என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Tuesday, December 13, 2016

காணொளியில் “வெற்றியைத் தடுக்கும் 12 மனநிலைகள்”

காணொளியில் “வெற்றியைத் தடுக்கும் 12 மனநிலைகள்” பதிவேற்றியிருக்கிறேன். உள்ளத்தைத் தொடும் இசையோடு அறிவைத் தொடும் உண்மைகளையும் பார்த்து பயன்பெற வேண்டுமாய் வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
என்.கணேசன்




வெற்றியைத் தடுக்கும் 12 மனநிலைகள்

வெற்றியைத் தடுக்கும் 12 மனநிலைகளை இந்த பவர்பாயிண்ட் ஸ்லைடுகளில் விவரித்துள்ளேன். இந்த மனநிலைகளில் நாம் இருக்கும் வரை, இந்த மனநிலைகளில் நாம் இயங்கும் வரை வெற்றி நமக்கு தொலைதூரத்திலேயே இருக்கும். இந்தத் தடைகளை மனநிலைகளில் நீக்கிக் கொண்டாலே நம் செயல்முறைகள் மாறி விடும். விரைவில் எதிலும் வெற்றி அடைவோம்.

என்.கணேசன்

Monday, December 12, 2016

Thursday, December 8, 2016

இருவேறு உலகம் – 7


செய்து கொண்டிருக்கும் ஆராய்ச்சியால் மகனுக்கு ஆபத்து வந்திருக்கலாம் என்ற சந்தேகம் வந்த போது மகன் ஜீனியஸாக இல்லாமல் சாதாரணமாகவே இருந்திருந்தால் நிம்மதியாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் மேலோங்கி நின்றது. மகன் அறிவு எந்த அளவுக்குப் பெருமையைச் சேர்த்ததோ அந்த அளவு பல சமயங்களில் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அறிவு மட்டுமல்லாமல் சற்றும் சமரசம் செய்து கொள்ளாத நேர்மையும் கொண்டிருந்த க்ரிஷ், தன் வீட்டார்களே சின்னத் தவறு செய்தாலும் அதைச் சுட்டிக் காட்டுவதில் சிறிது அலட்சியம் காட்டவில்லை. கடுமையான குற்றத்திற்கு, கண்டிப்பான நீதிபதி தீர்ப்பு சொல்வது போல, சுட்டிக்காட்டுவான்.  

பத்மாவதி வேலைக்காரிகளிடம் கனிவில்லாமல் நடந்து கொள்ளும் போது அவன் அருகில் இருந்தானென்றால் தாயைக் கடிந்து கொள்வான். (வயித்துப் பிழைப்புக்காக நாளெல்லாம் வேலை செய்ய வேண்டிய நிலைமையில் இருக்கிற ஏழைகள் கிட்ட நீயும் ஏம்மா கடுமையா நடந்துக்கறாய்?”). தொகுதி மக்களை கமலக்கண்ணன் கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்யும் போது கடுமையாகவே சொல்லிக்காட்டுவான். (ஏறுன படியை மறந்துடாதப்பா. இறங்கறப்ப கஷ்டப்படுவே”). அவ்வப்போது கர்வத்துடன் மற்றவர்களைத் துச்சமாக நடத்தும் உதயையும் கடுமையாகத் திட்டுவான்.  (மந்திரி மகன்கிறத தவிர உன் கிட்ட வேற எதாவது தகுதி இருக்கா? சும்மா ஆடாதே”)  சுருக்கமாகச் சொன்னாலும் சுருக்கென்று குத்துமளவு அவன் பேச்சு இருக்கும். அவன் சொல்வது மனசாட்சியைச் சற்றாவது உலுக்கும்படி உண்மையானதாக இருக்கும். சில சமயங்களில் ஓங்கி அறைவது போல் கூட இருக்கும். ஆனால் அடுத்த நிமிடமே மகனாகவும், தம்பியாகவும் அன்பின் உருவமாக மாறிப் பழகும் அவனிடம் அவர்களால் கோபமாகவே இருந்து விடவும் முடிந்ததில்லை.

கமலக்கண்ணனை மிக மிகக் கோபமூட்டிய நிகழ்வொன்று சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. உள்ளாட்சித் தேர்தலைக் கருத்தில் வைத்து ராஜதுரை ஒரு இலவசத்திட்டத்தை அப்போது அறிவித்திருந்தார். க்ரிஷ் ஒரு கல்லூரியில் ஒரு விஞ்ஞானக் கருத்தரங்கில் பேசப்போன போது ஒரு நிருபர் அவனிடம் அந்த இலவசத்திட்டம் பற்றிக் கருத்து கேட்டார். க்ரிஷ் சிறிதும் தயங்காமல் அது ஒரு முட்டாள்தனமான திட்டம் என்று சொல்லி விட்டான். அந்தச் செய்தி பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பரபரப்பாக வெளிவந்தது. எதிர்க்கட்சிகள் உங்கள் அமைச்சர் மகனே இப்படிச் சொல்கிற அளவில் தான் உங்கள் திட்டம் இருக்கிறதுஎன்று கடுமையாக விமர்சித்தார்கள். கமலக்கண்ணன் பதறிப்போனார். அவர் தலைவனாகவும், தமையனாகவும் மிக உயரத்தில் வைத்திருக்கும் ராஜதுரையை க்ரிஷ் வெளிப்படையாக விமர்சித்ததற்கு எரிமலையாக மகனிடம் வெடித்தார். “உன் மனசுல என்னடா நெனச்சிருக்கே...என்று ஆரம்பித்து அரை மணி நேரம் திட்டித் தீர்த்ததை இடைமறிக்காமல் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த மகனிடம் கடைசியில் சொன்னார். “.... உடனே போய் அவர் கிட்ட மன்னிப்பு கேளு

“உண்மையைச் சொன்னதுக்கெல்லாம் நான் யார் கிட்டயும் மன்னிப்பு கேட்க மாட்டேன். அது நான் உண்மையை அசிங்கப்படுத்தற மாதிரி ...என்று அமைதியாகச் சொல்லி விட்டு அவனறைக்குப் போய் விட்டான்.

கடைசியில் அவர் தான் போய் ராஜதுரையின் காலில் விழுந்து கண்கலங்கினார். அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்ணே...

ராஜதுரை கமலக்கண்ணனைத் தூக்கி நிறுத்தி, “அவன் சரியாத் தானே சொல்லியிருக்கான்என்று சொல்லி விட்டு கலகலவென்று சிரித்தார். அந்தப் பெருந்தன்மையில் கமலக்கண்ணன் நெகிழ்ந்தும், பிரமித்தும் போனார்.

மறுநாளே நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் ஒரு நிருபர் ராஜதுரையிடம் க்ரிஷ் விமர்சனம் பற்றிக் கேட்ட போது “எங்கள் பிள்ளைகள் மனதில் நினைப்பதை வெளிப்படையாகச் சொல்வதை நாங்கள் தடுப்பதில்லை. பரிபூரண ஜனநாயகம் எங்கள் வீட்டிலே இருந்து தான் ஆரம்பிக்கிறது...என்று புன்னகையுடன் சொன்னவர், முட்டாள்தனத்தினால் ஏழைகள் பலன் அடைகிறார்கள் என்றால் அதைச் செய்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அதை நான் மீண்டும் மீண்டும் மகிழ்ச்சியுடன் செய்வேன்....என்று அலட்டாமல் பதிலளித்து விட்டு அடுத்த கேள்விக்கு நகர்ந்தார்.   

இப்படி எதிலும் சமரசம் செய்து கொள்ள முடியாத க்ரிஷ், தனக்கு நம்பிக்கை இல்லாத எதையும் செய்வதிலும் கூட உடன்பாடில்லாதவனாக இருந்தான். பரமேசுவரப் பணிக்கர் சொன்ன பிராயச்சித்தங்களைச் செய்ய, கமலக்கண்ணனும் பத்மாவதியும் முற்பட்ட போது அவன் ஒத்துழைக்கவில்லை. பரிகாரங்களுக்காக அவனைச்  சில திருத்தலங்களுக்கு அழைத்துப் போகவும், அங்கு சில ஹோமங்கள் நடத்தவும் பணிக்கர் சொல்லி இருந்ததற்கு க்ரிஷ் ஒத்துக் கொள்ளவில்லை.

பத்மாவதி மகனிடம் கெஞ்சிப் பார்த்தாள். அவன் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. கமலக்கண்ணன் எத்தனையோ சொல்லிப் பார்த்தார். மறுத்த க்ரிஷ் கடைசியில் சொன்னான். “... அப்படியும் எதாவது செய்யணும்னா பாவப்பட்ட ஜனங்களுக்கு ஏதாவது தர்மம் செய்ப்பா. உழைச்சு சம்பாதிச்ச காசுல செய். விளம்பரமில்லாம செய். அது தான் உண்மையான தர்மம். தர்மம் தலைகாக்கும்னு சொல்வாங்க.  அது என்னைக் காப்பாத்துதான்னு பார்ப்போம்..

உழைச்சு சம்பாதிச்ச காசுலஎன்று அழுத்திச் சொன்ன மகனை பார்வையால் சுட்டெரித்தாலும் கமலக்கண்ணனுக்கு அவன் சொன்னதைத் தவிர வேறு எதையும் செய்ய வழி தெரியவில்லை. அவர் தொகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் நல்ல மதிப்பெண் பெற்றுத் தேறிய 23 ஏழை மாணவ மாணவியரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் மேற்படிப்புக்கான முழுத்தொகையும் தரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர் உதவுவதை எந்தக் காரணத்தைக் கொண்டும் வெளியே சொல்லக்கூடாது என்ற உறுதிமொழி பெறப்பட்டது. விளம்பரம் இல்லாமல் எந்த நல்ல காரியத்தையும் செய்யாத அரசியல்வாதிகளுக்கு மத்தியில் இப்படியும் ஒரு நல்ல மனிதரா என்று அந்தக் குடும்பங்கள் வியந்தன. கமலக்கண்ணன் அந்த தர்ம காரியத்திற்குத் தன் நேர்வழி சம்பாத்தியத்தை மட்டுமே பயன்படுத்தினார். ஏழைப் பிள்ளைகள் அறிவுச் செல்வம் பெற அவர் செய்யும் தர்மம், அறிவுஜீவியான அவர் மகனைக் காப்பாற்றட்டும் என்று கடவுளை மனமார வேண்டிக் கொண்டார்.

அவரது கோரிக்கையும் தர்மமும் தெய்வ சன்னிதானத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்று இப்போது அவருக்குத் தெரியவில்லை....

அவர் கார் முதலமைச்சர் இல்லத்தை அடைந்தது.   


ஞ்சுத் தலையரிடம் அந்த இளைஞன் சொன்னான். “கமலக்கண்ணன் முதலமைச்சரப் பார்க்கப் போயிருக்கார்.

அவருக்கு அந்தத் தகவல் கசந்தது. “அவன் ஏன் ஆன்னா ஊன்னா அந்த ஆள் கிட்ட ஓடறான்?...என்று அவர் முகச்சுளிப்புடன் கேட்டார். ராஜதுரை இந்த விவகாரத்தில் நுழைவது அவருக்குப் பிடிக்கவில்லை.  ராஜதுரை அவர் சிறிதும் யூகிக்க முடியாத நபர். எப்போது எந்த முடிவெடுப்பார், எதை எப்படிக் கையாள்வார் என்பதை அவர் மட்டுமல்ல, யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட நபர் அதிகார உச்சத்தில் இருந்து இந்த வழக்கில் ஈடுபாடு காண்பிப்பது, தலைக்கு மேல் கத்தி என்றே அவருக்குத் தோன்றியது.

க்ரிஷின் பிணம் கிடைக்காதது, அந்தப் பாம்பு க்ரிஷைக் கடித்ததாகச் சொல்லப்படும் இடத்திலேயே அந்த வாடகைக் கொலையாளி கடிபட்டு இறந்தது, அவன் செல்போனில் இருந்து அழைப்பு வந்து, பேச்சுக்குப் பதிலாக அந்த மலையடிவாரத்தில் கேட்ட அமானுஷ்ய ஒலியே கேட்டது என்று ஏற்கெனவே வில்லங்கமான பல வில்லங்கமான விஷயங்கள் அவர் மண்டைக்குள் குடைந்து கொண்டிருக்கையில் இந்த ஆள் தலையீடு இன்னொரு புதுத்தலைவலி!....

“ராஜதுரை போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடுவானா?என்று பஞ்சுத் தலையர் அந்த இளைஞனின் அபிப்பிராயத்தைக் கேட்டார்.

“வாய்ப்பிருக்குஎன்று அவன் பட்டும் படாமலும் சொன்ன அவன் தன் சந்தேகத்தைக் கேட்டான். “க்ரைம் ப்ராஞ்சில் நம்ம ஆளுக எத்தனை பேர் இருப்பாங்க  இது போன்ற விவரங்கள் எப்போதும் அவர் விரல்நுனியில் இருக்கும்....

அவர் யோசிக்காமல் சொன்னார். “ஆறு பேர்

“சிபிசிஐடியில்...

“நாலு பேர்

பஞ்சுத்தலையரின் செல்போன் இசைத்தது. இதயம் படபடக்க அவர் அழைப்பது யார் என்று பார்த்தார். V K .... கைகள் நடுங்க செல்போனை எடுத்து அந்த இளைஞனிடம் தந்து “நீ பேசுஎன்று சைகை செய்தார்.

(தொடரும்)

என்.கணேசன் 

Monday, December 5, 2016

விதியோடு ஒரு விளையாட்டு!

சிகரம் தொட்ட அகரம் - 6

திறமை இருப்பவர்கள் எல்லாம் வெற்றி பெற்று விடுவதில்லை என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். திறமையுடன் உழைப்பும் சேர்ந்து சூழ்நிலையும் ஒத்துழைத்தால் வெற்றிக்கு வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலான வெற்றியாளர்கள் அந்த வகையைச் சார்ந்தவர்களே! நல்ல திறமை இருந்து, விதிவசத்தால் சூழ்நிலைகள் எதிரணியில் இருந்தாலோ அந்த மனிதர்கள் வெளிச்சத்திற்கு வராமலேயே போய்விடுகிறார்கள் என்பது தான் யதார்த்தம். இந்த யதார்த்தத்தைப் பொய்யாக்கி, கடும் மன உறுதியுடன் விதியுடன் போராடி, வெற்றி காணும் அபூர்வ சாதனையாளர்களும் உண்டு. அப்படிப்பட்ட சாதனையாளர்களில் ஒருவர் தான் பென் ஹோகன் (Ben Hogan).

ஒரு ஏழை கொல்லனின் மூன்றாவது பிள்ளையாக அமெரிக்காவில் டெக்சாஸில் 1912 ஆம் ஆண்டு பிறந்தவர் பென் ஹோகன். ஏழ்மை மற்றும் பல தனிப்பிரச்னைகள் காரணமாக அவர் தந்தை பென் ஹோகனின் ஒன்பதாவது வயதில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அதுவும் பென் ஹோகனின் முன்னாலேயே அந்தக் கோர சம்பவம் நடந்திருக்கிறது. பென் ஹோகனின் தாயார் தையல்காரி. அவர் வருமானம் குடும்பம் நடத்தப் போதாததாக இருந்ததால் பென் ஹோகன் தினமும் பள்ளிக்கூடம் முடிந்தவுடன் அருகிலிருந்த ரயில் நிலையத்தில் பத்திரிக்கைகள் விற்கும் வேலை செய்ய வேண்டி வந்தது.

பதினோராவது வயதில் ஒரு கால்ஃப் க்ளப்பில் பந்துகள் பொறுக்கும் எடுபிடி வேலைக்காரப் பையனாக வேலைக்குச் சேர்ந்தார். அந்த விளையாட்டு அவரை மிகவும் கவர்ந்தது. அந்த விளையாட்டு வீரர்கள் விளையாடும் நுட்பங்களை அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பை மற்ற வேலைக்கார சிறுவர்களை விட நன்றாகவே பென் ஹோகன் பயன்படுத்திக் கொண்டார். சிறுவயதிலேயே தந்தையின் கோர மரணத்தை நேரடியாகப் பார்த்த விளைவால் அதிகம் யாருடனும் பேசாமல், பழகாமல், தனியாகவே இருந்து வந்த பென் ஹோகன் முழுக் கவனமும் கால்ஃப் விளையாட்டின் பக்கம் திரும்பியது.

பல நாட்கள் அந்த கால்ஃப் க்ளப் அலுவலகத்திலேயே பழைய தினசரிப்பத்திரிக்கைகளை விரித்து அதன் மேல் படுத்துக் கொண்டு அதிகாலையிலேயே முதல் ஆளாக எழுந்து விளையாட்டு வீரர்களுக்கு முன்னதாகவே பென் ஹோகன் தயாராக நின்றிருப்பார். அந்த க்ளப்பிலேயே அந்த விளையாட்டில் பயிற்சிகள் செய்து 17வது வயதிலேயே ஒரு சிறந்த கால்ஃப் விளையாட்டு வீரராக அவர் உருவானார்.

ஆனால் ஏழ்மை அவர் வாழ்வில் இருந்து விடைபெற்று விடவில்லை. தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் அவர் மிகவும் சிரமப்பட வேண்டி வந்தது. வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் நடந்த பல போட்டிகளுக்குப் போய் வரவே அவரிடம் பணம் இருக்கவில்லை. இத்தனை சிரமங்களுக்கு நடுவே நடந்த ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அன்பான மனைவி வாய்த்தது தான். அவரது மனைவி கணவரின் விளையாட்டுத் திறமையில் அபார நம்பிக்கை வைத்திருந்தார். தம்பதியர் இருவரும் மிகவும் கஷ்டப்பட்டே வாழ்க்கை நடத்தினர்.  போட்டிகளில் கலந்து கொள்ள ஆகும் செலவுக்கே அவர்கள் பல தியாகங்கள் செய்து சேமிக்க வேண்டி வந்தது. அவரது 26வது வயதுக்குப் பின் கிடைத்த வெற்றிகள், அதன் மூலம் கிடைத்த பணம் எல்லாம் ஓரளவு வாழ்க்கையை சுலபமாக்கின. இரண்டாம் உலகப்போர் நடந்த போது போரிலும் கலந்து கொண்டார். போர் முடிந்த பின் நடந்த பல போட்டிகளிலும் வெற்றி பெற்று பிரபலமடைந்த அவர் 1948ல் U.S. Open Open Championship ல் வென்று சாதனை படைத்தார்.

ஆனால் விதி மறுபடி அவர் வாழ்வில் விளையாடியது. 1949 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அதிகாலை காரில் மனைவியுடன் பயணித்துக் கொண்டிருந்த போது மூடுபனியின் காரணமாக ஒரு பாலத்தில் எதிரே வந்து கொண்டிருந்த பஸ்ஸில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் இடுப்பு எலும்பு, கணுக்கால் எலும்பு, விலா எலும்பு எல்லாம் உடைந்து அவர் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவர் இனி எழுந்து நடமாடுவதே சிரமம் என்று சொல்லி விட்டார்கள். ஆனால் அது அவர்கள் கருத்தாக இருந்ததே ஒழிய பென் ஹோகன் கருத்தாக இல்லை. சக்கர நாற்காலியிலேயே மீதிக் காலத்தைக் கழிக்க விரும்பாத பென் ஹோகன் தனது கால்ஃப் க்ளப்பு (மட்டை)களை மருத்துவமனை அறையிலேயே ஒரு மூலையில் வைக்கும்படி மனைவியுடம் சொன்னார். தினமும் அதைப் பார்த்தபடியே தன் மன உறுதியை வளர்த்துக் கொண்ட அவர் கடுமையான பயிற்சிகள் செய்து நிற்கவும் நடக்கவும் முடியுமளவு முன்னேறினார். 59 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர் வெளியேறும் போது சக்கர நாற்காலியில் வெளியேறாமல் நடந்தே வெளியேறிய போது மருத்துவர்கள் பிரமித்தார்கள். பின் தினமும்  நடைப்பயிற்சிகள், உடற்பயிற்சிகள் செய்ததன் மூலம் அவர் ஓரளவு மேலும் தேறினார்.

அதோடு நின்றுவிடாமல் மறுபடி கால்ஃப் விளையாட்டுகளில் கலந்து கொள்ள பென் ஹோகன் விரும்பினார். “என்னால் எதெல்லாம் முடியாது என்று மற்றவர்கள் சொல்லிக் கொண்டிருக்கையில் அதெல்லாம் முடியும் என்று காட்டுவது எனக்கு முக்கியமாகத் தோன்றியதுஎன்று பிற்காலத்தில் கூறிய பென் ஹோகன் கடுமையாக விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டார். உறுதியாக நிற்கவே சிரமப்பட்ட அவர் விளையாட்டுப் பயிற்சியின் போது என்னேரமும் விழுந்து விடலாம் என்றே தோன்றியதாக ஒரு பத்திரிக்கைப் பார்வையாளர் தெரிவித்தார். ஆனால் அடுத்த ஆண்டே, அதாவது விபத்துக்கு 16 மாதங்கள் கழித்து, மறுபடி U.S. Open Open Championship ல் அவர் வென்றது சரித்திர சாதனையாகியது. விளையாட்டு உலகம் பிரமித்தது. 1951 ஆம் ஆண்டு அவர் வாழ்க்கையை மையமாக வைத்து Follow the Sun என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. 

மேலும் இருபதாண்டு காலம் விளையாடி மேலும் இரண்டு U.S. Open Open Championship கோப்பை உட்பட பல கோப்பைகளை உலக அளவில் வென்று விளையாடிய பென் ஹோகனின் கால்ஃப் விளையாட்டில் மட்டை சுழற்சி முறைகள் பிற்கால விளையாட்டு வீரர்களுக்குப் பாடங்களாக அமைந்தன. மற்றவர்களுக்கோ அவர் வாழ்க்கையே பாடமாக அமைந்திருக்கிறது.

1997 ஆம் ஆண்டு மறைந்த அவருக்கு கால்ஃப் விளையாட்டில் இருந்த ஆர்வம் அதீதமானது. “எப்போது விடியும், விளையாடப் போகலாம் என்று என் இளமைக்காலங்களில் காத்திருப்பேன்என்றும் “ஒவ்வொரு நாளும் ஏதாவது புதிய பாடத்தை விளையாட்டின் போது கற்றிருக்கிறேன்என்றும் அவர் கூறுகிறார். வாழ்க்கைப் பாதையில் நடக்கும் போதே வழியில் ரோஜா மணத்தை முழுமையாக நுகர்ந்து அனுபவித்து விட வேண்டும். ஏனென்றால் அதில் திரும்பி வரும் வசதியில்லை”  என்று கூறிய அவர் வாசகம் சிந்திக்கத் தக்கது.

எழுதுவதும், சொல்வதும் சுலபம். எனக்கு வந்த கஷ்டம் போல் வந்தால் தெரியும்என்ற பாணியில் தங்கள் சாதனைக்குறைவுகளுக்குச் சப்பைக்கட்டு கட்டும் மனிதர்கள் இந்த மனிதரைப் பார்த்துத் திருந்த வேண்டும். அவருக்கு வாழ்வில் ஒன்றா இரண்டா பிரச்னைகள்! அந்தப் பிரச்னைகளும் சாதாரணமானவையா? பிரச்னைகளையும், சூழ்நிலைகளையும் மீறிச் சாதிக்க நமக்குள்ளே ஒரு அக்னி இருக்க வேண்டும். அந்த அக்னியைத் தக்க வைத்துக் கொண்டு தொடர்ந்து கடுமையாக முயற்சிகள் செய்தால் மட்டுமே ஒருவர் தன் திறமையின் உச்சத்தை எட்டி அதை வெளிப்படுத்த முடியும். ஏன் என்னால் முடியவில்லை என்பதற்கான காரணங்கள் கண்டுபிடிப்பவர்கள் புலம்பிக் கொண்டிருக்கையில், காரணங்களை அலட்சியப்படுத்தி தளர்வில்லாமல் முன்னேறுபவர்கள் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


-          என்.கணேசன்

Thursday, December 1, 2016

இருவேறு உலகம் – 6


கேள்விப்பட்ட தகவல் கவலையைத் தந்தாலும் கூட கமலக்கண்ணன் தன்மனைவி பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்து, கஷ்டப்பட்டு தன் முகத்தை இயல்பாகவே வைத்துக் கொண்டார். இது ஒரு காலத்தில் அவர் அறியாத வித்தை. அரசியலில் பல காலம் தங்கியதில் காலப்போக்கில் அவர் படித்துக் கொண்ட மிகப்பெரிய பாடம் இது. அலைபேசியைச் சட்டைப்பையில் போட்டுக் கொண்டே மனைவியிடம் சொன்னார். “இன்னும் ஒரு தகவலும் இல்லை என்பதைக் கூப்பிட்டுச் சொல்கிறான்... முட்டாள்”.

சொல்லி விட்டு மூத்த மகனை அவர் அர்த்தபுஷ்டியுடன் பார்த்தார். உதய் தந்தையின் பார்வையைப் புரிந்து கொண்டு மெல்ல எழுந்து சோம்பல் முறித்தான். “அப்பா, இங்கே சும்மா உட்கார்ந்திருக்கறதுக்குப் பதிலா நேராவே போய் பார்த்துட்டு வர்றது நல்லதுன்னு தோணுது.  நீங்களும் வாங்களேன்...

“இப்பவாவது நல்ல புத்தி வந்துதேஎன்ற பத்மாவதியைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே அவன் கிளம்ப, கமலக்கண்ணனும் அவனுடனேயே அந்த அறையிலிருந்து வெளியேறினார்.

வெளியே வந்தவுடன் உதய் தந்தையிடம் கேட்டான். “என்னப்பா?

“அவனோட டெலஸ்கோப் மலைச்சரிவுல விழுந்து கிடந்ததைப் பார்த்து எடுத்து வெச்சிருக்காங்க....கமலக்கண்ணன் கவலையோடு தெரிவித்தார்.

உதய் முகத்திலும் கவலையின் ரேகைகள் பரவ ஆரம்பித்தன. மெல்ல சொன்னான். “நானே நேர்ல போய்ப் பாக்கறேம்ப்பா.... போலீஸுக்குப் போகணுமா?

“எதுக்கும் அண்ணன் கிட்ட ஒரு வார்த்த பேசிட்டு முடிவு செய்யலாம்னு நெனக்கிறேன்....என்றார் கமலக்கண்ணன். அண்ணன் என்று அவர் சொன்னது முதலமைச்சரான ராஜதுரையை. உடனடியாக அலைபேசியில் ஒரு எண்ணை அழுத்திப் பேசினார். “அண்ணன் என்ன பண்றார்..... எனக்கு உடனடியா அவர் கிட்ட பேசணும்.... பர்சனல் விஷயம்.... கேட்டுச் சொல்லு.....

மூன்றே நிமிடங்களில் முதலமைச்சரின் உதவியாளரிடமிருந்து போன் வந்தது. சார் வீட்டுக்கே வரச் சொன்னார்.

உடனே உதய் அந்த மலைக்கும், கமலக்கண்ணன் முதலமைச்சர் வீட்டுக்கும் கிளம்பினார்கள். கமலக்கண்ணன் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன....                                                                                                                                                                                                            ரமேசுவரப் பணிக்கர் கணித்தது போலவே க்ரிஷ் அபார அறிவு படைத்தவனாக இருந்தான். உதய்  பிறந்து மூன்றரை ஆண்டுகள் கழித்துப் பிறந்தவன் என்றாலும் கூட க்ரிஷ் உதய்க்கு முன்பே எழுதப்படிக்க ஆரம்பித்து விட்டான். மிகச்சிறிய வயதிலேயே புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தான். பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் நடத்துகையில் தவறுகள் ஏற்பட்டால் அவ்வப்போதே சுட்டிக் காட்டும் அளவு அறிவுபடைத்திருந்தான்.

எட்டாம் வகுப்பு படிக்கையில் ஒரு புதிய ஆசிரியர் ஒரு முறை பாடம் சொல்லிக் கொடுத்ததில் தவறிருந்ததை அவன் உடனடியாகச் சுட்டிக் காட்ட அவர் அதை அவமானமாக நினைத்தார். அவனைத் தண்டிப்பதாக எண்ணி “நீ வந்து பாடம் சொல்லிக் கொடேன்...என்று சொல்லி அமைதியாகப் போய் தன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். 

பொதுவாக இது போன்ற சந்தர்ப்பங்களில் பையன்கள் பயந்து போய் உடனடியாக அடங்கி மன்னிப்பு கேட்பதைத் தான் வழக்கமாக அவர் கண்டிருந்தார். ஆனால் க்ரிஷ் அந்த ரகத்தில் சேராமல் உடனடியாக வகுப்பு மாணவர்களின் முன்னுக்கு வந்து அந்தப் பாடத்தை அவரை விடச் சிறப்பாக நடத்தி விட்டு சந்தேகம் இருந்தால் மாணவர்களைக் கேட்கச் சொல்லி, ஓரிரு மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களையும் கச்சிதமாக நிவர்த்தி செய்து விட்டே தன் இருக்கைக்குத் திரும்பினான்.   அந்த ஆசிரியர் முகத்தில் ஈயாடவில்லை. அன்றிலிருந்து அவன் இருக்கும் வகுப்புகளுக்கு வரும் முன் கூடுதலாகத் தயார்ப்படுத்திக் கொண்டே அவர் வர ஆரம்பித்தார். கல்லூரிக் காலங்களில் பரிட்சைக்குக் கூட அவர் அப்படிப் படித்திருக்கவில்லை....

மற்ற மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்பதற்குப் பதிலாக அவனிடம் வந்து கேட்க ஆரம்பித்தார்கள். சில ஆசிரியர்களும், பெரும்பாலான மாணவர்களும் அவனைக் கொண்டாடினார்கள். சில ஆசிரியர்களும், சில சக மாணவர்களும் தலைக்கனம் பிடித்தவனாக அவனை நினைத்தார்கள். ஆனால் யாருமே அவன் சொன்னதில் எதையாவது தவறென்று நிரூபித்து வெற்றி காண முடிந்ததில்லை. அவன் சொன்னால் அது சரியாகத் தான் என்கிற நூறு சதவீத நம்பிக்கை அவன் எதிரிகளிடம் கூட உருவாக ஆரம்பித்தது.

கல்லூரிக் காலத்தில் அவன் புகழ் மேலும் உயர்ந்தது. கல்லூரியில் சேர்ந்த முதல் வாரத்தில் ஒரு பேராசிரியர் ஒருநாள் அறிவியல் வகுப்பில் எதோ விஞ்ஞான உண்மையை விளக்கிய போது அவன் சொன்னான். “அது பழைய ந்யூஸ் சார். போன வாரம் தான் அது பொய் என்பதை ஒரு ஜெர்மன் சயண்டிஸ்ட் நிரூபிச்சிருக்கார்.  அது அமெரிக்கன் சயின்ஸ் ஜர்னல்ல முந்தா நாள் பப்ளிஷ் ஆயிருக்கு...

அந்தப் பேராசிரியர் திகைப்புடன் அவனைப் பார்த்தார். அது உண்மை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டபோது அவர் அசந்து போனார். இரண்டு துறைகளில் டாக்டரேட் பட்டம் பெற்றிருந்த அறிவுஜீவி அவர். அவனைத் தனியாக சந்தித்து  நிறைய நேரம் பேசினார். அந்த ஒரு துறை, பாடம் மட்டுமல்லாமல் வேறு எத்தனையோ துறைகள் பற்றியும் அவன் அறிந்து வைத்திருந்த ஆழத்தை அறிந்த போது பெரும் பிரமிப்பே அவரிடம் மிஞ்சியது. சக ஆசிரியர்களிடமெல்லாம் அந்த மாணவனைப் பற்றிச் சொன்னார். நட்பில் இருந்த அறிஞர்களிடம் எல்லாம் அவனைப் பற்றிச் சொல்லிப் புகழ்ந்தார்.  

ஒரு நாள் கமலக்கண்ணனையே நேரில் சந்தித்து “எப்படிப்பட்ட ஒரு ஜீனியஸ பெத்திருக்கீங்கய்யா. ரொம்பப் புண்ணியம் பண்ணியிருக்கீங்கஎன்று சொல்லி கமலக்கண்ணனின் இருகைகளையும் பற்றிக் கொண்டு அந்தப் பேராசிரியர் கண்களில் ஒற்றிக் கொண்ட போது கமலக்கண்ணன் மெய்சிலிர்த்துப் போனார்.

மந்திரியாகிப் பல காலமாகி இருந்ததால் பாராட்டுகள், கூழைக்கும்பிடுகள் போன்றவை எல்லாம் பழகிச் சலித்துப் போயிருந்த அவருக்கு இளைய மகன் அறிவு பற்றி மட்டும் என்றுமே உண்மையான பெருமிதம் உண்டு. தகுதி இருந்து கிடைக்கும் பாராட்டுகளில் அல்லவா ஒருவருக்கு உண்மையான மகிழ்ச்சி. பலரும் அதற்கு முன்னாலும் அவரிடம் அவனைப் பற்றிப் பாராட்டி இருக்கிறார்கள்.

ஆனால் வயதான அறிஞராகத் தோன்றிய அந்தப் பேராசிரியர் உண்மையான பரவசத்துடன் ஆத்மார்த்தமாய் சொன்ன விதம் தான் அவரை மெய்சிலிர்க்க வைத்தது. அப்படிச் சொல்லி முடித்த பேராசிரியர் வேறு ஏதாவது உதவியோ, சிபாரிசோ கேட்கக் கூடும் என்று கூட அவர் எதிர்பார்த்தார். ஆனால் அந்தப் பேராசிரியர் அதைச் சொல்ல மட்டுமே வந்தவராக வேறெதையும் கேட்காமல் திரும்பிப் போனது மறக்க முடியாத நிறைவைத் தந்த அனுபவமாக அவர் மனதில் தங்கிப் போனது. அடிமட்டத்தில் இருந்து முதலமைச்சருக்கு அடுத்த இரண்டாம் நிலை அமைச்சராக உயர்ந்து வந்திருக்கும் அவர் எத்தனையோ வெற்றிகளையும் தாண்டியே வந்திருக்கிறார். ஆனால் அத்தனையும் ராஜதுரை போட்ட பிச்சை என்கிற நினைப்பே அவர் மனதின் ஆழத்தில் இது வரை நின்றிருக்கிறது. இது ஒன்று தான் வாழ்க்கையில் பெற்ற உண்மையான வெற்றி என்று அந்த தந்தையின் மனம் நினைக்க ஆரம்பித்தது.

அதன்பின் இளைய மகன் பற்றி எத்தனையோ பாராட்டுகளை அவர் கேட்கும் சந்தர்ப்பங்கள் வந்தன. அவன் ஐஐடியில் சேர்ந்து, அங்கும் மதிப்பெண்களில் தொடர்ந்து முதலிடத்திலேயே  இருந்தான். பல கல்லூரிகளில் அவனைப் பேசக்கூப்பிட்டார்கள். சில அறிவுசார்ந்த போட்டிகளில் நடுவராக அவனை நியமித்தார்கள். வீடு வரை வந்து கூட பல அறிஞர்கள், பேராசிரியர்கள்  அவனிடம் தங்கள் சந்தேகங்கள் கேட்டார்கள். ஆர்வமுள்ள எதையுமே மேலோட்டமாக இல்லாமல் ஆழமாகவே அறிந்திருந்த அவன் அதற்கெல்லாம் விளக்கமாகவே பதில் அளித்தான். ஆழமாகத் தெரியாத அவனுக்கு ஆர்வமில்லாத விஷயங்களாக இருந்தாலும் அது பற்றிய சில அடிப்படைத் தகவல்களாவது அவனால் தெளிவாகச் சொல்ல முடிந்தது. அவன் சொல்லும்  போதும், அங்கிருந்து கிளம்பும் போதும் வந்தவர்கள் முகத்தில் தெரிந்த பிரமிப்பு அவர் அடிக்கடி கவனித்த விஷயம்.

வீட்டில் அவன் அறையில் எப்போதும் எதையாவது படித்துக் கொண்டும், ஆராய்ந்து கொண்டும் தான் இருப்பான். பல நேரங்களில் சாப்பிடவும் வர மாட்டான். பத்மாவதி உணவை எடுத்துக் கொண்டு மகன் அறையில் வைத்து விட்டு வருவாள். அடுத்த வேளை உணவை எடுத்துக் கொண்டு போகையில் முந்தைய உணவு அவள் வைத்த இடத்தில் அப்படியே இருப்பதும் உண்டு. பத்மாவதி மகனிடம் கோபப்படும் தருணங்கள் அவை மட்டுமே. கடுமையாகத் திட்டுவாள். அப்போதே சாப்பிட்டால் தான் அங்கிருந்து நகர்வேன் என்பாள். படிப்பது புத்தகமானால் அதைப் பிடுங்கி மூடி வைப்பாள். கம்ப்யூட்டரில் ஏதோ வேலையாக இருந்தால் அதை உடனடியாக அணைத்து விடுவாள். அவன் முன் ஏதாவது ஆராய்ச்சிப் பொருள்கள் இருந்தால் கலைத்து விடுவாள். அதனால் வேறு வழியில்லாமல் அவளிடம் திட்டு வாங்கிக் கொண்டே அசட்டுப் புன்னகை பூத்தபடி க்ரிஷ் சாப்பிடுவான்.

இந்த அளவு  அறிவுத் தாகம் கொண்ட அவருடைய இளைய மகன் தற்போது எந்த ஆராய்ச்சியில் இறங்கியுள்ளான் என்று வீட்டில் யாருக்கும் தெரியவில்லை. கேட்டிருந்தால் அவன் கண்டிப்பாகச் சொல்லி இருப்பான். ஆனால் அவன் சொல்லும் விஷயங்கள் அவர்கள் அறிவுக்குப் பெரும்பாலும் எட்டுவதில்லை. சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பிரமிப்பை ஏற்படும் தகவல்கள், ஆர்வமோ, புரிந்து கொள்ளும் அறிவோ இல்லாத அவர்களுக்குப் பலமுறை தலைசுற்றலுக்கும் அவஸ்தைக்குமே கொண்டு சென்றிருக்கின்றன. அதனால் அப்படிக் கேட்கும் தவறைச் செய்யாமல் வீட்டார் மூவரும் கவனமாகவே இருந்திருக்கிறார்கள்.
 
புதிய ஆராய்ச்சியில் அமாவாசை இரவன்று அந்த மலைக்குச் சில மாதங்களாய் தான் அவன் போக ஆரம்பித்திருக்கிறான். அதுவும் அந்த பகுத்தறிவு அமைப்பினர் பேய், பிசாசு, ஆவிகள் அந்தப்பகுதியில் இல்லை என்று நிரூபித்த செய்திகள் வெளி வந்த பிறகு தான் க்ரிஷ் போக ஆரம்பித்திருக்கிறான்... அங்கு போய் என்ன செய்கிறான், எப்படி ஆராய்ச்சி நடத்துகிறான் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அந்த ஆராய்ச்சி தான் அவனுக்கு இப்போது ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறதோ என்கிற சந்தேகம் அவர் மனதில் எழ ஆரம்பித்தது.

(தொடரும்)


என்.கணேசன்