயந்து அதன் ஆளுமைக்கு உட்பட்டு விட்டால் ஷாமன் தானும் அழிந்து தன்னைச் சேர்ந்தவர்களையும் அழித்து விடும் அபாயம் இருக்கிறது என்று எண்ணினார்கள். ஒரு ஷாமனுடைய முக்கிய வேலையே பல அமானுஷ்ய சக்திகளைக் கையாள்வதில் இருப்பதால் அதை மனம் நடுங்காமல் ஆளுமையோடு செய்யும் திறன் ஷாமனுக்கு இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்று நம்பினார்கள்.

மூன்றாவது ஒரு ஷாமன் அமானுஷ்ய சக்திகளைத் தொடர்பு கொள்ள முடிந்த தியான மயக்க நிலைக்குச் செல்லும் சக்தியை முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சாதாரண உணர்வு நிலையில் எந்த அமானுஷ்ய சக்தியையும் ஒருவரால் தொடர்பு கொள்ள முடியாது என்பதால் குறுகிய நேரத்தில் அந்த உயர் தியான மயக்க நிலைக்குப் போய் அந்த அமானுஷ்ய சக்திகளைத் தொடர்பு கொண்டு அறிய வேண்டியதை அறிந்து தன் இன மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆபத்துக் காலங்களில் ஒவ்வொரு கணமும் மிக முக்கியமானது என்பதால் விரைவாகச் சரியாகச் செயல்பட ஷாமனின் காலம் தாழ்த்தாத விரைவான தகவல் அறியும் முறைக்கு அதிமுக்கியத்துவம் தருகிறார்கள்.

இந்த மூன்றிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஒரு ஷாமனின் சக்தி யாத்திரை பரிபூரணமாகிறது.

(அமானுஷ்யம் தொடரும்)


என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 18.08.2017

Thursday, December 14, 2017

இருவேறு உலகம் – 61

                           
தயின் கார் நெருங்கிய போது க்ரிஷ் ஜன்னலோரம் தெரிந்தான். அவன் இருட்டில் நின்றிருந்த மர்ம மனிதனைக் கவனிக்கவில்லை. அவன் தன் அண்ணனுடன் ஏதோ சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தான். மர்ம மனிதன் தன் முழு சக்தியையும் திரட்டி க்ரிஷ் மீது செலுத்தினான். பொதுவாக மர்ம மனிதனின் இது போன்ற சக்திப் பிரயோகங்களில் எதிராளிகள் செயலற்றுப் போய் விடுவது வழக்கம். அவர்கள் இரும்புச்சங்கிலியால் இறுக்கமாகக் கட்டப்பட்டவர்கள் போல் உணர்வார்கள். அசையவோ பேசவோ முடியாது. மர்ம மனிதனாகத் தீர்மானித்து அவர்களை விடுவிக்கும் வரை அவர்கள் அப்படியே தான் இருக்க வேண்டி வரும். ஆனால் முதல் விதிவிலக்காக க்ரிஷ் இருந்தான். அவன் அண்ணனைப் பார்த்துக் கொண்டே பேசியது சிறிய அளவிலும் தடைப்படவில்லை. மர்ம மனிதன் அனுப்பிய சக்திகள் க்ரிஷை அடையவே இல்லை. உதயின் கார் சிறிது நேரத்தில் மர்ம மனிதனின் கண்பார்வையிலிருந்து மறைந்தது.

இப்படி ஆகலாம் என்று மனதின் ஒரு மூலையில் முன்பே உள்ளுணர்வு சொல்லி இருந்த போதும் அவனுக்கு அதை முழுமையாக நம்பிவிட முடிந்திருக்கவில்லை.  மாஸ்டரைப் போல் மாஸ்டரை விட ஒருபடி மேலே சக்திகள் சேர்த்து வைத்திருந்த தானும் தோற்றுப் போனது அவனுக்குப் பெரும் அவமானமாக இருந்தது. எத்தனையோ பெருந்தலைகளுடன் மோதி ஜெயித்தவன், மாஸ்டரிடமே அவ்வப்போது கண்ணாமூச்சி விளையாட முடிந்தவன் ஒரு பொடியனிடம் தோற்று நிற்பது சகிக்கக் கூடியதாக இல்லை. உள்ளுக்குள் எழுந்த கோபம் விஸ்வரூபம் எடுத்தது. இனி அவன் ஓயப்போவதில்லை. அந்தக் கோபமே இனி அவனது பெருந்தூண்டுதலாக இருக்கும். அந்தக் கோபம் அவனை மேலும் பலப்படுத்துவதாகவும், முயற்சி செய்ய வைப்பதாகவும் இருக்கும். மாஸ்டரும் க்ரிஷைப் படிக்க முடியாததை அவமானமாகவே நினைத்திருப்பார். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதும், மாஸ்டருடன் க்ரிஷ் என்ன பேசினான், அங்கு என்ன நடந்தது என்பதும் தெரிந்தால் தான் அடுத்து என்ன செய்வது என்பதை அவன் தீர்மானிக்க முடியும்….


தய்க்கு தம்பி ஒரு சூப்பர் மேனாகத் தெரிந்தான். அவன் ஒருவனிடம் போன் பேசி முடித்து வருவதற்குள் அவனை விட அதிகமாக க்ரிஷ் மாஸ்டரிடம் நெருங்கி விட்டது ஆச்சரியமாக இருந்தது. அவன் அவரிடம் எதையோ கற்றுக் கொள்ளப் போவதாகவும், அதை அவர் அவனுக்குக் கற்றுத்தர சம்மதித்து விட்டதாகவும் தெரிந்த போது கண்கள் விரியத் தம்பியைப் பார்த்தான். அவரைப் பார்க்க அனுமதி கிடைத்ததும் சந்தித்ததும் கூடப் பெரும் பாக்கியமாக நினைப்பதாக மாணிக்கம் போன்றவர்களே சொல்கையில் இவன் சில நிமிடங்களிலேயே எப்படி இதைச் சாதித்தான் என்று பிரமிப்பாக இருந்தது. ஆனால் க்ரிஷின் முகபாவனையில் இருந்து எதையும் அவனால் யூகிக்க முடியவில்லை. இவன் நேர்மை, மனசாட்சி என்பதை எல்லாம் கொண்டாடாதவனாக இருந்திருந்தால் அரசியலில் அவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டிருப்பான்…. கல்லுளிமங்கன் காணாமல் போன போது நடந்த எதையும் வீட்டாரிடம் கூடச் சொல்லவில்லை. இப்போதும் ஒன்றுமே தெரியாதது போல் தான் முகத்தை வைத்திருக்கிறான்…. அந்த அழுத்தம் கூட உதய்க்கு நினைக்கப் பெருமையாக இருந்தது. மெலிதாகப் புன்னகைத்தான்.

க்ரிஷ் கேட்டான். “என்ன விஷயம்?”

”நீ அரசியலுக்கு வந்தா எப்படி இருக்கும்னு நினைச்சேன்…..”

“ஆமா அது ஒன்னு தான் பாக்கி”

“வாய்கிழிய அரசியல்வாதிகளைப் பத்திப் பேசறியே. அரசியல்ல இறங்கி தான் பாரேன். அப்ப தெரியும் ஒரு அரசியல்வாதிக்கு எத்தனை கட்டாயங்கள் இருக்குன்னு…”

“உதய் நான் ஒன்னு கேட்டா நேர்மையா பதில் சொல்லுவியா?அரசியல்வாதி தப்பு செய்யறதுல எத்தனை கட்டாயத்துல? எத்தனை பேராசையில….”

உதய் பதில் பேசவில்லை. இரண்டுக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு தான் இருக்கிறது. அதை எப்போது தாண்டுகிறோம் என்பதே தெரியாத அளவுக்கு மெல்லிய கோடு அது. தாண்டியபின் யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை…..


க்ரிஷ் போன பிறகு சுரேஷால் மாஸ்டரிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை. “க்ரிஷ் வசியக்கலை கத்துகிட்ட மாதிரி இருக்கு மாஸ்டர்…”

மாஸ்டர் புன்னகைத்தார். சுரேஷ் முகத்தில் பெரிய குழப்பம் தெரிந்தது. அவரை ஆகாய அளவு உயர்த்தி வைத்துப் பூஜிப்பவன் அவன். அவர் திடீரென்று கீழே இறங்கி வந்து விட்டது போல் அவன் உணர்ந்தது அவன் தவறல்ல. க்ரிஷைச் சந்திப்பதற்கு முன் அவனைச் சீடனாக அவர் ஏற்றுக் கொள்வார் என்று யாராவது சொல்லியிருந்தால் அவரே சொன்ன ஆளை ஏளனமாகத் தான் பார்த்திருப்பார். அவர் க்ரிஷைச் சீடனாக ஏற்றுக் கொண்டதற்கு மிக முக்கிய காரணம் அவனுடைய சமரசமில்லாத நேர்மை தான். அவன் எதிரியின் ஆளாய் இருந்தால் கூட அவனுடைய நேர்மையை அவரால் சந்தேகிக்க முடியவில்லை….

சுரேஷிடம் மென்மையான குரலில் சொன்னார். “பெற்ற ஞானமெல்லாம் ஒரு விதத்தில் கடன் தான் சுரேஷ். தகுதி வாய்ந்த சீடன் வந்து கேட்டால் தந்தே ஆக வேண்டிய கடன்……”  

“கேட்டவன் நம் குருவைக் கொன்ற எதிரியின் ஆளாக இருந்தால் கூடவா..?”

“ஆமாம்…. அவனுக்கு அந்தக் குற்றத்தில் பங்கில்லாத வரையில்…”

“உங்களிடமிருந்து கிடைத்த ஞானத்தை அவன் தவறாகப் பயன்படுத்திக்க வாய்ப்பு இருக்கில்லையா மாஸ்டர்”

“யாருமே ஞானத்தைத் தவறாகப் பயன்படுத்திக்க முடியாது சுரேஷ். தவறாகப் பயன்படுத்த முடிஞ்சா அது ஞானம் அல்ல. அது வெறும் அறிவு மட்டும் தான். அறிவை யாரும் நல்லதுக்கும் பயன்படுத்திக்கலாம் கெட்டதுக்கும் பயன்படுத்திக்கலாம்…. ஆனால் அறிவின் இந்தப் பிரச்னை ஞானத்துக்கு இல்லை…. ஞானம் நல்ல வழியை மட்டும் தான் காட்டும்….”

அவன் பேச்சிழந்து சிறிது நேரம் மௌனமாக நின்றான். ”ஆனாலும் இதுக்குப் பின்னால் எதோ சூழ்ச்சி இருக்கிற மாதிரி எனக்கு இப்பவும் தோணுது மாஸ்டர்…. நம்ம குருவைக் கொன்னவனோட ஆளாகவே மட்டும் பார்க்கறதால அப்படித் தோணுதான்னு தெரியலை. ஆனா தோணுது”

அவர் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தார். அவன் தொடர்ந்து சொன்னான். “நம்ம இயக்கத்துலயும் இதை எப்படி எடுத்துக்குவாங்கன்னு எனக்குத் தெரியல மாஸ்டர். எல்லாருமே க்ரிஷை எதிரி ஸ்தானத்துல வெச்சு தான் பார்க்கறாங்க. நீங்க வாரணாசி போயிருந்த போது இயக்கத்து ஆள்களைக் கூட்டி விஸ்வம் ஐயா குருவோட மரணத்தைச் சொன்ன போது எல்லாருமே கொதிச்சுப் போனதை நான் என் கண்ணால பார்த்தேன். எதிரியின் ஆளை நீங்க சிஷ்யனாய் ஏத்துகிட்டதை அவங்களால ஏத்துக்க முடியுமான்னு பயப்படறேன்…..”

தனிமனித சுதந்திரங்கள் தலைவருக்கு இருப்பதில்லை. இதனாலேயே தலைமைப் பொறுப்பு பல நேரங்களில் முள் கிரீடமாய் மாறிவிடுகிறது…. பிடிக்கிறதோ இல்லையோ தன்னைச் சார்ந்திருக்கும் மக்களை அனுசரிக்கும் அவசியமும், அவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிற பொறுப்பும் தலைவனுக்குக் கண்டிப்பாக இருக்கிறது…. பெருமூச்சு விட்ட மாஸ்டர் அமைதியாக சுரேஷிடம் சொன்னார். “விஸ்வத்து கிட்ட சொல்லி நம்ம இயக்கத்து ஆள்களை எல்லாம் சந்திக்க ஏற்பாடு செய்யச் சொல் சுரேஷ் நான் அவங்க கிட்டே பேச வேண்டியிருக்கு…..”

சுரேஷ் திகைத்தான். இதற்கு முந்தைய ஹரித்வார் கூட்டத்தில் எதிரி மீதும் க்ரிஷ் மீதும் வெறுப்பை உமிழ்ந்த உறுப்பினர்கள், க்ரிஷை சீடனாக ஏற்றுக் கொண்ட மாஸ்டரிடம் எப்படி நடந்து கொள்வார்கள் என்று பயந்தான்.

அதை மாஸ்டரால் படிக்க முடிந்தது. ஆனால் அவன் பயம் அவரைத் தொற்றிக் கொள்ளவில்லை. ஒருவேளை தலைமைப் பொறுப்பில் இருந்து விலக நேர்ந்தால் சிறு மனச்சுளிப்பு கூட இல்லாமல் அவர் விலகத் தயாராக இருந்தார்….

அது சுரேஷுக்குப் புரிந்தே இருந்தது. ஒரு சந்திப்பிலேயே க்ரிஷ் மாஸ்டரை இப்படி ஒரு நிலைமைக்கு வரவழைத்து விட்டானே என்று மனதுக்குள் பொருமினான்.

(தொடரும்)
என்.கணேசன் 

Wednesday, December 13, 2017

முந்தைய சிந்தனைகள் - 26

நான் எழுதியதில் இருந்து சில சிந்தனை அட்டைகள் -











என்.கணேசன்

Monday, December 11, 2017

ஒரு ஷாமன் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி?


அமானுஷ்ய ஆன்மீகம் - 23 

நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஷாமனிஸம் என்கிற ஆன்மிக முறை இப்போதும் உலக நாடுகளின் பல பகுதி மக்களின் கவனத்தைக் கவருவதற்கும், அதில் ஈடுபாட்டை ஏற்படுத்துவதற்கும் மிக முக்கிய காரணம் இருக்கிறது. ஒரு ஷாமனால் கடவுளுடனும், மற்ற சக்திகளுடனும் நேரடியாகத் தொடர்பு கொண்டு அறிய வேண்டியதை அறிய முடிகிறது என்பதே அந்தக் காரணம். தொடர்பு கொள்ள முடிந்த மற்ற சக்திகளில் தாவரம், விலங்குகள், ஆவிகள் என்று எல்லாமே சேர்கின்றன. அறிய முடிந்த விஷயங்களில் ஆரோக்கியம், ஞானம், வாழ்க்கைக்கு வேண்டிய மற்ற அனைத்து நன்மைகள் எல்லாம் சேர்கின்றன. இப்படி மனிதனின் தினசரி வாழ்க்கைக்கும், அவனுக்கு வேண்டிய சுபிட்சத்துக்கும் என்ன செய்ய வேண்டும் என்று வழிநடத்துவதால் ஷாமனிஸத்தில் ஒருவித நெருக்கத்தை நவீன மனிதனும் உணர முடிகிறது என்கிறார்கள் ஷாமனிஸ ஆராய்ச்சியாளர்கள்.

ஆனால் இதை எல்லாம் அறிந்து சொல்கிற ஷாமன் அந்த சமூகத்தில் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார் அல்லது அடையாளம் காணப்படுகிறார் என்பது சுவாரசியமான விஷயம். ஷாமனிஸம் உலகத்தின் பல பகுதிகளில் சிற்சில வித்தியாசங்களுடன் பின்பற்றப்படுவதால் ஷாமனாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதும், அங்கீகரிக்கப்படுவதும் கூட அதே போல் சில வித்தியாசங்களுடன் பொதுவானதாகவே இருக்கிறது.

ஷாமனாக ஒருவர் உருவாக்கப்படுவதில்லை, பிறக்கும் போதே ஷாமன் அதற்கேற்ற தகுதிகளுடன் வித்தியாசமாகவே பிறக்கிறார் என்று பல பகுதிகளில் பின்பற்றப்படும் ஷாமனிஸமும் நம்புகின்றது. சில சமயங்களில் ஒரு விரலோ, ஒரு பல்லோ, ஒரு எலும்போ கூடுதலாக அந்த நபரிடம் இருக்கலாம். அல்லது வேறு ஏதாவது பிரத்தியேக அம்சம் பார்ப்பவர் கண்களுக்கு வித்தியாசமாகத் தெரிந்து கொள்ளும்படி அந்த நபர் இருக்கக்கூடும் என்று நம்புகிறார்கள். சில நேரங்களில் ஏதாவது ஊனம் இருந்து, கூடவே அதீதமான நுட்பமான உயர் உணர்வுநிலை இருக்கும் பட்சத்தில் அதுவும் ஷாமனுக்கான அறிகுறியாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஆசைப்படுவதால் யாரும் ஷாமனாகி விட முடியாது என்றும் மேலான சக்திகள் தாங்கள் மனிதர்களிடம் தெரிவிக்க விரும்பும் செய்திகளைச் சரியாக அறிய முடிந்த நுண்ணறிவு படைத்த ஒருவரைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன என்றும் ஷாமனிஸம் நம்புகிறது.

அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர், தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்று அறிவது பெரும்பாலும் பிள்ளைப் பிராயம் முடிந்து இளமை அரும்பும் காலகட்டத்தில் தான். தத்ரூபமாக திவ்ய தரிசனமாய் ஏதாவது விசேஷக் காட்சிகள் தெரிதல், அடிக்கடி மயக்கமாதல், கடுமையாக உணர்ச்சிவசப்படுதல் முதலான அனுபவங்கள் தொடர்ந்து பல வாரங்கள் அவர்களுக்கு இருக்குமாம். பின் இறுதியாக ஒருநாள் அவர்கள் கனவில் மேலான சக்தி அல்லது ஆவி தோன்றி அவர்கள் அந்த நபர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைத் தெரிவிக்குமாம். அந்த நபருக்குள் அவரே அறியாமல் மறைந்திருக்கும் சக்திகளையும், அந்த நபரிடமிருந்து தாங்கள் எதிர்பார்ப்பது என்னவெல்லாம் என்பதையும் தெரிவிக்குமாம்.

அப்படி ஷாமனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எல்லாரும் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருப்பார்கள் என்று சொல்லி விட முடியாது. சிலர் பொதுவான இயல்பான வாழ்க்கை வாழ விரும்புவதும் உண்டு. ஆனால் அவர்கள் ஷாமனாவதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாது. அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வரும் வரை அவர்களை அந்த மேலான சக்தி அல்லது ஆவி ஏதாவது வகையில் வாட்டிக் கொண்டிருக்குமாம். மறுத்து விட்ட பின் அவர்கள் சரியாக உறங்குவதோ, நிம்மதியாக இருப்பதோ முடியாத காரியம் என்கிறார்கள். ஒருவழியாக அவர்கள் மானசீகமாக சம்மதம் தெரிவித்தபின் தான் அவர்கள் நிம்மதியாக இருக்க அந்த சக்தி அல்லது ஆவி அனுமதிக்குமாம். அதன் பின் ஷாமனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தொடர்ந்து மூன்று நாட்கள் அல்லது ஏழு நாட்கள் அல்லது ஒன்பது நாட்கள் மிக ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பார்கள். அதை ஷாமனின் நோய்க்காலம் என்கிறார்கள். சில அபூர்வ சந்தர்ப்பங்களில் அந்த உறக்க காலம் சில வாரங்கள் வரை தொடர்ந்து நீடிக்குமாம். அந்த நேரங்களில் வெளியுலக சத்தங்கள், நிகழ்வுகள் எதுவும் அந்த ஷாமனைப் பாதிப்பதில்லை.


அந்த நீண்ட தூக்க சமயத்தில் தான் மேலான சக்திகள் ஷாமனின் சூட்சும சரீரத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்து ஷாமனை அமானுஷ்ய சக்திகளுக்குத் தயார்ப்படுத்தும் என்கிறார்கள். அந்த சக்திகள் மேலும் பல சக்திகளை அந்த ஷாமனுக்கு அறிமுகப்படுத்துவதுடன் சில ரகசியங்களையும் வெளிப்படுத்தும் என்கிறார்கள். சக்திகளின் பாதையில் சூட்சும நிலையில் அது நீண்ட யாத்திரையாகவும், பல புதிய பரிமாணங்களின் படிப்பினையாகவும் அந்தப் புதிய ஷாமனுக்கு அந்தக் காலம் இருக்கும் என்கிறார்கள். அந்த ஷாமனின் நோய்க்காலத்தில் வெளியுலகப் பார்வைக்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அந்த ஷாமன் தேர்வாளர் சில சமயங்களில் அர்த்தமில்லாமல் பிதற்றிக் கொண்டிருப்பாராம். சில சமயங்களில் மயக்க நிலையிலேயே எழுந்து அங்குமிங்கும் ஓடுவதும் உண்டாம். அதன் பின் மீண்டும் பிணம் போல அசைவில்லாமல் படுத்துக் கிடப்பாராம்.  

சைபீரியா போன்ற பகுதிகளில் ஷாமனின் பிள்ளைகளில் ஒருவர் ஷாமனாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தன் தந்தையிடமிருந்து ஷாமனிஸ யாத்திரைக் கதைகள் கேட்டு, தந்தையின் ஷாமனிஸ செயல்பாடுகளை அருகிலிருந்து பார்த்து குழந்தைப்பருவத்திலிருந்தே தயாராவது இயல்பாக அப்பகுதிகளில் கருதப்படுகிறது. ஆனால் ஒரு ஷாமனின் எல்லாக் குழந்தைகளும் ஷாமனாக மாறிவிடுவதில்லை. மாறிவிடவும் முடியாது. அதற்கென்று பிரத்தியேக குணங்கள் ஒரு குழந்தைக்காவது தரப்பட்டிருக்கும் என்றும் அந்தக் குழந்தை ஷாமனாக உருவாகும் என்று நம்புகிறார்கள்

ஆனால் அப்படி உருவாகும் ஷாமன் கூட தந்தையிடமிருந்து அனைத்தும் கற்றுக் கொள்ள முடியாது. உண்மையான ஷாமனிஸ சூட்சுமங்களையும், ரகசியங்களையும் மேலுலக சக்திகள், ஆவிகளிடமிருந்தே அந்த ஷாமனும் பெற்றாக வேண்டும். அதனால் உண்மையான கற்றல் என்கிற நிகழ்வு அந்த ஷாமனின் நோய்க்காலத்தில் சூட்சும உலகிலேயே நடைபெறுகிறது. எல்லாம் கற்ற பின் தன் நோயைக் குணமாக்கிக் கொண்டு தெளிவாகிய பின்னரே ஒரு ஷாமன் புது வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்.

அமெரிக்கப் பழங்குடி இன ஷாமனிஸ மக்கள் ஷாமனைத் தேர்ந்தெடுக்கும் விதம் சற்று வித்தியாசமானது. ஒரு குறிப்பிட்ட வயது வந்த பின் தங்கள் பிள்ளைகளை அவர்கள் காட்டுக்கு அனுப்பி விடுவார்கள். காட்டில் தங்களை தற்காத்துக் கொண்டு பட்டினி கிடந்தும், மேலுலக சக்திகளிடம் பிரார்த்தனை செய்தும் அவர்கள் வாழ வேண்டும். அவர்களில் ஓரிருவருக்கு மட்டுமே மேலுலக சக்திகள், ஆவிகள் உயர்ந்த ஞானத்தின் திவ்ய தரிசனம் ஏதாவது ஒன்றைக் காட்டும். மற்றவர்கள் சாதாரணமாகத் திரும்பி வரும் போது அந்த ஓரிரு பிள்ளைகள் மட்டும் ஞானத்தின் திவ்ய தரிசனம் பெற்றவர்களாகத் திரும்பி வருவார்கள். அவர்கள் அங்குள்ள ஷாமனிடம் தங்கள் அனுபவத்தைச் சொல்ல அதைக் கவனமாகக் கேட்டுக் கொண்ட அந்த ஷாமன் மேலும் சில கேள்விகள் கேட்டு கிடைக்கும் பதில்களை வைத்து அந்தப் பிள்ளைகள் உண்மையில் ஷாமனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்களா இல்லையா என்று தீர்மானிப்பார்.

அந்தப் பிள்ளைகள் ஷாமனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தால் அவர்கள் அந்த ஷாமனிடம் மேலும் சில பாடங்கள் பெறுவார்கள். ஆனால் அப்போதும் அவர்கள் ஷாமனாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அவர்கள் காத்திருக்க வேண்டும். அவர்கள் கனவில் மேல் உலக சக்திகள் பேசி நேரடியாகச் சிலவற்றைச் சொல்லி, அந்தப்பிள்ளைகளும் ஷாமனாக சம்மதித்து ஒரு நீண்ட உறக்க மயக்க நிலையில் கிடந்து, முறையான பாடங்களையும் உண்மைகளையும் சூட்சும உலகில் பெற்ற பின்னரே ஷாமனாக மாற முடியும்.

மேலுலக அழைப்பு வந்த பின்னும் ஷாமனாக ஒருவர் சம்மதிக்கா விட்டால் என்ன ஆகும் என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் ஒரு ஷாமனிடம் கேட்ட போது மரணம் தான் நிகழும்என்று அந்த ஷாமன் சொல்லியிருக்கிறார். “நானே ஷாமனாக இருந்திராவிட்டால் என்றோ இறந்திருப்பேன்.”
                                                             
இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஷாமன் பின் சந்திக்கும் நிலைகள் என்ன? அந்த அமானுஷ்ய ஆன்மிக சுவாரசியங்களை அடுத்த வாரம் பார்ப்போம்.

(அமானுஷ்யம் தொடரும்)

என்.கணேசன்

நன்றி: தினத்தந்தி 11.8.2017

Thursday, December 7, 2017

இருவேறு உலகம் – 60


ன்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் க்ரிஷை மாஸ்டர் கூர்ந்து பார்த்தபடி கேட்டார். “இப்படி என்னைக் கேட்க உன் நண்பன் சொல்லி அனுப்பிச்சானா?”

அவர் பார்வையின் கூர்மையில் இருந்து விடுபட அவன் முயலவில்லை. நேராகவே அவர் பார்வையைச் சந்தித்தபடியே அவன் சொன்னான். “யாரும் எதையும் எனக்கு சொல்லி அனுப்பல. நான் இங்கே வந்து உங்களைப் பார்க்கற வரைக்கும் இப்படிக் கேட்கணும்னு நானே நினைச்சிருக்கல. உங்களைப் பார்த்தவுடன கேட்கணும்னு தோணுச்சு. கேட்டுட்டேன். அவ்வளவு தான்….”

அவரால் அவன் மனதை யோக சக்தி மூலம் அறிய முடியவில்லையே தவிர அவரது சாதாரண புரிதல்கள் தடைப்பட்டு விடவில்லை. அவனைப் போன்ற நல்லவனால் கூசாமல், கண்ணிமைக்காமல் பொய் பேச முடியாது….. அவன் பொய் சொல்லவில்லை என்பது தெரிந்தது.

ஆனாலும் அவர் முகத்தில் கடுமையை வரவழைத்துக் கொண்டு கேட்டார். “நான் ஏன் உனக்கு எதையும் சொல்லித் தரணும்?”

“உங்க குரு உங்களுக்கு எதுக்காகச் சொல்லிக் கொடுத்தாரோ, அதே காரணத்துக்காகத் தான்” அவன் புன்னகையோடு சொன்னான். “வாங்கினதைத் திருப்பிக் கொடுக்கறதும், கத்துகிட்டதை மத்தவங்களுக்குச் சொல்லிக் கொடுக்கறதும் தானே நியாயம். அப்ப தானே கடன் தீரும்”

மாஸ்டரால் புன்னகையைத் தவிர்க்க முடியவில்லை. இவன் மட்டும் எதிரியின் ஆளாக இருந்திரா விட்டால் இன்னேரம் இவனைக் கட்டி அணைத்துக் கொண்டாடி இருப்பார்…..

இருவரும் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்த சுரேஷ் திகைப்புடன் பார்த்தான். அவனுக்குத் தெரிந்து யாரும் மாஸ்டரிடம் இப்படி சரிசமமாய் இந்த வகையில் பேசியதில்லை. யாருக்கும் பேச தைரியம் வந்ததில்லை. இன்னும் க்ரிஷ் மண்டி போட்ட நிலையிலேயே இருந்தாலும், அவன் கைகள் மாஸ்டர் கால்களைப் பிடித்தபடியே இருந்தாலும் பேச்சில் பணிவு இல்லாமல் இருக்கிறதே என்று சுரேஷ் நினைத்தான். மாஸ்டர் கோபப்படுவதற்குப் பதிலாகப் புன்னகைத்தது அவனுக்குத் திகைப்பாய் இருந்தது.

மாஸ்டருக்கு முதல் முதலாய் குருவைச் சந்தித்த நினைவு வந்தது. குருவிடம் அவர் மரியாதைக் குறைவாகவும் ஏளனமாகவும் பேசியிருக்கிறார். துறவிகளையே தவறாகப் பேசி இருக்கிறார். அந்த வார்த்தைகளை எல்லாம் பொருட்படுத்தாமல் கட்டாயப்படுத்தி தன்னுடன் ரமணன் என்ற இளைஞனை குரு அழைத்துப் போகாமல் இருந்திருந்தால் இன்று மாஸ்டராக அவர் இருந்திருக்க முடியாது. வந்த சுவடே தெரியாமல் மறைந்து போகும் எத்தனையோ மனிதர்களில் ஒருவராக அவர் இருந்திருப்பார்….

”நான் நிறைய பேருக்குச் சொல்லிக் குடுத்து கடனை எப்பவோ தீர்த்துட்டேன்…..” என்று அவருடைய வாய் சொன்னாலும் அத்தனை பேரில் ஒருவன் கூட க்ரிஷ் உயரத்தை எட்டாதவன் என்பதை மனசாட்சி சத்தமாகவே அவரிடம் சொன்னது.

“அப்ப எனக்குச் சொல்லிக் குடுக்க மாட்டீங்களா?” அவன் அவரையே பார்த்து சின்ன வருத்தத்துடன் கேட்டான்.

அந்த முகவாட்டத்தைப் பார்க்க அவரால் முடியவில்லை. அவன் முகத்தைப் பார்த்து உறுதியாக மறுக்க அவருக்கு மனம் வரவில்லை. அவன் ஏன் என்று அடுத்ததாய் ஒரு கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வார்? உன் ‘நண்பன்’ தான் என் குருவைக் கொன்றவன் என்றா? அது சரியான பதிலாகுமா? கண்டிப்பாக அவருடைய குரு மரணமடைந்த விதம் பற்றி இவன் அறிந்திருக்க மாட்டான்…. அறிந்திருந்தால் ‘அவனை’  ‘நண்பன்’ என்று சொல்லித் திரியவும் மாட்டான். இவனைப் பொருத்த வரை அவன் நல்லவன். உயிரைக் காப்பாற்றியவன். வேறென்ன பொய் எல்லாம் சொல்லி வைத்திருக்கிறானோ அந்தப் பொய்களின் படியே உயர்ந்தவன். அவன் கைப்பாவையாக இவனை எடுத்துக் கொண்டதற்கு இவன் என்ன செய்வான். அன்னிய சக்தி தன் திட்டத்திற்குத் தூய்மையிலும் தூய்மையான, அறிவிலும் உச்சமான ஒருவனைத் தன் கைப்பாவையாகப் பயன்படுத்தப் போகிறது  என்று, என்றோ விதி தீர்மானித்த பின் வேறு விதமாய் செயல்படத்தான் இவனால் முடியுமா?

மாஸ்டர் குரல் மென்மையாகியது. “அப்படின்னா ஐஐடி படிப்பை விட்டுடப் போறியா?”

க்ரிஷ் சொன்னான். “அதை எல்லாம் விட மாட்டேன். சிஷ்யன்னா அந்தக் கால குருகுல முறைப்படியான சிஷ்யனா மாற என்னால முடியாது. நான் காலேஜுக்குப் போய் படிக்கற மாதிரி உங்க கிட்டயும் வந்து படிப்பேன். ஆனா ஒழுங்கா  ஆர்வமா உண்மையா படிப்பேன். ஒரு நல்ல மாணவனா இருப்பேன்….”

மாஸ்டர் அவனையே சில வினாடிகள் பார்த்தார். அவனைப் போன்ற ஒரு மாணவனை மறுத்தால் அது அவர் கற்ற மெய்ஞானத்திற்கு அவர் ஏற்படுத்துகிற களங்கமாக இருக்கும். விதி வலிது. அவனை அவரிடம் கொண்டு வந்து கொடுத்திருக்கிறது. முழுமையாக அவன் எதிரி கையிலேயே சிக்கிக் கொள்ளாமல் அவருக்கும் சிறிது கிடைத்திருக்கிறான். நல்லதை அவனிடம் தக்க வைக்க அவருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த விதத்தில் யோசிக்கையில் மனதின் குழப்பம் நீங்கியது.

அவனிடம் சொன்னார். “நீ படிக்க விரும்புகிற கலைக்கு நிறைய மனக்கட்டுப்பாடு வேணும்…. விளையாட்டு இல்லை…..”

‘அதெல்லாம் எனக்கு ஒரு விஷயமே இல்லை’ என்று நினைத்து சம்மதிக்கப் போகும் தருணத்தில் ஹரிணி நினைவுக்கு வந்தாள். முதல் முறையாக அவன் முகத்தில் ஒரு தயக்கம் தெரிந்தது. மெல்ல மாஸ்டரிடம் சொன்னான். “நான் ஒரு பொண்ணைக் காதலிக்கிறேன்…..”

உறுதியாகவும் தெளிவாகவும் பேசி வந்த க்ரிஷ் முதல் முறையாக தயக்கத்துடனும் வெட்கத்துடனும் சொன்ன விதம் மாஸ்டரைப் புன்னகைக்க வைத்தது. மென்மையாகச் சொன்னார். “காதல் முழு நேர உத்தியோகமாய் ஆகி விடாத வரைக்கும், பயிற்சி காலத்துல இடைஞ்சலாகவோ, கவனச்சிதறலுக்குக் காரணமாகவோ இல்லாத வரைக்கும் பிரச்னை இல்லை…. இந்தக் கலையில உச்சத்துக்குப் போன அந்தக்கால ரிஷிக்களே கல்யாணம் ஆகி மனைவி, குழந்தைகள்னு இருந்தவங்க தான்…..”

மனதில் திடீரென்று ஏற்பட்ட மிகப்பெரிய பாரம் உடனே விலக க்ரிஷ் மாஸ்டரை நன்றியுடன் பார்த்தான். பின் மெல்லக் கேட்டான். “எப்ப இருந்து ஆரம்பிக்கலாம் மாஸ்டர்?’

மாஸ்டர் சொன்னார். “இந்த மாதிரி கலைகளைப் படிக்க ஆரம்பிக்கறதுக்கு உகந்த சில முகூர்த்த காலங்கள் இருக்கு. அதைப் பாத்து நான் பிறகு சொல்றேன். இதெல்லாம் படிக்க பிரம்ம முகூர்த்தம் அதாவது சூர்யோதயத்துக்கு முன்னாடி காலம் தான் நல்லது….. அவ்வளவு சீக்கிரம் தினமும் வர முடியுமா?”

”தினமும் காலைல நாலு மணிக்கு முன்னாடி வந்தா சரியாயிருக்குமா மாஸ்டர்….” க்ரிஷ் பேரார்வத்துடன் கேட்டான்.

அவர் கடன் தீர்த்ததாய்ச் சொன்ன எந்தச் சீடனுமே இது போன்ற அதிகாலை நேரத்தில் படிக்க வருவதற்கு இப்படிப்பட்ட ஆர்வத்துடன் கேட்டதில்லை…. அவர் தலையசைத்தார். அவன் வணங்கி விட்டு “நன்றி மாஸ்டர்” என்று ஆத்மார்த்தமாய் சொல்லியபடி எழுந்தான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சுரேஷ் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்தான். இந்த க்ரிஷ் எவ்வளவு வேகமாய் முதல் சந்திப்பிலேயே மாஸ்டரைத் தன் வலைக்குள் சிக்க வைத்து விட்டான்…..

உதய் போன் பேசி விட்டு வேகமாக வந்தான். “மன்னிக்கணும் சுவாமி. ஒரு அரசியல் பிரச்னை….. சீக்கிரமா பேசிட்டு வர முடியலை…..”


ர்ம மனிதன் க்ரிஷ் வீட்டுக்குப் போகும் பாதையில் காத்திருந்து சலித்தான். இத்தனை நேரமாகியும் க்ரிஷ் மாஸ்டர் வீட்டில் இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. மாஸ்டர் க்ரிஷை எதிரியின் ஆளாகவே பார்த்து வந்ததுடன் அவன் மனதை தன் யோகசக்தியால் அறிய முடியாமலும் போன போது அவன் மீதிருந்த சந்தேகமும், வெறுப்பும் அதிகமாகும். அதுவே அவர்கள் சந்திப்பின் நீளத்தைக் குறைக்கும் என்பது தான் அவன் கணிப்பாக இருந்தது. ஆனால் காலம் நிதானமாக நீள ஆரம்பித்த போது விபரீதமாக மனம் எதையோ உணர்ந்தது. மாஸ்டரால் அறிய முடியாத க்ரிஷ் மனதை, கூடுதல் சக்தி படைத்த அவனால் அறிய முடிந்தால் எதிரி பற்றிய முழுவிவரத்தையும் உடனே அறிந்து கொள்ளலாம். அடுத்த நடவடிக்கை என்னவென்பதையும் உடனுக்குடன் முடிவு செய்யலாம். அது முடியா விட்டால் தான் பிரச்னை…. க்ரிஷ் வராமல் எதையும் தீர்மானிக்க முடியாது….

ஒருவேளை க்ரிஷை அழைத்துக் கொண்டு உதய் வேறெங்காவது போயிருப்பானோ என்ற சந்தேகம் மர்ம மனிதன் மனதில் எழ ஆரம்பித்த போது தூரத்தில் உதயின் கார் வருவது தெரிந்தது. நிம்மதி அடைந்த மர்ம மனிதன் தன் சகல சக்திகளையும் மானசீகமாய் குவித்து பைக்கில் சாய்ந்தபடி தயாராய் நின்றான்.

(தொடரும்)

என்.கணேசன்

Monday, December 4, 2017

மணல் கோட்டையும், மனிதக் கோட்டையும்!

மணலில் கட்டும் கோட்டைகளும், மனிதன் கட்டும் கோட்டைகளும் நீடித்து நிற்பதில்லை. அவை தரைமட்டமாவது உறுதி. ஆனால் இவற்றை எடுத்துக் கொள்ளும் விதத்தில் தான் ஒருவரது சந்தோஷமும், துக்கமும் நிர்ணயிக்கப் படுகின்றன. எப்படி என்பதை இங்கு காணொளியில் பாருங்களேன்.....




என்.கணேசன்